வெள்ளி, 30 ஆகஸ்ட், 2013

விஷ்ணு புராணம் முதல் அம்சம்(பகுதி-1)




1. புராணம் கேட்ட வரலாறு

18 புராணங்களில் மூன்றாவதாக கருதப்படுவது விஷ்ணு புராணம். இது 23,000 ஸ்லோகங்கள் கொண்டது. ஒருநாள் அதிகாலையில் பராசர முனிவர், காலைக்கடன்களை முடித்துக் கொண்டு, பத்மாசனத்தில் வீற்றிருந்தார். அப்போது மைத்ரேய முனிவர் அங்கு வந்து அவரை வணங்கிக் கூறலானார். என் குருநாதரே! அடியேன் சகல வேதங்களையும் சகல தரும சாஸ்திரங்களையும் வேதாகமங்களையும் தங்களமிடமிருந்தல்லவா கற்றறிந்தேன்? சாஸ்திரங்கள் யாவற்றையும் கற்ற அறிஞர்கள் அனைவரும் என்னைத் தங்களுடைய அனுக்கிரகத்தினாலே சகல சாஸ்திரங்களிலேயேயும் நல்ல பயிற்சி பெற்றவன் என்று சொல்வார்கள். தருமங்கள் அனைத்தையும் அறிந்தவரே! உலகம் உண்டான விதத்தையும் இனி உண்டாகப்போகும் விதத்தையும் நான் அறிய விரும்புகிறேன். தாங்கள் அருள்புரிய வேண்டும்! மேலும், இந்த உலகம் எல்லாம் எந்த வஸ்துவின் சொரூபமாக இருக்கிறது? எங்கிருந்து எப்படி உண்டாயிற்று? எப்படி எங்கே லயப்பட்டது? இனி எங்கே லயமாகும்? நிலம், நீர், நெருப்பு, காற்று, விசும்பு எனும் ஐந்து பருப்பொருட்களில் (பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாசம் என்னும் பஞ்சபூதங்களின் நிலை என்ன? எதனால் அவை விளங்கும்? இவ்விஷயங்களையும் தேவதைகள் முதலானவருடைய உற்பத்தியையும், மலைகள், கடல்கள் இவற்றின் தோற்றத்தையும் பூமியிருக்கும் விதத்தையும் சூரியன், சந்திரன், கோள்கள் ஆகியவற்றின் நிலையையும் அளவுகளையும் தேவர்களின் வம்சங்களையும், மனுக்களையும், மனுவந்தாரங்களையும், மகாகல்பங்களையும், நான்கு யுகங்களால் விகற்பிக்கப்பட்டவையான கல்பங்களின் பிரிவுகளையும் அவற்றின் முடிவு நிலைகளையும், சகல யுகதர்மங்களையும் தங்களிடமிருந்து அறிந்து கொள்ள விரும்புகிறேன்.
ஓ முனிவரில் உயர்ந்தவரே! தேவர்கள், அரசர்கள், முனிவர்கள் முதலானவர்களின் வரலாறுகளையும் வியாச முனிவர் வகுத்தருளிய வேதசாகைப் பிரிவுகளையும் பிராமணன் முதலிய வருணங்களின் குலதர்மங்களையும், பிரமச்சரியம் முதலான நான்கு ஆச்சிரமங்களின் தருமங்களையும் தங்களிடமே நான் கேட்க விரும்புகிறேன். வசிஷ்ட முனிவரின் மகனான சக்தியின் குமாரரே! இவ்விஷயங்கள் யாவற்றையும் எனக்கு கூறியருள தாங்கள் திருவுள்ளங்கொள்ள வேண்டும். இவ்வாறு மைத்ரேய முனிவர் பராசர முனிவரை வேண்டினார். அதற்குப் பராசர முனிவர், அவரை நோக்கிக் கூறலானார். தருமங்களையெல்லாம் அறிந்துள்ள மைத்ரேயரே! உலகஉற்பத்தி முதலியவற்றை அறிந்துள்ள என் பாட்டனாரான ஸ்ரீவசிஷ்ட பகவான் எனக்கு அருளிச்செய்த முன் விருத்தாந்தத்தை நீர் எனக்கு மீண்டும் நினைப்பூட்டினீர். அதாவது, முன்பு ஒரு சமயம், விசுவாமித்ரரால் ஏவப்பட்ட அரகன் ஒருவன் என் தகப்பனாரைப் பழித்தான் என்ற சங்கதியை அறிந்தேன். உடனே மிகவும் கோபம் அடைந்து அந்த அரக்கர்களை அழியச் செய்யும்படியான யாகம் ஒன்றைச் செய்யத் துவங்கினேன். அந்த யாகத்தினால் பல்லாயிரம் அரக்கர்கள் அழிந்தார்கள். அதைக்கண்ட என் பாட்டனாரான வசிஷ்ட முனிவர், பிள்ளாய் உன் கோபத்தை விட்டுவிடு. அரக்கர்கள் மீது குற்றம் இல்லை. உன் தகப்பன் மாய்வதற்கு அப்படிப்பட்ட விதியிருந்தது. இத்தகைய கோபம் மூடருக்குத்தான் தோன்றுமே ஒழிய ஞானியருக்குக் கோபம் வராது குழந்தாய்! யாரால் யார் கொல்லப்படுகிறான்? ஒருவனால் மற்றொருவன் கொல்லப்படுவதில்லை. அவனவன் தான் செய்த பாவ புண்ணியங்களையே புசிக்கிறான். மனிதன் மிகவும் வருந்திச் சம்பாதித்த புகழையும் தவத்தையும் அவனுடைய கோபமானது அழித்து விடுகிறது. சொர்க்கம் மோட்சம் ஆகிய இரண்டையும் கொடுப்பதற்குக் காரணமாகிய கோபத்தை முனிவர்கள் அனைவருமே விட்டு விடுகிறார்கள்.
ஆகையால், பேரனே! நீ அந்தக் கோபத்திற்கு வசப்பட்டு விடாதே! எந்தவிதமான அபராதமும் செய்வதறியாத பேதையரான அரக்கர்களில் அநேகர் இதுவரை எரிந்துபோனது போதும்! இனி இந்த யாகத்தை நிறுத்திவிடு. பெரியோருக்குப் பொறுமையாக இருப்பதே சிறந்த ஆசாரமாகும்! என்றார் நானும் அவருடைய வாக்குக்கு மதிப்பளித்து, என் யாகத்தை நிறுத்தி விட்டேன் அதனால் வசிஷ்ட முனிவர் மகிழ்ச்சியடைந்தார். அப்போது பிரம்ம புத்திரரான புலஸ்திய முனிவர் அங்கு வந்தார். அவர் வந்ததும் என் பாட்டனார் அவருக்கு ஆசனமும், அர்க்கியமும் (இருக்கையும் திருவடி கழுவுதலும்) கொடுத்து உபசரித்தார். மைத்ரேயரே! புலசு முனிவருக்கு தமையனாரான அந்த புலஸ்திய முனிவர் என்னை நோக்கி, பராசரர்! உனக்கு பெருங்கோபமும் வைரமும் இருந்துங்கூட குருவாக்கிய பரிபாலனத்திற்காக, பொறுமையடைந்தாய். ஆகையால் இனிமேல் நீ சகல சாஸ்திரங்களையும் அறியக்கடவாய். கோபத்தால் நமது சந்ததியாரை அழியாமற்செய்த உன் பொறுமையின் பெருமையை பாராட்டி, உனக்கு நாங்கள் வேறொரு வரந்தருகிறோம். அதாவது நீ புராண சம்ஹிதையைச் செய்யும் சக்தியுடையவனாகக் கடவாய்! தேவதையின் உண்மை இயல்புகள் அதாவது இதுதான் மேலான தேவதை என்பதை நீ அறியக்கடவாயாக பிரவிருத்தி, நிவர்த்தி (முயற்சி, நீக்கம்) என்ற இருவகைக் கருமங்களிலேயும் உன் புத்தியானது எமது அனுக்கிரகத்தில் நிலைத்தும், சந்தேகமற்றும் விளங்குவதாக! என்று கூறினார். அவர் கூறுவதைக் கேட்டுக் கொண்டிருந்த வசிஷ்ட முனிவர். என்னைப் பார்த்து பராசரா! புலஸ்தியர் அருளியவை, உனக்குச் சித்தியாகட்டும்! என்றார்.
இவ்விதமாக மகாஞானியரான புலஸ்தியராலும் வசிஷ்டராலும் கூறப்பட்டவையெல்லாம் இப்போது நீர் கேட்ட கேள்விகளால் மீண்டும் என நினைவுக்கு வந்தன. மைத்ரேயரே! பெரியோரின் அருள்பெற்றதால் சிறப்பான ஞானம் பெற்ற நான், யாவற்றையும் உமக்குக் கூறுகிறேன். நன்றாகக் கேளும். புராணக்கருத்தின்படி பார்த்தால், உலகமானது ஸ்ரீவிஷ்ணுவினாலேயே உண்டாக்கப்பட்டு, அவரிடத்திலே தான் இருக்கிறது. தொடர்புக்கும் முடிவுக்கும் அவரேதான் கர்த்தாவாகும். இந்த உலகங்கள் எல்லாம் அவராலேயே வியாபிக்கப்பட்டு, அவருடைய சொரூபமாகவே இருக்கின்றன. அவரேதான் உலகம்! இவ்வாறு மைத்ரேய முனிவரின் கேள்விகளுக்கு பராசர மகரிஷி சுருக்கமாகப் பதில் சொன்னார்.
2. பிரபஞ்ச உற்பத்தி
மைத்ரேயருக்குப் பராசர முனிவர் புராணஞ்சொல்லத் துவங்கி, அதன் முக்கிய விஷயமான ஸ்ரீவிஷ்ணுவைப் பலவகையாகத் துதிக்கலானார். விகாரமற்றவனாய், தூய்மையானவனாய், நித்தியனாய், பரமாத்மாவாய், எப்போதும் மாறாத இயல்புடைய திவ்விய மங்களவிக்கிரகமுடையவனாய், சகலமும் ஸ்வாதீனமாய் இருக்கும்படியான ஜயசாலியான ஸ்ரீமகாவிஷ்ணுவுக்கு என் வணக்கம் உரியதாகுக! படைக்கும்போது ஹிரண்யகர்ப்ப ரூபியாகவும், காக்கும்போது ஹரிரூபியாகவும், சங்கரிக்கிறபோது சங்கர ரூபியாகவும் இருந்து வழிபடுவோருக்கு விடுதலையளிப்பவருமான ஸ்ரீவாசுதேவருக்கு என் வணக்கம் உரியதாகுக! ஒன்றாயும் பலவுமான சொரூபமுள்ளவராயும், காரணவஸ்தையிலேயே ஒன்றாய் சூட்சுமமுமாய் அவ்யக்தமுமான ரூபத்தையும் காரியாவஸ்தையிலே அநேகமாய் ஸ்தூலமாய், வியக்தமுமான ரூபத்தையும் உடையவராகி, அனாதியான பிரகிருதி வாசனையாலே, கட்டுப்பட்ட சேதனங்களுக்கெல்லாம் மோட்ச காரணமான ஸ்ரீவிஷ்ணுவுக்கு என் வணக்கம் உரியதாகுக! படைத்தல், காத்தல், அழித்தல் ஆகியவற்றுக்கு மூலமாய், நிமேöஷான் மேஷ சூரியகமனாதி சகல பதார்த்த ஸ்வரூபமான காலத்தையே தனது சரீரமாக உடையவராயும், அந்தக்காலத்துக்குட்படாத மேன்மையான சொரூபமுடையவராயும், சர்வ வியாபகருமானவருக்கு என் வணக்கம் உரியதாகுக! பிரபஞ்சங்களுக்கெல்லாம் ஆதாரமாய் ஆதிசூட்சுமத்துக்கும் சூட்சுமமான ரூபமாய், எல்லாவற்றினுள்ளும் அந்தரியாமியாய் பிரகிருதி சம்பந்தத்தினாலே குற்றமடையாமல் என்றும் உண்மையான ஞானத்துக்குரியவராய், கல்யாண குணங்களால் புரு÷ஷாத்தமர் என்று வழங்கப்படுபவரான எம்பெருமானைச் சேவித்தேன். தெண்டனிட்டேன். அதன் பிறகு இதனைச் சொல்லுகிறேன்.
பரமார்த்தமாக விசாரிக்குமிடத்தில் சுத்தஞான சொரூபமாய், அஞ்ஞானம், தூக்கம் ஆகியவை இல்லாத அத்தியந்த நிர்மலராய், அனாதிப் பிரகிருதி வாசனையினால் உண்டான பிரமிப்பினால் தேக இந்திரியாதிகளை ஆன்மாவாக நினைப்போருக்கு தேவ, மனுஷ்யாதி ரூபமாகத் தோன்றுபவராய், சேதனங்களிலெல்லாம் வியாபித்து, ஜகங்களைக் கிரகித்து, தனது சங்கல்ப மாத்திரத்தாலேயே, சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரங்களைச் செய்து கொண்டு, தன் திருவுளத்தாலல்லது கருமவசத்தினாலே பிறப்பு இறப்பில்லாதவருமான ஸ்ரீவிஷ்ணு பகவானை தக்ஷப்பிரஜாபதி முதலிய முனிவர்கள் சேவித்து வணங்குகிறார்கள். பிறகு அவர்கள், உலகத்துக்கெல்லாம் படைப்புக் கர்த்தராயும், எம்பெருமானின் நாபிக் கமலத்தில் உதித்தவராயும், யாவற்றின் உற்பத்தி நாசம் முதலியவற்றை அறிந்த உலகத் தந்தையாகவும் விளங்கும் பிரம்மாவினிடம் கேட்க அவர் அருளியதைச் சொல்கிறேன். பிரம்மதேவன் அருளியதை கேட்டறிந்தவர்களான தக்ஷர் முதலிய முனிவர்கள், உள்ளத் தூய்மையுடன் நர்மதை நதிக்கரையில் ஆட்சி புரிந்து வந்த புருகுத்சன் என்ற மன்னனுக்கு, தாம் பிரம்மனிடம் கேட்டவற்றைக் கூறினார்கள். அதை அந்த மன்னன் சாரஸ்வதன் என்ற முனிவருக்கு உபதேசித்தான். அந்த மாமுனிவரின் திருவருளால், நான் அவற்றை அறிந்தேன். இவ்விதமாக, ஆசாரிய பரம்பரை ரீதியில் நான் அறிந்து இந்த மகாபுராணத்தை விளக்கமாக உமக்குச் சொல்கிறேன்.
மைத்ரேயரே! சொரூப குணங்களின் மேம்பட்ட லோகாதிபதிகளுக்குள்ளே உயர்ந்தவர்களான பிரம்மாதிகளில் உயர்ந்தவரும், தன்னை விட உயர்ந்தோரில்லாத வருமாய்ப் பரமாத்மாவாய், சேதனா சேதனங்களுக்கெல்லாம் தானே ஆதாரமாய், தனக்கு வேறெதுவும் ஆதாரமில்லாதவராய் தன்னிடத்திலே தானிருப்பவராய், தேவ மனுஷ்யாதி ஜாதிகளையும் கறுப்பு வெளுப்பு முதலிய வர்ணங்களையும் கிரியைகளையும் திரவியங்களையும் சொல்கின்ற இயல்புகள் இல்லாதவராய் குறைதல். விநாசம், திரிதல், வளர்தல், பிறப்பு என்ற விவகாரங்களை விட்டிருக்கையால், சர்வகாலங்களிலும் அப்பிரமேயங்களான ஞானம், சக்தி, தேஜஸ், பலம் முதலிய ஷட்குண சொரூபத்தோடே இருப்பவர் என்று சொல்லக்கூடியவராய், தோனா சேதனங்கள் யாவற்றிலும் மேலும் கீழும் உள்ளும் புறமும் பக்கமும் தான் வசித்துக் கொண்டு சேதனா சேதனங்களும் தன்னிடத்தில் வசிக்கத்தக்கதாகிய, சர்வலோக வியாபகமான சொரூபமுடையவராய், ஒன்றிலும் ஒட்டாமல் எல்லாமே தன்னால் விளங்கும்படிப் பிரகாசிப்பவராகையால், ஸ்ரீவாசுதேவர் என்ற வேதாந்த அறிஞர்கள் கொண்டாடும்படியிருக்கிறார். சொரூபத்திலும் குணத்திலும் பெருமையுடையவர் ஆகையால் பிரமம், பரமன் என்றும் சொல்லப்பட்டு நித்தியனும் ஜனனரகிதனும் அட்சரனும் எப்பொழுதும் ஒரேவிதமான சொரூபனுமாய், துக்கம் அஞ்ஞானம் முதலிய ஈன குணங்களற்றவராகையினாலே, நிர்மலராய் தோன்றுவதும், தோன்றாததுமான சகல லோகங்களையும் சரீரமாகக் கொண்டவராய், புருஷ ரூபமாயும் கால ரூபராயும் இருக்கிற பரப்பிரம்மம் என்று சொல்லப்படும் பகவான் ஒருவர் உண்டல்லவா? அந்தப் பிரம்மத்துக்குச் சேதனமான ÷க்ஷத்திரக்கியன் முக்கிய சரீரம்.
அறிஞர்கள் பிரதானம், புருஷம், வியக்தம், காலம் ஆகியவை விஷ்ணுவின் தூய்மையும் மிகவுயர்வுடையதுமான நிலை என்று கருதுகின்றனர். இந்த நான்கு நிலைகளும் தக்க அளவுகளின் அமைப்புகளாகப் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகியவற்றை செய்விக்கின்றன. மூலப்பிரகிருதியும், சீவனும், தேவமனுஷ்யாதி வியக்தங்களும், காலமும் வகுத்தபடியே அந்தப் பரமாத்மாவின் சிருஷ்டி, ஸ்திதி, சங்காரங்களினுடைய தோற்றத்திற்கும் விளக்கத்திற்கும் சாதனமான ரூபங்களாக இருக்கும். அது எப்படியெனில் வியக்தமான சராசரங்களும் அவ்வியக்தமான பிரகிருதியும் சேதனமான ÷க்ஷத்ரக்கியனும் களாகாஷ்டாதி ரூபமானகாலமும் ஸ்ரீவிஷ்ணுவினாலேயே தாங்கப்பட்டும் ஆளப்பட்டும் இருப்பதால் அவருக்கே சொரூபமாக இருக்கும். சகல இஷ்டங்களும் நிறைந்துள்ள அவருக்குச் சிருஷ்டி முதலியவற்றை ஏன் செய்ய வேண்டும் என்று நீங்கள் கேட்பீராயின், அதற்கு சொல்கிறேன். விளையாடும் பாலகனுக்கு அந்த விளையாட்டே பயனுவது போல, பரமாத்மாவுக்குச் சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் முதலியவை விலைகளேயன்றி வேறு பயன் கிஞ்சித்தும் இல்லை என்று அறிவீராக. இனிமேல் படைப்புக் கிரமத்தைக் கேளுங்கள்: எம்பெருமானுக்குச் சரீரம் என்று எதைச் சொன்னேனோ, அந்த அவ்வியக்தமானது பிரகிருதி என்றும் பிரதானம் என்றும் மனு முதலானவர்களால் சொல்லப்படுகின்றது. அது சேதனா சேதனங்கள் அடங்கியது ஆகையால் நித்தியமாய். அளவில்லாததாய் தான் அசேதனமாகியும் மரங்களிடத்தில் அக்கினியிருப்பது போலத் தன்னிடத்திலே சேதனங்களான சீவகோடிகள் எல்லாம் இருக்கப்பெற்று, அக்ஷயமுமாய் அப்பிரமேயமுமாய் பகவானேயல்லாது வேறு ஒரு ஆதாரமுமற்றதாய், நிச்சலமாய், சப்த, ஸ்பரிச, கந்த, ரூப, ரச, கந்தங்கள் இல்லாததாய், சத்துவ, ரஜஸ், தாமச குணத்துமகமாய், ஜகத்துக்குக் காரணமாய் காரணம், உற்பத்தி, விநாசம் என்ற இம்மூன்றும் இல்லாததாக இருக்கும்.
இந்த சிருஷ்டிக்குப் பூர்வத்தில், மகாப்பிரளயமானவுடனே அதனாலேயே யாவும் வியாபிக்கப்பட்டிருந்தது. மைத்ரேயரே! வேதாந்தத் தத்துவ பிரமவாதிகள், பிரதானத்தை தெரிவிப்பதான இந்தப் பொருளையே சொல்வார்கள். எப்படியெனில், அப்பொழுது பகலும் இரவும் ஆகாயமும், பூமியும், காற்றும், நீரும், சூரிய சந்திராதி ஜோதிகளும் இருளும், சாத்துவிக, தாமச, ராஜசகுண விலாசங்களும் மற்றுமுண்டான வஸ்துக்கள் ஒன்றும் இல்லாமல் மூலப்பிரகிருதி ஒன்று மட்டுமே சமஷ்டி புருஷ ரூபமாக இருந்தது. எல்லாவற்றிற்கும் மேம்பட்டதான அந்த ஸ்ரீவிஷ்ணு ஸ்வரூபத்தினின்று, பிரதானம் என்கிற பிரகிருதியும் புருஷன் என்கிற ஆத்துமாவும் உண்டாகி, சிருஷ்டிக்கு உபயோகமான சேர்க்கையில்லாதவைகளாய், அந்த எம்பெருமானுடைய எந்த ரூபத்தினால் தரிக்கப்பட்டிருந்தனவோ அது அவருக்குக் காலம் என்கின்ற பெயரையுடையதான ஒரு சொரூபமாக இருக்கும். மைத்ரேயரே! வியக்தமான மகத்தகங்காராதிகள் அந்தப் பிரகிருதியில் இருக்கும். பிரகிருதியும் பரமாத்மாவிடத்தில் லயப்பட்டதனால் மகாப்பிரளயத்துக்குப் பிராகிருதப் பிரளயம் என்றும் பெயருண்டு. அந்தக் காலம் அனாதியானது. அந்தக் காலத்துக்கு எப்போதும் முடிவில்லாமையினாலே, சிருஷ்டி ஸ்திதி, சங்காரங்கள் அவிச்சின்ன பிரவாக ரூபமாய்ப் பிரவர்த்திக்கின்றன.
மைத்ரேயரே! பிரகிருதி சமகுணமாகவும் புருஷன் வேறாகவும் இருக்குமிடத்தில் விஷ்ணுவின் ஸ்வயரூபமான காலமானது சிருஷ்டிக்கு அனுகூலமாகப் பிரவர்த்திக்கிறது. பிறகு பரப்பிரமமும் பரமாத்மாவும் செகன்மயனும், சர்வக்தனும் சர்வபூதேஸ்வரனும் சர்வாத்மகனும், பரமேஸ்வரனுமான ஸ்ரீஹரி, தன்னிச்சையினாலேயே லீலார்த்தமாகப் பிரகிருதி புருஷர்களிடத்தில் பிரவேசித்து, ஒன்றுக்கொன்று ஏற்றத்தாழ்வில்லாமல் சமமாக இருக்கிற சத்துவ, ராஜஸ, தாமச குணங்களுக்கு வைஷம்மியங்களைக் கற்பித்து, பிரகிருதி புருஷர்களுக்குச் சலனமுண்டாக்கி அருளினார். எப்படி வாசனையானது அதிகம்பீரமான மனதுக்கு தன் சான்னித்யத்தினாலேயே விகாரத்தை உண்டு பண்ணுகிறதே அல்லாது யாதொரு தொழிலையும் செய்வதில்லையோ, அது அல்லாது யாதொரு தொழிலையும் செய்வதில்லையோ, அது போலவே பரமேஸ்வரன் தன் சான்னித்ய விசேஷத்தாலேயே பிரகிருதி புருஷர்கள் பிரபஞ்சத்தைப் படைப்பிக்கக் கலக்குகிறான். வாசனையானது மனோவிகாரத்துக்கு நிமித்தம். பரமாத்மாவோ பிரபஞ்சத்துக்கு நிமித்தகாரணம் மட்டுமல்ல தானே சலனமுண்டாக்குகிறவனாய், சலிப்பிக்கப்படுவதுமான பிரகிருதி புருஷ ஸ்வரூபமாகத் தானே ஆகின்றான். ஆகையால் உபாதான காரணமும் அவனே! சூட்சும ரூபமும் ஸ்தூல ரூபமுமான பிரகிருதியும், வியஷ்டி சமஷ்டி ரூபமான பிரம்மாதி ரூபங்களும் வியக்தமாயும் அவ்வியக்தமாயும் இருக்கின்ற பிரபஞ்சமும் மூலப்பிரகிருதியும் சர்வேசுரனாய் புரு÷ஷாத்தமானாயிருக்கின்ற விஷ்ணுவின் ஸ்வரூப மாகையினாலே, காரியமான செகத்தும் அவனன்றி வேறல்ல. இது நிற்க.
மைத்ரேயரே! ஜீவனுடைய கர்மவசத்தினாலே சலனப்பட்ட பிரகிருதியினின்றும் சத்துவ, ராஜச, தாமஸ, குண வைஷம்மிய ரூபமான மகத்தத்துவம் உற்பத்தியாயிற்று. பராத்பரனான ஸ்ரீவிஷ்ணுவினுடைய சரீரமான பிரகிருதியானது. தன்னால் உண்டான மகத்தத்துவத்தை மூடிக்கொண்டது. அந்த மகத்தத்துவம் சாத்வீக ராஜச, தாமசம் என்ற குணத்திரயத்தை கொண்டதாய், விதையானது மேற்புறம் தோலால் மூடப்பட்டிருப்பதைப் போல பிரகிருதியினால் மூடிக்கொள்ளப்பட்டது. அப்பால், அந்த மகத்தத்துவத்திலிருந்து வைகாரிகம், தைஜஸம், பூதாதிகள் என்ற மூன்றுவித அகங்காரம் பிறந்தது. அதில் சாத்விக அகங்காரம் வைகாரிகம் ஆகும். ராஜச அகங்காரம் தைஜஸம் ஆகும். தாமஸ அகங்காரம் பூதாதி என்று சொல்லப்படும். அந்த அகங்காரங்கள் திரிகுணாத்மகமான படியினாலே, பஞ்ச பூதங்களுக்கும் இந்திரியங்களுக்கும் ஏதுவாக இருக்கும். பிரகிருதியினாலே மகத்தத்துவம் மூடப்பட்டது போல அகங்காரம் மகத்தத்துவத்தினாலே மூடப்பட்டு இருந்தது அதில் பூதாதி என்று வழங்கப்பட்ட தாமச அகங்காரம் விகாரப்பட்டு, சப்த தன்மாத்திரையை உண்டாக்கிற்று. அதிலிருந்து, சப்தத்தை லக்ஷணமாகக் கொண்ட ஆகாசம் பிறந்தது. அந்த ஆகாசம் தாமச அகங்காரத்தாலே மூடிக்கொண்டது. அந்த ஆகாசம் விகாரப்பட்டு, ஸ்பரிச தன்மாத்திரையை உண்டாக்க, அதனால் காற்று தோன்றியது. அந்தக் காற்றுக்கு ஸ்பரிசம் குணமாகும். அந்த ஸ்பரிச தன் மாத்திரையான வாயுவும் ஆகாசத்தாலே மூடப்பட்டது. அந்த வாயு விகாரப்பட்டு ரூப தன்மாத்திரையை உண்டாக்கிற்று. அதனால் தேஜசு பிறந்தது. அந்த தேஜசு அசாதாரணமான குணத்தையுடையது.
ஸ்பரிச தன்மாத்திரையினாலே ரூப தன்மாத்திரையான தேஜசு மூடப்பட்டுள்ளது. தேஜசு விகாரப்பட்டு ரச தன்மாத்திரையை உண்டாக்கிற்று. அதிலிருந்து அப்பு பிறந்தது, ரச தன்மாத்திரையான அப்புவும், ரூப தன்மாத்திரையினாலே மூடப்பட்டது. அந்த அப்பு விகாரப்பட்டு, கந்த தன்மாத்திரையை உண்டாக்கிற்று. அதனால் பிருத்வி பிறந்தது. பிருதிவிக்குக் கந்தம் அசாதாரண குணமாக இருக்கும் சூட்சுமம் கண்ணுக்குப் புலனாகாதபடியினால் பஞ்சமகாபூத காரணங்களான சப்த, ஸ்பரிச, ரூப, ரச, கந்தங்களுடனே கூடிய சூட்சும பூதங்கள் தன்மாத்திரைகள் என்று சொல்லப்படும் ஸ்தூலங்களான ஆகாசாதி பூதங்களிலே சப்தாதி குணங்கள் விகசிதமாய்க் காணப்படும். தன்மாத்திரைகள் அதிநுண்ணியதாய் சரீரலகுத்துவமும், அற்புதப் பிரகாசமும், பிரசன்னத்துவமும் உண்டாக்குகிற சாந்தமான சாத்வீக குணமும், வியாகுலமும் நானாவித வியாபாரங்களும் உண்டாக்குகின்ற கோரமான ராஜசகுணமும், நித்திரையும் ஆலசியமும் உண்டாக்குகின்ற மூடமான தாமச குணமும் இல்லாதிருக்கும். இவ்விதமாக ஆகாசாதி பூதங்களும், தன்மாத்திரைகளும் பூதாதியென்று வழங்கப்படும் தாமச அகங்காரத்தால் பிறந்தன தைஜசம் என்று வழங்கப்பட்ட ராஜச அகங்காரத்தால் இந்திரியங்கள் உண்டாயின என்று சிலர் கூறுவார்கள். வைகாரிகம் என்று சொல்லப்பட்ட சாத்வீக அகங்காரத்தால் இந்திரியங்கள் பிறந்தன என்றும் சிலர் கூறுவார்கள். இந்த இரு பக்ஷங்களிலேயும் மனதுடன் பதினோரு இந்திரியங்கள் சாத்வீக அகங்காரத்திலே பிறந்தன என்பதே நிச்சயம். ராஜச அகங்காரம், சாத்வீக தாமச அகங்காரங்கள் இரண்டுக்கும் சகாயமாக இருக்கும்.
இனி, இந்த ஞானேந்திரியங்கள், கர்மேந்திரியங்கள் ஆகியவற்றின் சொரூபத்தைக் கேளுங்கள்! மெய் கண், மூக்கு, வாய், செவி என்ற இவ்வைந்தும் ஞானேந்திரியங்கள்! இவற்றுக்கு ஸ்பரிசம், ரூபம், கந்தம், ரசம், சப்தம் என்ற இவ்வைந்தும் போக்கிய பதார்த்தங்கள், வாக்கு, பாணி, பாதம், பாயு, உபஸ்தம் முதலிய ஐந்தும் கர்மேந்திரியங்கள், வசனம், கர்மம், கமனம், சொர்க்கம், ஆனந்தம், இன்னுமிவை ஐந்தும் அவ்வைந்துக்கும் காரியங்கள், ஆகாயம், வாயு, தேயு, அப்பு, பிரிதிவி என்ற பூதங்கள் தமக்கு அசாதாரண குணமான சப்த, ஸ்பரிச, ரூப ரச, கந்தங்கள், (பூமியில் ஐந்தும், நீரில் நான்கும், தீயில் மூன்றும், காற்றில் இரண்டும், வானில் ஒன்றும்) தாங்கள் மேன்மேலும் அதிகமாகப் பெற்று, அன்னியோன்னிய சையுக்தமாய்ச் சாத்வீக, ராஜச, தாமச குணாத்மகங்களான படியால், சாந்தங்களாயும் கோரங்களாயும் மூடங்களாயும் சிறப்புற்று விளங்கும். இந்த விதமாகப் பிறந்த பஞ்சபூதங்களும் நானாவித சக்தி யுக்தங்களாய் ஒன்றோடொன்று கலந்து ஐக்கியமாயின. அதெப்படியென்றால், பிரிதிவியில் அப்புவும், தேயுவும், வாயுவும், ஆகாயமும், ஜலத்தில் பூமி, தேயு, வாயு, ஆகாயமும், தேயுவில் பிருதிவி, அப்பு வாயு, ஆகாயமும், ஆகாயத்தில் பிருத்வி, அப்பு தேயு மாருதங்களும் கலந்தன. இதுவே பஞ்சீகரப் பிரகாரம் இவ்விதமாக அன்னியோன்னியமாகக் கலந்ததனாலே பிரம்மாண்டத்தைச் சிருஷ்டிப்பதற்கும் நான்குவதைப் பிறவிகளைச் சிருஷ்டிப்பதற்கும் சாமர்த்தியமுடையவைகளாய், ஜீவனுடைய கர்ம விசேஷத்தினாலும் பிரகிருதி மகத்தகங்கார தன்மாத்திரைகளின் சையோகத்தினாலும் ஈசுவர சங்கல்பத்தினாலும் பிரமாண்டத்தை உண்டாக்கின.
இப்படி, பஞ்சபூதங்களினாலே பிறந்த அந்த அண்டம் நீர்க்குமிழி போல ஒரு கணப்பொழுதிலே அபிவிருத்தியாயிற்றேயல்லாமல் கிரமக் கிரமமாக அபிவிருத்தியாகவில்லை, இவ்விதமாகப் பிரகிருதியினாலே உண்டான அதிவிசாலமான பிரமாண்டம் பிரகிருதி சரீரகரான ஸ்ரீவிஷ்ணு பகவானுக்கு லீலா ஸ்தானமாய் மகா ஜலத்திலே மிதந்து கொண்டிருந்தது. இவ்விதமாகப் பிறந்த பிரம்மாண்டத்தில் பிரகிருதி சொரூபனும் மகத்தகங்காரத் தன்மாத்திரா மகாபூத சரீரகனும் ஜகதீச்வரனுமான விஷ்ணுதேவர் சதுர்முக ஸ்வரூபமாய்த் தானே அவதரித்தார். அந்த அண்டத்துக்கு மேருமலையானது உல்ப்பம்; மற்ற மலைகள் ஜராயு; சமுத்திரங்கள் கர்ப்போதகமுமாகும். உல்ப்பம் என்றால் கருவை சுற்றியுள்ள ஆடையைப் போன்ற ஒன்றாகும். ஜராயு வென்றால் அதன்மீது சுற்றியிருக்கிற கருப்பை, கர்ப்போதகமாவது அதிலிருக்கும் தண்ணீர் அந்தப் பிரமாண்டத்தில் மலைகள், தீவுகள், சாகரங்கள் ஜோதிச் சக்கரங்கள், மனுஷ்யர், தேவர், அசுரர் ஆகியவை பிறந்தன. இப்படியுண்டான பிரம்மாண்டத்தை கவிந்து, ஒன்றுக்கொன்று தசகுணோத்தரமான சகலமும் அக்கினியும் காற்றும் ஆகாயமும் தாமச அகங்காரமும் மகத்தத்துவமாகிய சத்தாவரணங்களும் இருக்கின்றன. எப்படி தேங்காயானது நார் மட்டை ஆகியவற்றால் கவியப்பட்டிருக்கிறதோ அதுபோலவே, பிரம்மாண்டமும் சத்தாவரணங்களாலே கவியப்பட்டுள்ளது. அந்த அண்டத்தில் விசுவரூபமான நாராயணர், பிரமரூபியாகி, ரஜோகுணத்தைப் பிரதானமாகவுடையவராய் தேவ, அசுர, கந்தர்வ மனுஷ்ய, பசு, பக்ஷி தாவரங்கள் ஆகியவற்றைப் படைத்துக் கொண்டு, அப்பிரமேயப் பராக்கிரமனும் சட்குண ஐசுவரிய சம்பன்னனுமான தானே சாத்வீகக்குணப் பிரதானனாய், லீலார்த்தமாக யுகங்கள் தோறும் நானாவிதமான திவ்விய அவதாரங்களைச் செய்து கல்பாந்தர பரியந்தமும் ஜகத்தைப் பரிபாலனம் செய்து கொண்டும், பிரளய காலத்தில் தாமச குணப் பிறதானனாய் ருத்திர ரூபியாகிறான். அப்பொழுது அதிபயங்கரனாய் சராசரங்களான அகில பூதங்களையும் விழுங்கி, மூவுலகங்களையும் ஏகார்ணவமாகச் செய்து, ஸஹஸ்ர பணு மண்டல மண்டிதனான ஆதிசேடனாகிய படுக்கையில், சயனித்துக் கொண்டு பிறகு பிரளயாந்தத்தில் திரும்பவும் எழுந்திருந்து பிரமரூபியாகி, முன்போலவே, பிரபஞ்சத்தை படைத்தருள்வான்.
ஷட்குண சம்பன்னனான ஜனார்த்தனன் ஒருவன், அந்தந்தச் சொரூபங்களில் நின்று, சிருஷ்டி ஸ்திதி சங்காரங்களைச் செய்வதனால், பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் என்ற திருப்பெயர்களைப் பெறுகின்றான். அந்தப் பகவான் தானே சிருஷ்டி கர்த்தாவாக இருந்து சராசர சரீரகனாக தன்னைத் தானே சிருஷ்டித்துக் கொள்கிறேன் அப்படியே தானே காக்கின்றான். யுகமுடிவில் தானே சங்கரிக்கின்றான். ஆகையால் சிருஷ்டி கர்த்தாவாகவும் சங்கார கர்த்தாவாகவும் தோற்றுகிறவர்களுக்கும் சிருஷ்டிக்கப்படுவதும் சங்கரிக்கப்படுவதுமாகத் தோற்றுபவைகளுக்கும் தாரதம்மியம் ஒன்றும் இல்லை. ஏனெனில் பிருத்வி அப்பு, தேயு, வாயு ஆகாயங்களும் இந்திரியங்களும் மனமும் ÷க்ஷத்ரக்ஞனுமாகிய சக்ல பிரபஞ்சங்களும் அந்த ஸ்ரீமந் நாராயணனேயாம்! எப்படியெனில் சகல பூதங்களுக்கும் ஆன்மாவாய், எல்லாவற்றையும் தனக்கு சரீரமாகவுடையவனாகையால் கை, கால் முதலிய சரீரத்தின் செய்கை, சரீரியான ஆன்மாவுக்கு உபகாரமாவது போல, பிரம்மாதிகள் செய்கின்ற சிருஷ்டி முதலியவை யாவும் அவனுக்கு உதவியாக இருக்கும். இனிமேல், நான் சொன்னவற்றையெல்லாம் சுருக்கமாகச் சொல்கிறேன். அதாவது, சேதனாசேதனங்களான சகல பிரபஞ்சங்களும், சரீரமாயிருப்பதான சொரூபமுடையவனாகையாலே பிரமாதி ரூபங்களில், படைப்பவன் அவன் ! படைக்கப்படுபவனும் அவன்! காப்பவன்-அவன். காக்கப்படுவோனும் அவன்! சங்கரிக்கிறவன் அவன்; சங்கரிக்கப்படுகிறவனும் அவனே! ஆனால் தான் சர்வசக்தனாக இருக்கும்போது, பிரம்மாதிகளை இடையில் வைப்பது ஏனெனில் அவர்களுக்கு அப்படிச் செய்யும்படி அவனே வரங்கொடுத்திருக்கிறேன். ஆகையால் தான், மைத்ரேயரே! அந்த ஸ்ரீமகாவிஷ்ணுவே சகல விதத்திலும் உபாசிக்கத் தக்கவனாக இருக்கிறான்!
3. காலப் பிரமாணம்
பராசர முனிவரே! நிர்க்குணமும் அப்பிரமேயமும் தூய்மையும் நிர்மலமுமான பரப்பிரம்மத்திற்குச் சிருஷ்டி. ஸ்திதி சங்காரம் முதலியவற்றின் கர்த்தாவாகும் தன்மை எப்படிக்கூடும்? என்று மைத்ரேயர் கேட்டார். பராசர மகரிஷி கூறலானார் : மைத்ரேயரே! அக்கினிக்கு உஷ்ணம் இயல்பாக இருப்பது போலவே சர்வ பூதங்களுக்கும் அதனதன் சக்தி சிறப்புகள் அநேகம் உண்டு. அதுபோலவே, எம்பெருமானாருக்கும் படைத்தல் முதலியவைகளுக்குக் காரணமான சக்திகள் உண்டு. அதனாலே பரமாத்மா சிருஷ்டி, ஸ்திதி, லயங்களைச் செய்தருள்கிறான். ஸ்ரீமந் நாராயணன் பிரபஞ்ச, சிருஷ்டி உண்டாக்கிய விதத்தைச் சொல்கிறேன். நாராயணன் என்ற திருநாமமுடைய பகவான் உலகங்களுக்குப் பிதாமகனான பிரம்மாவாக அவதரித்தான் என்று உபசாரத்தினால் சொல்லப்படுவது மகாப்பிரளயத்தில் ஸ்ரீமந்நாராயணனுடைய திருமேனியில் பிரவேசித்திருந்து மீண்டும் தோன்றுவதனால் தான் என்பதை அறிந்துகொள்ளும் அந்தப் பிரம்மாவுக்கு அவருடைய அளவில் நூறாண்டுக்காலம் ஆயுசு உண்டு. அதற்கு பரம என்று பெயர். அதில் பாதி ப்ரார்த்தம் என்று சொல்லப்படும் காலமானது விஷ்ணு சொரூபம் என்று முன்பே சொன்னேன் அல்லவா! அந்தக் காலத்தினாலே சதுர்முகப் பிரும்மனுக்கும் அந்தியம் உண்டாகும். அதனால் மலைகள், சமுத்திரங்கள் முதலிய சகல சராசரங்களுக்கும் வளர்தல், நசித்தல் முதலியவை உண்டாகும்.
இது இப்படியிருக்க இனி காலப் பிரமாணத்தின் இயல்பைக் கூறுகிறேன். மைத்ரேயரே! நிமிஷகள் பதினைந்து கூடியது ஒரு காஷ்டை; அந்தக் காஷ்டை முப்பதானால் அது ஒரு கலை, அந்தக் கலைகள் முப்பதானால் ஒரு முகூர்த்தம், அந்த முகூர்த்தம் முப்பதானால் அது மனுஷ்யர்களுக்கு ஒரு அகோராத்திரம்; அதாவது ஒருநாள். அந்த அகோராத்திரங்கள் முப்பதானால் இரண்டு பக்ஷங்களோடு கூடிய ஒரு மாதம் அந்த மாதம் பன்னிரண்டானால் தட்சணாயனம் உத்திராயணம் என்ற இரண்டு அயனங்கள் சேர்ந்து ஒரு வருஷமாகும். தட்சணாயனம் தேவர்களுக்கு இரவாகவும் உத்தராயணம் பகலுமாகவும் இருக்கும். தேவமானத்தில் பன்னீராயிரம் ஆண்டுகளானால் அது ஒரு சதுர்யுகம். அதில் கிருதயுகம் நாலாயிரமும் சந்தி, சந்தியம்சங்கள் எண்ணூறு திவ்விய சம்வச்சரமுமாக இருக்கும். திரேதாயுகம் சந்தி சந்தியம்சங்கள் உட்பட மூவாயிரத்தறு நூறு ஆண்டுகள், துவாபரயுகம் சந்தி, சந்தியம்சங்கள் உட்பட இரண்டாயிரத்து நானூறு தேவ ஆண்டுகள். கலியுகத்திற்கு ஆயிரமும் சந்தி சந்தியம்சங்களின் ஆண்டுகள் இருநூறுமாக இருக்கும் சந்தியாவது யுகத்துவக்கத்திற்கு முந்தியகாலம் சந்தியம்சமாவது யுகத்திற்குப் பிற்பட்ட காலம் சந்தி சந்தியம்சங்களுக்கு இடைப்பட்ட காலமானது, கிருத, திரேதா, துவாபர, கலி என்ற பெயர்களைப் பெற்று யுகம் என்று வழங்கப்படுகிறது. இந்த விதமான கிருதத்திரேதா துவாபர கலியுகங்கள் என்கின்ற சதுர்யுகங்களும் ஆயிரந்தரம் திரும்பினால் சதுர்முகனாகிய பிரமனுக்கு ஒரு பகல் என்று சொல்லப்படும். அந்த சதுர்முகனுடைய தினத்தில் பதினான்கு மநுக்கள் அதிகாரம் செய்வார்கள். இனி அந்த மநுவந்தரப் பிராமணத்தைக் கூறுகிறேன், கேட்பீராக;
மைத்ரேயரே! சப்தரிஷிகளும், வசு, ருத்திராதியர் ஆகிய தேவதைகளும், இந்திரன் மநுக்கள், மநு புத்திரரான அரசர்கள் ஆகியவர்களும் ஏககாலத்தில் சிருஷ்டிக்கப்படுவார்கள். ஏககாலத்திலே சங்கரிக்கப்படுவார்கள். தேவமானத்தில் எழுபத்தோரு மகாயுகம் ஒரு மநுவந்தரம் என்று சொல்லப்படும். இந்திராதி நூறு தேவதைகளுக்கும் மநுக்களுக்கும் இதுவே ஆயுட் பிரமாணமாகும். ஒரு மநுவந்தரத்துக்கு தேவமானத்தில் எட்டு லட்சத்து ஐம்பத்தீராயிரம் ஆண்டுகள் அளவாகும். அது மனுஷிய மானத்தினாலே, முப்பது கோடியும் அறுபத்தேழு லட்சத்து இருபதினாயிரம் ஆண்டுகள் ஆகும். இப்படிப் பதினாலு மநுவந்தரங்களானால் பிரமனுக்கு ஒரு பகல் இதன் முடிவில் ஒரு நைமித்திகப் பிரளயம் உண்டாகும். அந்தத் தினப் பிரளயத்தில், பூலோக, புவர்லோக சுவர் லோகங்கள் தகிக்கப்பட்டு நாசமடையும் அப்போது மகர் லோகத்தில் வாசஞ் செய்பவர்கள், அந்தப் பிரளயாக்கினி ஜ்வாலையின் கனல் வேகத்தைப் பொறுக்க முடியாமல் தங்கள் லோகத்தைவிட்டு ஜனலோகத்துக்குச் செல்வார்கள். அதன் பிறகு, சப்த சாகரங்களும் பொங்கித் திரிலோகங்களையும் ஏகார்ணவஞ் செய்யும் அந்தச் சமயத்தில் நாராயணாத் மகனான ஹிரண்யகர்ப்பன், திரிலோகங்களையும் விழுங்கிய எம்பெருமானுடைய அநுப்பிரவேசத்தினால் பருத்தவனாகி, அவனுடைய நாபிக்கமலத்தில் இருப்பதால், ஆதிசேடனாகிய சயனத்தில் சயனித்துக் கொண்டு ஜனலோக நிவாசிகளான யோகிகளால் தியானிக்கப்பட்டவனாய், முன்பு சொன்ன பகல் ராத்திரியளவு யோக நித்திரை செய்தருளுவன். இதுபோல் ஆயிரம் சதுர்யுகப் பிரமாணமான ராத்திரியும் கடந்த பிறகு பிதாமகன் மீண்டும் சராசரங்களை படைப்பான். இப்படிப்பட்ட தினங்களைக் கொண்ட ஆண்டுகள் நூறு ஆனால் சதுர்முகப் பிரமனின் ஆயுள் முடியும் அதில் ஐம்பது ஆண்டுகள் பரார்த்தம் என்று சொல்லப்படும். முன்பு ஒரு பரார்த்தமாயிற்று. அது பிரமனின் ஆயுளில் பாதியாகும். இப்போது இரண்டாவது பரார்த்தம் நடக்கிறது. இதுவராக நாமகமான முதலாவது கல்பமாகும். இது ஸ்ரீவராக கல்பம்!
4. ஸ்ரீவராஹ அவதார வைபவம்
குருநாதரே! நாராயணன் என்ற திருநாமத்தைக் கொண்ட அந்தப் பிரம ஸ்வரூபியான பகவான். இந்தக் கல்பத்தின் துவக்கத்தில் சர்வ பூதங்களையும் எந்தவிதம் படைத்தார் என்பதையும் முந்திய பாத்தும கல்பத்தைப் பற்றிய பிரளயத்துக்குப் பிற்பட்டதான இந்த வராக கல்பப் படைப்பைப் பற்றியும் எனக்கு விளக்க வேண்டுகிறேன் என்று மைத்ரேயர் கேட்டார். பராசர மகரிஷி கூறலானார். மைத்ரேயரே! பிரஜாபதிகளுக்கு அதிபதியாய், நாராயணத்துமகனாய், தேவ தேவனுமான அந்தப் பிரமரூபியான பகவான், பிரஜைகளைப் படைத்த விதத்தைக் கூறுகிறேன். முன்பு சொன்னது போல சதுர்யுக சஹஸ்ர சங்கையான இரவெல்லாம் யோக நித்திரை செய்து, விடியற்காலத்தில் நித்திரை தெளிந்து பிரபோதம் அடைந்து, சத்வகுணம் மேலிட்டவனாகிய சதுர்முகப் பிரமன், சூனியமான மூன்று உலகங்களையும் படைக்கத் திருவுள்ளம் கொண்டான் பராத்பரனும் ஷட்குண சம்பன்னனும் அனாதியும் சர்வ ஜகத்காரண பூதனும் சதுர்முக ஸ்வரூபனுமான அந்த ஸ்ரீமந்நாராயண மூர்த்தியே சகல லோகங்களுக்கும் பிரபு ஆவார். படைப்புக் காலத்தில் அவரே பிரமாவினிடத்தில் அனுப்பிரவேசித்துப் படைப்பைப் படைக்கின்றார்.
அவர், மகாஜலத்திலே சயனித்திருந்தார் அல்லவா? அதனால் மநுவாதி ரிஷிகள், நாராயண சப்த நிர்வசனத்தை தெரிவிக்கிற சுலோகத்தை அருளிச் செய்தார்கள். நரசப்த வாச்சியனனான பரமாத்மாவினிடத்தில் ஜனித்த உதகங்கள் நாரங்கள் என்று சொல்லப்படும். ஏனென்றால் அவை நாராயணருக்குப் பிறப்பிடமான படியினாலும் அவரிடமிருந்து அவை தோன்றியதாலும், அவை பிரம்மனின் முதலாவது சயனத்தில் நிகழ்ந்ததாலும் அவர் நாராயணன் என்று வழக்கப்பட்டார். இத்தகைய திவ்வியத் திருநாமமுடைய எம்பெருமான் நீர் மீது தாமரை இலை ஒன்று மிதக்க கண்டு, ஏகார்ணவமான பிரளயயோகத்தில் பூமியானது மூழ்கியுள்ளதாக முடிவு செய்து, அதனை மேலேயெடுக்க முந்தைய கல்பங்களின் மஸ்ய, கூர்மாதி திவ்விய அவதாரங்களைச் செய்தருளியது போல; இந்தக் கல்பத்தில் ஸ்ரீவராகவதாரம் எடுக்க விழைந்தார். அத்தகைய திருவவதாரத்தை, வேதங்களால் சொல்லப்பட்ட யாகாதிகர்மங்களால் நிரூபிக்கத் தக்கதாகவும், சர்வலோக ரக்ஷணர்த்தமாகவும் தாம் மேற்கொண்டு, ஜனக ஸனந்தனாதி யோகிகளால் வேதவசனங்களால் துதிக்கப் பெற்று, தமக்குத் தாமே ஆதாரமாகி, ஏகார்ணவ பிரளயோதகத்தில் பிரவேசித்தருளினார். இவ்விதமாகப் பூமியாகிய தன்னை உத்தரிப்பதற்காகப் பாதாளத்திற்கு எழுந்தருளிய எம்பெருமானை. பூதேவியானவள் வணங்கி பக்திபூர்வமாகத் துதிப்பாளாயினள்.
பூதேவியின் துதி : தாமரை போன்ற திருவிழிகளையுடையவனே! சங்குசக்கரகதாதி திவ்விய ஆயுதமுள்ளவனே! உனக்குத் தெண்டன் சமர்ப்பிக்கிறேன். பூர்வத்தில் மகார்ணவத்தில் மூழ்கிக் கிடந்த என்னை நீயே உத்தரித்தாய்; இப்போதும் அது போன்றே என்னை உத்தரித்தருள வேண்டும். ஜனார்த்தனா! உன் மகத்தகங்கார தன்மாத்திரைகளும் பிரகிருதியும், சீவனும் யாவுமே உனது திருச்சரீரமல்லவோ! ÷க்ஷத்திரக்கிய சொரூபனும் பரமாத்மாவும் சமஸ்த ஜகத் வியாபகனுமான உனக்கு நமஸ்காரம்! அவ்வியக்தமான பிரபஞ்சமும் காலமும் சொரூபமாகவுடைய உனக்கு நமஸ்காரம்! பிரம ரூப, ஸ்வயரூப, ருத்திர ரூபமும் தரித்து சர்வ பூதங்களுக்கும் சிருஷ்டிகர்ததாவாகவும் ரக்ஷகனாகாவும் சங்காரகனாகவும் இருந்து கல்பாந்த காலத்தில் சகல பூதங்களையும் கிரகித்து மூன்று லோகங்களையும் தண்ணீரானது பொங்கி அமிழ்த்தும் படிச்செய்து, பின்னர் அந்த மகா பிரளயத்திலேயே சயனம் செய்து, பரமயோகிகளாலே கோவிந்தா என்று தியானிக்கப்படுபவனும், நீயே அன்றே! பரமாத்பனும் திவ்வியனுமான உனது நிஜஸ்வரூபத்தை எவரே அறிவர்? நீ ஜகத்தை ரக்ஷிப்பதற்காக, லீலார்த்தமாகத் தரித்த உனது அவதாரங்களை யன்றே தேவர்களும் ஆராதிக்கிறார்கள்? மோட்சத்தை விரும்பும் மாமுனிவர்களும் பரப்பிரமமான உன்னையே ஆராதித்து முத்தராய் பரமானந்தத்தை அடைகின்றனர். யாவற்றுக்கும் ஆதாரமும் ஆதேயமும், தாரகனும் பிரகாசகனுமாகையால் ஸ்ரீவாசுதேவன் என்கின்ற திருநாமம் கொண்ட உன்னை ஆராதிக்காமல் எவன் தான் முக்தியடைவான்? மனத்தால் கிரகிக்கப்பகிற சுகம் முதலானதும், கண் முதலிய இந்திரியங்களாலே கிரகிக்கத்தக்க ரூபாதிகளும் புத்தியினாலே பரிசோதிக்கும்படியான பிரமாணந்தரங்களும் உனது சொரூபங்களன்றே?
தேவதேவா! உன்னிடத்திலே பிறந்து, உன்னையே ஆஸ்ரயித்து, உனது சரீர பூதையாய் உன்னிடத்திலேயே நிலைத்திருப்பவளாகையால் உலகங்கள் யாவும் என்னை மாதவி என்று சொல்லும்; சகல ஞான சொரூபனே! நீ ஜெயசாலியாகக் கடவை! ஸ்தூலப் பிரபஞ்ச ஸ்வரூபனே! நீ வாழ்க! அவ்யயனே! அளவில்லாதவனாகையனாலே அனந்தன் என்ற திருநாமமுடையவனே! வியக்த பூதாதி சொரூபனே; அவ்வியக்த ரூபனே! உத்கிருஷ்டங்களுக்கும் நிசருஷ்டங்களுக்கும் ஆன்மாவானவனே! விசுவாத்மகனே! யக்கியங்களுக்கு அதிபதியே! நீ வாழ்க! யக்யங்களும் வஷட்காரமும் நீயே! பிரணவமும் திரேதாக்கினிகளும் நீயே! சதுர்வேதங்களும் நீ! யக்ஞத்திற்கு உரிய புருஷனும் நீ! ஓ! புரு÷ஷாத்தமா; சூரிய சந்திராதி கிரகங்களும், அசுவினியாதி நட்சத்திரங்களும் மூர்த்தமான திரவியங்களும், மூர்த்தமல்லாதவைகளும் காணப்படுபவைகளும், காணப்படாதவைகளும் நான் சொன்னவைகளும், சொல்லாதவைகளும் சமஸ்தமும் நீயே! சகலமான தேவதைகளுக்கும் மேலான ஸ்வாமி! இப்படி யாவற்றுக்கும் ஆத்மபூதனான உனக்குத் தெண்டன் இடுகிறேன். இவ்விதமாகப் பூமிபிராட்டியானவள் வெகுவாய் ஸ்துதி செய்தாள். அந்தப் பூமியைத் தரிப்பவனான ஸ்ரீயப்பதியானவன் வராக ரூபத்திற்கு அநுகுணமான சாம வேதமயமான இர்குர் என்ற சப்தத்தினாலே பூமிப்பிராட்டியார் செய்த தோத்திரத்திற்குத் திருவுள்ளம் உகந்ததைக் காட்டியருளினான். பிறகு மலர்ந்த செந்தாமரை மலரை ஒத்த திருக்கண்களையுடையவனும் கருநெய்தற் பூவையொத்து விளங்கும் திருமேனியுடையவனுமான மகா வராக ரூபமுடைய ஸ்ரீமந் நாராயணன், தனது கொம்பு நுனியினாலே பூமியை உயர எடுத்து மகா நீலமலைபோல பாதாளத்திலிருந்து எழுந்தருளினான். இவ்விதம் தோன்றிய ஸ்ரீயக்கிய வராக மூர்த்தியின் மூச்சுக்காற்று வேகத்தால் எழும்பிய வியர்வை ஜலமானது ஜனலோகம் வரைப் பாய்ந்து, அங்கு பகவத் தியானஞ்செய்து கொண்டு மிகவும் தூயவராயிருக்கும் ஜனக சனந்தருடைய தேகங்களிற்பட்டு, அவர்களை மேலும் தூயவராக்கியது.
அதே சமயத்தில், வராக மூர்த்தியாரின் குளம்புகளால் தாக்கப்பட்ட அந்த ஜலமானமானது அண்ட கடாகத்தினுள்ளே பாதாளத்துக்கு வெகு இரைச்சலுடன் இறங்கிற்று. அந்த மஹா வராஹமூர்த்தியினுடைய சுவாச நிசுவாச வேகத்தால் பூலோகவாசிகளான ஜனங்கள் தள்ளப்பட்டு, ஒதுங்கலாயினார்கள். இவ்வாறு பிரளயார்ணவோதகத்தினால் நனைந்த திருவுதரத்தோடு, தனது கோட்டுமுனையில் பூமியை எடுத்துக் கொண்டு, ரசாதல லோகத்திலிருந்து எழுந்தருளினார். அவர் தமது திவ்வியத் திருமேனியை உதறியருளுமளவில், அந்த வராக மூர்த்தியினுடைய ரோம கூபங்களின் நடுவே நின்று காணப்பட்ட ஜனக ஸனந்தன ஸ்னந்குமாராதியான யோகிகள் ஆனந்தம் மிகுந்து பக்தியுடன் வணங்கித் துதி செய்தருளினார்கள். பிரமன் முதலான லோக ஈஸ்வரருக்கெல்லாம் மேலான ஈசுவரனே! சங்கு சக்கரம், கதை வாள் வில் என்ற பஞ்சாயுதங்களைத் தரித்தவனே! முத்தொழில்களுக்கும் கர்த்தாவும் ஆள்பவனும் நீயே ஸ்வாமி! வேதங்கள் உன்னுடைய சரண கமலங்களில் இருக்கின்றன. யூபஸ்தம்பங்கள் உன்னுடைய கோரைப்பற்கள் யக்கியங்களெல்லாம் உன்னுடைய தந்தங்கள் நானாவிதமான வேதிகைஸ்தான சயனம் எல்லாம் உனது திருமுகத்திலிருக்கின்றன. அக்கினியே உனது நாக்கு! உன்னுடைய ரோமங்கள் தருப்பைப் புற்கள்; ஆகையால் யக்கிய ரூபமாய் யக்கியத்தினால் ஆராதிக்கப்படும் புருஷன் நீயே இரவும் பகலும் உனது திருக்கண்கள் சகல வேதங்களுக்கும் ஆதியான பிரணவமே உனது சிரசு புருஷ சூக்தம் முதலான சூக்தங்கள். எல்லாம் உன்னுடைய பிடரியின் ரோமங்கள் சாமவேதமே உன்னுடைய கம்பீரமான நாதம் பிராக் வம்சமென்கிற அக்கினி சாலையின் முன்புறமானது உன்னுடைய திருமேனி! இப்படியாக மூர்த்தியாய், அனாதியாயுள்ள ஷட்குண ஐசுவரியை சம்பன்னனான எம்பெருமானே! உன் திருவடிவைப்பினாலே பூமியை ஆக்கிரமித்து பதம் கிரமம் என்ற ஏற்பாடுகளுடன்கூடிய அளவற்றதாய், ஆதியில் நின்ற சப்த பிரமமும் நீயே! அக்ஷர சொரூபியாயும் அழியும் தன்மையற்றவனாயும் சகல சொரூபியாயுமிருக்கிற ஸ்வாமி! சராசர மயமான உலகங்களுக்கு எல்லாம் நீயே ஒப்பில்லாத ஈஸ்வரன்! தம்தம் விருப்பங்களைப் பிரார்த்திக்கத் தக்கவனாக நீயே இருக்கின்றாய் என்பதை நாங்கள் அறிந்தோம். ஆகையால் உன்னையே பிரார்த்திக்கின்றோம். கிருபை செய்ய வேண்டும். திவ்வியமான உனது கோரைப் பல்லின் நுனியிலே காணப்படுகின்ற இந்த சமஸ்த பூமண்டலமானது தாமரைத் தடாகத்திலே பிரவேசித்து விளையாடிய மதயானையானது தனது கொம்பிலே, சேறுடன் கூடிய தாமரையைத் தூக்கிவந்தால் எப்படிக் காணப்படுமோ, அப்படித் தோற்றமளிக்கிறது.
ஒப்பற்ற மகிமையுடையவனே, ஓ ஜகந்நாதா! உண்மையான பொருள் நீ ஒருவனேயன்றி வேறொன்றுமில்லை. எப்படியெனில், சராசர மயமான சகலமும் உன்னால் வியாபிக்கப்பட்டு உனது திருமேனியாக இருப்பதனால், இவையாவுமே உனது மகிமையாகும். நீயே பரமார்த்தமாகிறாய். உலகத்துக்குக் காரண பூதனாய், உள்ளும் புறமும் வியாபித்திருக்கிற உன் மகிமை சொல்லாத முடியாததன்றே! சத்து, அசத்து என்னும் விவேகம் இல்லாத அஞ்ஞானிகள், உன்னுடைய சரீரமான பிரபஞ்சத்தைப் பிராந்தி ஞானத்தால் வேறான தேவமனுஷ்யாதி ரூபமாக நினைக்கிறார்கள். புத்தியீனர்களான ஜனங்கள் ஞானமயமான தமது நிஜ சொரூபங்களை அறியாமல், தான் அமரன் என்றும் தான் மனுஷியன் என்றும் இது மிருகம், இது தாவரம் என்றும் பிராந்தி வசத்தினாலே நினைத்து மோகார்வணத்தில் மூழ்கியிருக்கிறார்கள். ஆத்ம சொரூபத்தை எவர் ஞானசாரமாக அறிந்து பகவானை அனுபவிக்கத்தக்க யோக நிலைக்குத்தக்கதான பரிசுத்த மனமுடையவர்களோ, அவர்கள் பிரகிருதிவிகாரமான தேவ மனுஷ்யாகி ரூபமாகக் காணப்படுகிற இந்தப் பிரபஞ்சத்தையே ஞான குணமுள்ள ஆன்ம சொரூபமாகவும் உனது திருமேனியாகவும் காண்கிறீர்கள்; யாவற்றிலும் அந்தர்மியாக இருக்கும் ஸ்வாமி! சகல உலகங்களுக்கு இருப்பிடமாக இருப்பவனே! அறியக்கூடாத மகிமையை உடையவனே! சேவிப்பவர்களின் இதயம் குளிரத் தகுந்ததான செந்தாமரைமலர் போன்ற திருக்கண்களையுடையவனே! இந்தப் பூமியை உத்தரித்து அடியேங்களுக்கு சுகத்தினைக் கொடுத்து அருள் செய்ய வேண்டும். கோவிந்தா! நீ உலக உபகாரத்திற்காகவன்றே சிருஷ்டியில் பிரவேசிக்கிறாய் உனக்குத் தெண்டன் சமர்ப்பிக்கிறோம். அடியேங்களுக்குச் சுகம் அருள்வாயாக! என்று ஜகன சனந்தனர் முதலிய யோகிகள் துதித்தார்கள். இப்போது ஸ்ரீவராக ரூபமுடைய பரமாத்மாவானவன் மகார்ணவத்திலிருந்து பூமியை எடுத்து பழையபடியே ஜலத்தின் மீது நிறுத்தி அருள்புரிந்தான்.
இவ்விதம், அந்தப் பெருவெள்ளத்தின் மேல் நிருமிக்கப்பட்ட பூமியானது, கப்பல்போல உருக்குவிந்து பரந்ததாகையாலே அது அந்த மகார்ணவ ஜலத்தில் மிதந்ததேயல்லாமல் மூழ்கவில்லை. பிறகு, சர்வகாரணனும் அனாதியுமான ஸ்ரீஹரிபகவான், பூதேவி பிரார்த்தித்தவண்ணம் அந்தப் பூமியில் தன்னுடைய சங்கல்பமாத்திரத்தாலே, முன்பு எரிந்து போன பர்வதம் முதலியவற்றையெல்லாம், மீண்டும் முன்போலவே படைத்து அருளினான். இவ்விதமான ஸ்ரீமந் நாராயணன், ரஜோ குணப்பிரமமாய், ஏழு தீவுகளாக இருக்கிற பூமியின் பகுதிகளையும் மற்றும் புவர்லோகம் முதலிய உலகங்களையும் மீண்டும் படைத்தருளினான். எம்பெருமான் சிருஷ்டிக்கு, நிமித்தம் மட்டுமேயாகிறான். அவனால் படைக்கப்படும் வஸ்துக்களுடைய சக்திகளே முக்கிய சக்திகளாகின்றன. மைத்ரேயரே! எம்பெருமான் நடுநிலைமையானவன், நிமித்த காரணன் ஆகையால் இப்படிஅவன் படைப்பதனால், அவனுக்கு வைஷம்மியமும் நிர்த்தயத்துவமும் இல்லை. உயிரினங்கள் அனாதி கர்மவசத்தினாலே பூர்வ கர்மானுரூபமாக நானாவித கர்ம மார்க்கங்களிலே சஞ்சரித்துக் கொண்டிருக்கின்றன. சர்வ சமநிலையாளனும் சாட்சிபூபதனுமான பரம புருஷனைத் தவிர பிரபஞ்சத்துக்கு வேறொரு காரணமுமில்லை. சீவாத்துமாக்களுடைய அனாதி சர்மவாசனா சக்தியினாலே, நல்ல பிறவிகளும் கெட்ட பிறவிகளுமாய் அந்தந்த வஸ்துகள் மாறிவிடும். ஆகையால் தான் ஸ்ரீயப்பதி முக்கிய காரணமாக இருந்தாலும் சேதனர்களுடைய கர்மங்களைக் கொண்டே சிருஷ்டி நானாவிதம் ஆகவேண்டியிருப்பதால், அவை பிரதானமாக உபசார வழக்கை முன்னிட்டு சொல்லப்பட்டன என்று அறிவீராக!
5. தேவ மனிதப் படைப்புகள்
ஓ குருநாதரே! ஆதிகாலத்தில் தேவதைகள், ரிஷிகள், பிதுர்க்கள், அசுரர், மனிதர் முதலானவர்களையும் மிருகங்களையும், பறவைகளையும், மற்றுள்ள தாவரங்களையும் பூசரங்களையும் கேசரங்களையும் நீர்வாழும் உயிரினங்களையும் பிரம்மதேவர் எப்படிப் படைத்தார்? அவைகளுக்குக் குணங்களும் சுபாவங்களும் ரூபங்களும் யாவை? இந்த விஷயங்களையெல்லாம் விஸ்தாரமாக அடியேனுக்கு கூறியருள வேண்டும்! என்று மைத்ரேயர் கேட்டார். பராசரர் கூறலானார். மைத்ரேயரே; அந்தப் பிரமதேவன் பிரபஞ்ச சிருஷ்டி செய்ய நினைத்துக் கொண்டிருக்கும்போது சர்வ நியாமகனான நாராயணனால் ஏவப்பட்ட நினையாத நினைவினாலே தாமச குணப் பிரதானமான சிருஷ்டியொன்று உண்டாயிற்று. அது தமஸ் மோகம், மகாமோகம், தாமிஸ்ரம், அந்ததாமிஸ்ரம் என்று சொல்லப்பட்ட பேதங்களினாலே ஐந்துவிதமாக, விருட்சங்களும், புதர்களும், கொடிகளும், பூண்டுகளும் புல்லுகளுமென ஐவகையான தாவரப்படைப்பாக இருந்தது. அது சுத்த தாமச படைப்பாகையால்; தண்ணீர் முதலானவைகளைக் கிரகிப்பது முளைப்பது, செழிப்பது முதலிய காரியங்களுக்கு ஏற்ற அற்ப அறிவுள்ளவனேயன்றி தன்னை இப்படிப்பட்டதென்று அறிவதும் சப்தாதி விஷயங்களையும், சுகதுக்கங்களையும் அறிவதுமாகிய அறிவற்றதாக இருக்கும். பிரமன்; அவற்றைப் பார்த்து, தமோகுணப் பிரசுரமான இந்தத் தாவரங்கள் முன்னே பிறந்தன என்றனன், ஆகையால் தாவரங்களே முக்கிய படைப்பாயின சதுர்முகப் பிரமனே, இந்தத் தாவரங்கள் லோகவியாபாரத்திற்குரிய ஆற்றல் அற்றவை; ஆகையால், இவற்றில் பயன் இல்லையே என்று சிந்தித்துக் கொண்டிருந்தான். அப்போது பிரமனின் பாரிசபாகங்களிலிருந்து மிருகங்கள் முதலிய திரியக்குசாதிகள் பிறந்தன. அவை பக்கங்களின் குறுக்காகப் பிறந்தனவாகையால் திரியக்குகள் என்று சொல்லப்பட்டன. அவையும் விவேமில்லாதவைகளாய், ஞான சூன்யமாகவும், ஒழுக்கமற்ற நடத்தையுடனும் தாயைச் சேர்தல் முதலிய அக்கிரமச் செயல்களுடனும் தமது ஞானம் என்ற நினைப்புடனும் தேகத்தையே ஆன்மாவாக எண்ணிக்கொண்டும் அகங்கார மயமாய், இருபத்தெட்டு வகையினவாய் சுகதுக்கங்களை மட்டுமே தெரிந்தவைகளாய், தகப்பன், தாய், அண்ணன், தம்பி என்ற சம்பந்தமெதையும் அறியாதனவாய் இருந்தன.
அதைக்கண்ட சிருஷ்டி கர்த்தாவான பிரமன்; ஆகா! ஈனமான இந்தத் திரியக்கு சாதிகளாலும் பயன் எதுவுமில்லை. ஆகையால் சிறப்புடைய சிருஷ்டியைச் செய்யவேண்டும் என்று சிந்தனை செய்யலானான்; அப்பொழுது மூன்றாவது படைப்பு தோன்றலாயிற்று. பிரமனின் சரீரத்தின் ஊர்த்துவ பாகத்திலிருந்து சத்வகுணப் பிரதானராயும் சுகானுபவமும் ஆனந்தமும் மிகுந்தவராயும் ஆன்ம ஞானமும் விவேகமும் உள்ளவராயும்; நித்திய சந்தோஷமுடையவர்களான தேவதைகள் உதித்தார்கள். அவர்கள் ஊர்த்துவஸ்தானத்திலிருந்து பிறந்ததால், ஊர்த்துவ சுரோதசுகள் என்ற பெயரைப் பெற்று; பூமியைத் தீண்டாதவர்களாக இருந்தனர். பிரமன்! இந்த வகையாகத் தமது மூன்றாவது படைப்பில்; சத்துவகுணப் பிரதானராகப் பிறந்த தேவர்களைக் கண்டு மகிழ்ந்தார். ஆயினும் கர்மசாதகம் ஏற்படாததால், தேவர்களின் படைப்பினாலேயும் பயனில்லை என்று பிரமன் நினைத்து லோகசாதகமான வேறொரு சிருஷ்டியை உண்டாக்க வேண்டும் என்று சிந்தித்துக் கொண்டிருந்தார். அப்போது, சத்திய சங்கல்பனான அவருடைய மத்யப் பகுதியிலிருந்து, பூமியை நோக்கிய சிருஷ்டி ஒன்று உண்டாயிற்று. அதில் தான் மனிதர்கள் பிறந்தார்கள். அவர்கள் பிரமனின் மத்திய தேகத்திலிருந்து தோன்றியதால் மத்திய லோகத்தில் வாசஞ்செய்யத் தக்கவர்களானார்கள் அவர்கள் ஒரு காலத்தில் சாக்துவிக குணாதிக்கமும், ஒரு காலத்தில் ராஜசகுணோ திரேகமும் ஒரு காலத்தில் தாமச குணம் கொண்டவர்களாய் துக்கத்துக்கு உட்பட்டவர்களாய் உணவு உட்கொள்ளல் முதலிய காரியங்களையே மீண்டும் மீண்டும் செய்து கொண்டு, ஆத்தும, மன, புத்தி; இந்திரியாதி விவேகங்களும் புறத்துள்ள வஸ்துக்களின் ஞானங்களையும் கொண்டவர்களாய், உலகியல் செயல்களைச் செய்யாதவராய் இருந்தார்கள். இவர்கள் அர்வாக் சுரோதஸுகள் என்று வழங்கப்படுகிறார்கள்.
அதன் பிறகு; அம்புஜாசனனான பிரமன், தாவர ஜாதிகளுக்கும் மிருக ஜாதிகளுக்கும் தேவதைகளுக்கும் மனிதர்களுக்கும் அவித்தை, அசக்தி, சந்துஷ்டி, சித்தி என்ற நான்கு வகை குணச்சிறப்புகளை உண்டாக்கினான். இது தாமசமாயும் சாத்வீகமாயும் இருந்ததால் அனுக்கிரக சிஷ்டியென்று சொல்லப்படும். அப்பால் சனக, சனந்தன, சனத்குமார ருத்திராதிகளையும் பிரமன் படைத்தார். இது கவுமார சிருஷ்டி என்று சொல்லப்படும். மைத்ரேயரே! இவ்விதம் தாவரப்படைப்பு, திரியக்குப் படைப்பு, தேவப் படைப்பு, மனிதப் படைப்பு அனுக்கிரகப் படைப்பு, கவுமாரப் படைப்பு என்ற ஆறுவிதமான படைப்பு சிறப்புகளைக் கூறினேன். இந்தப் படைப்புகள் ஒன்பது வகை என்றும் சொல்லப்படும். அதாவது முன்பே கூறிய மகத்தத்துவப் படைப்பும், ஏகாதச இந்திரியங்களுக்குக் காரணமான சத்துவ, ராஜச தமோ குணத்துமகமான அகங்காரப் படைப்பும், அதற்கப்பால் ஆகாசாதி பஞ்ச மகாபூத காரணங்களான தன்மாத்திரைகளின் படைப்பும் ஆகிய அந்த மூன்றும் சமஷ்டி சிவ ஸ்வரூபனான இரண்யகர்ப்பனுடைய சங்கல்பமில்லாமல் தோன்றியிருந்ததனால் அது பிராகிருதப் படைப்பு என்று சொல்லப்படும். ஆயினும் அதையும் அவனால் உண்டான படைப்பு என்று சொல்லப்படும். ஆயினும் அதையும் அவனால் உண்டான படைப்பு என்றே சொல்லலாம். எப்படியென்றால், நித்திரையிலிருக்கும் என்னுடைய இச்சையில்லாமலேயே சுவாச நிவாசங்களும் நித்திரையும் பிறந்திருக்க, அவற்றுக்கு அவனையே கர்த்தாவாக வழங்குவதைப் போல், மகத்தகங்கார தன்மாத்திரைகள் சதுர்முகனுக்கும் முன்னமே சம்பவித்தவைகளாகையினால், இரண்யகர்ப்பனுடைய கர்ம விசேஷத்தினால் உண்டானதாக, அதுவும் அவனுடைய செயலாகவே சொல்லப்படும். முன்னே சொன்ன பிராகிருத சிருஷ்டி மூன்று ஒழிய; நான்காவதான தாவர சிருஷ்டியும் ஐந்தாவதான திரியக்கு சிருஷ்டியும், ஆறாவதான தேவசிருஷ்டியும் ஏழாவதான மனிதப்படைப்பும்; எட்டாவதான அவித்தை முதலான அனுக்கிரகப்படைப்பும் ஆகிய படைப்புகள் ஐந்தும் பிரம்மாவின் விகிருதியினால் உண்டானதால் வைகிருதங்கள் என்று சொல்லப்படும் ஒன்பதாவது படைப்பாகிய கவுமாரம்; பிராகிருதம் வைகிருதாத்துமகமாக இருக்கும். இப்படி இரணியகர்ப்பனாலே உண்டாக்கப்பட்ட ஜகத்துக்கு மூலங்களான ஒன்பதுவித படைப்பையும் சொன்னேன் இனி இந்தப் படைப்புகளின் விஷயமாக நீங்கள் என்ன கேட்க விரும்புகிறீர்கள்? இவ்வாறு பராசர மகரிஷி கூறியதும் மைத்ரேயர் அவரை நோக்கி, முனிவரே! படைப்பு வகைகளைத் தாங்கள் சுருக்கமாகத்தான் சொன்னீர்கள். இதைத் தெளிவாக விளக்க வேண்டும் என்றார். பராசரர் சொல்லத் துவங்கினார்.
மைத்ரேயரே! அனாதி கர்ம வாசனையினால் கட்டுண்டவர்களும் நானாவித கர்ம பயன்களை அனுபவிப்பவர்களான சேதனர்கள் பூர்வ வாசன வசத்தினால்; சங்காரகாலத்தில்; சங்கரிக்கப்பட்டு படைப்புக் காலங்களில் தேவ மனிஷ்யத் திரியிக்கு தாவர ஜன்மங்களாகப் பிறப்பார்கள். சிருஷ்டித் தொழிலிலுள்ள பிதாமகனுடைய இச்சையினால்; அம்பஸ் என்ற பெயரால் வழங்கப்படும் தேவாசுர பிதுர் மனுஷ்ய ஜாதிகள் நான்கும் உண்டாயின அதன் விவரங்களையும் கூறுகிறேன். கமலாசனன் : படைப்புத்தொழில் விஷயமாக ஒரு தேகத்தோடு சிந்தித்திருக்கும்போது; தமோகுண உத்திரேகத்தினால்; அவருடைய இடையின் கீழ்ப்புறத்திலிருந்து அரசர்கள் தோன்றினார்கள் பிறகு அந்த விரிஞ்சன்; தமோகுணத்துமகமான அந்தத்தேகத்தை ஒழித்துவிட; அது இருள் மிகுந்த இரவாயிற்று. பிறகு; அவர் திரும்புவம் பிரஜா சிருஷ்டி செய்ய நினைத்து வேறொரு தேகந்தரித்து; சந்துஷ்ட சிந்தனாக இருக்க; அந்தத்தேவனின் முகத்திலிருந்து சத்துவகுணாதிக்கமுள்ள தேவர் தேவதைகள் ஜனித்தார்கள். பிறகு, அந்தப்பிதாமகன்; அந்த உடலையும் விட்டுவிட்டார். அது சத்துவ குணமயமான பகலாயிற்று. பிறகு அவன் ரஜோகுணாதிசகமான மனிதர்களை படைத்து அந்தத் தேகத்தையும் விட்டுவிட; அது பிரகாசமான பிராதக்கால சந்ததியாயிற்று. அதனால் மனிதர்கள் பிராதச்சந்தியிலேயும் பிதுர்க்கள் சாயஞ்சந்திலேயும் பலவான்களாக இருப்பார்கள்.
மைத்ரேயரே! பகல், இரவு, சாயங்காலம், விடியற்காலம் ஆகிய இந்த நான்கும் பிரமதேவனுக்கு முக்குணங்களோடு கூடிய சரீரங்கள். பிறகு அந்தப் பிரமதேவன் மேலும் சிருஷ்டி செய்வதற்கு தமோகுணாதிக்கமுள்ள மற்றொரு சரீரத்தைத் தரித்தார். உடனே அவருக்குப் பொறுக்கமுடியாத பசியுண்டாயிற்று. அதனால் தீவிரக்கோபம் உண்டாயிற்று. அந்தக் கோபத்தினால் இருட்டிலிருந்து விகாரரூபம் பயங்கரமுமான தாடி மீசைகளுமுள்ள ஒருவிதமான புருஷர்களை பிருமன் படைத்தார். அவர்களில் பசியுற்ற சிலர் ஜக்ஷõம (உண்ணக் கடவேம்) என்றனர். பசியுறாத சிலர் ரக்ஷõம (காக்கக்கடவேம்) என்றனர். இப்படிக் கூறிய அவர்களைப் பார்த்துப் பிரமன் புன்னகை செய்து, பசியைப் பொறுக்கமுடியாமல் ஜக்ஷõம என்று கூறியவரை, யக்ஷராகக் கடவர் என்றும், ரக்ஷõம என்றவர்கள் ராக்ஷசராகக் கடவர் என்றும் அருளிச்செய்தார். இரணியகர்ப்பன் இவ்வாறாகப் பிறந்த யக்ஷரையும் ராக்ஷஸரையும் பார்த்து, மனதில் பிரியமற்று மீண்டும் சிந்திக்கலானார். அப்போது அவரது சிரத்திலிருந்த கேசங்கள் ஈனமாய்க் கழன்று விழுந்து, மறுபடியும் சிரத்தின் மீது ஏறின. இப்படி நகர்ந்து ஏறியதாலே அவை சர்ப்பங்கள் என்றும் அவை ஈனமானதினாலே அகிகள் என்றும் சொல்லப்பட்டன. மீண்டும் பிரமன் கோபாவேசத்தினாலே சிருஷ்டிக்க நினைக்க, கபில நிறத்தோடு கூடி, ரத்தமாமிச ஆகாரங்களுள்ளவைகளான பூதங்கள் அநேகம் உண்டாயின.
பிறகு, தியான பாராயணனாய், விரிஞ்சன் தனது அங்கங்களினின்றும் அந்தக் கணத்திலேயே கந்தருவர்களை உற்பத்தி செய்தார். அவர்கள் சமத்காரமாய்ப் பாடிக்கொண்டிருந்ததால் கந்தர்வர்கள் என்று வழங்கப்பட்டனர். இவ்விதமாகச் சதுர்முகனால் சிருஷ்டிக்கப்பட்ட வஸ்துக்கள் சக்திகளினால் ஏவப்பட்டு, அதனதன் கர்மானுகுணமாய் வெகுவிதமான பூதங்களைப் படைத்து மீண்டும் சுயேச்சையான வயதைக் கண்டு, பாரிசங்களினால் பறவைகளையும், மார்பினால் ஆடுகளையும், முகத்தினால் வெள்ளாடுகளையும், உதரத்தினால் பசுக்களையும், பாதத்தினால் குதிரைகளையும், யானைகளையும், கழுதைகளையும், ஒட்டகங்களையும், கடம்பு மான்களையும் மற்றுமுள்ள மிருகஜாதிகளையும் படைத்தார். மீண்டும் ரோம தபங்களினாலே பலவித உபயோகமுள்ள ஒளஷதாதிகளையும் தானியங்களையும் உண்டாக்கினார். இவ்விதமாய்ப் பிதாமகன் கல்பாதியான கிருதயுகத்தில் ஓஷதிகளையும், பசுக்களையும், பறவைகளையும், மாடுகளும், ஆடுகளும், குதிரைகளும், ஒட்டகங்களும், வெள்ளாõடுகளும், கோவேறு கழுதைகளும் கிராமியங்களால் பசுஜாதிகள் என்று அறிவீராக. சிங்கம், புலி முதலிய துஷ்ட மிருகங்களும், இரு குளம்புள்ள மிருக வகைகளும், யானைகளும், குரங்குகளும், பறவைகளும், சலசரங்களான மச்ச கூர்மாதிகளும் சர்ப்பங்களும் ஆகிய ஏழு ஜாதிகளும் ஆரணிய பசு விசேஷங்கள் என்று அறிவீராக. அதன் பிறகு பிதாமகன் காயத்திரி சந்தமும் இருக்கு வேதமும் திரிவிருத் என்ற ஸ்தோமமும் ரதந்தர சாமமும் அக்கினிஷ்டோமமும் தனது கிழக்கு முகத்தினால் உண்டாக்கினர். யஜுர்வேதமும் திருஷ்டுபு, சந்தமும், பஞ்சதஸ்தோமமும் பிருதச்சாமமும், உத்தியம் என்கிற யாக விசேஷமும், தக்ஷிண முகத்தினால் உண்டாகச் செய்தார். சாம வேதமும் செகதீச்சந்தமும், வைரூப்பியம் என்கின்ற சாம விசேஷமும் அதிராத்திரியாகமும் பச்சிம முகத்தினால் உண்டாக்கினார். அதர்வண வேதமும், ஏகவிம்சஸ்தோமமும், அனுஷடுப் சந்தமும் வைராசம் என்கின்ற சாம விசேஷமும் அப்தோர்யாமம் என்கின்ற யக்கியமும் உத்தரமுகத்தினாலே உண்டாக்கினார். நானாவிதமான உயிரினங்களைப் பலவித அவயங்களினாலே நான்முகப் பிரமன் உண்டாக்கினார். இவ்விதமாகப் பிதாமகன், தேவ அசுர, பிதுர் மனுஷியாதி பூதசாதிகளைச் சிருஷ்டித்துத் திரும்பியும் பிரஜா சிருஷ்டி செய்ய வேண்டும் என்று உற்சாகத்தோடு சங்கல்பித்து, கின்னரர் கந்தர்வர் அப்சரஸுகள், யக்ஷர்கள், ராக்ஷதர், பைசாசர் முதலியவர்களையும் பசு, பட்சி, சர்ப்ப மிருகங்களையும் தாவர சங்கமங்களையும் உண்டாக்கினார்.
இப்படி ஆதிகர்த்தாவும் லோகேசுவரனுமான சதுர்முகப்பிரமன் பலவித பூதஜாதிகளை உண்டாக்கினார். அவை சில குரூர சுபாவங்களும் சில மென்மையான சுபாவங்களும் சில இம்சை செய்பவைகளும், சில இம்சை செய்யாதவைகளும், சில தர்ம சொரூபங்களும், சில அதர்ம சொரூபங்களும், சில சத்திய மயங்களும் சில அசத்திய மயங்களுமாகப் பூர்வப் படைப்பில் எப்படிப்பட்ட கர்மங்களை அடைந்தனவோ அப்படிப்பட்ட கர்மங்களையே இந்தப் படைப்பிலும் அடைந்தன. பிறகு தேக, இந்திரிய மனபுத்திச் சிறப்புகளுக்கும் சப்த ஸ்பரிசாதி, யோக்கிய வஸ்துக்களுக்கும் வேத வசனங்களைக் கொண்டே தேவ, ரிஷி, பிதுர், மனுஷ்ய பட்சி, மிருகாதிகளுக்கு பெயர்களையும், ரூபங்களையும் அறிந்து பெயர்களையும் உருவங்களையும் பிருமன் உண்டாக்கினார். மைத்ரேயரே! இவ்விதமாகவே முனிவர்களுக்கும் வசிஷ்டாதி நாமங்களை நித்தியமான வேத சப்தங்களைக் கொண்டே உண்டாக்கினார். ஏனெனில், வசந்தம் முதலிய ருதுக்காலங்கள் தோறும் அந்தந்தக் காலத்துக்குரிய வாசனை முதலியவை இயல்பாகவே உண்டாவதைப் போல் கிருத திரேதா யுகங்களிலே, அந்தந்த யுகத்திற்கான சிறப்புக்கள் தாமாகவே உற்பவிக்கும். இந்த விதமாகப் பிரம்மா கல்பாதி காலத்தில் எம்பெருமானுடைய சக்தியினாலே; அனுப்பிரவேசித்து தூண்டப்பட்டு பிரபஞ்சங்களை அதனதன் கர்மங்களின்படியே படைத்தான்; இதில் சகல படைப்புகளும் கல்பாதி கிருதயுகத்திலும் யாகாதிகளும் அவற்றின் உபகரணங்களும் திரேதாயுகாதியிலும் படைத்தான். இப்படியே ஒவ்வொரு கல்பத்திலும் படைப்புகள் படைக்கப்பட்டு; சிருஷ்டிகள் நடைபெற்றுவரும்.
6. வருணாசிரமங்கள்
தேவர்கள், மனிதர்கள், மிருகங்கள், பறவைகள் முதலியவற்றின் படைப்புக் கிரமங்களைப் பற்றிப் பராசர முனிவர் கூறியதும் மைத்ரேய முனிவர் அவரை நோக்கி, மகரிஷியே! மனிதர்கள் படைக்கப்பட்டதைப் பற்றி நீங்கள் சுருக்கமாகச் சொன்னீர்கள். இனி அவர்களுடைய குணங்களைப் பற்றியும், வருணாசிரம விவரங்களை பற்றியும், ஆசார வேறுபாடுகளைப் பற்றியும் தெளிவாகத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்! என்றார். அதற்குப் பராசரர் பின்வருமாறு கூறலானார்: பூர்வத்தில் பிரமன் மனிதர்களைப் படைக்க வேண்டும் என்று சிந்தித்தபோது, அவரது முகத்திலிருந்து சத்வகுணமுடையவர்களான பிராமணர்கள் தோன்றினார்கள். அவரது மார்பிலிருந்து ராஜசகுணமுடைய க்ஷத்திரியர்கள் தோன்றினார்கள். தொடைகளிலிருந்து ராஜசகுணமும் தாமஸகுணமும் கலந்தவைசியர்கள் தோன்றினார்கள். பாதங்களிலிருந்து தமோ குணமுடைய சூத்திரர்கள் தோன்றினார்கள். இவ்விதம் பிரமதேவனின் முகம், மார்பு, தொடைகள், பாதங்கள் என்னும் அவயங்களிலிருந்து பிறந்த பிரம்ம, க்ஷத்திரிய, வைசிய, சூத்திரர்களை யாகங்களுக்குரிய செயல்களை செய்யும்படி அவர் நியமித்தார். மைத்ரேயரே! இந்த நால்வகையான மக்களும் யாகங்களுக்கு முக்கியமானவர்கள். யாகங்களால் தேவதைகள் திருப்தியடைந்து, காலாகாலத்தில் மழைபொழிந்து மனிதரைத் திருப்தியுறச் செய்வார்கள். ஆகவே உயர்வுக்கு ஏதுக்களான யாகங்கள் மக்களால் முக்கியமாகச் செய்யத் தக்கவையாகும். வேத சாஸ்திரத்திற்கு விரோதமான ஒழுங்கீனங்களை விட்டு சன்மார்க்கத்தில் நடக்கிற சத்புருஷர்கள் சொர்க்கசுகத்தையும் மோக்ஷõனந்தத்தையும் தம் மனிதப்பிறவியிலேயே அடைவார்கள். இவ்விதமாக இரண்யகர்ப்பனால் படைக்கப்பட்ட நான்கு வர்ண மக்களும், சாஸ்திர விசுவாசத்தினால் சதா சாரமும் விநயமும் அடைந்து, நிர்மலமான இருதயமுடையவராய் சகலவிதமான சத்கருமங்களையும் செய்துகொண்டு காமக்குரோத லோபம் இல்லாமல், நினைத்த இடத்தில் நினைத்தபடி வசித்து, நிர்மலமான இதயத்தில் இறைவனைத் தியானித்துத் தத்துவ ஞானம் பெற்று தெளிந்தவர்களாய் சற்கதியடைந்தார்கள்.
இதுபோல் கிருதயுகத்திலிருந்து திரேதாயுகத்தின் இடைக்காலம் வரை நடந்தது. பிறகு, நாராயணாம்சம் என்று சொல்லப்பட்ட காலவசத்தினாலே, மனிதருடைய சத்துவ புத்தியும் தைரியமும் ஆயுளும் குறையும்படி நேரிட்டது. அதனால் மோகமும் லோபமும் மேலிட்டன. அதருமம் மிகுதியாயிற்று அதனால் மோட்சமார்க்கத்திற்கு விரோதமான ராகத்துவேஷங்கள் பிரபலமாயின. ஆகையால் இயல்பாகவே உண்டாகத்தக்க ஞானமும், தொந்தங்களை வெல்லத்தக்க சக்தியும் மக்களிடம் குறைந்தன முன்பெல்லாம் பெண்கள் முதலியவை இல்லாமலேயே ஆனந்தம் உண்டாவதுண்டு. யோகப் பயிற்சியினால் சிரசிலுள்ள சந்திர மண்டலத்தினின்றும் ஒழுகும் அமிருதத்தினாலே பசியுங்கூட இல்லாமல் இருந்தது. ஒருமுறை மழை பெய்தாலே பயிர்கள் செழுமையாக வளர்ந்தன. நினைத்தபோதே மரங்கள் பலிதமாயின. நினைத்தவை நினைத்தவாறே கைகூடின பரத்வாச முனிவருக்கு நடந்தது. போலவே, கற்பக விருட்சங்கள் வந்து வேண்டியதைக் கொடுத்தன. வேண்டும்போதெல்லாம் மழை பெய்தது. உழுது வருந்தாமல் பூமி விளைந்தது இவ்விதமான எட்டுச் சித்திகளும் நாளடைவில் க்ஷீணித்து பாதகச் செயல்கள் அதிகமாயின.
அதனால் பூமியில் வாழும் மக்கள், ராகத்துவேஷ. லோப, மோகாதி தொந்த துக்கங்களினால் பீடிக்கப்பட்டு, ஒருவரையொருவர் விசுவாசியாமல் மலைப் பிரதேசங்களிலும், தண்ணீர் சூழ்ந்த நிலப்பகுதியிலும் வசித்தார்கள். அங்கு கோட்டைகள், கொத்தளங்கள், அகழிகள் முதலியவற்றை அமைத்தார்கள். நகரங்களையும் வீதிகளையும் வீடுகளையும் கட்டிக்கொண்டார்கள். மழை, காற்று, வெய்யில் இவற்றின் உபத்திரவங்களை நீக்கிக் கொள்வதற்கான உபாயங்களை உண்டாக்கிக் கொண்டார்கள். பிழைப்பிற்காகப் பயிர்த்தொழில்கள், ஆடு மாடுகள் வளர்த்தல் வாணிபம் முதலியவற்றைச் செய்தார்கள். பயிர்த்தொழிலால் விளைந்த சம்பா முதலிய நெல், யவம், கோதுமை, சோளம், கேழ்வரகு, தினை, உளுந்து, பயிறு சிறு கடலை, துவரை, மொச்சை, கொள்ளு, கடலை, சணல் ஆகிய தற்காலிக பயன்களை அனுபவித்தார்கள். இந்தப் பதினேழு வகையான தானியங்களும் கிராமியங்கள் என்று வழங்கப்படும். நெல், யவம், உளுந்து, கோதுமை, சிறுதானியம் என்ற பிரியங்கு, கொள்ளு, சாமை; செந்நெல், காட்டு எள், கெவீது, மூங்கிலரிசி, மற்கடகம் என்ற பதினான்கு விதமான தானியங்களும் கிராமிய ஆரணியங்கள் என்று பெயர் பெற்று யாகங்களுக்குப் பயன்பட்டன. இவை யக்கியங்களுக்கும் பிரஜா அபிவிருத்திக்கும் காரணமாயின. எனவே, அவற்றைக் கொண்டு, பராபரவிவேகமுள்ள ஞானிகள் நாள்தோறும் பாவங்களைப் போக்கதக்க பஞ்ச மகா யாக்கியங்களைச் செய்வார்கள். முனிவரே! தினமும் யாகாதி கர்மங்களைச் செய்வதால், புருஷர்கள் சகலபாவ விமுக்தராய்ப் பரம சுகத்தை அடைவார்கள். ஆதிகாலத்தில் எவருடைய மனமானது கால வசத்தால் பாபதூஷிதமாயிற்றே, அவர்கள் யக்கியாதி நற்கருமங்களில் விசுவாசமில்லாமல் பாதங்களை அபிவிருத்தி செய்து; வேதங்களையும் நற்கருமங்களையும் நிந்திக்கலானார்கள். யாகங்களுக்கு இடையூறுகளைச் செய்தார்கள். தேகத்தைப் போஷிப்பதற்கான செயல்களை மட்டுமே செய்தார்கள். லோக விருத்திக்கு விரோதிகளாய், துராத்மாக்களுமாய்; துராசாரமுடையவர்களுமாய்; குடில் புத்தியை உடையவர்களானார்கள். இது ஒருபுறம் இருக்கட்டும்.
பிரம; க்ஷத்திரிய: வைசிய; சூத்திராதி (நான்கு) வருணங்களையும் நான்கு ஆசிரமங்களையும் இரண்யகர்ப்பன் நிர்மித்து, வர்ணாசிரமத்திற்கு உரிய மரியாதைகளையும் ஏற்படுத்தி; அவரவரது தாரதம்மானு குணமாகப் புண்ணிய லோகங்களையும் ஏற்படுத்தினார். ஸ்வதர்ம அனுஷ்டான பராயணரான பிராமணர்களுக்குப் பிரஜாபத்திய லோகத்தையும், போரில் புறங்கொடாத க்ஷத்திரியர்களுக்கு; இந்திரலோகத்தையும், ஸ்வதர்ம நிரதரான வைசியருக்கு மருத்துக்களின் லோகத்தையும்; பணிவிடைக்காரரான சூத்திரர்களுக்கு கந்தர்வலோகத்தையும், குரு பணிவிடை செய்வதில் ஊக்கமுடைய பிரம்மச்சாரிகளுக்கு ஊர்த்தரே தஸரான எண்பத் தெண்ணாயிரம் யதீச்சுவர்கள் வாசம் செய்யும் திவ்விய லோகத்தையும்? வானப்பிரஸ்தருக்கு சப்தரிஷி லோகத்தையும், கிரகஸ்தருக்குப் பிரஜாபத்திய லோகத்தையும்; சந்நியாசிகளுக்குப் பிரமலோகத்தையும் தோற்றுவிக்க சங்கல்பம் செய்தார். இவையாவும் கர்ம மார்க்கத்தினால் உண்டான புண்ணிய லோகங்களாகும். இனி ஞானியருக்குக் கிடைக்கும் உலகங்களைச் சொல்கிறேன்; கேளுங்கள். ஆத்மத் தியானிகளான யோகீசுரர்களுக்கு அமிர்தஸ்நானம் உண்டாம். (அமிர்த ஸ்நானம் என்பது துருவலோகத்துக்கு மேலே; கங்கை தோன்றும் இடம்.) தினமும் யோகப்பயிற்சிகளைச் செய்தும்; பிரமத் தியானத்தை செய்து கொண்டும் இருக்கிற மகாத்மாக்களுக்கெல்லாம்; நித்திய சூரிகளாலே காணப்பட்ட பரமபதம் உண்டாகும். சந்திர சூரியாதி கிரகங்களும் காலக்கிரமத்தில் அதனதன் இடம் விட்டு; பலமுறைகள் நீங்குகின்றன. துவாதசாக்ஷர மந்திரத்தை ஜெபிக்கிற மகான்மாக்கள் என்றைக்கும் திரும்பி வராமல்; பரமனாந்தத்தை அனுபவிக்கிறார்கள். இனிப் பாபஞ்செய்கிற கெட்டவர்கள் அடையத்தக்க லோகத்தை அறிவிக்கிறேன். தாமிஸ்வரம்; அந்தாமிஸ்ரம்; ரௌரவம்; மகா ரௌரவம், அசிபத்ரவனம்; காலசூத்திரம்; அவீசிமத்து என்ற மகாகொடிய நரகங்கள் எல்லாம்; வேதங்களை நிந்தித்து; யக்கிய விக்னஞ்செய்கிற பாபாத்துமாக்களுக்கு உண்டாகும்.
7. பிருகு முதலியவர்களின் படைப்பு
சதுர்முகனாகிய பிரமதேவன்; பிரஜா சிருஷ்டி செய்ய வேண்டும் என்ற சிந்தனையோடு இருக்கும்போது அவனுடைய சங்கல்பத்தினால் அவனது அங்கத்திலிருந்து தர்மத்தை அனுபவிக்கும்படியான தேக; இந்திரியங்களுடன் கூடிப்பிறந்த தேவமனுஷிய திரியத் தாவரங்களான சதுர்வித சங்கங்களும் அபிவிருத்தியடையாமற் போயின. அதைக்கண்ட பதுமகர்ப்பன் மீண்டும் பிரஜா சிருஷ்டி செய்ய எண்ணி பிருகு புலஸ்தியர்: கிரது; அங்கிரசு; மரீசி; அத்திரி; தக்ஷர்; வசிஷ்டர்; நாரதர் என்ற ஒன்பது புத்திரர்களைத் தனது மனத்தாலே படைத்தான். அவர்கள் பிரம்மாவுக்கு இணையானவர்களாக இருந்ததால் நவபிரமாக்கள் என்று புகழ்பெற்றனர். இந்த நவப்பிரம்மாக்களுக்கு முன்பே பிதாமகன் ஸனக, ஸனந்தனாதிகளைச் சிருஷ்டித்தான். அவர்கள் பிரமாவுக்கு இணையானவர்களாக இருந்ததால் நவபிரமாக்கள் என்று புகழ்பெற்றனர். இந்த நவப்பிரம்மாக்களுக்கு முன்பே பிதாமகன் ஸனக, ஸனந்தனாதிகளைச் சிருஷ்டித்தான். அவர்கள் வைராக்கியத்துடன் மோட்சமார்க்க நிரதர்களாய்; பிரஜா சிருஷ்டியில் ஈடுபடாமல் சர்வ சங்கப் பரித்யாகிகளாய் யோக நிஷ்டை பெற்று, காமக்ரோத மதாச்சரியங்கள் இல்லாதவர்களாய் கிருதார்த்தர்களாக இருந்தார்கள். அவர்கள் பிரஜா சிருஷ்டியைச் செய்யாமல் இருந்ததால் பதும கர்ப்பனுக்கு பொறுக்கமுடியாத குரோதம் உண்டாயிற்று. அப்போது மூன்று உலகங்களையும் எரித்துவிடும்படியான கோபாக்கினி ஜ்வாலைகள் பொருந்தியும் பயங்கரமாகப் புருவங்களை நெறித்துக் கொண்டும், குரோதத்தினால் ஜ்வலித்துக் கொண்டும் இருக்கிற பிரம்மாவின் லலாடத்திலிருந்து நடுப்பகல் சூரியனைப் போன்ற பிரகாசமுடையவரும், அர்த்தநாரி ரூபத்தைத் தரித்தவரான ருத்திரமூர்த்தி தோன்றினார்.
அந்த ருத்திரமூர்த்தி அதியுன்னத சரீரமுடையவராகவும், உக்கிர குணமுள்ளவராகவும் பாதியுடம்பு ஆணும் பாதியுடம்பு பெண்ணுமாகவும் விளங்கினார். அம்மூர்த்தியை பிரம்மா நோக்கி; இரண்டு விதமாக இருக்கிற நீயே உன்னைத் தனித்தனியாக பிரிப்பாயாக! என்ற சொல்லி அந்தர்த்தானமானார், அதன் பிறகு அந்த ருத்திரமூர்த்தியும், ஆண் பெண் உருவமாக இருந்த தன் உடம்பை பெண் உருவாகவும், ஆண் உருவாகவும் தனியே பிரித்து, வேறாகிப் பின்பு அந்தப் புருஷரூபத்தையும் பதினோறு விதமாகப் பிரித்து, பெண் ரூபத்தையும் பலவிதங்களாகப் பிரித்தார். அவை சவுமியங்களாகவும், பயங்கரங்களாகவும், காந்தங்களாகவும், கோரங்களாகவும், கறுத்தனவாகவும், வெளுத்தனவாகவும் பலவகைப்பட்டிருந்தன. பிறகு இரணியகர்ப்பன், பிரஜைகளை காக்கும் பொருட்டுத் தன்னுடைய அம்சத்தினாலே புத்திரன் ஒருவனைச் சிருஷ்டித்தார். அவன் சுவாயம்புவமநு என்ற பெயரைப் பெற்று, பிரஜா பரிபாலனஞ் செய்து கொண்டிருந்தான். பிரம்மா, தம் அம்சத்தினால் தாமாகவே மநு என்ற புருஷன் ஆனதைப்போலவே, தமது பத்தினியின் அம்சத்தினாலே ஒரு ஸ்திரீயை உண்டாக்கினார். அந்த மங்கை சதரூபை என்ற பெயர் கொண்டு தனக்குச் சரியான புருஷன் வேண்டும் என்று தவஞ்செய்து, தூய்மையாக இருந்தாள். அப்போது பிரமனின் கட்டளைப்படி சதரூபையை மநுமணந்து அவளிடத்தில் பிரியவிரதன், உத்தானபாதன் என்னும் இரு பிள்ளைகளையும் பிரசூதி, ஆகுதி என்ற இரண்டு பெண்களையும் பெற்றான். பிறகு அழகும் குணமும் பொருந்திய இரண்டு பெண்களில், பிரசூதி என்பவனைத் தக்ஷனுக்கும், ஆகுதியை ருசி என்பவனுக்கும் மறுமணஞ்செய்து கொடுத்தான். ருசி என்பவன் ஆகுதி என்பவளைச் சேர்ந்து, யக்கியன் என்ற பிள்ளையையும் தக்ஷிணை என்ற பெண்ணையும் பெற்றான். பிறகு அந்த யக்கியன் தனக்குப் பத்தினியாகத் தன்னுடன் படைக்கப்பட்ட தக்ஷிணை என்பவனிடத்திலே பன்னிரண்டு பிள்ளைகளைப் பெற்றான். அவர்கள் முதல் மநுவந்தரத்தில் யாமர் என்ற தேவர்களாயினர்.
அதுபோலவே தக்ஷன் என்பவன் பிரசூதியின் மூலம் இருபத்து நான்கு பெண்களைப் பெற்றான். அவர்களிலே, சிரத்தை, லட்சுமி, திருதி, துஷ்டி, புஷ்டி, மேதை, கிரியை; புத்தி, லஜ்ஜை வபு, சாந்தி, சித்தி, கீர்த்தி என்ற பதின்மூன்று கன்னிகைகளைத் தர்மனுக்குத் திருமணஞ்செய்து கொடுத்தான். அந்த தர்மன் தன்பத்தினிகளில் ஒருத்தியான சிரத்தையிடத்தில் காமனையும், லக்ஷ்மியிடத்திலே தர்ப்பனையும், துஷ்டியிடம் சந்தோஷனையும், புஷ்டியிடம் லோபனையும், மேதையிடத்தில் சுருதனையும், கிரியையிடத்தில் தண்டன், நயன், விநயன் என்னும் மூவரையும், புத்தியிடம் போதனையும், லஜ்ஜையிடத்தில் விநயனையும், வபுவினிடத்தில் விவசாயனையும், சாந்தியினிடத்திலே ஷேமனையும், சித்தியிடம் சுகனையும், கீர்த்தியினிடத்திலே யசனையும் பெற்றான். அவர்களில் சிரத்தையின் புத்திரனான காமன் என்பவன் ரதி என்பவளிடத்தில் ஹர்ஷன் என்ற பிள்ளையைப் பெற்றான். பிறகு தக்ஷன் தன் பெண்களான கியாதி (மகிமை) சதி, (உண்மை) சமபூதி (தகுதி) ஸ்மிருதி (நினைவு), பிரீதி (அன்பு), க்ஷமை (பொறுமை) சன்னதி (எளிமை), அநுசூயை (தயை), ஊர்ச்சை (சக்தி), சுவாகை (சமர்ப்பணம்), சுவதை (துதி) என்ற பெயரையுடைய பதினோரு பெண்களையும் முறையே பிருகு மகரிஷிக்கும், ருத்திரனுக்கும், மரீசிக்கும், அங்கிரசுக்கும், புலஸ்தியனுக்கும், புலகனுக்கும், கிரதுவுக்கும், அத்திரிக்கும், வசிஷ்டனுக்கும், அக்கினிக்கும், பிதுர்த்தேவதைகளும் மணஞ்செய்து கொடுத்தான். இது இப்படியிருக்க அதர்மன் என்பவன் ஹிம்சை என்ற பெண்ணைச் சேர்ந்து, அநிருதன் (பொய்யை) என்கிற புதல்வனையும் நிகிருதி (வேசித்தன்மை) என்ற புத்திரியையும் பெற்றான். அவ்விருவரும் சேர்ந்து பயன், நரகன் என்ற இரு பிள்ளைகளைப் பெற்றனர். அப்பிள்ளைகள் தங்களுடன் பிறந்த மாயை வேதனா என்பவர்களையே மணந்தார்கள். அவர்களில் மாயை என்னும் மங்கை சர்வப் பிராணிகளையும் அபகரித்துக் கொள்ளும் மிருத்யுவைப் பெற்றாள். வேதனை என்பவள் ரவுரவனைச் சேர்ந்து துக்கன் என்பவனைப் பெற்றாள். அந்த மிருத்யுவுக்கு வியாதி, சூரை, சோகன், திருஷ்னை, குரோதன் என்ற பிள்ளைகள் பிறந்தனர். அவர்கள் அனைவரும் துக்கமயமான இயல்புடையவர்களாய், அதர்ம சொரூபிகளாய் ஊத்தரே தசுக்களாய், மனைவி மக்களற்றவர்களாய், ஜகத்தின் அழிவுக்கு ஏதுக்களாக இருந்தார்கள்.
முனிவரே! அதர்மாதி சொரூபங்கள் யாவும் ஸ்ரீவிஷ்ணுவினுடைய ரவுத்திரமான சரீரங்கள்! அவை நித்தியப் பிரளயத்துக்கு ஏதுக்கள், தக்ஷன், மரீசி, அத்திரி, பிருகு முதலிய பிரஜாபதிகள் நித்திய சிருஷ்டிக்கு காரணமாவர். மநுவும் மநுவின் புத்திரர்களும் சன்மார்க்கராயும் வீரியமே முக்கியமாக நினைத்தவராயுமுள்ள நித்திய சூரஸ்திதிக்கு காரணமாவார்கள். இவ்வாறு பராசரர் கூறியதும் மைத்ரேயர் அவரை நோக்கி, பிராணிகள் யாவும் அநித்தியங்களாக இருக்க, நித்திய ஸ்திதியும் நித்திய பிரளயமும் உண்டாவதற்குக் காரணம் என்ன? என்று கேட்டார். அதற்குப் பராசரர் பதில் கூறலானார். மைத்ரேயரே! பூதபாவனனும் அறியக்கூடாத சொரூபமுடையவனும் தடையற்றவனுமான ஸ்ரீமதுசூதனன் என்ற பெயரையுடைய பகவானே, தன் சக்தியினாலேயே சிறப்புடைய மநு முதலான அந்தந்த ரூபங்களைக் கொண்டு, சிருஷ்டி, ஸ்திதி, சங்காரங்களை நடத்துகிறான். அவற்றை நித்தியங்கள் என்றேன். இனி பிரளய பேதங்களைப் பற்றிச் சொல்கிறேன். பிரளயமானது, நைமித்திகம், பிராகிருதம், ஆத்தியந்திகம், நித்தியம் என்று நான்கு விதமாகும். அவற்றுள், எதனிடத்தில் ஜகத்பதியானவர் சயனிக்கிறாரோ அதுவே, பிரமனுடைய தனி அந்தியத்தில் உண்டாகும் நைமித்திகப் பிரளயமாகும். நான்முகப் பிரமனின் ஆயுள் முடிவில் பிரமாண்டம் உடைந்து சகல பூதங்களும் பிரகிருதியினிடத்தில் வயப்படுவது பிராகிருதப் பிரளயமாகும். யோகியானவன் ஞானதிசயத்தினால், அநாதி காம வாசனைகளால் செய்யப்பட்ட சங்கங்களையும் துறந்து, பரமாத்துமாவிடம் சாயுஜ்யத்தை அடைவது ஆத்தியந்திகப் பிரளயம் என்று வழங்கப்படும். சதுர்வித பூதங்களும் தத்தமது ஆயுள் முடிவில் மரணமடைவது நித்தியப் பிரளயம் என்று சொல்லப்படும். இனி, சிருஷ்டி பேதங்களைக் கேளும், பிரமன் பிறப்பதற்கு முன்பே, பிரகிருதியினால் மகத்தகங்கார தன்மாத்திரைகளை உண்டாக்குவது பிராகிருத சிருஷ்டி என்றும் தினப் பிரளயத்தின் முடிவிலே பிரஜைகளை உண்டாக்குவது நைமித்திக சிருஷ்டி என்றும் சொர்க்க நரகாதி போக அனுபவமான பிறகு ஜீவாத்துமாக்களே மனிதர், மிருகம், பறவை முதலான உருவங்களாகப் பிறப்பது நித்திய சிருஷ்டி என்றும் பவுராணிகர்கள் சொல்வார்கள். மைத்ரேயரே! ஜகத் காரண பூதரான ஸ்ரீவிஷ்ணு பகவான், சர்வபூத சரீரங்களிலேயும் இருந்து கொண்டே சிருஷ்டி, ஸ்திதி, லயங்களைச் செய்கிறார்.
ஆனால் எம்பெருமான் எல்லாச் சரீரங்களிலேயும் எப்போதுமே இருக்கும்போது, சிருஷ்டியாதிகள் காலபேதத்தினால் உண்டாக வேண்டுவது ஏன் என்று கேட்பீர்கள். சகல பூதங்களிலும் சிருஷ்டி ஸ்திதி, சங்கார சக்திகள் எப்பொழுதும் ஸ்ரீமந் நாராயணனுடைய சங்கல்பத்திற்குத் தக்கவாறே உண்டாகின்றன என்பதை அறிந்து கொள்ளுங்கள். இந்தப்படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய சக்திகள் மூன்றும் சத்வகுணம், ராஜஸகுணம், தாமச குணம் ஆகிய முக்குணங்களால் உண்டானவை. எவன் இவைகளுக்கு உட்படாமல் சர்வ சங்கவிமுக்தனாய், பிரம சாயுஜ்யத்தை அடைவானோ, அவன் அப்படியே இருப்பதன்றி மீண்டும் திரும்பமாட்டான்!
8. ருத்திர சிருஷ்டியும் ஸ்ரீதேவி வைபவமும்
பராசரர் தொடர்ந்து மைத்ரேயரை நோக்கிக் கூறலானார். மைத்ரேயரே! நான்முகனான பிரம்மதேவன் தாமச சிருஷ்டியைச் செய்தான் என்று முன் சொன்னேன் அல்லவா? அதைச் சொல்கிறேன்; கேளுங்கள். கல்பாதி காலத்திலே இரணியகர்ப்பன் தனக்குச் சமமான ஒரு குமாரனைப் பெற வேண்டும் என்று சிந்தித்துக் கொண்டிருக்கும்போது, அவனுடைய மடியில், கறுப்புஞ்சிவப்பும் கலந்த நீலலோகிதனான குமாரன் ஒருவன் தோன்றினான். அவன் இனிய குரலுடன் அழுதுகொண்டு ஓடினான். பிதாமகன் அவனை நோக்கி, மகனே! ஏன் ரோதனம் செய்கிறாய்? என்று கேட்க, அவன் எனக்கு நாமதேயம் கொடும் என்று கூறினான். அதைக் கேட்ட பிரும்மா, தேவனே நீ ருத்திரன் என்ற பெயர் பெற்று புகழ் அடையக் கடவாய்! ரோதனம் செய்யாமல் தைரியமாய் இரு என்று சொன்னார். அப்படிச் சொல்லியும் ருத்திரன் மீண்டும் ஒருதரம் ரோதனஞ் செய்ததால், பிரமன் அவனுக்குப் பவன், சர்வன், ஈசானன், பசுபதி, பீமன், உக்கிரன், மகாதேவன் என்ற ஏழு பெயர்களைச் சூட்டி, அப்பெயர்களையுடைய ருத்திர மூர்த்திகளுக்கு வெவ்வேறு ஸ்தானங்களையும், பத்தினிகளையும், புத்திரர்களையும் கொடுத்தார். அந்த எழுவரின் ஸ்தானங்களாவன? சூரியன், ஜலம், பூமி, அக்கினி, வாயு, ஆகாயம், தீட்சிதனான பிராமணன் சந்திரன் என்பனவாகும் அவன் அங்கு இருப்பதால் அதுவே சரீரமாயின. ருத்திராதி நாமமுடைய அந்த எட்டு மூர்த்திகளுக்கும் முறையே சுவர்ச்சலை, உஷை சுகேசி, சிவை சுவாகை. திசை, தீட்சை, ரோகிணி என்ற எட்டு பெண்களும் பத்தினிகளாவார்கள். இவர்களுக்கு சனி, சுக்கிரன், அங்காரகன், மனோஜவன், கந்தன், சொர்க்கன் சந்தானன், புதன் ஆகிய எண்மரும் பிள்ளைகள் இவர்களுடைய புத்திர பவுத்திராதி பரம்பரையினரால் கலகம் நிறைந்தது. இவ்விதம் அஷ்டமூர்த்தியாகிய ருத்திரன் தக்ஷப் பிரஜாபதியின் புத்திரியான சசிதேவியைக் கல்யாணம் செய்துகொண்டான். அந்தச் சசிதேவியும் தன் தந்தையின் கோபத்தால் தானும் கோபித்துத் தன் சரீரத்தை விட்டுவிட்டாள். பிறகு அவள் இமவானுக்கு மேனை என்ற மனைவியிடம் உமை என்ற பெயரோடு மறுபடியும் பிறந்தாள். சிவபெருமான் தன்னையே நினைத்துக் கொண்டிருந்த அந்தக் கன்னியை மீண்டும் திருமணஞ்செய்து கொண்டார். இது இப்படியிருக்க, முன்பு சொன்னபடி, பிருகு முனிவர் தம் மனைவியான கியாதியிடம் தாதா விதாதா என்ற பிள்ளைகளையும், ஸ்ரீமந்நாராயணனுக்குப் பிரிய பத்தினியான ஸ்ரீதேவி என்பவளையும் பெற்றார்.
இதைக் கேட்டதும் மைத்ரேயர், முனிவரே! அமிருதமதன காலத்தில் ஸ்ரீமஹாலட்சுமியானவள் திருப்பாற்கடலில் அவதரித்தாள் என்பது உலகம் அறிந்ததாயிற்றே! அப்படியிருக்க பிருகு முனிவரின் மகளாக ஸ்ரீதேவி பிறந்தாள் என்பது எவ்விதம் பொருந்தும்? என்று கேட்டார். அதற்குப் பராசரர் கூறலானார்; மைத்ரேயரே! உலக மாதாவான பிராட்டியானவள் என்றைக்கும் ஸ்ரீவிஷ்ணு பகவானை விட்டுப் பிரியாதவளாய், நித்யையாக இருப்பவள் அவளுக்கு பிறவிகள் இல்லை. ஆயினும் எம்பெருமானைப் போலவே, அவளும் அவதரிப்பதும் மறைவதுமாக இருப்பாள். எம்பெருமானைப் போலவே, ஸ்ரீதேவிப் பிராட்டியும், சகல கலியாண குணங்களோடு விளங்குவாள். சகல பூதங்களுக்கும் தாயும் தந்தையுமான அந்தத் திவ்வியத் தம்பதிகளுடைய விபூதி வைபவத்தைக் கூறுகிறேன், கேளும். சொல்லுக்குப் பொருள் அந்தப் பெருமாள். அந்தப் பொருளைத் தெரிவிக்கும் சொல் இந்தப் பிராட்டி; நீதி இவள்; அந்த நீதியின் உபாயமான நயம் அவன் இவள் புத்தி; அந்தப் புத்தியாலாகும் போதம் அவன். தருமம் அந்த ஸ்ரீமந்நாராயணன்; அந்தத் தருமத்திற்குச் சாதகமான சத்கிரியை ஸ்ரீதேவி; படைப்பவன் ஸ்ரீவிஷ்ணு; அந்தப்படைப்புச் சக்தி ஸ்ரீதேவி; படைப்பவன் ஸ்ரீவிஷ்ணு; அந்தப் படைப்புச் சக்தி ஸ்ரீதேவி; இவன் பூமி; இந்தப் பூமியை தரிப்பவன் விஷ்ணு; அந்தப் பகவான் சந்தோஷம்; அதை உண்டாக்கும் சந்துஷ்டி ஸ்ரீதேவி; இச்சை என்பது ஸ்ரீதேவி; காமம் என்பது பகவான்; யக்ஞம் ஜகந்நாதன். தக்ஷிணை ஜகன்மாதா! புரோடாசம் சனார்த்தனன்; ஆச்சியாகுதியானது கமலை. பிராக்கு வம்சம் என்பது மதுசூதனன்; பத்தினிச் சாலை என்பது ஸ்ரீதேவி யூபஸ் தம்பம் ஸ்ரீஹரி; யாகவயனம் ஸ்ரீலக்ஷ்மி! எம்பெருமான்-தர்ப்பை: பிராட்டியே சமித்து! சாமவேதம்-பகவான்; அதில் சேர்ந்த உத்கீதி என்பது லக்ஷ்மி! வாசுதேவன் அக்னி; இந்திரையானவள் சுவாகா தேவி.
ஸ்ரீவிஷ்ணு பகவானே சங்கரன்; ஸ்ரீ மகாலக்ஷ்மியே கவுரி. கேசவனே சூரியன்; அவனது பிரபையே கமலை! விஷ்ணுதேவன் பிதுர்தேவதா சொரூபி; ஜகன் மாதாவோ ஆகாயம் அதி விஸ்தாரமான அதன் பரப்பே விஷ்ணு அந்த ஸ்ரீயப்பதியே சந்திரன். அந்தச் சந்திரனின் காந்தியாகிய நிலவே ஸ்ரீதேவி! சர்வாக்தனான ஸ்ரீஹரியே வாயு; அந்தச் சந்திரனின் காந்தியாகியே நிலவே ஸ்ரீதேவி! சர்வக்தனான ஸ்ரீஹரியே வாயு; அந்தக் காற்றின் செய்கையே திருமகள்! சமுத்திரம் கோவிந்தன்; அந்தச் சமுத்திரத்தின் அலை முதலான விகிருதியெல்லாம் ஸ்ரீதேவி! மதுசூதனனே தேவேந்திரன்; இந்திரையே இந்திராணி சக்கரதரனான பகவானே யமன்; கமலாயையே யமபத்தினியான தூமார்னே! ஸ்ரீதரனே குபேரன்; ஸ்ரீதேவியே அந்தக் குபேரனின் பெருஞ்செல்வம்! விஷ்ணுவே வருணன் லக்ஷ்மியே வருணனின் பத்தினியான கவுரி! கோவிந்தனே தேவ சேனாதிபதியான கந்தன்; இந்திரையே தேவசேனை! கதாதரனே பிடிப்பு; அதற்கு காரணமான சக்தியே ஸ்ரீதேவி! நிமிஷம் நாராயணன் காஷ்டை லக்ஷ்மி! முகூர்த்தம்-வாசுதேவன் அந்த முகூர்த்தத்தின் அவயவமான கலை ஸ்ரீ லோகமாதா! திருவிளக்கு-சர்வேசுவரன்; அதன் காந்தி-லோகநாயகி! ஸ்ரீ மகாவிஷ்ணு விருட்சம்; ஸ்ரீதேவி கொடி! சக்கரதரன் பகல் ஸ்ரீகாந்தை இரவு! விஷ்ணுவே மணமகன்; ஸ்ரீதேவியே மணமகள்! பகவான் நதி! சொரூபன்; ஸ்ரீதேவி நதி சொரூபை நாராயணன் லோபம்; லக்ஷ்மியே ஆசை! கோவிந்தன் ராகம்; ஸ்ரீதேவியே அதன் காரணமாகிய காதல்! மைத்ரேயரே! இப்படி அநேக வாக்கியங்களைச் சொல்லிப் பயன் என்ன? அந்தத் திவ்விய தம்பதிகளின் விபூதியைச் சுருக்கமாகச் சொல்கிறேன் கேளுங்கள். தேவதைகளுக்குள்ளும், மனிதர்களுக்குள்ளும் திரியக்குகளிலும், மற்றுமுண்டான பொருட்களிலும் உள்ள ஆண் தன்மையான பெயரையுடையனவெல்லாம் ஸ்ரீஹரியே; பெண் லிங்கமான பெயருடையனவெல்லாம் ஸ்ரீதேவியே; என்று நினைப்பீராக! இவ்விருவரினும் வேறான வஸ்து ஒன்றும் இல்லை. எல்லாம் அவர்களில் வியாபிக்கப்பட்டு அவர்களது விபூதியாகவே இருக்கின்றன!
பிரம்ம புராணம் பகுதி-2




18. கவுதம முனிவரும் கங்கையும்

சிவனை மணம் புரிந்த பார்வதி, அவர் கங்கை மீது ஆசையாய் இருப்பது குறித்து வருத்தமுற்று கங்கையை அகற்ற பலவாறு முயன்றும் வெற்றி கொள்ள இயலவில்லை. அந்த நிலையில் தொடர்ந்து பதினான்கு ஆண்டுகள் பஞ்சம் தாண்டவமாடிற்று. அவ்வமயம் கௌதம முனிவரின் ஆசிரமம் மட்டும் பஞ்சத்தால் பாதிக்கப்படாமல் செழிப்பாகவே விளங்கியது. எனவே எல்லா முனிவர்களும் கவுதமர் ஆசிரமத்தை அடைய, அவர்களை வரவேற்றார் கவுதமர். இதற்கிடையில் தாயின் வருத்தத்தை அறிந்த கணேசரும் கவுதமர் ஆசிரமத்தை அடைந்தார். பார்வதிக்கு ஜயா என்றொரு தோழி. கணேசர், அவளிடம் ஒரு பசுவாக மாறி கவுதமர் வயலில் மேயும்படி கூற, அவ்வாறே நிகழ்ந்தது. பசு மேய்வதைக் கண்ட கவுதமர் ஒரு தர்ப்பைப் புல்லைக் கொண்டு அதை விரட்ட, பசு துயரக்குரல் எழுப்பி கீழே வீழ்ந்து இறந்தது. இவ்வாறு பசுஹத்யை நடந்த ஆசிரமத்தில் இருக்க இஷ்டம் இன்றி முனிவர்கள் அகன்றனர். அவர்களைத் தடுக்க கவுதமர் முயன்றார். மேலும், தான் என்ன பிராயச்சித்தம் செய்ய வேண்டும் என்று கூறுமாறு வேண்டினார். அப்போது கணேசர், சிவபெருமான் சடையிலுள்ள கங்கையை இறக்கி கீழே ஓடச் செய்து, அந்நீர் இறந்த பசுவின் உடலை அடைந்தால் பாவம் அகலும் என்று சொன்னார். கணேசரின் திட்டத்தை அனைவரும் ஆமோதித்தனர். கவுதமரும் அதை ஒப்புக்கொண்டார். கவுதமர் கைலாயம் சென்று சிவனைக் குறித்துத் தவம் செய்ய, மகிழ்ச்சியுற்ற சிவபெருமான் வேண்டும் வரம் கேட்குமாறு கூற, கவுதமரின் வேண்டுதலின்படி அவரும் கங்கையை இறக்கி விட்டார். இவ்வாறு கவுதமர் கங்கையை புவிக்குக் கொண்டு வந்ததால் கௌதமி கங்கை என்ற பெயர் ஏற்பட்டது. விண்ணில் கங்கைக்கு நான்கு உபநதிகளும், பூமியில் ஏழு கிளை நதிகளும், பாதாளத்தில் நான்கும் உள்ளன என்று கூறப்படுகிறது. 

19. கபோத தீர்த்தம்

கபோதம் என்றால் புறா. இரண்டு புறாக்களின் ஞாபகார்த்தமாக ஏற்பட்ட கபோத தீர்த்த வரலாற்றினைப் பார்ப்போம். பிரம்மகிரி என்ற மலையில் ஒரு கொடிய வேடன் இருந்தான். அவன் பறவைகள், மிருகங்களை மட்டுமின்றி பிராமணர்களையும், முனிவர்களையும் துன்புறுத்தி வந்தான். ஒருநாள் வேட்டை ஆடிக்கொண்டே காட்டில் வெகுதூரம் சென்றுவிட்டான் வேடன். அவனிடம் பிடிபட்ட சில புறாக்களும், பறவைகளும் இருந்தன. இருள் சூழ்ந்தது. மழையும் பெய்ய ஆரம்பித்தது. வேடனுக்குப் பசியும், தாகமும் அதிகரித்தது. அவன் ஒரு மரத்தை அடைந்து ஒரு கிளையில் அமர்ந்து இரவைக் கழிக்க முடிவு செய்தான். ஆனால், அவன் மனமோ மனைவி, மக்களை எண்ணி வருத்தமுற்றது. அந்த மரத்தில் பல நாட்களாக ஒரு பெண்புறாவும், ஆண் புறாவும் வாழ்ந்து வந்தன. அவற்றில் பெண் புறா வேடனால் பிடிக்கப்பட்டு கூண்டில் அடைப்பட்டு வேடனிடம் இருந்தது. இதனை அறியாத ஆண்புறா தன் மனைவியை எண்ணி வருந்தியது. வேடன் நல்ல உறக்கத்தில் இருந்தான். அவனிடமிருந்த பெண் புறா, ஆண் புறாவின் செவிகளில் விழும்படியும், ஆண் புறா பெண் புறாவின் காதுகளில் விழும்படியும்  பேசத் தொடங்கின. வேடன் உறங்குவதால் பெண் புறாவை விடுவிப்பதாக ஆண் புறா கூற பெண் புறா அதை மறுத்தது. மேலும், ஒன்று ஒன்றை அழித்து உயிர் வாழ்வது உலக இயற்கை. எனவே அந்த எண்ணத்தை விடுத்து விருந்தினனான வேடனை எண்ணி அவனுக்கு உதவுவது தமது கடன் என்று கூறிற்று. உடனே ஆண் புறா வேடனின் குளிரை நீக்கச் சுள்ளிகளையும், சருகுகளையும் கொண்டு தீ மூட்டியது. பின்னர் அது தீயில் விழுந்து இறந்தது. பெண் புறாவும் தானும் தீயில் விழுந்து உணவாக விரும்புவதாக கூறி தீயில் குதித்தது. இவற்றை உணர்ந்த அந்த வேடன் மனம் மாறினான். அவன் அன்று முதல் வேட்டையாடுவதை நிறுத்தியதுடன் இதுவரையில் செய்த கொலைகளுக்காக வருந்தி, தான் இனி செய்ய வேண்டுவது யாது? எனச் சிந்தித்தான். புறாக்களின் தியாகத்தைக் கண்டு விண்ணிலிருந்து வந்த விமானத்தில் புறாக்கள் ஏறி நல்லுலகை அடைந்தன. அப்போது அப்புறாக்கள் கவுதம கங்கையில் பதினைந்து நாட்கள் நீராடினால் பாவங்கள் மன்னிக்கப்படும் என்று வேடனிடம் கூறின. இவ்வாறு புறாக்கள் தியாகம் செய்ய தீயில் விழுந்த இடம் கபோத தீர்த்தம் என்ற பெயரைத் தாங்கி நிற்கிறது. 

20. கருட தீர்த்தம்

பெரிய நாகமாகிய அனந்தனின் மகன் மணிநாகன் என்பான். பாம்புகளின் பகைவன் கருடன். எனவே பாம்புகள் கருடனிடம் அச்சம் கொண்டிருந்தன. மணிநாகன் சிவனை வேண்டி கருடனால் தனக்கு அபாயம் ஏற்படாதவாறு வரம் பெற்று அச்சமற்று திரிந்து வந்தது. கருடனால் மணிநாகனைக் கொல்ல முடியாது எனினும் அவனைப் பிடித்து சிறையில் வைத்தது. சிவபெருமான் நந்தியிடம் மணிநாகனுக்கு என்ன ஆயிற்று. அதைக் காணவில்லையே என்று கேட்டார். அதற்கு நந்தி மணிநாகனைக் கருடன் சிறை வைத்திருக்கிறது என்றார். உடனே, நந்தியை விஷ்ணுவை நோக்கித் தவம் செய்யுமாறு சொல்ல, நந்தியின் தவத்தை மெச்சி தோன்றிய விஷ்ணுவிடம் நந்தி, கருடனது பிடியிலிருந்து மணிநாகனை விடுவிக்குமாறு வேண்டிட, விஷ்ணுவும் கருடனிடம் உடனே மணிநாகனை விடுவிக்கச் செய்தார். இதனால் கோபம் கொண்ட கருடன் விஷ்ணுவிடம், எல்லோரும் தன் தொண்டர்களுக்கு உதவி செய்கின்றனர், பரிசு அளிக்கின்றனர். ஆனால் நீங்களோ நானே பெற்ற ஒன்றையும் விட்டுவிடச் செய்கிறீர்கள். இது என்ன நியாயம் என்று கேட்டது. அப்போது விஷ்ணு நீ சொன்னது சரிதான். என்னை சுமந்ததால் நீ இளைத்து பலவீனம் அடைந்து விட்டாய். உன்னுடைய சக்தி, திறமை, சாமர்த்தியத்தால் தான் நான் அரக்கர்களை வெல்ல முடிந்தது. உனக்கு மிக்க பலம் உள்ளது. இதோ இந்த எனது சிறு விரலைத் தாங்கி உன் வலிமையை நீ நிரூபி என்று கூறி, தன் சிறு விரலைக் கருடன் தலையில் வைத்து அழுத்த கருடன் நசுங்கியது. அதனால் வெட்கமுற்று, தன் தவறுக்காக வருந்தி தன்னைக் காத்திடுமாறு சரணடைந்தது. விஷ்ணு நந்தியிடம், கருடனைச் சிவபெருமானிடம் அழைத்துச் செல்லுமாறு கூறி, கருடனுக்கு சிவபெருமான் அருள்புரிவார் என்று சொல்ல, கருடன் மணிநாகனை விடுதலை செய்து விட்டு பரமசிவனைச் சென்று தரிசித்தது. சிவபெருமான் கருடனை கௌதமி கங்கையில் தீர்த்தமாடி முன் போல் மாறிட அருள் புரிந்தார். அவ்வாறே கருடன் நீராடி முன்னைவிட பலமும், வேகமும் பெற்றது. கருடன் நீராடிய அவ்விடம் கருட தீர்த்தம் எனப்படுகிறது. 

21. விசுவாமித்திர தீர்த்தம்

முன்னொரு காலத்தில் கோர பஞ்சம் தலைவிரித்தாடியது. விஸ்வாமித்திர முனிவர், மனைவி மக்கள் மற்றும் சீடர்களுடன் கவுதமி கங்கை கரைக்கு வந்தடைந்தார். அவர்கள் உணவைத் தேடி அலைகையில் ஓர் இறந்த நாயின் உடல் மட்டும் காணப்பட்டது. அதன் இறைச்சியைத் தூய்மை செய்து கடவுளுக்கும், முனிவர்களுக்கும், மூதாதையர்களுக்கும் படைக்குமாறு கூறினார். அப்போது கழுகு வடிவில் அங்கு வந்த இந்திரன் அந்த மாமிசக் கலயத்தைத் திருடிச் சென்றார். இதை அறிந்த முனிவர் அவருக்குச் சாபம் அளிக்க எண்ணியபோது, இந்திரன் அந்தப் பாத்திரத்திலுள்ள இறைச்சியை அமிர்தமாக மாற்றிக் கொண்டுவந்து கொடுக்க, முனிவர் அதை ஏற்க மறுத்தார். உலகில் எல்லோரும் உணவின்றி தவிக்கையில் தனக்கு அமிர்தம் வேண்டாம் என்றும், அத்தகைய சூழ்நிலையில் நாயினிறைச்சியை உட்கொள்வது தவறாகாது. மேலும் அதை இறைவனுக்குப் படைப்பது பாவம் ஆகாது, என்றார். மழைக்குக் கடவுளாகிய இந்திரன், முனிவர் நாய் இறைச்சியை உண்ணாமல் செய்ய ஒரே வழி மழையே என்று எண்ணி மழை பொழியச் செய்ய பஞ்சம் பறந்தோடியது. அப்போது விசுவாமித்திரர் அமிர்தத்தை ஏற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சி நடந்த இடம் விசுவாமித்திர தீர்த்தம் எனப் பெயர் பெற்றது.

22. கவுதமி கங்கை ஜல மகிமை

சுவேதன் என்னும் பிராமணர் ஒரு சிவபக்தர். கௌதம முனிவரின் நண்பர். கவுதமி கங்கை நதிக்கரையில் ஆசிரமம் அமைத்து வாழ்ந்து வந்த அவர் மரணம் அடைந்தார். அவரை யமனிடம் அழைத்துச் செல்ல வந்த யம தூதர்களால் அவரது ஆசிரமத்தில் நுழையக்கூட முடியவில்லை. அவர்கள் திரும்பி வராததைக் கண்ட சித்திரகுப்தன் அது குறித்து யமனிடம் கூற, யமன் தனது தோழனாகிய மிருத்யுவை அனுப்பி வைத்தான். மிருத்யு, ஆசிரம வாயிலிலேயே நின்று கொண்டிருந்த யமதூதர்களை அணுகி கேட்க, சுவேதனின் உடலை சிவபெருமான் காத்துக் கொண்டிருப்பதாகக் கூறினார்கள். சிவகணங்களில் ஒருவர், யமதூதர்களையும், மிருத்யுவையும் பார்த்து அவர்களுக்கு என்ன வேண்டும். ஏன் அங்கு நிற்கிறார்கள் என்று கேட்க, மிருத்யு சுவேதனின் ஆயுள் முடிந்து விட்டது. அவரை யமபுரிக்கு அழைத்துச் செல்ல வந்திருப்பதாகக் கூறினான். சுவேதனின் உடல் மீது மிருத்யு பாசக்கயிறை வீச சிவகணம் மிருத்யுவைத் தடியால் அடித்துக் கொன்றான். செய்தி கேட்ட யமதர்மன் மிகவும் கோபம் கொண்டு தன் பரிவாரங்களுடன் சுவேதனின் வீட்டைத் தாக்கினான். சிவபெருமான் பக்கத்தில் கணேசர், நந்தி, கார்த்திகேயன் முதலியோர் யமனுடன் போர் தொடுத்தனர். கடும் போர் நடந்தது. கார்த்திகேயனால் யமன் கொல்லப்பட்டான். இந்தப் பிரச்சினையை ஒரு முடிவுக்குக் கொண்டு வர தேவர்கள் கூடினர். யமன் தன்னுடைய கடமையைச் செய்தான். ஆனால் சிவபக்தர்களை யமன் யமபுரிக்கு அழைத்துச் செல்லக் கூடாது. அவர்கள் நேராகச் சுவர்க்கம் செல்ல வேண்டும் என்றார். அந்த நிபந்தனை எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. கௌதமி கங்கை ஜலத்தை நந்தி கொண்டு வந்து யமன் மீதும், மற்றும் போரில் இறந்தவர்கள் மீதும் தெளிக்க அவர்கள் உயிர் பெற்றனர். 

23. நிதிக்கதிபதி குபேரன்

விச்ரவ முனிவருக்கு இரண்டு மனைவியர். மூத்தவள் மகன் குபேரன். இளையவள் ஓர் அரக்கி. அவளுக்கு ராவணன், கும்பகர்ணன், விபீஷணன் என்று மூன்று மகன்கள். இலங்கையைப் பேரும், புகழுடன் குபேரன் ஆண்டு வந்தான். இது அவனுடைய சிற்றன்னைக்குப் பொறுக்கவில்லை. அதைப் பற்றி தன் புத்திரர்களிடம் கூறி, அவர்களும் புகழ்பெற ஆவன செய்யுமாறு கூற, அவர்கள் கானகம் சென்று பிரம்மனை நோக்கிக் கடுந்தவம் புரிந்து வலிமை பெற்று நாடாள வரம் வேண்ட பிரம்மனும் அவர்கள் விரும்பியபடி வரம் அளித்தார். இவ்வாறு வலிமை பெற்ற ராவணன், கும்பகர்ணன் ஆகியோர் குபேரனை எதிர்த்து தோற்கடித்தனர். அவனை இலங்கையை விட்டு விரட்டினர். குபேரனுடைய புஷ்பக விமானத்தையும் கைப்பற்றினர். குபேரனுக்கு யாரேனும் அடைக்கலம் கொடுத்தால் அவனைக் கொல்வதாக அறிவிக்க யாரும் அவனுக்கு அடைக்கலம் அளிக்க முன்வரவில்லை. குபேரன் தன் பாட்டனாராகிய புலஸ்தியரின் அறிவுரையை வேண்டினான். புலஸ்தியர் குபேரனை கவுதமி கங்கைக் கரையை அடைந்து சிவனைக் குறித்துத் தவம் செய்யுமாறு கூறினார். குபேரன் கவுதமி கங்கைக் கரையில் சிவனை நினைத்து தவம் செய்ய சிவபெருமான் தோன்றி, குபேரனை நிதிக்கதிபதியாக்கி ஆசிர்வதித்தார். இவ்வாறு குபேரன் செல்வத்துக்குக் கடவுள் ஆனான். 

24. ஹரிச்சந்திரன்

இஷ்வாகு குலத்தோன்றல் ராஜா ஹரிச்சந்திரனுக்கு புத்திரப் பேறு ஏற்படவில்லை. நாரதரும், பர்வதரும் அவனுக்குப் புத்திரன் இல்லாவிட்டால் அவர் நரகம் செல்ல நேரிடும் என்றனர். அதற்கான வழியை அவன் முனிவர்களிடம் கேட்க, அவர்கள் கவுதமி கங்கைக் கரையை அடைந்து வருணனைக் குறித்து பிரார்த்திக்கும் படியும், அதனால் மகப்பேறு ஏற்படும் என்றும் அறிவுரை கூறினர். வருணன் தோன்றி அவனுக்கு ஒரு மகன் பிறப்பான் என்றும், ஆனால் அவனை வருணனைக் குறித்த யாகத்தில் பலி கொடுக்க வேண்டும் என்று கூற, ஹரிச்சந்திரன் சம்மதிக்க அவனுக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்து ரோஹிதன் என்ற பெயரில் வளர்ந்து வந்தது. சில நாட்களில் வருணன் தோன்றி யாகத்தைப் பற்றி நினைவூட்ட அவனுக்குப் பத்து நாட்கள் ஆகட்டும். அதுவரையில் தூயவனாகான் என்று கூறி வருணனை அனுப்பிவிட்டான். பன்னிரண்டு நாட்கள் கழித்து வருணன் வர குழந்தைக்குப் பல் முளைக்கட்டும் என்றான். ஏழாண்டுகள் கழித்து மறுபடியும் வருணன் வந்து கேட்க, அவனுக்குப் பால் பற்களே உள்ளன. உண்மை பற்கள் வளரட்டும் என்றான். அடுத்து வருணன் வந்தபோது அந்தப் பாலகன் க்ஷத்திரியக் குலத்தோன்றல். அவன் அங்கே சாத்திர வித்தைகள் கற்று முழு க்ஷத்திரியன் ஆகட்டும் என்றான் மன்னன். பதினாறு வயதில் அவனுக்குப் பட்டாபிஷேகம் செய்வித்தான் வருணன். அவ்வமயம் வந்த வருணன் முன் மன்னனும், இளவரசன் ரோஹிதனும் உரையாடினர். அப்போது மன்னன் பேசுவதற்கு முன்பே ரோஹிதன் வருணனிடம், தான் விஷ்ணுவைக் குறித்த ஒரு யாகம் செய்ய முடிவு செய்திருப்பதாகவும், அதைச் செய்ய அனுமதிக்குமாறும் அதன்பின் விரும்பிய வண்ணம் செய்யலாம் என்று கூறினான்.ரோஹிதன் கானகம் சென்றான். அவ்வமயம் அவன் தந்தை வயிற்று நோயால் அவதியுறுவதாகவும் செய்தி எட்டியது. காட்டில் ரோஹிதன் அஜிகர்த்தா என்னும் ஓர் ஏழை முனிவரை அவரது மனைவி, மற்றும் மூன்று புத்திரர்களுடன் வறுமையில், உண்ண உணவின்றித் தவிப்பதைக் கண்டான். அவன் முனிவரிடம் ஒரு யாக பலிக்காக அவருடைய புதல்வர்களில் ஒருவரைத் தருமாறும் அதற்கு ஈடாக ஆயிரம் பசுக்களும், ஆயிரம் பொற்காசுகளும், ஆயிரம் ஆடைகளும், நிறைய செல்வமும் அளிப்பதாகக் கூறினான் ரோஹிதன். முனிவர் தனது நடுமகனாகிய ஷுனஷேபனைக் கொடுக்க, ரோஹிதன் அவனைத் தந்தையிடம் அழைத்து வந்தான். அப்போது ஹரிச்சந்திரன் மன்னன் பிராமணர்களை ரக்ஷிக்க வேண்டியவன். எனவே அவனை முனிவரிடம் திருப்பிக் கொண்டு போய் விட்டுவிடு என்ற ஆணையிட்டான். அப்போது ஓர் அசரீரி வாக்கு கேட்டது. யாரும் பலி ஆக வேண்டியதில்லை. ஷுனஷேபனைக் கவுதமி கங்கைக் கரைக்கு அழைத்துச் சென்று வருணனை முன்னிட்டு யாகம் நடக்கட்டும். அது மிகச்சிறந்த புண்ணிய நதி. அதன் கரையில் செய்யப்படும் யாகத்திற்குப் பலி தேவையில்லை என்றது. ஹரிச்சந்திரன் அவ்வாறே செய்ய வருணனும் திருப்தி அடைந்தான். விசுவாமித்ர முனிவர் ஷுனஷேபனைத் தன் மகனாகத் தத்தெடுத்துக் கொண்டார். 

25. விருத்த கவுதமனும் விருத்த சங்கமமும்

கௌதம முனிவருக்கு விருத்த கவுதமன் என்றொரு மகன் இருந்தான். அவன் ஒரு மூக்கறையன். எனவே அவன் குருகுலம் செல்லவில்லை. கற்கவுமில்லை. எனினும் எப்போதும் சில மந்திரங்களை உச்சரித்த வண்ணம் இருந்தான். இளமை அடைந்த அவன் உலகைச் சுற்றிவரக் கிளம்பினான். மூக்கறையன் என்பதால் அவனுக்குத் திருமணம் ஆகவில்லை. சுற்றுப்பயணம் கிளம்பிய அவன் ஷிதகிரியை அடைந்தான். அங்கு ஓர் அழகிய குகையைக் கண்டு அதனை இருப்பிடமாக்கிக் கொள்ள உள்ளே நுழைந்தான். அதனுள் ஓர் ஆச்சரியத்தைக் கண்டான். அதனுள் வயது முதிர்ச்சியால் மிகவும் மெலிந்த ஒரு முதியவனைக் கண்டு அவளுடைய பாதங்களைத் தொட முயற்சிக்கையில் அம்முதியவள், அவன் அவளுடைய குரு என்றும், அதனால் தன்னை வணங்கக் கூடாது என்றும் தடுத்தாள். அப்போது முனிபுத்திரன் வியப்புற்று அது எவ்வாறு சாத்தியமாகும், தானோ வயதில் சிறியவன் என்று கூறி மூதாட்டியை வினவ, அவள் தன் வரலாற்றைக் கூறினாள். 

மூதாட்டியின் வரலாறு: 

ரிதத்வஜன் என்றொரு இளவரசன் இருந்தான். அவன் ஓர் அழகிய வலிமை வாய்ந்த இளைஞன். அர்ஷ்டிஷேனனின் மகன். அவன் வனத்தில் வேட்டையாடித் திரிய அந்த குகைக்கருகில் ஓர் அப்சர மங்கையைக் கண்டான். அவள் பெயர் சுஷ்யமை. இருவரும் திருமணம் செய்து கொள்ள அவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. இந்நிலையில் அந்த இளவரசன் ஊர் திரும்ப நேர்ந்தது. அப்போது சுஷ்யமை அந்தப் பெண் குழந்தையிடம் அவள் குகையை விட்டு வரக்கூடாது என்றும், குகையில் அவள் முதல் முதல் சந்திக்கும் ஆணே அவளுக்குக் கணவனாவான் என்றும் கூறிச் சென்று விட்டான். அந்தப் பெண் குழந்தையே இந்த வயது முதிர்ந்த மூதாட்டி. ரிதத்வஜனும் அவன் மகனும் நெடுங்காலம் நாடாண்டனர். இத்தனை ஆண்டுகளாகத் தான் அங்கிருப்பதாகக் கூறினாள் மூதாட்டி. முதன்முதலில் தான் கண்ட ஆண் விருத்த கௌதமனே என்றும், அவனே அவள் கணவன் என்றும், ஒரு பெண்ணுக்கு அவள் கணவன் குரு அல்லவா என்றும் சொன்னான். அப்போது அவன், அதெப்படி சாத்தியமாகும். நீயோ மூதாட்டி. நானோ உனக்குக் குழந்தை போல என்று மறுக்க, அவளோ அவன் தன்னை மணம் செய்து கொள்ளாவிடின் தற்கொலை செய்து கொள்வதாகக் கூறினாள்.
அப்போது அவன் தான் அசிங்கமானவனென்றும் தான் கல்விமானாயும், அழகனாயுமானால் அவளை மணப்பதாகவும் கூறினான். அதற்கு மூதாட்டி, தான் சரசுவதியைக் குறித்துத் தவம் ஆற்றித் திருப்தி செய்திருப்பதால் அவள் அவனைக் கல்விமான் ஆக்குவாள் என்றும், வருணனிடம் வேண்டியுள்ளதால் வருணன் அவனை அழகனாக்கி விடுவான் என்றும் கூறினாள். உடனே விருத்த கவுதமன் கல்விமானாகவும், பேரழகனாகவும் மாறி அவளை மணந்து சுகமாக வாழ்ந்து வந்தான். பல முனிவர்கள் அவர்கள் ஆசிரமத்திற்கு வந்தனர். அவர்களில் சிறந்த கல்விமான்களாகிய வசிஷ்டரும், வாமதேவரும் இருந்தனர். அவர்களுடன் சில இளம் சீடர்களும் இருந்தனர். அவர்கள் இந்தத் தம்பதியரைக் கண்டு எள்ளி நகையாடினர். அவர்கள் அந்த ஆண் யார் என்று மூதாட்டியிடம் கேட்டனர். இதனால் இருவரும் வெட்கமடைந்தனர். அவர்கள் அகஸ்திய முனிவரை நாடி அவருடைய அறிவுரையை வேண்டினர். முனிவர் அவர்களிடம் கவுதம கங்கையின் சிறப்பை எடுத்துக் கூறி அங்கு சென்று அதில் நீராடினால் கோரிக்கைகள் நிறைவேறும் என்ற சொன்னார். அவ்வாறே அவர்கள் தீர்த்தமாடி அரியையும், அரனையும் வழிபட்டனர். கிழவி அழகிய குமரியானாள். இத்தகைய அதிசய நிகழ்ச்சி நடந்த இடம் விருத்த சங்கமம் என்று அழைக்கப்படுகிறது. 

26. பிப்பலதன் வரலாறு

பல்லாண்டுகளுக்கு முன்பு ததீசி என்ற முனிவரும், அவரது மனைவி லோபமுத்திரையும் வாழ்ந்து வந்தானர். புனித நதி கங்கøக்கருகில் ததீசி ஆசிரமம் இருந்தது. அத்தம்பதியருடன் லோபமுத்திரையின் சகோதரி கபஸ்தினியும் இருந்து வந்தாள். அவருடைய தவ வலிமையை அறிந்த தானவர்களும், தைத்தியர்களும் அவரது ஆசிரமத்தில் நுழையவே அஞ்சினர். ஒரு சமயம் தேவாசுரப் போரில் அசுரர்களை வென்ற தேவர்கள் ததீசி முனிவருக்குத் தமது மரியாதையையும் வணக்கத்தையும் செலுத்த அவருடைய ஆசிரமத்திற்கு வந்தனர். முனிவர் அவர்களுடைய நலன்கள் பற்றி விசாரித்தார். அப்போது தேவர்கள், அசுரர்கள் தோற்று ஓடிவிட்டதால் இனி தமது ஆயுதங்களுக்கு பாதுகாவலாக ஓரிடத்தைத் தேடி வந்த தேவர்கள், அவற்றை முனிவர் ஆசிரமத்தில் வைக்க விரும்பி அவரை வேண்டினர். முனிவர் சம்மதம் தெரிவிக்கவே, தேவர்கள் அவற்றை ஆசிரமத்தில் வைத்து விட்டுச் சென்றனர். அது கண்ட லோபமுத்திரை, பற்றற்ற முனிவர், மற்றவர் பொருள்களைத் தன்னிடத்தில் வைத்துக் கொள்வது சரியல்ல. அந்த ஆயுதங்களுக்கு ஏதேனும் நேர்ந்தால் என்ன செய்வது? தேவர்கள் நம்மைக் குறை கூறமாட்டார்களா? என்றாள். நான் அதை எண்ணிப் பார்க்கவில்லை. எனினும் வாக்குக் கொடுத்த பின் அதிலிருந்து பின்வாங்க முடியாது என்றார் முனிவர். பல்லாண்டுகள் கழிய ஆயுதங்கள் மறைய ஆரம்பிக்க, என்ன செய்வதென்றறியாத முனிவர் அவற்றை புனித நீரில் தூய்மை செய்ய, அவை தமது சக்தியை இழந்துவிட்டன. அந்த நீரைத் ததீசி முனிவர் குடித்து விட்டார். பின்னர் தேவர்கள் அவர்கள் ஆயதங்களைப் பெற வந்து முனிவரைக் கேட்டனர். மறுபடியும் அசுரர்கள் வலிமை பெற்றுள்ளனர் என்றனர். முனிவர் அவர்களிடம் நடந்ததைக் கூறி அவை வலிமை இழந்துவிட்டதாலும், கழுவின நீரை அவர் பருகி விட்டதாலும், தான் தனது தவவலிமையால் உயிரை விடுவதாகவும், தன்னுடைய எலும்புகளிலிருந்து சிறந்த ஆயுதங்கள் உருவாகும் என்றார். ததீசி முனிவர் மரிக்க, தேவர்கள் விசுவகர்மாவிடம் முனிவர் எலும்பிலிருந்து ஆயுதங்களை உருவாக்க வேண்டினர். அப்படித் தயாரான ஆயுதங்களில் வஜ்ராயுதம் தலை சிறந்தது. இவ்வளவு நடைபெறும் போது லோபமுத்திரை அங்கில்லை. முனிவர் உடலுடன் அவள் உடன்கட்டை ஏற விரும்பினாள். ஆனால் அவள் கருவுற்றிருந்ததால் சதி தடைப்பட்டது. குழந்தை பிறந்தவுடன் அதை ஒரு பிப்பல மரத்திடம் (அத்திமரம்)  வளர்க்க விட்டுவிட்டாள். 

பிப்பலதன்:  

பிப்பல மரத்தினால் வளர்க்கப்பட்ட அவன் பிப்பலதன் எனப்பட்டான். அம்மரம் பிப்பலதனுக்கு அமிர்தம் கேட்டு, சந்திரனை வேண்டிட, சந்திரன் கொடுக்க பிப்பலதன் அதிக பலம் பெற்றான். பிப்பலதன் தன் பெற்றோர்களின் மரணம் பற்றிய விவரங்களைக் கேட்டு பழிவாங்க நினைத்தான். பிப்பல மரம் அவனைச் சந்திரனிடம் அழைத்துச் செல்ல, சந்திரன் நல்லுரை வழங்கினான். சந்திரன் பிப்பலதனிடம் அவன் சிறியன் என்றும், அவன் கல்வி கற்க வேண்டும், அஸ்திர சாஸ்திர வித்தைகளைக் கற்க வேண்டும் என்றும் தண்ட காரணியத்துக்குச் செல்லுமாறும் அங்கு கௌதம கங்கை பாய்கிறது என்றும், அங்கு சென்று சிவனைக் குறித்து தவம் செய்தால் அவனுடைய கோரிக்கை நிறைவேறும் என்றும் அறிவுரை வழங்கினான். அவ்வாறே பிப்பலதன் தவம் செய்ய சிவபெருமான் தோன்றி, என்ன வரம் வேண்டும் என்று கேட்க, தேவர்களை நான் அழிக்க வரம் தரவேண்டும் என்று கேட்டான். அப்போது சிவபெருமான் தன் நெற்றியில் உள்ள கண்ணை அவன் என்று பார்க்கிறானோ அன்று அவன் கோரிக்கை நிறைவேறும் என்றார். நெடுநாட்களாகியும் சிவபெருமானைக் காணவோ, அவரது நெற்றிக் கண்ணைக் காணவோ இயலாததால் மறுபடியும் சிவனைக் குறித்துக் கடுந்தவம் செய்ய சிவனது நெற்றிக்கண்னைக் காண அதிலிருந்து ஒரு பூதம் தோன்றியது. அது பிப்பலதனிடம் என்ன வேண்டும் என்று கேட்க, பிப்பலதன் தன் பகைவர்களாகிய தேவர்களை அழிக்குமாறு ஆணை இட்டான். உடனே அது பிப்பலதனையே எதிர்த்தது. அதற்கு பிப்பலதன் என்ன காரணம் என்று கேட்க, அவன் உடலும் தேவர்களாலேயே உண்டாகியது. எனவே உன்னையும் நான் கொல்வேன் என்றது. தன்னைக் காத்துக் கொள்ள பிப்பலதன் சிவனிடம் ஓடினான். சிவபெருமான் ஓர் இடத்தைப் பிப்பலதனுக்காகக் குறிப்பிட்டு அதில் அவன் வசிக்க வழி ஏற்படுத்தினார். அவ்விடத்தில் பூதம் செல்ல முடியவில்லை. இதற்கிடையில் தேவர்கள் சிவபெருமானிடம் சென்று தங்களைக் காப்பாற்ற வேண்டினர்.

பிப்பலதனுக்கு அறிவுரை:  

சிவபெருமான் பிப்பலதனிடம் கோபத்தை அடக்கிக் கொள்ளுமாறும், தேவர்களைக் கொல்வதால் அவனுடைய பெற்றோர்கள் திரும்பிவரப் போவதில்லை என்றும் கூறி சாந்தி அடையச் சொன்னார். ஆனால், பிப்பலதன் தன் பெற்றோர்களை ஒருமுறை பார்க்க விரும்பினான். அப்போது விண்ணிலிருந்து ஒரு விமானம் வந்தது. அதில் ததீசி முனிவரும், லோபமுத்திரையும் இருந்தனர். அவர்கள் பிப்பலதனை ஆசிர்வதித்து, திருமணம் செய்து கொண்டு குழந்தைகள் பெற்று இல்லறம் நடத்துமாறு அறிவுரை கூறினர். அந்தப் பூதம் ஒரு உபநதியாகி கங்கையுடன் இணைந்தது. 

27. நாகேசுவரனும் நாகதீர்த்தமும்

பிரதிஷ்டானபுரம் என்ற நகரில் சூரேஸ்வரன் என்னும் ஓர் அரசன் ஆண்டு வந்தான். ஒருநாள் பிரார்த்தனைக்குப் பிறகு அவன் மனைவிக்கு ஒரு குழந்தை பிறந்தது. அது ஒரு பாம்பாக இருப்பதைக் கண்டு மன்னனும், அவள் மனைவியும் துயரக் கடலில் ஆழ்ந்தனர். எனவே, அக்குழந்தையை யாருக்கும் தெரியாமல் ரகசியமாய் வளர்த்து வந்தனர். சில மாதங்களில் இளவரசனாகிய அந்தப் பாம்பு ஒரு மனிதக் குழந்தையைப் போல பேச ஆரம்பித்தது. அதற்கு வேதங்களைக் கற்பிக்க ஏற்பாடு செய்ய அதுவும் கற்று முடித்தது. அப்போது அந்த நாகக்குழந்தை தனக்குத் திருமணம் செய்து வைக்குமாறும், தனக்கொரு புத்திரன் இல்லாவிடில் நரகமே வாய்க்கும் என்றும் அந்த நாகம் கூறிற்று. இதைக் கேட்டு வியப்புற்ற மன்னன் எந்த இளவரசி பாம்பை மணக்கச் சம்மதிப்பாள் என்று கேட்டான். அதற்கு அது அதெல்லாம் தெரியாது தனக்குத் திருமணம் செய்து வைக்காவிடில் தற்கொலை செய்து கொள்வதாக கூறிற்று. அதற்கு எத்தனையோ வழிமுறைகள் உள்ளன. ஓர் இளவரசியைக் கடத்தி வந்து மணம் செய்விக்கலாம் என்றது. செய்வதறியாமல் மன்னன் அமைச்சர்களிடம், இளவரசன் தக்க வயது அடைந்து கல்வி கேள்விகளில் சிறந்துள்ளான். தைரியசாலிகளில் அவனுக்கு இணை யாரும் இல்லை. அவனுக்குத் திருமணம் செய்வித்து தான் வனம் சென்று தவம் செய்யப் போவதாகக் கூறினான். ஆனால், நாகேசுவரன் ஒரு பாம்பு என்ற விஷயம் அமைச்சர்களுக்குத் தெரியாது.
சூரசேனனுக்கு அறிவுமிக்க, மூத்த அமைச்சர் ஒருவர் இருந்தார். அவர் நாட்டின் கிழக்கில் விஜயன் என்றொரு மன்னன் ஆண்டு வருகிறான் என்றும், அவனுக்கு எட்டு புத்திரர்களும், போகவதி என்ற ஒரு புத்திரியும் இருக்கிறாள், அவள் சிறந்த அழகி. அவள் நாகேசுவரனுக்குத் தக்க மனைவி ஆவாள் என்றார். அந்த அமைச்சர் மன்னன் விஜயனிடம் தூதாக அனுப்பப்பட்டார். ஓர் இளவரசி ஒருவனை நேரில் பார்த்துத் தான் விவாகம் செய்து கொள்ள வேண்டும் என்பதில்லை. அவள், வாளுக்கோ அல்லது எந்த ஆயுதத்துக்கோ மாலையிட்டு மணம் செய்து கொள்ளலாம். அமைச்சர் மன்னன் விஜயனிடம் சில முக்கிய காரணங்களால் இளவரசன் நேரில் வரமுடியாத சூழ்நிலை. எனவே இளவரசன் வாளுக்கு மாலையிட்டு மணம் செய்யலாம் என்று கூற, மன்னனும் அதற்கு இசைந்தான். எனவே, இளவரசியுடன் அனைவரும் பிரதிஷ்டானபுரம் வந்தடைந்தனர். அப்போது நாகேசுவரனின் தாயார் ஒரு பணிப்பெண்ணை அனுப்பி மணமகள் இளவரசியிடம் அவள் கணவன் ஒரு பாம்பு என்று கூறி, அதற்கு அவளுடைய பிரதிக்கிரியை எப்படி இருக்கிறது என்று அறிய முற்பட்டாள். அவ்வாறே பணிப்பெண் சென்று இளவரசியிடம் கூற, இளவரசி அது தான் செய்த பாக்கியம், பெண்கள் சாதாரணமாக ஆண்களை மணப்பர். தான் முற்பிறவியில் செய்த நல்வினைப் பயனால் நாக தேவதையை மணக்கிறேன் என்று கூறினாள். இவ்வாறு இளவரசி கூற, அவளை நாகேசுவரன் முன் கொண்டுவர போகவதியைக் கண்டவுடன் நாகேசுவரனுக்கு முற்பிறவி ஞாபகம் வந்தது. தான் முன் ஜென்மத்தில் சிவனுடன் தோழனாக இருந்ததும், அப்போது போகவதி தன் மனைவியாக இருந்ததும் நினைவுக்கு வந்தது. ஒரு சமயம் பரமன் பார்வதியிடம் ஒரு நகைச்சுவை சொல்ல அங்கிருந்த அவனும் அதைக்கேட்டு சிரிக்க, சிவனார் அவனை ஒரு மனிதனுக்குக் குழந்தையாக, பாம்பு வடிவில் பிறக்க சாபமிட்டார். அதே சமயம் போகவதிக்கும் தன் முற்பிறவி செய்திகள் நினைவுக்கு வந்தன. இருவரும் கௌதம கங்கை ஆற்றை அடைந்து புனித நீராடினர். நாகேசுவரன் ஓர் அழகிய ஆண் வடிவம் பெற்றான். இருவரும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர். அவன் தந்தை சூரசேனன் இறந்த பிறகு நாகேசுவரன் அரசாட்சி செய்து இறுதியில் கைலையை அடைந்து சிவசந்நிதியைப் பெற்றான். அந்த ஆற்றங்கரையில் இருவரும் ஓர் சிவாலயம் எழுப்பினர். அவ்விடத்தின் பெயர் நாகதீர்த்தம் ஆகும்.

28. நான்முகனாகிய பிரமன்

ஒரு சமயம் நடந்த தேவாசுரப் போரில், தேவர்கள் பிரம்மனின் அறிவுரையைக் கேட்க வர, அவர் அவர்களுடன் சிவபெருமானைத் தரிசித்தார். சிவனார் தேவர்களுக்கு உதவியாகப் போரில் கலந்துகொண்டு அசுரர்களை சுமேரு மலையிலிருந்தும், சொர்க்கத்திலிருந்தும் விரட்டி அடிக்க அவருக்கு உடலில் அதிக வியர்வை ஏற்பட, வேர்வைத் துளிகள் விழுந்த இடத்திலெல்லாம் தோன்றிய பூதங்களும் சிவபெருமானுக்கு உதவியாக நின்றன. அவை மாத்ரிகள் எனப்பட்டன. அவை அரக்கர்களைப் பாதாளத்திற்குத் துரத்திச் சென்று கொல்லுகையில், பிரம்மனும் மற்ற தேவர்களும் கவுதமி கங்கை நதிக்கரையில் காத்திருந்தனர். அந்த இடமே பிரதிஷ்டானபுரம் என்றானது. அரக்கர்களைக் கொன்று விட்டு பூமிக்கு வந்த மாத்ரிகள் கவுதம கங்கைக் கரையில் வசித்தனர். அங்குள்ளது மாத்ரி தீர்த்தம். பூர்வம் பிரம்மனுக்கும் ஐந்து தலைகள் இருந்தன. ஐந்தாவது தலை கழுதை வடிவில் இருந்தது. அரக்கர்கள் பாதாளத்துக்கு ஓட, இந்தக் கழுதைத் தலை அரக்கர்களை நோக்கி ஏன் ஓடுகிறீர்கள் திரும்பி வாருங்கள். நானும் உங்களுக்காக தேவர்களுடன் போர் செய்கிறேன் என்றது. தேவர்களுக்கு உதவியாக பிரம்மன் போரில் ஈடுபட அவரது கழுதை தலை மட்டும் அரக்கர்களுக்கு உதவ முற்பட்டது கண்டு தேவர்கள் விஷ்ணுவிடம் சென்று, பிரம்மனின் கழுதை தலை எல்லோரையும் குழப்பத்தில் ஆழ்த்துவதாகக் கூறி அதை நீக்கிவிட வேண்டினர். நீக்குவது எளிது என்றாலும், அது புவியில் விழுந்தால் உலகையே அழித்து விடும். எனவே அதற்கான வழி காண சிவபிரானைப் பிரார்த்தியுங்கள் என்றார் விஷ்ணு. புவியும், கடலும் பிரம்மனது கழுதைத் தலையை ஏற்க முடியாத நிலையில் என்ன செய்யலாம் என்று எண்ணி இறுதியில் சிவனே அத்தலையை ஏற்பதாக முடிவாயிற்று. பிரம்மனது தலையைச் சிவபெருமான் கொய்த இடம் ருத்ர தீர்த்தம் எனப்படுகிறது. இதனால் பிரம்மன் நான்கு முகங்களுடன் சதுர்முகன் அல்லது நான்முகன் எனப்பெயர் பெற்றார். கௌதம கங்கைக் கரையில் பிரம்மனது கோயில் உள்ள இடம் பிரம்ம தீர்த்தம் எனப்படுகிறது. இங்கு பிரம்மதரிசனம் செய்வதன் மூலம் ஒரு பிராமணனைக் கொன்ற பாவத்துக்கு நிவாரணம் பெறலாம்.

29. ஆந்தையும் புறாவும்

கவுதமி கங்கை ஆற்றங்கரையில் யமனின் பேரனான அனுஹ்ரதன் என்ற புறாவும் அதன் மனைவி ஹேதியும் வசித்து வந்தன. கொஞ்சம் தூரத்தில் அக்னி குலத்தைச் சார்ந்த உலூகன் என்ற ஆந்தையும், அதன் மனைவி உலூகியும் வசித்து வந்தன. ஆந்தையும், புறாக்களும் பகைவர்கள். புறாக்கள் தங்களுக்குத் தேவையான ஆயுதங்களை யமனிடமிருந்தும், ஆந்தைகள் தமக்கு வேண்டுவனவற்றை அக்னியிடமிருந்தும் பெற்று அடிக்கடி போர்செய்தவண்ணம் இருந்தன. அதனால் எல்லாம் எரிந்து போகக்கூடிய அபாயம் ஏற்பட யமனும், அக்கினி தேவனும் ஆந்தைகளையும், புறாக்களையும் தமக்குள் உள்ள விரோதத்தை மறந்து நண்பர்களாக வாழுமாறு அறிவுரை கூறினர். அந்தப் புறாக்கள் வசித்தி இடம் யமதீர்த்தம் என்றும், ஆந்தைகள் வசித்த இடம் அக்னி தீர்த்தம் என்றும் பெயர் பெற்றன. 

30. அந்தணன் வேதாவும் வேடன் பில்லாவும்

வேதா என்ற பெயருடைய அந்தணர் பிற்பகல் வரை தினமும் சிவபூஜை செய்து விட்டு பிற்பகலில் அருகிலுள்ள கிராமங்களில் யாசகம் செய்வது வழக்கம். பில்லா என்ற பேர் கொண்ட வேடன் பிற்பகலில் காட்டுக்குள் வேட்டைக்குச் செல்வது வழக்கம். வேட்டை முடிந்தவுடன் பில்லா அங்குள்ள சிவலிங்கத்திற்குத் தான் கொண்டு வந்த இறைச்சியை நிவேதனம் செய்வது வழக்கம். அப்போது அவன் சிவலிங்கத்தின் மீதிருந்த பூக்கள், வில்வ இலைகள் போன்றவற்றை அகற்றுவான். பில்லாவின் பக்தியில் மகிழும் சிவபெருமான் தினமும் பிற்பகலில் அவன் வருகைக்காக காத்திருப்பார். இவ்வாறு நடைபெற்று வர வேதனும், வேடனும் ஒருவரை ஒருவர் சந்தித்ததே இல்லை. ஆனால், அங்கு அன்றாடம் ஏற்படும் மாறுதல்களைக் கவனித்து வந்தனர். அந்தணர் யாசகத்துக்குச் செல்லும் போது, வேடன் நிகழ்ச்சிகள் நடைபெறுவதால் யாரால், எது நிகழ்கிறதென்று அந்தணருக்குப் புரியவில்லை. எனவே, ஒருநாள் அந்தணர் யாசகத்துக்குப் போகாமல் அங்கு நடப்பவற்றை மறைந்திருந்து கண்டார்.அவ்வமயம் சிவபெருமான் தோன்றி பில்லாவிடம் அன்று ஏன் தாமதமாயிற்று என்றும், அவனுக்காகத் தான் காத்திருப்பதாகவும் கூறினார். பூசை முடிந்து பில்லா சென்றவுடன் அந்தணர் எம்பெருமானை அணுகி, கொடிய, தீய வேடுவனுக்குக் காட்சி அளித்தீர். நான் இத்தனை ஆண்டுகள் பூஜையாகிய தவமேற்று செய்து வருகிறேன். எனக்குக் காட்சி தரவில்லை. ஏன் இந்த ஓரவஞ்சனை. பாராங்கல் கொண்டு இந்த லிங்கத்தை உடைக்கிறேன் என்று கூறினார். தேவைப்பட்டால் செய்யவும். எனினும், நாளை வரை பொறுத்திருந்து பார் என்று அசரீரி வாக்குக் கேட்டது. அடுத்த நாள் அந்தணர் பூசைக்கு வந்தபோது லிங்கத்தின் மீது ரத்தத்தைக் கண்டு அதை அகற்றி இடத்தைத் தூய்மை செய்து தன் பூஜையை முடித்தார். பின்னர் அங்கேயே மறைந்திருந்தார். சிறிது நேரம் கழித்து பில்லாவும் வந்து, லிங்கத்தின் மீதுள்ள இரத்தத் துளிகளைக் கண்டு, தானே அதற்கு பொறுப்பேற்று ஒரு கூரிய அம்பால் தன் உடலைப் பல இடங்களில் தானே தண்டனையாகக் குத்திக் கொண்டான். வேதன், வேடன் இருவர் முன்பும் எம்பெருமான் தோன்றி அந்தணர் வேதனுக்கும், வேடன் பில்லாவுக்கும் உள்ள வேறுபாட்டை வெளிப்படுத்தினார். அந்தணர் வேதன் தனக்கு அன்பான பூஜையும், நைவேத்தியமும் அளித்ததாகவும், ஆனால் வேடன் பில்லா தன்னையே இறைவனுக்கு அளித்து விட்டதாகவும் கூறினார். அதுவே பூஜை, புனஸ்காரங்களுக்கும், ஆத்மார்த்த உண்மையான பக்திக்கும் உள்ள வேறுபாடு என்றார். பில்லா சிவனை ஆராதித்து வழிபட்ட இடம் பில்லா தீர்த்தம் ஆகும். 

31. தர்மம், தர்மத்தைக் காக்கும்

பௌவனம் என்ற நகரில் கௌதமன் என்னும் ஓர் அந்தணன் வசித்து வந்தான். அவனுக்கு வைசிய குலத்தைச் சார்ந்த மணிகுண்டலன் என்ற நண்பன் இருந்தான். கௌதமனின் தாயார் அவனுக்கு அதர்ம வழிகளைக் கூறி வந்தாள். அதனால் அவன் நண்பனிடம், இருவரும் அயல்நாடு சென்று வாணிகம் செய்து நிறைய லாபம் சம்பாதிக்கலாம் என்று கூறினான். ஆனால், மணிகுண்டலன் தன் தந்தையிடம் போதுமான அளவு பணம் இருப்பதால் மேலும் செல்வம் தேடும் அவசியம் இல்லை என்றான். அதற்கு கவுதமன், நண்பனிடம் அவனுக்கு வருங்காலம் பற்றியும் வாழ்வில் முன்னேறுவது பற்றியும் அக்கறை இல்லை என்றும், ஒரு வெற்றியுள்ள மனிதன் தன் தந்தையின் பொருள் கொண்டு வாழமாட்டான். ஆனால் அவனுடைய அதிர்ஷ்டத்தை அவனே தேடிக் கொள்வான் என்றும் கூறினான். கவுதமனின் வார்த்தை சரியே என மணிகுண்டலன் எண்ணினான். நண்பன் தனக்கு மோசம் செய்வதை அவன் உணரவில்லை. மணிகுண்டலன் தேவையான மூலதனத்துடன் வர, கவுதமனும், மணிகுண்டலனும் தங்கள் பயணத்தை மேற்கொண்டனர். வழியில் கவுதமன் சொன்னான், நல்ல தர்மநெறியில் நடப்பவர்கள் எப்படியெல்லாம் அவதிப்படுகின்றனர். அவர்களுக்கு செல்வமோ, மகிழ்ச்சியோ ஏற்படுவது இல்லை. எனவே தருமம், நியாயம் என்பது எல்லாம் வீணானவையே என்றான்.
அதற்கு மணிகுண்டலன், தருமநெறியில் நிற்பதே மகிழ்ச்சியை அளிக்கிறது. வறுமை, துயரம் என்பனவெல்லாம் தவிர்க்க முடியாதவை என்று கூறி மறுத்தான். இருவரும் அவரவர் போக்கிலேயே நின்றதால் யார் சொல்வது சரி என்று நிச்சயிக்க இயலவில்லை. இதற்காகப் பணயம் வைத்தனர். மற்றவர்களிடம் கேட்டு யார் சொல்வது சரி  எனப்படுகிறதோ அவருக்கு மற்றவருடைய பணம் உரித்தாகும் என்று முடிவெடுத்து அவ்வாறே கேட்க, அனைவருமே தீயவரே வாழ்கின்றனர். நல்லவர் துன்பமடைகின்றனர் என்று கூற, மணிகுண்டலன் தன்னிடமிருந்த பொருளை எல்லாம் கவுதமனிடம் கொடுத்துவிட வேண்டியதாயிற்று. எனினும், மணிகுண்டலன் தருமத்தையே சிலாகித்துப் பேசினான். கவுதமன், மணிகுண்டலன் ஒரு கழுதை. அவன் பொருளைத் தன்னிடமிழந்தும் தருமமே சிறந்ததென்று கூறுவது விந்தை என்றான். அப்போது மணிகுண்டலன் எப்போதும் இறுதியில் வெல்வது தர்மமே. கவுதமன் பெற்ற வெற்றி ஒரு மாயை என்றான்.
மற்றொரு முறை அவர்கள் பந்தயம் வைத்துக் கொண்டு வேறு சிலரிடம் அவர்களது அபிப்பிராயத்தைக் கேட்டனர். இதில் தோற்பவர் தன் இரு கைகளையும் இழப்பதாக முடிவெடுத்தனர். மறுபடியும் பெரும்பாலோர் கவுதமன் கூற்றே சரியென்று கூற, மணிகுண்டலனின் இரு கரங்களும் வெட்டப்பட்டன. அப்போது கவுதமன் மணிகுண்டலன் போக்தைக் குறை கூற, அவன் தருமமே முக்கியமானது. தேவையானது. அது தன் பக்கம் இருப்பதாகக் கூறினான். இதனால் மிக்க கோபம் கொண்ட கவுதமன், மேலும் மேலும் மணிகுண்டலன் தர்மத்தைப் புகழ்ந்தால் அவன் தலையை வெட்டிவிடுவதாகக் கூறினான். ஆனால் மணிகுண்டலன் சிறிதும் அசைந்து கொடுக்கவில்லை. மறுபடியும் ஒரு பந்தயம் வைக்க, அதிலும் கவுதமன் கூற்றே சரி என மற்றோர் ஒப்புக்கொள்ள கவுதமன், மணிகுண்டலன் கண்களைப் பிடுங்கி விட்டு அவன் அப்படியே சாகட்டும் என்று எண்ணி வழியிலேயே விட்டுச் சென்றான். கவுதமி கங்கைக் கரையில் தன் விதியை நொந்து கொண்டு மணிகுண்டலன் விழுந்து கிடந்தான்.இரவு வந்தது. எங்கும் இருள் சூழ்ந்தது. அங்கே விஷ்ணுவின் சிலை ஒன்று இருந்தது. தினந்தோறும் இரவில் விபீஷ்ணனின் மகன் அங்கு விஷ்ணு பூசை செய்ய வருவது வழக்கம். அவன் கண்களை இழந்து பரிதவிக்கும் மணிகுண்டலனின் கதையைக் கேட்டு தந்தையிடம் தெரிவித்தான். அப்போது விபீஷணன், லக்ஷ்மணனைக் காப்பாற்ற சஞ்சீவி மலையைக் கொண்டு வந்த போது அந்த இடத்தில் விஷல்யகரணி என்ற மூலிகைச் செடி விழுந்து வளர்ந்ததாகவும், அதனைப் பயன்படுத்தி மணிகுண்டலனுக்குச் சிகிச்சை செய்து காப்பாற்றலாம் என்றும் கூறினார். அந்தச் செடி இப்போது அங்கு மரமாக வளர்ந்து இருந்தது. அதன் கிளை ஒன்றை வெட்டி மணிகுண்டலன் மீது வைக்க, அவன் கண்களும், கைகளும் வலுப்பெற்று எழுந்தான். இவ்வாறு மணிகுண்டலனுக்குச் சிகிச்சை செய்தபின் விபீஷ்ணன், மகனுடன் இலங்கை சென்றான். இவ்வாறு தர்மநெறி நின்ற மணிகுண்டலன் பயணத்தைத் தொடர்ந்து மஹாராஜன் என்பவரால் ஆளப்படும் மஹாபுரத்தை அடைந்தான். அந்த மன்னனுக்கு புத்திரன் இல்லை. ஆனால், ஒரு குருட்டுப் புத்திரி மட்டும் இருந்தாள். அவளைக் குணப்படுத்துபவனே தன் மாப்பிள்ளை ஆவான் என்றும், தனக்குப் பின் நாட்டை ஆள்வான் என்றும் அறிவித்திருந்தான். இப்போது விஷல்யகரணி மூலிகையைப் பற்றி அறிந்திருந்த மணிகுண்டலன் அவளைக் குணப்படுத்தி, அவளையே மணந்து அந்த மஹாபுரத்துக்கு மன்னன் ஆனான்.
பல ஆண்டுகள் கழிய, ஒரு நாள் சேவகர்கள் கவுதமன் இழைத்த குற்றத்திற்காக அவனை இழுத்து வந்து மன்னனின் முன் நிறுத்தினர். அப்போது கவுதமன் செல்லாக் காசுகூட இல்லாமல் பிச்சைக்காரனை விட மோசமான நிலையில் இருந்தான். கவுதமனைக் கண்ட மணிகுண்டலன் அவனை மன்னித்து தன் செல்வத்தை அவனுடன் பகிர்ந்து கொண்டான். எனவே தர்மம் தலைகாக்கும் என்பது போல் எல்லா வகையிலும் துணை புரியும். இப்படிப்பட்ட பல நிகழ்ச்சிகள் நடந்த இடங்கள் கவுதமி கங்கைக் கரையில் உள்ளன. 

32. கண்டு மகரிஷியும், அப்ஸரஸும்

கவுதம கங்கைக் கரையில் ஓர் அழகிய ஆசிரமத்தில் கண்டு முனிவர் வாழ்ந்து வந்தார். அவர் வெயில், மழை, குளிர், காற்று என்று பாராமல் நெடுங்காலம் தவமியற்றி வந்தார். அவர் தவத்தால் தன் இந்திர பதவிக்கு ஆபத்து ஏற்படும் என அஞ்சிய இந்திரன் அவர் தவத்தைக் கெடுக்க பிரேமலோசனை என்ற அப்சர ஸ்திரீயை அனுப்பினான். அவள் ஆடிப்பாடி தன் இனிய குரலால் முனிவரின் தவத்துக்குப் பங்கம் விளைவிக்க முயன்றாள். அவளின் இனிய குரலையும், அழகையும் கண்ட முனிவர் அவளை மணந்தார். பல ஆண்டுகள் இன்பத்தில் திளைத்த அவர் ஒரு நாள் ஆசிரமத்தை விட்டு வெளியே செல்ல முற்பட பிரேமலோசனை அவர் எங்கு செல்கிறார் என்று கேட்க, முனிவர் மாலை ஆனதால் சாயங்கால வந்தனைக்குப் புறப்படுவதாகக் கூறினார். பிரேமலோசனையுடன் பல நாட்கள் கழிந்ததை அறியாத முனிவர் ஒரு பகல் முடிந்து சாயங்காலம் வந்ததென்று எண்ணிக் கூறினார். பிரேமலோசனை தான் காலை வந்தது என்பது பல ஆண்டுகளுக்கு முந்திய காலை என்றும் அன்றிலிருந்து நூற்றுக்கணக்கான ஆண்டுகள் கழிந்துவிட்டன என்றும் கூறினாள். உண்மையை அறிந்த முனிவர் தன் தவத்தை அவள் கெடுத்து விட்டதாகவும், எனினும் மனைவியாக இருந்ததால் அவளை சபிப்பதில்லை என்றும், அவள் தேவலோகம் செல்லலாம் என்று, கூறி விடை கொடுத்து அனுப்பிவிட்டு, தான் பிராயச்சித்தத்தை மேற்கொண்டார். கண்டு முனிவர் புரு÷ஷாத்தம ÷க்ஷத்திரத்தை அடைந்து தவம் புரிய விஷ்ணுவால் ஆசிர்வதிக்கப்பட்டார். கண்டு, பிரேமலோசனைக்கு மரீஷை என்றொரு மகள் பிறந்தாள். தற்போதுள்ள கோதாவரி ஆறே கவுதம கங்கை எனத் தெரிகிறது. 

33. ஒரு சண்டாளனும், ஒரு பிரம்மராக்ஷசனும்

நாடு கடத்தப்பட்டவனை அல்லது சமூகத்தால் நிராகரிக்கப்பட்டவனை சண்டாளன் என்பர். அவந்தி நகரின் புறப்பகுதியில் ஒரு சண்டாளன் வசித்து வந்தான். ஆனால், அவன் ஒரு சிறந்த விஷ்ணு பக்தன். ஒவ்வொரு ஏகாதசி அன்றும் உபவாசம் இருந்து, இரவில் விஷ்ணு ஆலயம் சென்று திருமால் புகழ்பாடுவது அவன் வழக்கம். அவந்தி நகருக்கருகில் ஷிப்ரா என்னும் ஓர் ஆறு ஓடுகிறது. ஓர் ஏகாதசி திதி அன்று சண்டாளன் ஆற்றங்கரையில் பூசைக்கான மலர்களைச் சேகரிக்க சென்றான். ஆற்றங்கரையில் ஒரு பெரிய மரம் இருந்தது. அதில் ஒரு பிரம்மராக்ஷசன் வசித்து வந்தது. சண்டாளனைப் பார்த்ததும் அது அவனைக் கபளீகரம் செய்ய எண்ணியது. நான் விஷ்ணு பூசைக்குச் செல்ல வேண்டியிருப்பதால் இன்றிரவு என்னை விட்டுவிடு என்று கூறினான். அதற்கு பிரம்மராக்ஷசன் பத்து நாட்களாக உணவின்றிக் கடும் பட்டினியாக இருப்பதால் உன்னை விடமாட்டேன் என்றது. அப்போது சண்டாளன், இப்போது தன்னைப் போக விடும் படியும், பூஜை முடிந்தவுடன் தானே வந்து சேர்வதாகவும் உறுதி அளித்தான். சண்டாளன் விடுபட்டுச் சென்று இரவெல்லாம் விஷ்ணு பூஜை, பக்திப் பாடல்கள் எல்லாம் முடித்து காலையில் தான் கூறியவாறே பிரம்மராக்ஷசனிடம் வந்து சேர்ந்தான். என்னால் நம்ப முடியவில்லை. வியப்பாக உள்ளது. நீ சண்டாளனாக இருக்க முடியாது. ஓர் அந்தணனே என்று கூறி பிரம்மராக்ஷசன் சண்டாளனிடம் சில கேள்விகள் கேட்டது.
பிரம்மராக்ஷசன் : இரவெல்லாம் என்ன செய்தாய் ?
சண்டாளன் : விஷ்ணு ஆலயத்தில் முன் நின்று விஷ்ணுவின் புகழ் பாடல்களைப் பாடிக் கொண்டிருந்தேன்.
பிரம்மராக்ஷசன் : எத்தனை காலமாக இவ்வாறு செய்கிறாய்?
சண்டாளன் : இருபத்தைந்து ஆண்டு காலமாக.
இவ்வாறு கூறிய பதில்களைக் கேட்டு பிரம்மராக்ஷசன் சண்டாளனிடம், நிறைய புண்ணியத்தைச் சம்பாதித்திருப்பீர்கள். நான் ஒரு பாவி. எனக்கு ஓர் இரவு புண்ணியத்தைத் தாருங்கள் என்று கேட்டது. அதற்கு சண்டாளன், புண்ணியம் என்னுடையது. நான் அதைத் தரமாட்டேன். என் உடலை எடுத்துக் கொள் என்றான். சரி குறைந்த பட்சம் இரண்டு மணி நேர புண்ணியத்தையாவது கொடு என்று வேண்டிற்று. அப்போது சண்டாளன், என்னால் புண்ணியத்தைத் தரமுடியாது. அது சரி, உன்னுடைய பாவம் தான் என்ன? என்று சண்டாளன் கேட்டான். அப்போது பிரம்மராக்ஷசன் தன் வரலாற்றைக் கூறியது. என் பெயர் சோம சர்மா. நான் தேவசர்மா என்ற அந்தணரின் மகன். ஆனால், நான் தீய நடத்தையில் வாழ்ந்தேன். உபநயனம் ஆகாத ஒரு பிராமணன் யாகங்கள் செய்யத் தகுதியில்லாதவன், அப்படியான நான் ஒரு யாகத்தை நடத்தி விட்டேன். அதன் பயனாய் இப்பிறவியில் நான் பிரம்ம ராக்ஷசனாய் பிறந்துள்ளேன் என்றது. அது கேட்டு மனம் இறங்கிய சண்டாளன் தன் புண்ணியத்தில் ஒரு பகுதியை பிரம்மராக்ஷசனுக்கு அளித்தான். பிரம்மராக்ஷசன் மகிழ்ச்சியுற்று தன் நன்றியைத் தெரிவித்து ஒரு புனிதத் தீர்த்தத்தை அடைந்து தவமியற்றி விடுதலை பெற்றான். அதன்பின் சண்டாளன் தீர்த்த யாத்திரையாக பல இடங்களுக்குச் செல்ல ஓரிடத்தில் அவனுக்கு அவன் முற்பிறவி நினைவுக்கு வந்தது. அவன் முற்பிறவியில் சகல சாஸ்திர, வேதப் பண்டிதனாக இருந்தான். யாசகம் எடுத்து உணவு உண்டான். இந்நிலையில் ஒருநாள், சில திருடர்கள் பசுக்களைத் திருடி ஓட்டிவர அவற்றின் குளம்பு தூசி உணவில் விழ அவன் வெறுத்து யாசகம் பெற்ற உணவை வீசி எறிந்தான். அவ்வாறு அவ்வுணவை எறிந்ததால் சண்டாளனாகப் பிறந்தான். இந்தப் பாவத்திற்காகத் தவமியற்ற, அவன் மன்னிக்கப்பட்டான்.

34. காயத்ரி

காயத்ரி ஏற்பட்ட விவரத்தை முனிவர் கூறலானார்.
மூலப்பிரம்மம் தன் நாபியிலிருந்து பிரம்மனைத் தோற்றுவித்தார். அவருக்கு பிரணவ ஒலி கேட்டது. அவ்வொலியைக் கேட்ட பிறகு அவருடைய நான்கு முகங்களிலிருந்தும் 24 எழுத்துக்கள் தோன்றின. அந்த இருபத்து நான்கு எழுத்துக்களும் பீஜாக்ஷரம் எனப்படும். அதுவே காயத்ரி மஹாமந்திரம் எனப்படும். அதன் பிறகு அவர் முகத்திலிருந்து நான்கு வேதங்கள் தோன்றின. எனவே காயத்ரி மந்திரம் வேதங்களுக்குத் தாயாகும். அதனை ஜபிப்பவர்கள் பிரம்ம விதியைப் பெறுவர்.
யோகம் : யோகம் என்பது ஆத்மாவைப் பரமாத்மாவுடன் அல்லது பரப்பிரம்மத்துடன் இணைப்பது. யோகம் செய்யப் புகுபவர் வேதத்தையும், புராணங்களையும் கற்க வேண்டும். சாத்விக உணவுண்டு இனிய பிரதேசத்தில் பழக வேண்டும். புலன்களை அடக்கி சரியான ஆசனங்களைப் பயின்று, மூக்கின் நுனியின் மீது திருஷ்டி வைத்துப் பயில வேண்டும். பற்றற்ற நிலை வேண்டும். சரியான முறையில் யோகம் செய்தால் எல்லா உயிர்களிலும் ஒரே பராமாத்மா இருக்கிறார் என்று அறியலாம். ஜீவராசிகளைத் தனித்தனியே காண்பது ஒரு மாயத் தோற்றமே. எல்லாவற்றிலும் ஒரே பரமாத்மா தான் இருக்கிறார்.
                                                                  பிரம்ம புராணம் முற்றிற்று.
பிரம்ம புராணம் பகுதி-1





1. தோற்றுவாய்
புராணங்கள் என்பவை பண்டைய இலக்கியங்கள் ஆகும். அவை மகா புராணங்கள் 18, உப புராணங்கள் 18. மகா புராணங்கள் பதினெட்டின் வரிசையில் சிலர் நான்காவது வாயு புராணம் என்றும், சிலர் சிவபுராணம் என்றும் கூறுவர். மகா புராணங்களில் முதலில் தோன்றியது பிரம்ம புராணம் என்பதில் எத்தகைய கருத்து வேறுபாடும் இல்லை. எனவே இதனை ஆதிபுராணம் என்றும் கூறுவர். இது 10,000 ஸ்லோகங்கள் கொண்டது.
புராண லக்ஷணங்கள் ஐந்து. 1. இந்தப் பேரண்டப் படைப்பு, 2. பிரளயம் மூலம் உலக அழிவும், மறுபடி தோற்றமும் 3. வெவ்வேறு மன்வந்தரங்கள் 4. சூரிய வமிச, சந்திர வமிச வரலாறு 5. அரச பரம்பரைகள் சரிதம். இந்த ஐந்தும் பிரம்ம புராணத்தில் விவரிக்கப்பட்டுள்ளன. பொதுவாக எல்லாப் புராணங்களும் அரி, அரன், அயன் என்ற மும்மூர்த்திகளைப் பற்றி கூறினும் சிவபுராணங்களில் சிவனை உயர்த்தியும், சிலவற்றில் விஷ்ணுவை உயர்த்தியும் பேசப்பட்டுள்ளன. பிரம்ம புராணம் ஒரு ராஜசிக புராணம். புராணங்களை வேதவியாசர் எழுதினார் எனப்படுகிறது. இவருக்குக் கிருஷ்ண த்வைபாயனர் என்ற பெயரும் உண்டு. தவிர கருப்பு நிறத்துடன் தீயில் தோன்றியவர் என்று அந்த சொல்லுக்குப் பொருள். வேதவியாசர் என்பது தனி ஒருவர் பெயரா? அல்லது ஒரு பீடத்தின் பெயரா என்பது தெரியவில்லை. ஒவ்வொரு மன்வந்தரத்திலும் ஒவ்வொரு வியாசர் இருந்ததாகவும் கூறப்படுகிறது. மகாபாரதத்தை இயற்றிய பின்னும் மன அமைதி ஏற்படாததால் வியாசர் புராணங்களை எழுத முற்பட்டார் என அறியலாகிறது. பிரம்ம புராணத்தின் முதல் நூல் கிடைக்கப் பெறவில்லை என்றும், எனவே மகாபாரதம், ஹரிவம்சம், வாயுபுராணம், மார்க்கண்டேய புராணம், விஷ்ணு புராணம் ஆகியவற்றிலிருந்து செய்திகளைத் தொகுத்து தற்போது கிடைத்துள்ள பிரம்ம புராணம் உருவாக்கப்பட்டது என்பர். இது மிகப்பெரியதோ மிகச் சிறியதோ இன்றி நடுத்தரமாக உள்ளது. 

2. உலக சிருஷ்டி

நைமிசாரணியத்தில் சனகாதி முனிவர்களுக்கு சூதமுனிவர் பிரம்ம புராணத்தைப் பற்றிக் கூறலானார். (வியாசரின் சீடன் ரோமஹர்ஷணர் கூறியதாகவும் சொல்லப்படும்)
எங்கும் நீர் சூழ்ந்திருக்க, பிரம்மனாகிய பகவான் விஷ்ணு யோகதுயில் கொண்டிருந்தார். நீருக்கு நர என்றும், அயன என்றால் படுக்கை என்றும் பொருள். எனவே விஷ்ணுமூர்த்தி நாராயணன் என்று பெயர் பெற்றார். நீரிலிருந்து ஓர் அண்டம் (முட்டை) வெளித்தோன்றியது. அதனுள் பிரம்மா இருந்தார். அவர் சுயம்பு ஆவார். அவர் முட்டையின் இருபகுதியிலிருந்து சுவர்க்கத்தையும், பூமியையும் ஆக்கினார். அவ்விரண்டிலும் ஆகாயம், திக்குகள், காலம், மொழி, உணர்வுகள் உற்பத்தி செய்யப்பட்டன. பிரம்மாவின் மனதிலிருந்து மரீசி, அத்திரி, ஆங்கிரசர், புலஸ்தியர், புலஹர், கிரது, வசிஷ்டர் என்ற சப்தரிஷிகளைத் தோற்றுவித்தார். பின்னர் ருத்திரனையும், சனத் குமாரரையும் தோற்றுவித்தார்.
மேலும் சில படைப்புகள்: பிரம்மா ஓர் ஆணையும், ஒரு பெண்ணையும் படைத்து அவர்கள் மூலம் மக்கள் பெருக்கத்துக்கு வித்திட்டார். ஆணின் பெயர் சுவயம்புமனு; பெண்ணின் பெயர் சதரூபை. இவர்களின் புத்திரன் மனு. மனுவிலிருந்து வளர்ந்த மக்கள் மானிடர்(அ) மானவர் எனப்பட்டனர். அத்தம்பதியருக்கு வீரன், பிரியவிரதன், உத்தானபாதன் என்று மூவர் பிறந்தனர். உத்தானபாதனின் மகன் துருவன், துருவ நக்ஷத்திரமாக விளங்குகிறார். துருவன் பரம்பரையில் தோன்றிய பிராசீனபர்ஹிக்கு பிரசேதனர்கள் எனப்படும் பதின்மர் பிறந்தனர். அவர்களுக்கு உலக வாழ்க்கையில் விருப்பமின்றித் தவம் செய்யப் புறப்பட்டனர். உலகைப் பராமரிக்க ஆள் இல்லாததால் எங்கும் காடுகள் பெருகி விட்டன. பிரசேதனர்கள் கோபம் கொண்டு வாயுவையும், அக்கினியையும் தோற்றுவித்துக் காடுகளை அழித்தனர். அப்போது சோமன், ஓர் அழகிய பெண் மரீஷையுடன் பிரசேதனர்களை அணுகி, அவர்கள் கோபத்தை சாந்தமாக்கி மரீஷையை மனம் செய்வித்தார். அவர்களுடைய மகனே தக்ஷபிரஜாபதி.

3. தக்ஷன் சந்ததியினர்

தக்ஷனுடைய ஆயிரம் புத்திரர்களை நாரதர் அறவுரை கூறி தவம் செய்ய அனுப்பிவிட்டார். மறுபடியும் தோன்றிய ஆயிரம் பேர்களையும் அவ்வாறே அனுப்பி விட்டார். இவர்கள் ஹர்யக்ஷ்வர்கள், ஷவலஷ்வர்கள் என்பவர்கள் ஆவர். தக்ஷனுக்குப் பிறந்த அறுபது பெண்களில் பத்த பேரைத் தருமனுக்கும், பதின்மூன்று பேரை காசியப முனிவருக்கும், இருபத்தேழு பெண்களை சோமன் எனும் சந்திரனுக்கும், மீதிப் பெண்களை அரிஷ்டநேமி, வாஹுபுத்திரர், ஆங்கீஸர், கிரிஷஷ்வர் ஆகியோருக்கும் மணம் செய்வித்தான். தர்மனுக்கு மணம் செய்வித்த பத்து புத்திரிகளில் அருந்ததியின் மக்கள் உலகிற்கு விஷயமானவர்கள். வாசுவின் மக்கள் வசுக்கள் என்பர். அவர்களில் அனலனின் மகன் குமரன். கிருத்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்ட குமரன் கார்த்திகேயன் எனப்பட்டான். பிரபசாவின் மகன் விசுவகர்மா; தேவலோக சிற்பி. சாத்யாவின் மக்கள் சாத்திய தேவர்கள். விஸ்வாவின் மக்கள் விச்வதேவர்கள். சந்திரன் மனைவிகள் 27 பெண்கள், நக்ஷத்திரங்கள். காசியபரின் மனைவியரில் அதிதியின் மக்கள் ஆதித்தியர்கள் ஆவர். திதி மக்கள் தைத்தியர்கள். ஹிரண்யாக்ஷன், ஹிரண்யகசிபு அவள் புத்திரர்கள். தனுவின் புத்திரர்கள் தானவர்கள். அவர்கள் வம்சத்தில் பௌலமர்கள், காலகேயர்கள் தோன்றினர். அரிஷ்டாவின் புத்திரர்கள் கந்தர்வர்கள். காசாவின் மக்கள் யக்ஷர்கள். சுரபிக்கு பசுக்கள், எருமைகள் தோன்றின. வினிதாவுக்கு அருணன், கருடன் மக்கள். தாம்ராவின் ஆறு பெண்களுக்கு ஆந்தைகள், கழுகுகள், ராஜாளிகள், காக்கைகள், நீர்ப்பறவைகள் குதிரைகள், ஒட்டகங்கள், கழுதைகள் தோன்றின. குரோதவஷையின் ஆயிரக்கணக்கான மக்கள் நாகர்கள். இளைக்கு மரம், கொடி, புதர் போன்றவை தோன்றின. கத்ருவின் மக்களாகிய நாகர்களில் அனந்தன், வாசுகி, தக்ஷகன், நஹுஷன் ஆகியோர் முக்கியமானவர். முனிக்கு அப்ரஸுகள் தோன்றினர்.
திதி, காசியபரிடம் இந்திரனை வெல்லக்கூடிய ஒரு மகனை அருள வேண்டினாள். குழந்தை கருவுற்ற நாளிலிருந்து நியம நிஷ்டைகளுடன் இருக்க வேண்டும் என்று காசியபர் கூறினார். அதற்குப் பங்கம் ஏற்பட்டால் நினைத்தது நிறைவேறாது என்றார். கருவுற்ற திதி ஒருநாள் கால்களைக் கழுவாமல் தூங்கச் செல்ல, இந்திரன் அணு அளவில் அவளது கருவறையுள் நுழைந்து கருவை வஜ்ராயுதத்தால் ஏழு பகுதிகளாக்கிட, மறுபடியும் அந்த ஒவ்வொன்றும் ஏழாக மொத்தம் நாற்பத்தொன்பது துண்டுகளாயின. கரு அழ, இந்திரன், மா ருத (அழாதே) என்று கூற அவை மருத்துக்கள் எனப்பட்டன. திதிக்கு விரத பங்கம் ஏற்பட அவள் எண்ணம் ஈடேறவில்லை. மாறாக, அக்குழந்தைகள் அதாவது மருத்துக்கள் இந்திரனுக்கு உதவியாளராயினர். (சிருஷ்டியைப் பற்றி எல்லாப் புராணங்களும் கூறும் செய்திகள் ஒன்றே போல் காணப்படுகின்றன.)

4. பிருதுவும், பிருத்வியும்

துருவன் குலத் தோன்றல்களில் அங்கன் தரும நெறியில் நின்று வாழ்ந்தான். அவன் மனைவி மிருதியுவின் மகள் சுனிதை. மிருதியுவி தீய வழி செல்பவள். அவள் மூலம் அங்கனின் மகன் வேனன் தீயநெறிகளைப் பெற்றான். அவன் அதர்மசாலி.  அவன் தொல்லைகள் அதிகமாக, முனிவர்கள் அவனை அழைத்து முறையிட அவன் திருந்தவில்லை. மமதையுடன் நடந்து கொண்டான். எனவே, அவனைப்பற்றி அவனுடைய வலது தொடையைக் கடைய ஓர் அசிங்கமான குள்ள உருவம் தோன்றிற்று. அதைக் கண்ட அத்திரி முனிவர் அதனை நிஷித (உட்கார்) என்றார். அவன் பெயர் நிஷாதன் என்று ஆயிற்று. அவன் வம்சத்தினர் நிஷாதர்கள் எனப்பட்டனர். அந்தப் பரம்பரையிலேயே துஷாரர்கள், துண்டுரர்கள் தோன்றினர். வேனனின் வலது கரத்தைக் கடைய பிருது தோன்றினான். பின்னர் வேனன் இறந்தான். பிருதுவைச் சுற்றி ஓர் ஒளிவட்டம் காணப்பட்டது. அவன் கைகளில் ஒரு வில்லும், கேடயமும் இருந்தன. தேவர்களும், முனிவர்களும் அவன் முடிசூட்டு விழாவுக்கு வந்தனர். சோமன், கிரகங்கன், வருணன், குபேரன், அக்னி, தக்ஷன், இந்திரன், பிரகலாதன், யமன், சித்திராதன், வாசுகி, தக்ஷகன், கருடன், ஐராவதம், உச்சச்சிரவம் போன்றோர் அவன் ஆட்சியில் அவனுக்கு உதவினர். பிருது நீதி, நெறிமுறை வழியில் தருமம் தவறாமல் ஆண்டு வர அவன் ஆட்சியில் அனைவரும் மகிழ்ந்தனர். பிருதுவைப் பெருமைப்படுத்த முனிவர்கள் யாகம் செய்ய, அதிலிருந்து இரண்டு இனங்கள் தோன்றின. அவை சூதர்கள், மகதர்கள் எனப்பட்டனர். அவர்கள் பிருதுவின் புகழ்பாடி அவன் சிறப்பைப் பரப்பினர். அதைக் கேட்ட மக்கள் அவனிடம் வந்து இருக்க இடமும், உண்ண உணவும் கிடைக்க வழி செய்யுமாறு வேண்டினர். பிருது கையில் வில்லும், அம்பும் ஏந்தி பூமியைக் கொல்ல எண்ண, பூமி பசு வடிவம் கொண்டு அனைத்துலகிலும் ஓட, அவனும் பின் தொடர்ந்தான். அது கண்ட நிலமாது (பசு வடிவ) தான் ஒரு பெண் என்றும், தன்னைக் கொல்வதால் பாவமே மிஞ்சும் என்றும் வேறு வழியில் மக்கள் நன்கு வாழச் செய்யலாம் என்றும் கூறியது. பின்னர் நிலமாது அதற்கான வழிமுறைகளைக் கூற பிருது அதன்படி செய்யலானான். வில்லினால் நிலத்தைச் சமன்படுத்த அதில் மக்கள் வாழும் இடமும், உண்ண உணவுப் பொருள்கள் பயிர் செய்யவும், அதற்கு உதவியாக மாடுகளும் வளர்ந்து மக்களுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. இவ்வாறு பிருது செய்த நற்காரியங்களால் நிலம் பிருதிவி எனப்பட்டது. 

5. மன்வந்தரங்கள்

மன்வந்தரம் என்பது ஒரு கால வரையறை. யுகங்கள் கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் என நான்கு. இவை நான்கும் முடிவது ஒரு மகாயுகம். சுமார் எழுபத்தொன்று மஹாயுகங்கள் கொண்டது ஒரு மன்வந்தரம். பதினான்கு மன்வந்தரங்கள் கொண்டது ஒரு கல்பம். பிரம்மனின் நாட்களில் ஒன்று கல்பம். ஒரு கல்பம் முடிந்ததும் உலகம் அழியும். ஒவ்வொரு மன்வந்தரத்திலும் ஒவ்வொரு மனு ஆண்டு வந்தான். தற்போதைய கல்பத்தில், ஏழாவது மன்வந்தரத்தில் வைவஸ்வதன் மனு ஆவான். ஒவ்வொரு மன்வந்தரத்திலும் வெவ்வேறு சப்தரிஷிகள், இந்திரன்கள் இருந்தனர். தற்போது நடைபெறுவது வைவஸ்வத மன்வந்தரம். இதில் வசிஷ்டர், காசியபர், கௌதமர், பரத்துவாசர், விசுவாமித்திரர், ஜமதக்கினி ஆகியோர் சப்தரிஷிகள் ஆவர். சரித்யர்கள், ருத்திரர்கள், வாசுதேவர்கள், வசுக்கள், மருத்துக்கள், ஆதித்தியர்கள், இரு அசுவினி தேவர்கள் கடவுளர் ஆவர். அடுத்து ஏழு மனுக்கள் இருப்பர். அதன்பின் உலகம் அழிந்து விடும். இவர்களில் ஐவர் சவர்ணி மனுக்கள் என்றும், மற்ற இருவர் பௌத்தியர், ரௌச்சியர் எனவும் பெயர் கூறுவர்.

6. சூரியனும், சூரிய வம்சமும்

காசியபர், அதிதிகளுக்குப் புத்திரன் விசுவாச்வனன். இவனுக்கு சூரியன், மார்த்தாண்டன் ஆகிய பெயர்களும் உண்டு. இவனே சூரிய பகவான். அவனுக்கு சஞ்ஜனா, சாயா என இரு மனைவியர். சஞ்சனாவுக்கு விசுவஸ்வதமனு, யமன் என்ற புத்திரர்களும் யமுனை என்ற பெண்ணும் உண்டு. சாயாவுக்குப் பிறந்தவர்கள் சவர்ணி மனு.

7. வைவஸ்வத மனுவின் மக்கள்

புத்திரன் இல்லாத வைவஸ்வத மனு ஒரு யாகம் செய்தான். அதன் பயனாக அவனுக்கு இக்ஷ்வாகு, நிருகன், திருஷ்டன், சர்யாதி, நரிஷ்யந்தன், நாபாகன், அரிஷ்டன், கரூஷன், விருஷத்திரன் ஆகிய ஒன்பது புதல்வர்கள் தோன்றினர். மேலும் மனுமித்ரன், வருணன் என்னும் கடவுளர்களை வேண்டி இள என்றும் பெண்ணைப் பெற்றான். இள, சந்திரனின் மகனான புதனை மணந்து புரூரவனைப் பெற்றாள். இளை, சுத்யும்னன் என்ற ஆணாக மாறிவிட, அவனுக்கு உத்கலன், கயா, வினதஷ்வா ஆகிய புத்திரர்கள் பிறந்தனர். உத்கலன் ஒரிஸ்ஸாவை ஆண்டான். கயா, கயாவையும், வினதஷ்வா மேற்குப் பகுதியையும் ஆண்டனர். சுத்யும்னன், இளை என்ற பெண்ணாக இருந்ததால் ஆட்சி செய்ய இயலாததால், அவனது பிரதிஷ்டான நகரை அவருக்குப் பின் புரூரவன் பெற்றான். வைவசுவத மனு இறந்த பிறகு அவனுடைய பத்து புத்திரர்களும் உலகைப் பகிர்ந்து கொண்டனர். இக்ஷ்வாகு மையப் பகுதியை ஆண்டு வந்தான். இக்ஷ்வாகு தான் செய்யப் போகும் யாகத்திற்குப் புதிதாக இறைச்சி கொண்டு வர அவன் மகன் விகுக்ஷியை அனுப்பினான். ஆனால், விகுக்ஷி பசியின் காரணமாக இறைச்சியை அவனே உண்டுவிட வசிஷ்ட முனிவர், மன்னன் இக்ஷ்வாகுவிடம், விகுக்ஷியை தேசப் பிரக்ஷ்டம் செய்யுமாறு கூறினான். விகுக்ஷி உண்டது ஒரு முயலின் இறைச்சி (சசக). எனவே அவன் சசதன் என்று பெயர் பெற்றான். இக்ஷ்வாகு மரணத்திற்குப் பின் தேசப்பிரஷ்டம் செய்யப்பட்ட விகுக்ஷி திரும்பி வந்து நாட்டை ஆண்டான். அதுவே அயோத்தி நாடாகும். 

8. குபலஷ்வன்

விகுக்ஷியின் மகன் காகுஸ்தன். இந்த வம்சத்தின் விரிஹதஷ்யன் மகன், குபலஷ்வன். அவனுக்கு முடி சூட்ட விரும்பினான் தந்தை. அவ்வமயம் அங்கு வந்த உதங்க முனிவர் மன்னனைத் தடுத்த, ஒரு செய்தியைக் கூறினார். துந்து என்றோர் அரக்கன் கடற்கரையில் வசிக்கிறான். அவனது மூச்சுக்காற்றினால் எங்கும் மணல் மேடு குவிந்துள்ளத. அவனைத் தேவர்களாலும் வெல்ல முடியவில்லை. எனவே, நான் என்னுடைய தவ வலிமையை உனக்குத் தருகிறேன். நீ அந்த அரக்கனைக் கொல்ல வேண்டும் என்று கூறினார். அதற்கு மன்னன் தன் மகன் குபலஷ்வன் அரக்கனைக் கொல்வான் என்று கூறி வனம் சென்று விட்டார். குபலஷ்வன், தனது நூறு புத்திரர்களுடன் உதங்கனை அழைத்துக் கொண்டு துந்துவை அழிக்கச் சென்றான். துந்துபியின் திரிதஷ்வன், சந்திரஷ்வன், கபிலக்ஷ்வன் என்ற மூன்று மகன்களைத் தவிர மற்றவரைக் கொன்றான். துந்து அரக்கனும் கொல்லப்பட்டான். இதனால் குபலஷ்வன் துந்து மாறன் எனப்பட்டான். முனிவனின் ஆசியால் இறந்த மக்கள் மோட்சம் அடைந்தனர்.

9. திரிசங்கு

திரிதஷ்வனுக்குப் பின் ஆண்ட திரியருனி என்ற மன்னன் நீதி நெறி வழுவாமல் தர்மவானாக நாட்டை ஆண்டு வந்தான். ஆனால், அவனது புத்திரன் சத்திய விரதன் அவனுக்கு நேர்மாறாக அதர்மவானாய் இருக்க வசிஷ்டர் அவனைத் தேசப்பிரஷ்டம் செய்யச் செய்தார். சத்தியவிரதன் காட்டில் சண்டாளர்களுடன் வாழ்ந்து வந்தான். சில நாட்கள் கழித்து மன்னன் திரியருனி தவம் செய்ய காடு செல்ல, நாட்டை ஆள அரசன் இல்லாததால் நாட்டில் அராஜகம், பஞ்சம் பன்னிரண்டு ஆண்டுகள் தாண்டவமாடின. அந்நாட்டில் வசித்து வந்த விசுவாமித்திர முனிவர் காட்டில் தவம் செய்து கொண்டிருந்ததால் அவருடைய மனைவி மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். அவள் தன் மகனை விற்று தனக்கான உணவைப் பெற அவன் கழுத்தில் கயிறு கட்டி அழைத்துச் சென்று அவனை ஆயிரம் பசுக்களுக்கு விற்று விட்டாள். அவன் கழுத்தில் (கால) கயிறு கட்டப்பட்டதால் அவன் காலவன் எனப்பட்டான். இதையறிந்த சத்தியவிரதன், விசுவாமித்திரரின் மனைவி மக்களுக்கு ஏற்பட்ட கதியை அறிந்து காலவனை விடுவித்து அவர்களை ஆதரித்து வந்தான். தன்னைத் தேசப்பிரஷ்டம் செய்யக் காரணமான வசிஷ்டர் மீது கோபம் கொண்ட அவன், அம்முனிவருடைய பசுவைக் கொன்று அதன் மாமிசத்தை, விசுவாமித்திரரின் மனைவி மக்களுக்குக் கொடுத்து தானும் உண்டான். இதனால் கோபம் கொண்ட வசிஷ்டர் சத்தியவிரதனைச் சபித்தார். அவன் செய்த மூன்று தவறுகனைச் சுட்டிக் காட்டினார். 1) உன் தகப்பனார் கோபத்துக்கு ஆளானாய், 2) பசுவைக் கொன்றாய், 3) பசு இறைச்சியை உண்டாய் என்று கூறி இனி அவன் திரிசங்கு என்ற பெயர் பெறுவான் என்று சபித்தார். தவம் முடிந்து திரும்பிய விஸ்வாமித்திரர், சத்தியவிரதன் தன் குடும்பத்துக்குச் செய்த உதவிக்காக மகிழ்ந்து அவனுக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்க, திரிசங்கு மானிட உடலுடனேயே சுவர்க்கம் போக விரும்ப, அவ்வாறே விஸ்வாமித்திரர் அருளினார். திரிசங்கு மன்னனாக விஸ்வாமித்திரர் அவருக்கு முக்கிய குருவானார்.

10. சகரன்

திரிசங்குவின் மகன் ஹரிச்சந்திரன். இவர்கள் வம்சத் தோன்றல் பாகு. அவன் இல்லற சுகத்தில் ஈடுபட்டு மகிழ்ந்திருக்க பகைவர்கள் படை எடுத்து வர, அவன் மனைவி யாதவியுடன் காட்டிற்குச் சென்று வசிக்கலானான். பாகுவை விரட்டியவர்கள் ஹதயர்களும், தலஜங்கா மன்னர்களும். அவர்களுக்கு சகர்கள், யவனர்கள், பரதர்கள், காம்போஜர்கள், பஹ்லவர்கள் உதவினர். காட்டில் மன்னன் பாகு மரிக்க, அவன் மனைவி யாதவி உடன்கட்டை ஏற விரும்பினாள். அவள் கருவுற்றிருந்ததால் அவளை அவுர முனிவர் தடுத்து நிறுத்தி தன் குடிலுக்கு அழைத்துச் சென்று ரக்ஷித்து வந்தார். பாகுவின் மற்றொரு மனைவி யாதவிக்கு விஷமூட்டிக் கொல்ல முயன்றாள். ஆனால், விஷம் அவளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படுத்தவில்லை. எனினும் குழந்தை நச்சுடனே பிறக்க அது சகரன் எனப்பட்டது. அவுர முனிவர் சகரனுக்கு சகல கல்விகளையும், வித்தைகளையும் கற்பித்தார். புனித ஆக்னேய அஸ்திரத்தை உபயோகிக்கும் முறையையும் அவன் கற்றான். சகரன் பெரியவனானவுடன் தன் தந்தையை விரட்டிய பகைவர்களை ஆக்கினேய அஸ்திரத்தின் உதவியால் வென்று அவர்களைக் கொல்ல யத்தனிக்கையில், வசிஷ்டர் அவர்களை முடி நீக்கிடுதுல் போன்றவை செய்து அவமானப்படுத்துமாறும், கொல்ல வேண்டாம் என்றும், அவர்கள் வேதங்களைப் பின்பற்றக்கூடாது என்றும் கூறினார். சகரன் தோற்கடித்த மன்னர்கள் கோனசர்ப்பர்கள், மஹிஷகர்கள், தார்வர்கள், சோழர்கள், கேரளர்கள் ஆகியோர்.
சசுர மன்னனுக்கு கேசினி, சுமதி என்று இரண்டு மனைவியர். அவுர முனிவர் அருளால் கேசினிக்கு ஒரு மகனும், சுமதிக்கு அறுபதினாயிரம் புத்திரர்களும் பிறந்தனர். கேசினியின் மகனின் பெயர் பஞ்சஜனன். சுமதிக்கு ஒரு பூசணிக்காய் தோன்ற அதனுள் ஒரு மாமிச பிண்டம் இருந்தது. அதை ஒரு பெரிய நெய் பானையில் வைத்தனர். அதில் நெய் நிரம்பி இருந்தது. அந்த பிண்டத்திலிருந்து அறுபதாயிரம் மக்கள் பிறந்தனர். சகரன் உலகை ஒரு குடைக்கீழ் ஆள திக் விஜய யாத்திரை தொடங்கினான். அதற்காக ஓர் அசுவமேத யாகம் செய்ய யாகக் குதிரையை உலகெங்கும் திரியவிட, அறுபதினாயிரம் மக்களும் அதனைப் பின் தொடர்ந்திட, குதிரை தென்கிழக்குக் கடற்கரையை அடைந்தது. சகர புத்திரர்கள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது குதிரை களவாடப்பட்டது. குதிரையைத் தேடிச் சென்ற அவர்கள் தவம் செய்து கொண்டிருந்த முனிவரைக் கண்டனர். அவர்கள் வருகையால் தவம் கலைந்த முனிவர் அவர்களைக் கோபத்துடன் உற்று நோக்க, அவர்கள் எரிந்து சாம்பலாயினர். அவர்களில் வர்ஹிகேது, சுகேது, தர்மகேது, பஞ்சஜனன் நால்வர் மட்டும் தப்பிப் பிழைத்தனர். சாகரத்திலிருந்து யாகக்குதிரை சகரனால் பெறப்பட்டதால் அது சாகரம் எனப்பட்டது. பஞ்சஜனனின் மகன் அமஷுமனன். அவன் மகன் திலீபன். திலீபன் மகன் பகீரதன் தவம் செய்து கங்கையை உலகுக்குக் கொண்டுவர, வரும் வழியில் சாம்பலான சகர புத்திரர்களைக் காத்து மோக்ஷம் கிடைக்கச் செய்தான். பகீரதனால் புவிக்குக் கொண்டு வரப்பட்ட கங்கை பாகீரதி என்று பெயர் பெற்றது. பகீரதனின் பின் வந்தோர்களில் ரகு, ரகுவின் மகன் அஜன். அவன் மகன் தசரதன். தசரத குமாரன் ஸ்ரீராமச்சந்திரன் அனைவரும் சூரிய வம்சத்தினரே. 

11. சந்திரனும் சந்திர வம்சமும்

அத்திரி முனிவரின் மகன் சோமன் என்ற சந்திரன் ஆவான். பிரம்மன் சந்திரனைத் தன் தேரில் ஏற்றிக் கொண்டு உலகை இருபத்தொன்று முறை சுற்றி வந்தார். பிறகு மீதியிருந்த சக்தியிலிருந்து மூலிகைகள் உற்பத்தி ஆயின. சந்திரன் ஒரு பத்ம ஆண்டு (பல மினியன் ஆண்டுகள்) தவம் செய்ய பிரம்மன் தோன்றி அவனை விதைகள், மூலிகைகள், சமுத்திரங்களுக்கு அதிபதி ஆக்கினான். அதனால் சந்திரன் ஒரு ராஜசூய யாகம் செய்தான். இது அவனுக்குப் புகழ், கீர்த்தி, செல்வம், மரியாதை ஆகியவற்றைக் கொடுத்தது. இதனால் மமதை கொண்ட சந்திரன், பிரகஸ்பதியின் மனைவியைக் கடத்திட, மற்ற தேவர்கள், அவளை விட்டு விடுமாறு கூற, தேவர்களுக்கும் சந்திரனுக்கும் இடையே கடும் போர் ஏற்பட்டது. பிரகஸ்பதி பக்கம் தேவர்களும், சிவனும் சேர்ந்திட, சந்திரன் பக்கம் அசுரர்களும், சுக்கிராச்சாரியாரும் சேர்ந்திட நடந்த இந்தப் போருக்கு தாரகாமய சங்கிராமம் என்று பெயர். இறுதியில் பிரம்மன் இருதரப்பினரையும் சமாதானம் செய்தார். இந்நிலையில் சந்திரனுக்கும், தாராவுக்கும் புதன் பிறந்தான். இந்த புதன் இளையை மணந்தான் என்று முன்பே கூறப்பட்டது. 

12. சந்திர வம்ச மன்னர்கள்

யயாதி: சந்திர குலத்தில் தோன்றிய வலிமை மிக்க மன்னன் நகுஷன். அவன் விரஜா என்பவளை மணந்து யதி, யயாதி, சம்யாதி, ஆயாதி, வியாதி, கிருதி என்ற ஆறு புத்திரர்களைப் பெற்றான். நகுஷனுக்குப் பிறகு யயாதி அரசனானான். யயாதி சுக்கிராச்சாரியார் மகளான தேவயானையையும், தானவ மன்னன் மகளான சர்மிஷ்டையையும் மணந்தான். தேவயானிக்கு யது, துர்வசு என்று இரண்டு மகன்களும், சர்மிஷ்டைக்கு துருஹ்யு, அனு, பூரு என்ற மூன்று மகன்களும் பிறந்தனர். யயாதி பேரும், புகழுடனும் வாழ்ந்து, முதுமை வர தன் ராஜ்யத்தை தன் மக்களுக்குப் பகிர்ந்து கொடுத்தான். அவன் உலகம் முழுவதும் யாத்திரை செய்ய விரும்பினான். எனவே, அவன் யதுவை அழைத்து தன் முதுமையை ஏற்று அவனது இளமையைத் தரவும் வேண்டினான். அவன் மறுத்துவிட கோபம் கொண்ட யயாதி அவனும், அவன் மக்களும் அரசாள மாட்டார்கள் என்று சாபம் தந்தான். அவன் மற்ற புத்திரர்களையும் அவ்வாறே வேண்டிட அனைவரும் மறுக்க அனைவரையும் அவ்விதமே சபித்தான். ஆனால் பூரு மட்டும் தந்தை வேண்டுகோளை ஏற்று, தனது இளமையை யயாதிக்கு கொடுக்க, தந்தை மகனை வாழ்த்தினான். பல ஆண்டுகள் கழித்து யயாதி உலக இச்சையை வெறுத்து தன் இளமையை மறுபடியும் பூருவுக்குக் கொடுத்து முதுமையைப் பெற்றுக் கொண்டான். பின்னர் காட்டுக்குத் தவம் செய்யச் சென்றான். பூருவுக்குப் பின் பரதன் என்பவன் நாட்டை ஆண்டதால் நாடு பாரத வர்ஷம் எனப் பெயர் பெற்றது. இந்தக் குலத்தில் தோன்றிய மன்னன் குருவுக்குப் பின் வந்தவர்கள் கௌரவர்கள் எனப்பட்டனர். குருவின் பெயராலேயே குரு÷க்ஷத்திரம் அப்பெயரைக் கொண்டது. துர்வசுவின் சந்ததியில் பாண்டியர், கேரளர், கோலர், சோழர்கள் தோன்றினர். துருஹ்யனின் குலத்தில் காந்தார மன்னர்கள் தோன்றினர். யதுவுக்கு சகஸ்ரதன், பயோதன், குரோஷ்டு, நீலன், அஞ்சிகன் என்று ஐந்து புத்திரர்கள். சகஸ்ரதனின் குலத்தோர் ஹதயர்கள் எனப்பட்டனர். இவர்களில் சிறந்த மன்னன் கார்த்தவீர்யாச்சுனன். குரோஷ்குக்குப் பின் வந்தவர்கள் விருஷ்ணி, அந்தகர் முதலியோர். இதில் விருஷ்ணி குலத் தோன்றலே ஸ்ரீகிருஷ்ணன் ஆகும். 

13. பூ மண்டலப் பிரிவுகள்

பூமண்டலம் ஏழு தீவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவற்றைச் சுற்றி ஏழு வகையான சமுத்திரங்கள் உள்ளன. ஏழு வகையான பர்வதங்கள் உள்ளன. பாரத வர்ஷம் எனப்படும் நம் நாடு எட்டுப் பிரிவாக உள்ளது. இந்திரத் தீவு, சுசேருமனத்தீவு, தாம்ரபரணத்தீவு, கபஸ்தி மானத்தீவு, நாகத்தீவு, சௌம்யத்தீவு, காந்தர்வத்தீவு, வாருணத்தீவு என்பவை பாரதம். ஒன்பதாவது பகுதி கடலில் மூழ்கிவிட்டது. பாரத வர்ஷத்தின் கிழக்கில் கிராதர்களும், மேற்கில் யவனர்களும் உள்ளனர். பூமிக்கடியில் அதலம், விதலம், நிதலம், சுதலம், தலாதலம், ரஸாதலம், பாதாளம் என்று ஏழு உலகங்கள் உள்ளன. இவற்றில் தைத்தியர்கள், தானவர்கள், நாகர்கள் ஆகியோர் வசிக்கின்றனர். இந்தப் பாதாள லோகங்கள் மிகவும் அழகியவை, இங்கு பொன்னும் பொருளும் குவிந்து கிடக்கின்றன. இங்கேயும் காடு, பறவைகள் போன்ற ஜீவராசிகளும் நிறைந்துள்ளன என்று நாரதர் கூறினார். பூமண்டலப் பகுதியாக பல நகரங்கள் அமைந்துள்ளன. இதற்கெல்லாம் தலைவன் யமதர்மராஜன். அவரவர் செய்யும் பாவங்களுக்கு ஏற்ப இங்கு ஜீவன் தண்டிக்கப்படுகிறது. பாவப் பிராயச்சித்தம் செய்தவர்களும் புனிதர்களும் நரகங்களுக்குச் செல்லார். ஸ்ரீகிருஷ்ணனைத் தியானிப்பதே சிறந்த தவமாகும். மண்ணிலிருந்து விண் வரை பரவியிருப்பது இப்பூமி. புவர் லோகம் இதில் ஒரு பகுதி. மற்றும் வரிசையாக சூரிய மண்டலம், சந்திர லோகம், புதன், சுக்கிரன், அங்காரகன், குரு, சனி, சப்தரிஷி மண்டலம், துருவ லோகம் என்று பல பிரிவுகள் உள்ளன. கல்ப முடிவில் பூலோகம், புவர் லோகம், சுவர் லோகம் மட்டும் அழியும்.

14. கோனார்க் (உத்கல நாடு)

ஒரிஸ்ஸா (அ) உத்கலப் பகுதியில் வேத சாஸ்திர புராணங்கள் அறிந்த பிராமணர்கள் உள்ளனர். யஜ்ஞ, யாகாதிகள் நடத்தும் திறம்மிக்க பண்டிதர்கள். இங்கு கோனாதித்தியன் எனப்படும் சூரியன் வடிவம் உள்ளது. அர்க்க, ஆதித்யா என்பவை சூரியனுடைய பெயர்கள். கோனாதித்தியன் என்றாலும் கோனார்க் என்றாலும் ஒன்றையே குறிக்கும். கோனாதித்தியன் (அ) சூரியனின் விக்கிரகத்தைப் பார்த்தாலே, தரிசனம் செய்தாலே பாவம் பொடிபடும். இதைச் சுற்றியுள்ள மணற்பகுதியில் மரங்கள் செழிப்பாக வளர்கின்றன. சூரியோதயத்தில் இக்கடவுளைத் தரிசிப்பது மிகவும் சிறப்புடையது. கிழக்கு நோக்கி நின்று, எட்டு இதழ்கள் கொண்ட தாமரை மலர், சிவப்பு சந்தனம், தாமரை இதழ்கள் ஆகியவற்றைப் பரப்பி, அதன்மீது ஒரு தாமரைச் சொம்பில் நெல், எள், நீர், சிவப்புச் சந்தனம், சிவப்பு மலர்கள், தர்ப்பை கொண்டு நிரப்ப வேண்டும். இத்தகைய அமைப்பில் தாமரை இதழ்கள் மீது சூரிய பகவானை எழுந்தருளுமாறு பிரார்த்தனை செய்ய வேண்டும். இவ்வாறு இக்கோயிலிலுள்ள சூரிய தேவனைப் பூஜை செய்தால், ஏழு பிறப்பு வினைகளும், பாவங்களும் நீங்கும். இந்திரன், தத்தன், பர்ஜன்யன், த்வஷ்டன், புஷன், ஆர்யமன், பகன், விவஸ்வனன், விஷ்ணு, அம்ஷுனன், வருணன், மித்திரன் என்ற பன்னிரண்டும் சூரியனின் வெவ்வேறு உருவங்களே. சூரியன், இந்திரனாக தேவர்களின் பகைவர்களை அழிக்கிறான். தத்தனாகப் படைக்கிறான். பர்ஜன்னியனாக மழையைப் பொழிவிக்கிறான். த்வஷ்டனாகத் தாவரங்களில் வாழ்கிறான். புஷனாகத் தான்யங்களை உற்பத்தி செய்து வளர்க்கிறான். ஆர்யமனாக காற்றை வீசுகிறான். பகலனாக எல்லா ஜீவராசிகளிலும் குடிகொண்டுள்ளான். விவஸ்வனனே தீயாகி உணவாக்க உதவுகிறான். விஷ்ணுவாக துஷ்ட நிக்கிரகம் செய்கிறான். அம்ஷுமனாகக் காற்றில் உள்ளான். வருணனாக நீரிலும், மித்திரனாக சந்திரனிலும் சமுத்திரத்திலும் உள்ளான். மேற்கூறிய பன்னிரண்டு பெயர்களில் பன்னிரண்டு மாதங்களில் பிரகாசிக்கிறான். இந்தப் பன்னிரண்டிலும் கதிர்கள் வெவ்வேறு அணுவில் ஒளிர்கின்றன. இவையே அன்றி சூரியனுக்கு மேலும் பன்னிரண்டு பெயர்கள் உள்ளன. அவை முறையே ஆதித்தியன், சவிதன், சூரியன், மித்திரன், அர்க்கன், பிரபாகரன், மார்த்தாண்டன், பாஸ்கரன், பானு, சித்திரபானு, திவாகரன், ரவி என்பவை. இந்த பிரமம புராணத்தில் சூரியனுடைய அஷ்டோத்திர நாமங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. 

15. இந்திரத்யும்னனும் புரு÷ஷாத்தம ÷க்ஷத்திரமும்

சத்திய யுகத்தில் இந்திரத்யும்னன் என்ற புகழ்பெற்ற மன்னன் இருந்தான். அவன் சத்தியம், நீதி, நெறிமுறையை தவறாது ஆண்டு வந்தான். அவன் ஒரு நல்ல ÷க்ஷத்திரத்தில் ஸ்ரீவிஷ்ணுவைத் தரிசிக்க நினைத்தான். ஆனால், எந்தத் தலமும் அவனுக்குத் திருப்தி அளிக்கவில்லை. அந்த மன்னனின் தலைநகரம் அவந்தி மாளவ நாட்டில் இருந்தது. எல்லா வகையிலும் அந்த நகரம் சிறப்பு வாய்ந்து விளங்கியது. அழகு, இயற்கை, எழில், கோட்டை, யாவும் பெற்றிருந்தது. அந்நகரில் மகாகாலன் என்ற சிவன் கோயில் கீர்த்தி வாய்ந்தது. மகாகாலனைத் தரிசித்தால் ஆயிரம் அசுவமேத யாகம் செய்த பலன் கிட்டும். அவந்தி நகரில் ஷிர்பா நதி ஓடுகிறது. அதன் கரைகளில் விஷ்ணுவுக்கு கோவிந்தசாமி ஆலயம், விக்கிரம ஸ்வாமி ஆலயம் என இரண்டு ஆலயங்கள் இருந்தன. இவ்வளவு இருந்தும் அவை மன்னனுக்கு மனத் திருப்தி தரவில்லை. எனவே, அவன் ஸ்ரீ விஷ்ணுக்குப் புதியதாக ஓர் ஆலய நிர்மாணம் செய்யத்தக்க இடத்தைத் தேடினான். இவ்வாறு தேடிய அவன் இறுதியில் தெற்கிலுள்ள லவண சமுத்திரக் கரையை அடைந்தான். ஆங்கோர் இடத்தில் பூக்களும், பழக்களும் நிறைந்து, பலவிதப் பறவைகளும் நிறைந்த ஓரிடத்தைத் தேர்ந்தெடுத்தான். அதுதான் தற்போது பூரி என்று புகழ்பெற்ற புரு÷ஷாத்தம ÷க்ஷத்திரம். இந்தத் தலம் ஒரு முக்கிய தீர்த்தமாகும். ஆனால் அதைப் பற்றிய விவரங்கள் மறைந்து கிடந்தன. இந்த இடத்தில் முன்பொரு விஷ்ணு கோயில் புகழ்பெற்று விளங்கியது. அந்த விஷ்ணுமூர்த்தியைத் தரிசித்தவர் எல்லாப் பாவங்களும் நீங்கிப் புனிதராயினர். இதனால் அங்கு எந்தப் பாவியையும் தண்டிக்க முடியாத யமதர்மன் பகவானிடம் முறையிட விக்கிரகம் மணலில் புதையுண்டு போயிற்று. இந்த இடம் இந்திரத்யும்னனுக்கு மிகவும் பிடித்துவிட்டது. இதன் அருகில் மகாநதி ஓடிக் கொண்டிருந்தது. ஒரு முகூர்த்த நாளில் ஆலய நிர்மாணத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இச்செய்தியைப் பற்றி கலிங்க, உத்கல, கோசல நாட்டு மக்களுக்கும் தெரிவித்து ஆலயத்துக்கான கற்களை வேண்டினான். விந்திய மலைகளிலிருந்து கற்கள் படகுகளிலும், தேர்களிலும் வந்து சேர்ந்தன. மற்ற நாட்டு மன்னர்களும் ஆலய நிர்மாணச் செய்தியை அறிந்து ஒன்று கூடினர். அவர்களிடம் மன்னன் தான் மிகக் கடினமான இரண்டு பணிகளை மேற்கொண்டிருப்பதாகவும், அவர்களது உதவியால் அவை நிறைவு பெறும் என்ற நம்பிக்கையையும் விண்ணப்பித்தான்.
ஜம்புத்வீபத்திலிருந்து வேதசாஸ்திர விற்பன்னர்கள் வந்தனர். சிறப்பாக யாகசாலை நிர்மாணம் செய்யப்பட்டு யாகம் நல்ல முறையில் நடந்தேறியது. இனி விக்கிரக உருவாக்கம் பற்றித் தன் கவனத்தைச் செலுத்திய மன்னன் ஒரு கனவு கண்டான். அதில் மகாவிஷ்ணு தோன்றி கவலை வேண்டாம். சூரியோதயத்தில் சமுத்திரக்கரைக்குச் செல். அங்கு நன்கு வளர்ந்த ஒரு மரம் பாதி நீரிலும், பாதி மணலிலுமாக ஓங்கி வளர்ந்திருக்கும். அதை வெட்டி எடுத்து அதைக் கொண்டு பிரதிமைகளை உருவாக்கு என்றார். மரம் இரண்டு துண்டாக வெட்டப்படும் போது அங்கே விஷ்ணுவும், விச்வகர்மாவும் இரண்டு அந்தணர் வடிவில் தோன்றினர். அவர்கள் மரத்தை ஏன் வெட்டினாய் என்று கேட்க, மன்னன் கனவில் விஷ்ணு இட்ட ஆணையைப் பற்றி விளக்கினான். அப்போது அந்தணர் வடிவில் இருந்த விஷ்ணு அது நல்ல காரியம் என்று சிலாகித்து, மேலும் தன் அருகிலுள்ள அந்தணச் சிறந்த சிற்பி விக்கிரகம் அமைத்துக் கொடுப்பார் என்று கூறினார். அந்த அந்தணச் சிற்பி உதவியால் மூன்று பிரதிமைகள் உருவாகின. ஒன்று, வெள்ளை நிறத்தில் உருவான பலதேவர் எனப்படும் பலராமர் விக்ரகம். கண்கள் மட்டும் சிவப்பாக அமைந்தன. நீலவர்ண உடை, தலை மீது பாம்புப் படம், கையில் கதைகளுடன் ஏற்பட்டது. இரண்டாவது ஸ்ரீகிருஷ்ணனின் பிரதிமை. நீல நிறம். தாமரைக் கண்கள், மஞ்சள் உடை, கையில் சக்கராயுதத்துடன் உருவாயிற்று. மூன்றாவது, கிருஷ்ணனின் சகோதரி சுபத்திரையின் பிரதிமை. பொன்னாலான பட்டாடையுடன் தோன்றியது. கண நேரத்தில் பிரதிமைகள் உருவானது கண்ட மன்னன் பிரத்யும்னன் அந்தணர்களின் கால்களில் வணங்கி நீங்கள் உண்மையில் அந்தணர்கள் அல்லர், நீங்கள் யார்? என்று வினவினான். உடனே இருவரும் விஷ்ணு, விசுவகர்மாவாகத் தோன்ற மன்னன் மெய்மறந்து நின்றான். மகாவிஷ்ணு இந்திரத்யும்னனை ஆசிர்வதித்தார். நெடுங்காலம் நாட்டை ஆண்டு பரமபதத்தை அடைவாய் என்று கூறி மறைந்தார். ஒரு நன்முகூர்த்த நாளில் மூன்று விக்கிரகங்களும் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டன. 

16. மார்க்கண்டேயரும் புவனேசுவரர் ஆலயமும்

முன்காலத்தில் மார்க்கண்டேயர் என்ற முனிவர் கடும் தவம் செய்து வந்தார். எங்கும் நீரும் அந்தகாரமும் சூழ்ந்தன. உலகெங்கும் தீ பரவியது. மார்க்கண்டேயரையும் தீ பாதிக்க அவர் ஓர் ஆலமரத்தைக் கண்டார். அதன் அடியில் அமர்ந்து தொடர்ந்து விஷ்ணுவை நோக்கித் தவம் செய்யலானார். ஜலத்தின் மீது பள்ளி கொண்டிருந்த விஷ்ணு பகவான் மார்க்கண்டேயனிடம், அச்சம் வேண்டாம். என்னுடைய பக்தனாகிய உன்னைக் காப்பாற்றுவேன் என்றார். தன்னுடன் பேசியது யார்? என்ற வியப்பில் ஆழ்ந்திருந்த போது ஆலமரம் நீரில் மிதக்க அதனடியில் கிளைகளின் மீது ஒரு தங்கப் படுக்கையில் ஒரு சிறுவன் படுத்திருப்பதைக் கண்டார். அச்சிறுவன் விஷ்ணு என்பதை அவர் அறியவில்லை. அப்போது அச்சிறுவன், நீ களைப்படைந்திருக்கிறாய். என்னுடைய உடலில் சேர்ந்து ஓய்வு கொள் என்றான். அந்தச் சிறுவன் உடலில் பிரவேசித்த மார்க்கண்டேயர் அங்கு இந்தப் பேரண்டத்தின் சகல பகுதிகளையும் கண்டார். என்ன செய்வதென்று தோன்றாமல் திகைத்து அச்சிறுவனிலிருந்து வெளிப்போந்து விஷ்ணுவைப் பிரார்த்திக்க அவர் முன் மகாவிஷ்ணு தோன்றி வேண்டிய வரத்தைக் கேள் என்றார். அப்போது முனிவர் புரு÷ஷாத்தம ÷க்ஷத்திரத்தில் அரியும், சிவனும் ஒன்றே என்று காட்ட ஒரு சிவாலயம் எழுப்ப விரும்புகிறேன். அதற்கு அருள் புரிய வேண்டும் என வேண்டினான். பகவான் விஷ்ணு, கோரிய வரத்தை அருள, மார்க்கண்டேயர் புவனேச்வரர் ஆலயத்தை நிர்மாணித்தார். 

17. பலிச்சக்கரவர்த்தியும் உலகளந்தானும்

இது வாமன அவதாரம் பற்றிய பகுதி. பல  புராணங்களில் கூறப்பட்டுள்ளது. இதில், ஓங்கி உலகளந்தான் மூன்றாவது அடியை பலியின் சிரசில் அல்ல, முதுகில் வைத்ததாகக் கூறப்பட்டுள்ளது. ஓங்கி உலகளந்தான் பாதம் விண்ணை அளந்த போது பிரம்மன் கமண்டலத்திலிருந்த புனித நீரால் பாதத்தை நீராட்ட அந்நீர் மலைகள் மீது தெளிக்கப்பட்டு நாலாபுறமும் பாய மேற்கில் சிந்திய நீர் பிரம்மன் கமண்டலத்தையே திரும்பி வந்து அடைந்தது. கிழக்கில் சென்ற நீரைத் தேவர்களும், முனிவர்களும் சேகரித்தனர். தெற்கில் பாய்ந்த நீர் சிவனின் ஜடாமுடியில் இறங்கியது. அதுவே கங்கை நதி ஆகும்.
முன்னொரு காலத்தில் நான்முகனுக்கும் திருமாலுக்கும் தம்முள் யார் பெரியவர் என்ற வினா எழுந்தது. நான்முகன், “நானே படைக்கிறேன்; ஆகவே நான் தான் பெரியவன்” என்றார். திருமால், “நான் காக்கிறேன்; ஆகவே நான் பெரியவன்” என்றார். இவர்களிடையே வாதம் வலுத்தது. அப்போது அங்கே பேரொளிப்பிழம்பாகிய ஜோதித்தம்பம் ஒன்று எழுந்தது. அத்தம்பத்தின் அடிமுடி அறிந்தவரே பெரியவர் என்று அசரீரியாக வானொலியும் கேட்டது. நான்முகனாரும் திருமாலும் அத்தம்பத்தைக் கண்டு வியப்புற்றனர். தமக்குள் ஒரு உடன்பாட்டுக்கு வந்தனர். நான்முகன் அத்தம்பத்தின் முடியைக் கண்டறிவதெனவும் ஒத்துக் கொண்டனர். தம்பத்தின் முடியைக் காண அன்னமாகி நான்முகன் மேலே பறந்து செல்லலானார். திருமாலும் வராக(பன்றி) வடிவேற்று பூமிக்குள் சென்று அடி தேடலானார். பல காலம் இருவரது முயற்சியும் தொடர்ந்து நடந்தது. பறந்து சென்ற அன்னமாகிய நான்முகன் தனது வானவழியில் ஒரு தாழம்பூ விழுவதைக் கண்டு அது எங்கிருந்து வருகிறது என வினவ, அத்தாழம்பூ தான் ஜோதித்தம்பத்தின் உச்சியிலிருந்து புறப்பட்டுப் பல காலமாகக் கீழ் நோக்கி வந்து கொண்டிருப்பதாயும் கூறியது. நான்முகன் தாழம்பூவைத் தன்பால் சேர்த்துக் கொண்டு, தம்பத்தின் உச்சியைத் தான் கண்டு விட்டதாகவும் அதற்குத் தாழம்பூவே சாட்சி எனக் கூறினார். திருமால் பலகாலும் முயன்றும் தாம் தம்பத்தின் அடியைக் கண்டறிய முடியவில்லை என ஒப்புக் கொண்டார். இருவரும் ஜோதித்தம்பமாக விளங்குபவர் சிவபெருமானே என அறிந்து தம்பேதைமையொழிந்து பணிந்தனர். அவ்விருவர் அகந்தையையும் போக்கிச் சிவபெருமான் உலகிற்குத் தன் பேரொளி வடிவத்தைக் காட்டிய கோலமே இலிங்கோற்பவ மூர்த்தியாகும்.
நான்முகன் அறிவு வடிவானவர். திருமால் செல்வத்தின் நாயகர். அறிவும் செல்வமும் இறுமாப்பைத் தரவல்லன. அகந்தை மிகச் செய்வன. ஆனால் அறிவினாலும் செல்வத்தாலும் இறைவனைக் காண முடியாது.பொய் சொன்னதற்காக நான்முகனுக்குக் கோயில் இல்லாமற் போயிற்று! தாழம்பூவும் சிவபெருமானை சூடும் பேற்றினை இழந்துவிட்டது. திருமால் தன் பிழைக்கு வருந்தியதால் உய்வடைந்தார்.
திருமுறைகளில் இலிங்கோற்பவமூர்த்தி பலவாறு போற்றப்படுகின்றார். திருஞானசம்பந்தர் தனது பதிகங்கள் பலவற்றில் ஒன்பதாம் (9) பாடலிலும், திருநாவுக்கரசர் 125 பாடல்களிலும் சுந்தரர் 35 பாடல்களிலும் அரியும் அயனும் தேடற் கரியானைப் பரவுகின்றார்கள்.
‘நீண்டமாலும் அயனும்வெருவ நீண்ட நெருப்பு’ எனப் போற்றும் மணிவாசகர்.
“அலரவனும் மாலவனும் அறியாமே அழலுருவாய்
நிலமுதற் கீழண்டமுற நின்றதுதான் என்னேடி
நிலமுதற்கீழ் அண்டமுற நின்றிலனேல் இருவருந்தம்
சலமுகத்தால் ஆங்காரம் தவிரார்காண் சாழலோ”
என்று பாடுகின்றார். ஆதியும் அந்தமுமில்லாத அரும்பெருஞ்சோதியாகிய சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்பதை இவ்வடிவம் இனிது காட்டுகின்றது.
சிவன்கோயில் கருவறையின் மேற்குச்சுவர் நடுமாடத்தில் இலிங்கோற்பவமூர்த்தி இடம் பெறுகிறார்.
“அன்னமாய் விசும்பு பறந்தயன் தேட
அங்ஙனே பெரிய நீ சிறிய
என்னையாள விரும்பி என் மனம் புகுந்த
எளிமையை யென்றும் நான் மறக்கேன்
முன்னம்மால் அறியாவொருவனாம் இருவா
முக்கணா நாற்பெருந்தடந்தோள்
கன்னலே தேனே யமுதமே கங்கை
கொண்ட சோளேச் சரத்தானே”
- திருமாளிகைத்தேவர்
“தேடிக் கண்டு கொண்டேன் – திரு
மாலோடு நான்முகனும்
தேடித் தேடொணாத் தேவனை என்னுள்ளே
தேடிக் கண்டுகொண்டேன்”
என்னும் அப்பர் பெருமானின் திருஅங்கமாலைப் பாடல் இங்கு சிந்தித்தற்குரியது.
இலிங்கோற்பவமூர்த்தியை வழிபட்டால் எல்லாத் தீங்குகளும் விலகும். மக்கள் அனைவருக்கும் அனைத்து நலன்களையும் பேறுகளையும் நல்கும். பூதாதிகளின் தொல்லை இராது. நீண்ட ஆயுளையும் புண்ணியத்தையும், மறுமையில் நிலைத்த பேரானந்
திருச்சிற்றம்பலம்.