திங்கள், 5 அக்டோபர், 2020

ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு 19

ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு 19

பெரிய நம்பிகள் இளையாழ்வான் சந்திப்பு

வாழியெதிராசன் வாழியெதிராசன்

திருக்கச்சி நம்பிகள் மூலம் பெரிய நம்பிகளையே குருவாக ஏற்றுக்கொள்ளும்படி பேரருளாளன் இட்ட கட்டளையை மேற்கொண்டு, பெரிய நம்பிகளை சந்திக்கப் புறப்பட்டார் இளையாழ்வான்.

இந்த சமயத்தில் திருவரங்கத்திலுள்ள ஸ்ரீ  வைஷ்ணவர்கள் ஆளவந்தாரின் விசேஷ கடாக்ஷம் பெற்ற இளையாழ்வாரை அழைத்துக் கொண்டு வரவேண்டுமென்று பெரிய நம்பிகளிடம் விண்ணப்பித்தனர். பெரிய நம்பிகளும் அதனை ஏற்றுக் கொண்டு தன் மனைவியுடன் இளையாழ்வானைச் சந்திக்க புறப்பட்டுச் சென்றார்.

பெரிய நம்பியும் அவரது மனைவியும் மதுராந்தகம் (காஞ்சிபுரம் மாவட்டம்) சென்றடைந்தனர். அங்கு எழுந்தருளியுள்ள ஏரிகாத்த பெருமாளின் சந்நிதியில், அவர்கள் இளைப்பாறிக் கொண்டிருந்தனர். இளையாழ்வானும் அப்பொழுது மதுராந்தகம் ஏரிகாத்த பெருமாளின் கோவிலுக்கு வந்தடைந்தார், பெரிய நம்பிகளைச் சந்தித்தார். இந்த எதிர்பாராத சந்திப்பினால் பெரிய நம்பிகளும் இளையாழ்வானும் மகிழ்ந்தனர். பெரிய நம்பிகளைச் சந்தித்தது பேரருளாளன் கருணையே என்று மகிழ்ந்த இளையாழ்வான் தன்னை சிஷ்யனாக ஏற்றுக்கொள்ளும்படி வேண்டினார்.

பெரிய நம்பிகளும் இளையாழ்வானை சிஷ்யனாக ஏற்றுக்கொள்ள ஒப்புக்கொண்டார். பெரிய நம்பிகள்,  "காஞ்சி பேரருளாளன் சந்நிதி முன்பு 'பஞ்ச சம்ஸ்காரம்' செய்து கொள்ளலாம்" என்றார். இளையாழ்வானோ "எனக்கு இவ்ளோ நாள் தவம் செய்து இப்போது தான் குருவாக தாம் கிடைத்திருக்கிறீர். காஞ்சிபுரம் செல்லலாம் என்றால், அதற்குள் என்ன நடக்கும் என்று தெரியாது. அதனால் இந்த மதுராந்தகத்திலேயே பஞ்ச சம்ஸ்காரம் செய்துவிடலாமே" என்று வேண்ட, பெரியநம்பிகளும் ஏரிகாத்த ராமர் கோவிலிலுள்ள மகிழ மரத்தடிக்கு அழைத்துச் சென்று 'பஞ்ச சம்ஸ்காரம்' செய்தார்.

🌺🌺 பஞ்ச சம்ஸ்காரம்

பஞ்சசம்ஸ்காரம் என்பது ஸ்ரீ வைஷ்ணவத்திலுள்ள முக்கிய சம்பிரதாயம் ஆகும்.

🍁 சங்கு - சக்கரம்

தீயிலிட்டு நன்கு பழுக்க காய்ச்சிய சங்கினை இடது தோளிலும், சக்கரத்தினை வலது தோளிலும் இடுவார்கள். பெரிய நம்பிகள் இளையாழ்வானின் வலது, இடது தோளில் சக்கரம், சங்கினை இட்டார்.

🌻 திருமண் காப்பிடல்

சீடரின் நெற்றி, கழுத்து, மார்பு, முதுகு, தோள்பட்டை, வயிறு ஆகிய இடங்களில் 12 திருமண் காப்புகளை, விஷ்ணுவின் 12 சிறப்புப் பெயர்களைக்கூறி ஆச்சாரியர் காப்பிடுவார். பெரிய நம்பிகள் இளையாழ்வானுக்கு திருமண் காப்பிட்டார்.

🌹 தாஸ்யநாமம் சூட்டுதல்

ஆண் பக்தர்களுக்கு இராமானுஜ தாஸன் என்றும், பெண் அன்பர்களுக்கு இராமானுஜ தாசி என்று பெயரிடுவார்கள். விஷ்ணு பக்தரின் பிறப்புப்பெயர் வாசுதேவன் இருப்பின் வாசுதேவ இராமானுஜ தாசன் என்று பெயரிடுவார்கள். இராமானுஜர் தங்கள் தொடர்புடையவர் என்பதைக் குறிக்க இராமானுஜ தாஸ்யப் பெயர் புதிதாக ஆச்சாரியாரால் சூட்டப்படுகிறது.

ஆனால், இளையாழ்வானான இராமானுஜர் அவதரித்து வைஷ்ணவ ஆட்சிப்பொறுப்பை ஏற்கும் வரை "தாஸன்" "தாசி" என்ற திருநாமத்தை இட்டுக் கொள்வார்கள். "இளையாழ்வான் தாஸன்" என்ற திருநாமத்தை பெரிய நம்பிகள் இளையாழ்வானுக்கு இட்டார்.

🌺 மந்திரதீட்சை அளித்தல்

மூன்று தெய்வீக புனித இரகசியத் திரய மந்திரங்கள் (இரகசியத் திரயம்) எனும் எட்டெழுத்து மந்திரம், துய மந்திரம் மற்றும் சரம ஸ்லோகம் ஆகிய மந்திரத்தை தீட்சை பெறும் சீடரின் காதுகளில் மட்டும் கேட்கும்படி ஆச்சாரியார் மந்திர தீட்சை அளிப்பார்.

இளையாழ்வானின் காதில் துய மந்திரம், சரம ஸ்லோகம் மந்திரங்களை பெரிய நம்பிகள் கூறினார். எட்டெழுத்து மந்திரம் இளையாழ்வான்  திருக்கோஷ்டியூர் நம்பிகளிடம் கற்றார். அதைப் பற்றி பிறகு பார்க்கலாம்.

🍁 யக்ஹம்

திருமாலை வழிபடும் முறைகள், உணவு நியமம் மற்றும் பிற வைஷ்ணவ அடியார்களுடன் நடந்து கொள்ளும் முறைகளை ஆச்சாரியன் சீடருக்கு விளக்குவார். இவற்றையெல்லாம் இளையாழ்வானுக்கு பெரியநம்பிகள் எடுத்துக் கூறினார்.

ஆளவந்தாரின் கருணை தம்மூலம் இளையாழ்வானுக்கு பிரகாசித்து அருளுகிறது என்று கூறி, சர்வமந்திரம், த்வய மந்திரம் அனைத்தையும் உபதேசித்தார் பெரிய நம்பிகள்.

மந்திர ரத்தினத்தின் ரகஸ்யத்தைக் கேட்டு உய்ந்த இளையாழ்வான், குருவையும், அவர் பத்தினியையும் காஞ்சிபுரத்திற்கு அழைத்தார்.


ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
       திருப்பாணாழ்வார் அருளிச்செய்த
             அமலனாதி பிரான்
             🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
               பெரிய நம்பிகள்
         அருளிச்செய்த தனியன்

ஆபாத சூடமநுபூய ஹரிம்ஸயானம் மத்யேகவேர துஹிதுர் முதிதாந்தராத்மா
அத்ரஷ்ட்ருதாம் நயநயோர் விஷயாந்தராணாம்
யோ நிஸ்சிகாய மநவை முநிவாஹனம் தம்

விளக்கவுரை :
எந்த ஒரு திருப்பாணாழ்வார் திருக்காவேரியின் மத்தியில் திருப்பள்ளி கொண்டிருக்கின்ற
அழகிய மணவாளப் பெருமாளை,
திருவடி தொடங்கி திருமுடி வரைக்கும்
கண்குளிர அனுபவித்த மகிழ்ந்த சிந்தையராய், தமது கண்கள் அப்பெருமாளை தவிர வேறு ஒன்றையும் பார்க்காது என்று திடமாக சொன்னாரோ , அப்படிப்பட்டவரும்,
லோகசாரங்க முனிவரை வாஹனமாக உடையவருமான திருப்பாணாழ்வாரை
சிந்திக்க கடவேன்.

             திருமலைநம்பிகள்
         அருளிச்செய்த தனியன்

காட்டவே கண்ட பாத கமலம் நல்லாடை உந்தி*
தேட்டரும் உதர பந்தம் திருமார்பு கண்டம் செவ்வாய்*
வாட்டமில் கண்கள் மேனி முனியேறித் தனி புகுந்து*
பாட்டினால் கண்டு வாழும் பாணர் தாள் பரவினோமே.

விளக்கவுரை :
லோகசாரங்க முனிவரின் தோளில் ஏறி, தனியே திருவரங்கனின் சந்நிதியிலே புகுந்து, அம்முனிவர் திருவரங்கனை காண்பிக்கவே,
தான் கண்ட திருவரங்கனின்
திருவடித் தாமரைகள்,
நல்ல பீதாம்பரம்,
திரு உந்திக்கமலம்,  கிடைத்தற்கு அரிய பொன் அரைநாண், பிராட்டி வாழ்கின்ற மார்பு,  திருக்கழுத்து, சிவந்த திருவாய், சோர்வில்லாத திருக்கண்கள் இவற்றை பாசுரங்களாக பாடி மகிழும் திருப்பாணாழ்வாருடைய திருவடிகளை துதிக்கப் பெற்றோமே.
         மலர்க்கண்ணில் வேறொன்றும்
              வையாதான் வாழியே!

இன்னும் அனுபவிப்போம்...

உய்ய ஒரேவழி! உடையவர் திருவடி!!💐🙏


கருத்துகள் இல்லை: