வெள்ளி, 17 ஜனவரி, 2014

நட்சத்திர கோயில்கள் 

அருள்மிகு பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோயில்

மூலவர்:பிறவி மருந்தீஸ்வரர்அம்மன்/தாயார்    :பிரகன்நாயகி (பெரியநாயகி)
பழமை:1000 வருடங்களுக்கு முன்
ஊர்:திருத்துறைப்பூண்டி
மாவட்டம்:திருவாரூர்
மாநிலம்:தமிழ்நாடு
     
திருவிழா:சித்திரை திருவிழா இங்கு விசேஷம். நவராத்திரி, திருவாதிரை விழா ஆகியவனவும் நடக்கின்றன.    
           
தல சிறப்பு:இத்தல இறைவன் மேற்கு நோக்கி அருள்பாலிப்பது முக்கிய சிறப்பாகும். இக்கோயிலின் விசேஷ அம்சம் சிவனின் கஜசம்ஹார மூர்த்தியாகும். அமாவாசை, பவுர்ணமி நாட்களில் இம்மூர்த்தியை வழிபடுவதன் மூலம் மனதில் பயம் என்ற சொல்லுக்கே இடமிருக்காது. இவர் ஆணவத்தையும் வேரறுப்பவர்.    
           
திறக்கும் நேரம்:காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.   
         
முகவரி:அருள்மிகு பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோயில், திருத்துறைப்பூண்டி-614 713, திருவாரூர் மாவட்டம்.போன்:+91 4369 222 392, 94438 85316, 91502 73747   
          
பொது தகவல்:அசுவினி நட்சத்திரக்காரர்களின் பொது குணம்: செல்வந்தராகவும், புத்தி சாதுர்யம் கொண்டவர்களாகவும் இருப்பர். விவாதம் செய்வதிலும், ஆடம்பரத்திலும் நாட்டம் இருக்கும். மற்றவர்களை நன்கு புரிந்து கொண்டு அன்புடன் பழகுவர். ஆசிரியரைப் போல நல்ல விஷயங்களைப் பிறருக்குப் போதிப்பர். தெய்வீக வழிபாடு, புராண, ஜோதிட சாஸ்திரங்களில் ஈடுபாட்டுடன் விளங்குவர்.

பிரார்த்தனை:அஸ்வினி நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர். திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.

நேர்த்திக்கடன்:சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.   
          
தலபெருமை:அஸ்வினி நட்சத்திரத்தலம்: அஸ்வினி நட்சத்திரத்திற்கு மருத்துவச்சக்திகள் அதிகம் உண்டு. அஸ்வினி நட்சத்திர தேவதைகளும், மருத்துவ தேவதைகளும் தினமும் வழிபாடு செய்யுக்கூடிய தலமே பிறவி மருந்தீஸ்வரர் கோயிலாகும். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிறவியிலேயே நோய் நிவாரணத்தன்மை இருக்கும். இருந்தாலும் இவர்கள் தம் வாழ்நாளில் அடிக்கடியோ, தாங்கள் பிறந்த நட்சத்திர நாளிலோ, இத்தலம் சென்று தன்வந்திரி ஹோமம், சனீஸ்வர ஹோமம், செவ்வாய் பகவான் வழிபாடு செய்தால் நோயில்லாத வாழ்வு அமையும்.

கஜசம்ஹார மூர்த்தி: தாருகாவனத்தில் தங்கியிருந்த முனிவர்கள், தாங்கள் செய்யும் யாகங்களின் பலனை ஏற்பதால் தான், சிவனுக்கே சக்தி ஏற்பட்டு உலகை காப்பதாக ஆணவம் கொண்டனர். அவர்களுக்கு புத்தி கற்பிக்க இறைவன், பிட்சாடனராக, உலகமே வியக்கும் பேரழகுடன் அங்கு வந்தார். அவர்கள் பிட்சாடனராக மாறுவேடத்தில் வந்த அந்த சுந்தரனைப் பார்த்தனர். தன்னிலை மறந்து, ஆடைகள் அவிழ அவர் பின்னால் சென்றனர். அந்நேரத்தில் விஷ்ணு மோகினி அவதாரம் எடுத்து வந்தார்.

தங்கள் மனைவியரை விட அழகில் சிறந்த அப்பெண்ணின் பின் னால் முனிவர்கள் சென்றனர். சற்று நேரத்தில் தங்கள் நிலை உணர்ந்து, தங்களை இக்கதிக்கு ஆளாக்கிய அவர்களை அழிக்க, மந்திர சக்தியால் உருவான யானை ஒன்றை ஏவினர். சிவன் அந்த யானையைக் கொன்று, அதன் தோலை உரித்து ஆடையாக அணிந்தார். இதனால் அவர் கஜசம்ஹார மூர்த்தி என பெயர் பெற்றார்.  முனிவர்கள் தங்கள் ஆணவம் நீங்கப் பெற்றனர்.    
           
தல வரலாறு:ஜல்லிகை என்பவள் அரக்க குலத்தில் பிறந்தாலும், சிவபக்தியில் சிறந்தவள். அவளுக்கு மனிதர்களை விழுங்கும் விருபாட்சன் என்றராட்சஷன் கணவனாக அமைந்தான். ஒருமுறை, ஒரு அந்தணச்சிறுவன் தன் தந்தைக்கு சிரார்த்தம் செய்ய கங்கைக்கு சென்று கொண்டிருந்தான். விருபாட்சன் அவனை விழுங்க முயன்றான். ஜல்லிகை தடுத்தாள். அந்தணர்களை விழுங்கினால் அந்த உணவே விஷமாகும் என எச்சரித்தாள். அவளது பேச்சைக் கேட்க மறுத்த விருபாட்சன், சிறுவனை விழுங்கியதால், விஷமேறி இறந்தான். ஜல்லிகை திருத்துறைப்பூண்டி சிவனை வணங்கி, இறைவா! என் கணவன் நல்லவன் அல்ல,

இருப்பினும் அவனின்றி நான் வாழேன். அரக்க குணத்தை மாற்றி, இரக்க குணமுள்ளவர்களையே இவ்வுலகில் பிறக்கச்செய். இல்லையேல், பிறவியிலிருந்து விடுதலை கொடு, என வேண்டினாள். அவளது துயரம் தாங்காத இறைவனின் துணைவியான பெரியநாயகி அவளுக்கு காட்சியளித்தாள். அவளது அருளால் விருபாட்சன் உயிர் பெற்றான். அத்துடன் அவனது வயிற்றில் கிடந்த அந்தணச் சிறுவனையும் எழுப்பினாள். அம்மா! நான் என் வழியே போய்க் கொண்டிருந்தேன். இடையில் இவன் என்னை விழுங்கினான். விதி முடிந்த என்னை உயிர்ப்பித்த காரணம் என்ன? என்றான். அவனிடம் அம்பிகை, மகனே! தந்தை இறந்த பிறகும், எவன் ஒருவன் அவரை நினைத்து ஆண்டுதோறும் அவருக்கு சிரார்த்தம் செய்கிறானோ, அவனுக்கு என்னருள் நிச்சயம் உண்டு. அது மட்டுமின்றி, மறைந்த அந்த தந்தைக்கு மறுபிறவி இல்லாமலும் செய்து சொர்க்கத்தில் இடமளிப்பேன், என்றாள். ஜல்லிகையிடம், மகளே! நீ அசுர குலத்தவள் ஆயினும் நற்குணமும், சிவபக்தியும் கொண்டிருந்தாய். எந்தப் பெண் எவ்வளவு கஷ்டம் வந்தாலும், அதைத் தாங்கிக் கொண்டு, இன்முகத்துடன் கணவனின் நல்வாழ்வை விரும்புகிறாளோ, அவள் சுமங்கலியாக வாழ வழி செய்வேன். அவளது கணவனையும் திருத்துவேன், என்றாள்.    
           
சிறப்பம்சம்:அதிசயத்தின் அடிப்படையில்: இக்கோயிலின் விசேஷ அம்சம் சிவனின் கஜசம்ஹார மூர்த்தியாகும். அமாவாசை, பவுர்ணமி நாட்களில் இம்மூர்த்தியை வழிபடுவதன் மூலம் மனதில் பயம் என்ற சொல்லுக்கே இடமிருக்காது. இவர் ஆணவத்தையும் வேரறுப்பவர்.


 
 

அருள்மிகு வைஷ்ணவிதேவி திருக்கோயில்


மூலவர்:வைஷ்ணவிதேவி, (சிரோ பாலி)
தீர்த்தம்:கங்கா நதி
பழமை:2000 வருடங்களுக்கு முன்
ஊர்:கட்ரா
மாவட்டம்:கட்ரா
மாநிலம்:ஜம்மு & காஷ்மீர்

திருவிழா:வருடந்தோறும் நவராத்திரி நாட்களில் திருவிழா நடைபெறுகிறது. அந்நாட்களில் திரிகுதா என்ற இம்மலை அலங்கரிக்கப்பட்டு வெகு விமரிசையாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டுகளிக்கும் பொருட்டு சிறப்பாக நடைபெறுகிறது.

தல சிறப்பு:இந்தியாவின் வட எல்லையில் உள்ள அம்மன் தலம் இது. அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது வைஷ்ணவி சக்தி பீடம் ஆகும். இங்கு அம்மன் அரூபமாக (சிலை வடிவில் இல்லாமல்) அருள்பாலிக்கிறாள்.( துர்கை, லட்சுமி, சரஸ்வதி மூவரும் ஒரே மூலஸ்தானத்தில் அருள்பாலிக்கின்றனர்.)

திறக்கும் நேரம்:திரிகுதா என்ற பெயருடைய இமயமலையின் குகைகோயில் (பவன்) ஜனவரி, பிப்ரவரி மாதம் தவிர இதர மாதங்களில் யாத்ரா மேற்கொள்ளலாம். நாள்தோறும் 24 மணி நேரமும் வைஷ்ணோதேவி இலவச தரிசனம்.

முகவரி:அருள்மிகு வைஷ்ணவி தேவி திருக்கோயில், கட்ரா-182 301, ஜம்மு காஷ்மீர்.போன்:+91-1991-232 125

பொது தகவல்:ஸ்ரீவைஷ்ணோதேவியை தரிசிப்பதற்கும், தங்குவதற்கும் முன்னதாகவே வெப்சைட் மூலமாக பதிவு செய்துகொள்ளலாம்.

யாத்ரா வைஷ்ணோதேவி ஸ்தலமான இந்த குகை கோயிலுக்கு வர நாம் முதலில் ஜம்முவை வந்தடையவேண்டும். ஜம்முவிற்கு தினமும் ரயில் மூலம் வரும் பயணிகளில் 75 சதவீத மக்கள் ஸ்ரீ வைஷ்ணோதேவியை தரிசிக்கவே வருகின்றனர். வைஷ்ணோதேவி மலையை சென்றடைய நம் முதலில் கட்ரா என்ற சிறிய நகருக்குள் நுழையவேண்டும். இவ்வூர் ஜம்முவிலிருந்து 50 கி.மீ. ஜம்முவில் இளைப்பாற சரஸ்வதி தாம் மற்றும் வைஷ்ணோதேவி தாம் என்ற இரு தங்கும் விடுதியை பக்தர்களுக்காக வைஷ்ணோதேவி போர்டு உருவாக்கியுள்ளது. ஜம்முவிலிருந்து 50 கி.மீ. பிரயாணம் செய்ய ஜம்மு ரயில் நிலையத்திலிருந்தே அரசு பஸ்கள், தனியார் பஸ்கள் ரயிலிலிருந்து வரும் பக்தர்களுக்காக நிறுத்தப்பட்டுள்ளது.

2003ல் ஜம்மு ரெயில் நிலையத்தில் ஏற்பட்ட அசம்பாவிதத்தால் இந்திய ராணுவம் முழு பாதுகாப்புடன் நம்மை கட்ரா நகருக்கு அனுப்பி வைக்கிறது. கட்ரா பஸ் நிலையத்தை அடைந்தவுடன் பக்தர்கள் அனைவரும் வைஷ்ணோ தேவியை தரிசிக்க முதலில் தங்களை பதிவு (ரெஜிஸ்ட்ரேசன்) செய்துகொள்ள வேண்டும். பஸ்ஸ்டாண்டிலேயே வைஷ்ணோதேவி போர்டு - பதிவு நிலையத்தை 24 மணி நேரமும் திறந்துவைத்துள்ளனர். நமது பெயர், எந்த ஊர், மாநிலம் போன்ற விவரத்துடன் ஒவ்வொரு குரூப் அல்லது பக்தருக்கு ரெஜிஸ்ட்ரேசன் ஸ்லிப் இலவசமாக தரப்படுகிறது. இந்த ரெஜிஸ்ட்ரேசன் ஸ்லிப் இருந்தால் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி உண்டு. இல்லையேல் மலையிலிருந்தாலும் திருப்பி அனுப்பப்படுவார்கள். கட்ரா பஸ் நிலையத்தில் நாம் பதிவுசெய்தவுடன் 1 கி.மீ தொலைவில் உள்ள திரிகுதா என்ற மலைமுகப்பில் உள்ள இராணுவ செக்போஸ்ட்டில் நாம் கொண்டுசெல்லும் உடமைகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.

ஒரு முக்கிய வேண்டுகோள் : மலைக்கு செல்லும்போது முடிந்தவரை உடைகள், உடமைகளை குறைத்துச் சென்றால் மலை ஏறும்போது அதிக சிரமம் இருக்காது.

வைஷ்ணோதேவி ஆலயம் (பவன்) :
மலை பிரயாணத்திற்காக மட்ட குதிரையில் அமர்ந்து பயணித்தல் மற்றும் டோலி (4பேர் அமரும் இருக்கையுடன் தூக்கிச்செல்லுதல்) போன்றவைகள் மூலமாகவும் செல்லலாம். வடநாட்டைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் 5 வயது முதல் 80 வயது வரை உள்ள ஆண் / பெண் பக்தர்கள் மலைப்பாதையில் நடந்தே ஜெய் மாதா தி என்ற கோஷத்துடன், மனஉறுதியுடன், பக்தியுடன் நடந்தே வருகின்றனர்.

நடந்து செல்பவர்கள் களைப்பை போக்க ஒரு கி. மீட்டருக்கு ஒரு "ரெப்பிரஸ் மென்ட்' ஷாப்பிங் உண்டு. அங்கு காபி, ஜூஸ் முதல் அனைத்தும் கிடைக்கும். அதே போல், இரண்டு கிலோமீட்டருக்கு ஒரு மெடிக்கல் சென்டர் இருக்கும், ஏறி வருபவர்க ளுக்கு உடல் நிலை பாதித்தால் இலவசமாக முதலுதவி செய்யப்படும்.

வசதி படைத்த, நடக்க இயலாத பக்தர்கள் ரெஜிஸ்ட்ரேசன் ஸ்லிப் கட்ராவில் பெற்றவுடன் பஸ்நிலைய வாசலில் டெக்கான் ஏர்வேஸ் (போன் நம்பர். 01991-234378,234379) அலுவலகத்தை தொடர்புகொண்டால் ஹெலிகாப்டர் மூலம் மலைமீது உள்ள வைஷ்ணோதேவியை எளிதில் அடையலாம். ஹெலிகாப்டர் மூலம் செல்ல கட்டணம் ரூபாய். 2,000/- (ஒருவழி பயணம் மட்டும்).

மலைமீது நடக்க அனைத்து பரிசோதனைக்கு பின் நாம் முதலில் நீராட வேண்டிய நதி பாண்கங்கா. ஸ்ரீவைஷ்ணோதேவி தொடுத்த பாணத்தால் ஊற்றெடுத்து உருவான நதி பாண்கங்கா. எனவே பக்தர்கள் இந்த புனித நதியில் நீராடியபின் ஜெய் மாதா தி என்ற சரண கோஷத்துடன் மலைஏற துவங்கலாம். மும்பை தொழிலதிபர் காலஞ்சென்ற திரு.குல்சன்குமார் அவர்கள் பெயரில் மிகப் பெரிய அளவில் பாண்கங்காவில் அன்னதானம் (24 மணி நேரமும்) நடைபெறுகிறது.

அங்கிருந்து 4 கி.மீ. தூரத்தில் வைஷ்ணோதேவி இளைப்பாறிய சரண் பாதுகாவை அடையலாம். மலைப்பாதையில் ஸ்ரைன் போர்டு சார்பில் போஜனாலயா என்ற பெயரில் சலுகை விலையில் உணவுக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து அர்த்த குமாரியை அடையலாம். நாம் மலையில் நடக்க வேண்டிய மொத்த தூரம் 12 கி.மீ. இம்மலைப் பகுதியில் சுமார் 10 கி.மீ. அதிக ஏற்றத்துடன் ஏறினாலும் கடைசியில் 2 கி.மீ தூரம் நாம் மலையின் இறக்கத்திலேயே சென்று நுழைவுவாயிலை அடையலாம்.

மலைமீதுள்ள இத்தலத்தின் நுழைவு வாயிலிலேயே நமது செல்போன், பேனா, பென்சில், மணிபர்ஸ், பெல்ட் போன்றவைகளை இலவச லாக்கரில் வைத்து விட்டுத்தான் பவன் என்றும் ஸ்ரீவைஷ்ணோதேவி குகைக்கோவிலுக்கு செல்ல முடியும். இந்திய ராணுவத்தின் சி.ஆர். பி. எஃப் கட்டுப்பாட்டில் பவன் உள்ளது. எனவே நுழைவு வாயிலில் பக்தர்கள் கடுமையாக பரிசோதிக்கப்படுகின்றனர். கேட் 1*2 மூலம் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். கேட் 3. மூலம் ராணுவத்தினர் மற்றும் இராணுவ அனுமதி பெற்றவர் அனுமதிக்கப்படுகின்றனர். பக்தர்கள் மலையில் தங்குவதற்கு ஏராளமான வசதிகள் உள்ளது. தங்கும் விடுதிகள், தனி நபர் டால்மெண்ட்ரிகள், இலவச பெட்ஷீட்கள் (ரூ. 100/- டெபாசிட் செய்தவுடன்) போன்றவைகள் உள்ளது.

பிரார்த்தனை:இங்குள்ள அம்மனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நிறைவேறும் என்பது பக்தர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை.

நேர்த்திக்கடன்:பக்தர்கள் தங்களால் இயன்ற காணிக்கையை செலுத்துகின்றனர்.

தலபெருமை:கோயில் வருடம் முழுவதும் 24 மணி நேரமும் திறந்திருக்கும். இருபுறமும் பசுமைக் காடுகளுக்கு மத்தியில் 24 மணி நேரமும் "ஜெய் மாதா தி' கோஷத்துடன் பல்வேறு இன, மாநில மக்கள் நடந்து செல் வதைக் காண்பதே கண்கொள்ளாக் காட்சிதான். 7 வயது முதல் 70 வயது வரையிலானவர்கள் வைஷ்ணவ தேவியின் தரிசனம் ஒன்றே குறிக்கோளாக பரவசமாக செல்வர்.

நடை பயணத்தில் நாம் பவித்ர கங்கா நதியை கடக்க வேண்டும். தன்னை நாடி வரும் பக்தர்களைப் புனிதப்படுத்த வேண்டும் என்பதற்காக தேவியே அம்பெய்து நதியை உற்பத்தி செய்ததாக ஒரு செவி வழி புராணச் செய்தி உண்டு. வழியில் சரண்பாதுகா என்ற இடம் உள்ளது. இங்கு மாதா தேவி பக்தர் களை பின் தொடர்ந்து அரக்கன் வரு கின்றானா என்று கண்காணித்து பாது காவல் செய்வதாக ஐதீகம் உள்ளது.அடுத்து வருவது அர்த் குமாரி. இங்கு நாம் செல்லும் பாதையில் ஒரு குகை இருக்கிறது. குகைக்குள் நுழைந்து அங்குள்ள தேவ கன்னிகை விக்ரகத்தை தரிசித்து பின்னர், பயணத்தை தொடர வேண்டும்.

அர்த் குமாரியில் இருந்து நடந்தால் மாதா வைஷ்ணவி தேவியின் கோயில் அமைந்துள்ள தர்பாருக்கு முக்கால் கிலோ மீட்டருக்கு முன் பஜார் உள்ளது. இங்கு தான் மாதாவை பூஜிக்க புஷ்பங்களையும், நிவேதனங்களை யும் வாங்கிக் கொள்ள வேண்டும். தேவியை தரிசிக்கும் போது, அங்குள்ள பூஜாரி பக்தர்களுக்கு நாணயங்களை பிரசாதமாக வழங்கு வார். அதை பத்திரமாக நம்முடைய வீட்டில் உள்ள பூஜை அறையில் வைத்தால், தேவியே நம்முடன் இருக்கின்ற தைரியம் ஏற்படும். க்யூவில் நகர்ந்து செல்லும் போது 2.5 அடி உயரம், 2.5 அடி அலகம் கொண்ட சிறிய குகை போன்ற துவாரம் உள்ளது. அதில் படுத்த படி ஒவ்வொருவரும் ஊர்ந்து 38 அடி தூரம் சென்றால் மீண்டும் திறந்த வெளி வரும்.

குகைக்கோயிலை நாம் அடைந்தவுடன் பிண்டி எனப்படும் கர்ப்பகிரஹம் உள்ளது. சுயம்புவான மூர்த்த உருவில் மூன்று உருவங்களாக தேவியை மிக கவனத்துடன் தரிசிக்கவும். இடதுபுறம் மஹா சரஸ்வதியாகவும், வலதுபுறம் துர்கை என்ற மஹாகாளியாகவும், நடுவில் மஹாலெட்சுமியாகவும் ஆக மூன்று தேவியரின் முழு உருவாக வைஷ்ணோதேவி அருட்காட்சி அளிக்கிறாள். தேவியை தரிசித்துவிட்டு வெளியில் வரும் பக்தர்களுக்கு சர்க்கரைபாகு கலந்த பொரி, அன்னையின் வடிவம் பொறித்த வெள்ளி டாலர் ஒவ்வொரு பக்தருக்கும் இலவசமாக வழங்கப்படுகிறது.

வைஷ்ணோதேவியை வருடந்தோறும், இந்தியா மற்றும் உலக நாடுகளிலிருந்து சுமார் 50 இலட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசித்து செல்வதாக நிர்வாகம் தெரிவிக்கின்றது. இந்தியாவில் பஞ்சாப், உத்திரபிரதேசம், உத்தராஞ்சல், பீகார், மகாராஷ்டிரா, டெல்லி, ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலத்தில் வசிப்பவர்களின் குல தெய்வமாக வைஷ்ணோதேவி விளங்குவதோடு அவர்களது குடும்பங்களை காத்து வருவதாக கூறப்படுகிறது. திருமணம் ஆன தம்பதியினர் ஒரு வருடத்திற்குள் இத்தலத்திற்கு தம்பதிகளாக வந்துசெல்வது வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்த வைஷ்ணோதேவி குகைக்கோயில் (பவன்) கடல் மட்டத்திலிருந்து 5200 அடி உயரத்தில் உள்ளது.

தல வரலாறு:தட்சன் யாகம் செய்யும்பொழுது சிவபெருமானை அழைக்காமல் அவமானம் செய்தான். ஆனால் பராசக்தி யாகத்திற்கு சென்றாள். அன்னையையும் தட்சன் அவமதித்ததால் சக்தி கோபத்தில் யாககுண்டத்தில் விழுந்து இறந்துபோனாள். அப்போது சிவபெருமான் மகாசக்தியின் உடலை கையில் ஏந்தி ருத்ரதாண்டவம் ஆடினார். அப்போது கிருஷ்ணன் சிவனின் கோபத்தை தணிக்க சக்தியின் உடல் மீது தனது சக்ராயுதத்தை எறிந்தார். அது உடலை துண்டு துண்டாக்கியது. அவ்வாறு விழுந்த ஒவ்வொரு துண்டும் ஒவ்வொரு சக்திபீடமாகியது. அதில் ஒன்றே ஜம்மு வைஷ்ணவிதேவி கோயிலாகும்.

திரு. ஜஸ்துமல் என்ற தேவி உபாசகருக்கு திருமகளாக வைஷ்ணோ தேவி பிறக்கிறாள். அழகு மங்கையாக வளரும் பருவத்தில் தேவியை கவர்ந்து செல்ல எண்ணி பைரவன் என்ற அரக்கன் துரத்துகிறான். பைரவனிடமிருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள குகையில் ஒளிந்துகொள்கிறாள் தேவி. அங்கே அவளுடைய சுயசொரூபம் சக்தி வடிவமாக வெளிப்பட, வெளியே வந்து குகை வாயிலிலேயே அவனை சம்ஹாரம் செய்கிறாள். அவனுடைய உடல் குகை வாயிலிலும், தலை பைரவகாடி என்ற அருகில் உள்ள மலையில் போய் விழுகிறது. தேவி, மடியும் தருவாயில் மன்னிப்பு கேட்கும் பைரவனுக்கு வரம் தருகிறாள். தனது குகைக்கோவிலை (பவன்) நாடிவரும் பக்தர்களின் பாதம்பட்டு அவன் முக்தி அடைவான் என்ற வரம் அருளுகிறாள். அதன்படியே இன்றும் பக்தர்கள் அந்த குகை வாயிலை மிதித்து உள்ளே செல்கின்றனர். திரும்பி செல்லும்போது பைரவ காடிக்கு போய், அவனை வழிபட்டு செல்கின்றனர். அன்று அப்படி வைஷ்ணோ தேவி ஒளிந்திருந்த குகை இன்று வைஷ்ணோதேவியின் ஆலயமாக சிறந்து விளங்குகிறது.

சிறப்பம்சம்:அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு அம்மன் அரூபமாக (சிலை வடிவில் இல்லாமல்) அருள்பாலிக்கிறாள்.

அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயில்


மூலவர்:தேவிகன்னியாகுமரி - பகவதி அம்மன்
உற்சவர்:தியாக சவுந்தரி, பால சவுந்தரி
தீர்த்தம்:பாபநாசதீர்த்தம்
பழமை:2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்:குமரிகண்டம்
ஊர்:கன்னியாகுமரி
மாவட்டம்:கன்னியாகுமரி
மாநிலம்:தமிழ்நாடு

திருவிழா:புரட்டாசி - நவராத்திரி திருவிழா - 10 நாள் வைகாசி விசாகம் - 10 நாள் - தேரோட்டம், தெப்போற்ஸவம் - 10 ஆயிரம் பக்தர்கள் கூடுவர். இத்திருவிழா நாட்களில் காலையிலும் இரவிலும் ஊர் தெரு வழியாகத் தேவியின் திருவுருவம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். ஒன்பதாவது நாள் தேர்த்திருவிழாவும் பத்தாவது நாள் தெப்பத்திருவிழாவுமாகும். தெப்பத் திருவிழாவன்று நன்றாக அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் தேவியின் திருவுருவம் நீரின் மேல் வலமாக மிதப்பில் கொண்டு செல்லப்படும்.

தல சிறப்பு:இது முக்கடல் சங்கமிக்கும் இந்திய தென்கோடியில் அமைந்த மிக சிறந்த சுற்றுலா தலம். கிழக்கே வங்கக்கடலும் தெற்கே இந்தியப் பெருங்கடலும் மேற்கே அரபிக்கடலும் கூடி அலைமோதும் அழகிய காட்சியுடையது. சில பவுர்ணமி நாளன்று, இக்கடற்கரையில் நின்று மாலைக் கதிரவன் மேலைக் கடலில் மறைவதையும் முழுமதி கீழைக் கடலில் கிளர்ந்தெழுவதையும் ஒரு சேரக் கண்டு களிக்கலாம். 1984ல் தேசப்பிதா காந்தியடிகளின் அஸ்தி இங்கு கடலில் கரைக்கப்பட்டது. கரைக்கும் முன்பு அஸ்தி வைக்கப்பட்ட கலசம் ஒரு பீடத்தின் மீது வைத்து அஞ்சலி செய்யப்பட்டது. அவ்விடத்தில் ஒரு நினைவுச்சின்னம் கட்ட காந்தியடிகளின் சீடர் கிருபளானி மேற்கொண்ட முயற்சியால் 1954ல் அடிக்கல் நாட்டி 1956 ல் அழகிய மண்டபமாக கட்டி முடிக்கப்பட்டது. காந்திஜி பிறந்த நாளான அக்டோபர் 2 -ந்தேதி சூரிய ஒளி பீடத்தின் மீது படும்படியாக அமைத்திருப்பது தனிசிறப்பு. சுற்றுலா பயணிகளை அதிகமாக கவர்ந்திழுக்கும் மண்டபமாக திகழ்கிறது. அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது குமரி சக்தி பீடம் ஆகும்.

திறக்கும் நேரம்:காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயில், கன்னியாகுமரி - 629702, கன்னியாகுமரி மாவட்டம்.போன்:+91- 4652 - 246223

பொது தகவல்:கடலில் காணப்படும் இன்னொரு பாறையில் அதி அற்புதமாக, பிரமாண்டமாக நிற்கும் திருவள்ளுவர் சிலை இருக்கிறது. மிகவும் கலைநுணுக்கத்துடன் கூடிய இச்சிலையை அருகில் சென்று பார்க்க படகு போக்குவரத்து வசதி உள்ளது.

கடல் அலைகளோடு போட்டிபோட்டு கம்பீரமாக காட்சி தரும் இந்த திருவள்ளுவர் சிலை காண்போர் கண்களை வியக்க வைக்கும். சுசீந்திரம் கன்னியாகுமரியின் வடக்கே 10 கி.மீ,. தொலைவில் உள்ளது.

பிரார்த்தனை:கன்னிகா பூஜை, சுயம்வர பூஜை ஆகியவை செய்தால் திருமணம் விரைவில் கைகூடும். காசிக்கு போகிறவர்களுக்கு கதி கிடைக்க வேண்டுமாயின் இக்கன்னியாகுமரிக்கு வரவேண்டுமென்று நம் புராணம் முறையிடுகிறது. இது சிறந்த தீர்த்தத் துறையையுடைய புண்ணிய கடற்கரையாகும் என்பதால் இங்கு நீராடினால் பாவம் தொலைந்து புண்ணியம் கிடைக்கும்.


நேர்த்திக்கடன்:அம்மனுக்கு விளக்கு போடுதல், அம்மனுக்கு புடவை சாத்துதல், அன்னதானம் செய்தல் ஆகியவை தவிர வழக்கமான அபிஷேக ஆராதனைகள் செய்தல் ஆகியவற்றை இத்தலத்துக்கு வரும் பக்தர்கள் முக்கிய நேர்த்தி கடன்களாக செய்கின்றனர். இங்குள்ள கடற்கரையில் பக்தர்கள் தங்கள் காலம் சென்ற மூதாதையர்களுக்கு காரியம் செய்ய எள்ளும் தண்ணீரும் இறைத்து பிதுர்கடன் செய்கிறார்கள்.

தலபெருமை:விவேகானந்தர் நினைவு மண்டபம் : குமரி முனையின் கிழக்கே கடலில் இரண்டு அழகிய பாறைகள் உள்ளன. அதில் பெரிய பாறை சுமார் 3 ஏக்கர் பரப்பும் கடல் மட்டத்திலிருந்து 55 அடி உயரமும் உடையது. அதில் ஓரிடத்தில் பாதம் போன்ற அடையாளம் காணப்படுகிறது. அதை தேவியின் திருப்பாதம் என்று அழைக்கிறார்கள்.

1892ல் சுவாமி விவேகானந்தர் தனது யாத்திரையின் போது குமரிமுனை வந்து அம்மனை வழிபட்டுவிட்டு இப்பாறையில் உட்கார்ந்து தியானம் செய்தார். அவர் நினைவாக இம்மண்டபம் கட்டப்பட்டுள்ளது.

பரசுராமர் குமரிதெய்வ உருவை இவ்விடத்தில் அமைத்து வழிபட்ட தலம்.

பராசக்தியுறையும் கோயில் இந்தியா முழுமையும் பரந்த புகழுடையது.

கடல் முனையில் இருந்தாலும் கோயிலுக்குள் உள்ள கிணற்றில் உப்புக் கரிக்காத நல்ல தண்ணீர் கிடைக்கிறது என்பது அதிசயம்.

முன்பிருந்த கோயில் கடல் கொண்டு விட்டது. இப்போதிருப்பது இரண்டாவதாக பிரதிஷ்டை செய்யப்பட்டது என்று கூறப்படுகிறது.

பிதுர்கடன் கழிக்க ஏற்ற தலம். வடஇந்தியர்கள் வருகை அதிகம் உள்ள கோயில்.

தல வரலாறு:முன்னொரு காலத்தில், தேவர்களை அசுரர் அடக்கியாண்டனர். தர்மம் அழிந்து அதர்மம் தலைதூக்கியது. தீமையும். பாவமும் பெருகின அறியாமையும் அநீதியும் ஆட்சி புரிந்தன. அசுரர் அரசனாகிய பாணாசுரன் மூவுலகுக்கும் முடிவு தேடினான். விண்ணவரை ஒட்டித் தூயோர்க்கும் முனிவருக்கும் தொல்லை கொடுத்து வந்தான். நிலமகளாகிய தாய், உலகை இருள் மயமாக்கும் தீய திறனை ஒழிப்பதற்குத் திருமாலை வேண்டி நின்றாள். திருமால் தீத்திறங்கொண்ட பாணாசுரனைப் பரசக்தியால் மட்டுமே கொல்ல முடியும் ஆகவே தேவர்கள் பராசக்தியை அணுக வேண்டும் என்றார். அதன் படி தேவர்கள் பராசக்தியை வேண்டி ஒர் பெரு வேள்வி செய்தனர். வேள்வி முடிவில் சக்திதேவி வெளிப்பட்டுப் பாணாசுரன் தலைமையில் நிகழும் தீய செயல்களை ஒழித்து, ஒழுங்கும் அறமும் உலகில் நிலைபெறச் செய்வதாக உறுதி மொழிந்தாள்.

அன்று முதல் அவள் கன்னியா குமரிக்கு வந்து கடுந்தவம் புரியலானாள். நாள் செல்ல செல்லக் கன்னிதேவி மணப்பருவம் அடைந்ததும், சுசீந்திரம் என்னும் இடத்திலுள்ள இறைவன் சிவபெருமான் அவள் மீது காதல் கொண்டார். அவருக்கு அவளைத் திருமணம் முடிப்பதற்கு வேண்டிய ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அசுரர் தலைவன் ஒரு கன்னியால் தான் கொல்லப்படுவான் என்று பிரம்மதேவனால் விதிக்கப்பட்டிருந்தமையால், இத் திருமணம் நிகழுமாயின், பாணாசுரன் அழிவுக்குரிய வாய்ப்பு கெட்டுவிடும் என்று நாரதர் உணர்ந்தார். ஆகவே அவர் இத்திருமணம் நிகழாதிருப்பதற்கு வேண்டிய வழிவகைகளைக் கருதலானார். அவர் பராசக்தியையும், சிவபெருமானையும் நேரில் சென்று கண்டு, திருமணம் குறிப்பிட்ட ஒர் நாளில், நள்ளிரவில், ஒரு நல்வேளையிலேயே நிகழ வேண்டும், அதற்கு ஆயத்தமாக இருங்கள் என கூறினார். அவ்வாறே சிவபெருமான் குறித்த இரவில், நல்லநேரம் தவறிவிடக் கூடாதெனக் கருதிக் கன்னியா குமரிக்குப் புறப்பட்டார். போகும் வழியில், வழுக்கம் பாறை என்ற இடத்தை அடைந்தபோது, நாரதர் ஒர் சேவல் உருக்கொண்டு உரக்கக் கூவினார். பொழுது புலர்ந்து விட்டதெனத் தவறுதலாகப் புரிந்து கொண்ட சிவபெருமான் சுசீந்திரத்திற்கு வருத்தத்துடன் திரும்பினார். தேவியும், அதன் பின் என்றும் கன்னியாகவே இருப்பதாக முடிவு செய்து, தவத்தை தொடர்ந்தாள்.

திருமணத்திற்கென்று செய்யப்பட்ட உணவு பொருள்யாவும் வகை வகையான மணலாக மாறின. அதன் சான்றாகவே, இன்றும், குமரிக்கடல் துறையில் அரிசி போன்ற வெண் சிறுமணலும், வேறுவகையான பலவண்ண மணலும் மிகுதியாகக் கிடப்பதைக் காணலாம். இவ்வாறு தேவி கடுந்தவமிருக்கும் போது, ஒரு நாள், பாணாசுரன் தேவியின் அழகைப் பற்றிக் கேள்விப்பட்டு, அவளை நேரில் காண வந்தான். தேவியைக் கண்டதும் அவளை மணந்து கொள்ள வேண்டினான். ஆனால், தேவி மறுத்து விடவே அசுரன் அவளைத் தன் உடல் வலிமையால் கவர்ந்து செல்ல எண்ணித் தன் உடைவாளை உருவினான். இத்தகைய தருணத்தை எதிர்நோக்கியிருந்த தேவியும் தன் போர்வாளை வீசினாள். நெடுநாட்கள் இருவரும் கடும் போர் புரிந்தனர். இறுதியில், தேவி தன் சக்கராயுதத்தால் பாணாசுரனைக் கொன்றொழித்தாள். தேவர் யாவரும் தேவிக்கு நன்றி செலுத்தினர். தேவியும் அவர்களை வாழ்த்தியருளியபின் மீண்டும் தன் தவத்தை மேற்கொள்ளத் தொடங்கினாள்.

சிறப்பம்சம்:அதிசயத்தின் அடிப்படையில்: சில பவுர்ணமி நாளன்று, இக்கடற்கரையில் நின்று மாலைக் கதிரவன் மேலைக் கடலில் மறைவதையும் முழுமதி கீழைக் கடலில் கிளர்ந்தெழுவதையும் ஒரு சேரக் கண்டு களிக்கலாம்.
விஞ்ஞானம் அடிப்படையில்: காந்திஜி பிறந்த நாளான அக்டோபர் 2-ந்தேதி சூரிய ஒளி பீடத்தின் மீது படும்படியாக அமைத்திருப்பது தனிசிறப்பு. சுற்றுலா பயணிகளை அதிகமாக கவர்ந்திழுக்கும் மண்டபமாக திகழ்கிறது.