வியாழன், 22 அக்டோபர், 2020

சித்தர்களின் வரலாறு ஒன்று போகர்

சித்தர்களின் வரலாறு
பெயர்: போகர்

வரலாறு சுருக்கம்
போகர்! சித்தர்கள் பற்றி சிந்திக்கும் பொழுது பாமரருக்கும் கூட பளிச்சென்று புலப்படும் ஒரு பெயர் இது. மருத்துவம், விஞ்ஞானம், மெய்ஞானம், ரசவாதம், காயகல்பமுறை, யோகாப்பியாசம் என்று சகலத்திலும் உச்சம் தொட்ட ஒரு சித்தர் உண்டு என்றால் அவர், போகர் தான். அகத்தியர், இவரைத் தான் முதல் சித்தன் என்று ஒரு பாட்டின் மூலம் கூறுகிறார். சமயத்தில் உதவியவர்களைப் பார்த்து ‘கடவுளைப் போல உதவினீர்கள்… என் வரையில் நீங்களே கடவுள்’ என்று சொல்வோம் அல்லவா…! அப்படித் தான் போகரின் செயல் திறத்தைப் பார்த்து இவரே முதல் சித்தன் என்று அகத்தியர் கூறியதும். உண்மையில் முதல் சித்தன் அந்த ஆதி சிவன் தான். அவனே மதுரையம்பதியில் சுந்தரானந்தனாக வந்து அருளிச் சென்றான். போகரைப் பார்த்து வியப்பதற்கு ஏராளமான காரண காரியங்கள் உள்ளன. பொதுவில் சித்தர் எனப்படுபவர்கள் இந்த உலகம் பின் பற்றும் ஆன்மிக நெறிமுறைகளை புறந்தள்ளியவர்கள்.
ஆலயம் செல்லுதல், விக்ரகங்களை பூஜித்தல், ஆசார சடங்குகளில் நாட்டம் கொள்ளுதல் என்பதெல்லாம் விடுத்து தங்களுக்குள்ளேயே இறைவனைக் கண்டு இன்புற்றவர்கள். ஆனால் இதில் போகர் பெரிதும் வேறுபட்டே தெரிகிறார். பல சித்தர்கள் போல் இவரும் ஒரு சிவத் தொண்டரே. அதே சமயம், அன்னை உமையை தியானித்து அவளருளையும் பெற்றவர். அவளது உபதேசம் கேட்டு பழனி மலைக்குச் சென்று தவம் செய்து முருகனை தண்டாயுத பாணியாகவே தரிசனம் செய்தவர். உலகம் உய்ய வேண்டும் என்பதற்காக தான் தரிசித்த தண்டாயுபாணிக்கு நவபாஷாணத்தால் சிலை எடுத்தவர். பாஷாணங்களைக் கட்டுவது என்பது சாதாரண விஷயமல்ல. ஒவ்வொரு பாஷாணமும் ஒவ்வொரு விதம்… ஒவ்வொன்றும் ஒவ்வொரு குணம். அவைகளை உரிய முறையில் சேர்ந்துப் பிசைந்தால் தான் உறுதியான ஒரு பொதுவான பாஷாணம் உருவாகும். இதை நயனங்களால் பார்த்தாலே கூட போதும். அதிலிருந்து வெளிப்படும் நுட்பமான கதிர்வீச்சு, கண்வழியாக உடம் பின் உள்ளும், உடம்பின் புறத்திலும் படிந்து, நலம் ஏற்படும். இதன் மேல் பட்டு வழியும் பொருள் எதுவாயினும் அதுவும் மருத்துவ குணம் கொண்டு தீராத வியாதியை எல்லாம் தீர்த்து வைக்கும். உயர்வான பாஷாணங்கள் ஒன்பதை தேர்வு செய்து அதைக் கொண்டு போகர் செய்தது தான் பழனி முருகனின் மூலத் திரு உருவம். அவ்வாறு செய்ததோடல்லாமல் அவ்வுருவத்திற்கு ஏற்ற வழிபாட்டு முறையை ஒரு புதிய சித்தாகமமாகவே உருவாக்கி அதையும் நடைமுறைப் படுத்தியவர் போகர். மனிதப் பிறப்பானது கோள்களால் நிர்வகிக்கப் படுவதை உணர்ந்து அந்தக் கோள்களின் குணங்களைக் கொண்ட ஒன்பது பாஷாணத்தை தேர்வு செய்து அதிலிருந்து தண்டாயுத பாணியை செய்து கோள்களை ஓர் உருவுக்குள் அடக்கிப் பூட்டியவர் போகர் என்றும் கூறுவர். தண்டாயுத பாணியை எவர் வந்து தரிசித்து வணங்கினாலும் நவ கோள்களையும் ஒருசேர வணங்கிய ஒரு வாய்ப்பும் அவர்களுக்கு உண்டாவது இதனுள் அடங்கிக் கிடக்கும் இன்னொரு நுட்பம். இப்படி பழனியம்பதியில் முருக வழிபாட்டிற்கு களம் அமைத்த போகரின் வாழ்க்கையும் ஒரு வகையில் நவரசங்களால் ஆனது தான். பழனியம்பதியின் சித்த விலாச கணக்குப்படி வைகாசி மாதத்து பரணி நட்சத்திரத்தில் பிறந்த போகரின் பிறப்பு : சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இந்த பூமியில் அவதரித்தவர் போகர். இவரின் தந்தை ஒரு முழு தமிழர். இவர் வணிக தொழிலில் ஈடுபட்டு, கடல் கடந்து பல நாடுகளுக்கு சென்று வருபவர். அப்படி வணிகத்திற்காக சீனா சென்ற போது தான் சந்தித்து பழகிய, சீனா நாட்டு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியருக்கு மகனாக பிறந்தவர் தான் அய்யன் போகர். தம்முடைய பத்து வயது வரை சீனா நாட்டில் வளந்த போகர் பத்து வயது முடிந்த பின் தன் பெற்றோருடன் தமிழ் மண்ணிற்க்கு வந்து சேர்ந்தார்.

அதன் பிறகு தன்னுடைய இருபத்தி ஐந்தாவது வயது நடக்கும் போது நண்பர்கள் சிலருடன் வணிக கப்பல் ஒன்றின் மூலம் தாம் பிறந்த மண்ணான சீன நாட்டிற்க்கு சென்று வந்தார். தமிழ் நாட்டிற்கு வந்த பிறகு சில ஆண்டுகள் மட்டுமே கல்வி கற்றதாகவும் பின்பு ஏட்டு படிப்பினால் பயன் ஒன்றுமில்லை என்பதை உணர்ந்து வாழ்க்கை கடலில் கரை சேர ஞான கல்வி ஒன்றே தேவை என்று உணர்ந்து அதற்கான ஆன்மிக தேடலில் இறங்கி உள்ளார். இயல்பாகவே இறை பக்திமிக்கவரான தந்தையும், சீனா நாட்டில் பிறந்து வளர்ந்த பெண்ணாக இருந்தாலும் மண வாழ்விவில் ஈடுபட தொடங்கிய பின்னர் தன் கணவர் வழி நின்று அவரோடு இணைந்து இறை வழிபாட்டில், ஈடுபாடு கொண்ட தாயாரும் போகரின் ஆன்மிக வாழ்விற்கு அடிதளமாக இருந்தனார்.

அப்பொழுது பழனியில் நிறைந்து வாழ்ந்த சித்தர்கள்,யோகிகளின் நட்பு ஏற்பட்டு போகர் சுவாமிகளும் சித்த மார்க்கத்திலே ஈடுபட துவங்கினார். பெரும்பாலும் பழனிமலையில் மேலுள்ள குகையிலும் சில நேரங்களில் பழனிமலையை சுற்றி இருக்கும் மலைகளிலும் தவயோகத்தில் ஈடுபட்டு வரலானார். முற்பிறவிகளில் செய்த தவபலனோடு இப்பிறவியில் செய்த தவ பலனும் சித்திக்க  சித்தருக்கு எல்லாம் மகா சித்தர் ஆனார். முருகக்கடவுளின் மேல் அதிகமான பக்தி கொண்டிருந்த போகர் சுவாமிகள் முருகனையே வழிபடும் கடவுளாக கொண்டிருந்தார். அதோடு சித்தமருத்துவம், ரசவாதம், நவபாஷண ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு தேர்ந்தார். அகத்தியர் போகரே வேதியலின் தந்தை என்று புகழ்கிறார்.
நவசித்தர்களில் ஒருவரான காலாங்கி நாதரின் மாணவர் இவர் என்பது குறிப்பிடப்படவேண்டிய ஒரு செய்தி. அதை இவரது அரிய நூல்களுள் ஒன்றான ‘போகர் ஏழாயிரம்’ எனும் நூலின் வழி அறியலாம்.

பதினெண் சித்தர் வரிசை தோன்றுவதற்கு முன்பு நவசித்தர்களே பிரதானமாகக் கருதப்பட்டனர். மேரு மலை தான் இவர்களின் யோகஸ்தலம். மேருவும் இமயமும் உலகப் பற்றில்லாத சித்த புருஷர்கள் பெருமளவு சஞ்சாரம் செய்யும் ஒரு வெளியாகவே விளங்கியது. இங்கே தான் நவநாத சித்தர்கள் வசித்து வந்தனர். அவர்களுள் ஒருவர் காலாங்கி நாதர். காலாங்கி நாதர் போகர் வந்த சமயம் மஹா சமாதியில் இருந்தார். போகர் சமாதியில் உள்ள காலாங்கி நாதரை வணங்கி அவ்விரு மலைகளிலும் பல தாது வகைகளை தேடிக்கண்டு பிடித்தார். அதைக் கொண்டு பல காய கற்பங்களை செய்து தானே உண்டு பார்த்து அதன் பயனையும் உடனே அடைந்தார். இதனால் அவரது தேகம் மிகவும் திடமாகியது. மேலும் வான வெளியில் பறப்பது, நீர்மேல் நடப்பது போன்ற செயல் பாடுகள் எல்லாம் மிக மிகச் சாதாரணமாகியது. இதனால் போகருக்குள் கர்வம் துளிர்த்து விட்டது. துரோணருக்கு ஓர் ஏகலைவன் போல தானும் குருவை வணங்கி அந்த அருளாலேயே பல தாதுக்களை கண்டறிந்து விட்ட ஒருவன். உண்மையில் காலாங்கி நாதருக்கு சீடர்கள் இருந்திருந்தால் அவர்கள் கூட இப்படி எல்லாம் அறிந்திருக்க மாட்டார்கள் என்றெல்லாம் நினைக்கத் தொடங்கி விட்டார். இதனால் அந்த மலைத் தலத்தில் பணிவாக பார்த்துப் பார்த்து நடந்தவர் நிமிர்ந்து நெஞ்சு நிமிர்த்தி நடக்க ஆரம்பித்தார்.
மேருவிலும் இமயத்திலும் சூட்சம வடிவில் பலநூறு சித்த புருஷர்கள் தவமியற்றி வந்தனர். அவர்களில் பலரது தவம், போகரின் கர்வமான நடையால் கலைந்தது. அவர்கள் கண் விழித்ததோடு போகருக்கும் காட்சியளித்தனர். திடுக்கிட்ட போகரிடம் நாங்கள் காலாங்கி நாதரின் மாணவர்கள். பலப்பல யுகங்களாக எங்களை மறந்து தவம் செய்தபடி இருக்கிறோம் என்றார்கள். அத்தனை யுகங்களும் சில நாட்கள் கடந்தது போலத்தான் இருக்கிறது என்று அவர்கள் கூற போகருக்கு அது ஆச்சரிய அதிர்ச்சியாகியது. அப்படியானால் அவர்கள் தவத்தை எவ்வளவு பெரிய விஷயமாக கொண்டிருக்க வேண்டும் என்றும் தோன்றியது. அந்த நொடி தான் கற்ற தாதுவித்தை எல்லாம் மிக அற்பமானது என்கிற எண்ணம் ஏற்பட்டு அவரது கர்வமும் அடங்கியது. அதை அறிந்த அந்த சித்த புருஷர்கள் போகருக்கு பல சித்த ரகசியங்களை போதித்தார்கள்.

ஒரு சித்தர் போகர்மீது பெரும் கனிவு கொண்டு ‘அமிர்தமணிப்பழம்’ என்னும் தேவக்கனி மரம் ஒன்றை அந்த வெளியில் காட்டி அதன் பழங்களை உண்ணச் சொன்னார். அதை உண்டால் ஆயுள் முழுக்க பசிக்காது, நரைக்காது, முதுமை உண்டாகாது. இதில் உள்ள பழத்தை உண்டு விட்டே இங்குள்ளோர் காலத்தை வென்று தவம் செய்கின்றனர் என்று கூறிட போகர் அந்தக் கனிகளை உண்டு உடம் பின் பிணியாகிய ‘பசி, தாகம், மூப்பு’ என்கிற மூன்றிலிருந்தும் விடுதலை பெற்றார். இப்படி படிப்படியாக முன்னேறிய போகருக்குள் சில விசித்திரமான எண்ணங்களும் ஏற்பட்டன. அவை முழுக்க முழுக்க மனித சமுதாயம் தொடர்பானவையே. ஒரு உயிர் எதனால் மனிதப் பிறப்பெடுக்கிறது? அப்படிப் பிறக்கும் போது அது எதன் அடிப்படையில் ஏழையின் வயிற்றிலும், பணக்காரனின் வயிற்றிலும் பிறக்கிறது? இறப்புக்குப் பின் கொண்டு செல்வது எதுவும் இல்லை என்று தெரிந்தும் வாழும் நாளில் மனிதன் ஏன் ஆசையின் பிடியிலேயே சிக்கிக் கிடக்கிறான்? எவ்வளவு முயன்றும் அவனால் மரணத்தை ஏன் வெற்றி கொள்ள முடியவில்லை? இப்படிப் பலவித கேள்விகள் போகரை ஆட்டிப்படைத்தன. மொத்தத்தில் மனித சமூகமே வாழத் தெரியாமல் வாழ்ந்து விதியின் கைப்பாவையாக இழுத்துச் செல்லப்படுவது போல உணர்ந்தவர் மனித சமூகத்தை காப்பாற்றியே தீர வேண்டும் என்று எண்ணம் கொண்டார்.

இதனால் தானறிந்த மருத்துவ மூலிகை ரகசியங்களை நூலாக எழுதினார். அவைதான் ‘போகர் ஏழாயிரம்’, போகர் நிகண்டு, 17000 சூத்திரம், 700 யோகம் போன்றவை. இவர் உள்ளத்தில் மனித சமூகத்தை நோயின்றி வாழவைக்கும் அரிய குறிப்புகள் தோன்றின.
அதே சமயம் இவருக்கு எதிர்ப்பும் தோன்றியது. பல சித்த புருஷர்கள் இவரை பெரிதும் எதிர்த்தனர். சித்த ரகசியங்களை எழுதி வைப்பது ஆபத்து என்றனர். மனிதன் அனுபவிக்க வேண்டிய கர்மங்களை முற்றாக நீக்க முயற்சிப்பது இயற்கைக்கே ஊறு விளைவிக்கும் என்றெல்லாம் புகார்கள் கூறினர். போகர் அவற்றை காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை. சஞ்சீவி மூலிகை, ஒருவர் கையிலும் அகப்படாத படி விலகி ஓடும் இயல்பு உடையது. இதை அறிந்த போகர், அதை ஒரு மந்திரத்தால் கட்டி பின்பு அதை கைப்பற்றி காட்டினார்.
அந்த மந்திரம், தம்பணா மந்திரம் எனப்படுகிறது. இன்றும் காடுகளில் மூலிகை தேடிச்செல்வோர் தம்பணா மந்திரத்தை மானசீகமாக உச்சரித்து காணப் பெறாத மூலிகைகளையும் கண்டு அதைக் கைப்பற்றுவர்.

அமிர்தத்துக்கு இணையான ஆதிரசத்தையே இவர் கண்டறிந்தார் என்பர். அதைக் கொண்டு இரும்பைத் தங்கமாக்கலாம். ஆதிரசமோ, அமிர்தமோ தேவர்களுக்கே உரியது. அசுரர்களோ மானிடர்களோ அதை உண்டால் அதனால் உலகம் அழிந்து விடும் அபாய நிலை உருவாகும் என்று பல சித்த புருஷர்கள் அஞ்சினர். தங்கள் அச்சத்தை தட்சிணா மூர்த்தியாகிய சிவபிரானிடம் கூறிட சிவபிரானும் அவர்களது கவலையை நீக்குமூலமாக போகரை அடைந்து அவர் அறிந்து எழுதிய அவ்வளவு ரகசியங்களையும் கேட்டார்.
போகர் எழுதியதை போகர் போல ஒரு சித்தரால் அன்றி சராசரி மனிதர்களால் விளங்கிக் கொள்ள இயலாது என்பதை அதன் மூலம் அறிந்த அவர் போகரின் முயற்சியை ஆசிர்வதிக்கவே செய்தார். அதன் பின் இவர் புகழ் பல மடங்கு பெருகியது. பலரும் இவரிடம் வந்து கற்பங்கள், குளிகைகள் பெற்றுச் சென்றனர். மொத்தத்தில் மனித சமூகத்தை இம்மண்ணில் உள்ள பொருட்களைக் கொண்டே தேவர்களுக்கும் கந்தவர்வர்களுக்கும் இணையாக ஆக்கினார்.
அண்டை நாடான சீன தேசமும் நமது நாவலந் தீவாகிய பாரத தேசமும், புவி இயலில் அனேக ஒற்றுமைகள் கொண்டிருந்தன. இதனால் மூலிகைச் செல்வங்கள் இவ்விரு தேசங்களில்தான் மிகுந்து காணப்பட்டது. எனவே வான் வழியாக அடிக்கடி சீனதேசம் சென்று வருவது போகரின் வழக்கமாகியது. அங்கே ‘போ யாங்’ என்ற ஒரு சீன யோகியின் உடம்புக்குள் கூடுவிட்டு கூடு பாயும் முறையில் புகுந்து சீனராகவே வாழ்ந்தார் என்றும் ஒரு கதை உண்டு. சீனர்கள் இந்தியர்களில் இருந்து உணவுப் பழக்க வழக்கங்களில் பெரிதும் வேறுபட்டவர்கள். இந்திய உணவில் எண்ணெய், கொழுப்பு சத்து, காரம், புளிப்பு, உவர்ப்பு என்றெல்லாம் பல சுவைகள் உண்டு. சீனர்களிடம் அப்படி இல்லை. அவர்களது உணவு முறை ரஜோ குணத்தை தூண்டுவதாகவும் எலும்பு, நரம்பு இவைகளை வலுவாக வைத்துக் கொள்ளத் தக்கதாகவும் இருந்தமையால் அவர்களிடம் பல வித்யாசமான பயிற்சி முறைகள் இருந்தன. அதில் ‘ரஜோலி’ என்னும் யோக முறையும் ஒன்று. போகர் அதை ஆர்வத்துடன் பழகிடும் போது தலையில் அடிபட்டு அவருக்குள் அவர் பற்றிய அவ்வளவு எண்ணங்களும் மறைந்து போன. பின்னர் அவரைத் தேடிக்கொண்டு வந்த போகரின் மாணாக்கர்களில் ஒருவரான புலிப்பாணி, போகரின் நிலை கண்டு கலங்கி அவரைத் தன் முதுகில் சுமந்து கொண்டு புலிப்பாணி ஆகாய மார்க்கமாக பழனி அருகே உள்ள கன்னிவாடி மலை வந்தடைகிறார். சகல கலைகளையும் மறந்து ஒரு சாதாரண மனிதரைப் போல் உள்ள குருவை எண்ணி புலிப்பாணி கண்ணீர் வடித்தார். போகர் அவரை தேற்றி உனக்கு அஷ்ட மகா சித்திகளும் கைவர பெற்றுள்ளது சீடனே எனக்கு நீ குருவாக இருந்து அவற்றை போதித்து விட்டால் நான் மீண்டும் பழைய நிலையை அடைந்து விடுவேன் என்றார். இருந்தாலும் ஒரு சீடன், குருவுக்கு உபதேசிப்பது என்பது காரியப் பிழையில் முடிந்து. முடிவில் அவனையே சாபத்திற்கு ஆளாக்கி விடும் என்பதால் புலிப்பாணி தண்டம் ஒன்றை நிறுவி அதற்கு அனைத்து சித்துக்களையும் உபதேசிக்க போகர் அருகில் அமர்ந்து கேட்டு சகல சித்துக்களையும் கைவரப்பெற்றார். போகர் ஒரு புத்துயிர்ப்போடு எழுந்தார். பலவித அனுபவங்களால் பழுத்த ஞானியாகி விட்ட அவர் இறுதியாக வந்து சேர்ந்த இடம் தான் பழனி. அங்கேயே முக்தியும் அவருக்குக் கிட்டியது. மொத்தத்தில் போகர் என்றால் ‘நவநாயகர்’ என்றும் கூறலாம்....


ஓம் ஸ்ரீ துர்க்காயை நம:

 ஓம் ஸ்ரீ துர்க்காயை நம:
==================


அஞ்ஞாதவாசத்திற்காக விராட நகரத்தினுள் செல்வதற்கு முன்னால் யுதிஷ்டிரர் துர்க்கையை மனமுருகப் பிரார்த்திக்கிறார். நான் எழுதிக்கொண்டிருக்கும் வியாஸபாரதத்தில் விராடபர்வம் எழுதும் போது கதையின் விறுவிறுப்பு தொய்வடையக்கூடாது என்பதற்காக ஒரு வரியில் யுதிஷ்டிரர் துர்க்கையைக் கும்பிட்டார் என்று கடந்துவிட்டேன். நலமருளும் நவராத்திரி நடந்து கொண்டிருப்பதாலும் யுதிஷ்டிரர் செய்த துர்க்கைத் துதியை இங்கே கொடுத்தால் பலருக்குப் புண்ணியம் என்பதாலும்.... இதோ அந்த துதி:

********

திவ்யமான வஸ்திரங்களை உடுத்தி புஷ்ப மாலைகளினால் அலங்கரிக்கப்பட்டு சத்ருக்களை சம்ஹாரம் செய்பவளான துர்க்கையை மனதினால் ஸ்தோத்திரம் செய்பவர்களை அவள் எப்படிக் காப்பாற்றுவாள் தெரியுமா? புதைச் சேற்றில் அகப்பட்டுக்கொண்ட பலஹீனமான பசுவை கரையேற்றுவது போல துதிப்பவரின் பாவங்களிலிருந்து கரையேற்றுகிறாள்... என்கிறார் வியாஸர். கம்சனால் தூக்கிக் கல்லில் அடிக்கப்பட்டபோது குபீரென்று விண்ணுக்குக் கிளம்பிய வாஸுதேவரின் சகோதரி அவள். தன்னுடைய இளைய சகோதரர்களுடன் அவளை பிரத்யட்சமாகத் தரிசிப்பதற்காக அவளைப் போற்றத் துவங்குகிறார்.

"வரங்களை அளிப்பவளே!
கறுத்த நிறமுடையவளே!
நித்ய யவௌனம் உடையவளே!
வேத சஞ்சாரியே!
பால சூரியனுக்கு ஒப்பான வடிவுடையவளே!
பூர்ண சந்திரன வதனம் உடையவளே!
நான்கு கைகளை உடையவளே!
நான்கு முகங்களை உடையவளே!
பருத்த ஸ்தனங்களைக் கொண்டவளே!
மயில் தோகை நிற கங்கணங்கள் உடையவளே!
நீ நீலமேகம் போல கறுத்த நிறமுடையவள்!
உன் கைகளில் பல ஆயுதங்களைத் தாங்குகிறாய்!
உன்னுடைய இடுப்பிலிருக்கும் சர்ப்பத்திலான கடிசூத்திரத்தினால் வாஸுகியினால் சுற்றப்பட்ட மந்திரபர்வம் போல விளங்குகிறாய்!
மயில் தோகைகளினால் செய்யப்பட்ட உயர்ந்த கொடியினால் விளங்குகிறாய்!
நீ பிரம்மச்சர்ய விரதத்திலிருந்து தேவலோகத்தைக் காப்பாற்றினாய். ஆகையால் அவர்கள் உன்னை ஸ்தோத்திரம் செய்கிறார்கள்.
மூவுலகங்களையும் ரக்ஷிப்பதற்காக மஹிஷாஸுரனைக் கொன்றாய்!
எனக்கு நீ பிரசன்னமாக வேண்டும் தாயே!

நீ எனக்குக் கருணை புரி!
எனக்கு மங்களைத்தை அருள்!
யுத்தத்தில் ஜயத்தைக் கொடுக்கும் நீயே ஜயஸ்வ ரூபிணியாகவும் விஜயஸ்ய ரூபிணியாகவும் இருக்கிறாய்!
நீ இப்போது எனக்கும் ஜயத்தைக் கொடு!
ஏ காளீ! மஹா காளீ! சாராயத்திலும் மாமிசத்திலும் பசுக்களிலும் விருப்பமுள்ளவளே!
பர்வதங்களுள் ஸ்ரேஷ்டமான விந்தியபர்வதமே உன் வாசஸ்தலம்!
இஷ்டங்களை அருளி இஷ்டப்படி பல ரூபங்களில் சஞ்சரிப்பவள் நீ!
எந்த மனிதர்கள் உன்னை விடியற்காலையில் நினைக்கிறார்களோ அவர்கள் சத்புத்திரர்களையும் ஐஸ்வரியத்தையும் அடைவது அரிதல்லவே!
காட்டில் கஷ்டப்படுபவர்களுக்கும் பெரும் சமுத்திரத்தில் மூழ்குபவர்களுக்கும் திருடர்களால் வழிமறிக்கப்படுபவர்களுக்கும் நீயே

துர்க்கம் என்னும் முதலைகள் நீந்தும் அகழியிலிருந்து பிராணிகளியக் காப்பதினால் உன்னை துர்க்கை என்றழைக்கிறார்கள்.

ஏ மஹாதேவீ!  ஜலத்தைத் தாண்டும் போதும் அரண்யங்களில் வசிக்கும் போதும் பிரவேசிக்கவே முடியாத மலைக்காடுகளிலும் உன்னை நினைப்பார்கள் கஷ்டத்தை அடையவே மாட்டார்கள்.

நீயே கீர்த்தி;
நீயே ஸ்ரீதேவி;
நீயே தைரிய லக்ஷ்மி;
நீயே கார்யஸித்தி;
நீயே ஹ்ரீ (அபாண்டமான காரியங்கள் செய்யும் போது உண்டாகும் வெட்கம்)
நீயே கல்வி;
நீயே சந்ததி;
நீயே புத்தி;
நீயே சந்த்யை;
நீயே ராத்ரி;
நீயே ஒளி;
நீயே உறக்கம்;
நீயே நிலவு;
நீயே காந்தி (Khaanthi);
நீயே பொறுமை;
நீயே தயை;

உன்னை பூஜிப்பதினால் மனிதர்களின் மோகத்தையும் பந்தத்தையும் மக்கள் அழிவையும் பொருள் அழிவையும் வியாதியையும் மரணத்தையும் பயத்தையும் போக்குவாய்!

தேவீ!  ராஜ்ஜியத்திலிருந்து தோற்ற நான் உன்னைச் சரணமடைந்தேன்.

தாமரை இதழ் போல கண்களை உடையவளே; எனக்குப் பாதுகாப்பாக இரு!

ஸத்யஸ்வரூபிணியே! எங்கள் விஷயத்தில் சத்தியமாக இரு!!

ஹே துர்க்கையே!  பக்தர்களிடத்தில் அன்புள்ளவளே! நீ என்னை ரக்ஷிப்பாயாக"

இவ்வாறு யுதிஷ்டிரர் பிரார்த்தித்தவுடன் நேரில் தோன்றி அவர்களைக் காப்பதாக வாக்களித்தாள் துர்க்காம்பிகை.

இதப் படிப்பதால் உண்டாகும் பலன்களை பலஸ்ருதியாக துர்க்கையே சொல்கிறாள்.

"ஓ! பாண்டவர்களே! இந்த உத்தமமான ஸ்தோத்திரத்தை எவன் பக்தியோடு கேட்பானோ அல்லது படிப்பானோ அல்லது சொல்வானோ அவனுடைய காரியங்களெல்லாம் சித்தியடையும். அவர்களுக்கு ராஜ்ஜியத்தையும் ஆயுளையும் சரீரத்தையும் சத்புத்திரர்களையும் கொடுப்பேன்"

இப்படி வரமருளி அந்த இடத்தில் மறைந்துபோனாள்!

#வியாஸபாரதம்
#துர்க்கை_துதி
#நவராத்திரி_2020


ஜோதிடம் எப்படி?


சில சமயம் நாம் கடந்து போக நினைத்தாலும் முடிவதில்லை... இந்த உலக ஜோதிடம் சொல்லறேன்னு பேஸ்புக்கில் பதிவு போடறவங்கள நினைச்சா எனக்கு சிரிப்பு சிரிப்பாக வருகிறது...

சமீபத்தில் ஒரு பதிவு பார்த்தேன். சில ஜோதிடர்கள் சொன்ன பதிவு
உலகில் அங்காங்கே நிலநடுக்கம் வரும். ஆயுத சண்டை நடைபெற வாய்ப்பு உள்ளது. தீ விபத்தும், மழையும் ஆங்காங்கே பெய்யும்.
இப்படி போட்டுட்டு... ஆப்கானிஸ்தானில் சண்டை நடந்தத போட்டு...  நான் சொன்னது நடந்துதான்னு கமெண்ட் போட அதுக்கு ஒரு 50-60 லைக்  வேற 🤩🤩🤩 ஏப்பா ! ஆப்கானிஸ்தான்ல என்னைக்கு சண்டை நடைபெறாம இருந்தது...

உட்டா ! ஊட்டியில் குளிர் அடிக்கும், சிரபுஞ்சியில் மழை பெய்யும், சகாரா பாலைவனம் வரண்டு காணப்படும், அண்டார்டிக்காவில் பனி பொழிவு உண்டு, ஜப்பானில் நிலநடுக்கம் வரும் என்று பதிவு போடுவீங்க போல!!!.... இதுல பெருமை வேற.... இதெல்லாம் எப்போதும் நட்க்கறது தானே பா!.... மிடிலடாப்பா உங்க ஒலக ஆர்வம்...

மொதலில் உலக ஜோதிடம் அப்படிங்கற mundane astrologyக்கு என்னென்ன விஷ்யம் தெரியனுமுன்னு தெரியுமா?..

மொதலில் உலக அறிவு வேணும்.. அதாவது உலகத்தை பற்றிய அறிவு. உலகத்தில் சேதன அசேதன பொருட்கள் என்ன? அதுக்கு ஆதாரம் என்ன? உலக இயக்கத்துக்கு ஆதரமான சூரிய சந்திர நிலை என்ன? இப்படி geographical knowledge வேணும்... முதலில் முக்குண சேர்க்கை என்னென்னான்னு கண்டு பிடிக்க தெரியனும்....

உதாரணமாக மஹாத்மா பராசரர் இந்த ஜோதிடத்துக்கு 7 மலை, 40 முக்கிய ஆறுகள், 4 கடல், 6000 குட்டி நதிகள் (கடலில் கலப்பவை மட்டும்), 99 நாடுகள், 80 தீவுகள், 8 பாலைவனம்....etc  என்ற reference கணக்கு சொல்லறார். இதை வெச்சி தான் நாட்டின் நிலவரத்தை தன் நூல்களில் பதிவு செய்யறார்...  இதெல்லாம் என்னென்னனச்சும் யாராவதுக்கு தெரியுமா? இதை கூர்ம விபாகம்ன்னு சொல்லி படிக்கனும்.........

கூகுல் மட்டும் இல்லைன்னா நம்ம பொழப்பு தம்படிக்கு பிரயோஜனம் இல்லை... இது போக சூரிய சந்திர நகர்வு, ருது, கிரகண கணக்கு முக்கியம். உதாரணமாக கடைசி சூரிய கிரகணம் மிருகசீரிட நட்சத்திரத்தில் வந்தது... அதற்கான பலன், பசு, ஆடு போன்ற கால் நடைகளில் மாற்றமும், பாதிப்பும் நல்லவர்களுக்கு தீமையும் சில எதிர்பாராத மரணமும் நிகழும்ன்னு சொல்லுவாங்க....  இந்த 2020 ல் எத்தனை பிரபலங்கள் மேல் லோகத்துக்கு போனாங்கன்னு கணக்கு போட்டுக்கோங்க?

அப்போது சனி இருந்த நட்சத்திரம் uttra ashada நட்சத்திரம். அதனால் யவனர் பாதிக்கபடுவாங்கன்னு சொல்லுவாங்க.. யவனர்கள் அப்படின்னு இப்ப இருக்கற roman emperors சுத்தி இருக்கும் நாட்டை சொல்லலாம்... Covid ல இத்தாலி பாதிக்கப்பட்ட நெலவரம் உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை.... அதுமட்டும் இல்லாமல் , கிரகணம் நிகழ்ந்தது ஹேமந்தருது காலம். அந்த காலத்தில் எப்போதும் சூரியன் சிவந்த நிலையில் தன்னுடைய ரச்மையை வைத்திருப்ப்பார். அப்போது தான் மனிதர்கள் நன்மையடைவார்கள். உதாரணமாக  அப்போது சாம்பல் கலரில் இருந்தால் மழை இருக்கும் ஆனால் மனிதர்கள் திருடர்களால் பாதிக்கப்படுவார்கள் என்று  சொல்லலாம்.

மேலும் வர்ஷ ருது காலத்தில் சூரியன் வெளிர் கலர்ல இல்லாமல் peacock plume colour ல இருந்தா 12 வருடம் மழை தட்டுபாடு உண்டு...

இப்ப நடக்கறது சரத் ருது காலம் இதில் சூரியனின் ரச்மை தாமரை நுனி இதழ் கலரில் இருக்கனும்.... உலக ஜோதிடம் சொல்லற ஜோதிடப்புலிகளில் ஒருத்தராவது சூரியனை காலையில்  முத்திரை போட்டு பார்க்கற வழக்கம் இருக்கான்னு தெரிஞ்சுக்க விரும்பறேன்??? ஏன்னா உலக ஆதாரமான சூரிய பகவானையே பார்க்கற வழக்கம் இல்லைன்னா உலக ஜோதிடம் எப்படி வரும் என்று  தெரிஞ்சிக்க ஆசையா இருக்கு???....

இதே போல சந்திர கிரகண காலத்தில் சந்திரனின் இரு கொம்புகளில் வலது பக்கம் ஏறி இருந்தா ஒரு பலனும் இடது பக்கம் ஏறி இருந்தா ஒரு பலனும் உலகத்திற்க்கு இருக்கும்ன்னு தெரியுமா???

இதில்... ராகு, கேது வெச்சு தான் பல பேர் வாழ்க்கையே ஓடுது... 😁😁😁 நான் பல வருசம் முன்னாடி கேதுன்னா என்னான்னு ஜோசியர் கிட்ட கேட்டா சாயா கிரகம்ன்னு சொல்லிட்டு ஓடிட்டார்!!! ஆன அவிக சாயா கிரகம் மட்டும் இல்லைன்னு சொல்லி விளக்கம் கொடுத்தா விழி பிதிங்கி நிக்கறாங்க.... என்னாத்த சொல்ல?...

உதாரணமாக, கேதுங்கறத மூன்று விதமா பெரியவங்க சொல்லு வாங்க celestial, terrestrial, etheriat பிரிப்பாங்க... மேலும் ராகு, கேதுக்களை சாயாகிரகமாக மட்டுமில்லாமல் வால்மீன், விண்கல், falling stars, lunar spots, ஒளிரும் பொருளாகவும் கன்சிடர் பண்ணனும்... ஏன்னா அசிதர், தோவலர், கர்கர் போன்ற ரிஷிகள் கிட்டத்தட்ட 100 - 1000 variants கேது இருக்கறதாவும் சொல்லுவாங்க.... ஆனா மஹரிஷி நாரதர் சொல்லும் போது ஒரே கேது தான் ஆனா பல shape ல various time ல தெரியும் என்று பதிவு பண்ணினார்.

உதாரணமாக வாசகேதுன்னு ஒன்னு இருக்கு... அதன் தலை வடக்கு பக்கமாக நீண்டு பெரிதாக மேற்கு பக்கத்தில் தெரியும். மேலும், ருத்திர கேது, ஸ்வேத கேது, பவ கேது, சம்வஸ்திர கேது, ஜல கேது, பத்ம கேது, ரஸ்மி கேது, மணி கேது, ஹஸ்தி கேது, கபால கேது இப்படி நிறைய இருக்கு... கனக கேதுன்னு ஒன்னு இருக்கு எட்டு வால் மீன் கூட்டத்தில் நீள்வட்டமா தெரியும்ன்னு பராசரர் பதிவு செய்கிறார்கள். இதே கனக கேது முக்கோண வடிவில் மறுபக்கம் தெரியும்ன்னு கர்கர் பதிவு செய்யறார்... இன்னொரு கேதுவை கங்ககேதுன்னு சொல்வாங்க... அது உத்திரபல்குனி நட்சத்திரத்தில் தன்னுடைய வால் பகுதியை சம்பந்தபடுத்தும் போது சோழ, அவங்க, சீன ரஜ்ஜியத்தில் மழையும் பயிர் சேதமும் இருக்கும்ன்னு கருத்தை சொல்கிறார்...

இதெல்லாம் லட்சத்தில் சில துளிகளே...

ஆனா இம்புட்டு விஷயமும் யாராவது யோசிச்சி உலகஜாதக பலனை சொல்லறாங்களானுதான் என் கேள்வி?...

சும்மா IPL prediction, celebrity prediction சொல்லி சொல்லி ஜோதிடத்தை எதுக்கு சொல்லனுமுன்னு இல்லாமல் போச்சு...

உண்மையான ஜோதிடர்கள் பலபேர் கணிக்கிறார்கள். அவர்களுக்கு சிரம் தாழ்ந்து வணக்கம் செய்கிறேன். அதே சமயம் மேலே சொன்னது 1st paragraph ல சொன்னது மாதிரி பதிவு போடறவங்களை கண்டாத்தான் கடுப்பாகுது மக்களே.....

இதெல்லாம் சொல்லறதுனால எனக்கு உலக ஜோதிடம் தெரியும்ன்னு சொல்லவரலை... ஆனா சொல்லறவங்க முடிஞ்சவரை உண்மைய சொல்லுங்கன்னு சொல்லறேன்.... இந்த இன்ஸ்டண்ட் ஜோசியர்களை கண்டா இம்சை அரசன் படத்தில் வடிவேல் சொல்லற டயலாக்தான் ஞாபகம் வருது....

4 ஆன் லைன் கிளாஸும், 3 ரெபரென்ஸ் புக்கும் படிக்க வேண்டியது.  Facebook ல் 150 லைக் வாங்க வேண்டியது, 3 வாட்ஸ் அப் குரூப்புக்கு அட்மினா இருக்க வேண்டியது. கேட்டால் astrologer என பீற்றி கொள்வது... போதாகுறைக்கு ஜோதிட வள்ளல், கலாநதி, உதயநிதி, பூஷணம், ரத்னா, காலகணிதன், கணக்கு சூறாவளி என பட்டம் வேறு"

பராசரர், நாரதர், கர்கர் போன்ற ரிஷிகளே பேருக்கு முன்னாடி  எங்கப்பா பட்டம் போட்டுட்டு சுத்துனாங்க... இவிங்க கூட copyright கேட்டதில்லைப்பா!!!! ஆனா கொடுமை என்னான்னா.... இதெல்லாம் தெரிஞ்சிக்க கூட யாரும் விரும்பற்தில்லைங்கறது தான்... சில சமயம் ரிஷிகளையே மிஞ்சினவிங்களா நினைச்சுக்கறது தான்.

முடிலடாப்பா முடியல....

கோவில் எதற்கு என்று கேட்கும் அறிவு ஜிவிகளுக்கு இந்த பதிவு

கோவில் எதற்கு என்று கேட்கும் அறிவு ஜிவிகளுக்கு இந்த பதிவு

பெங்களுர் அருகே *ஹாசன்* என்ற ஊரில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே அதுவும் ஒரே ஒரு நாள் முழுவதும் கோவில் திறக்கப்படும். அங்கே மூன்று சின்ன சின்னதாக கற்கள் இருக்கும். இந்த ஸ்வாமியின் பெயர் *ஹாசன அம்மாள்* என்று அழைக்கப்படுகிறது. மூன்று சிறு சிறு கற்கள் தான் அந்த ஹாசன அம்மாள். மூன்று கற்கள் மீதும் சிகப்பு வண்ணத்தில் சந்தனம் இருக்கும். அந்த சந்தனத்தை முழுவதும் சுரண்டி விட்டு அந்த ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்யப்படும். ஸ்வாமிக்கு அருகே இரண்டு பெரிய நெய் தீபங்கள் இருக்கும். கோவில் திறந்தவுடன் அந்த இரண்டு நெய் தீபத்திலும் இருக்கும் நெய்யை எடுத்து விட்டு புதிதாக நெய் ஊற்றப்படும். இதில் என்ன அதிசயம் என்றால் ஊற்றிய நெய் தீபம் அடுத்த ஆண்டு வரை அனையாமல் ஒரு வருடம் எரிந்து கொண்டே இருக்கும். நெய் எக்காரணம் கொண்டும் குறையவே குறையாது. அது மட்டுமா? இன்னும் நிறைய அதிசயங்கள் இருக்கிறது. பூக்கள் வாடாமல் அப்படியே இருக்கும். முதலில் சொன்னது போல் ஸ்வாமியின் மீது இருக்கும் சந்தனம் சுரண்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். இந்த சந்தனம் இயற்கையாகவே ஸ்வாமி மீது வருகிறது. அபிஷேகம் முடிந்த பிறகு ஸ்வாமிக்கு நைவேத்தியம் செய்யப்படுகிறது. அதுவும் எப்படி சுட சுட கொதிக்க கொதிக்க  நைவேத்தியம் செய்யப்படுகிறது. அவ்வளவு தானா என்றால் இல்லை. மேலும் ஒரு அதிசயம் நடை பெருகிறது. ஸ்வாமிக்கு முன் ஒரு குடம் நிறைய தண்ணீர் வைக்கப்பட்டு அதுவும் நைவேத்தியம் செய்யப்படுகிறது. இதில் என்ன அதிசயம் என்று தானே நினைக்கிறீர்கள். ஆமாம் அதிசயம் தான் ஒரு ஆண்டு கழித்து மீண்டும் கோவில் திறக்கும் போது தண்ணீர் கொஞ்சம் கூட குறைந்திருக்காது, நெய் தீபத்தில் கொஞ்சம் கூட நெய் குறைந்திருக்காது, ஸ்வாமிக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட அன்னம் கெடாமல் அதே சூட்டில் சுட சுட இருக்கும், சந்தனத்தை முழுவதும் எடுத்து விட்டு அபிஷேகம் செய்து முடித்து வெரும் கற்கலாக தான் நடை சாற்றப்படுகிறது. ஆனால் மீண்டும்  ஒரு ஆண்டு கழித்து கோவில் திறக்கும் போது மூன்று ஸ்வாமிகள் {கற்கள்} மீதும் சிகப்பு வண்ணத்தில் சந்தனம் இருக்கும். இறைவன் இல்லை என்று சொல்பவர்களே ஒரு முறை இந்த கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து விட்டு சொல்லுங்கள் இதெல்லாம் எப்படி சாத்தியம் என்று.

 *~```*இவன் பா. ஹரிஹரன்*```~*