செவ்வாய், 1 டிசம்பர், 2020

அருள் மிகு நிலாதுண்டப்பெருமாள் திருக் கோவில்

அருள் மிகு நிலாதுண்டப்பெருமாள் திருக் கோவில்
 



மூலவர் :நிலாத்துண்டப்பெருமாள்
தாயார் :நேர் உருவில்லாவல்லி
தீர்த்தம் :சந்திர புஷ்கரணி
பழமை :2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் :நிலாத்திங்கள் துண்டத்தான்
ஊர் :நிலாதிங்கள்துண்டம்
மாவட்டம் :காஞ்சிபுரம்
மாநிலம் :தமிழ்நாடு

மங்களாசாசனம். திருமங்கையாழ்வார்

நீரகத்தாய் நெடுவரையின் உச்சி மேலாய் நிலாத்திங்கள் துண்டத்தாய் நிறைந்த கச்சி ஊரகத்தாய் ஒண்துறை நீர் வெஃகாகவுள்ளாய் உள்ளுவார் உள்ளத்தாய் உலகமேத்தும் காரகத்தாய் கார்வானத் துள்ளாய் கள்வா காமரு பூங்காவிரியின் தென்பால் மன்னு பேரகத்தாய் பேராதென் நெஞ்சினுள்ளாய் பெருமானுன் திருவடியே பேணினேனே.-திருமங்கையாழ்வார்
திருவிழா:சந்திரனின் ஒளி பெற்றவர் என்பதால் இங்கு பவுர்ணமி தோறும் சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. மார்கழியில் வைகுண்ட ஏகாதசி, புரட்டாசி சனிக்கிழமைகள் விசேஷம்.   
       
தல சிறப்பு:சிவாலயத்துக்குள் இருக்கும் இந்த சன்னதி பெருமாளின் 108 திருப்பதிகளில் ஒன்று. இத்தலத்தில் மகாலட்சுமி பெருமாளின் நாபிக்கமலத்தில் (தொப்புளில் இருந்து கிளம்பும் தாமரை) இருந்தபடி அருளுகிறாள். நாபிக்கமலம் பிரம்மாவிற்கு உரிய இடம் என்பதால், இவ்விடத்தில் லட்சுமியை பிரம்மாவின் அம்சத்துடன் இருப்பதாக கருதலாம். இந்த அரிய காட்சிக்கு விதியை மாற்றும் தன்மையுண்டு என்பார்கள்.   
       
திறக்கும் நேரம்:காலை 6 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.  
     
முகவரி:அருள்மிகு நிலாத்துண்டப்பெருமாள் திருக்கோயில், நிலாத்திங்கள்துண்டம் காஞ்சிபுரம் 631 502. காஞ்சிபுரம் மாவட்டம்.போன்: +91- 44 - 272 22084,  
      
பொது தகவல்:தேவாரப்பாடல் பெற்ற சிவத்தலத்தில் பெருமாள் அருள்பாலிப்பது சிறப்பு   
       
பிரார்த்தனை:பெருமாளிடம் வேண்டிக்கொண்டால் தோல் வியாதிகள், வயிறு சம்பந்தமான நோய்கள், தோஷங்கள் நீங்கும், உடல் உஷ்ணம் குறையும் என்பது நம்பிக்கை. குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் இங்கு வேண்டிக் கொண்டால் புத்திரப்பேறு கிடைக்கும் என்பதும், தாய், பிள்ளை இடையே பாசப்பிணைப்பு அதிகமாகும் என்பதும் நம்பிக்கை.  
      
நேர்த்திக்கடன்:பெருமாளுக்கு சாம்பிராணி தைலக்காப்பு செய்து விசேஷ பூஜைகள் செய்து அன்னதானம் செய்யலாம்.  
      
தலபெருமை:மகாலட்சுமி சிறப்பு: மகாவிஷ்ணுவின் இதயத்தில் குடிகொண்டிருப்பவள் மகாலட்சுமி. இவள் விஷ்ணுவின் இடது மார்பில் காட்சி தருவாள். ஆனால், இத்தலத்தில் பெருமாளின் நாபிக்கமலத்தில் (தொப்புளில் இருந்து கிளம்பும் தாமரை) இருந்தபடி அருளுகிறாள். நாபிக்கமலம் பிரம்மாவிற்கு உரிய இடம் என்பதால், இவ்விடத்தில் லட்சுமியை பிரம்மாவின் அம்சத்துடன் இருப்பதாக கருதலாம். இந்த அரிய காட்சிக்கு விதியை மாற்றும் தன்மையுண்டு என்பார்கள். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் இங்கு வேண்டிக்கொண்டால் புத்திரப்பேறு கிடைக்கும் என்பதும், தாய், பிள்ளை இடையே பாசப்பிணைப்பு அதிகமாகும் என்பதும் நம்பிக்கை.

சகோதர தலம்: சிவனின் கண்களை மூடியதால் ஏற்பட்ட பாவத்திற்கு தன் தங்கை பார்வதிதேவி விமோசனம் பெற்ற இத்தலத்தில் அவளது அண்ணன் மகாவிஷ்ணுவும் நோய் நீங்கப்பெற்றுள்ளார். பார்வதிக்கு கங்கையையும், மகாவிஷ்ணுவிற்கு சந்திரனையும் பயன்படுத்தி சிவன் அருள் செய்த தலம். சகோதர சகோதரிகள் நிலாத்துண்ட பெருமாளையும், ஏகாம்பரேஸ்வரரையும் வணங்கினால் அவர்களிடையே ஒற்றுமை கூடும் என நம்புகிறார்கள்.
கோயிலின் முதல் பிரகாரத்தில் சிறிய சன்னதியில் புருஷசூக்த விமானத்தின் கீழ், பெருமாள் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இவருக்கென தனியே பிரகார தெய்வங்கள் இல்லை.நோய் நீங்குவதற்காக தனியே வந்தவர் என்பதால் தாயார் சன்னதியும் கிடையாது. ஆனாலும், மகாவிஷ்ணுவின் நாபியில் இருக்கும் மகாலட்சுமியையே "நேர் உருவில்லாத் தாயாராக' எண்ணி வழிபடுகின்றனர். உருவமில்லாமல் பெருமாளுடன் ஐக்கியமாகி இருப்பதால் இப்பெயர் வந்தது. சிவனை வணங்கி குணமாகியவர் என்பதால் இங்கு பெருமாளுக்கு சைவ ஆகம முறைப்படி பூஜைகள் செய்யப்படுகிறது. இவரை குளிர்ச்சிப்படுத்துவதற்காக சாம்பிராணி தைலத்தால் அபிஷேகம் செய்கின்றனர். பிறைச்சந்திரனின் ஒளிபட்டவர் என்பதால் இத்தலத்து பெருமாளை திருமங்கையாழ்வார், சந்திரனின் பெயரையும் சேர்த்து ""நிலாத்திங்கள் துண்டத்தாய்'' என்று பாடி மங்களாசாசனம் செய்துள்ளார். "சந்திர சூடப் பெருமாள்' என்ற பெயரும் இவருக்கு உண்டு.

தல வரலாறு:தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது மகாவிஷ்ணு, கூர்ம (ஆமை) வடிவம் எடுத்து மத்தாக பயன்பட்ட மேருமலையை தாங்கிக் கொண்டிருந்தார். அப்போது கயிறாக உதவிய வாசுகி பாம்பு ஆலகால விஷத்தை உமிழ்ந்தது. பாற்கடலில் கலந்த விஷம் ஆமையாக இருந்த விஷ்ணுவின் மீது பட்டது. இதனால், மகாவிஷ்ணுவின் நீலமேனி கருப்பானது. தேவர்கள் பல சிகிச்சைகளை செய்தும் பயனில்லாமல் போனது. கலங்கிய மகாவிஷ்ணு தனது உடல் பழைய நிறம் பெற வழி கூறும்படி பிரம்மாவிடம் வேண்டினார். சிவனிடம் வேண்டினால் உஷ்ணம் குறைந்து நிறம் மாறும் என ஆலோசனை கூறினார் பிரம்மா.அதன்படி மகாவிஷ்ணு, சிவனை எண்ணி தவமிருந்தார். விஷ்ணுவுக்கு காட்சி தந்த சிவன், தனது தலையில் இருந்த பிறைச்சந்திரனை மகாவிஷ்ணு மீது ஒளி பரப்பும்படி பணித்தார். சந்திரனும் தன் கதிர்களைப் பரப்ப நீலவண்ணத்தை மீண்டும் பெற்றார். முன்பை விட பொலிவாகவும் விளங்கினார். இந்த நிகழ்வின் அடிப்படையில் காஞ்சிபுரத்தில் ஏகாம்பரேஸ்வரர் கோயில் அமைக்கப்பட்டது, இங்கே வடகிழக்கு பாகத்தில் (ஈசானிய மூலை) பெருமாள் சன்னதி அமைக்கப்பட்டது. சிவாலயத்துக்குள் இருக்கும் இந்த சன்னதி பெருமாளின் 108 திருப்பதிகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டது. பெருமாளின் நிறம் மாற தானும் ஒரு காரணமானதால் வருத்தம் கொண்ட வாசுகி பாம்பு, அவருக்கு குடையாக நின்று பரிகாரம் தேடிக்கொண்டது. சந்திரனின் ஒளியால் இயல்பு நிறம் பெற்றதால் இத்தலத்து பெருமாளை "நிலாத்திங்கள் துண்ட பெருமாள்' என்று அழைக்கின்றனர்.   
       
சிறப்பம்சம்: அதிசயத்தின் அடிப்படையில்: இத்தலத்தில் மகாலட்சுமி பெருமாளின் நாபிக்கமலத்தில் (தொப்புளில் இருந்து கிளம்பும் தாமரை) இருந்தபடி அருளுகிறாள். நாபிக்கமலம் பிரம்மாவிற்கு உரிய இடம் என்பதால், இவ்விடத்தில் லட்சுமியை பிரம்மாவின் அம்சத்துடன் இருப்பதாக கருதலாம். இந்த அரிய காட்சிக்கு விதியை மாற்றும் தன்மையுண்டு என்பார்கள்.

கருத்துகள் இல்லை: