திங்கள், 7 அக்டோபர், 2013

பெயரின் முன்னால் ஸ்ரீ என குறிப்பிடுவது ஏன்?
 
ஒரு கடிதம் எழுதினால் அனுப்புபவரின் பெயரின் முன்னால் ஸ்ரீ எனக் குறிப்பிடுகிறோம். இதன் ரகசியம் தெரியுமா? செல்வங்களுக்கெல்லாம் அதிபதி மகாலட்சுமி. ஸ்ரீ என்றால் லட்சுமி. அந்த லட்சுமி குடியிருக்கும் மார்பை பெற்றதனால் தான் பெருமாளுக்கு ஸ்ரீநிவாசன் என்று பெயர். தமிழில் ஸ்ரீ யை திரு எனக் குறிப்பிடுவர். திரு என்றாலும் திருமகளாகிய லட்சுமியையே குறிக்கும். மாலவனாகிய பெருமாளின் மார்பில் லட்சுமி <உறைவதால் தான் அவரை திருமால் என்று குறிப்பிடுகிறோம். எனவே நாம் யாருக்கு கடிதம் எழுதுகிறோமோ அவரது வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக வேண்டும் என்ற பொருளிலேயே நாம் ஸ்ரீ என குறிப்பிடுகிறோம். பூர்ணகும்பம், மஞ்சள், குங்குமம், திருமண், ஸ்ரீ சூர்ணம், கோலம், சந்தனம், வாழை, மாவிலை, தோரணம், வெற்றிலை, திருவிளக்கு, கண்ணாடி, வில்வம், நெல்லி, துளசி, கோமியம், சங்கு, தாமரை ஆகியவற்றிலும் பசு, யானை முதலிய பிராணிகளிடமும், பொறுமை மிக்கவர்கள், சுமங்கலிகள், தேவர்கள், ஞானிகள், பசுக்களை பராமரிப்போர், ஸ்திரபக்தி கொண்டவர்கள் ஆகியோரிடமும் லட்சுமி நிரந்தர வாசம் செய்கிறாள்.
மாணவர்களே... வெற்றிக்கான உங்கள் நட்சத்திர சிறப்பு பலன்கள்!

மாணவர்கள் பத்தாம் வகுப்பு படிக்கும் வரை எதைப்பற்றியும் கவலைப்படமாட்டார்கள். பத்தாம் வகுப்பு முடித்தவர்களோ, பிளஸ் டூவில் எந்த குரூப் எடுத்து படித்தால் நல்லது என்பதைப்பற்றியும், பிளஸ் டூ முடித்தவர்களோ, எந்த காலேஜில்  என்ன கோர்ஸ் சேர்வது என்பதை பற்றியும், காலேஜ் முடித்தவர்கள் மாஸ்டர் டிகிரி பண்ணுவது பற்றியும் ஒரே குழப்பத்தில் இருப்பார்கள். இப்படிப்பட்ட குழப்பம் எல்லாம் நீங்கி இறைவன் அருளாலும் கோள்களின் துணையுடனும் மாணவர்கள் தாங்கள் வேண்டியது கிடைக்க பொதுவாக மதுரை மீனாட்சியை வழிபடுவது சிறப்பு. ஏனெனில் மதுரை மீனாட்சி நவக்கிரக நாயகியாகவும், ஞானத்தை தரக்கூடிய சுகப்பிரம்ம மகரிஷியை கிளி வடிவில் வலது கையில் ஏந்திய நிலையிலும் அருள்பாலிப்பது தான் இந்த சிறப்புக்கு காரணம்.  இருந்தாலும் ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு நட்சத்திரம் இருக்கும். அந்தந்த நட்சத்திரத்தை சேர்ந்த மாணவர்களுக்குரிய பொதுவான குணமும், அந்த நட்சத்திரத்தை சேர்ந்த மாணவர்கள் எப்படி வழிபாடு செய்தால் விரும்பியது கிடைக்கும் என்பது பற்றிய குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இவை எல்லாவற்றையும் விட  தன்னம்பிக்கை, விடாமுயற்சி, இறைபக்தி இந்த மூன்றும் இருந்தால் மட்டுமே ஒரு மாணவர் மாபெரும் வெற்றியை அடைய முடியும் என்பது நிதர்சனமான உண்மை.

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்களாகிய நீங்கள் தன்னம்பிக்கையும் தைரியமும் மிக்கவர்கள்.

கேது திசையில் பிறந்த உங்களின் மாணவப் பருவம், சுக்ர திசை வரை நீடிக்கும். இயல்பாகவே எதையும் எளிதாக  புரிந்துகொள்ளும் ஆற்றல் உங்களுக்கு உண்டு. அதேசமயம் சோம்பல் தனத்தால் எதையும் தள்ளிப்போடாமல் உடனுக்குடன் செய்தால் பெரும் சாதனைகள் புரியலாம்.  தனிமை விரும்பியான நீங்கள், யாரிடமாவது நட்பு கொள்ளும் முன் யோசித்து மிகவும் கவனத்துடன் பழகுவது நலம். வெளிநாட்டுக் கல்வி, கல்விக்கடன் தொடர்பாக நீங்கள் எடுக்கும் முயற்சிக்கு முன்பாக, அருகிலுள்ள விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி வணங்கிவிட்டு தொடங்கினால் சிறப்பான பலன் கிடைக்கும்.  மனம் ஒருநிலைப்பட்டு செய்யும் செயல்களில் தான் வெற்றி நிச்சயம். எனவே சங்கீதம், ஓவியம், விளையாட்டு என ஏதேனும் ஒரு கலையை பழகுவதோடு தினமும் உடலுக்கும் மனதுக்கும் பயிற்சி கொடுத்தால் உங்கள் மனம் ஒருநிலைப்படும். பிறர் பாராட்டை விரும்பும் நீங்கள், அடுத்தவரின் தவறை நாசூக்காக சுட்டிக்காட்ட வேண்டும்.

ஒவ்வொரு திங்கட்கிழமையும் காலை 6.15 முதல் 6.45க்குள் 5 அகல் தீபங்களை ஏற்றி இஷ்ட தெய்வத்தை வழிபடுங்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் அருகில் உள்ள கோயில்களில் உள்ள நவகிரகசன்னதிக்கு சென்று சூரியனை வழிபடுவதும் நல்லது. அடிக்கடி  பிள்ளையார்பட்டி சென்று வருவது சிறப்பான நற்பலன் தரும். மாணவர்கள் அந்தந்த ஆண்டு முடியும் போது திருவாரூர் அருகிலுள்ள திருக்கொள்ளிக்காடு சென்று அங்குள்ள அக்னீஸ்வரøயும் பொங்கு சனியையும் வழிபட்டால் தடங்கல்கள் நீங்கும்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்களாகிய நீங்கள் முயன்றால் எதையும் சாதிக்கலாம் என்ற நம்பிக்கை உள்ளவர்கள்.

சுக்ரதிசையில் தொடங்கிய உங்களின் மாணவப்பருவம் சூரியதிசை வரையிலும், சிலருக்கு சந்திர திசை வரையிலும் இருக்கலாம். எந்த ஒரு செயலையும் மனக்குழப்பமின்றி முழுமையான ஈடுபாட்டுடன் திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும்.
உயர்கல்விக்காக வெளியூர், வெளிநாடு செல்ல வேண்டிய சூழ்நிலை உங்களுக்கு ஏற்படும். கல்விக்கடனுக்கான முயற்சிகள், வெளிநாட்டுக்கல்விக்கான முயற்சிகளில் கவனமாக ஈடுபட வேண்டும்.
யோகா, உடற்பயிற்சிகளை கற்றால் மனதை ஒருநிலைப்படுத்தலாம்.  நல்ல நண்பர்களை அடையாளம் கண்டு அவர்களுடன் பழக வேண்டும். சட்டென உணர்ச்சி வசப்படும் சுபாவம் உள்ள நீங்கள் அதைப் போக்க தினமும் சில நிமிடமாவது தியானம் செய்வது நல்லது. வாகனப்பயணத்தில் வேகம் தவிர்ப்பதும் அவசியம். அஜீரணபாதிப்பு, எலும்புத்தேய்மானம், சளித்தொந்தரவுகளில் அலட்சியம் கூடாது.

ஒவ்வொரு வெள்ளியும் காலை 6.15 முதல் 6.45 வரை இஷ்டதெய்வத்திற்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதற்கு முன் அருகிலுள்ள பெருமாள் கோயிலில் அருள்பாலிக்கும் பள்ளி கொண்ட பெருமாளை தரிசனம் செய்து விட்டு ஆரம்பிக்க வேண்டும். நேரம் கிடைக்கும் போது ஸ்ரீரங்கம் சென்று வருவது சிறந்த பலனைத் தரும். மாணவப் பருவம் முடியும் போது, திருநள்ளாறு சென்று சனிபகவானையும், தர்ப்பாரண்யேஸ்வரரையும் வழிபட்டால் பணிகள் அனைத்தும் செழிப்பாக அமையும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்களாகிய நீங்கள் எதையும் திட்டமிட்டு திறமையாக செயல்படக்கூடியவர்கள்.

சூரியதிசையில் ஆரம்பித்த உங்களின் மாணவப்பருவம், செவ்வாய் திசை அல்லது ராகு திசை வரையிலும் இருக்கும். எதையும் யோசித்து, திட்டமிட்டு செயல்படக்கூடிய நீங்கள் பிடிவாதத்தையும், வீண் கோபத்தையும் தவிர்க்க வேண்டும்.பெற்றோர் மற்றும் பெரியோர்களின் ஆலோசனைகளை கேட்டு நடக்க வேண்டும். யாரிடமாவது நட்பு கொள்ளும் முன் யோசித்து மிகவும் கவனத்துடன் பழகுவது நலம்.

அயல்நாடு சென்று படிக்கும் வாய்ப்பு உங்களுக்கு எளிதாகக் கைகூடும். வங்கிக்கடன்கள், உயர்கல்வி முயற்சிகளை பெற்றோர், பெரியோர் ஆலோசனைப்படி, செய்யுங்கள். சட்டென உணர்ச்சி வசப்படுவதும், வீண்பிடிவாதமும் உங்கள் உடன்பிறந்தவை என்றாலும், விட்டுக் கொடுத்துப்போவது நல்லது. ஏதாவது ஒரு செல்லப் பிராணியை வளர்ப்பதால் உங்கள் மனம் தானாகவே அமைதியாகும். காது, மூக்கு, தொண்டை, ஒற்றைத் தலைவலி பாதிப்புகளை உடனுக்குடன் கவனித்து சிகிச்சை மேற்கொள்ளுங்கள்.

ஒவ்வொரு புதனும் காலை 6.15 முதல் 6.45க்குள் இஷ்டதெய்வத்தின் முன் 5 அகல் தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள். எந்த ஒரு புதிய முயற்சியையும் தொடங்கும் முன் ராகவேந்திரரை தரிசனம் செய்து தொடங்குங்கள்.  அடிக்கடி புதுச்சேரி அருகிலுள்ள பஞ்சவடி சென்று பஞ்சமுக ஆஞ்சநேயரை வழிபடுவது சிறப்பான பலன் தரும். மாணவப் பருவம் முடிவடைந்ததும், குச்சனூர் சென்று சனிபகவானை தரிசித்தால் எதிர்காலம் சிறப்பாக அமையும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்களாகிய நீங்கள் அமைதியான செயல்களால் ஆனந்தம் அடைவீர்கள்.

சந்திர திசையில் பிறந்த உங்களின் மாணவப் பருவம், ராகு திசை வரை தொடரும். எதிலும் பரபரப்பில்லாமல், பதட்டப்படாமல் நிதானமாக செயல்படக்கூடிய ஆற்றல் உடையவர்கள்.வீண் புகழ்ச்சிக்கு மயங்காமல் தன்னம்பிக்கையுடன் எதையும் தெளிவாக திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி நிச்சயம். நண்பர்களிடம் உங்கள் சொந்த ரகசியங்களை பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது.

வெளிநாட்டுக் கல்வி வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்போது மனக்குழப்பமின்றி இறைவனை வழிபட்டு விட்டு பின்னர் அதில் முயற்சி எடுக்க வேண்டும். ஆடம்பரம், கேளிக்கையில் உங்களுக்கு நாட்டம் இருந்தாலும் அதை தவிர்ப்பது நல்லது. நரம்பு உபாதைகள், சுவாசக் கோளாறுகளில் அலட்சியம் செய்யக்கூடாது.

ஒவ்வொரு திங்களும் காலை 6.15 முதல் 6.45க்குள் இஷ்ட தெய்வத்தின் முன் 5 அகல்தீபம் ஏற்றி வழிபடுங்கள். அருகில் உள்ள நவகிரக சன்னதிக்கு சென்று சந்திரனை வழிபடுங்கள். புதிய முயற்சிகளின் போது, ராகவேந்திரரை வழிபாடு செய்யுங்கள். அடிக்கடி திருவண்ணாமலை சென்று அருணாச்சலேஸ்வரரை தரிசியுங்கள். பள்ளிப்பருவம் முடிந்ததும், திருப்பதி சென்று வெங்கடாஜலபதியை தரிசித்து விட்டு வந்தால் மனம் போல் வாழ்வு அமையும்.

மிருகசீரிஷ நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்களாகிய நீங்கள் விடாமுயற்சியும் துணிவும் மிக்கவர்கள்.

செவ்வாய் திசையில் பிறந்த உங்களின் மாணவப் பருவம், ராகுதிசை வரை இருக்கும். எந்த செயலையும் துணிவுடன் செய்யக்கூடிய நீங்கள், பணிவுடன் இருந்தால் வெற்றி நிச்சயம். எதையும் நிதானமாக யோசித்து தீர்மானியுங்கள். அமைதியாக பேசுங்கள். தியானம், யோக பழகினால், மனதில் ஏற்படும் வீண் குழப்பங்கள் மறையும். உங்களது சிந்திக்கும் திறன் அதிகரிக்க உடலிலிருந்து நிறைய வியர்வை வெளியேறும் வகையில் உடற்பயிற்சி செய்யுங்கள். நேரடி முயற்சிகளால் வெளிநாட்டுக் கல்வி வாய்ப்பு கைகூடும்.

பழக்கத்திற்காக எதையும் செய்யாமல், பெற்றோர், ஆசிரியர் ஆலோசனைப்படி  செய்யுங்கள். வெளிநாட்டில் கல்வி பயில விடா முயற்சி செய்தால் சிறந்த பலன் கிடைக்கும். வங்கிக்கடன் பெற நேர்வழியே நல்லது. விரைவில் தூங்கி  அதிகாலையில் எழுந்து படிப்பது நல்லது. தேவையற்ற நட்பு வேண்டவே வேண்டாம். அலர்ஜி மற்றும் காயம் ஏற்பட்டால் உடனடி சிகிச்சை அவசியம்.

ஒவ்வொரு வெள்ளியும் காலை 6.15 முதல் 6.45க்குள் இஷ்ட தெய்வத்தற்கு விளக்கு ஏற்றி வழிபாடு செய்யுங்கள். புதிதாக எந்த செயல் தொடங்கினாலும் நவக்கிரகத்தில் உள்ள ராகுவை வழிபட்டு தொடங்குங்கள். அடிக்கடி நாகபட்டினம் மாவட்டத்தில் உள்ள  வைத்தீஸ்வரன் கோயில் சென்று வழிபாடு நடத்துங்கள். பள்ளி வாழ்க்கை முடிந்ததும், திருச்செந்தூர் சென்று உரிய முறைப்படி முருகனை வழிபாடு செய்தால் தகுந்த வேலை கிடைத்து வாழ்வு நலமாகும்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்களாகிய நீங்கள், எளிதில்  எதையும் புரிந்துகொள்ளும் திறமை உடையவர்கள்.

ராகு திசையில் பிறந்த உங்களின் பள்ளிப்பருவம், குரு திசை வரை தொடரும். படித்ததை எளிதாக நினைவில் வைத்துக் கொள்வதும், அதை சரியான நேரத்தில் உபயோகப்படுத்துவதும் உங்களது தனி சிறப்பு. இந்த திறமையால் பிறருக்கு பாதிப்பு வராமல் நடந்தால் மதிப்பு உயரும். வீண்பிடிவாதம், அநாவசிய கோபத்தை தவிர்த்தால் வெற்றி எப்போதும் உங்கள் பக்கத்தில் இருக்கும். கோபப்படாமல், விட்டுக்கொடுக்கும் தன்மையை வளர்த்தால் சிறந்த நன்மை கிடைக்கும். உங்களது விருப்பம் போல் வெளிநாட்டில் படிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

நண்பர்களிடத்தில் உங்களுக்கு நல்லபெயர் இருந்தாலும், போலியான நட்பை தவிர்ப்பது நல்லது. வயிறு சம்பந்தப்பட்ட நோய், தொற்று நோய் ஆகியவற்றால் அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்படலாம். இரவை தவிர்த்து அதிகாலையில் படிப்பது நல்லது.

ஒவ்வொரு செவ்வாயும் காலை 6.15 முதல் 6.45க்குள் இஷ்ட தெய்வத்திற்கு 5 அகல் தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள். அத்துடன் செவ்வாய் மாலை ராகு காலத்தில் நவக்கிரகத்தில் உள்ள ராகுவை வழிபடுங்கள். ஏதேனும் புதிதாக செய்
யும் முன் துர்க்கையை வழிபாடு செய்யுங்கள். அடிக்கடி தஞ்சாவூர் கதிராமங்கலம் வனதுர்க்கையை வழிபாடு செய்யுங்கள். பள்ளி வாழ்க்கை முடிந்ததும், மாணவப் பருவம் நிறைவடைந்ததும், திருவாரூர் அருகிலுள்ள திருக்கொள்ளிக்காடு சென்று அங்குள்ள அக்னீஸ்வரøயும் பொங்கு சனியையும் வழிபட்டால் வாழ்வு நலம் பெறும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்களாகிய நீங்கள் தன்னம்பிக்கையும் தளராத முயற்சிகளும் உள்ளவர்கள்.

குருதிசையில் பிறந்த உங்களின் மாணவப் பருவம், சனிதிசை வரை தொடரும். எதையும் உடனே புரிந்து கொள்ளும் ஆற்றல் உடைய நீங்கள், பலரால் பாராட்டப்பட்டாலும் அதனால் கர்வம் அடையாதவர்கள்.  எதையும் உடனே செய்யாமல் மிகவும் தாமதமாக செய்வதை தவிர்ப்பது நல்லது. எந்த செயலையும் சிறப்பாக செய்யும் நீங்கள், எதையும் திட்டமிட்டு சரியாக செய்தால் உடனடி பலன் கிடைக்கும். நண்பர்களிடத்தில் மிகவும் கவனமாக பழகவும்.

சிந்தித்து செயல்படக்கூடிய நீங்கள் குறுகிய வட்டத்திற்குள் இருக்க கூடாது. இது உங்கள் வெற்றிக்குத் தடையாக இருக்கும். சிறிது காலத்திற்கு புதிதாகப் பல விஷயங்களைத் தெரிந்து கொள்வதையும், கிணற்றுத் தவளையாக இருப்பதையும் தவிர்க்கவும். வெளிநாட்டில் பயிலும் வாய்ப்பு வந்தால் ஏற்பது நல்லது. உடலில் ஏற்படும் வியாதிகளுக்கு உடனடி சிகிச்சை எடுத்து கொள்ளவும். தினமும் குறிப்பிட்ட நேரத்தில் படிப்பதை வழக்கமாக்கவும்.

ஒவ்வொரு வியாழனும் காலை 6.15 முதல் 6.45க்குள் இஷ்ட தெய்வத்தின் முன் 5 அகல் தீபம் ஏற்றி வழிபட்டால் காரியத் தடங்கல்கள் நீங்கும். ஏதேனும் புதிய செயல்களில் ஈடுபடும் முன் அருகிலுள்ள மகானின் பிருந்தாவனம் செல்லவும். அடிக்கடி மந்திராலயம் சென்று ராகவேந்திரரை தரிசிக்கவும். பள்ளி, கல்லூரி  வாழ்க்கை முடிந்ததும், மதுரை மீனாட்சி, சுந்தரேஸ்வரருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால், வாழ்க்கை வளமையாகும்.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்களாகிய நீங்கள் எதையும் திட்டமிட்டு செய்து வெற்றி பெறக் கூடியவர்கள்.

சனி திசையில் பிறந்த உங்களின் மாணவப் பருவம், புதன் திசை வரை தொடரும். செய்யும் செயல்களை திட்டமிட்டு செய்வதும், சரியான நேரத்தில் செய்வதும் உங்களின் பழக்கம். இருந்தாலும், நீங்கள் எடுத்த முடிவே சரியானது என்று கூறும் குணத்தை விடவும்.  எந்த செயலையும் பெற்றவர்கள், பெரியவர்கள் ஆலோசனையுடன்முழுமையாகவும் சரியாகவும் செய்வது நல்லது.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளை பெற்றோர் பிறருடன் ஒப்பிடாமலும், அன்புடன் வளர்த்தாலும், இவர்கள் மாணவப் பருவத்தில்  சாதனைகள் பல புரிவார்கள். எங்கும் எதிலும் நாமே முதலாவதாக இருக்க வேண்டும் என்ற நினைப்பு உங்களுக்கு இருக்கும். நண்டர்கள் வட்டாரத்தில் கூட உங்களுக்கு தான் முன்னுரிமை தர வேண்டும் என நினைப்பீர்கள். அனைவரிடமும் சமமாகவும், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும் கொண்டால், நண்பர்கள் மத்தியில் உங்களுக்க சிறந்த வரவேற்பு இருக்கும். எதற்கும் சலிக்காமல் முயற்சி மேற்கொண்டால் வெளிநாடுகளில் சென்று படிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.  எலும்பு, பல் சம்பந்தப்பட்ட நோய், காது, மூக்கு, தொண்டையில் சிரமம் ஏற்பட்டால் உடனடி சிகிச்சை எடுக்கவும்.

ஒவ்வொரு செவ்வாயும், காலை 6.15 முதல் 6.45க்குள் இஷ்ட தெய்வத்தின் முன் 5 அகல் தீபம் ஏற்றி வழிபாடு செய்வது சிறந்த பலன் தரும். எந்தவொரு புதிய செயல் தொடங்குமுன் அருகிலுள்ள துர்க்கையை வழிபாடு செய்து விட்டு தொடங்கவும். அடிக்கடி அறுபடை வீடு முருகன் கோயில்களில் ஏதேனும் ஒன்றை தரிசிக்கவும்.  செயல் கெள். புதிய முயற்சிகளைத் தொடங்கும் முன், பக்கத்திலுள்ள துர்க்கை கோயிலுக்குப் போய் வாருங்கள். வருடத்திற்கு ஒருமுறை அறுபடை வீடுகளுள் ஏதாவது ஒரு தலத்திற்குச் சென்று வணங்குங்கள். பள்ளி, கல்லூரி  வாழ்க்கை முடிந்ததும், பட்டீஸ்வரம் துர்க்கைக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால், வாழ்க்கை வளமையாகும்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்களாகிய நீங்கள், எதையும் நிதானமாக செய்து பெருமை பெறுவீர்கள்.

புதன் திசையில் பிறந்த உங்களின் மாணவப் பருவம், கேதுதிசை வரை தொடரும். சில மாணவர்களுக்கு சுக்ர திசையிலும் இது தொடரலாம். பொதுவாகவே உங்களுக்கு அறிவாற்றல்  அதிகம் இருக்கும் உங்களுக்கு. ஆனால்  தேவையில்லாத புகழுக்கு நீங்கள் மயங்குவதால், அகந்தை உண்டாகி உங்களது வெற்றிக்குத் தடையாக மாறும். எப்போதும் அகந்தையும் தற்பெருமையும் நீக்கினால் எளிதில் வெற்றி கிடைக்கும். வெளிநாடுகளில் சென்று படிக்க விருப்பம் உள்ள நீங்கள் சரியான நபர்களிடம் ஆலோசனை கேட்டு அதன் படி நடந்தால் வெற்றி நிச்சயம்.
கல்வி நிறுவனங்களுடன் வெளியூர் சுற்றுலா செல்லும் போது நீர்நிலைகளில் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. விஷ பூச்சிகளால் ஆபத்து ஏற்படும் என்பதால் எச்சரிக்கையுடன் இருங்கள். சரியான நேரங்களில் படிப்பதும், படித்ததை அடிக்கடி எழுதிப்பார்ப்பதன் மூலமும் அதிக மதிப்பெண் பெறலாம். கழுத்து எலும்புத் தேய்மானம், முதுகுத்தண்டுவடம் வலி,  கீழே விழுந்து அடிபடுதல் போன்ற பிரச்னை ஏற்பட்டால் உடனடி சிகிச்சை பெறவும்.

ஒவ்வொரு வியாழனும் காலை 6.15 முதல் 6.45க்குள் இஷ்ட தெய்வத்தின் முன் 5 அகல் தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பு. எந்த ஒரு புதிய செயலை தொடங்கும் முன் தட்சிணாமூர்த்தியை வழிபடுங்கள். அடிக்கடி ஆலங்குடி தட்சிணாமூர்த்தியையும், ஆபத்சகாயேஸ்வரரையும் வழிபாடு செய்யுங்கள். குருபகவானையும் கும்பிட்டு வாருங்கள். பள்ளி, கல்லூரி  வாழ்க்கை முடிந்ததும், திருப்பதி பெருமாள், பத்மாவதி தாயாரை வழிபட்டால், உங்கள் வாழ்க்கை ஒளிமயமாகும்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்களாகிய நீங்கள் எதையும் சட்டெனப் புரிந்துகொள்ளும் ஆற்றல் மிக்கவர்கள்.

கேது திசையில் பிறந்த உங்களின் மாணவப் பருவம், சுக்ர திசை வரை நீடிக்கும். ஒரு சில மாணவர்களுக்கு சூரிய திசையிலும் தொடரலாம். உங்களுக்கு எதையும் சீராகவும் சிறப்பாகவும்  செய்திடும் திறமை உண்டு. சோம்பல் படாமல் எடுத்த காரியத்தை முடித்தால் மாபெரும் சாதனைகள் புரியலாம். மிக எளிதாக புகழுக்கு மயங்கிவிடுவீர்கள். நட்புக்காக எதையும் செய்ய தயங்க மாட்டீர்கள். நண்பர்களிடம் கவனம் தேவை. வெளிநாடு சென்று படிப்பதற்கான அனைத்து முயற்சிகளும் எளிதில் நிறைவேறும். எந்த செயலை தொடங்கும் முன் ஆஞ்சநேயரை வழிபட்டு தொடங்குவது சிறப்பு.

ஞாபக சக்தி அதிகரிக்க சிறுவயதிலிருந்து தியானம், யோகா போன்ற  பயிற்சிகளில் ஈடுபடுங்கள். தினமும் இறைவனை வழிபாடு செய்வது வெற்றிக்கு வழி வகுக்கும். வயிறு, ஜீரண உபாதைகளும் தொண்டை பிரச்னைகளும் உங்களுக்கு பாதிப்பை உண்டாக்கும். இதற்கு உடனடி சிகிச்சை அவசியம்.

ஒவ்வொரு வெள்ளியும் காலை 6.15 முதல் 6.45க்குள் இஷ்ட தெய்வத்தின் முன் 5 அகல் தீபம் ஏற்றி வழிபாடு செய்வது நல்லது. மகான் ராகவேந்திரரை வழிபாடு செய்யுங்கள்.அடிக்கடி பிள்ளையார்பட்டி பிள்ளையாரை வழிபாடு செய்து வாருங்கள். சென்று வருவது சிறப்பான நற்பலன் தரும்.
பள்ளி, கல்லூரி  வாழ்க்கை முடிந்ததும், திருப்பதி பெருமாள், குறிப்பாக பத்மாவதி தாயாரை வழிபட்டால், உங்கள் வாழ்க்கை ஒளிமயமாகும். அத்துடன் எப்போதும் மகாலட்சுமியை வழிபாடு செய்து வந்தால் வாழ்வு சிறக்கும்.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்களாகிய நீங்கள் எதிலும் ஆர்வமும், அயராத உழைப்பும் உள்ளவர்கள்.

உங்களின் மாணவப்பருவம், சுக்ரதிசையில் தொடங்கி, சூரியதிசை வரை இருக்கும். சில மாணவர்களுக்க இது சந்திர திசை வரை தொடரலாம். யார் என்ன கூறினாலும் அதை முழுமையாக கேட்டு செய்யாமல் ஆராய்ந்து நிதானமாக செயல்பட்டால் மனக்குழப்பம் நீங்கி வெற்றி கிடைக்கும். சரியான நண்பர்களை தேர்ந்தெடுத்து அவர்களிடம் மிகவும் கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.

மேல்படிப்புக்காக வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைத்தால் உடனடியாக ஏற்கவும். இதற்கான கடனுதவியை நேரடியாக கையாளவும். நல்ல குணம் உடைய நீங்கள் அடிக்கடி உணர்ச்சிவசப்படாமலும், யோசித்து பேசுவதன் மூலமும்  சிறந்த வாய்ப்புகளை பெறலாம். இதற்காக தினமும் யோகா, தியானம் பயிற்சி செய்யுங்கள். அதிக வேகமாக வாகனம் ஓட்டுவதை தவிர்க்கவும்.  எலும்புதேய்மானம், முதுகுவலி, மூட்டுவலி ஏற்பட்டால் உடனடி சிகிச்சை பெறவும்.

ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 6.15 முதல் 6.45 வரை இஷ்டதெய்வத்திற்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள். எந்த ஒரு புதிய செயலை தொடங்கும் முன் உங்கள் அருகிலுள்ள கோயிலில் அருள்பாலிக்கும் பள்ளி கொண்ட பெருமானை தரிசியுங்கள். அடிக்கடி ஸ்ரீரங்கம் பெருமாளை வழிபடுவது சிறப்பு. பள்ளி வாழ்க்கை முடிந்ததும், மாணவப் பருவம் நிறைவடைந்ததும், திருவாரூர் அருகிலுள்ள திருக்கொள்ளிக்காடு சென்று அங்குள்ள அக்னீஸ்வரரையும் பொங்கு சனியையும் வழிபட்டால் வாழ்வு நலம் பெறும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்களாகிய நீங்கள்,முயற்சிகளால் எதையும் சாதிப்பவர்கள்.

உங்களின் மாணவப்பருவம், சூரியதிசை முதல், செவ்வாய் திசை வரை இருக்கும். தேவையில்லாத கோபத்தையும், வீண் பிடிவாதத்தையும் தவிர்த்து, எதையும் நிதானமாக, திட்டமிட்டு செய்தால் பலப்பல சாதனைகள் புரியலாம். பெரியவர்கள் கூறுவதை கேட்டு நடக்கவும். போலியாகப்புழும் நண்பர்களிடம் மயங்காமல், கவனமாகப் பழகவும்.

மேல்படிப்புக்காக வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைத்தால் உடனடியாக ஏற்கவும். இதற்கான கடனுதவியை நேரடியாக கையாளவும். உணர்ச்சிவசப்படாமலும், யோசித்து பேசுவதன் மூலமும்  சிறந்த வாய்ப்புகளை பெறலாம். மன அமைதி பெற  ஏதாவது ஓர் இசைக் கருவியை வாசிக்கப் பழகுங்கள்.  ஒற்றைத் தலைவலி, நரம்பு, அலர்ஜி பாதிப்புகள் நீங்க உடனடி மருத்துவம் தேவை.

ஒவ்வொரு ஞாயிறும் காலை 6.15 முதல் 6.45க்குள் இஷ்ட தெய்வத்தின் முன் 5 அகல் தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள். எந்த ஒரு புதிய செயலை தொடங்கும் முன் நரசிம்மரை வழிபாடு செய்வது நல்லது. அடிக்கடி பரிக்கல் லட்சுமி நரசிம்மரை வழிபட்டால் சிறந்த பலனை அடையலாம். பள்ளி, கல்லூரி  வாழ்க்கை முடிந்ததும், ராமேஸ்வரம் ராமநாதரை வழிபட்டால் எதிர்காலம் சிறப்பாக அமையும்.

ஹஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்களாகிய நீங்கள் எதையும் திட்டமிட்டும் நேரம் தவறாமலும் செயல்பட்டு வெற்றி பெறக்கூடியவர்கள்.

சந்திர திசையில் பிறந்த உங்களின் மாணவப் பருவம். ராகு திசை வரை தொடரும். பல விஷயங்களில் எதையும் தீர்மானமான முடிவு எடுக்க முடியாமல் திணறும் நீங்கள், உணர்ச்சி வசப்படாமல்   நிதானமாகவும் யோசித்தும் செயல்பட்டால் வெற்றி நிச்சயம். மனத்தளர்ச்சி இல்லாமலும் நம்பிக்கையோடும் படிப்படியாக முயற்சிகளைத் தொடர்வது நல்லது.நண்பர்களிடம் ரகசியம் வேண்டாம்.

வெளி நாடு சென்று படிக்கும் வாய்ப்பு ஏற்பட்டால்  இறைவனை வழிபட்டும், பெற்றோர் ஆலோசனை கேட்டும் செயல்பட்டால், முன்னேற்றம் அடையலாம். கல்விக்கான கடன் தொகையைக் கையாளும்போது  மிகவும் கவனமாக கையாள வேண்டும். ஆடம்பரம், கேளிக்கைகளில் நாட்டம் உள்ள நீங்கள், படிக்கும் காலத்தில் நண்பர்களுடன் கேளிக்கை, ஆடம்பரப் பொழுதுபோக்குகளில் ஈடுபடாமல் இருந்தால் எதிர்காலம் சிறக்கும். கழிவுப்பாதை உபாதைகள், வயிற்றுக் கோளாறு ஏற்பட்டால் உடனடி மருத்துவம் அவசியம். வாகனங்களில் கவனமாக செல்லவும்.

ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 6.15 முதல் 6.45க்குள் இஷ்ட தெய்வத்தின் முன் 5 அகல்தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள். புதிதாக ஏதேனும் செயல் தொடங்கினால் பெருமாள் வழிபாடு செய்யுங்கள். அடிக்கடி திருப்பதி சென்று தரிசியுங்கள்.  பள்ளி, கல்லூரி  வாழ்க்கை முடிந்ததும், மதுரை மீனாட்சி, சுந்தரேஸ்வரருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால், வாழ்க்கை வளமையாகும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்த  மாணவர்களாகிய நீங்கள், மன உறுதியும், ஞாபகசக்தியும் உள்ளவர்கள்.

செவ்வாய் திசையில் பிறந்த உங்களின் மாணவப் பருவம், ராகுதிசை வரை இருக்கும். தலைக்கனம் இல்லாமல் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம். எதையும் யோசித்து நிதானமாக செயல்படவும். சட்டென்று பேசுவதை தவிர்க்கவும். மனக்குழப்பம் நீங்க தியானம் யோகா பழகுவது நல்லது. உடலிலிருந்து அதிக வியர்வை வெளியேறும் வகையில் சிறு வயது முதல் உடல்பயிற்சி செய்தால் சிந்திக்கும் திறன் அதிகரித்து, ஞாபக சக்தி வளரும்.

மேல்படிப்புக்காக வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைத்தால் உடனடியாக ஏற்கவும். இதற்கான கடனுதவியை நேரடியாக கையாளவும். இரவில் கண்விழித்து படிக்காமல், அதிகாலையில் எழுந்து படிப்பது நல்லது. தற்பெருமை பேசும் நண்பர்களை தவிர்க்கவும். அலர்ஜி,  காய்ச்சல் ஏற்பட்டால் உடனடி சிகிச்சை பெறவும்.
ஒவ்வொரு புதனும் காலை 6.15 முதல் 6.45க்குள் இஷ்ட தெய்வத்தின் முன் 5 அகல் தீபம் ஏற்றி வழிபாடுசெய்யுங்கள். எந்த ஒரு புதிய செயல் தொடங்கினாலும், சிவனை வழிபடுவது நல்லது. அடிக்கடி ஆந்திராவில் உள்ள ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனரை வழிபாடு செய்யுங்கள். பள்ளி, கல்லூரி  வாழ்க்கை முடிந்ததும், திருப்பதி பெருமாள், பத்மாவதி தாயாரை வழிபட்டால், உங்கள் வாழ்க்கை ஒளிமயமாகும்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்களாகிய நீங்கள் சட்டெனப் புரிந்துகொள்ளும் சமயோஜித புத்தி உள்ளவர்கள்.

ராகு திசையில் பிறந்த உங்களின் பள்ளிப்பருவம், குரு திசை வரை தொடரும். அதிக ஞாபக சக்தி உங்களுக்கு இருப்பதால், படிப்பதை விரைவில் ஞாபத்தில் வைத்து, அதை தேவைப்படும் நேரத்தில் உபயோகப்படுத்துவீர்கள். இந்த திறமையால் பிறர் மனம் புண்படும்படியாகாத படி நடந்து கொள்ளுங்கள். இதனால் உங்களை சுற்றியிருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். நீங்கள் எந்த செயல் செய்தாலும் உடனே வெற்றி நிச்சயம் என இருந்தாலும், எந்த செயலை செய்தாலும், நிதானமாகவும், கோபப்படாமலும் செய்தால் சிறப்பான நன்மை கிடைக்கும். வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்பு அவசியம் கிடைக்கும்.

நண்பர்களிடத்தில நல்லபெயர் உங்களுக்கு இருந்தாலும், தேவையில்லாத நட்பை விலக்குவது நல்லது. நண்பர்களுக்காக தேவையில்லாத வாக்குறுதிகளை கொடுக்க வேண்டாம். அதனால் சிக்கல் உண்டாகும். சுகாதாரமற்ற உணவுப்பொருள்களை சாப்பிடுவதால் தொற்று நோய் மற்றும் வயிற்று தொந்தரவுகள் ஏற்படும். இதற்கு உடனடி சிகிச்சை எடுக்கவும். இரவில் கண்விழிப்பதை தவிர்த்து அதிகாலையில் எழுந்து படிப்பது நல்லது.

ஒவ்வொரு திங்களும் காலை 6.15 முதல் 6.45க்குள் இஷ்ட தெய்வத்தின் முன் 5 அகல் தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள். எந்த ஒரு புதிய செயல்களை தொடங்கும் முன் அருகிலுள்ள துர்க்கை அம்மனை வழிபாடு செய்யுங்கள். அடிக்கடி விழுப்புரம் அருகிலுள்ள பூவரசன் குப்பம் லட்சுமி நரசிம்மரை வணங்குங்கள்.  புதிய முயற்சிகளுக்கு முன் பக்கத்து கோயிலில் துர்க்கையை தரிசியுங்கள். மூன்று வருடத்திற்கு ஒருமுறை பூவரசன் குப்பம் சென்று நரசிம்மரை வழிபடுங்கள். பள்ளி, கல்லூரி  வாழ்க்கை முடிந்ததும்,ராமேஸ்வரம் சென்று ராமநாதரை வழிபட்டால், உங்கள் வாழ்க்கை ஒளிமயமாகும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்த  மாணவர்களாகிய நீங்கள் அமைதியும் ஆர்வத்துடன் கற்கும் குணமும் உள்ளவர்கள்.

குருதிசையில் பிறந்த உங்களின் மாணவப் பருவம், சனிதிசை வரை தொடரும். யார் எதற்காக பாராட்டினாலும் அதனால் சிறிதும் கர்வம் உங்களுக்கு ஏற்படாது. உங்கள் மீது உங்களுக்கு உள்ள அளவு கடந்த நம்பிக்கையில் நீங்கள் செய்யக்கூடிய செயல்களை கடைசி நேரம் வரை தள்ளிப்போட்டு விட்டு, பின் அவசரமாக செய்வதை தவிர்க்கவும். சோம்பல் படாமல் ஒரு காரியத்தை திட்டமிட்டபடி முடித்தால் வெற்றிகள் உறுதியாகும்.

நண்பர்களிடத்தில் எந்த ரகசியமும் கூற வேண்டாம். அனைவரிடமும் நன்றாக பழகுங்கள். உங்களது குறுகிய வட்டத்தை விட்டு வெளியே வந்தால்தான் எதிலும் வெற்றி பெற முடியும். வீட்டிற்குள்ளேயே இருப்பதை விட்டு, நிறைய புதுப்புது விஷயங்களை கற்றுக்கொள்ளுங்கள். வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்பு கிடைத்தால் மறுக்காதீர்கள். அலர்ஜி, மூச்சுப்பிரச்சனை, பல்சம்பந்தப்பட்ட பாதிப்பு ஏற்பட்டால், உடனே சிகிச்சை எடுக்கவும். நேரம் மாறி மாறி படிக்காமல் குறிப்பிட்ட ஒரே நேரத்தில் படிப்பது நல்லது.

ஒவ்வொரு வியாழனும் காலை 6.15 முதல் 6.45க்குள் இஷ்ட தெய்வத்தின் முன் 5 அகல் தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள். ஏதேனும் ஒரு செயலை செய்ய தொடங்கும் முன் அருகிலுள்ள மகானின் பிருந்தாவனத்திற்கு சென்று வழிபாடு செய்யுங்கள். அடிக்கடி மந்திராலயம் சென்று ராகவேந்திரரை வழிபாடு செய்யுங்கள். பள்ளி, கல்லூரி  வாழ்க்கை முடிந்ததும்,திருச்செந்தூர் சென்று சுப்பிரமணியரை  வழிபட்டால், உங்கள் வாழ்க்கை ஒளிமயமாகும்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்களாகிய நீங்கள் கவனமாகவும் முழுமையாக முயற்சித்தும் வெற்றிகளைப் பெறக் கூடியவர்கள்.

சனி திசையில் பிறந்த உங்களின் மாணவப்பருவம் புதன்திசை வரை தொடரும். படிப்பது உட்பட எந்த செயல் செய்தாலும் அதை திட்டமிட்டும், குறிப்பிட்ட நேரத்தில் செய்து முடிப்பதும் உங்களுக்குரிய விசேஷ குணம். நான் செய்தது சரி என்ற வறட்டு பிடிவாத குணத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, உற்றார், உறவினர், பெற்றோர்களை மதித்து அவர்களின் ஆலோசனைப்படியும் செய்வது மிகவும் முக்கியம்.

பெற்றோர்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளை அன்பு காட்டியும், பிறருடன் ஒப்பிட்டு பேசாமலும் வளர்த்தால் இளமையிலேயே மாபெரும் சாதனைகள் பல புரிவார்கள். இவர்களுக்கென நண்பர்கள் வட்டாரம் அதிகம் இருக்காது. எதிலும் நம்பர் ஒன்னாக இருக்க வேண்டும் என நினைப்பவர்கள். வயதிலும் அறிவிலும், உங்களை விட கீழ்மட்டத்தில் உள்ளவர்களுக்கு கற்றுக்கொடுக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி கொண்டால், காரியங்களை எளிதில் வெல்லலாம். மன அமைதிக்கு ஏதேனும் ஒரு கலையை கற்பது சிறப்பு. பெற்றோரை தவிர பிறர் உதவியின்றி நேரடியாக கவனம் செலுத்தினால் வெளிநாட்டு கல்வி வாய்ப்பு உங்களுக்க கிடைக்கும். இ.என்.டி மருத்துவரை நாடி உடலை பரிசோதிக்கவும்.

ஒவ்வொரு வியாழனும் காலை 6.15 முதல் 6.45க்குள் இஷ்ட தெய்வத்தின் முன் 5 அகல் தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள்.எந்த ஒரு செயலைத் தொடங்கும்முன், அருகிலுள்ள சிவன் கோயிலை தரிசிப்பது நல்லது. <<லுக்குப் போய் வாருங்கள். அடிக்கடி திருவாரூர் அருகிலுள்ள திருக்கொள்ளிக்காடு சென்று அங்குள்ள அக்னீஸ்வரøயும் பொங்கு சனியையும்  வணங்குங்கள். பள்ளி, கல்லூரி  வாழ்க்கை முடிந்ததும்,நாமக்கல் ஆஞ்சநேயரை  வழிபட்டால், உங்கள் வாழ்க்கை ஒளிமயமாகும்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்களாகிய நீங்கள் முயற்சிகளால் தடைகளை முறியடித்து முன்னேற்றம் காணக் கூடியவர்கள்.

புதன் திசையில் பிறந்த உங்களின் மாணவப் பருவம், கேதுதிசை வரை தொடரும். சிலருக்கு சுக்ர திசையிலும் தொடரலாம்.  எதையும் கூர்ந்து கவனிப்பதும், உடனே புரிந்துகொள்வதும் உங்கள் குணம். ஆனால் வீண் புகழ்ச்சிக்கு மயங்குவதால், அறிவே சிலசமயங்களில் அகந்தையாக மாறி வெற்றிக்குத் தடையை உண்டாக்கி விடும். தற்பெருமையும் அகங்காரமும்  தவிர்ப்பது முக்கியம். அயல்நாட்டுக் கல்வி முயற்சிகளில் ஈடுபடும் போது, நம்பிக்கையான நபர்களிடமும், பெற்றோரிடமும்  ஆலோசனை கேட்டு அதன் படி நடக்கவும்.

வெளியூர் பயணங்களில் விருப்பமுள்ள நீங்கள், சுற்றுலா செல்லு<ம் இடங்களில் உயரமான இடங்களில் கவனத்துடன்  இருப்பது அவசியம். எப்போதும்  குறிப்பிட்ட நேரத்தில் படிப்பதும்,  ஒருமுறைக்கு இருமுறை எழுதிப்பார்ப்பதும் நலவழக்கமாக்கிக் கொள்வது நல்லது. முதுகு வலி, கழுத்து வலி,அடிபடுதல் போன்ற பிரச்சனை ஏற்பட்டால் உடன்சிகிச்சை அவசியம்.

ஒவ்வொரு புதனும் காலை 6.15 முதல் 6.45க்குள் இஷ்ட தெய்வத்தின் முன் 5 அகல் தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள். எந்த ஒரு புது செயலைத்தொடங்கும் முன் பெருமாளை வழிபடுங்கள். அடிக்கடி நவக்கிரகத்தில் புதன் தலமான திருவெண்காடு திருத்தலம் சென்று சுவேதாரண்யேஸ்வரரையும், புதனையும் வணங்குங்கள்.
பள்ளி, கல்லூரி  வாழ்க்கை முடிந்ததும்,ஸ்ரீரங்கம் பள்ளிகொண்ட பெருமானை   வழிபட்டால், உங்கள் வாழ்க்கை ஒளிமயமாகும்.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்களாகிய நீங்கள் இயல்பாகவே எதையும் சட்டெனப்புரிந்து கொள்ளும் ஆற்றல் மிக்கவர்கள்.

கேது திசையில் பிறந்த உங்களின் மாணவப்பருவம், சுக்ர திசை வரை நீடிக்கும். எதையும் புத்திசாலி தனத்துடன் செய்யும் நீங்கள், எதிலும் எங்கும் அவசரம், அலட்சியம் காட்டினால் அது உங்கள் வெற்றிக்கு தடையாக இருக்கும். பெரும் சாதனை புரிய முழு கவனம் தேவை. நண்பர்களிடம் மிகவும் கவனத்துடன் பழக வேண்டும். வெளிநாடு சென்று படிக்க கல்விக்கடன் தொடர்பான உங்களின் முயற்சிகள் நிச்சயம் ஈடேறும்.

எந்த ஒரு செயலைத்தொடங்கும் முன் பக்கத்துக் கோயிலில் உள்ள துர்க்கையை வழிபடுவது நல்லது. .உங்களை புகழும் போதும், திட்டும் போதும் அதற்காக உணர்ச்சி வசப்படாமல் அமைதியாக செயல்படுவது நல்லது. மனப்பயிற்சி பெற தினமும்  உடற்பயிற்சி செய்வது நல்லது.  ஒற்றைத்தலைவலி, நரம்பு உபாதை, ரத்தசோகை ஏற்பட்டால் உடனடி சிகிச்சை அவசியம்

ஒவ்வொரு செவ்வாயும் காலை 6.15 முதல் 6.45க்குள் இஷ்ட தெய்வத்தின் முன் 5 அகல் தீபங்களை ஏற்றி இஷ்ட தெய்வத்தை வழிபாடு செய்யுங்கள்.  எந்த ஒரு செயலை தொடங்கும் முன்  துர்க்கையை வழிபடுவது சிறப்பு. அடிக்கடி பட்டீஸ்வரம் சென்று துர்க்கையையும், தேனுபுரீஸ்வரரையும் வழிபடுவது சிறப்பு. தரிசித்து பள்ளி, கல்லூரி  வாழ்க்கை முடிந்ததும்,காளகஸ்தி காளத்திநாதரையும், ஞானப்ரசூனாம்பிகையையும்  வழிபட்டால், உங்கள் வாழ்க்கை ஒளிமயமாகும்.                                                         

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்த  மாணவர்களாகிய நீங்கள் விடா முயற்சியால் வெற்றியை அடைய முடியும் என்ற நம்பிக்கை உள்ளவர்கள்.

உங்களின் மாணவப்பருவம், சுக்ரதிசையில் தொடங்கி, சூரியதிசை வரை இருக்கும். ஆனாலும் சிலருக்கு சந்திர திசை வரையிலும் இருக்க வாய்ப்புண்டு.
நீங்கள் உணர்ச்சி வசப்பட்டு சட்டெனத் தீர்மானிப்பதைத் தவிர்த்து, எதிலும் முழுமையான ஈடுபாட்டுடன் திட்டமிட்டு செயல்பட்டால் பல  சாதனைகள் படைக்கலாம். நீங்கள் யாரிடமும் பகையில்லாமல் நட்பு பாராட்டுவீர்கள். ஆனால் அந்த நட்பு உங்களை ஏமாற்றும். எனவே  சரியான நட்பை தேர்ந்தெடுப்பது நல்லது.

வெளிநாடு சென்று உயர்கல்வி பயில வாய்ப்பு வரும்போது, பெற்றோர் பெரியோர் ஆலோசனையுடன் செயல்படுவது நல்லது. கல்விக் கடனுக்கான முயற்சிகளை நம்பிக்கையானவர்களிடம் கேட்டு  செய்வது பயன் தரும். புத்திசாலியான நீங்கள்,  உ<ணர்ச்சி வசப்படுவதாலும், அவசரப்பட்டு செயல்படுவதாலும் மிக அருமையான வாய்ப்புகளை இழக்க வாய்ப்புண்டு. இதனை நீக்க  தினமும் சில நிமிடமாவது தியானம் செய்யுங்கள். வயிற்றில் பூச்சிகளால் தொல்லை, கழிவுப்பாதை உபாதை, தொற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டால் உடனடி சிகிச்சை எடுக்கவும்.

ஒவ்வொரு புதனும் காலை 6.15 முதல் 6.45 மணிக்குள் இஷ்ட தெய்வத்திற்கு முன் தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள். எந்த ஒரு புதிய செயலை செய்யும் முன் பள்ளி கொண்ட பெருமானை வழிபடுவது சிறப்பு. அடிக்கடி திருவனந்தபுரம் சென்று அனந்த பத்மனாபனை வழிபடுவது சிறப்பு. பள்ளி, கல்லூரி  வாழ்க்கை முடிந்ததும், திருப்பதியில் தங்கி வெங்கடாஜலபதியை வழிபட்டால், உங்கள் வாழ்க்கை ஒளிமயமாகும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்த  மாணவர்களாகிய நீங்கள் அமைதியாகவும் திட்டமிட்டும் செயல்படக் கூடியவர்கள்.

உங்கள் மாணவப்பருவம், சூரியதிசை முதல், செவ்வாய் திசை வரை இருக்கும். ஆனாலும் ஒரு சிலருக்கு ராகு திசையிலும் படிப்பு தொடரலாம். எந்த செயல் செய்தாலும் சரியான நேரத்திலும், கவனத்துடனும் செய்யக்கூடிய நீங்கள் வீண் கோபத்தையும், பிடிவாதத்தையும் தவிர்த்தால் சிறந்த பலன்களைப் பெறலாம். பெற்றோர், ஆசிரியர் கூறியபடி நடந்து கொள்வது நல்லது. நண்பர்களால் ஏமாந்து போகும் பாதிப்பு இந்த நட்சத்திரக்காரர்களுக்கே உரியது. எனவே நண்பர்களிடம் கவனமாக பழகவும்.

உங்களுக்கு வெளிநாடுகளில் சென்று கல்வி கற்கும் வாய்ப்பு எளிதாகக் கிடைக்கும் என்றாலும் தெரியாத நபர்களிடம் மிகவும் கவனமாக செயல்பட்டால் ஏமாற்றத்தை தவிர்க்கலாம். பெற்றோர் உதவியுடன் வங்கிக்கடன் முயற்சிகளுக்கு ஏற்பாடு செய்யுங்கள். அடிக்கடி கோபப்படுவதும், அவசரப்பட்டு முடிவெடுப்பதும் தீய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் மனதைக் கட்டுப்படுத்துவது நல்லது. மனதைக் கட்டுப்படுத்த ஏதாவது விளையாட்டில் ஈடுபடுங்கள். கண் சம்பந்தப்பட்ட நோய் ஏற்பட்டால் உடனடி மருத்துவ சிகிச்சை அவசியம்.

ஒவ்வொரு வியாழனும் காலை 6.15 முதல் 6.45க்குள் இஷ்ட தெய்வத்தின் முன் 5 அகல் தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள். எந்த ஒரு புதிய செயல் தொடங்கினாலும் அருகிலுள்ள அம்மனை வழிபடுங்கள். அடிக்கடி திருவானைக் காவல் சென்று அகிலாண்டேஸ்வரியையும், ஜம்புகேஸ்வரரையும் வழிபடுவது சிறப்பான பலன் தரும். பள்ளி, கல்லூரி  வாழ்க்கை முடிந்ததும், மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரியை வணங்கினால் வாழ்க்கை வளம் பெறும்.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்களாகிய நீங்கள் தன்னம்பிக்கையோடு செயல்பட்டு வெற்றிபெறக் கூடியவர்கள்.

சந்திர திசையில் பிறந்த உங்களின் மாணவப் பருவம், ராகு திசை வரை தொடரும்.  முழு முயற்சியுடன் படிக்கும்  நீங்கள், தன்னம்பிக்கை இருந்தாலும் சரியாக திட்டமிட்டு செயல்படுவது மிகவும் முக்கியம் என்பதை தெரிந்து கொண்டால் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். உங்கள் மீது உங்களுக்கு உள்ள நம்பிக்கையால் எந்த செயலையும் கடைசி நேரத்தில் அவசர அவசரமாகச் செயல்படுவீர்கள். இதை தவிர்த்து படிப்படியாக முயற்சிகளைத் தொடர்ந்து, சரியான நேரத்தில் அதை செய்து முடிப்பது நல்லது.

அயல் நாடுகளில் சென்று படிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும் போது பெற்றோர் அறிவுரைப்படி செயல்பட்டால் நல்லது.  கல்விக்கடன் தொகையைப் பெற சரியான நபர்களுடன் சேர்ந்து முயற்சி செய்யவும். படிக்கும்போது நண்பர்களுடன் சேரமால் தனியாகப்படித்தால் அதிக மதிப்பெண்களை பெறலாம்.  மனஅழுத்தம், எலும்புத் தேய்மானம், நரம்புக் கோளாறு ஏற்பட்டால் உடனடி சிகிச்சை பெறவும்.

ஒவ்வொரு வெள்ளியும் காலை 6.15 முதல் 6.45க்குள் இஷ்ட தெய்வத்தின் முன் 5 அகல் தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள். எந்த ஒரு புதிய செயலை செய்யும் முன்பு ஆஞ்சநேயரை வழிபடுங்கள். அடிக்கடி சங்கரன் கோவில் சென்று கோமதி அம்மனையும், சங்கர நாராயணரையும் வழிபடுங்கள். பள்ளி, கல்லூரி  வாழ்க்கை நிறைவு பெற்றதும், ஸ்ரீரங்கம் பள்ளி கொண்ட பெருமாளை  வணங்கினால் வாழ்க்கை வளம் பெறும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்களாகிய நீங்கள் ஞாபகசக்தியும் கற்பூர புத்தியும் உள்ளவர்கள்.

செவ்வாய் திசையில் பிறந்த உங்களின் மாணவப் பருவம், ராகுதிசை வரை இருக்கும். எதையும் துணிந்து செய்யக்கூடிய நீங்கள், உங்கள் செயலை பணிவுடன் செய்தால் வெற்றி நிச்சயம். உங்களது மனக்குழப்பம் நீங்க தியானம் யோகா பழகுவது நல்லது. சிறுவயது முதல் உடற்பயிற்சிகளைச் செய்வதும், ஏதாவது ஒரு கலையைக் கற்பதும் உங்களது சிந்தனைத் திறனை அதிகப்படுத்தும். இதனால் மனம் தெளிந்து பாடங்கள் விரைவில் பதியும்.

நண்பர்களுக்காக எதையும் செய்யாமல், உங்களது பெற்றோர், ஆசிரியர் சொல்படி நடப்பது சிறப்பு. நீங்கள் முயற்சி செய்தால் வெளிநாடு சென்றுப் படிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும். இரவில் கண் விழிப்பதைத் தவிர்த்து அதிகாலையில் எழுந்து படிப்பது நல்லது. தேவையில்லாத நண்பர்களைத் தவிர்ப்பது நல்லது. தோல் சம்பந்தப்பட்ட நோயான தேமல், ரத்தத் தொற்றுநோய், வயிற்று வலி இவைகளுக்கு உடனடி சிகிச்சை பெறவும்.

ஒவ்வொரு வெள்ளியும் காலை 6.15 முதல் 6.45க்குள் இஷ்ட தெய்வத்தின் முன் 5 அகல் தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள். எந்த ஒரு புதிய முயற்சியை ஆரம்பிக்கும் முன் லட்சுமி நரசிம்மரை வழிபடுங்கள். அடிக்கடி திருப்பதி சென்று வெங்கடாஜலபதியை வழிபட்டு வாருங்கள். பள்ளி, கல்லூரி  வாழ்க்கை நிறைவு பெற்றதும், அகோபிலம் சென்று நரசிம்மரை வணங்கினால் உரிய பணி கிடைத்து வாழ்க்கை உ<ன்னதமாகும்.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்களாகிய நீங்கள் சட்டென எதையும் புரிந்துகொள்ளும் ஆற்றல்மிக்கவர்கள்.

ராகு திசையில் பிறந்த உங்களின் பள்ளிப்பருவம், குரு திசை வரை தொடரும். ஞாபக சக்தி உடைய நீங்கள் படித்ததை சரியான சமயத்தில் உபயோகப்படுத்துவது உங்களின் தனி குணம். இதனால் தலைக்கணமும், அலட்சியமும் ஏற்படாமல் செயல்பட்டால் மற்றவர்களது உதவி கிடைப்பதோடு மதிப்பும் உயரும். வீண் பிடிவாதம், தேவையற்ற கோபத்தைத் தவிர்த்து விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொண்டால் எடுத்த காரியங்களில் வெற்றி பெறலாம்.

முகத்திற்கு நேராகப் புகழும் நண்பர்களைத் தவிர்ப்பது நல்லது. நண்பர்களிடம் தேவையில்லாமல் கொடுக்கும் வாக்குறுதிகளை தவிர்த்தால் எதிலும் சிக்காமல் தப்பிக்கலாம். வெளிநாடு சென்று படிக்க விருப்பமுடைய மாணவர்களுக்கு அதற்கான கல்விக்கடன் மனம்போல் கிடைக்கும். வயிறு, மூச்சுக்குழாய் சம்பந்தப்பட்ட நோய்கள், முதுகு எலும்பு பாதிப்பு ஏற்பட்டால் உடனடி சிகிச்சை அவசியம்.

ஒவ்வொரு புதன் கிழமையும் காலை 6.15 முதல் 6.45க்குள் இஷ்ட தெய்வத்தின் முன் 5 அகல் தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள். எந்த ஒரு புதிய முயற்சியை ஆரம்பிக்கும் முன் துர்க்கையை வழிபடுங்கள். அடிக்கடி திருநாகேஸ்வரம் நாகநாதரையும், ராகு பகவானையும் வழிபடுங்கள். பள்ளி, கல்லூரி  வாழ்க்கை நிறைவு பெற்றதும், வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர், தையல்நாயகியுடன், அங்காரகனையும் வழிபட்டால் உங்கள் வாழ்வு செழிப்பாகும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்களாகிய நீங்கள் இயல்பாகவே எதையும் சட்டெனப் புரிந்துகொள்ளும் ஆற்றல் உள்ளவர்கள்.

குருதிசையில் பிறந்த உங்களின் மாணவப் பருவம், சனிதிசை வரை தொடரும். இயற்கையிலேயே ஞாபக சக்தியும், புத்திசாலித்தனமும் <உடைய நீங்கள், பலரால் பாராட்டப்படுவீர்கள். உங்களுக்கே உரித்தான சோம்பேறித் தனத்தால் உ<ங்களது பணிகளை ஒத்திப்போட்டு கடைசி நேரத்தில் அதை அவசரமாக செய்வதை தவிர்ப்பது நல்லது. எந்த ஒரு செயலையும் சீராகவும் சிறப்பாகவும், திட்டமிட்டும் நேரம் தவறாமலும் செயல்படுத்தினால் உங்கள் வெற்றிகள் உறுதியாகும்.

வெளிநாடு சென்று பயில வாய்ப்புகள் கிடைக்கும்போது அதை மறுக்காமல் ஏற்றுக்கொள்ளவும். அறிமுகமில்லாதவர்களின் உதவியை நாடாமல் பெற்றோர், உறவினர்களின் ஆலோசனையின் பேரில் கல்விக்கடனுக்காக முயற்சி செய்யவும்.  எப்போதும் கிணற்றுத் தவளையாக இருக்காமல் புதுப்புது விஷயங்களை தெரிந்து கொள்வது நல்லது. நண்பர்களுடன் கவனமாகப் பழகவும். வயிறு மற்றும் சளித் தொந்தரவு, அலர்ஜியால் பாதிப்பு ஏற்பட்டால் உடனடி சிகிச்சை அவசியம். இரவில் கண் விழிப்பதைத் தவிர்த்து அதிகாலையில் எழுந்து படிப்பது நல்லது.

ஒவ்வொரு வியாழக்கிழமையும் காலை 6.15 முதல் 6.45க்குள் இஷ்ட தெய்வத்தின் முன் 5 அகல் தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள். எந்த ஒரு புதிய முயற்சியில் ஈடுபடும் முன் அருகிலுள்ள சிவன் கோயிலுக்கு சென்று வாருங்கள். அடிக்கடி சங்கரன் கோயில் சென்று ராகவேந்திரரை தரிசியுங்கள். பள்ளி, கல்லூரி  வாழ்க்கை நிறைவு பெற்றதும், திருச்செந்தூர் சென்று சுப்ரமணியசுவாமியை வழிபடுட்டால் உங்கள் வாழ்க்கை பசுமையாகும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்களாகிய நீங்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றிகளைப் பெறக் கூடியவர்கள்.

சனிதிசையில் பிறந்த உங்களின் மாணவப்பருவம், புதன்திசை வரை தொடரும். எந்த ஒரு செயலையும்  திட்டமிட்டு குறிப்பிட்ட நேரத்தில் செய்து முடிக்கும் குணமுடைய நீங்கள், எதிலும் உங்கள் முடிவே சரியானது என்ற வீண் பிடிவாதத்தை தவிர்க்கவும். உங்களை பிறர் பாராட்ட வேண்டும் என விரும்பும் நீங்கள், முதலில் அடுத்தவரை பாராட்ட பழக வேண்டும். இந்த நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளை பெற்றோர் அடுத்தவர்களுடன்  ஒப்பிட்டுக் குறைசொல்லாலும், அன்பு செலுத்தியும்  வளர்த்து வந்தால்  மாணவப் பருவத்தில் இவர்கள் பல சாதனைகளை புரிவார்கள்.

எங்கும், எதிலும் முதல் நபராக இருக்க வேண்டும் என்ற கொள்கை உடைய நீங்கள், நண்பர்களிடத்தில் சற்று விலகியே இருங்கள். வெளி நாடு சென்று படிப்பதற்கான வாய்ப்பை விடா முயற்சியுடன் செய்தால் எளிதில் கிடைக்கும். வயிறு, ரத்தம் சம்பந்தப்பட்ட நோய் ஏற்பட்டால் உடனடி சிகிச்சை அவசியம்.

ஒவ்வொரு திங்கட்கிழமையும் காலை 6.15 முதல் 6.45க்குள் இஷ்ட தெய்வத்தின் முன் 5 அகல் தீபம் ஏற்றி வழிபடுங்கள். எந்த ஒரு புதிய முயற்சிகளைத் தொடங்கும் முன், அருகிலுள்ள அம்மன் கோயிலில் வழிபாடு செய்யுங்கள். அடிக்கடி மந்திராலயம் சென்று ராகவேந்திரரையோ, ஷீரடி சென்று சாயிபாபாவையோ வணங்குங்கள். பள்ளி, கல்லூரி  வாழ்க்கை நிறைவு பெற்றதும், ஸ்ரீரங்கம் ரங்கநாதரை தூய மனதோடு பிரார்த்தனை செய்தால் உங்கள் வாழ்வு சிறப்பாகும்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்களாகிய நீங்கள் பொறுமையாகச் செயல்பட்டு பெருமை பெறக் கூடியவர்கள்.

புதன் திசையில் பிறந்த உங்களின் மாணவப் பருவம், கேதுதிசை வரை தொடரும். சிலருக்கு சுக்ர திசையிலும் தொடரலாம். இயற்கையாகவே புத்திசாலியான நீங்கள் தேவையற்ற புகழுக்கு மயங்கினால் அதுவே அகங்காரமாக மாறிவிடும். எனவே இதை தவிர்த்தால் வெற்றி வாய்ப்பு எளிதில் கிடைக்கும். வெளிநாடு சென்று கல்வி பயில நினைக்கும் மாணவர்கள் தேவையற்ற நபர்களைத் தவிர்த்து பெற்றோர் மற்றும் நம்பிக்கையான உறவினர்களின் ஆலோசனைப்படி செயல்படுவது நல்லது. கல்விக்கடனை கல்வி பயில மட்டுமே உபயோகப்படுத்தவும்.

இரவுநேர பயணங்களின்போது மிகவும் கவனமாக இருப்பது அவசியம். விஷ பூச்சிகளால் தொந்தரவு ஏற்பட வாய்ப்பிருப்பதால் முன்னெச்சரிக்கை அவசியம்.
இரவில் கண் விழிப்பதைத் தவிர்த்து அதிகாலையில் எழுந்து படிப்பதும், பெற்றோர் ஆலோசனைப்படி நடப்பதும் நல்லது. பரம்பரையாக ஏற்படக்கூடிய நோய் உங்களுக்கும் வராமல் முன்னெச்சரிக்கையாக சிகிச்சை மேற்கொள்வது நல்லது.

ஒவ்வொரு திங்கட்கிழமையும் காலை 6.15 முதல் 6.45க்குள் இஷ்ட தெய்வத்தின் முன் 5 அகல் தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள். எந்த ஒரு புதிய முயற்சிகளுக்கு முன் தட்சிணாமூர்த்தியை வழிபடுங்கள். அடிக்கடி திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசனம் செய்யுங்கள். பள்ளி, கல்லூரி  வாழ்க்கை நிறைவு பெற்றதும், திருவனந்தபுரம் அனந்தபத்மநாபனை தரிசித்தால் உங்கள் வாழ்க்கை ஒளிமயமாகும்.
நாய் என்று திட்டினால் சந்தோஷப்படுங்கள்!

ஒருவரை ஒருவர் கோபத்தில் திட்டும் போது, நாயே! என்று கூறுவர். இதனால் பிரச்சனை மேலும் பெரிதாகும்.ஏனென்றால் நாய் என்பதை கேவலமாக கருதுவர். ஆனால் நாயானது பைரவரின் அம்சமாகும். கிருஷ்ண பரமாத்மா கீதையில் நாயைப் பற்றி பெருமையாக கூறி உள்ளார். தர்மபுத்திரர் சொர்க்கத்துக்குப் போகும்போது தம்முடைய அன்புக்கு உரிய நாயையும் உடன் அழைத்துச் சென்றார் என புராணம் கூறுகிறது.  நாய், வரலாற்றுப் பெருமை கொண்டது. வேதத்தில் நாய் பற்றிய கதை கூறப்பட்டுள்ளது. ரிக் வேதம், நான்கு கண்கள் கொண்ட நாய் காலதேவனுக்குத் துணை வருவதாகக் கூறுகிறது. அத்துடன் நாயை நான்கு வேதத்திற்கு இணையாக கூறுவர். இதற்கு ஒரு புராணக்கதை உண்டு.

ஒரு முறை ஆதிசங்கரர் கங்கையில் நீராடி விட்டு தனது சீடர்களுடன், நடந்து வந்து கொண்டிருந்தார். அவருக்கு எதிரில் ஒரு சண்டாளன் வந்து கொண்டிருந்தான். அவனுக்கு அருகில் அவனது மனைவி தலையில் மண்கலயங்களுடன் வந்து கொண்டிருந்தாள். பக்கத்தில் அவர்களது குழந்தைகள் ஆடிப்பாடி கொண்டிருந்தனர். சண்டாளன் தனது கையில் நான்கு நாய்களை பிடித்து கொண்டிருந்தான். இவர்களைப்பார்த்ததும் ஆதிசங்கரருக்கு அருவருப்பு ஏற்பட்டது. உடனே அவர், ஏ சண்டாளா! சீ தூரப்போ, என கோபத்துடன் கத்தினார். இதைக்கேட்ட சண்டாளன், மிக அமைதியுடன், ஐயா! நீங்கள் சீ தூரப்போ என்று கூறியது, என் உடலையா? அல்லது எனக்குள் இருக்கும் ஆத்மாவையா? என்றான். இதைக்கேட்டு அதிர்ந்து போன ஆதிசங்கரர், இவ்வளவு ஞானத்துடன் பேசும் நபர் யார்? என தன் ஞானதிருஷ்டியில் பார்த்தார். உடனே நெடுஞ்சாங்கிடையாக சண்டாளனின் காலில் விழுந்து வணங்கினார். சண்டாளனாக வந்தது வேறு யாருமில்லை. சாட்சாத் பரமேஸ்வரன் தான். மனைவியாக பார்வதியும், ஆடிப்பாடிய குழந்தைகளாக விநாயகரும் முருகனும், நான்கு நாய்களாக நான்கு வேதங்களும் தான் சிவனின் கூட வந்தவர்கள். ஆதிசங்கரருக்குள் இருந்த சிறு ஆணவத்தை அடக்கி அனைவரும் சமம் என்பதை உணர்த்தவே சிவன் இந்த வேடத்தில் வந்தார். இந்தக்கதையிலிருந்து நாய் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அறியலாம்.

கிரேக்கர்களின் பழைய கதைகளிலும் இரு நாய்களைப் பற்றி கதைகள் வருகின்றன. மரண தேவதையின் சன்னிதானத்துக்குத் துவாரபாலகர்களாக நாய்கள் பணிபுரிகின்றனவாம். வேத காலக் கதையும் பித்ரு லோகத்துக்கு துவார பாலகர்கள் நாய்கள்தான் என்று கூறுகிறது. அவை வைவஸ்த சியாமம், ஸபலம் என்று பெயர் கொண்டவை. பாரசீகர்களின் தர்ம சாஸ்திரங்களில், பித்ரு லோகத்தையும் தேவ லோகத்தையும் இணைக்கும் சின்வத் என்னும் பாலம் ஒன்று இருப்பதாகவும், இறந்த பின் மனித ஆன்மாவை ஒரு நாயே இந்தப் பாலத்தின் வழியாக அழைத்துச் செல்லும் மார்க்க பந்து என்று எழுதி வைத்திருக்கிறார்கள். கிரேக்கர்களின் புராணக் கதை ஒன்றில், மூன்று தலைகள் கொண்ட கர்பேராஸ் என்னும் நாய்தான் காலதேவனுக்கு மெய்க் காவலன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வானுலகில் வாழும் நாய்க்கு திவ்யகதஸ்என்று பெயர் சூட்டியிருக்கிறது வேதம். கேனிஸ் என்னும் விண்மீன்களின் கூட்டத்தைத்தான் வேதம் சு நா ஸிர என்று குறிப்பிடுவதாக மாக்ஸ் முல்லர் தீர்மானிக்கிறார். ஸம்வத்ஸம் (ஓர் ஆண்டு) முடிந்ததும், பருவகால தேவதைகளை நாய்கள் எழுப்புவதாக ரிக்வேதம் முதல் மண்டலத்தில் ஒரு செய்தி உள்ளது. பழகிய நல்ல இனத்து நாயைப் பற்றி வால்மீகி ராமாயணத்தில் குறிப்பு வருகிறது. பரதன் மாமன் வீட்டுக்குப் போகும்போது பயிற்சி பெற்ற வேட்டை நாய்களையும் அழைத்துச் சென்றானாம். மனிதன் மீது அன்பு கொண்ட பிராணி நாயைப்போல் வேறில்லை. அதனால்தான் அது மொழி பேதமோ, தேசம், இனம், நிலை பேதமோ இன்றி, அனைத்தையும் கடந்து எவருடனும் ஒட்டுறவாக வாழ முடிகிறது. எனவே உங்களை யாராவது நாய் என்று திட்டினால் பெருமைப்படுங்கள், சந்தோஷப்படுங்கள், அவருக்கு மிகுந்த மரியாதை செலுத்துங்கள். திட்டியவர் மீது கோபப்படாதீர்கள்.
கண்களுக்குப் புலப்படாத சித்தர்கள்!

இன்றும் சித்தர்கள் உலகில் இருக்கிறார்கள்; ஆனால், அவர்கள் மனிதர்களின் கண்களுக்குப் புலப்படுவதில்லை என்கிறார்கள். ஒரு ஞானி இதற்கொரு கதை சொல்கிறார். ஒரு துறவி தம்முடைய சில சீடர்களுடன் ஒரு நகரத்திற்கு வந்திருந்தார். அந்தத் துறவிக்கு ஒரு சக்தி இருந்தது. தம் உடலிலிருந்து ஒரு துளி ரத்தம் எடுத்து, அதன்மூலம் குழந்தைகளின் நோய்களை உடனுக்குடன் குணப்படுத்தும் ஆற்றல் அது. இந்த செய்தி மெல்ல மெல்ல நகரம் முழுவதும் பரவிவிட்டது. தமக்கு தேவியின் அருள் கிட்டியிருப்பதாகவும் அந்த சித்தியின் மூலம் தான் தம்முடைய ரத்தத்தில் மருந்துக்குணம் இருப்பதாகவும் துறவி தெரிவித்தார். அன்று முதல், துறவியின் இருப்பிடத்தில் பொன், வெள்ளிக்காசுகளும் பழங்களும் மலர்களும் பூஜைக்கான பொருள்களும் வந்து குவியலாயின. ஏகப்பட்ட பெற்றோர்கள், நோய்வாய்ப்பட்ட தமது குழந்தைகளுடன் துறவியின் ஆசிரமத்தை முற்றுகையிடலானார்கள். நோயால் வருந்திய சின்னஞ்சிறு குழந்தைகளின் திரளான கூட்டத்தைக் கண்ட துறவியின் மனதில் கருணை பொங்கித் ததும்பியது.

மறுகணமே துறவி தம் ஆள்காட்டி விரலொன்றைத் திரிசூலத்தில் அழுத்தினார். குபுகுபுவென்று ரத்தம் வெளிப்பட்டது. ரத்தத் துளிகளின் மகிமையால் குழந்தைகளின் நிலைமையில் அப்போதே முன்னேற்றம் ஏற்பட்டது. பெற்றோர்களின் முகத்தில் வியப்பும் மகிழ்ச்சியும் பொங்கியது.  ஒரு விரலில் ரத்தம் வருவது நின்றதும், துறவி தமது இன்னொரு விரலைத் திரிசூலத்தின் மேல் வைத்தார். குணமடைந்த நோயாளிகளின் கூட்டம் அங்கிருந்து மெல்ல மெல்ல நகர்ந்தது. ஆனால், நோயாளிகளின் வரிசை வளர்ந்து கொண்டே போயிற்று. துறவியின் பத்து விரல்களிலிருந்தும் ரத்தம் வெளியேறி முடிந்தாயிற்று. அதற்கு மேல் ரத்தம் நின்று விட்டது. ஆயினும், நோயாளிகளின் வருகைக்கு ஒரு முடிவு இருப்பதாகவே தெரியவில்லை. அக்கம் பக்கத்து ஊரின் மக்களும் அங்கே வரத் தொடங்கி விட்டார்கள். கதையை விவரிப்பானேன்? காரணம், கடைசி கட்டம் முழுக் கதையையும் விளக்கி விடுகிறது. அகதிகள் சிலர் இந்த விவரம் தங்களுக்கு எட்டியதும் அந்தத் துறவியின் குடிசைக்கு விரைந்தார்கள். அங்கே அவர்கள் கண்ட காட்சி - ஐயகோ!

கால்கள் ஒரு மரக்கிளையில் கட்டப்பட்டு துறவி தலை கீழாகத் தொங்கிக் கொண்டிருக்கிறார். திரிசூலத்தால் குத்தப்பட்டு உடல் முழுவதும் சல்லடைக் கண்களாகி வெளுத்துப் போய் விட்டிருக்கிறது. துறவியின் அருகில், கையில் ஒரு நோயாளிக் குழந்தையுடன் நின்ற ஒரு தம்பதியர் சுவாமி! ஒரு துளி ரத்தம் மட்டும் எங்களுக்குத் தாருங்கள். எங்களுடைய ஒரே குழந்தை இது. தங்கள் சாந்நித்தியத்திலிருந்து நம்பிக்கை இழந்து திரும்ப வேண்டிய அளவுக்கு எங்களுக்கு மட்டும் ஏன் இந்தத் துர்பாக்கியம்? என்று மன்றாடிக் கொண்டிருக்கிறார்கள். இன்றைய மனிதர்கள், அந்த நகரத்தின் அந்நாளைய மனிதர்களிலிருந்து வேறுபட்டுவிட்டனரா? இல்லை! என்பதுதான், மனிதனின் இயற்கை குணங்களை ஆராய்ந்தறிந்த உளவியல் அறிஞர்களின் கூற்று! இந்த சம்பவத்துக்குப் பிறகு இறைவனும் இறைவியும் கொஞ்சம் உஷாராகி விட்டனர். இந்தத் துறவியைப் போன்ற வரம் பெற்ற சித்தர்கள் இன்றுகூட இந்த உலகில் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், அவர்கள் இப்படி வெளிப்படையாக மனிதர்களிடையே செல்வதற்கு அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
மாமனை மடியில் அமர்த்திய மருமகன்!

மகாவிஷ்ணு விநாயகருக்கு மாமன் முறை ஆவார். கேரள மாநிலம் கோட்டயம் மள்ளியூர் மகா கணபதி கோயிலில் மாமனான மகாவிஷ்ணுவை மருமகனான விநாயகர் தன் மடியில் அமர்த்திய கோலத்தில் அருள்பாலிக்கிறார். முழுமுதற் கடவுளான விநாயகர் ஒவ்வொரு கோயிலிலும் ஒவ்வொரு திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

பக்தர்களின் தரிசனத்திற்காக விநாயகர் பல்வேறு வடிவங்களில் அருள்பாலிக்கும் அற்புத தலங்கள் ...

நிறம் மாறும் விநாயகர்

கன்னியாகுமரி மாவட்டம், கேரள புரத்தில் உள்ள மகாதேவர் கோயிலில் அருளும் விநாயகர் நிறம் மாறி காட்சியளிக்கிறார். இவருக்கென தனி சன்னதியோ, மேற்கூரையோ இல்லாததால் இவர் மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தபடியும் இருக்கிறார், சந்திரகாந்த கல்லால் செய்யப்பட்ட இந்த விநாயகர் தட்சிணாயன காலத்தில் (ஆடி-மார்கழி) வெண்ணிறமாகவும், உத்தராயண (தை-ஆனி) காலத்தில் கருப்பு நிறமாகவும் காட்சியளிக்கிறார். இவருக்கு, நிறம் மாறும் விநாயகர் என்று பெயர்.

அம்மானை சாந்தப்படுத்திய பிள்ளையார்

குழந்தைகள் கோபித்துக் கொண்டிருந்தால் அம்மா, கண்ணே! மணியே என கொஞ்சி, முத்தமிட்டு, சாந்தப்படுவாள். ஆனால், பெற்றவள் கோபமாக இருக்கும் போது, எந்தப் பிள்ளையாவது சமாதானம் சொல்லுமா! நம் பிள்ளையார் சொன்னாரே! திருவனைக்காவல் என்ற சிறுநகரம் திருச்சி அருகில் இருக்கிறது. இங்கேயுள்ள ஜலசிவன் கோயிலில், அம்பாள் அகிலாண்டேஸ்வரிக்கே மரியாதை அதிகம். இவள் கலியுகத்தின் துவக்கத்தில் மக்கள் போகும் போக்கைப் பார்த்து கடும் உக்கிரமாக இருந்தாள். மக்களை அழிக்க நேரம் பார்த்துக் கொண்டிருந்த வேளையில், சிவனின் அம்சமாகக் கருதப்பட்ட ஆதிசங்கரர். இத்தலத்துக்கு வந்தார். அவர் சிவாம்சம் பொருந்தியவர் என்பதால், அம்பாளின்  உக்கிரத்துக்கெல்லாம் பயப்படவில்லை. அப்படியே சுட்டெரித்தால் தான் என்ன! அவள் பாதாரவிந்தம் தானே கிடைக்கும் எனக்கருதினாரோ என்னவோ! எவ்வித அச்சமும் இல்லாமல் கோயிலுக்குள் சென்றார்.

ஒரு விநாயகர் சிலையை அம்பாள் எதிரே பிரதிஷ்டை செய்தார். பிள்ளையை அம்பாள் பார்த்தாளோ இல்லையோ, கோபம் போய்விட்டது. இந்தக் கோபத்தை வடித்தெடுத்து தாடங்கம் எனப்படும் ஒரு ஜோடி தோடுகளில் அடைத்து, அதை அம்பாளுக்கு அணிவித்து விட்டார். இப்படி, அன்னையை சாந்தப்படுத்திய அந்தப் பிள்ளையார், அம்பாளுக்கு செல்லப்பிள்ளை இல்லையா? அதனால், செல்லப்பிள்ளையார் என்றே மக்கள் அவருக்கு பெயர் சூட்டிவிட்டனர். அவர் மட்டும் நமக்கு அருள்பாலிக்காமல் இருந்திருந்தால், இவ்வுலகம் கலியுகத்தின் துவக்கத்திலேயே அம்பாளின் சீற்றத்துக்கு ஆளாகி அழிந்திருக்கும்.

பத்து கரங்களுடன் விநாயகரின் அரிய தரிசனம்

ஐந்து கரத்தனை, யானை முகத்தனை எனப் போற்றப்படும் விநாயகர், நம்நாட்டில் சில குறிப்பிட்டத் திருத்தலங்களில் மட்டுமே, பத்து கரங்களுடன் அருளாட்சிப் புரிகிறார். இந்தத் தசபுஜ கணபதி தோற்றம் காணக் கிடைத்தற்கரியது. அப்படிப்பட்ட மூன்று தலங்களைத் தரிசிப்போமே... அவற்றில் இரண்டு, கணேச சதுர்த்தி விழாவுக்குப் பெயர் போன மகாராஷ்டிரா மாநிலத்திலும், மற்றொன்று, கர்நாடகாவிலும் அமைந்துள்ளது.

யானையும், சிங்கமும் நட்பு பாராட்டும் ÷க்ஷத்ரம்!

அரபிக் கடலோரம், மங்களூரு - மும்பை தேசிய நெடுஞ்சாலையில் உடுப்பியிலிருந்து வடக்கே 22 கி.மீ. தொலைவிலும், மங்களூரிலிருந்து ஏறக்குறைய 80 கி.மீ, தொலைவிலும் உள்ளது சாளக்ராமம் எனும் சிற்றூர். இங்கு சங்கு, சக்கரம் என்ற இரு புண்ணியத் தீர்த்தக் கட்டங்களுக்கு இடையே ரம்மியமான சூழலில் அமைந்துள்ள ஸ்ரீ குரு நரசிம்மர் ஆலயத்தில் கம்பீரமாகத் தசபுஜ கணபதி எழுந்தருளியுள்ளார். கி.பி நான்காம் நூற்றாண்டில் மௌரியக் குலத் தோன்றல் ராஜா லோகாதித்யன், தன் ராஜகுரு பட்டாச்சார்யாவுக்கு நிவேதனமாக அளித்த பதினான்கு கிராமங்கள் அடங்கிய இந்தச் சாளக்ராம ÷க்ஷத்திரத்துக்குக் கூட தேசத்துப் பிராமணர்கள், ஸ்ரீ நரசிங்கப் பெருமாளையே தங்களுக்குக் குருவாகவும், குல தெய்வமாகவும் போற்றி வணங்குகிறார்கள். அதனால் இவ்விடத்துக்கு ஸ்ரீகுரு நரசிம்ம ÷க்ஷத்திரம் என்றே பெயர். ராஜகுரு ஒரு தீவிர கணபதி உபாசகர். ஒருநாள் அவரது கனவில் ஸ்ரீ நரசிம்மர், தசபுஜ கஜானனாக வல்லபை தேவியுடன் காட்சியருளி, ஆலயம் எழுப்ப உத்தரவானதால், கணேச யந்திரத்தின் மீது ஸ்ரீ நரசிம்மரை ஸ்தாபனம் செய்வித்தார். வைணவக் கோயிலில் சைவ சம்பிரதாயமே எல்லா விஷயங்களிலும் அனுஷ்டிக்கப்படுகிறது என்பது அதிசயம் தான்!

இங்கு தசபுஜ விநாயகருக்குத்தான் முக்கியத்துவம் தரப்படுகிறது. ஆலய நிகழ்ச்சிகளில், மகா கணபதி நரசிம்மப் ப்ரீத்யர்த்தம் என்றே சங்கல்பம் செய்விக்கப்படுகிறது. விநாயக சதுர்த்தியின் போது வெள்ளி ரதத்தில் விநாயகர் வீதி உலா வருவது காணக் கண் கொள்ளா காட்சியாகும். இப்பிரதேசத்தில், யானைகளும், சிங்கங்களும் விரோதம் பாராட்டாமல் நட்புடன் பழகியதைக் கண்டு பரவசப்பட்ட ராஜகுரு, இவ்விடத்தை நிர்வைர ஸ்தலம் (பகைமை பாராட்டாத பிரதேசம்) என்று குறிப்பிட்டு மகிழ்ச்சி அடைந்தாராம்! இதை உறுதி செய்யும் விதத்தில் ஆலயத்தில் ஆனை முகத்தான் தசபுஜ கஜானனனாகவும், சிங்கம், ஸ்ரீநரசிம்ம வடிவிலும் காட்சியளிக்கின்றனர்.

கிணற்றிலிருந்து வந்த கணபதி!

மகாராஷ்டிர மாநிலத்தின் புண்ணிய பூமியாகப் போற்றப்படும் புனே நகரத்தின் மையப் பகுதியில் முத்தா நதிக்கரையோரம் நெளிந்தோடும் கர்வே சாலையில் கம்பீரமாக எழுந்து நிற்கிறது தசபுஜ கணபதி ஆலயம். இதற்கு சிந்தாமணித் தீர்த்தம் என்றும் பெயருண்டு. மராட்டியப் பேஷ்வாக்களின் சர்தாராகப் பணியாற்றிய சர்தார் ஹரிவந்த் பட்கேயின் வம்சாவளியினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது. ஒரு சமயம், இங்குள்ள பிரபல சக்தித் தலமான பார்வதிக் குன்றுக்கருகில் ஒரு வீட்டில் கிணறு வெட்டும்போது அங்கு இச்சிலை கண்டுபிடிக்கப்பட்டது. சங்கடஹர சதுர்த்தி, கணேச சதுர்த்தி விழாக்கள் கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்றன.

மகாராஷ்டிராவின் ரத்னகிரி ஜில்லாவிலுள்ள சிப்லூன் டவுனுக்கருகில், ஹேத்வி எனுமிடத்தில் மலைமீது உள்ளது புராதனமான லக்ஷ்மி-கணேசர் எனும் தசபுஜ கணேசர் ஆலயம். மராட்டியப் பேஷ்வாக்களால் பராமரிக்கப்பட்டுள்ளது. அபூர்வமான, காஷ்மீரத்தில் மட்டுமே காணப்படும் வெண்ணிறப் பளிங்குக் கற்களால் வடிவமைக்கப்பட்டுள்ளார் கணேச மூர்த்தி. இரண்டு அடி உயரப் பீடத்தில், மூன்று அடி உயர வடிவில், பத்துக் கரங்களில் வெவ்வேறு ஆயுதங்களுடன், இடக்காலை மடித்து, அதன் மீது லக்ஷ்மி தேவியை இருத்திக் கொண்டு, வலக் காலைக் குந்திய நிலையில் வைத்தவாறு, மோதகத்தை இடப்புறம் நீட்டிய துதிக்கையில் வைத்துக் கொண்டு அருள்பாலிக்கிறார். தரிசிப்போரின் கண்ணையும், கருத்தையும் ஒருங்கே கவர்ந்து விடும் தோற்றம்! விநாயக சதுர்த்தி அன்று, வெண்ணிற தசபுஜ விநாயகர் தேரில் பவனி வரும் போது கூட்டம் அலைமோதும். அந்த மலைப் பிரதேசம் முழுவதும், கணபதி பப்பா மோரியா! என்ற வாழ்த்தொலி எதிரொலிக்கும்.
காசியில் சூரிய பகவானை வழிபட்டவர்கள்!

காசி என்று போற்றப்படும் வாரணாசி திருத்தலத்தில் சிவன், அம்மன், விநாயகருக்கு நிறைய கோயில்கள் இருப்பது போலவே சூரிய பகவானுக்கும் கோயில்கள் உள்ளன. பகீரதன், தன் மூதாதையர் புனிதமடைவதற்காக கடுமையாகத் தவம் புரிந்து, பூலோகத்திற்கு கங்கை நதியை வரவழைத்தான். அந்த வேளையில் சூரிய பகவான் பூமிக்கு வந்து காசி விஸ்வநாதரை வழிபட்டுக் கொண்டிருந்தான். கங்கை நதி காசிக்குள் பிரவேசித்ததை அறிந்த சூரிய பகவான், கங்கையையும் வழிபட்டுப் பேறுகள் பெற்றான். அதன் நினைவாக காசி திருத்தலத்தில் லலிதாகாட் படித்துறை அருகில் ஒரு சூரியன் ஆலயம் உள்ளது. இங்குள்ள சூரிய பகவானை கங்காதித்யர் என்று போற்றுவர். காஷ்யப மகரிஷியின் மனைவியான வினதைக்கு மூன்று முட்டைகள் பிறந்தன. முதல் முட்டையிலிருந்து ஆந்தை வெளிப்பட்டது. இரண்டாவது முட்டையிலிருந்து அருணன் வெளிப்பட்டான். இவன் முட்டையிலிருந்து வெளிவரும்போதே ஊனமாகப் பிறந்தான்.

மூன்றாவது முட்டையிலிருந்து கருடன் தோன்றினான். இம்மூவரில் ஆந்தையும் அருணனும் காசித் திருத்தலத்திற்கு வந்து அங்கு எழுந்தருளியுள்ள சூரிய பகவானை வழிபட்டார்கள். அவர்களுக்கு அருள்புரிய திருவுளம் கொண்ட சூரிய பகவான் அருணனை தனது தேரோட்டியாகப் பதவி கொடுத்து வைத்துக்கொண்டார். ஆந்தை மகாலட்சுமியின் வாகனமாக மாறும் பாக்கியத்தை அளித்தார். அருணனை தேரோட்டியாக ஏற்றுக் கொண்ட சூரிய பகவானை அருணாதித்யர் என்று போற்றுவர். இந்தச் சூரிய பகவான் ஸ்ரீ திரிலோசனர் ஆலயத்தில் அருள்புரிகிறார். பகவான் கிருஷ்ணரின் மகன் சாம்பன் தன் தந்தையால் சாபம் பெறும் நிலைக்கு ஆளானான். அதன் விளைவால், சாம்பன் தொழுநோயால் பாதிகப்பட்டான். மகன் படும் துன்பத்தைக் கண்ட கிருஷ்ணர், சாம்பனுக்கு சாபவிமோசனம் பெறும் வழியைக் கூறினார். அதன்படி காசிக்கு வந்த சாம்பன் அங்கு எழுந்தருளியுள்ள சூரிய பகவானை வழிபட்டு சாபவிமோசனம் பெற்றான். சாம்பன் வழிபட்ட சூரியன் சாம்பாதித்யர் என்று அழைக்கப்படுகிறார். சாம்பன் சூரியனுக்கு பொங்கலிட்டு வழிபட்டு புனிதம் அடைந்த நாள் தைப் பொங்கல் என்று புராணம் கூறும்.

காஷ்யப மகரிஷிக்கும் வினதைக்கும் பிறந்த மூன்று பிள்ளைகளில் கருடனும் ஒருவர். இந்த கருடன், அளப்பரிய சக்தியைப் பெறுவதற்காக தன் தாய் வினதையுடன் சூரிய பகவானை வழிபட்டு பலம் பெற்றார். அதன் விளைவாக மகாவிஷ்ணுவின் வாகனமாகவும் திகழ்கிறார் என்பது புராணம். தாயும் மகனும் வழிபட்ட சூரிய பகவானை சு÷ஷால்கா ஆதித்யர் என்று போற்றுவர். காசியில் புகழ்பெற்ற ஸ்ரீதிரிலோசனர் மற்றும் ஸ்ரீகாமேஸ்வரர் ஆலயப் பிராகாரத்தில் இந்தச் சூரிய பகவான் எழுந்தருளியுள்ளார். தொழுநோயால் பாதிக்கப்பட்டு துன்பப்பட்ட விமலன் என்பவன், ஒரு முனிவரைச் சந்திக்கும் பாக்கியத்தைப் பெற்றான். அவன் நிலையை அறிந்த முனிவர், நீ காசியில் சிவலிங்கம் நிறுவி சூரிய பகவானை வழிபட்டால் உன் துன்பம் என்று ஆலோசனை சொன்னார். முனிவர் சொன்னதுபோல் காசிக்கு வந்த விமலன், சிவலிங்கத்தை நிறுவி, சூரிய பகவானை வழிபட்டான். அதில் மகிழ்ந்த சூரிய பகவான், இனி உன் வம்சத்தில் யாருக்குமே தொழுபோய் வராது என்று அருளினார். இந்தக் கோயில் காசியில் கதோலியா என்ற இடத்திற்கு அருகில் உள்ள ஜங்கம்பாடியில் உள்ளது. இங்கு எழுந்தருளியுள்ள சூரிய பகவானை விமலாதித்யர் என்று கூறுவர்.

சூரிய பகவானின் மகன்களில் ஒருவர் எமதர்மராஜன், இவர் தனக்கு அதிக சக்தி வேண்டும் என்று தன் தந்தை சூரிய பகவானுக்கு ஆலயம் நிர்மாணித்து, தவமியற்றி வரங்கள் பெற்றதாகப் புராணம் கூறும். எமன் நிறுவிய சூரிய பகவானை எமாதித்யர் என்பர். இக் கோயில் காசியில் சங்கடாகாட் என்னுமிடத்தில் உள்ளது. பஞ்சபாண்டவர்கள் வனவாசத்தின்போது, அவர்களின் பத்தினியான திரௌபதி, சூரிய பகவானைத் தியானித்து அட்சய பாத்திரம் பெற்றதாகப் புராணம் கூறுகிறது. திரௌபதி வழிபட்ட சூரிய பகவான் கோயில் விஸ்வநாதர் ஆலயத்திற்கு அருகில் அட்சய பீடத்தில் உள்ளது. இங்கு அருள்புரியும் சூரிய பகவானை திரௌபதி ஆதித்யர் என்பர். நான்கு வேதங்களிலும் புலமை பெற்றிருந்த விருத்தன் என்பவன் தன் இளமை மாறி முதுமைத் தோற்றத்தில் காட்சி தந்தான். அவன் காசியில் சூரிய பகவானை கடுமையாகத் தியானித்து மீண்டும் தன் இளமையைப் பெற்றான். விருத்தன் வழிபட்டுப் பேறு பெற்றதால் சூரிய பகவான் விருத்தாதித்யர் என்று போற்றப்படுகிறார். இந்தக் கோயில் காசியில் மீர்காட் என்னுமிடத்தில் உள்ளது. சூரிய பகவானை தினமும் வழிபட்டால் ஆரோக்கியமான வாழ்வு கிட்டும்; கண்பார்வை நன்கு தெரியும்; சரும நோய்கள் வராது; மன சஞ்சலங்கள் நீங்கும் என்று சாத்திரங்கள் கூறுகின்றன. மனசஞ்சலங்களையும் மற்ற துன்பங்களையும் தீர்த்து வைப்பதால் சூரிய பகவானை லோலார்க்கர் என்று போற்றுவர். இந்த சூரிய பகவான் கோயில் அதிசங்கமத்தில் புகழ்பெற்ற லோலார்க்க குண்டம் அருகில் உள்ளது.

காசி திருத்தலத்தின் வடக்கே அலேம்புரா என்னும் இடத்தில் உத்திர அர்க்க குண்டம் என்னும் சூரிய தீர்த்தக்குளம் உள்ளது. இதை வக்ரியா குண்டம் என்றும் கூறுவர். அங்கு ஒரு ஆடும் ஒரு பெண்ணும் கடுமையாகத் தவமிருந்து சூரிய பகவானின் அருளைப் பெற்றனர். இங்கு எழுந்தருளியுள்ள சூரிய பகவானை உத்திர அர்க்கர் என்பர். சூரிய பகவானை காசியில் வழிபட்டுப் பேறுபெற்றவர்கள் மேலும் பலர் உண்டு. இருந்தாலும் சூரிய பகவானே தான் மேலும் பலம் பெறுவதற்காக காசி திருத்தலத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டிருப்பதாக காசி காண்டம் கூறுகிறது. அந்த வகையில் ஸ்ரீமன் நாராயணனான கேசவனின் அருளால் சிவலிங்கம் அமைத்து சிவபெருமானை வழிபட்டார். சூரியன் வழிபட்ட இந்த ஆலயம் வருணா சங்கமத்தில் உள்ளது. சேவகன் அருளால் லிங்கம் அமைத்து வழிபட்டதால் இங்கு எழுந்தருளியுள்ள சூரிய பகவானை கேசவாதித்யர் என்பர். முன்னொரு காலத்தில் சூரிய பகவான் காசி திருத்தலத்தில் ஈசனையும் உமையையும் ஸ்ரீ மங்கள கௌரி - ஸ்ரீ கபஸ்தீஸ்வரர் என்ற திருப்பெயருடன் பிரதிஷ்டை செய்து சுமார் ஒரு லட்சம் ஆண்டுகள் கடுமையாகத் தவம் புரிந்தார். சூரியனின் தவத்தினைப் போற்றிய சிவபெருமான் சூரியனுக்கு மயூகன் என்று பெயர் சூட்டி, சூரியன் கேட்ட வரத்தை அருளினார்.

ஈசனிடம் அருள் பெற்ற இந்த சூரியன், மயூகாதித்யர் என்று போற்றப்பட்டார். இந்த ஆலயம் கங்கைக் கரையோரம் உள்ள பஞ்சகங்காகாட் அருகில் உள்ளது. காசிக்கு புனிதப்பயணம் செல்பவர்கள், அங்குள்ள சூரிய பகவான் கோயில்கள் அனைத்தையும் தரிசிப்பது என்பது சிரமம். முடிந்தவரை ஸ்ரீ விஸ்வநாதர் ஆலயத்திற்கு அருகே உள்ள சூரிய கோயில்களைத் தரிசித்துப் பலன் பெறலாம். காசிக்குச் செல்ல வாய்ப்பு கிட்டாதவர்கள், தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள சூரியனார் கோயிலுக்குச் சென்று வழிபடலாம். இத்தலத்தில் சூரிய பகவான், தன் இரு மனைவியருடன் நின்ற கோலத்தில் மேற்கு திசை நோக்கி அருள்புரிகிறார். அவர் எதிரில் குருபகவான் காட்சி தருகிறார். குரு பார்க்க கோடி நன்மை என்ற முதுமொழிக்கு ஏற்ப, சூரிய பகவானை வழிபட்டு அனைத்து தோஷங்களும் நீங்கி கோடி கோடியான நற்பலன்களைப் பெறலாம். மேலும் தஞ்சை திருவையாறு திருத்தலத்தில் உள்ள திருக் கண்டியூர் கோயிலில் எழுந்தருளியுள்ள கல்ப சூரியனை வழிபட்டாலும் கோள்களால் ஏற்படும் தீமைகள் மறைந்து வாழ்வில் பிரகாசம் ஏற்படும் என்று ஞானநூல்கள் கூறுகின்றன. தவிர, சிவாலயங்களில் சூரியன் விக்கிரகத்தை நவகிரகத் தொகுப்பில் காண்கிறோம். அவரை ஞாயிற்றுக் கிழமைகளில் அர்ச்சித்து வழிபட்டாலும் நல்ல பலன்கள் கிட்டும் என்பர்.
சித்ரகுப்தனின் அருள்பெற வேண்டுமா?

உலக மக்களின் கர்மபலன்களை நியாயம் தவறாமல் நிர்ணயிப்பவர் சித்ரகுப்தர் ஆவார். என்றும் பதினாறு சிரஞ்சீவியாக மார்க்கண்டேயர் இருப்பது போல், இவரும் பன்னிரண்டு வயது சிரஞ்சீவியாகத் திகழ்பவர். தேவ ஸ்வரூபர். பிரம்ம குரு. அனைத்து லோகங்களின் அமைப்பைப் பரிபாலனம் செய்பவர். உலகத்து உயிரினங்கள் அன்றாடம் செய்யும் பாவ புண்ணிய செயல்களைத் தொகுத்து தனது பதிவேட்டில் பதிய வைக்கும் தலையாய பணியைப் பொறுமையுடன் செயல்படுத்துபவர். மனிதர்கள் தங்களுக்குத் தானே ஆத்ம விசாரம் செய்துகொள்வதற்கு வித்திடுபவரும் இவரே! நொடிக்கு நொடி மாறிக்கொண்டே இருக்கும் கர்மவினைகளை இம்மியும் பிசகாமல் குறிப்பெடுப்பது அவ்வளவு எளிதா என்ன! சித்ரகுப்த மகராஜர் சாதாரணமாகக் கிரீடம் தரித்த தோற்றத்தில் காட்சியளிப்பார். மராட்டிய புண்ணிய புருஷர்களான ஏகநாதர், நாமதேவர் அணிந்திருப்பது போன்று துணியிலான தலைப்பாகையிலும் சிறப்புத் தோற்றத்தில் காட்சியளிக்கும் கோலமும் உண்டு.

உமாமகேஸ்வரரின் அருளால் தோன்றியவர்! பார்வதி தேவியின் ரூபமாகவும் பராசக்தியின் அவதாரமாகவும் அறியப்படும் இவர், தன் எட்டுக் கரங்களிலும் சித்தர்களை அமர்த்திக் கொண்டுள்ளதோடு, எட்டாவது கரத்தில் கார்க்கினி தேவியை அமுதக்கலசமாகவும் கொண்டு அன்ன வாகனத்தில், ஆயுர்தேவியின் சந்நிதானத்தில் தலைப்பாகை, எழுதுகோல் ஏட்டுடன் அமர்ந்திருக்கும் சிறப்புக் கோலத்திலும் சித்ரகுப்தரைத் தரிசிக்கலாம்! சித்ரகுப்தருக்கு பட்டுப் பீதாம்பரத் தலைப்பாகை வந்து சேர்ந்ததற்கு ஒரு சுவாரஸ்யமான பின்னணியும் உண்டு! ஒருமுறை பலகோடி ஜீவன்களின் கர்மவினைகளைக் கணக்கெழுதும் போது, அவருக்கு பெருத்த ஏமாற்றம் ஏற்பட்டது. அந்த வினைப்பயன் கணக்கில் பெரும் பகுதி தீவினையாகவே இருப்பதைக் கண்டு கலங்கினார். தனது எழுதுகோலால் புண்ணிய ஆத்மாக்களின் கணக்கை எழுதவே முடியாதோ? இது என்ன சோதனை? இப்படி ஒரு இக்கட்டில் சிக்கிக்கொண்டு விட்டோமே என வருந்தியவர், தன் தலையில் ஓங்கிக் குட்டிக்கொண்டார். அவ்வளவு தான்! தன் வேலையில் கண்ணும் கருத்துமாய் இருக்காமல் ஏன் விசாரப்பட வேண்டும் என இறைவன் நினைத்தாரோ என்னவோ, அவருக்கு ஒரு சோதனையை ஏற்படுத்தி வேடிக்கை பார்த்துவிட்டார். அழுத்திக் குட்டிக்கொண்டதில் சித்ரகுப்தருக்கு தீராத மண்டையிடி ஏற்பட்டுவிட்டது.

தாங்கிக்கொள்ள முடியாத வலியால் அவதிப்பட, தனது அன்றாட வேலையில் அவரால் கவனம் செலுத்த முடியவில்லை. அதனால் கர்மங்கள் தேக்கமடைய, அனைத்து லோகங்களும் செயலிழக்க ஆரம்பித்தன. பதற்றமடைந்த சித்ரகுப்தர் ஸ்ரீகிருஷ்ணரை மானசீகமாகத் தொழுது வேண்டிக்கொண்டார். பரந்தாமன் மனமிரங்காமல் இருப்பாரா? சித்ரகுப்தர் முன் தோன்றினான் கேசவன்! சித்ரகுப்தா! தலைவலி ரொம்பப் பலமோ? என்று புன்முறுவலுடன் வினவிய மாயவனை அடிபணிந்த கணக்கர், பிரபோ! என்னை இந்த இக்கட்டிலிருந்து காத்தருளுங்கள் சுவாமி! என வேண்டினார். முறுவலித்த மாதவன், தன் இடையில் அணிந்திருந்த பட்டுப் பீதாம்பரக் கச்சையை அவிழ்த்து, சித்ரகுப்தரின் சிரசில் கிரீடமாக அணிவித்தார். அதுவரை வாடிய முகத்துடன் தென்பட்டவர், மனம் லேசாகிப் போனதை உணர்ந்தார். வாட்டியெடுத்த தீராத் தலைவலி, உடனே அகன்றது. தலைக்கு வந்த வலி, தலைப்பாகையை அணிவித்ததும் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது! அகமகிழ்ந்த சித்ரகுப்தன், மாலவனைத் தொழுதுப் போற்றினார். இன்றிலிருந்து உன்னை வழிபடுவோருக்கு, தங்கள் குறைகளைக் களைந்து அவற்றை நிவர்த்தி செய்துகொள்ளும் பக்குவம் உண்டாகட்டும்! என்ற வரத்தை அருளினார் பரந்தாமன். மறுபடியும் கணக்கர் வேலையில் மூழ்கிவிட்டார் சித்ரகுப்தர். ஆகவே வேணுகானம் இசைக்கும் ஸ்ரீகிருஷ்ணரைத் தினமும் வழிபட்டால், சித்ரகுப்தரின் அருட்பார்வை நம்மீது பரவும் என்பது ஐதீகம்.
கல்வியில் சிறந்து விளங்க செல்ல வேண்டிய கோயில்!

தேர்வில் அதிக மதிப்பெண் பெறவும், கல்வியில் சிறந்து விளங்கவும் திருவாரூர் அருகில் உள்ள விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் உள்ள மதுரபாஷினிக்கு வழிபாடு செய்கின்றனர். சிவனுக்கு வெப்பமான நெற்றிக்கண் இருப்பதைப்போல், இத்தல அம்மன் மதுரபாஷினிக்கு சந்திரனைப் போல் குளிர்ச்சியான நெற்றிக்கண் இருக்கிறது. பங்கிம் சந்திர சாட்டர்ஜியால் எழுதப்பட்ட வந்தேமாதரம் தேசபக்திப்பாடலில் வரும் மதுரபாஷிநீம் என்ற வரிக்கு அடிப்படையான இவள், மனிதனுக்கு தேவையான 34 சவுபாக்கியங்களையும் தரும் ÷க்ஷõடாட்சர தேவியாக, ராஜராஜேஸ்வரியாக, கல்விக்கு அரசியாக அருளுகிறாள். இதனால் இத்தலம் வித்யாபீடமாகக் கருதப்படுகிறது. அகத்தியர் இவளை, ஸ்ரீசக்ர தாரிணி, ராஜசிம்மாசனேஸ்வரி, ஸ்ரீலலிதாம்பிகையே என புகழ்ந்து போற்றியுள்ளார். கல்வி மேல்படிக்க செல்லும் மாணவர்கள் இந்த அம்மனுக்கு தேன் அபிஷேகம் செய்து, அதனை சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி பெருகி அறிவாற்றல் வளரும். அதேபோல் குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்கும் பெற்றோர்கள் மதுரபாஷினிக்கு தேன் அபிஷேகம், சிறப்பு அர்ச்சனை செய்து, அந்த தேனை குழந்தையின் நாவில் தடவி வேண்டிக்கொண்டு, பின்பு பள்ளிகளில் சேர்க்கும் நடைமுறையும் இங்கு உள்ளது.இதனால் குழந்தைகளின் கல்வி சிறக்கும் என்பது நம்பிக்கை. வாய் பேச முடியாதவர்கள், திக்கு வாய் உள்ளவர்கள் மதுரபாஷினி அம்மனை வழிபாடு செய்தால் விரைவில் சிறந்த பலன் கிடைக்கும் என்பது நிச்சயம்.

இருப்பிடம்: திருவாரூர் பஸ் ஸ்டாண்டிலிருந்து தஞ்சாவூர் செல்லும் வழியில் 2 கி.மீ. தூரத்தில் கோயில் உள்ளது. போன்:  98947 81778, 99428 81778.
முறைப்படி நடைபெறும் திருமணத்தின் சடங்குகளின் விபரம்!

நடைமுறையில் உள்ள மாங்கல்ய தாரணத்திற்குப்பின், மணமகன் தன் கீழ் நோக்கிய வலது உள்ளங்கையால், மணமகளின் மேல் நோக்கிய வலது கை ஐந்து விரல்களையும் சேர்த்துப்பிடிப்பது தான் பாணிக்ரஹனம்.

கைத்தலம் பற்றியவாறு அக்னிக்கு வடபுறத்தில் மணமகன் தன் இடது கையால், மணமகளின் கால் கட்டை விரலை பிடித்துக்கொள்ள வேண்டும். அன்னவளமை, உடல் வலிமை, விரதங்களில் சிரத்தை, சுகவாழ்க்கை, செல்வச்செழுமை, பருவ காலங்களில் தன்மை, யாகயக்யஞங்களால் பெருமை என்ற ஏழு பாக்கியங்களையும் விஷ்ணு எப்போதும் அளித்துக் காப்பாராக, என்று கூறி ஏழு அடி எடுத்து வைக்க வேண்டும். இதுவே ஸப்தபதி எனப்படும். இந்த ஏழுடிகளை கடந்து வந்து நாம் நண்பர்களாகி விட்டோம். இனி வாழ்நாள் முழுவதும் அன்புடனும் ஆதரவுடனும் இணைபிரிய மாட்டோம். இன்ப, துன்பங்களைப் பகிர்ந்து மனம் ஒன்றி வாழ்வோம் என்று மணமகன், மணப்பெண்ணிடம் உறுதி மொழி அளிக்கிறான்.
ராமர் பட்டாபிஷேகம் எப்படி நடந்தது?

ஸ்ரீராமபிரானுக்கு பட்டாபிஷேகம் எப்படி நடந்தது? எத்தனையோ ராமயணங்கள் இருந்தாலும், அதில் வால்மீகி ராமாயணத்துக்கு ஒரு சிறப்பு உண்டு. அந்தக் காவியத்தில் ராமனுக்குப் பட்டாபிஷேகம் நடந்ததை வால்மீகி எப்படி வர்ணிக்கிறார்?

அதிகாலையின் அற்புதம் திவ்யமாக இருக்கிறது. மதுரமான இசையாலும், கருவிகளின் ஒலிகளாலும், தங்க ஆபரணங்கள் அணிந்து உத்தமப் பெண்களின் நாட்டியங்களாலும், தாங்கள் எழுப்பப்டுவதைக் கண்டு நாங்கள் சந்தோஷம் கொள்கிறோம்.  வானவீதியில் முழுமையான ஒளிக்கிரணங்களுடன் அனைத்து உலகுக்கும் தேஜஸையும் ஆயுளையும் வழங்கிக் கொண்டிருக்கும் நடுப்பகல் சூரியன் போன்று, தாங்கள் பட்டாபிஷேகப் பெரும் வைபவத்தோடு, சிம்மாசனத்திலிருந்து எங்கள் அனைவருக்கும் அருள்பாலித்து நலம் புரிவதைப் பார்த்துப் பார்த்து மகிழ்ச்சி கொள்கிறோம். பூமி உள்ள வரையிலும் தாங்கள் பரிபாலனம் நடத்த வேண்டும் என்பதே எங்கள் பிரார்த்தனை! இவ்வாறாக பரதன், தலைமீது கரங்களைக் கூப்பியவண்ணமாக ஸ்ரீராமனிடம் வேண்டினான்.

பூஜிதா மாமிகா மாதா
தத்தம் ராஜ்யம் இதம் மம
தத் ததாமி புனஸ் துப்யம்
யதாத்வம் ததா மம

முன்பு எனக்கு அரசு தந்து என் தாயைப் போற்றினாய். அதை அப்படியே உனக்குத் தருகிறேன். பரதனின் சரணாகதியை அயோத்தி ராமனும் ஏற்றார். ஆசனத்தில் அமர்ந்தார். பட்டாபிஷேகத்துக்குரிய பணிவிடைகள் எல்லாம் சீராகத் தொடங்கின. ராம லக்ஷ்மண பரத சத்ருக்னார்களுடைய அலங்காரம் நடந்தேறியது. சீதாதேவிக்கு, தசரத பத்தினிகளே அலங்காரம் செய்தனர். வந்திருக்கும் வானரப் பெண்களுக்கும் அழகு செய்கிறாள் கௌசல்யை.

ததோ வானர பத்னீனாம்
ஸர்வாஸாமேவ சோபனம்
சகார யத்னாத் கௌஸல்யா
ப்ரஹ்ருஷ்டா புத்ரவத்ஸலா

சத்ருக்னருடைய ஆணையின் பேரில் இஷ்வாகு குலத்தின் தேரோட்டியான சுமந்திரர், கம்பீரமான குதிரைகள் பூட்டிய ரதத்தைக் கொணர்ந்தார். கதிரவன் போன்று ஒளிமயமாகக் காட்சிதரும் அந்த ரதத்தில் ஸ்ரீராமன் ஏறி அமர்ந்தார். சுக்ரீவனும் அனுமனும் உடன் சென்றனர். சுக்ரீவன் மனைவியும் சீதாபிராட்டியும், திவ்யமான அலங்காரத்துடன் அவர்களுடனே சென்றனர். ஸ்ரீராமனுக்கு சகல நலங்களும் சுகமும் தனமும் பெருகுவதற்கும், அயோத்தி நகரமும் அந்த நாடும் என்றும் மங்கலம் பெறுவதற்கும் உரிய சுப காரியங்களைச் செய்யுமாறு அனைவரும் வசிஷ்டரிடம் வேண்டினர். அமைச்சர்கள் பின்தொடர ஜய விஜயபீவ என்ற முழக்கம், ஜயகோஷமுமாகக் காற்றுடன் அலை மோதியது. ரகுராமனான, கல்யாண ராமனான, சீதா ராமனான, தசரத ராமனான, கல்யாண குனோஜ்வலனான, பித்ருவாக்ய பரிபாலனான, ஏக பத்னி விரதனான, சர்வஜன ரக்ஷகனான ஸ்ரீராமன் அயோத்தி நகரை நோக்கி வந்து கொண்டிருந்தார். மஞ்சள் கலந்த அட்சதையுடன் பிராமணர்களும் உடன் சென்றனர். பசுக்களும் கோலாகலத்தில் கலந்து சென்றன. குடிமக்களின் குதூகலம் பொங்க, ஸ்ரீராமன் அரண்மனைக்குள் அடியெடுத்து வைத்து, கௌசல்யாதேவி, சுமித்ரா தேவி, கைகேயி தேவி மூவரையும் நமஸ்கரித்தார். சத்ருக்னர், ராமருடைய அபிஷேகத்துக்காக சுக்ரீவனிடம் வானரர்களை அனுப்பப் பணித்தார். பொழுது புலரும் முன் வானரர்கள், ரத்னமும் தங்கமும் இழைத்த குடங்களில், கடலிலிருந்தும் நதிகளிலிருந்தும் புண்ணிய தீர்த்தத்தைக் கொணர்ந்தார்கள். ஜாம்பவான், அனுமன், வேகதர்சீ, சிஷபன் ஆகியோர் ஐந்நூறு நதிகளிலிருந்து புண்ணிய தீர்த்தத்துடன் வந்தார்கள். ஸுஷேணன், ரிஷபன், கவயன், நளன் நால்வரும் முறையே நாலா திசை சமுத்திரங்களிலிருந்தும் புனித நீரைக் கொணர்ந்தார்கள்.

பேரருள் பெற்றவரும் தசரத குல குருவுமான வசிஷ்ட மகரிஷி, புலன்களையும் புத்தியையும் சமன் செய்து, பிராமணர்களின் சம்மதத்துடன் ஸ்ரீராமனை ரத்தின ஒளிவீசும் சிம்மாசனத்தில் அமரும்படி செய்தார்.

ராமம் ரத்னமயே பீட
ஸஹஸுதம் ந்யவேசயத்

பட்டாபிஷேக வைபவம் பவித்திரமாகத் திகழ்ந்தது. வசிஷ்டர், வாமதேவர், ஜாபாலி, காச்யபர், காத்யாயநர், ஸுயஜ்ஞர், கௌதமர், விஜயர் ஆகிய எட்டு மகா ஞானியர்களும் நிகழ்த்திய பட்டாபிஷேகம். எண்மரும் வேதச் சீர்மையுடன் மந்திரங்களை உச்சாடனம் செய்து ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியை மணமிகுந்த திரவியங்கள் கலந்த புண்ணிய தீர்த்தத்தால் நெறிமுறைகளின்படி பட்டாபிஷேகத்தை நிறைவேற்றினார்கள். வானத்தில் திக்பாலர்களும் தேவகணங்களும் பேருவகை கொண்டார்கள். சத்ருக்னர் வெண்குடை பிடித்தார். சுக்ரீவன் வெண் சாமரம் வீசினார். வாயுபகவான் தங்கத் தாமரைகளாலான ஒளி கூடிய மாலைகளையும், ஒன்பது ரத்தினம் சேர்ந்த முத்து மாலையையும் கொணர்ந்தார். பூமி செழித்தது. மரங்களில் கனிகள் நிறைந்தன. பசுக்களையும், கன்றுகளையும், தங்க நாணயங்களையும், ஆபரணங்களையும் ஸ்ரீராமன் தானமாக வழங்கினார். சுக்ரீவனுக்குத் தங்க மாலையையும், அங்கதனுக்குத் தங்கத்தோள் வளைகளையும் வழங்கினார். சீதாதேவியிடம் சந்திரன் போன்று பிரகாசமான முத்துமாலையை வழங்கினார். பிராட்டியும் மணாளனின் விருப்பத்தை ஜாடையால் அறிந்து, அம்மாலையை அனுமனுக்கு அளித்தாள். விபீஷணர், ஸ்ரீரங்க விமானத்தைப் பெற்று லங்காபுரி சென்றார். தசரத குமாரனான ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி, குடிமக்கள் அனைவரையும் தமது குழந்தைகளாக நினைத்து பரிபாலனம் நடத்தி வந்தார். லக்ஷ்மணனை இளவரசாக இருக்கக் கோரினார். லக்ஷ்மணர் இசையவில்லை. பரதனுக்கு இளவரசுப் பட்டம் நிகழ்ந்தது. சிம்மாசனத்தைத் தாங்கி நிற்கிறான் அனுமன். அங்கதன் வாள் ஏந்த, பரதன் வெண்குடை தாங்க, மற்ற இரு சகோதர்களும் சாமரம் வீச, சீதையின் உவகை ஓங்க, வசிஷ்டர் மகுடம் சூட்டுகிறார். அச்வமேதம், வாஜபேயம் போன்ற யாகங்களைப் புரிந்து, ஸ்ரீராமன் ஆட்சி ராமமயமாகவே இருந்தது.
பகவான் பாடிய பகவத் கீதை!

பகவத் கீதா என்பதற்கு பகவான் பாடியது என்று பொருள். கீதம் என்றால் பாட்டு. கீதம் என்று சொல்லாமல் கீதா என்று சொன்னதன் காரணம் என்ன? கீதை உபநிஷத்துகளின் சாரம். உபநிஷத் என்பது பெண்பாலாக உள்ள வட சொல். ஆகவே, கீதா என்பதும் பெண் பாலில் இருப்பது; உபநிஷத்துகளின் மாற்று உருவமே கீதை என்பதைக் காட்டுகிறது. பாண்டவர்களை துரியோதனன் நாடு கடத்திவிட்டான். அவர்கள் வனவாசமும் அஞ்ஞாத வாசமும் செய்து திரும்பினார்கள். பிறகு, தம் ராஜ்ஜியத்தைத் தம்மிடம் ஒப்படைக்கும்படி கிருஷ்ண பகவானைத் துரியோதனனிடம் தூது அனுப்பினார்கள். ஆனால், பேராசை கொண்ட துரியோதனன், பாண்டவர்களுக்கு ஊசிமுனை இடம் கூட தரமாட்டேன் என்றான். இனி, யுத்தம் செய்தே நாட்டைக் கைப்பற்ற வேண்டும் என்று பாண்டவர்கள் முடிவு செய்தார்கள். துரியோதனனும் அர்ஜுனனும் கண்ணபிரானின் உதவியைப் பெறுவதற்காக துவாரகைக்குச் சென்றனர். பகவான், நான் ஆயுதம் எடுப்பதில்லை. நிராயுதபாணியான நான் வேண்டுமா? அல்லது என் சேனை அனைத்தும் வேண்டுமா? என்று கேட்டார். துரியோதனன், அவருடைய சேனையே தனக்கு வேண்டும் என்றான். அர்ஜுனன், கண்ணபிரானின் உதவிதான் தேவை என்றான்.

யுத்தம் தொடங்க, இரு திறத்தாரின் சேனைகளும் அணிவகுத்து நின்றனர். கிருஷ்ணரின் ரதத்தில் அர்ஜுனன் அமர்ந்து, இரு பக்கத்து சேனையில் இருப்பவர்களையும் பார்த்தான். அவர்கள் எல்லோருமே தனது உறவினர்களாகவும் ஆசிரியர்களாகவும் இருப்பதைக் கண்டான். அவனுடைய மனம் கலங்கியது. எனக்குப் போர் வேண்டாம்; அரசு வேண்டாம்; போகங்கள் வேண்டாம்; என்றெல்லாம் பலவாறு வருந்தினான். அர்ஜுனனின் அந்த வருத்தமே, அர்ஜுன விஷாத யோகம் என்ற, பகவத்கீதையின் முதல் அத்தியாயமாக உருவெடுத்தது. இந்த அர்ஜுன விஷாத யோகமே, அடுத்துப் பதினேழு அத்தியாயங்களில் பகவான் சொல்லிய  உபதேசமான பகவத் கீதைக்கு வித்து போன்றது. வித்து என்றால் விதை. வித்தினால் வித் (ஞானோபதேசம்) உண்டாயிற்று. அர்ஜுனனை நிமித்தமாகக் கொண்டு பகவான் உபதேசித்த ஆத்ம ஞானத்தையே பகவத் கீதை என்ற பெயரால் நாம் போற்றுகிறோம். பகவத் கீதை என்பது தனிப் புத்தகமாக எழுதப்பெறவில்லை. மகாபாரதத்தில் பீஷ்ம பர்வம் 25-ஆம் அத்தியாயம் தொடங்கி 42-ஆம் அத்தியாயம் வரையிலான ஒரு பகுதியாகவே பகவத் கீதை அமைந்திருக்கிறது. பாரத: பஞ்சமோ வேத என்றபடி, பாரதம் ஐந்தாவது வேதம். வேதமோ ஞான காண்டம், கர்ம காண்டம் என்று இரு வகையாகப் பிரிந்திருக்கிறது. வேதத்தில் உள்ள ஞான காண்டம் போலவே, பாரதத்திலுள்ள பகவத் கீதை என்பதும் ஞான காண்டமாகும். வேதத்தில்  அந்த பாகத்தை உபநிஷத் என்கிறார்கள்.

ஆகவே, பகவத் கீதையைப் பெரியோர்களிடம் உபதேச ரூபமாக முதலில் கிரகித்து, அதன் பொருளையும் நன்கறிந்து தினந்தோறும் பாராயணம் செய்து வந்தால், சகல உபநிஷத்துகளையும் பாராயணம் செய்வதால் உண்டாகும் நற்பலன்கள் நமக்குக் கிட்டுவது உறுதி. பகவத் கீதைக்கு அன்று முதல் இன்று வரை எத்தனையோ உரைகள் எழுதியிருக்கிறார்கள். அவற்றை ஓரளவு மட்டுமே கணக்கிட்டு, மூவாயிரத்துக்கும் அதிகமான உரைகள் இருக்கின்றன. பகவத்கீதைக்கு சங்கரர், ராமானுஜர், மத்வாசாரியார் என்ற ஆசார்யர்கள் முறையாக எழுதிய பாஷ்யங்களையே உயர்ந்தவையாகவும் குருமூலமாக உபதேச முறையில் கற்றுத் தெரிந்து கொள்ள வேண்டியவையாகவும் கருதிப் போற்றுகிறார்கள். ஸ்ரீ சங்கராசாரியர் அத்வைத சித்தாந்தத்தைப் பின்பற்றியும்; ஸ்ரீராமானுஜர் விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தைப் பின்பற்றியும்; ஸ்ரீமத்வாசாரியர் துவைத சித்தாந்தத்தைப் பின்பற்றியும் கீதைக்கு பாஷ்யங்களை இயற்றியிருக்கிறார்கள். இவர்களுக்குப்பின் இந்த ஆச்சார்ய பரம்பரையில் வந்த சில மகான்கள், இந்த ஆச்சார்யர்களின் கீதா பாஷ்யங்களுக்கு டீகா என்ற விளக்க உரை எழுதியிருக்கிறார்கள். இந்த வைதீக சம்பிரதாய முறையிலான உரைகளைத் தவிர, சமஸ்கிருதத்திலும், கிரீக், ஜெர்மன், லத்தீன், ஆங்கிலம், பிரெஞ்ச், ருஷ்யன் முதலிய பல வெளிநாட்டு மொழிகளிலும், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, மராட்டி, வங்காளி, குஜராத்தி போன்ற நம் நாட்டு மொழிகளிலும் ஆயிரக்கணக்கில் பகவத் கீதைக்கு உரை எழுதியிருக்கிறார்கள். லோகமான்ய பால கங்காதர திலகர் எழுதிய கர்ம யோகம், மகாத்மா காந்தி எழுதிய அநாஸக்தி யோகம், ராஜாஜி எழுதிய கை விளக்கு ஆகிய கீதை உரைகள் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு நம் நாட்டிலும் பிற நாடுகளிலும் பகவத் கீதையின் மகிமையைப் பறைசாற்றுகின்றன.