திங்கள், 23 நவம்பர், 2020

பன்றிக்குட்டிகளை மந்திரியாக்கிய படலம்!

பன்றிக்குட்டிகளை மந்திரியாக்கிய படலம்!

சோமசுந்தரக் கடவுளின் அருளால் சாபம் நீங்கப் பெற்ற சகலனின் பிள்ளைகள் சிவபூஜை செய்து வந்தனர். இவர்கள் சகல கலைகளிலும் வல்லவர்கள் ஆனார்கள். ஒரு சமயம் அன்னை மீனாட்சி, சுந்தரேஸ்வரரிடம் பேசிக் கொண்டிருந்த போது, சுவாமி! தாங்கள் அறிவற்ற பன்றிகளுக்கு கூட உணவுடன் ஞானத்தையும் ஊட்டிய காரணம் என்ன என்பதைத் தெரிந்து கொள்ளலாமா? என்றாள். தேவி! அறிவுள்ளவன், அறிவற்றவன் என்ற பேதம் மனிதர்களுக்கு மட்டுமே, எனக்கில்லை. எல்லாரும் எனக்கு ஒன்று தான். அதனால் தான் பசியால் கதறியது பன்றிகள் என்றாலும் கூட திருவருள் புரிந்தேன். அதனால் அப்பன்றிக் குட்டிகள் அளவில்லாத வலிமையையும், வெற்றியையும் கல்வி முதிர்வையும், ஞானத்தையும் பெற்றுக் கொண்டன. இனிமேல் அவர்கள் தங்கள் அறிவால் பாண்டியனின் அமைச்சர்களாவதுடன் சிவகணங் களாகும் பேறையும் பெறுவார்கள், என்றார் சுந்தரேஸ்வரர். அன்றிரவில், ராஜராஜப் பாண்டியனின் கனவில் தோன்றிய அவர், பாண்டியனே! பன்றிமலையில் வசிக்கும் பன்னிரு அறிவுஜீவிகளை உன் அமைச்சரவையில் சேர்த்துக் கொள், என்றார். மறுநாளே, சுவாமியின் விருப்பப்படி பன்றிமலையில் இருந்து அவர்களை வரவழைத்தான் மன்னன். அவர்களுக்கு அமைச்சர் பதவி அளித்ததுடன், முந்தைய அமைச்சர்களின் புத்திரிகளையும் திருமணம் செய்து வைத்தான். பன்றிமுக வீரர்கள் பன்னிருவரும், பாண்டியனுக்குக் கவசமும் கண்ணும் போல் விளங்கினர். பன்னிரண்டு உடலுக்கும் ஓர் உயிரே என அனைவரும் கூறும்படி ஒற்றுமையாக இருந்தனர். பன்னிருவரும் ஈகையும், அறமும், புகழுமள் பாண்டியனுக்குப் பெருகுமாறு எட்டுத் திக்கிலும் வெற்றியுண்டாகச் செய்து வாழ்ந்திருந்தனர். அவர்கள் பலகாலம் பாண்டியனுக்கு உதவியாகச் செயல்பட்டு சிவபதவி பெற்றனர். இந்நிலையில் ராஜராஜனும் இறைவனடி சேர்ந்தான்.


கருத்துகள் இல்லை: