திங்கள், 12 ஜூன், 2017

மலைமேல் இருக்கும் திருக்கச்சூர் கோவிலின் இணைக்கோவிலான மலைக்கோவில் நோக்கி பயணம் சென்றோம். இது ஆலக்கோவிலில் இருந்து சுமார் 1 கி.மி . தூரத்தில் இருக்கு. இக்கோவிலில் குடிகொண்டிருக்கும் இறைவன் மருந்தீஸ்வரர் என்றும் இறைவி இருள் நீக்கிய அம்மை ன்னும் சொல்கிறார்கள். மலையடிவாரத்தில் இருக்கும் மருந்தீசர் கோவிலை பார்க்கலாம். கோவிலுக்கு போகும் வழியெங்கும் பச்சை பசேல்ன்னு சீனரிலாம் செமயா இருக்கு. கோவிலின் முன்பு நான்கு கால் மண்டபத்துடன் அழகாக காட்சி தருது இராஜகோபுரம் இல்லாத கோவிலின் நுழைவாயில். கோவிலின் முகப்பில் அதன் அமைவிடம், தொடர்புகொள்ளும் நம்பர், நடை திறக்கும் நேரம் முதலியவை அடங்கிய குறிப்பு பலகை இருக்கு. அதை தாண்டி ”மண்ணே மருந்தான” மருந்தீசரை தரிசிக்க நுழைவாயிலை கடந்து கோவிலின் உள்புறம் நுழையும்போதே நுணுக்கமான வேலைப்பாடுடன் கூடிய அழகான ஒரு கோவிலுக்குள் நாமிருப்பதை உணரலாம். இந்த கோவில் 108 சக்தி பீடங்களில் ஒன்றான ”ஒவ்ஷதை” என்கிற சக்தி பீடமாகும். தெற்கு நோக்கிய வாயிலை கடந்து உள்ளே போனதும் அழகிய சிற்பங்கள் கொண்ட தூண்கள் நிறைந்த மண்டபம் இருக்கு. இத்தூண்களில் துவார பாலகர்கள் உருவங்களும் இலிங்கோர்பவர் மாவடி சேவை பட்டினத்தார், வள்ளலார், விநாயகர், தண்டபாணி, அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோரின் சிற்பங்கள் அழகுற காணப்படுகின்றன. மண்டபத்தின் நடுவில் அழகாக செதுக்கப்பட்ட தாமரை போன்ற அமைப்பில் வட்டவடிவில் சிறிய சக்கரம் காணபடுகிறது. சுற்றிலும் இயற்கை சூழல். மிகவும் ரம்மியான அமைதியான இடம். உள்பிரகாரத்தில் நுழைந்தவுடன் விநாயகர் சன்னதி காணபடுகிறது. சுவாமி மேற்கு நோக்கி திருவண்ணாமலையாரை சேவித்தபடியான அமைப்பில் வீற்றிருக்கிறார். இங்கே வழிபட்டால் திருவண்ணமலையில் வழிபட்ட புண்ணியம் கிடைக்குமாம். விநாயகரை வழிபட்டு வரும் போது சுவாமி சன்னதிக்கு எதிரில் சாரளம் உள்ளது. இதன் எதிரே வெளியே கொடிமரம், நந்தி, பலிபீடங்கள் எல்லாம் காணபடுகின்றன. இங்கே வந்து சுவாமியிடம் வேண்டிகொண்டால் தீராத நோய்கள், துன்பங்கள் நீங்கும். அம்பாளிடம் வேண்டிகொண்டால் ஆணவம், கிரக தோஷம், கண் நோய்கள் தீரும், குறைவில்லாத வாழ்வும் கிடைக்கும் என்பது ஐதீகம். எதிரே நாகலிங்க மரமும் அதன் கீழே நாகர் சிற்பங்களும் காணபடுகின்றன. இந்திரன் தன்னோட தீராத வியாதிக்காக நாரதரின் அறிவுரைப்படி மருந்தீஸ்வரர் மலையில் இருக்கும் பலை அதிபலை என்ற மூளிகை வேண்டி சிவனை நோக்கி கடும் தவம் இருந்தானாம். பலன் இல்லையாம். அதனால் நாரதரிடம் உபாயம் கேட்க அன்னையை மறந்து தவம் இயற்றியதால் அன்னை இந்திரனுக்கு தெரியாமல் மூலிகையை மறைத்து திருவிளையாடல் புரிகிறார் என்றாராம். தன் தவறை உணர்ந்த இந்திரன் அஸ்வினி தேவர்கள் ஆகியோர் சிவ சக்தியை தியானித்தார்களாம். பிறகு அன்னை மனம் குளிர்ந்து மூலிகையை அருளினாராம். இந்திரனுக்கு மருந்து கொடுத்ததால் சிவன் இங்கே ”மருந்தீஸ்வரர்” என்றும் மறைத்து வைத்த மூலிகைகளின் மீது ஒளி பரப்பி இருள் நீக்க செய்து அவற்றை வழங்கியதால் ”இருள் நீக்கி அம்மையார்” என்றும் அழைக்க படுகிறாரார்களாம்!!. இந்திரன் கடும் தவமியற்றிய இடத்து மண்ணே மருந்தாக மாறி பூலோக வாசிகளுக்கு பயன் பெறனும்ன்னு சிவபெருமான் வரம் அருளினாராம். இந்த மருந்தான மண்ணை விவசாய நிலங்களில் தூவினால் பயிர்கள் செழித்து வளருமாம். வெளியே சுப்ரமணியர் அவ்வளவா பராமரிப்பில்லாத கோலத்தில் காட்சி தருகிறார். அகத்தியர் காண்டம் காக புஜண்டர் காண்டத்திலும் மருந்தீஸ்வரர் பற்றி விரிவாக எழுதியுள்ளனர். மேலும் அகத்தியரும், அழுகண்ணி சித்தரும் தவம் செய்த மரத்தடிகள் இம்மலையில் காணப்படுகிறது. அதன் அடியில் பௌர்ணமி நாளில் உட்கார்ந்து மனதை ஒரு முகப்படுத்தி தவம் செய்தால் நமது பிரார்த்தனைகள் கோரிக்கைகள் எல்லாம் நிறைவேறும். மாசி மகத்தில் இக்கோவிலில் திருவிழா நடைப்பெறுகிறது. சுப்பிரமணியரின் அருகில் இருந்து பார்க்கும் போது கோவிலின் அழகு ரம்யமாக காட்சி அளிக்கிறது. அவரை வழிபட்டு செல்லும் போது இக்கோவிலில் அழகாக இறங்கி செல்லும் அமைப்புடைய படிக்கட்டுகளுடன் கூடிய ”ஓஷததீர்த்த குளம்” காணபடுகிறது. அவை பராமரிப்பில்லாமல் காணபடுகின்றன. கிணற்றின் உள்பக்கம் அழகாக படிகளால் அமைக்கப்பட்டுள்ளது. பக்கத்தில் நவகிரக சன்னதியும் கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா மூர்த்தங்கள் உள்ளன. பிரம்ம தேவன் இங்கு தவம் செய்த இடம் என்பதால் இங்கு பிரம்ம தேவனுக்கு அபிஷேகம் ஆராதனைகள் உண்டு. சண்டிகேஸ்வரர் இங்கே பிரம்மமுக சண்டிகேஸ்வரராக சேவை செய்கிறார். இவருக்கு ஒன்பது வாரம் தேன் அபிஷேகம் செய்து வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும். சகலவித இடையூறுகளும் இன்னல்களும் அகலும் என்பதும் ஐதீகம். அம்பாள் சன்னதி மேற்கு நோக்கி நின்ற நிலையில் அபய வரத்துடன் நான்கு திருகரங்களுடன் காட்சி தருகிறார். பைரவர் சன்னதியும் காணபடுகிறது. மேலும் விநாயகரின் நேர் பார்வையில் நவகிரகம் அமைந்து இருப்பது இகோவிலின் விஷேசம். இங்கு கிரிவலம் விஷேசம் எல்லா நாட்களிலும் எந்த நேரத்திலும் கிரிவலம் வரலாம். மருந்தீஸ்வரர் இருள் நீக்கி அம்மையாரை வணங்கினால் பிரம்மஹத்தி தோஷம் பித்ரு தோஷங்கள் முதலியவையும் நீங்கிவிடும். பௌர்ணமி நாட்களில் வெறும் தேகத்தில் மூலிகைகள் அடங்கிய காற்று படுவதால் உடலில் உள்ள நோய்கள் அகலும். மேலும் சஞ்சீவி மலையை அனுமன் கொண்டு செல்லும் போது வீழ்ந்த சிறிய துண்டு என்றும் சொல்லபடுகிறது. காலை 7:30 மணி முதல் நண்பகல் 11:00 மணிவரை ,மாலை 4:30 முதல் 7:30 மணிவரை கோவில் திறந்திருக்கும்.



















கருத்துகள் இல்லை: