செவ்வாய், 26 பிப்ரவரி, 2019

300 வயது வாழ அகத்தியர் கூறும் வழிமுறை!

நவீன அறிவியலின் படி ஒரு மனிதன் முன்னூறு ஆண்டுகள் வாழ்வதெல்லாம் சாத்தியமல்ல என்பது பல காலம் முன்னரே நிரூபிக்கப் பட்ட ஒன்று.இருந்தாலும் சித்தர்கள் பலநூறு வருடங்கள் வாழ்ந்திருந்ததாக தகவல்கள் கூறுகின்றன. ஹோமங்கள் செய்வதன் மூலமாக ஒருவன் முன்னூறு வயதுவரை வாழலாம் என்கிறார் அகத்தியர், இதன் சாத்தியங்கள் ஆய்வுக்குறியது. எனினும் நீண்ட ஆயுளைத் தரும் என்கிறவகையில் இந்த ஹோமத்தினை அணுகிடலாம். ஹோமங்கள் பற்றி அகத்தியரின் பாடல் ...

அறிந்துகொண்டு புவனையுட மந்திரந்தன்னால்
அப்பனே நெய்தனிலே அருகுதோய்த்து
தெரிந்தந்த ஓமகுண்டந் தன்னில்மைந்தா
சிறப்பான ஓமமது தீர்க்கமாக
வருந்திநன்றாய் மண்டலமே செய்தாயாகில்
மகத்தான பிரமமய மாவாய்பாரு
இருந்துரெண்டு மண்டலமே ஓமஞ்செய்தால்
என்னசொல்வேன் முன்னூறு வயதாம்பாரே

பொருள்: அறுகோண வடிவத்தை உடைய ஓம குண்டம் செய்து, அதில் வன்னி மரத்தின் குச்சிகளைக் கொண்டு தீ வளர்த்திட வேண்டுமாம். அப்படி தீ வளர்க்கையில் வழமை போலவே அக்கினி மூல மந்திரமான ஓம் அரிஓம் கோடிப்பிரகாசம் அக்கினியே அகோரா அங் உங் இங் வாவா லம் பட் சுவாகா என்ற மந்திரத்தை சொல்லி தீ வளர்த்திட வேண்டும். தீ வளர்ந்த பின்னர் புவனையின் மூல மந்திரமான ஓம் ஐயும் கிலியும் சவ்வும் சவ்வும் கிலியும் ஐயும் வாவா புவனை பரமேஸ்வரி பஞ்சாட்சரி ஆனந்தரூபி சுவாகா என்ற மந்திரத்தைக் கூறிக் கொண்டே அறுகினை, பசு நெய்யில் தோய்த்து போட வேண்டும் என்கிறார். இப்படி 1008 முறை செய்திட வேண்டும் என்கிறார் அகத்தியர். இந்த ஹோமத்தினை தொடர்ந்து ஒரு மண்டலம் அதாவது நாற்பத்தி எட்டு நாட்கள் செய்து வந்தால் பிரம்மத்தை உணரலாமாம். அதையே தொடர்ந்து  இரண்டு மண்டலம் அதாவது 96 நாட்கள் செய்து வர 300 வயதுக்கு மேல் வாழலாம் என்கிறார் அகத்தியர்.
மாலையில் வீட்டு வாசலில் கோலம் போடுவது கட்டாயமா?

மாலையில் சிலர் வாசல் தெளித்து கோலம் இடுகின்றனர். இதைப் பின்பற்றுவதில் ஒன்றும் தவறில்லை. உள்ளூர் விழாக்களில் சுவாமி புறப்பாடு, திருக்கார்த்திகை போன்ற விசேஷ நாட்களில் மாலையில் வாசல் தெளித்து கோலம் இடுவது அவசியம். மற்றநாட்களில் கட்டாயம் இல்லை.

செருப்பு அணிந்து கோலமிடலாமா: லட்சுமி நம் இல்லத்தில் நித்யவாசம் புரிய வேண்டும் என்பதற்காகவே, தினமும் காலையில் வாசல் தெளித்து கோலம் இடுகிறோம். இதுவும் கூட வழிபாட்டு முறையில் ஒன்று என்பதால், செருப்பு அணிந்து கொண்டு வாசல் தெளிப்பது கோலம் போடுவது கூடாது.
கடன்- கஷ்டம் தீர்க்கும் ஹேரம்ப கணபதி!

உலகில் பிறந்த பலருக்கும் பலவிதமான சங்கடங்கள்-துன்பங்கள்-தோன்றுவது இயற்கை. இந்தச் சங்கடங்களிலிருந்து விடுபடுவது எப்படி என்று புரியாமல் பலர் குழம்புகின்றனர். குடும்பத்தில் ஏற்படும் தர்ம சங்கடத்தைத் தீர்க்க அவசரமாகக் கடன் வாங்குவர். பணம் வந்ததும், திரும்பத் தந்து விடலாம் என்ற நம்பிக்கையுடன் வட்டிக்கு வாங்குவார்கள். இந்த அவசரத் தன்மையை அறிந்த கடன் கொடுப்பவர்கள் இரண்டு வட்டி, ஐந்து வட்டி, பத்து வட்டி, மீட்டர் வட்டி என்று ஏதேதோ பெயர்களில் தாராளமாகத் தருவார்கள்! இதற்கு கந்து வட்டி என்ற பெயரும் உண்டு.

இப்படி வட்டிக்குக் கடன் வாங்குபவர்கள் சில மாதங்கள் வட்டியைத் தவறாமல் கட்டுவார்கள். பிறகு மெல்ல மெல்ல தர முடியாத சூழல் ஏற்படும். வட்டி குட்டிமேல் குட்டிப் போட்டு அது வாங்கியதற்கு மேல் விஸ்வரூபம் எடுத்து விடும். இப்படிப்பட்டவர்களின் நிலைமையைப் பார்த்துத்தான் கடன் பட்டார் நெஞ்சம் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன் என்று கம்பர் பாடினார். இப்படித் தாங்க முடியாத சங்கடங்களில் மாட்டிக் கொண்டு முழிப்போரும், ருணத்தால் விழி பிதுங்குவோரும் எல்லா நலமும் பெற வழிபட வேண்டியவர் ஹேரம்ப கணபதி. இவருக்கு நான்கு தலைகள்! கடன்களையும், சங்கடங்களையும் தீர்க்கும் சுபாவம் கொண்டவர். இவரைக் குளிரக் குளிர அபிஷேகம் செய்து அவருக்கே உரிய ஸ்லோகத்தை, குறைந்தது பதினாறு தடவை சொன்னால் சங்கடங்கள் விலகும். ருணம் (கடன்) தீரும்.

அவருக்குரிய ஸ்லோகம்:

ஓம் நமோ ஹேரம்ப
மத மோதித மம சங்கடம்ச
மஹா சங்கடம்ச
நிவாரய ஸ்வாஹா!

ஓம் நமோ ஹேரம்ப
மத மோதித மம ருணம்
அதி ஸீக்ரமேவ
நிவாரய ஸ்வாஹா!

சங்கடத்தில் தவிப்பவர்கள் முதல் ஸ்லோகத்தையும், ருண (கடன்)த்தால் தவிப்பவர்கள் இரண்டாவது ஸ்லோகத்தையும் கூறவேண்டும். கூடியவரை அபிஷேகத்தை சங்கடஹர சதுர்த்தியில் செய்வது நலம்.
மிளகாயை விரும்பும் அம்பாள்!

அதர்வண வேதத்தில் மந்திர காண்டத்தில் பிரத்யங்கிரா தேவிக்குரிய மந்திரங்கள் இடம்பெற்றுள்ளன. சிங்க முகத்துடன், கரிய உடலும் 18 கைகளில் சூலம், டமருகம், பாசம் முதலான ஆயுதம் தாங்கி இவள், பயம் போக்குவதோடு, மங்களத்தை அருள்கிறாள். அழகைக் கண்டு மகிழ்வதும், அழகற்றதைக் கண்டு வெறுப்பதும் உலக இயல்பு. ஆனால், அழகும், கோர வடிவும் கலந்தவளாக இவள் இருக்க காரணம், விருப்பு, வெறுப்பை சமமாக ஏற்கும் மனநிலை வேண்டும் என்பதால் தான். லலிதா சகஸ்ரநாமத்திலுள்ள "ஸகஸ்ராக்ஷி என்னும் பெயர் இவளைக் குறிக்கும். "ஆயிரம் கண்ணுடையாள் என்பது இதன் பொருள். பிரபஞ்சம் முழுவதையும் இவள் கண்காணிப்பதால் இப்பெயர் பெற்றாள். உக்ரமான இவளுக்கு, காரமான மிளகாய் விருப்பமானது என்பதால் அமாவாசை யாகத்தில் சிவப்பு மிளகாய் சேர்க்கப்படுகிறது. கும்பகோணம் அருகிலுள்ள அய்யாவாடியில் பாண்டவர்கள் வழிபட்ட பிரத்யங்கிராவுக்கு கோயில் உள்ளது.
ஹோலிப் பண்டிகை கொண்டாடப்படுவது ஏன் தெரியுமா?

மலைவாழ் மக்களிடையே நிலவளப் பண்டிகையாக கொண்டாடப்பட்டு வந்த திருவிழாவே இன்று ஹோலியாக உருப்பெற்றிருக்கிறது என்பர். ஹோலி என்னும் வார்த்தை, ஹோலகா என்ற சொல்லின் திரிபே என்று கூறுவர். ஹோலகா என்பது முற்றிய நிலையில் உள்ள மொச்சைக் கதிர்களைக் குறிக்குமாம். முன் காலத்தில் இந்நாளில் கோதுமை, பார்லி முதலியவற்றால் வேள்வி செய்வர். வேள்வியின் நிறைவில் யாகத்தின் சாம்பலை நெற்றியில் பூசிக்கொள்வதோடு அனைத்து திசைகளிலும் தூவுவர். இதுவே வண்ணங்களைத் தூவும் வழக்கத்தின் காரணமாக இருக்கலாம். ஹோலியை ஹுதாஷிணி என்றும் கூறுவர். ஹுதாஷிணி இருளையும் தீமையையும் எதிர்த்துப் போராடுபவள் என்று பொருள்.வேடிக்கை விநோதங்கள் நிறைந்த வடநாட்டுப்பண்டிகை ஹோலி. கிருஷ்ணனைக் கொல்ல வந்த பூதனை என்னும் அரக்கியைக் கொன்ற நாளாக இந்நாளை மக்கள் கொண்டாடுகின்றனர். கேலியும் கூத்தும் மட்டுமே பிரதிபலிக்கும் விதத்தில் ஹோலி என்றாலே ஜாலி என்று மாறிவிட்டது. ஆனால், ஆன்மிக அடிப்படையிலேயே விழாக்கள் ஏற்படுத்தப்பட்டன. சாயத்தண்ணீரைப் பீய்ச்சி அடிப்பது, கலர்ப்பொடி தூவுவது ஆகியவை, உறவுகள் பலப்படவேண்டும், பகையை மறந்து ஒன்றுசேரவேண்டும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்ட விஷயங்களாகும். சிவபெருமான் மன்மதனை எரித்த காமதகனவிழாவாக தென்னிந்தியாவிலும், பூதனை என்னும் அரக்கியை பாலகிருஷ்ணர் கொன்ற நாளாக வடநாட்டிலும் இந்நாள் கொண்டாடப்படுகிறது. நம் மனதில் இருக்கும் வேண்டாத தீய எண்ணங்களை அழிப்பதற்காக மன்மதன், பூதனை போன்ற உருவபொம்மைகளை தீயிலிடுவர்.

தாயின் வயிற்றில் இருக்கும்போதே நாராயண நாமத்தைக் கேட்டு பக்தியில் திளைத்தவன் பிரகலாதன். உண்ணும்போதும் உறங்கும்போதும் ஓம் நமோ நாராயணாய என்னும் எட்டெழுத்து மந்திரத்தை அவன் மறந்ததில்லை. பிள்ளையின் விஷ்ணு பக்தி தந்தை இரண்யனுக்கு பிடிக்கவில்லை. அவனை அடித்துப் பார்த்தான். அடங்கவில்லை. மலையில் உருட்டி விட்டான். உயிர் போகவில்லை. நஞ்சைக் கொடுத்துப் பார்த்தான். அஞ்சவில்லை. அசுரகுரு சுக்ராச்சாரியாரிடம் படிக்க அனுப்பினான். மனதில் பக்தி வளர்ந்ததே ஒழிய பாடத்தில் ஈடுபாடில்லை. இறுதியில், தன் தங்கை ஹோலிகாவை அழைத்தான். அவளுக்கு விசேஷ சக்தியுண்டு. நெருப்பு அவளைத் தீண்டாது. பிரகலாதனை மடியில் வைத்துக் கொண்டு தீக்குள் புகுமாறு தங்கையிடம் கட்டளையிட்டான். ஆனால், வழக்கத்துக்கு மாறாக ஹோலிகாவின் உடலில் தீ பற்றிக் கொண்டது. பிரகலாதனோ, சிரித்துக் கொண்டு அமர்ந்திருந்தான். இறைசக்தியின் முன் தீயசக்திகள் அழிந்து போகும் என்ற உண்மையை இறைவன் உணர்த்தினார். இந்நாளே ஹோலிபண்டிகையாகக் கொண்டாடப்படுவதாக ஒரு கதை உண்டு. இந்நாளில் ஒம் நமோநாராயணாய என்ற எட்டெழுத்து மந்திரத்தை ஜெபித்தும், பிரகலாதனைப் போற்றியும் வழிபடுவது சிறப்பாகும். வடமாநிலங்களில் இவ்விழா கொண்டாடப்படுகிறது. அநியாயம் அழிந்தநாள் என்பதால், மக்கள் வண்ண  பொடிகளை தூவி மகிழ்கின்றனர்.
சூரிய பூஜையின் சிறப்பும் அவசியமும்!

லட்சக்கணக்கான ஆலயங்கள் இருந்தாலும், சில நூறு பெரிய ஆலயங்களில், கருவறையிலுள்ள இறைத்திருவுருவின் மீது, சூரிய ஒளி படரும் அமைப்புடையவற்றை சூரிய பூஜைக் கோயில் என்று நம் முன்னோர்கள் போற்றி வந்திருக்கின்றனர். ஊர்தோறும், தெருதோறும் உள்ள கூரையே இல்லாத மேடைக் கோயில்களிலும் கருவறை மட்டுமே உடைய பல்லாயிரம் சிறிய கோயில்களிலும், அன்றாடம், இறைவடிவின் மேல் பல மணி நேரம் சூரிய ஒளி படுகின்றதை சிறப்பு அம்சமாகக் கருதாத போது, எப்போதாவது சில நாட்கள் மட்டுமே கருவறையில் சூரிய ஒளி பரவும் கோயில்களை பெருமையாகப் பேசுவது ஏன்? பல முன் மண்டபங்களைத் தாண்டிக் கருவறையில் சூரிய ஒளி படர்வது ஒரு பொறியியல் சாதனை மட்டுமா?

எல்லா மண்டபங்களையும் தாண்டி கருவறையில் கதிரவனின் ஒளி படருமாறு அமைப்பது ஏன்? நாம் உணராவிட்டாலும் கூட, காற்று ஓட்டம், காந்த சக்தி நகர்வு, ஒளிச் சிதறல், ஒலிப்பரவல் போன்ற பல இயற்கைச் சக்திகளின் இயக்கத்திற்கு நாம் ஒவ்வொரு நொடியும் ஆளாகிக் கொண்டேயிருக்கிறோம். குடிசையாயினும், மாளிகையாயினும், பலமாடிக்குடியிருப்பு ஆயினும், பொருள் கிடங்காயினும், பெரும் ஆலயங்களாயினும், சிறு பந்தலாயினும் சரி, நாம் உருவாக்கும் ஒவ்வொரு அமைப்பும் மேற்கண்ட இயற்கைச் சக்திகளின் நகர்வில் குறுக்கிடுகின்றன. இக்குறுக்கீட்டினால் நமக்கு தீங்கு ஏற்படக்கூடாது என்பதற்காக, தீவிர ஆராய்ச்சி செய்து எழுதப்பட்டவையே வாஸ்து சாஸ்திரம்.

வாஸ்து நியதிகள் எல்லா கட்டமைப்புக்கும் உண்டு. ஆலயங்கள் இதற்கு விதிவிலக்கல்ல. உண்மையில், ஆலயங்கள் கட்டுமானத்திற்குத் தான் வாஸ்து விதிகள் அதிகம். அதிலும், ஆலய வளாகம் பெரிதாகப் பெரிதாக நியதிகளும் அதிகமாகின்றன. கருவறையில் சூரிய ஒளி படர வழி வகுப்பதும், கருவறையைச் சுற்றி மண்டபங்கள் எழுப்பும்போது வெளிச்சமும், வெய்யிலும், காற்றும் உள்ளே பரவிடுதற்காக, மேல் விதானத்தில் ஆகாயம் தெரியுமாறு, பிரம்மவெளி என்று அழைக்கப்படும் ஜன்னல்கள் வைப்பது முக்கிய நியதிகளாகும். இயற்கைச் சக்தியோடு நமக்கு தடையற்ற தொடர்பு இருக்க வேண்டும் என்பதற்காகவே, இன்றும் பல ஊர்களில் பெரிய வீடுகளில் திறந்த வெளி முற்றங்கள் அமைக்கப்படுகின்றன. வீட்டு அறைகளில் இயற்கைச் சக்திகளின் இயல்பான ஓட்டம் தடைப்படுவது அதிகரிக்க அதிகரிக்க, நாம் செயற்கையாக, வெளிச்சத்துக்கு விளக்கும், காற்றுக்காக காற்றாடியும் உபயோகிக்கிறோம். பலமாடிக் குடியிருப்புக்களில் வீட்டிலுள்ள சமையல் வாடையும், கழிவறை நாற்றமும் வெளியேறிட காற்று வெளித்தள்ளியும் வைக்கிறோம். இது போன்ற ஒரு செயல்பாடே, ஆலயக்கருவறையில் சூரிய ஒளி படரச் செய்திடுவதும் ஆகும்.

அன்றாடம் இயலாவிட்டாலும், நாம் வருடாவருடம், எப்போதாவது அருவியிலும், ஆற்றிலும், கடலிலும் நீராடி ஆரோக்கியம் பராமரிப்பது போல, பல்லோரும் கூடிடும் ஆலயங்களிலும், அசுத்த நிலையை நீக்கி தூய்ப்பிக்கும் முயற்சியே மிக நுணுக்கமான, அளப்பரிய சக்தி வாய்ந்த சூரிய ஒளியை பரவச் செய்யும் ஆலய இயல் நியதியும் ஆகும். மூர்த்திக்கு எதிரே நின்று அர்ச்சகர் பூஜிக்கலாகாது என்றும், பக்தர்கள் வழிபடலாகாது என்றும் கூறுவதற்குக் காரணம், பின் இருப்பவர்க்கு இறைவனைக் காண முடியாது என்பது மட்டுமல்ல. கருவறைக்கும் பிற மண்டபங்களுக்கும் இடையிலான ஒளி, ஒலி, காற்றுப் பரவல் தடைப்படக்கூடாது என்பதுவே மிக முக்கியகாரணம்.

சூரிய ஒளி பரவல் அமைப்பு உள்ள கோயில்கள் பல இருந்தாலும், தமிழகத்தில் தான் அவை அதிகம் உள்ளன. தமிழகத்திலுள்ள சுமார் 100 சூரிய பூஜைக் கோயில்களில் மிகச் சிலவற்றில் மட்டுமே (கண்டியூர், சங்கரன் கோயில் போல) ஒளிப்பரவல் மாலையில் ஏற்படுகிறது. மற்றவற்றில் காலையில் தான். பலவற்றில் சூரிய பூஜை அமைப்புடைமை பொது மக்களுக்குத் தெரியாமலேயே உள்ளது. பஞ்சாங்கங்களில் கூட சிலவைப் பற்றி மட்டுமே குறிப்பு உள்ளது.

ஒளிப்பரவல் நேரத்தில் பல்லோரும் கூடி இறைநாமம் ஜபிக்கும்போது நல்ஒலி அதிர்வுகளும் சேருவதால் ஆலயம் புதுப்பொலிவும், ஈர்ப்பும் பெற்று நாம் அடையும் பயனும் பன்மடங்காகிறது. அடிக்கடி ஆலயம் செல்ல முடியா விட்டாலும் சூரிய பூஜை நேரத்திலாவது இறைவனை கண்டிப்பாக தரிசிக்க முயல்வோம்.
கடந்த ஜென்மம் அல்லது மறுபிறவி உண்டா? இல்லையா?

ஆன்மிக நோக்கிலும், அறிவியல் நோக்கிலும் கடந்த ஜென்மம் உண்டா? இல்லையா? என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.  ராமாயணம், மகா பாரதம் போன்ற புராணங்கள் மறுபிறப்பைப் பற்றிக் என்ன கூறுகிறது? விஞ்ஞானிகள், சிந்தனையாளர்கள், பெரியோர்கள் என்ன கூறுகிறார்கள் என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.ராமாயணம், மஹாபாரதம் போன்ற இதிகாசங்கள் புனர்ஜென்மங்களைப் பற்றிக் கூறும் நூற்றுக்கணக்கான சம்பவங்கள் மிகவும் சுவையானவை. பெரிய ஆராய்ச்சிக்கு உரியவை. பதினெட்டு புராணங்கள் தரும் மறுபிறப்பு சம்பவங்களில் நிறைய உண்மைகளை உணரலாம்.

சீதையின் முன் ஜென்மம்!

முதலில் ராமாயணத்தில் முக்கியமான சம்பவத்தைப் பார்க்கலாம்! சுந்தரகாண்டத்தில் அசோகவனத்தில் துன்பப்படும் சீதை, முன்  ஜன்மாந்தரத்தில் எப்படிப்பட்ட பாபம் என்னால் செய்யப்பட்டதோ! ஆகவேதான் கொடுமை கொண்டு மிக வருத்துகின்ற இந்தத் துயரம் என்னால் அனுபவிக்கப்படுகிறது (கீத்ருஸம் து மயா பாபம் புராஜன்மாந்தரே க்ருதம் / யேநேதம் ப்ராப்யதே துக்கம் மயாகோரம் ஸுதாருணம் / 26ம் அத்தியாயம் 18ம் சுலோகம்) என்று கூறுவது நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்! சீதைக்கு ஏது முன் ஜென்மம் என்று ஆச்சரியப்படும்போதே, யுத்த காண்டத்தில் மீண்டும் ஒரு குட்டி சம்பவத்தைப் பார்க்கிறோம். ராவணன் வதம் செய்யப்பட்ட நிலையில் ஹனுமன், சீதையைக் கொடுமைப்படுத்திய ராக்ஷஸிகளைக் கொல்வதற்கு சீதையிடம் அனுமதி கேட்கிறான். நன்கு யோசித்து விட்டு சீதை கூறுகிறாள். அவர்கள் வெறும் ஊழியர்கள்தான் ! அவர்கள் மீது ஏன் கோபப்படுகிறாய்! நான் அடைந்த துன்பங்கள் அனைத்தும் எனது முன் ஜென்மங்களில் செய்த செயல்களின் விளைவுதான் என்று திட்டவட்டமாக கூறுகிறாள். (யுத்தகாண்டம் 113ம் அத்தியாயம், 39ம் சுலோகம்) சீதையின் முன் ஜென்மக் கதை சுருக்கமாக இதுதான். ஒருமுறை ராவணன் பூமியைச் சுற்றி வரும்போது இமயமலைக் காட்டுப் பகுதியில் தவம் புரியும் ஒரு மாபெரும் அழகியைப் பார்க்கிறான். காம வசப்பட்ட ராவணன் இளமை பொங்கி வழியும் அழகியிடம் தவத்தை விட்டு விட்டுத் தன்னை மணம் புரிய வேண்டுகிறான். அந்த அழகியோ, பிருஹஸ்பதியின் புத்திரரான பிரம்ம ரிஷி குஸத்வஜரின் புதல்வி தான் என்றும், வேதங்களின் பிறப்பாகத் தான் பிறந்ததாகவும், தன்னை அடையத் தக்கவர் விஷ்ணு ஒருவரே என்று தன் தந்தை கருதியதாகவும், இதைக் கேட்டுக் கோபம் கொண்ட தைத்ய அரசன் சம்பு இரவில் தூங்கிக் கொண்டிருந்த தந்தையைக் கொன்றதாகவும், இதனால் துக்கப்பட்டுத் தனது தாயார் அவருடன் சிதை ஏறியதாகவும், அதன் பின்னர் தந்தையின் ஆசையை நிறைவேற்ற நாராயணரை நோக்கித் தவம் புரிவதாகவும் கூறினாள்.

யார் அந்த விஷ்ணு? என்று ஏளனமாகக் கூறியவாறே வேதவதியின் கூந்தலைப் பிடித்து ராவணன் தூக்கவே வேதவதி தன் கையைத் தூக்கினாள். அது வாளாக மாற தன் கூந்தலை அறுத்துக் கொண்டு தீயை மூட்டி, நான் இனியும் உயிர் வாழ ஆசைப்படவில்லை; பெண்ணான என்னால் உன்னைக் கொல்ல முடியாது; நான் சாபமிட்டாலோ என் தவத்தை இழக்க வேண்டியிருக்கும். ஆகவே, அக்னியில் புகுந்து என் தவ வலிமையால் அயோனிஜையாக (கர்ப்பத்தில் பிறக்காதவளாக) மீண்டும் வருவேன் என்று கூறி அக்னியில் புகுந்தாள். பின்னர் மீண்டும் ஒரு தாமரை மலரிலிருந்து தோன்றினாள். அவளை மீண்டும் பிடித்த ராவணன் தன் அரண்மனைக்குக் கொண்டு வந்து தனது மந்திரியிடம் காண்பித்தான். அவளது சாமுத்ரிகா லட்சணத்தைக் கூர்ந்து கவனித்த மந்திரி, இவள் இங்கு இருந்தால் உன் அழிவுக்குக் காரணமாவாள் என்று கூறினார். இதனால் ராவணன் அவளை கடலில் தூக்கி எறிந்தான். கரையை நோக்கி வந்த அவள் ஒரு யாகபூமியை அடைந்தாள். அங்கு ஜனக மஹாராஜன் உழும்போது பூமியிலிருந்து அவள் வெளிப்பட்டாள். உழு சாலிலிருந்து (சீதை) வெளி வந்ததால் சீதை என்ற நாமகரணத்துடன் வளர்ந்தாள். ராமனை மணம் புரிந்தாள். கிருத யுகத்தில் வேதவதியாய் இருந்து த்ரேதா யுகத்தில் சீதையாக வெளிப்பட்ட சீதையின் முற்பிறப்பு ரகசியம் பற்றிய கதையின் சுருக்கம் இது தான்!

உத்தரகாண்டம் தரும் முன்பிறப்பு இரகசியங்கள்!

சாதாரணமாக ராம பட்டாபிஷேகத்துடன் சுபம் என்று நாம் ராமாயணத்தை முடித்து விடுவதால் உத்தர காண்டத்தில் உள்ள அரிய ரகசியங்களை நாம் தெரிந்து கொள்ள முடியாமல் போய் விடுகிறது. வால்மீகி அரிய முன்பிறப்பு ரகசியங்களையும், ராமாயணத்திற்கு ஆதாரமாக விளங்கும் பல ரகசியங்களையும் (பிருகு முனிவர் விஷ்ணுவை பூமியில் மானிடனாக அவதரிக்க சாபம் தந்ததால் அவர் ராமனாக அவதரித்தது உள்ளிட்டவற்றை) உத்தர காண்டத்திலேயே விளக்குகிறார். சீதையின் முற்பிறவியைப் போலவே ராவணன், கும்பகர்ணன், விபீஷணன் உள்ளிட்ட ராமாயண கதாபாத்திரங்களின் முற்பிறவி பற்றிய சம்பவங்கள் சுவையானவை. படித்து அறிந்து கொள்ள வேண்டியவை.

இந்து மதத்தின் அடிநாதமான உண்மை மறுபிறப்பு!

செமிடிக் மதங்கள் என்று கூறப்படும் யூத மதம், கிறிஸ்துவம், இஸ்லாமியம் ஆகியவற்றிற்கும் இந்து மதத்திற்கும் உள்ள அடிப்படை வேறுபாடுகளில் முக்கியமான ஒன்று புனர்ஜென்மம். மனிதப் பிறவியில் ஒருவர் ஆற்றும் நல்வினை, தீவினைக்கேற்ப அடுத்த பிறவி அமைகிறது. அனைத்து மானுடரும் படிப்படியாக முன்னேறி முக்தி அடையலாம்; அடைவர் என்பது இந்து மதம் கூறும் உண்மை. மாறாக செமிடிக் மதங்கள் ஒரே ஒரு பிறவிதான் ஒருவருக்கு உண்டு. அவர் இறந்தவுடன் தீர்ப்பு நாள் வரும் வரை காத்திருந்து தீர்ப்பிற்கேற்ப சுவர்க்கத்தையோ அல்லது நரகத்தையோ அடைய வேண்டும் என்று கூறுகின்றன. தர்க்கரீதியாக சிந்தித்துப் பார்த்தால் ஒரே ஒரு பிறவிதான் ஒருவருக்கு உண்டு என்றால் ஒருவர் நீண்ட ஆயுளுடன் இருக்க, பிறந்த குழந்தை ஒன்று ஏன் மரிக்க வேண்டும்? ஒருவர் ஏன் செல்வந்தராகவும், இன்னொருவர் ஏழையாகவும் இருக்க வேண்டும்? என்பன போன்ற ஏராளமான கேள்விகள் எழுந்து விடை காண முடியாமல் தவிக்க வேண்டியிருக்கிறது.

மறுபிறப்பில் நம்பிக்கை கொண்ட மாமனிதர்கள்!

பிளேட்டோ, பித்த கோரஸ், லியனார்டோ டா வின்ஸி, பெஞ்சமின் ஃப்ராங்க்ளின், எமர்ஸன், ஷெல்லி, மாஜினி, தோரோ, ஹென்றி ஃ போர்டு, சி.ஜே.ஜங், உள்ளிட்ட ஏராளமான அறிஞர்கள் இந்து மதத்தின் அடிப்படைக் கொள்கையான மறுபிறப்பில் நம்பிக்கை உடையவர்கள்! அன்னி பெஸண்ட் அம்மையார் இது பற்றித் தீவிரமாக ஆராய்ந்து ரீ இன்கார்னேஷன் என ஒரு அரிய புத்தகத்தையே எழுதி இந்தத் தத்துவத்தை விளக்கியுள்ளார்.

விஞ்ஞானியின் ஆராய்ச்சி!

வர்ஜீனியா மாநில பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பிரபல விஞ்ஞானியான ஐயான் ஸ்டீவன்ஸன் 1040 புனர் ஜென்ம கேஸ்களை ஆராய்ந்து இது உண்மைதான் என ஆய்வு முடிவில் கூறியுள்ளார்! மிகவும் பிரபலமான எட்கர் கேஸ் 2000 பேரின் பூர்வஜென்மத்தைக் கூறி அவை சரி பார்க்கப்பட்டு அனைவரையும் பிரமிப்பின் உச்சிக்கே ஏற்றியிருக்கிறது
ஒருவன் குற்றவாளியாக காரணம் என்ன?

ஒருமுறை காளிங்கன் என்ற நாகம் யமுனை நதியை விஷமயமாக்கியது. அதில் குளிக்க வந்த பசுக்களையும், அவற்றை மேய்ப்பவர்களையும் சாகடித்தது. இதைக் கண்ட மற்ற மேய்ப்பர்கள் பகவான் கிருஷ்ணரிடம் சென்று முறையிட்டனர். கிருஷ்ணர் யமுனை நதிக்கரைக்கு வந்து. காளிங்கனிடம் சண்டைக்கு வருகிறாயா என்று சவால்விட்டார். பயங்கரமான சண்டைக்குப் பிறகு காளிங்கன் தோற்றது. பணிந்து போயிற்று! வெற்றி பெற்ற கிருஷ்ணர். காளிங்கனின் தலைமீது ஏறி நின்று வெற்றி நடனம் ஆடினார். அதைப் பார்த்துக்கொண்டிருந்த பசுக்களும், மேய்ப்பர்களும் அவரை உற்சாகப்படுத்தி மகிழ்ந்தார்கள். தோற்றுப்போன காளிங்கன் யமுனை நதியை விட்டே வெளியேறுகிறது. இனி யாரும் யமுனை நதியை விஷமிட்டு நாசப்படுத்த முடியாது என்று மகிழ்ந்தார்கள் மக்கள்.

இந்தப் புராணக் கதையினுள் இன்னொரு கதையும் இருக்கிறது. இந்தக் கதையின்படி, விஷமுள்ள நாகமான காளிங்கனை அழிக்க வந்த கிருஷ்ணர் உன் விஷம் யமுனை நதியைப் பாழாக்குகிறது. மாடுகளும் மாடு மேய்ப்பவர்களும் இறக்கவேண்டி வருகிறது. அதனால் நீ இந்த நதியை விட்டுப் போய்விடு! என்றார் அதற்குக் காளிங்கன் மறுத்துவிட்டது. ஏன் இங்கிருந்து போக மறுக்கிறாய்? என்று கிருஷ்ணர் கேட்க, இதுதான் எனக்குப் பாதுகாப்பான இடம். நதியின் இந்த வளைவுப் பகுதியை விட்டு நான் போய்விட்டால், என்னை கருடன் எளிதாக வந்து தாக்குவான். அதனால் நான் இங்கேயே இருக்கிறேன். எனக்கு நீரை விஷமாக்குவதில் விருப்பமில்லை. ஆனால், அதற்கு நான் என்ன செய்வது? எங்கே போவது? என்றது.

முதல் கதையில் காளிங்கன் வில்லன். இரண்டாவதில், காளிங்கன் பாதிக்கப்பட்டவன். இரண்டாவது கதை நம்மைக் கருணையோடும் அன்போடும் கவனிக்கச் சொல்கிறது. எல்லாக் கதைகளிலும் ஹீரோவும் உண்டு. வில்லனும் உண்டு. ஆனால் வில்லன் ஏன் உருவாகிறான் என்பது குறித்து நாம் யோசித்துப் பார்ப்பதில்லை. யாருமே பிறந்தவுடன் குற்றவாளி ஆகிவிடுவதில்லை. தேவைதான் ஒருவனைக் குற்றவாளி ஆக்குகிறது. பேராசைக்கு இடம் கொடுக்கிறது. இதை நாம் உணர்வதற்குள், அது நமக்குப் பழகிப் போய்விடுகிறது. இருந்தாலும் பாதிக்கப்பட்டவனுக்குள் வில்லத்தனம் விதைக்கப்பட்டு விடுகிறது என்பதால் கடுமையாக இருக்கின்றன என்பதால், நாம் அவற்றை மீறப் பார்க்கிறோம். அப்படி மீறுவதால், நாம் எதையும் செய்யலாம் என்ற விடுதலை உணர்வை அனுபவிக்கிறோம். விதிகள் நம்மைப் பாதுகாப்பற்றதாகவும் மகிழ்ச்சியற்றதாகவும் ஆக்கும்போது, நாம் சட்டத்தை மீறுகிறவர்கள் ஆகிறோம். குற்றவாளிகள் ஆகிறோம்!

நாகமான காளிங்கனுக்கு கருடன்மீது பயம் இருந்தது. கருடனால் தனது உயிருக்கு தீங்கு ஏற்படுமோ என்று அது அஞ்சியது. அதனால் இருக்கிற இடத்திலேயே.... அதாவது யமுனை நதியிலேயே இருக்க கிருஷ்ணரிடம் அனுமதி வேண்டியது. நதியில் இருந்து வெளியேற அதற்கு தைரியம் வரவில்லை. அதே நேரம், காளிங்க நாகமானது தனது விஷத்தன்மையால் நதியையே விஷமாக்கிறது. அதன்மூலம் அது வில்லனாகவும் மாறியது! கிருஷ்ணர் இதை உணர்ந்தார். அதனால்தான் தன் திருப் பாதத்தின் சுவடுகளை காளிங்கனின் தலை மீது பதித்தார். அதுதான் நாகப்பாம்பின் மீது காணப்படும் நாமம் போன்ற அடையாளம். காளிங்கனாகிய என்னை எதுவும் செய்துவிடாதே... என்று அந்த நாகம் கருடனிடம் தெரிவிப்பதற்காக கிருஷ்ணர் தந்த அடையாளமாகவும் நாம் அதை எடுத்துக்கொள்ளலாம்.

இந்துப் புராணங்களில் கடவுள் சாதாரணமாக வில்லனைக் கொல்வதில்லை. மாறாக அவனுக்கு விமோசனம் அளிக்கிறார். விடுதலை மாதிரிதான் அது. பாதிக்கப்படும் ஒவ்வொருவரும் (வில்லன் உட்பட) காப்பாற்றப்பட வேண்டியவர்தான். அதைத்தான் இரண்டாவது கதை சொல்கிறது. இன்றைக்குத் தப்பு செய்கிறவர்கள் பலரையும் நாம் வில்லனாகப் பார்க்கிறோம்; அடிக்கிறோம், உதைக்கிறோம், அபராதம் வாங்குகிறோம்; தண்டனை கொடுக்கிறோம்; சிறையில் தள்ளுகிறோம். இப்படி, அவர்களுக்குத் தண்டனை மட்டும் கொடுத்தால் போதாது; அதனுடன் அவர்களுக்கு விமோசனம் என்ன என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும். நமக்குள் எழும் சினத்தையும் ஆத்திரத்தையும் காட்டுவதைவிட, பக்குவ நிலையில் யோசித்துப் பார்க்க வேண்டும். பக்குவ நிலை வராவிட்டாலும், அதைப்பெற முயற்சியாவது செய்ய வேண்டும். அதுதான் ஒவ்வொரு நல்ல மனிதனுக்கும் அழகு!

வெள்ளி, 25 ஜனவரி, 2019

ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி அஷ்டகம்

விஸ்வம் தர்பண த்ருஷ்யமான நகரீ துல்யம் நிஜாந்தர்கதம்
பஷ்யன்னாத்மனி மாயயா பஹிரிவோத்பூதம் யதா நித்ரயாக:
ய:ஸாக்ஷாத்குருதே ப்ரபோதசமையே ஸ்வாத்மான மேவாத்வயம்
தஸ்மை ஸ்ரீ குருமூர்த்தயே நம இதம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே.

பீஜஸ்யாந்த ரிவாங்குரோ ஜகதிதம் பிராங் நிர்விகல்பம் புன:
மாயா கல்பித தேஷகாலகலனா வைசித்ர்ய சித்ரீக்ருதம்
மாயாவீவ விஜ்ரும்பயத்யபி மஹா யோகீவ யஸ்வேச்சயா
தஸ்மை ஸ்ரீ குருமூர்த்தயே நம இதம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே.

யஸ்யைவ ஸ்புரணம் சதாத்மக மசத் கல்பார்தகம் பாஸதே
சாக்ஷாத் தத்வமசீதி வேதவசஸா யோ போத யாத்யாஸ்ரிதான்
ய: சாக்ஷாத் கரணாத் பவேன்ன புனராவ்ருத்திர் பவாம்போனிதௌ
தஸ்மை ஸ்ரீ குருமூர்த்தயே நம இதம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே.

நானாச்சித்ர கடோதர ஸ்தித மஹா தீப பிரபா பாஸ்வரம்
ஞானம் யஸ்யது சக்ஷுராதி கரண த்வாரா பஹி:ஸ்பந்ததே
ஜானா மீதி தமேவ பாந்தம் அனுபாத் ஏதத்சமஸ்தம் ஜகத்
தஸ்மை ஸ்ரீ குருமூர்த்தயே நம இதம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே.

தேஹம் பிராணமபீந்த்ரியாண்யபி சலாம் புத்திம் ச சூன்யம் விது:
ஸ்த்ரீபாலாந்த ஜடோபமா ஸ்த்வஹமிதி ப்ராந்தா ப்ருசம் வாதின:
மாயாசக்தி விலாச கல்பித மஹா வ்யாமோஹ சம்ஹாரிணே
தஸ்மை ஸ்ரீ குருமூர்த்தயே நம இதம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே.

ராஹு கிரஸ்த திவாகரேந்து சதுசோ மாயா சமாச் சாதநாத்
சன்மாத்ர: கரணோப சம்ஹரணதோ யோ பூத் ஸுஷுப்த: புமான்
ப்ராகச்வாப் சமிதி பிரபோத ஸமயே ய: ப்ரத்யபிக்ஞாயதே
தஸ்மை ஸ்ரீ குருமூர்த்தயே நம இதம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே.

பால்யாதிஷ்வபி ஜாக்ரதா திஷிததா சர்வாஸ்வ வச்தாத்வபி
வ்யாவ்ருத்தா ஸ்வனுவர்த்தமானமஹ மித்யந்த ஸ்புரந்தம் சதா
ஸ்வாத்மானம் பிரகடீகரோதி பஜதாம் யோ முத்ரயா பத்ரயா
தஸ்மை ஸ்ரீ குருமூர்த்தயே நம இதம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே

விஸ்வம் பஸ்யதி கார்ய காரண தயா ஸ்வஸ்வாமி சம்பந்தத:
சிஷ்யாசார்யதயா ததைவ பித்ருபுத்ரா த்யாத்மனா பேதத:
ஸ்வப்னே ஜாக்ரதிவா ய ஏஷ புருஷோ மாயா பரிப்ராமித:
தஸ்மை ஸ்ரீ குருமூர்த்தயே நம இதம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே.

பூரம்பாம்ஸ்ய நாளோ நிலோம்பர மஹர் நாதோ ஹிமாம்சு புமான்
இத்யாபாதி சராச்சராத்மகமிதம் யச்யைவ மூர்த்யஷ்டகம்
நான்யத்கிஞ்சன வித்யதே விபுசதாம் யஸ்மாத் பரச்மாத்விபோ:
தஸ்மை ஸ்ரீ குருமூர்த்தயே நம இதம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே.

சர்வாத்மத்வமிதி ஸ்புடீக்ருதமிதம் யஸ்மாதமுஷ்மின் ஸ்தவே
தேனாஸ்ய ஸ்ரவணாத் ததர்த்த மனநாத்யானாச்ச சங்கீர்த்தநாத்
சர்வாத்மத்வமஹா விபூதி ஸஹிதம் ச்யாதீஸ்வரத்வம் ஸ்வத:
சித்தயே தத்புனரஷ்டதா பரிணதம் சைஸ்வர்ய மவ்யாஹதம்

ஞாயிறு, 6 ஜனவரி, 2019

சத்தானந்த பாரதியார்

கவியோகி சுத்தானந்தர் 11.05.1897 அன்று சிவகங்கையில் ஜடாதரர், காமாட்சி அம்மையாரின் நான்காவது மகனாகத் தோன்றினார். இவரது இயற்பெயர் வேங்கட சுப்ரமணியன் என்பதாகும். அன்னை மீனாட்சி அம்மனின் பேரருளால் தனது எட்டு வயதில் சுத்தானந்தர் கவிதா சக்தி பெற்றார். சிறிய பாட்டனார் பூர்ணானந்தரிடம் யோகம் பயின்றார். இமாலய மகான் ஞான சித்தர் சுத்தானந்தம் என்ற தீட்சா நாமம் வழங்கி, பராசக்தி மந்திர உபதேசம் அருளினார். சிருங்கேரி நரஸிம்ஹ பாரதி சங்கராசார்ய சுவாமிகள் கவியோகி பாரதி என்றும், சுவாமி சிவானந்தர் மஹரிஷி என்றும் சிறப்புச் செய்தனர். ஷீரடி சாய்பாபா ஓமொலி வழங்கினார். பகவான் ரமணர் தன்னறிவு பெறச் செய்தார். புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் இருபது ஆண்டுகள் தொடர்ந்து மோனத்தவம் புரிந்து சாதனை படைத்தார். காட்டுப்புத்தூரிலும், தேவகோட்டையிலும் சுத்தானந்தர் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். விடுதலைப் போராட்ட காலத்தில் தலைமறைவுத் தொண்டராக பணியாற்றிய போது திலகர், காந்திஜி, நேதாஜி, வ.வே.சு. அய்யர், சிதம்பரனார், சிவா, பாரதியார், செண்பகராமன், ராஜா மகேந்திர பிரதாப் போன்ற தலைவர்களுடன் தொடர்பு கொண்டிருந்தார். காந்திஜி அறிவுரைப்படி கிராமப்பணி, கதர்ப் பணியாற்றியும் மதுவிலக்கு, தீண்டாமை ஒழிப்பு, உயிர்ப்பலி தடுத்தல் போன்ற சீர்திருத்தப் பணிகளையும் மேற்கொண்டார். இயற்கை, சமரஸ போதினி, பாலபாரதி, ஸ்வராஜ்யா (தமிழ்) ஆகிய இதழ்களின் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.

தமிழ், வடமொழி, இந்தி, தெலுங்கு, ஆங்கிலம், பிரெஞ்சு உள்பட பல மொழிகளில் நூற்றுக்கணக்கான நூல்கள் இயற்றினார். தமது நூல்களில் சுத்தானந்தர் பெரிதும் போற்றியவை பாரதசக்தி மகா காவியம் மற்றும் யோகசித்தி என்ற நூல்களாகும். பாரத சக்தி தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் மாமன்னன் ராஜராஜன் விருது பெற்றது. அனைத்து சமய நூல்களையும் கற்று அவை காட்டிய நெறிகளைப் பழகி வாழ்ந்தார். ஒரே கடவுள், ஒரே உலகம், ஒரே ஆன்ம நேயர் நாம் என்று உலகிற்கு அறிவுறுத்தினார். இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளில் ஆன்மீக, கலாசாரப் பயணங்கள் மேற்கொண்டார். சுத்தானந்தரின் செய்தி சமயோகம். அகவாழ்வு சிறந்த யோகம்; புறவாழ்வு செழிக்க அறிவியல். யோகமும் அறிவியலும் மனித வாழ்வில் இணைந்து விட்டால் மானுடம் தெய்வ நிலை எய்தும்; மண்ணில் விண்ணரசு தோன்றும். 1977-ஆம் ஆண்டு சிவகங்கையில் சுத்தானந்த யோக சமாஜம் என்ற அமைப்பை சுத்தானந்தர் நிறுவினார். 1979-இல் சுத்தானந்த பாரத தேசிய வித்யாலயம் உயர்நிலைப்பள்ளியை சோழபுரத்தில் நிறுவினார். சோழபுரத்தில் தவக்குடில் அமைத்துக் கொண்டு தமது இறுதி காலம் வரை அனைவரிடமும் அன்பு காட்டி வாழ்ந்த கவியோகி சுத்தானந்தர் 07.03.1990 அன்று மகா சமாதி அடைந்தார்.

சிவானந்த ஜோதி

கங்கையைப் போலத் தெளிந்தநல் உள்ளம்,
கருணைமா முகிலெனத் தோற்றம்;
திங்களைப் போல நிலவிடும் சாந்தம்,
தினகரன் போலொளிர் ஞானம்,
தங்கமே யனைய சாதுக்க ளுடனே
சதானந்தக் குடிலில்வே தாந்தச்
சிங்கமே போன்று ப்ரணவ கர்ஜனைசெய்
சிவானந்த ஜோதியைப் பணிவாம்.

உலகெலாம் புகழும் உத்தமச் சோதி,
ஓம் சிவம் ஓம் சிவம் என்றே
சலசலத்தோடும் சாந்தமாச் சோதி
தற்செருக் கிம்மியும் இன்றி,
நிலவிடும் அன்பு நிறைந்ததற் சோதி
நிமலவே தாந்தமாச் சோதி
இலகிடும் வெள்ளி இமாலயச் சோதி
சிவானந்த ஜோதியைப் பணிவோம்.

1984 தமிழக அரசும், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகமும் நிறுவிய முதல் ராஜ ராஜன் விருதைப் (மாமன்னன் இராசராசன் படப்பிலக்கியப் பெரும் பரிசு) பெற்றார் கவியோகி சுத்தானந்த பாரதி. அவர் எழுதிய ஆயிரமாயிரம் நூல்களில், மாபெரும் காவியமான பாரத சக்தி மகாகாவியம் அவர், சுதந்திரம் கிடைக்கும் வரை பாண்டிச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் ஏறத்தாழ 20 ஆண்டுகள் மவுன விரதம் காத்தபோது மனதில் தோன்றிய காவியம் ஆகும். இவர் ஜடாதரய்யர் காமாட்சி தம்பதியின் நான்காவது குழந்தையாக பிறந்தார் சுத்தானந்தர் காலம்: 1891-1990 அவரின் பிள்ளை திருநாமம் வேங்கட சுப்பிரமணியன். ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த போது தான் சுத்தானந்தர், ஆயுட்காவியம் என அப்பெரியாரே குறிப்பிட்டுக் கொள்ளும் பாரத சக்தி மகா காவியத்தைப் பாடத் துவங்கினார். இவர் இயற்றிய நூல்களில் யோகசித்தி, கீர்த்தனாஞ்சலி, மேளராகமாலை, ஆகிய கவிதை நூல்கள் பிரபலமானவை. தமிழின் வரலாற்றில், சிறப்பாக தொண்டாற்றிய இவர், தமது தொண்ணூற்று ஒன்பதாம் வயதில் இவ்வுலகை விட்டு மறைந்தார். திருக்குறளை அதே ஈரடிகளில், அதே நடை, சந்தத்தில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் சுத்தானந்த பாரதியார், 1968 ஆம் நடந்த உலகத் தமிழ் மாநாட்டில், அப்புத்தகம் தெய்வநெறி கழகத்தாரால் வெளியிடப்பட்டது.

சோவியத் கீதாஞ்சலி என்னும் நூல் சோவியத் ஒன்றியத்தின் சோவியத் நாடு நேரு நினைவுப் பரிசு பெற்றது.

சனி, 5 ஜனவரி, 2019

ஜபம் பண்ணினா என்ன கிடைச்சுது சேஷாத்ரி

திரு. பாலகுமாரன் எழுதிய " தங்கக்கை " யை படிக்கும் பொழுது வாய் விட்டு, கதறி  அழுததுண்டு. சேஷாத்ரி ஸ்வாமிகள் ஸ்ரீ வித்யா மந்திரங்களை ஒவ்வொரு  மந்த்ரமாக 1008 முறை ஜபம் செய்த  பின்பு வேதம் படிக்க செல்வாராம்.

எமக்கும் ஸ்ரீ வித்யா சாதனைகளை  கற்றுத்தர குரு கிடைப்பாரா என  ஏங்கியதுண்டு. நல்ல எண்ணங்கள்  செயல்படாமல் போகுமா? ஆம் ! குரு  எம்மை  தமது  இருப்பிடத்திற்கே வரவழைத்து கற்றுக்கொடுத்தார்.  சகலமும் .................. என்ன சொல்ல !  உள்ளங்ககைகளில் வைத்து  தாங்கிக்கொண்டார் !

அந்த புத்தகத்தில் திரு. பாலகுமாரன்  விவரித்திருப்பார் ...........1 மணி, 2மணி , 3மணி, 4 மணி  .......... என  ஜபம் செய்யச்  செய்ய என்னென்ன மாற்றங்கள்  நிகழும் என ... படித்துப்பாருங்கள்  நண்பர்களே !! எங்கேனும்  உங்களுக்குள் உள்ள நெருப்பை தூண்டிவிட்டு பிரகாசமாக்கும் ... இடைவிடாது மந்த்ரம்  சொல்லிக்கொண்டுள்ள அந்த  இளைஞனை அணுகி எவரோ " என்ன  செய்கிறாய்? சேஷாத்ரி " எனக் கேட்டார். " கர்மா ஒழிய வேண்டும் "அதற்காக மந்த்ர ஜபம் செய்வதாக கூறினார்.

லட்சம் ஆவிருத்தி ஆயிருக்கு. இன்னும்  ஒரு அரை லட்சம் பண்ண வேண்டி  இருக்கு. மந்திரம் சொல்லிச்சொல்லி  கர்மாவை அழிக்கலாம். வாழ்க்கைப்  போக்கையே மாற்றி விடலாம். மந்த்ர  ஜபம் மனசை சுத்தம் பண்ணும். மனசு  சுத்தமாயிடுச்சுன்னா போதும்... நீங்க  என்ன கேட்டாலும் கிடைக்கும். "

இது ஆச்சரியமா இருக்கே ! நாலு  வார்த்தையை திருப்பித் திருப்பி  சொல்றதா எல்லா நன்மையும் கொண்டு  வந்து தரும். " அது வெறும்  வார்த்தையல்ல. கந்தகம்கறது  ஒருவகை மண்ணு. அது வெடிமருந்தா மாறலயா. அந்த மாதிரி சில குறிப்பிட்ட  வார்த்தைகள் உள்ளுக்குள்ள மாறுதல்  நிகழ்த்தும். மந்த்ரம் சொல்லச்சொல்ல  மனசு ஒருமுகப்படும். ஒருமுகப்பட்ட  மனசுக்கு நிறைய சக்தி உண்டு. வெறுமனே சந்தேகப்படாம உடனே  மந்திரம் சொல்ல ஆரம்பிக்கணும். உனக்கு என்ன ஆயுசு விதிச்சிருக்கோ  தெரியாது. அதனால இந்த ஆயுசிலேயே  நல்லது கிடைக்கறதுக்காக தெளிவு  கிடைக்கறதுக்காக இப்பவே மந்திரம்  சொல்ல ஆரம்பி. " ஒருமணி  நேரத்துக்குமேல ஜபம் பண்ண  முடியலையே சேஷாத்ரி. அந்த ஒருமணி  நேரமும் மனசு எங்கெங்கோ சுத்துறதே " ஆர்வமுள்ளவர்கள் ஆவலுடன்  கேட்டார்கள். " பண்ணிதான் ஆவேன்னு  உட்கார்ந்துடணும். அதுக்குப்பேர் தான்  வைராக்கியம். என்ன தடுத்தாலும் எது  குறுக்கிட்டாலும் தினம் ஒருமணி நேரம்  ஜபம்கறதை ஆரம்பிச்சுடணும்.  சிரத்தையா பண்ண ஆரம்பிச்சுட்டா  ஒருமணி நேரம் போறாது. மனசுக்கு  பசிக்க ஆரம்பிச்சுடும். இன்னொரு  மணிநேரம் பண்ணு. இன்னொரு  மணிநேரம் பண்ணுன்னு அதுவா  கேட்கும். நான் ஏழு வயசிலேயே  கார்த்தாலே ஒரு மணிநேரம், சாயந்தரம்  ஒரு மணிநேரம் ஜபம் பண்ண  ஆரம்பிச்சுட்டேன். அதனாலே கணக்கோ, பாட்டோ, பூகோளமோ, இங்கிலீசோ,  பள்ளிக்கூடமோ முக்கியமில்லைனு  ஆயிடுத்து. காசை விட ஜபம் தான்  முக்கியம்னு போயிடுத்து.
எல்லா அபிலாஷைகளும் ஜபத்தால்  நடக்கும்கறபோது வேற இங்கு  செய்யறதுக்கு என்ன இருக்கு.

மனசு கேட்க கேட்க ஜபம் பண்ணிண்டே  இருக்கேன். என் மனசுக்கு பசி அதிகம்  எத்தனை சாப்பிட்டாலும் நிரம்பாத  வயிறு மாதிரி எத்தனை ஜபம்  பண்ணினாலும் மனசுக்கு போறள. பன்னெண்டு மணிநேரம் பண்றேன்.

என்ன  கிடைச்சுது  சேஷாத்ரி ? "
           
எனக்கு என்ன கிடைச்சுதுங்கறது  முக்கியமில்லடா. நான் ஒரு  பொருட்டில்லை. என்ன கிடைக்கும்னு  கேள்! படிப்படியா விளக்கிச் சொல்றேன்.
தினம் ஒருமணிநேரம் ஜபம் பண்ணினா, மனசு அமைதியாகும். கோபம் குறையும். இதைவிட அதிகமா பண்ணினா கோபம்  அறவே போறதுக்கு வாய்ப்பிருக்கு. காலைல ரெண்டு மணிநேரம், சாயந்தரம் ரெண்டு மணிநேரம் பண்ணினா  காதுக்குள்ள இனிமையான சங்கீதம்  கேட்கும். உடம்பு இறகுபோல லேசா  இருக்கும். நோய் உபத்திரவாதங்கள்  இருக்காது. உணவு கவனமா சாப்பிடத்  தோணிடும். ருசிக்கு நாக்கு அலையாது.
கார்த்தாலே மூன்று மணிநேரம், சாயந்தரம் மூன்று மணிநேரம் ஜபம்  பண்ணினா, முகத்துல மாறுதல்  உண்டாகும். கண் கூர்மையாகும். உடம்பிலே இருந்து தேஜஸ் விசிறி  விசிறி அடிக்கும். வாக்கு பலிக்கும்.
எட்டு மணிநேரம் ஜபம் பண்ணினா, நீ  வேற மந்த்ரம் வேற இல்ல. நீயே  மந்திரமா மாறிடலாம். அதற்கப்புறம்  நடக்கறதெல்லாம் ஆனந்தக் குதியல்  தான். எதை பார்த்தாலும் சந்தோஷம்  தான். பசிக்காது. தூக்கம் வராது. யாரையும் அடையாளம் தெரியாது.
மனசு கட்டுலேயிருந்து விடுபட்டு  ஸ்வாமிக்கிட்ட நெருக்கமா போய்டலாம். அப்புறம் அது இழுத்துண்டு போய்டும்.

இன்னும் உக்கிரமா ஜபம் செய்ய அந்த  சக்தியே கூட்டிண்டு போய்டும். நீ  உன்னோட  கட்டுப்பாட்டில்  இருக்கமாட்டே. முழுக்க முழுக்க  ஸ்வாமிகிட்ட சரணாகதி ஆயிடுவே. அப்ப நீ என்ன கேட்டாலும் கிடைக்கும். இதுல பெரிய சந்தோஷம் என்ன தெரியுமா,  உனக்கு வேணும்கறது ஒவ்வொன்றும்  பகவானா பார்த்து பார்த்துக்  கொடுப்பார். உன் வார்த்தையெல்லாம்  கடவுளுடைய வார்த்தை. உன்  செய்கையெல்லாம் கடவுளுடைய  செய்கை.

எட்டு மணிநேர  ஜபத்துக்கப்புறம் என்ன ? "
எல்லா நேரமும் ஜபம் பண்ணனும்னு  தோணிடும். எட்டு இருபத்தி நாலா  மாறிடும். அதுல இன்னும் உக்கிரம்  வந்துடும். மந்த்ர ஜபம் என்பது கற்றுக்  கொள்வதில் இல்லை. பூஜை என்பது  சொல்லித்தந்து செய்வது அல்ல.  உள்ளிருந்து பீறிட வேண்டும். தன்முனைப்பாக கிளர்ந்து எழுந்து  அதற்குள்தானே மயங்கிச் சரிதல்  வேண்டும். சடங்காக செய்கிறபோதும்  எதிர் பார்த்து உட்காரும் போதும்  செய்கிற விஷயத்தின் வீர்யம்  குறைகிறது.ஸ்வாசம் போல இயல்பாக  மாறிய செயல்தான் உன்னத நிலைக்கு  அழைத்துச் செல்கிறது.