திங்கள், 7 அக்டோபர், 2024

நவராத்திரி 75...

நவராத்திரி 75...




1. நவராத்திரியானது வசந்த நவராத்திரி, சாரதா நவராத்திரி, ஆஷாட நவராத்திரி, சிசிரருது நவராத்திரி என்று 4 வகையாக இருந்தது. தற்போது சாரதா நவராத்திரி கொண்டாடப்படுவது மட்டுமே வழக்கத்தில் உள்ளது.

2. துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி மூவரும் ஒன்றி ணைந்து மகிஷாசுர வர்த்தினி சக்தியாக உருவெடுத்து மகிஷனை அழித்ததே சாரதா நவராத்திரியாக கொண்டாடப்படுகிறது.

3. நவராத்திரி 9 நாட்களும் பூஜிக்க முடியாதவர்கள் சப்தமி, அஷ்டமி, நவமி (7, 8,9) நாட்களில் வழிபடலாம். அதுவும் முடியாதவர்கள் 8-வது நாள் அஷ்டமி அன்று நிச்சயம் தேவியை ஆராதிக்க வேண்டும்.

4. நவராத்திரி நாட்களில் வீட்டுக்கு வரும் பெண்களை சக்திகளாக நினைத்து கவுரவிக்க வேண்டும். அவர்களுக்கு தாம்பூலம், மஞ்சள், கண்ணாடி, சீப்பு, குங்குமச் சிமிழ், தேங்காய், பழம், புத்தகங்கள், ரவிக்கைத் துணி கொடுத்து அனுப்ப வேண்டும்.

5. நவராத்திரி 9 நாட்களும் 9 கன்னியரை சக்தியாக பூஜிப்பது குடும்பத்துக்கு நல்லது.

6. நவராத்திரி 9 நாட்களும் தினமும் 9 பெண்களுக்கு நலங்கு வைத்து மஞ்சளிட்டு அன்னதானம் கொடுப்பது தேவியை மகிழ்விக்கும்.

7. நவராத்திரி முதல் நாளன்று ஒருவர், 2-வது நாள் ரெண்டு பேர் என்று அதிகரித்து 9-வது நாள் 9 பேரை பூஜிப்பது நல்லது.

8. மைசூரில் நவராத்திரியுடன் 10-வது நாளான விஜயதசமியையும் சேர்த்து கொண்டாடுகிறார்கள். 10-வது நாள் தசமி என்பதால் அன்றைய தினம் தசராத்திரி என்கிறார்கள். அதுவே சுருக்கமாக தசரா என்று அழைக்கப்படுகிறது.

9. மேற்கு வங்கத்தில் நவராத்திரியை துர்க்கா பூஜை, காளி பூஜை என்று பிரமாண்டமாக கொண்டாடுகிறார்கள்.

10. ராவணனை ராமபிரான் அழித்தது விஜயதசமி தினத்தன்று தான் இதை நினைவு கூறும் வகையில், உத்தரபிரதேசம், டெல்லி, பஞ்சாப், அரியானா மாநிலங்களில் விஜயதசமி தினத்தன்று "ராம்லீலா'' கொண்டாடுகிறார்கள்.

11. விஜய தசமி தினத்தன்று மனம் உருகி பூஜித்தால் 16 வகை செல்வங்களையும் பெறலாம்.

12. விஜயதசமி தினத்தன்று வன்னி மரத்தை வழிபட்டால் எதிரிகள் தொல்லை நீங்கும்.

13. நவராத்திரி நாட்களில் தேவி மகாத்மியம் தேவி பாகவதம் படிப்பதும், கேட்பதும் பாவங்களை விரட்டும்.

14. நவராத்திரி 9 நாட்களும் முறைப்படி சுலோகம் சொல்லி பூஜித்தால் நிச்சயம் சொந்த வீடு அமையும்.

15. நவராத்திரி கொலு வைப்பது பெண்களின் மன இறுக்கத்தை தளர்த்தும்.

16. நவராத்திரி கடைசி நாளன்று துர்க்கை இமயமலைக்கு திரும்பிச் செல்வதாக ஐதீகம் இருப்பதால் வட மாநிலங்களில் துர்க்கை சிலைகளை கங்கையில் போட்டு விடுவார்கள்.

17. நவராத்திரி பூஜையின் போது எருமை மாடுகளைப் பலி கொடுக்கும் வழக்கம் மேற்கு வங்கத்தில் இருந்தது. தற்போது அந்த பழக்கம் ஒழிக்கப்பட்டு விட்டது.

18. நவராத்திரி விரதம் இருப்பவர்கள் தரையில் தான் படுத்து தூங்க வேண்டும்.

19. அம்பிகை சங்கீதப் பிரியை. எனவே நவராத்திரி நாட்களில் தினமும் ஏதாவது ஒரு பாடலாவது பாட வேண்டும்.

20. வட நாட்டில் ஒரு பிரிவினர் நவராத்திரி 9 நாட்களும் உணவு சாப்பிடாமல் விரதம் இருப்பதுண்டு.

21. இந்தியாவில் சரசுவதி தேவிக்கு இரண்டே இரண்டு இடங்களில் தான் கோவில் உள்ளது. ஒன்று தமிழ்நாட்டில் உள்ள கூத்தனூர், மற்றொன்று ஆந்திராவில் பாசர் என்னும் கிராமத்தில் உள்ளது.

22. தமிழ்நாட்டில் நவராத்திரி கொலு வைக்கப்படுவது போல ஜப்பானிலும் பொம்மை கொலுவை வைக்கிறார்கள். நம்மூர் சரசுவதி போல அங்கு பெண்-டென் என்ற தேவதையை வணங்குகிறார்கள். அந்த தேவதையும் சரசுவதி வைத்திருப்பது போல கையில் புத்தகம் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

23. "ஓம் ஸ்ரீமகா சரஸ்வதி சரணம்'' என்ற நாமத்தை மாணவ-மாணவிகள் தினமும் 9 தடவையும், வேலையில் இருப்பவர்கள் 18 தடவையும் முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள் 108 தடவையும் சொல்லி வந்தால் பொன், பொருள் சேர்க்கையுடன் புத்திக் கூர்மை உண்டாகும்.

24. சந்திரகுப்தர் ஆட்சிக் காலத்தில் நவராத்திரி விழா ஒரு வீர விழாவாகக் கொண்டாடப்பட்டது.

25. அக்பர் காலத்தில் தசரா திருவிழா கோலாகல நிலைக்கு மாறியது.

26. காளியை மேற்கு வங்க மக்கள் மிகவும் ஆத்மார்த்தமாக வழிபடுவதால் அம்மாநில மக்கள் சக்தி வணக்கக்காரர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

27. குஜராத்தில் நவராத்திரி 9 நாட்களும் பெண்கள் கும்மியடித்து நடனமாடுவார்கள். இந்த நடனத்தக்கு கரவோ என்று பெயர்.

28. நவராத்திரி 9 நாட்களும் மகா சக்தியை ஐதீகப்படி வணங்கினால் முக்திப் பேறு உண்டாகும்.

29. நவராத்திரி கோலத்தை செம்மண் கலந்து போட்டால், அம்பாள் மனமகிழ்ந்து வருவார்.

30. நவராத்திரி 9 நாட்களும் வாசலில் மாவிலை கட்டி பூஜை செய்தால் ஜஸ்வர்யம் உண்டாகும்.

31. கொலு வைத்திருப்பவர்கள் அதன் முன் நவக்கிரக கோலம் போட்டால் அம்பாள் அனுக்கிரகமும், நவக்கிரகப் பலன்களும் கிடைக்கும்.

32. நவராத்திரி 9 நாட்களும் வீட்டுக்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு பரிசுப் பொருட்களுடன் பூந்தொட்டி, புத்தகத்தை தானமாக கொடுக்கும் பழக்கம் கடந்த சில ஆண்டுகளாக சென்னையில் அதிகரித்துள்ளது.

33. முத்தாலத்தி என்றொரு வகை கோலம் உள்ளது. நவராத்திரி நாட்களில் இந்த வகை கோலம் போட்டால் அம்பாள் அருள் நமக்கு எளிதாக கிடைக்கும்.

34. நவராத்திரி 9 நாட்களில் வரும் வெள்ளிக் கிழமையன்று 5 சுமங்கலி பெண்களுக்கு அன்னதானம் செய்து புடவை மற்றும் தாம்பூலம் கொடுத்து ஆசி பெற்றால் உடனடியாக திருமணம் கைகூடும்.

35. நவராத்திரி 5-ம் நாள் லலிதாம்பிகையின் அவதார தினமாக கொண்டாடப்படுகிறது. அன்று 9 சிறுமிகளுக்கு பட்டுப்பாவாடை தானம் செய்தால் நினைத்தது நடக்கும்.

36. நம்மூரில் முளைப்பாரி வைப்பது போல மராட்டியத்தில் நவராத்திரி முதல் நாளன்று நவதானியங்களை மண் கலசங்களில் வளர்ப்பார்கள். விஜய தசமியன்று அவற்றை ஊர்வலமாக எடுத்து சென்று ஆறுகளில் கரைத்து விடுவார்கள்.

37. நவராத்திரி நாட்களில் வீட்டுக்கு வரும் பெண்களுக்கு தாம்பூலம் கொடுப்பதன் மூலம் பெண்களிடம் விருந்தோம்பல் , ஒற்றுமை உணர்வு அதிகரிக்கும். 38. உடுப்பி கிருஷ்ணருக்கு நவராத்திரி 9 நாட்களும் சேலை கட்டி சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.

39. விஜயதசமி தினத்தன்று தான் அர்ஜுனன், தனது போர் கருவிகளை பூஜித்து வணங்கினான். அந்த போர் கருவிகளை எடுத்துச் சென்று சண்டையிட்டதால்தான் அர்ஜுனனுக்கு பாரதப் போரில் வெற்றி கிடைத்தது.

40. நவராத்திரியில் வரும் மூல நட்சத்திர தினத்தன்று சரசுவதியை வணங்கினால் கல்விச் செல்வம் தடையின்றி கிடைக்கும்.

41. நவராத்திரி 9 நாட்களும் சர்க்கரை பொங்கல், உளுந்து வடை, நைவேத்தியம் செய்தால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

42. நவராத்திரி தொடர்பான சுலோகம் மந்திரம் தெரியவில்லையா? கவலை படாதீர்கள். ஓம் ஸ்ரீ லலிதா தேவியே நம என்பதை 108 தடவை சொன்னால் போதும், உரிய பலன் கிடைக்கும்.

43. நவராத்திரி 9 நாட்களும் 10 வயதுக்குட்பட்ட சிறுமிகளை அம்பிகையாக கருதி, குமாரி பூஜை நடத்தி வந்தால், செல்வம், பூமி, செல்வச் செழுமை, சரஸ்வதி கடாட்சம், மகான்களின் ஆசீர்வாதம் ஆகியவை கிடைக்கும்.

44. நெமிலியில் திரிபுரசுந்தரி கோவிலில் உள்ளது. இந்த கோவிலில் ஒரு நவராத்திரிக்கு கலசத்தில் வைக்கப்படும் தேங்காய் அடுத்த ஆண்டு நவராத்திரி வரை கெடாமல் இருக்கும்.

45. நவராத்திரியின் போது கல்விக்கு அதிபதியான ஹயக்கிரீவரை வணங்க வேண்டியது அவசியம். செங்கல்பட்டு அருகில் செட்டி புண்ணியம் என்ற கிராமத்தில் ஹயக்கிரீவருக்கு என்றே தனி விசேஷ கோவில் உள்ளது. உங்கள் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க இங்கு சென்று வணங்கலாம்.

46.தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவிலில் முப்பெரும் தேவியர் இணைந்த அர்த்த நாரீஸ்வர துர்க்கை உள்ளது. 3 தலை, 8 கைகளுடன் இந்த துர்க்கை காணப்படு கிறார்.

47.கும்பகோணம் அருகில் உள்ள தேனுபுரீஸ்வரர் கோவிலில் விஷ்ணு துர்க்கை எனப்படும் அஷ்ட புக துர்க்காதேவி அருள்புரிகிறாள். 8 கரங்களுடன் உள்ள இந்த துர்க்கையின் ஒரு கையில் கிளி இருப்பது தனிச் சிறப்பாகும்.

48.காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் உள்ள சரஸ்வதிக்கு "சியாமளா'' என்று பெயர். 49.திருவிடைமருதூர் மகாசிங்கேஸ்வரர் கோவிலில் சரஸ்வதி தேவி 4 தலைகளுடன் வீனை ஏந்தி காட்சி அளிக்கிறார்.

50.நவராத்திரி நாட்களில் முப்பெரும் தேவி யரின் கதைகளை கேட்டால் அம்மைநோய் தாக்காது என்பது நம்பிக்கை.

51.சுகமான வாழ்வு வேண்டும், கல்வியில் சிறந்து விளங்க வேண்டும், அரசியலிலும், வேலையிலும் பதவி தொடர வேண்டும், எந்த தொழிலில் ஈடுபட்டாலும் வெற்றி மீது வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் நவராத்திரி பூஜையை அவசியம் செய்ய வேண்டும்.

52. நவராத்திரி விரதம் நவமியுடன் முடிவதால் மகாநவமி தேவி பூஜை என்றும், சரசுவதி பூசையுடன் பூர்த்தியாவதால் சரசுவதி பூஜை என்றும் கடைசி நாளில் ஆயுதங்களைப் பூசிப்பதால் ஆயுத பூஜை என்றும் வழங்கி வருகிறது.

53. ராமபிரான் நவராத்திரி விரதத்தை கடை பிடித்த பிறகுதான் அவருக்குச் சீதை இருக்குமிடம் தெரிந்தது என்று தேவி பாகவதம் சொல்கிறது.

54. நவராத்திரி விரதம் இருந்தால் வீரம், செல்வம் கல்வி முதலியவற்றை இந்த பிறயிலேயே பெறுவது உறுதி.

55. ஜனமேஜயன் நடத்திய சர்ப்ப யாகத்திலிருந்து நாகங்களை மானசாதேதி காப்பாற்றியதால் அவள் நாகேஸ்வரி என்று அழைக்கப்படுகிறாள். இவள் குருவான ஈஸ்வரரிடமிருந்து சித்த யோகத்தை கற்றதால் சித்த யோகினி என்ற நாமத்தைப் பெற்றாள். இவளது கணவர் ஜரத்காரு. நவராத்திரி காலத்தில் இவள் கதை பகுதியைச் சொல்லி அர்ச்சிப்பதால் ராகு, கேது, தோஷம், கால சர்ப்ப தோஷம் நீங்ஙகும்.

56. கொலுவுக்கு வரும் இளம் பெண்களின் நடையுடை, பாவனை, பேச்சு, பாட்டு, நடந்து கொள்ளும் விதம், இவற்றை பெரியவர்கள் தீர்மானித்து தன் மகனுக்கோ, தன் உறவினர் மைந்தனுக்கோ இவள் ஏற்றவள் என்று தீர்மானிக்கும் வழக்கம் சில ஊர்களில் உள்ளது.

57. விஜயதசமியன்று பால் நிவேதித்து பொம்மை ஒன்றை படுக்க விடுவார்கள். அப்போதுதான் மறுநாள் பொம்மைகளை உள்ளே எடுத்து வைக்க முடியும் என்பது ஐதீகம்.

58. கொலு பொருட்களை பாதுகாக்க வேண்டியது முக்கியம் அவைகளில் மந்திர ஆவர்த்தி இருக்கும்.

59. கொலுவுக்குப் போனால் சும்மா உட்கார்ந்திராமல் பொம்மைகள் தொடர்பான புராணக் கதைகளை நினைத்து பார்க்க வேண்டும் என்பதற்காக, முன்பு எல்லாம் ராவணன் தர்பாரில் வாலினை மேடையாக்கி அனுமன் அமர்ந்ததிருப்பது, பழத்துக்காக முருகன் கோபித்தது, கஜேந்திர மோட்சம் போன்ற செட் பொம்மைகள் அமைப்பதுண்டு. தற்போது அது மறைந்து வருகிறது.

60. திபெத் நாட்டில் சரஸ்வதியை யங்சன்ம என்ற பெயரிலும் வழிபட்டு மகிழ்கிறார்கள். பாலித்தீவுப் பகுதியில் கலங்கன் என்று சரஸ்வதியைத் துதிக்கின்றனர்.

61. நவராத்திரி ஒன்பது நாட்களுக்கு முடி நீக்குதல் ஆகாது. மருந்துண்ணல் கூடாது. பொய் நீக்கிய வாழ்வும் அன்னை புகழ் பேசும் நாவும் கொண்டு விளங்க வேண்டும்.

62. நவராத்திரி 9 நாள் இரவில் பட்டினி பின் சிற்றுணவு கொள்வதுண்டு. இந்த ஒன்பது நாட்களிலும் பாகனமும், தேனும் நிவேதிப்பது மிகவும் அவசியம்.

63. நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் பகலிலும் இரவிலும் செய்யும் பூஜைகள் அனைத்தும் தேவிக்கே உரியவையாகும்.

64.தேவியை நவராத்திரி சமயத்தில் ஒன்பது மடங்கு அதிகமாகப் பூஜிக்க வேண்டும் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.

65.எல்லாவற்றிற்கும் மேலானது சண்டிஹோமம். சண்டி என்பவன் மூன்று சக்திகளும் ஒன்றிய வடிவம். முப்பெரும் தேவியரையும் ஒன்றாக இணைத்து வழிபடுவதே இந்த ஹோமத்தின் சிறப்பு. விஜயதசமி நாளில் இதைச் செய்வதால் மிக நல்ல பலன்கள் பெறலாம்.

66.நவராத்திரி நாட்களில் ஒரு வேளை மட்டுமே உணவு அல்லது உப்பில்லாத உணவில் விரதம் இருக்கலாம். மவுன விரதம் இருப்பது மிகச் சிறப்பு.

67.கோவில்களில் மட்டுமின்றி வீடுகளிலும் 9 நாட்கள் தொடர்ச்சியாக கொண்டாடப்படும். ஒரே பண்டிகையாக நவராத்திரி விளங்கி வருகிறது.

68.சுகமாகவும் சுலபமாகவும் வழிபடத்தக்கவள் அம்பிகை. ஆதலால் லலிதா சகஸ்ர நாமம் அவளை சுகாராத்யா என்று போற்றுகிறது.

69.காவிரிக்கரை மாவட்டங்களில் கொலுவைச் சிவை ஜோடிப்பு என்றே குறிப்பிடுகிறார்கள். சிவை என்ற பராசக்தி பல விதங்களில் அலங்கரிக்கப்படுகிறாள் என்பது அதன் பொருளாகும்.

70.சரஸ்வதி பூஜையன்று தொண்டை நாட்டுக் கோவில்களில் கம்பா நதி சிவ பூஜைக் காட்சி என்ற அலங்காரம் செய்கிறார்கள். காஞ்சிபுரத்தில் மாமரத்தடியில் மண்ணால் சிவலிங்கம் பிடித்து வைத்து காமாட்சி பூஜை செய்கிறாள். அப்போது இறைவன் அந்தப் பகுதியில் வெள்ளைப்பெருக்கை ஏற் படுத்துகிறாள். காமாட்சி திடுக்கிட்டு, வெள்ளத்தில் சிவலிங்கம் சிதைந்து விடக் கூடாது எனக்கருதி அதைத் தட்டித் தழுவிக் காப்பாற்றுகிறாள். அதனால் மனம் மகிழ்ந்த சிவபெருமான் தனது உண்மை உருவத்தைக்காட்டி அன்னையை மணந்து கொள்கிறான். காமாட்சி கல்யாண வைபவத்தை நினைவு கொள்ளும் வகையில் இந்த அலங்காரம் செய்யப்படுகிறது.

71. மது கைடப சம்ஹாரத்தில் வரக்கூடியவள் துர்க்கையாகவும், அடுத்து மஹிஷனை மாய்த்தவள் மகாலட்சுமி ஆகவும், மூன்றாவது கதையில் வரும் சும்பநிசும்பனை சம்ஹாரம் செய்தவள் மகாசரஸ்வதியாவும் தேவி பாகவதத்தில் சொல்லப்பட்டுள்ளது.

72. அரக்கர்களை கடும் போரிட்டு வதம் செய்த கதைகளின் தொகுப்பே தேவி மகாத்மியம் ஆகும். தேவி மகாத்மிய பாராயணத்தை ஏழு தேவி மகாத்மிய பாராயணத்தை ஏழு பகுதிகளாகப் பிரித்தோ அல்லது முழுவதுமாகவோ நவராத்திரி நாட்களில் படிப்பவர்கள் தங்கள் குலத்தின் பாவ மூட்டைகளை எரிக்கிறார்கள். எவன் ஒருவன் இந்தத் தேவி மகாத்மியம் படிக்கப்படும் இடத்தில் அமர்ந்து கேட்கிறானோ அவன் பாவங்களில் இருந்து விடுபடுகிறான். பணக்கவலையும், மனக்கவலையும் தீர தேவிமகாத்மிய பாராயணமே சிறந்த வழி.

73. பிரம்மா, விஷ்ணு, சிவபெருமானின் சக்தி ஒன்றாக இணைந்து அக்னி பிழம்பாக அதிலிருந்து தேவி வெளிவந்து, பிரம்மா, விஷ்ணு, சிவன், இந்திரன், எமதர்மராஜா முதல் அனைத்து தேவர்களும் தெய்வங்களும் தங்கள் ஆயுதங்களையும் அவருக்கு அளித்து சக்தி அனைத்தையும் துறந்த பொம்மைகளாக மாறி நின்றனர். அதனால் நவராத்திரி நாட்களில் அம்பாளைத் தவிர மற்ற தெய்வங்களை பொம்மைகளாக கொலு என்று வைப்பதாக ஐதீகம்.

74. ஸ்ரீராமர், விஷ்ணு, விசுவாமித்திரர், காளிதாசர், அபிராமி பட்டர், பிரம்மா, வனவாசத்தில் பாண்டவர்கள் ஆகியோர் நவராத்திரி பூஜைகள் செய்து அம்பிகையின் அருளுக்குப் பாத்திரமானார்கள் என்று புராணங்கள் சொல்கின்றன.

75. வசதி, வாய்ப்பு உள்ளவர்கள் நவராத்திரி பூஜையை தினமும் முறைப்படி சங்கல்பம், கணபதி பூஜை, ப்ரதான பூஜை, கண்டா பூஜை ப்ராணப் பிரதிஷ்டை, அங்கபூஜை, அஷ்டோத்திர நமாவளி, நவதூர்கா பூஜை, ஜோதி பூஜை என்று விஸ்தாரமாகச் செய்யலாம்.

கருத்துகள் இல்லை: