வியாழன், 1 ஆகஸ்ட், 2019

2. பிராண சக்தியின் மகிமை

ஆகாசம், பிராணன் ஆகிய இரண்டும் முதலில் படைக்கப்பட்டன 1:4. அனைத்துப் பொருட்களாவும் ஆகியிருப்பது ஆகாசம். ஆகாசத்தைப் பொருட்களாக ஆக்கியதும், அவற்றை இயக்குவதும் பிராணன். புறத்தில் காணும் இயற்கையும், அதுபோலவே உடல், மன இயக்கங்களும் அனைத்தும் பிராண சக்தியின் மகிமையே, பிராண சக்தியின் மகிமை பல்வேறு விதமாக இங்கே கூறப்படுகிறது.

நாம் யாரைச் சார்ந்தவர்கள்?

1. அத ஹைனம் பார்க்கவோ வைதர்பி பப்ரச்ச
பகவன் கத்யேவ தேவா ப்ரஜாம் விதாரயந்தே? கதர ஏதத் ப்ரகாசயந்தே?
க புனரேஷாம் வரிஷ்ட்ட இதி

அத ஹ-அடுத்ததாக; வைதர்பி-விதர்ப்ப நாட்டைச் சேர்ந்த; பார்கவ-பார்க்கவன்; பப்ரச்ச-கேட்டார்; பகவன்-தெய்வ முனிவரே; ப்ரஜாம்-ஒருவனை; கதி ஏவ-எத்தனை; தேவா-தேவர்கள்; விதாரயந்தே-தாங்குகின்றனர். கதரே-அவர்களில் யார்; ஏதத்-இதனை; ப்ரகாசயந்தே-இயக்குகின்றனர்; புன-மேலும்; ஏஷாம்-இவர்களில்; க-யார்; வரிஷ்ட்ட-முக்கியமானவர்; இதி-என்று.

பொருள் : அடுத்ததாக விதர்ப்ப நாட்டைச் சேர்ந்த பார்க்கவன் பிப்பலாத முனிவரிடம் கேட்டார்:  தெய்வ முனிவரே! ஒருவனை எத்தனை தேவர்கள் தாங்குகின்றனர்? அவர்களில் யார்யார் இவற்றை இயக்குகின்றனர்? இவர்களில் யார் முக்கியமானவர்?

மேலோட்டமாகப் பார்க்கும்போது நாம் தனி மனிதர்கள் என்று தோன்றலாம். ஆனால் சற்றே சிந்தித்துப் பார்க்கும் போது, நமது வாழ்க்கை எத்தனையோ புற, அக சக்திகளுடன் பிணைந்துள்ளது தெரியவரும். கண், காது போன்ற புலன்களாலும் மனத்தாலும் நாம் அனுபவங்களைப் பெறுகிறோம். இந்தப் புலன்கள் மட்டுமே நமக்கு அனுபவங்களைத் தந்துவிட முடியுமா? முடியாது. நமது பங்குடன் இயற்கையின் பங்கும் சேர்ந்தால் தான் நாம் எந்த அனுபவத்தையும் பெற முடியும்.

உதாரணமாக, கண்களை எடுத்துக் கொள்வோம். நாம் உண்கின்ற உணவிலிருந்து பெறப்படுகின்ற பிராண சக்தியால் கண்கள் பார்ப்பதற்கான ஆற்றல் பெற்றிருக்க வேண்டும். அதேவேளையில் சூரிய சக்தியாலோ மின்சாரத்தாலோ அங்கே ஒளியும் இருக்க வேண்டும். இரண்டும் சேரும்போது மட்டுமே நம்மால் பார்க்க முடியும். இவ்வாறே ஒவ்வொரு புலனும். அக சக்தியும் இணையும்போது மட்டுமே நமது அனுபவம் முழுமை பெறுகிறது.

காண்கின்ற புற உலகை இயக்குகின்ற தூல சக்திகளாயினும் சரி, காணாத அக உலகை இயக்குகின்ற சூட்சம சக்திகளாயினும் சரி ஒவ்வொன்றையும் ஒவ்வொரு தெய்வமாகக் கண்டனர் உபநிஷத ரிஷிகள். இந்த தெய்வங்கள் அபிமானி தேவதை எனப்பட்டனர். ஒவ்வொரு தேவதையும் பிரபஞ்சத்தில் ஒன்றையும் மனிதனில் ஒன்றையும் இயக்குவதாகக் கொள்ளப்பட்டனர். உதாரணமாக சூரியனுக்கும் கண்ணுக்கும் அபிமானி தேவதை அர்யமான்(3:8 விளக்கவுரையும் காண்க)

இவ்வாறு எத்தனை தேவர்கள் அல்லது தேவதைகள் நமது வாழ்க்கைக்கு ஆதாரமாக இருக்கிறார்கள், யார் முக்கியமானவர் என்பது கேள்வி.

நமது வாழ்க்கைக்கு ஆதாரமானவர்கள் : கதை 2-4

பார்க்கவனின் கேள்விக்கான விடையை ஒரு கதைபோல் தருகிறார் பிப்பலாத முனிவர்.

2. தஸ்மை ஸ ஹோவாச ஆகாசோ ஹ வா ஏஷ தேவோ வாயுரக்னிராப ப்ருதிவீ வாங்மனச்சக்ஷú; ச்ரோத்ரம் ச
தே ப்ரகாச்யாபிவதந்தி வயமேதத் பாணமவஷ்ட்டப்ய விதாரயாம

தஸ்மை-அவரிடம்; ஸ-பிப்பலாதர்; உவாச ஹ-கூறினார்; ஏஷ-இந்த; தேவ-தேவர்; ஆகாச-ஆகாசம்; வாயு-காற்று; அக்னி-நெருப்பு; ஆப-தண்ணீர்; ப்ருதிவீ-பூமி; வாக்-பேச்சு; மன-மனம்; சக்ஷú-பார்வை; ச்ரோத்ரம்-கேட்கும் தன்மை; தே-அவை; ப்ரகாச்ய-இயக்கி; அபிவதந்தி-கூறின; வயம்-நாங்கள்; ஏதத்-இந்த; பாணம்-உடம்பை; அவஷ்ட்டப்ய-ஒருங்கிணைத்து; விதாரயாம-தாங்குகிறோம்.

பொருள் : பிப்பலாத முனிவர் பார்க்கவனிடம் கூறினார்: ஆகாசம், காற்று, நெருப்பு, தண்ணீர், பூமி, பேச்சு, மனம், பார்வை, கேட்கும் தன்மை ஆகியவையே அந்த தேவர்கள். அவர்களே மனிதனை இயக்குகிறார்கள். ஒருமுறை இந்த தேவ சக்திகள், நாங்கள்தான் இந்த உடம்பை ஒருங்கிணைத்துத் தாங்குகிறோம் என்று கூறின.

மனித வாழ்விற்கு ஆதாரமான 9 தேவ சக்திகளை இங்கே பிப்பலாத முனிவர் குறிப்பிடுகிறார். ஆகாசம் அல்லது வெளி முதல் பூமி வரையுள்ள முதல் ஐந்து சக்திகளும் தூலமானவை. இவற்றால் நம் உடம்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. பேச்சு, மனம் போன்ற நான்கும் நுண் சக்திகள். இந்த 9 சக்திகளும் நமது வாழ்க்கையை இயக்குகின்றன என்கிறார் முனிவர்.

இந்த 9 சக்திகளும் நமது வாழ்க்கைக்கு ஆதாரமாக உள்ளன என்பதை விளக்குவதற்கு இரண்டு வார்த்தைகளை இந்த மந்திரத்தில் காண்கிறோம். ஒன்று, ஒருங்கிணைத்தல்(அவஷ்ட்டப்ய); மற்றது இயக்குதல் (விதாரயாம) நூலில் கோர்க்கப்பட்ட முத்துக்கள், நூல் இல்லாவிட்டால் எப்படி சிதறிப்போகுமோ அப்படி இந்தச் சக்திகள் இல்லாவிட்டால் நமது உடம்பும் சிதறிப்போகும். உண்மையில் இந்தச் சக்திகள்தான் நமது உடம்பை ஒருங்கிணைத்து வைத்திருக்கின்றன. இது இந்த தேவ சக்திகளின் முதற்பணி. இரண்டாவதாக, நமது உடம்பை இயக்குவதும் இந்த தேவ சக்திகளே.

பார்க்கவனின் கேள்விக்கான விடையின் முதற்படி இது. தாம் கூறியதை விளக்குவதற்காக இந்தக் கருத்தை ஒரு கதையாகத் தொடர்கிறார் பிப்பலாத முனிவர்.

3. தான் வரிஷ்ட்ட ப்ராண உவாச
மா மோஹமாபத்யத அஹமேவைதத் பஞ்சதாத்மானம் ப்ரவிபஜ்யைதத் பாணம்
அவஷ்ட்டப்ய விதாரயாமீதி தேச்ரத்ததானா பபூவு

தான்-அவற்றில்; வரிஷ்ட்ட-முக்கியமான; ப்ராண-பிராணன்; உவாச-கூறியது; மோஹம்-குழப்பத்தில்; மா ஆபத்யத-ஆழ்ந்து போகாதீர்கள்; அஹம் ஏவ-நானே; ஆத்மானம்-என்னை; பஞ்சதா-ஐந்தாக; ப்ரவிபஜ்ய-பகுத்துக் கொண்டு; ஏதத்-இந்த; பாணம்-உடம்பை; அவஷ்ட்டப்ய-ஒருங்கிணைத்து; விதாரயாமி-தாங்குகிறேன்; இதி-என்று; தே-அவை; அச்ரத்ததானா;பபூவு-நம்பவில்லை.

பொருள் : தேவ சக்திகள் கூறியதை கேட்ட முக்கியப் பிராணன் அவற்றிடம், குழம்பாதீர்கள். என்னை ஐந்தாகப் பிரித்துக்கொண்டு, இந்த உடம்பை ஒருங்கிணைத்து இயக்குவது நானே, என்று கூறியது. ஆனால் பிராணனின் பேச்சை அந்த தேவ சக்திகள் நம்பவில்லை.

மின்சாரத்தால் விளக்குகள் எரிவதைக் காண்கிறோம்; விசிறிகள் சுழல்வதைக் காண்கிறோம்; இன்னும் பல இயக்கங்களைக் காண்கிறோம். ஆனால் மின்சாரத்தை நாம் காண்பதில்லை. அதுபோல் இந்தப் பிரபஞ்சத்தில் எத்தனையோ இயக்கங்களைக் காண்கிறோம். பஞ்ச பூதங்களின் சேர்க்கையால் உயிரினங்கள் தோன்றுகின்றன, மறைகின்றன, தீ எரிகிறது, தண்ணீர் ஓடுகிறது, சூரியன் உதிக்கிறது. இவ்வாறு எத்தனையோ செயல்களைக் காண்கிறோம். இதற்குக் காரணமான சக்தியை நாம் காண்பதில்லை. அதுவே பிராண சக்தி. இந்தப் பிராண சக்தியே நம்முள் நமது உடம்பையும் மனத்தையும் இயக்குகின்ற பிராணனாகச் செயல்படுகிறது. பிராணனின் செயல்பாட்டைக் கருத்தில் கொண்டு ஐந்து விதமாகப் பிரிக்கப்படுகிறது.(இது 3:4-10-இல் விரிவாக விளக்கப்படுகிறது).

உடம்பு, மனம் ஆகியவற்றின் இயக்கங்களுக்குக் காரணமாக இருப்பது, இன்னும் சொல்லப் போனால், இயக்கங்கள் அனைத்திற்கும் வேண்டிய ஆற்றலை அளிப்பது பிராணன். எனவேதான், தானே அனைத்தையும் இயக்குவதாக இங்கே பிராணன் கூறுகிறது.

4. ஸோபிமானாதூர்த்வமுத்க்ரமத இவ தஸ்மினுத்க்ராமதி அதேதரே
ஸர்வ ஏவோத்க்ராமந்தே தஸ்மின்ச்ச ப்ரதிஷ்ட்டமானே ஸர்வ ஏவ ப்ராதிஷ்ட்டந்தே
தத்யதா மக்ஷிகா மதுகர ராஜானமுத்க்ராமந்தம் ஸர்வ ஏவோத்க்ராமந்தே தஸ்மின்ச்ச ப்ரதிஷ்ட்டமானே
ஸர்வா ப்ராதிஷ்ட்டந்த ஏவம் வாங்மனச் சக்ஷúச்ரோத்ரம் ச தே ப்ரீதா ப்ராணம் ஸ்துன்வந்தி

ஸ-அது; அபிமானாத்-பெருமையுடன்; ஊர்த்வம்-மேலே; உத்க்ரமதே இவ-வெளியேறுவதுபோல்; தஸ்மின்-அது; உத்க்ரமதி அத-வெளியேறிய உடனே; இதரே-மற்ற; ஸர்வே ஏவ-அனைத்தும்; உத்க்ராமந்தே-வெளியேறின; தஸ்மின் ச-அது; ப்ரதிஷ்ட்டமானே-நிலைபெற்றதும்; ஸர்வே ஏவ-அனைத்தும்; ப்ராதிஷ்ட்டந்தே-நிலைபெற்றன; தத் யதா-எப்படி; மதுகர ராஜானம்-அரச தேனீ; உத்க்ரமாந்தம்-வெளியேறியதும்; ஸர்வே ஏவ-வெளியேறுகின்றனவோ; தஸ்மின் ச-அது; ப்ரதிஷ்ட்டமானே-அமர்ந்ததும்; ஸர்வே ஏவ-அனைத்தும்; ப்ராதிஷ்ட்டந்தே-அமர்கின்றனவோ; ஏவம்-அதுபோல்; வாக்-பேச்சு; மன-மனம்; சக்ஷú-கண்; ச்ரோத்ரம் ச-காது; தே-அவை; ப்ரீதா-மகிழ்ச்சியுடன்; ப்ராணம்-பிராணனை; ஸ்துன்வந்தி-துதித்தன.

பொருள் : பிராணன் தன் பெருமையை விளக்குவதற்காக வெளியேறுவதுபோல் காட்டியது. அது வெளியேறியதும் மற்ற புலன்கள் அனைத்தும் செயலிழந்து விட்டன. அது நிலைபெற்றதும் அனைத்தும் செயல் படத் தொடங்கின. அரச தேனீ வெளியேறினால் மற்ற தேனீக்கள் அனைத்தும் எப்படி அதைத் தொடர்ந்து வெளியேறுகின்றனவோ, அது அமர்ந்தால் எப்படி அனைத்தும் அமர்கின்றனவோ அப்படி இது நிகழ்ந்தது. உடனே பேச்சு, மனம், கண், காது போன்ற மற்ற புலன்கள் மகிழ்ச்சியுடன் பிராணனைத் துதித்தன.

பல வடிவங்களில், பல நிறங்களில் பல்புகள் எரிகின்றன; மின்விசிறிகள் சுழல்கின்றன; குளிர்பதனப் பெட்டி குளிரச் செய்கிறது; மின் அடுப்பு வெப்பத்தைத் தருகிறது. ஆனால் இவை அனைத்தும் மின்சாரம் இருக்கும் வரைதான். மின்சாரம் விடைபெற்றால் இவை அனைத்தின் இயக்கங்களும் நின்றுவிடும். அதுபோலவே பிராண சக்தி இருக்கும் வரை மட்டுமே கண்களும், காதுகளும் மற்ற புலன்களும் அனைத்தும் வேலை செய்யும். பிராணன் விடைபெற்றால் அனைத்தின் இயக்கமும் நின்றுவிடும். மரணவேளையில் நிகழ்வது இதுவே. பிராணன் வெளியேறிய பின் உடம்பு கட்டைபோல் ஆகிவிடுகிறது. எனவே நான், நீ என்று போட்டியிட்ட புலன்கள், பிராணன் வெளியேறினால் தங்களால் எந்தப் பயனும் இல்லை என்பதைப் புரிந்துகொண்டன; அதன் மகிமையைத் துதிக்கலாயின.

பிராணனின் மகிமை : 5-13

புலன்கள் பிராணனைத் துதிப்பது போல், தொடரும் 9 மந்திரங்கள் பிராணனின் மகிமையைக் கூறுகின்றன.

5. ஏ÷ஷாக்னிஸ்தபத்யேஷ ஸூர்ய ஏஷ பர்ஜன்யோ மகவானேஷ வாயு
ஏஷ ப்ருதிவீ ரயிர்தேவ ஸதசச்சாம்ருதம் ச யத்

ஏஷ-இது; அக்னி-நெருப்பு; தபதி-எரிகிறது; ஸூர்ய-சூரியன்; பர்ஜன்ய-மேகம்; மகவான்-இந்திரன்; வாயு-காற்று; ப்ருதிவீ-பூமி; ரயி-ஜடப்பொருள்; தேவ:- தேவ சக்தி; ஸத்-தூலப் பொருட்கள்; அஸத்-நுண் பொருட்கள்; யத் ச-எது; அம்ருதம்-அமுதம்.

பொருள் : பிராணனே நெருப்பாக எரிகிறது. சூரியன், மேகம், இந்திரன், வாயு, காற்று, பூமி, ஜடப்பொருள் ஆகிய அனைத்துமாக விளங்குவது பிராணனே. அந்த தேவ சக்தியே தூலப் பொருட்களாகவும் நுண் பொருட்களாகவும் அமுதமாகவும் விளங்குகிறது.

சூரியன், மேகம் என்று இங்கே கூறப்பட்டுள்ள அனைத்தும் இயற்கை சக்திகளின் வடிவம். அந்த சக்திகள் இயக்குவதற்குக் காரணமான பிராணன் விளங்குகிறது. அதையே இந்த மந்திரம் விளக்குகிறது. அமுதம் என்றால் தேவர்கள் நிலைபெறக் காரணமானது (தேவானாம் ஸ்திதி காரணம்) என்று விளக்குகிறார் ஸ்ரீசங்கரர். தேவர்கள் என்பவர்கள் இயற்கை சக்திகள். அவை இயங்க வேண்டுமானால் பிராணன் வேண்டும். அதனால்தான் இங்கே பிராணன் அமுதம் என்று கூறப்பட்டுள்ளது.

6. அரா இவ ராநாபௌ ப்ராணே ஸர்வம் ப்ரதிஷ்ட்டிதம்
ரிசோ யஜூம்ஷி ஸாமானி யஜ்ஞ க்ஷத்ரம் ப்ரஹ்ம ச

ரத நாபௌ-தேர்ச்சக்கரத்தின் அச்சில்; அரா இவ-ஆரக்கால்கள் கூடுவதுபோல்; ப்ராணே-பிராணனில்; ஸர்வம்-அனைத்தும்; ப்ரதிஷ்ட்டிதம்-நிலைபெற்றுள்ளன; ரிச-ரிக் வேதம்; யஜூம்ஷி-யஜுர் வேதம்; ஸாமானி-சாம வேதம்; யஜ்ஞ-வேள்வி; க்ஷத்ரம்-வீரம்; ப்ரஹ்ம ச-அறிவு.

பொருள் : தேர்ச்சக்கரத்தின் அச்சில் ஆரக்கால்கள் கூடுவது போல் ரிக் வேதம், யஜுர் வேதம், சாம வேதம், வேள்வி, வீரம், அறிவு என்று அனைத்தும் பிராணனில் நிலைபெற்றுள்ளன.

வேதங்களைப் படிக்க வேண்டுமானாலும் புரிந்து கொள்ள வேண்டுமானாலும் பிராணன் வேண்டும். பிராண சக்தி இல்லாமல் வேதங்களை ஓத முடியாது,
வேள்வி என்பது இறைவனுடன் நாம் தொடர்பு கொள்வதற்கான ஒரு வழி, அதாவது இறைநெறி. இறைநெறியில் செல்ல வேண்டுமானால் அதற்கும் பிராணன் வேண்டும். வீரம் உடம்பின் ஆற்றல், அறிவு மனத்தின் ஆற்றல். உடம்பு, மனம் இரண்டையும் இயக்குவது பிராணன். எனவே வீரமும் அறிவும் பிராணனில் நிலைபெற்றுள்ளன.

7. ப்ரஜாபதிச்சரஸி கர்ப்பே த்வமேவ ப்ரதிஜாயஸே
துப்யம் ப்ராண ப்ரஜாஸ்த்விமா பலிம் ஹரந்தி ய ப்ராணை ப்ரதிதிஷ்ட்டஸி

கர்ப்பே-கருவில்; ப்ரஜாபதி-உயிராக; சரஸி-இயங்குவது; த்வம் ஏவ-நீயே; ப்ரதிஜாயஸே-பெற்றோரின் பிரதிபிம்பமாக பிறப்பது; ப்ராண-பிராணனே; இமா-இந்த; ப்ரஜா; து-உயிரினங்கள்; பலிம்-ஆஹுதிகளை; துப்யம்-உனக்கு; ஹரந்தி-கொண்டுவருகின்றன; ய-யார்; ப்ராணை-புலன்களுடன்; ப்ரதிதிஷ்ட்டஸி-நிலை பெற்றுள்ளாய்.

பொருள் : பிராணனே! கருவில் உயிராக இயங்குவது நீயே. பெற்றோரின் பிரதிபிம்பமாகப் பிள்ளை வடிவில் பிறப்பதும் நீயே. உயிரினங்கள்(புலன்களின் மூலம்) உனக்கு ஆஹுதிகளைக் கொண்டு வருகின்றன. புலன்களில் நிலைபெற்றுள்ளதும் நீயே.

பிராண சக்தியே அனைத்திற்கும் ஆதாரம் என்பது மீண்டும் இங்கே வலியுறுத்தப்படுகிறது. ஆணில் விந்துவாகவும் பெண்ணில் கருவாகவும் இருப்பது பிராணனே. பெற்றோருடைய சாயலில் பிள்ளையாகப் பிறப்பதும் பிராணனே. உடம்பில் உயிராக இருந்து உலகை அனுபவிப்பதும் பிராணனே. பிராணன் உலகை அனுபவிப்பதற்குப் புலன்கள் அனுபவங்களைக் கொண்டு வருகின்றன. அந்தப் புலன்களை இயக்குவதும் பிராணனே.

8. தேவானாமஸி வஹ்னிதம பித்ரூணாம் ப்ரதமா ஸ்வதா
ரிஷீணாம் சரிதம் ஸத்யமதர்வாங்கிரஸாமஸி

தேவானாம்-தேவர்களுக்கு; வஹ்னிதம-மிகச் சிறந்த தூதன்; அஸி-இருக்கிறாய்; பித்ரூணாம்-இறந்த முன்னோர்களுக்கு; ப்ரதமா-முதல்; ஸ்வதா-உணவாக; அதர்வாங்கிரஸாம் ரிஷீணாம்-அதர்வாங்கிரஸ முனிவர்களில்; ஸத்யம்-உண்மையான; சரிதம்-முயற்சியாக; அஸி-இருக்கிறாய்.

பொருள் : பிராணனே! தேவர்களுக்கு மிகச்சிறந்த தூதனாகவும், இறந்த முன்னோர்களுக்கு முதல் உணவாகவும், அதர்வாங்கிரஸ முனிவர்களில் உண்மையான முயற்சியாகவும் நீயே இருக்கிறாய்.

யாக அக்கினியில் சமர்ப்பிக்கப்படுகின்ற ஆஹுதிப் பொருட்களை உரிய தேவர்களிடம் சேர்ப்பிக்கின்ற புரோகிதனாக அக்கினி தேவன் கருதப்படுகிறான் (அக்னிம் ஈளே புரோஹிதம்-ரிக் வேதம்) அக்கினிக்கு ஆற்றலை அளிப்பது பிராணன் (5). எனவே  ஆஹுதிப் பொருட்களைக் கொண்டு செல்கின்ற தூதனாக பிராணன் இங்கே கூறப்படுகிறது.

இறந்த முன்னோர்களை உத்தேசித்துப் செய்யப்படுகின்ற நாந்தீமுகம் என்ற கிரியை இங்கே கூறப்படுகிறது. இந்தக் கிரியை தேவர்களுக்குச் செய்யப்படுகின்ற கிரியைகளுக்கும் முன்பாகச் செய்யப்படுகிறது. தேவர்களுக்கு ஆஹுதி அளிக்கும்போது ஸ்வாஹா என்ற மந்திரம் பயன்படுவது போல், இறந்த முன்னோர்களுக்கு ஸ்வதா என்ற மந்திரம் பயன்படுகிறது. ஸ்வதா மந்திரத்தை உச்சரித்துச் செய்யப்படுகின்ற முதல் கிரியையான நாந்தீமுகத்தில் சமர்ப்பிக்கப்படுகின்ற ஆஹுதிப் பொருட்களாக இப்பது பிராணன்; அவற்றை உரியவர்களிடம் கொண்டு சேர்ப்பதும் பிராணனே.

அங்கிரஸ பரம்பரையில் வந்தவர்கள் அதர்வாங்கிரஸ முனிவர்கள். இறைநெறியை நாடுபவர்களுக்கு ஓர் உதாரணமாக இவர்கள் இங்கே குறிப்பிடப்படுகிறார்கள். இறை நெறியை நாடுபவர்களிடம் ஆற்றலாகத் திகழ்வது பிராணனே.

9. இந்த்ரஸ்த்வம் ப்ராண தேஜஸா ருத்ரோஸி பரிரஃக்ஷிதா
த்வமந்தரி÷க்ஷ சரஸி ஸூர்யஸ்த்வம் ஜ்யோதிஷாம் பதி

ப்ராண-பிராணனே; த்வம்-நீ; இந்த்ர-இந்திரன்; தேஜஸா-வலிமையால்; ருத்ர; அஸி-ருத்திரனாக இருக்கிறாய்; பரிரக்ஷிதா-எல்லா திசைகளிலும் காப்பவன்; அந்தரி÷க்ஷ-ஆகாசத்தில்; ஸூர்ய-சூரியன்; சரஸி-சஞ்சரிக்கிறாய்; ஜ்யோதிஷாம்-ஒளிகளின்; பதி-தலைவன்.

பொருள் : பிராணனே! நீயே இந்திரன். வலிமையால் நீ ருத்திரனாக இருக்கிறாய். எல்லா திசைகளிலும் காப்பவனாக இருப்பவன் நீயே. ஆகாசத்தில் சூரியனாக நீ சஞ்சரிக்கிறாய். ஒளிகளின் தலைவனும் நீயே.

பிரபஞ்சத்தில் நிகழ்கின்ற முத்தொழில்களைப்பற்றி இங்கே கூறப்படுகிறது. படைத்தல், காத்தல், ஒடுக்குதல் ஆகியவையே அந்த மூன்று தொழில்கள். இந்த மந்திரத்தில் இந்திரன் என்று கூறப்பட்டது பிரம்ம தேவனைக் குறிக்கிறது. படைப்புத் தொழிலைச் செய்கின்ற பிரம்மாவாகவும், காக்கும் கடவுளான விஷ்ணுவாகவும், அனைத்தையும் ஒடுக்குகின்ற கடவுளான ருத்திரனாகவும் இருப்பது பிராணனே. அதாவது பிராண சக்தியாலேயே அவர்கள் இந்தத் தொழிலைச் செய்கின்றனர்.
உலகின் இயக்கத்திற்கான பிராண சக்தியை அளிப்பது சூரியன். அந்தச் சூரியன் முதலான ஒளிப் பொருட்கள் அனைத்திற்கும் தலைவனாக, அதாவது அவற்றிற்கு ஆற்றலை அளிப்பவனாக இருப்பது பிராணனே.

10. யதா த்வமபிவர்ஷஸ்யதேமா ப்ராண தே ப்ரஜா
ஆனந்தரூபாஸ்திஷ்ட்டந்தி காமாயான்னம் பவிஷ்யதீதி

ப்ராண-பிராணனே; யதா-எப்போது; த்வம்-நீ அபிவர்ஷஸி-மழையாகப் பொழிகிறாயோ; அத-பிறகு; இமா-இந்த; தே-உனது; ப்ரஜா-உயிரினங்கள்; ஆனந்தரூபா-மகிழ்ச்சியுடன்; திஷ்ட்டந்தி-இருக்கின்றன; காமாய-வேண்டிய அளவு; அன்னம்-உணவு; பவிஷ்யதி-கிடைக்கும்; இதி-என்று.

பொருள் : பிராணனே! நீ மழையாகப் பொழியும்போது, இனி வேண்டிய அளவு உணவு கிடைக்கும் என்று உயிரினங்கள் மகிழ்ச்சியுடன் இருக்கின்றன.

வாழ்க்கைக்கு ஆதாரம் உணவு. உணவுக்கு ஆதாரம் மழை. அந்த மழையாகப் பொழிந்து உயிரினங்களின் மனத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்துவது பிராணன்.

11. வ்ராத்யஸ்த்வம் ப்ராணைகர்ஷிரத்தா விச்வஸ்ய ஸத்பதி
வயமாத்யஸ்ய தாதார பிதா த்வம் மாதரிச்வன

ப்ராண-பிராணனே; த்வம்-நீ; வ்ராத்ய-தூய்மைப் படுத்தப்படாதவன்; ஏகர்ஷி-ஏகர்ஷி யாகமாக; அத்தா-உண்பவன்; விச்வஸ்ய-உலகின்; ஸத்பதி-அனைத்திற்கும் தலைவன்; வயம்-நாங்கள்; ஆத்யஸ்ய-உண்ணும் உனக்கு; தாதார-தருபவர்கள்; மாதரிச்வன-காற்றின்; பிதா-தந்தை; த்வம்-நீ.

பொருள் : பிராணனே! நீ தூய்மைப் படுத்தப்படாதவன். ஏகர்ஷி யாகமாக இருந்து, ஆஹுதிப் பொருட்களை உண்பவன் நீ. உலகிலுள்ள அனைத்திற்கும் தலைவன் நீ. ஆஹுதிப் பொருட்களை உண்ணும் உனக்கு அவற்றைத் தருபவர்கள் நாங்கள். காற்றின் தந்தையாக இருப்பதும் நீயே.

தாயின் வயிற்றிலிருந்து பிறந்த குழந்தை சில சடங்குகள் மூலமும் மந்திரங்களின் மூலமும் தூய்மைப்படுத்தபட வேண்டும் என்ற சாஸ்திரங்கள் கூறுகின்றன. பிராணன் இறைவனிலிருந்து முதலில் தோன்றிய ஒன்று (1:4). தனக்கு முன்பு தோன்றிய யாரும் இல்லாததால், அதனைச் சடங்குகள் மூலம் தூய்மைப்படுத்த யாரும் இல்லை. அதனால் பிராணன் தூய்மைப் படுத்தப்படவில்லை. பிராணன் இறைவனிலிருந்து தோன்றியது. எனவே அது இயல்பாகவே தூய்மையானது, அதனைச் சடங்குகள் மூலம் தூய்மைப் படுத்தத் தேவையில்லை என்பதுதான் இங்கே வஞ்சப் புகழ்ச்சியாக தூய்மைப் படுத்தப்படாதவன் என்று கூறப்பட்டுள்ளது.

ஏகர்ஷி யாகம் என்பது அதர்வண வேதத்தைப் பின்பற்றுபவர்கள் செய்கின்ற ஒன்றாகும். அது மிகவும் பிரபலமாக இருந்தது என்பதால் இங்கே அது குறப்பிடப்பட்டுள்ளது. படைப்புக் கிரமத்தில் காற்று ஆகாசத்திலிருந்து தோன்றியது. இங்கே பிராணன் ஆகாசத்துடன் ஒன்றுபடுத்தப் பட்டு, காற்றின் தந்தையாகக் கூறப்பட்டுள்ளது.

12. யா தே தனூர்வாசி ப்ரதிஷ்ட்டிதா யா ச்ரோத்ரே யா ச சக்ஷஷி
யா ச மனஸி ஸந்ததா சிவாம் தாம் குரு மோத்க்ரமீ

யா-எந்த; தே-உனது; தனூ-அம்சம்; வாசி-பேச்சில்; ச்ரோத்ரே-கேட்பதில்; சக்ஷஷி-பார்ப்பதில்; ப்ரதிஷ்ட்டிதா-உள்ளதோ; மனஸி-மனத்தில்; ஸந்ததா-வியாபித்துள்ளதோ; தாம்-அவற்றை; சிவாம்-அமைதியுடன்; குரு-இருக்கச் செய்; உத்க்ரமீ; மா-கிளம்பிவிடாதே.

பொருள் : பிராணனே! பேசுவதிலும் கேட்பதிலும் பார்ப்பதிலும் உனது எந்த அம்சங்கள் உள்ளனவோ, மனத்தில் உனது எந்த அம்சம் வியாபித்துள்ளதோ அவற்றை அமைதியுடன் இருக்கச் செய், கிளம்பி விடாதே.

நமது செயல்கள் அனைத்திற்கும்-அவை உடம்பின் செயல்பாடுகளாக இருந்தாலும் சரி, மனத்தின் செயல்பாடுகளாக இருந்தாலும் சரி-தேவையான ஆற்றலை அளிப்பது பிராணன். ஆனால் ஒவ்வொரு புலனுக்கும் அதற்குத் தேவையான அளவு பிராணனே செல்ல வேண்டும். உதாரணமாக, பார்ப்பதைவிட பேசுவதற்கு அதிகமான பிராண சக்தி வேண்டும். எனவே பேச்சிற்கு அதிகப் பிராணன் செல்ல வேண்டும். சில வேளைகளில் உங்கள் உடலில் பிராணன் ஒரு பகுதியில் அதிகமாகவோ குறைவாகவோ செல்கிறது. அப்போது சமநிலை குலைகிறது. சமநிலை குலையும்போது. நோய் என்று நாம் அழைக்கின்ற ஒன்று உண்டாகிறது. என்கிறார் சுவாமி விவேகானந்தர். அத்தகைய ஒரு நிலை வராமல் இருக்கட்டும் என்று இந்த மந்திரம் பிரார்த்திக்கிறது.

பிராணன் புலன்களுக்குச் செல்ல வேண்டும், அமைதியாகச் செல்ல வேண்டும். அதாவது ஒவ்வொரு புலனுக்கும் அதற்குத் தேவையான அளவு பிராணன் செல்ல வேண்டும். பிராணன் கிளம்பிவிட்டால், அதாவது செல்லாமல் இருந்துவிட்டால் புலன்கள் எதுவும் இயங்க முடியாது (4). அப்படியும் நிகழக் கூடாது என்று பிரார்த்திக்கிறது இந்த மந்திரம்.

13. ப்ராணஸ்யேதம் வசே ஸர்வம் த்ரிதிவே யத் ப்ரதிஷ்ட்டிதம்
மாதேவ புத்ரான் ரக்ஷஸ்வ ஸ்ரீச்ச ப்ரஜ்ஞாம் ச விதேஹி ந இதி.

த்ரிதிவே-மூன்று உலகங்களிலும்; யத்-எவை; ப்ரதிஷ்ட்டிதம்-உள்ளனவோ; இதம்-இந்த; ஸர்வம்-அனைத்தும்; ப்ரமணஸ்ய-பிராணனின்; வசே-கட்டுப்பாட்டில்; மாதா-தாய்; புத்ரான்-பிள்ளைகள்; இவ-போல்; ரக்ஷஸ்வ-காப்பாய்; ஸ்ரீ:ச-செல்வமும்; ப்ரஜ்ஞாம் ச-தெளிவான புத்தியும்; ந-எங்களுக்கு; விதேஹி-தருவாய்; இதி-என்று.

பொருள் : மூன்று உலகங்களிலும் எவையெல்லாம் உள்ளனவோ அவை அனைத்தும் பிராணனின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன. பிராணனே! ஒரு தாய் பிள்ளைகளைக் காப்பதுபோல் எங்களைக் காப்பாய். செல்வமும் தெளிவான புத்தியும் எங்களுக்குத் தருவாய்.

செல்வமும் இருந்தாலும் அதைக் காக்கவும், உரிய வழியில் செலவிடவும் தெளிந்த புத்தி வேண்டும். தெளிவான புத்தி இல்லாதவனின் செல்வம் அவனை அழிவுப்பாதையிலேயே செலுத்தும். எனவே செல்வத்தையும். கூடவே தெளிந்த புத்தியையும் பிரார்த்திக்கிறது இந்த மந்திரம்.இதி ப்ரச்னோபநிஷதி த்விதீய: ப்ரச்ன
விஷ்ணு புராணம் முதல் அம்சம் (பகுதி-1)
                       1. புராணம் கேட்ட வரலாறு

18 புராணங்களில் மூன்றாவதாக கருதப்படுவது விஷ்ணு புராணம். இது 23,000 ஸ்லோகங்கள் கொண்டது. ஒருநாள் அதிகாலையில் பராசர முனிவர், காலைக்கடன்களை முடித்துக் கொண்டு, பத்மாசனத்தில் வீற்றிருந்தார். அப்போது மைத்ரேய முனிவர் அங்கு வந்து அவரை வணங்கிக் கூறலானார். என் குருநாதரே! அடியேன் சகல வேதங்களையும் சகல தரும சாஸ்திரங்களையும் வேதாகமங்களையும் தங்களமிடமிருந்தல்லவா கற்றறிந்தேன்? சாஸ்திரங்கள் யாவற்றையும் கற்ற அறிஞர்கள் அனைவரும் என்னைத் தங்களுடைய அனுக்கிரகத்தினாலே சகல சாஸ்திரங்களிலேயேயும் நல்ல பயிற்சி பெற்றவன் என்று சொல்வார்கள். தருமங்கள் அனைத்தையும் அறிந்தவரே! உலகம் உண்டான விதத்தையும் இனி உண்டாகப்போகும் விதத்தையும் நான் அறிய விரும்புகிறேன். தாங்கள் அருள்புரிய வேண்டும்! மேலும், இந்த உலகம் எல்லாம் எந்த வஸ்துவின் சொரூபமாக இருக்கிறது? எங்கிருந்து எப்படி உண்டாயிற்று? எப்படி எங்கே லயப்பட்டது? இனி எங்கே லயமாகும்? நிலம், நீர், நெருப்பு, காற்று, விசும்பு எனும் ஐந்து பருப்பொருட்களில் (பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாசம் என்னும் பஞ்சபூதங்களின் நிலை என்ன? எதனால் அவை விளங்கும்? இவ்விஷயங்களையும் தேவதைகள் முதலானவருடைய உற்பத்தியையும், மலைகள், கடல்கள் இவற்றின் தோற்றத்தையும் பூமியிருக்கும் விதத்தையும் சூரியன், சந்திரன், கோள்கள் ஆகியவற்றின் நிலையையும் அளவுகளையும் தேவர்களின் வம்சங்களையும், மனுக்களையும், மனுவந்தாரங்களையும், மகாகல்பங்களையும், நான்கு யுகங்களால் விகற்பிக்கப்பட்டவையான கல்பங்களின் பிரிவுகளையும் அவற்றின் முடிவு நிலைகளையும், சகல யுகதர்மங்களையும் தங்களிடமிருந்து அறிந்து கொள்ள விரும்புகிறேன்.

ஓ முனிவரில் உயர்ந்தவரே! தேவர்கள், அரசர்கள், முனிவர்கள் முதலானவர்களின் வரலாறுகளையும் வியாச முனிவர் வகுத்தருளிய வேதசாகைப் பிரிவுகளையும் பிராமணன் முதலிய வருணங்களின் குலதர்மங்களையும், பிரமச்சரியம் முதலான நான்கு ஆச்சிரமங்களின் தருமங்களையும் தங்களிடமே நான் கேட்க விரும்புகிறேன். வசிஷ்ட முனிவரின் மகனான சக்தியின் குமாரரே! இவ்விஷயங்கள் யாவற்றையும் எனக்கு கூறியருள தாங்கள் திருவுள்ளங்கொள்ள வேண்டும். இவ்வாறு மைத்ரேய முனிவர் பராசர முனிவரை வேண்டினார். அதற்குப் பராசர முனிவர், அவரை நோக்கிக் கூறலானார். தருமங்களையெல்லாம் அறிந்துள்ள மைத்ரேயரே! உலகஉற்பத்தி முதலியவற்றை அறிந்துள்ள என் பாட்டனாரான ஸ்ரீவசிஷ்ட பகவான் எனக்கு அருளிச்செய்த முன் விருத்தாந்தத்தை நீர் எனக்கு மீண்டும் நினைப்பூட்டினீர். அதாவது, முன்பு ஒரு சமயம், விசுவாமித்ரரால் ஏவப்பட்ட அரகன் ஒருவன் என் தகப்பனாரைப் பழித்தான் என்ற சங்கதியை அறிந்தேன். உடனே மிகவும் கோபம் அடைந்து அந்த அரக்கர்களை அழியச் செய்யும்படியான யாகம் ஒன்றைச் செய்யத் துவங்கினேன். அந்த யாகத்தினால் பல்லாயிரம் அரக்கர்கள் அழிந்தார்கள். அதைக்கண்ட என் பாட்டனாரான வசிஷ்ட முனிவர், பிள்ளாய் உன் கோபத்தை விட்டுவிடு. அரக்கர்கள் மீது குற்றம் இல்லை. உன் தகப்பன் மாய்வதற்கு அப்படிப்பட்ட விதியிருந்தது. இத்தகைய கோபம் மூடருக்குத்தான் தோன்றுமே ஒழிய ஞானியருக்குக் கோபம் வராது குழந்தாய்! யாரால் யார் கொல்லப்படுகிறான்? ஒருவனால் மற்றொருவன் கொல்லப்படுவதில்லை. அவனவன் தான் செய்த பாவ புண்ணியங்களையே புசிக்கிறான். மனிதன் மிகவும் வருந்திச் சம்பாதித்த புகழையும் தவத்தையும் அவனுடைய கோபமானது அழித்து விடுகிறது. சொர்க்கம் மோட்சம் ஆகிய இரண்டையும் கொடுப்பதற்குக் காரணமாகிய கோபத்தை முனிவர்கள் அனைவருமே விட்டு விடுகிறார்கள்.

ஆகையால், பேரனே! நீ அந்தக் கோபத்திற்கு வசப்பட்டு விடாதே! எந்தவிதமான அபராதமும் செய்வதறியாத பேதையரான அரக்கர்களில் அநேகர் இதுவரை எரிந்துபோனது போதும்! இனி இந்த யாகத்தை நிறுத்திவிடு. பெரியோருக்குப் பொறுமையாக இருப்பதே சிறந்த ஆசாரமாகும்! என்றார் நானும் அவருடைய வாக்குக்கு மதிப்பளித்து, என் யாகத்தை நிறுத்தி விட்டேன் அதனால் வசிஷ்ட முனிவர் மகிழ்ச்சியடைந்தார். அப்போது பிரம்ம புத்திரரான புலஸ்திய முனிவர் அங்கு வந்தார். அவர் வந்ததும் என் பாட்டனார் அவருக்கு ஆசனமும், அர்க்கியமும் (இருக்கையும் திருவடி கழுவுதலும்) கொடுத்து உபசரித்தார். மைத்ரேயரே! புலசு முனிவருக்கு தமையனாரான அந்த புலஸ்திய முனிவர் என்னை நோக்கி, பராசரர்! உனக்கு பெருங்கோபமும் வைரமும் இருந்துங்கூட குருவாக்கிய பரிபாலனத்திற்காக, பொறுமையடைந்தாய். ஆகையால் இனிமேல் நீ சகல சாஸ்திரங்களையும் அறியக்கடவாய். கோபத்தால் நமது சந்ததியாரை அழியாமற்செய்த உன் பொறுமையின் பெருமையை பாராட்டி, உனக்கு நாங்கள் வேறொரு வரந்தருகிறோம். அதாவது நீ புராண சம்ஹிதையைச் செய்யும் சக்தியுடையவனாகக் கடவாய்! தேவதையின் உண்மை இயல்புகள் அதாவது இதுதான் மேலான தேவதை என்பதை நீ அறியக்கடவாயாக பிரவிருத்தி, நிவர்த்தி (முயற்சி, நீக்கம்) என்ற இருவகைக் கருமங்களிலேயும் உன் புத்தியானது எமது அனுக்கிரகத்தில் நிலைத்தும், சந்தேகமற்றும் விளங்குவதாக! என்று கூறினார். அவர் கூறுவதைக் கேட்டுக் கொண்டிருந்த வசிஷ்ட முனிவர். என்னைப் பார்த்து பராசரா! புலஸ்தியர் அருளியவை, உனக்குச் சித்தியாகட்டும்! என்றார்.

இவ்விதமாக மகாஞானியரான புலஸ்தியராலும் வசிஷ்டராலும் கூறப்பட்டவையெல்லாம் இப்போது நீர் கேட்ட கேள்விகளால் மீண்டும் என நினைவுக்கு வந்தன. மைத்ரேயரே! பெரியோரின் அருள்பெற்றதால் சிறப்பான ஞானம் பெற்ற நான், யாவற்றையும் உமக்குக் கூறுகிறேன். நன்றாகக் கேளும். புராணக்கருத்தின்படி பார்த்தால், உலகமானது ஸ்ரீவிஷ்ணுவினாலேயே உண்டாக்கப்பட்டு, அவரிடத்திலே தான் இருக்கிறது. தொடர்புக்கும் முடிவுக்கும் அவரேதான் கர்த்தாவாகும். இந்த உலகங்கள் எல்லாம் அவராலேயே வியாபிக்கப்பட்டு, அவருடைய சொரூபமாகவே இருக்கின்றன. அவரேதான் உலகம்! இவ்வாறு மைத்ரேய முனிவரின் கேள்விகளுக்கு பராசர மகரிஷி சுருக்கமாகப் பதில் சொன்னார்.

2. பிரபஞ்ச உற்பத்தி

மைத்ரேயருக்குப் பராசர முனிவர் புராணஞ்சொல்லத் துவங்கி, அதன் முக்கிய விஷயமான ஸ்ரீவிஷ்ணுவைப் பலவகையாகத் துதிக்கலானார். விகாரமற்றவனாய், தூய்மையானவனாய், நித்தியனாய், பரமாத்மாவாய், எப்போதும் மாறாத இயல்புடைய திவ்விய மங்களவிக்கிரகமுடையவனாய், சகலமும் ஸ்வாதீனமாய் இருக்கும்படியான ஜயசாலியான ஸ்ரீமகாவிஷ்ணுவுக்கு என் வணக்கம் உரியதாகுக! படைக்கும்போது ஹிரண்யகர்ப்ப ரூபியாகவும், காக்கும்போது ஹரிரூபியாகவும், சங்கரிக்கிறபோது சங்கர ரூபியாகவும் இருந்து வழிபடுவோருக்கு விடுதலையளிப்பவருமான ஸ்ரீவாசுதேவருக்கு என் வணக்கம் உரியதாகுக! ஒன்றாயும் பலவுமான சொரூபமுள்ளவராயும், காரணவஸ்தையிலேயே ஒன்றாய் சூட்சுமமுமாய் அவ்யக்தமுமான ரூபத்தையும் காரியாவஸ்தையிலே அநேகமாய் ஸ்தூலமாய், வியக்தமுமான ரூபத்தையும் உடையவராகி, அனாதியான பிரகிருதி வாசனையாலே, கட்டுப்பட்ட சேதனங்களுக்கெல்லாம் மோட்ச காரணமான ஸ்ரீவிஷ்ணுவுக்கு என் வணக்கம் உரியதாகுக! படைத்தல், காத்தல், அழித்தல் ஆகியவற்றுக்கு மூலமாய், நிமேöஷான் மேஷ சூரியகமனாதி சகல பதார்த்த ஸ்வரூபமான காலத்தையே தனது சரீரமாக உடையவராயும், அந்தக்காலத்துக்குட்படாத மேன்மையான சொரூபமுடையவராயும், சர்வ வியாபகருமானவருக்கு என் வணக்கம் உரியதாகுக! பிரபஞ்சங்களுக்கெல்லாம் ஆதாரமாய் ஆதிசூட்சுமத்துக்கும் சூட்சுமமான ரூபமாய், எல்லாவற்றினுள்ளும் அந்தரியாமியாய் பிரகிருதி சம்பந்தத்தினாலே குற்றமடையாமல் என்றும் உண்மையான ஞானத்துக்குரியவராய், கல்யாண குணங்களால் புரு÷ஷாத்தமர் என்று வழங்கப்படுபவரான எம்பெருமானைச் சேவித்தேன். தெண்டனிட்டேன். அதன் பிறகு இதனைச் சொல்லுகிறேன்.

பரமார்த்தமாக விசாரிக்குமிடத்தில் சுத்தஞான சொரூபமாய், அஞ்ஞானம், தூக்கம் ஆகியவை இல்லாத அத்தியந்த நிர்மலராய், அனாதிப் பிரகிருதி வாசனையினால் உண்டான பிரமிப்பினால் தேக இந்திரியாதிகளை ஆன்மாவாக நினைப்போருக்கு தேவ, மனுஷ்யாதி ரூபமாகத் தோன்றுபவராய், சேதனங்களிலெல்லாம் வியாபித்து, ஜகங்களைக் கிரகித்து, தனது சங்கல்ப மாத்திரத்தாலேயே, சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரங்களைச் செய்து கொண்டு, தன் திருவுளத்தாலல்லது கருமவசத்தினாலே பிறப்பு இறப்பில்லாதவருமான ஸ்ரீவிஷ்ணு பகவானை தக்ஷப்பிரஜாபதி முதலிய முனிவர்கள் சேவித்து வணங்குகிறார்கள். பிறகு அவர்கள், உலகத்துக்கெல்லாம் படைப்புக் கர்த்தராயும், எம்பெருமானின் நாபிக் கமலத்தில் உதித்தவராயும், யாவற்றின் உற்பத்தி நாசம் முதலியவற்றை அறிந்த உலகத் தந்தையாகவும் விளங்கும் பிரம்மாவினிடம் கேட்க அவர் அருளியதைச் சொல்கிறேன். பிரம்மதேவன் அருளியதை கேட்டறிந்தவர்களான தக்ஷர் முதலிய முனிவர்கள், உள்ளத் தூய்மையுடன் நர்மதை நதிக்கரையில் ஆட்சி புரிந்து வந்த புருகுத்சன் என்ற மன்னனுக்கு, தாம் பிரம்மனிடம் கேட்டவற்றைக் கூறினார்கள். அதை அந்த மன்னன் சாரஸ்வதன் என்ற முனிவருக்கு உபதேசித்தான். அந்த மாமுனிவரின் திருவருளால், நான் அவற்றை அறிந்தேன். இவ்விதமாக, ஆசாரிய பரம்பரை ரீதியில் நான் அறிந்து இந்த மகாபுராணத்தை விளக்கமாக உமக்குச் சொல்கிறேன்.

மைத்ரேயரே! சொரூப குணங்களின் மேம்பட்ட லோகாதிபதிகளுக்குள்ளே உயர்ந்தவர்களான பிரம்மாதிகளில் உயர்ந்தவரும், தன்னை விட உயர்ந்தோரில்லாத வருமாய்ப் பரமாத்மாவாய், சேதனா சேதனங்களுக்கெல்லாம் தானே ஆதாரமாய், தனக்கு வேறெதுவும் ஆதாரமில்லாதவராய் தன்னிடத்திலே தானிருப்பவராய், தேவ மனுஷ்யாதி ஜாதிகளையும் கறுப்பு வெளுப்பு முதலிய வர்ணங்களையும் கிரியைகளையும் திரவியங்களையும் சொல்கின்ற இயல்புகள் இல்லாதவராய் குறைதல். விநாசம், திரிதல், வளர்தல், பிறப்பு என்ற விவகாரங்களை விட்டிருக்கையால், சர்வகாலங்களிலும் அப்பிரமேயங்களான ஞானம், சக்தி, தேஜஸ், பலம் முதலிய ஷட்குண சொரூபத்தோடே இருப்பவர் என்று சொல்லக்கூடியவராய், தோனா சேதனங்கள் யாவற்றிலும் மேலும் கீழும் உள்ளும் புறமும் பக்கமும் தான் வசித்துக் கொண்டு சேதனா சேதனங்களும் தன்னிடத்தில் வசிக்கத்தக்கதாகிய, சர்வலோக வியாபகமான சொரூபமுடையவராய், ஒன்றிலும் ஒட்டாமல் எல்லாமே தன்னால் விளங்கும்படிப் பிரகாசிப்பவராகையால், ஸ்ரீவாசுதேவர் என்ற வேதாந்த அறிஞர்கள் கொண்டாடும்படியிருக்கிறார். சொரூபத்திலும் குணத்திலும் பெருமையுடையவர் ஆகையால் பிரமம், பரமன் என்றும் சொல்லப்பட்டு நித்தியனும் ஜனனரகிதனும் அட்சரனும் எப்பொழுதும் ஒரேவிதமான சொரூபனுமாய், துக்கம் அஞ்ஞானம் முதலிய ஈன குணங்களற்றவராகையினாலே, நிர்மலராய் தோன்றுவதும், தோன்றாததுமான சகல லோகங்களையும் சரீரமாகக் கொண்டவராய், புருஷ ரூபமாயும் கால ரூபராயும் இருக்கிற பரப்பிரம்மம் என்று சொல்லப்படும் பகவான் ஒருவர் உண்டல்லவா? அந்தப் பிரம்மத்துக்குச் சேதனமான ÷க்ஷத்திரக்கியன் முக்கிய சரீரம்.

அறிஞர்கள் பிரதானம், புருஷம், வியக்தம், காலம் ஆகியவை விஷ்ணுவின் தூய்மையும் மிகவுயர்வுடையதுமான நிலை என்று கருதுகின்றனர். இந்த நான்கு நிலைகளும் தக்க அளவுகளின் அமைப்புகளாகப் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகியவற்றை செய்விக்கின்றன. மூலப்பிரகிருதியும், சீவனும், தேவமனுஷ்யாதி வியக்தங்களும், காலமும் வகுத்தபடியே அந்தப் பரமாத்மாவின் சிருஷ்டி, ஸ்திதி, சங்காரங்களினுடைய தோற்றத்திற்கும் விளக்கத்திற்கும் சாதனமான ரூபங்களாக இருக்கும். அது எப்படியெனில் வியக்தமான சராசரங்களும் அவ்வியக்தமான பிரகிருதியும் சேதனமான ÷க்ஷத்ரக்கியனும் களாகாஷ்டாதி ரூபமானகாலமும் ஸ்ரீவிஷ்ணுவினாலேயே தாங்கப்பட்டும் ஆளப்பட்டும் இருப்பதால் அவருக்கே சொரூபமாக இருக்கும். சகல இஷ்டங்களும் நிறைந்துள்ள அவருக்குச் சிருஷ்டி முதலியவற்றை ஏன் செய்ய வேண்டும் என்று நீங்கள் கேட்பீராயின், அதற்கு சொல்கிறேன். விளையாடும் பாலகனுக்கு அந்த விளையாட்டே பயனுவது போல, பரமாத்மாவுக்குச் சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் முதலியவை விலைகளேயன்றி வேறு பயன் கிஞ்சித்தும் இல்லை என்று அறிவீராக. இனிமேல் படைப்புக் கிரமத்தைக் கேளுங்கள்: எம்பெருமானுக்குச் சரீரம் என்று எதைச் சொன்னேனோ, அந்த அவ்வியக்தமானது பிரகிருதி என்றும் பிரதானம் என்றும் மனு முதலானவர்களால் சொல்லப்படுகின்றது. அது சேதனா சேதனங்கள் அடங்கியது ஆகையால் நித்தியமாய். அளவில்லாததாய் தான் அசேதனமாகியும் மரங்களிடத்தில் அக்கினியிருப்பது போலத் தன்னிடத்திலே சேதனங்களான சீவகோடிகள் எல்லாம் இருக்கப்பெற்று, அக்ஷயமுமாய் அப்பிரமேயமுமாய் பகவானேயல்லாது வேறு ஒரு ஆதாரமுமற்றதாய், நிச்சலமாய், சப்த, ஸ்பரிச, கந்த, ரூப, ரச, கந்தங்கள் இல்லாததாய், சத்துவ, ரஜஸ், தாமச குணத்துமகமாய், ஜகத்துக்குக் காரணமாய் காரணம், உற்பத்தி, விநாசம் என்ற இம்மூன்றும் இல்லாததாக இருக்கும்.

இந்த சிருஷ்டிக்குப் பூர்வத்தில், மகாப்பிரளயமானவுடனே அதனாலேயே யாவும் வியாபிக்கப்பட்டிருந்தது. மைத்ரேயரே! வேதாந்தத் தத்துவ பிரமவாதிகள், பிரதானத்தை தெரிவிப்பதான இந்தப் பொருளையே சொல்வார்கள். எப்படியெனில், அப்பொழுது பகலும் இரவும் ஆகாயமும், பூமியும், காற்றும், நீரும், சூரிய சந்திராதி ஜோதிகளும் இருளும், சாத்துவிக, தாமச, ராஜசகுண விலாசங்களும் மற்றுமுண்டான வஸ்துக்கள் ஒன்றும் இல்லாமல் மூலப்பிரகிருதி ஒன்று மட்டுமே சமஷ்டி புருஷ ரூபமாக இருந்தது. எல்லாவற்றிற்கும் மேம்பட்டதான அந்த ஸ்ரீவிஷ்ணு ஸ்வரூபத்தினின்று, பிரதானம் என்கிற பிரகிருதியும் புருஷன் என்கிற ஆத்துமாவும் உண்டாகி, சிருஷ்டிக்கு உபயோகமான சேர்க்கையில்லாதவைகளாய், அந்த எம்பெருமானுடைய எந்த ரூபத்தினால் தரிக்கப்பட்டிருந்தனவோ அது அவருக்குக் காலம் என்கின்ற பெயரையுடையதான ஒரு சொரூபமாக இருக்கும். மைத்ரேயரே! வியக்தமான மகத்தகங்காராதிகள் அந்தப் பிரகிருதியில் இருக்கும். பிரகிருதியும் பரமாத்மாவிடத்தில் லயப்பட்டதனால் மகாப்பிரளயத்துக்குப் பிராகிருதப் பிரளயம் என்றும் பெயருண்டு. அந்தக் காலம் அனாதியானது. அந்தக் காலத்துக்கு எப்போதும் முடிவில்லாமையினாலே, சிருஷ்டி ஸ்திதி, சங்காரங்கள் அவிச்சின்ன பிரவாக ரூபமாய்ப் பிரவர்த்திக்கின்றன.

மைத்ரேயரே! பிரகிருதி சமகுணமாகவும் புருஷன் வேறாகவும் இருக்குமிடத்தில் விஷ்ணுவின் ஸ்வயரூபமான காலமானது சிருஷ்டிக்கு அனுகூலமாகப் பிரவர்த்திக்கிறது. பிறகு பரப்பிரமமும் பரமாத்மாவும் செகன்மயனும், சர்வக்தனும் சர்வபூதேஸ்வரனும் சர்வாத்மகனும், பரமேஸ்வரனுமான ஸ்ரீஹரி, தன்னிச்சையினாலேயே லீலார்த்தமாகப் பிரகிருதி புருஷர்களிடத்தில் பிரவேசித்து, ஒன்றுக்கொன்று ஏற்றத்தாழ்வில்லாமல் சமமாக இருக்கிற சத்துவ, ராஜஸ, தாமச குணங்களுக்கு வைஷம்மியங்களைக் கற்பித்து, பிரகிருதி புருஷர்களுக்குச் சலனமுண்டாக்கி அருளினார். எப்படி வாசனையானது அதிகம்பீரமான மனதுக்கு தன் சான்னித்யத்தினாலேயே விகாரத்தை உண்டு பண்ணுகிறதே அல்லாது யாதொரு தொழிலையும் செய்வதில்லையோ, அது அல்லாது யாதொரு தொழிலையும் செய்வதில்லையோ, அது போலவே பரமேஸ்வரன் தன் சான்னித்ய விசேஷத்தாலேயே பிரகிருதி புருஷர்கள் பிரபஞ்சத்தைப் படைப்பிக்கக் கலக்குகிறான். வாசனையானது மனோவிகாரத்துக்கு நிமித்தம். பரமாத்மாவோ பிரபஞ்சத்துக்கு நிமித்தகாரணம் மட்டுமல்ல தானே சலனமுண்டாக்குகிறவனாய், சலிப்பிக்கப்படுவதுமான பிரகிருதி புருஷ ஸ்வரூபமாகத் தானே ஆகின்றான். ஆகையால் உபாதான காரணமும் அவனே! சூட்சும ரூபமும் ஸ்தூல ரூபமுமான பிரகிருதியும், வியஷ்டி சமஷ்டி ரூபமான பிரம்மாதி ரூபங்களும் வியக்தமாயும் அவ்வியக்தமாயும் இருக்கின்ற பிரபஞ்சமும் மூலப்பிரகிருதியும் சர்வேசுரனாய் புரு÷ஷாத்தமானாயிருக்கின்ற விஷ்ணுவின் ஸ்வரூப மாகையினாலே, காரியமான செகத்தும் அவனன்றி வேறல்ல. இது நிற்க.

மைத்ரேயரே! ஜீவனுடைய கர்மவசத்தினாலே சலனப்பட்ட பிரகிருதியினின்றும் சத்துவ, ராஜச, தாமஸ, குண வைஷம்மிய ரூபமான மகத்தத்துவம் உற்பத்தியாயிற்று. பராத்பரனான ஸ்ரீவிஷ்ணுவினுடைய சரீரமான பிரகிருதியானது. தன்னால் உண்டான மகத்தத்துவத்தை மூடிக்கொண்டது. அந்த மகத்தத்துவம் சாத்வீக ராஜச, தாமசம் என்ற குணத்திரயத்தை கொண்டதாய், விதையானது மேற்புறம் தோலால் மூடப்பட்டிருப்பதைப் போல பிரகிருதியினால் மூடிக்கொள்ளப்பட்டது. அப்பால், அந்த மகத்தத்துவத்திலிருந்து வைகாரிகம், தைஜஸம், பூதாதிகள் என்ற மூன்றுவித அகங்காரம் பிறந்தது. அதில் சாத்விக அகங்காரம் வைகாரிகம் ஆகும். ராஜச அகங்காரம் தைஜஸம் ஆகும். தாமஸ அகங்காரம் பூதாதி என்று சொல்லப்படும். அந்த அகங்காரங்கள் திரிகுணாத்மகமான படியினாலே, பஞ்ச பூதங்களுக்கும் இந்திரியங்களுக்கும் ஏதுவாக இருக்கும். பிரகிருதியினாலே மகத்தத்துவம் மூடப்பட்டது போல அகங்காரம் மகத்தத்துவத்தினாலே மூடப்பட்டு இருந்தது அதில் பூதாதி என்று வழங்கப்பட்ட தாமச அகங்காரம் விகாரப்பட்டு, சப்த தன்மாத்திரையை உண்டாக்கிற்று. அதிலிருந்து, சப்தத்தை லக்ஷணமாகக் கொண்ட ஆகாசம் பிறந்தது. அந்த ஆகாசம் தாமச அகங்காரத்தாலே மூடிக்கொண்டது. அந்த ஆகாசம் விகாரப்பட்டு, ஸ்பரிச தன்மாத்திரையை உண்டாக்க, அதனால் காற்று தோன்றியது. அந்தக் காற்றுக்கு ஸ்பரிசம் குணமாகும். அந்த ஸ்பரிச தன் மாத்திரையான வாயுவும் ஆகாசத்தாலே மூடப்பட்டது. அந்த வாயு விகாரப்பட்டு ரூப தன்மாத்திரையை உண்டாக்கிற்று. அதனால் தேஜசு பிறந்தது. அந்த தேஜசு அசாதாரணமான குணத்தையுடையது.

ஸ்பரிச தன்மாத்திரையினாலே ரூப தன்மாத்திரையான தேஜசு மூடப்பட்டுள்ளது. தேஜசு விகாரப்பட்டு ரச தன்மாத்திரையை உண்டாக்கிற்று. அதிலிருந்து அப்பு பிறந்தது, ரச தன்மாத்திரையான அப்புவும், ரூப தன்மாத்திரையினாலே மூடப்பட்டது. அந்த அப்பு விகாரப்பட்டு, கந்த தன்மாத்திரையை உண்டாக்கிற்று. அதனால் பிருத்வி பிறந்தது. பிருதிவிக்குக் கந்தம் அசாதாரண குணமாக இருக்கும் சூட்சுமம் கண்ணுக்குப் புலனாகாதபடியினால் பஞ்சமகாபூத காரணங்களான சப்த, ஸ்பரிச, ரூப, ரச, கந்தங்களுடனே கூடிய சூட்சும பூதங்கள் தன்மாத்திரைகள் என்று சொல்லப்படும் ஸ்தூலங்களான ஆகாசாதி பூதங்களிலே சப்தாதி குணங்கள் விகசிதமாய்க் காணப்படும். தன்மாத்திரைகள் அதிநுண்ணியதாய் சரீரலகுத்துவமும், அற்புதப் பிரகாசமும், பிரசன்னத்துவமும் உண்டாக்குகிற சாந்தமான சாத்வீக குணமும், வியாகுலமும் நானாவித வியாபாரங்களும் உண்டாக்குகின்ற கோரமான ராஜசகுணமும், நித்திரையும் ஆலசியமும் உண்டாக்குகின்ற மூடமான தாமச குணமும் இல்லாதிருக்கும். இவ்விதமாக ஆகாசாதி பூதங்களும், தன்மாத்திரைகளும் பூதாதியென்று வழங்கப்படும் தாமச அகங்காரத்தால் பிறந்தன தைஜசம் என்று வழங்கப்பட்ட ராஜச அகங்காரத்தால் இந்திரியங்கள் உண்டாயின என்று சிலர் கூறுவார்கள். வைகாரிகம் என்று சொல்லப்பட்ட சாத்வீக அகங்காரத்தால் இந்திரியங்கள் பிறந்தன என்றும் சிலர் கூறுவார்கள். இந்த இரு பக்ஷங்களிலேயும் மனதுடன் பதினோரு இந்திரியங்கள் சாத்வீக அகங்காரத்திலே பிறந்தன என்பதே நிச்சயம். ராஜச அகங்காரம், சாத்வீக தாமச அகங்காரங்கள் இரண்டுக்கும் சகாயமாக இருக்கும்.

இனி, இந்த ஞானேந்திரியங்கள், கர்மேந்திரியங்கள் ஆகியவற்றின் சொரூபத்தைக் கேளுங்கள்! மெய் கண், மூக்கு, வாய், செவி என்ற இவ்வைந்தும் ஞானேந்திரியங்கள்! இவற்றுக்கு ஸ்பரிசம், ரூபம், கந்தம், ரசம், சப்தம் என்ற இவ்வைந்தும் போக்கிய பதார்த்தங்கள், வாக்கு, பாணி, பாதம், பாயு, உபஸ்தம் முதலிய ஐந்தும் கர்மேந்திரியங்கள், வசனம், கர்மம், கமனம், சொர்க்கம், ஆனந்தம், இன்னுமிவை ஐந்தும் அவ்வைந்துக்கும் காரியங்கள், ஆகாயம், வாயு, தேயு, அப்பு, பிரிதிவி என்ற பூதங்கள் தமக்கு அசாதாரண குணமான சப்த, ஸ்பரிச, ரூப ரச, கந்தங்கள், (பூமியில் ஐந்தும், நீரில் நான்கும், தீயில் மூன்றும், காற்றில் இரண்டும், வானில் ஒன்றும்) தாங்கள் மேன்மேலும் அதிகமாகப் பெற்று, அன்னியோன்னிய சையுக்தமாய்ச் சாத்வீக, ராஜச, தாமச குணாத்மகங்களான படியால், சாந்தங்களாயும் கோரங்களாயும் மூடங்களாயும் சிறப்புற்று விளங்கும். இந்த விதமாகப் பிறந்த பஞ்சபூதங்களும் நானாவித சக்தி யுக்தங்களாய் ஒன்றோடொன்று கலந்து ஐக்கியமாயின. அதெப்படியென்றால், பிரிதிவியில் அப்புவும், தேயுவும், வாயுவும், ஆகாயமும், ஜலத்தில் பூமி, தேயு, வாயு, ஆகாயமும், தேயுவில் பிருதிவி, அப்பு வாயு, ஆகாயமும், ஆகாயத்தில் பிருத்வி, அப்பு தேயு மாருதங்களும் கலந்தன. இதுவே பஞ்சீகரப் பிரகாரம் இவ்விதமாக அன்னியோன்னியமாகக் கலந்ததனாலே பிரம்மாண்டத்தைச் சிருஷ்டிப்பதற்கும் நான்குவதைப் பிறவிகளைச் சிருஷ்டிப்பதற்கும் சாமர்த்தியமுடையவைகளாய், ஜீவனுடைய கர்ம விசேஷத்தினாலும் பிரகிருதி மகத்தகங்கார தன்மாத்திரைகளின் சையோகத்தினாலும் ஈசுவர சங்கல்பத்தினாலும் பிரமாண்டத்தை உண்டாக்கின.

இப்படி, பஞ்சபூதங்களினாலே பிறந்த அந்த அண்டம் நீர்க்குமிழி போல ஒரு கணப்பொழுதிலே அபிவிருத்தியாயிற்றேயல்லாமல் கிரமக் கிரமமாக அபிவிருத்தியாகவில்லை, இவ்விதமாகப் பிரகிருதியினாலே உண்டான அதிவிசாலமான பிரமாண்டம் பிரகிருதி சரீரகரான ஸ்ரீவிஷ்ணு பகவானுக்கு லீலா ஸ்தானமாய் மகா ஜலத்திலே மிதந்து கொண்டிருந்தது. இவ்விதமாகப் பிறந்த பிரம்மாண்டத்தில் பிரகிருதி சொரூபனும் மகத்தகங்காரத் தன்மாத்திரா மகாபூத சரீரகனும் ஜகதீச்வரனுமான விஷ்ணுதேவர் சதுர்முக ஸ்வரூபமாய்த் தானே அவதரித்தார். அந்த அண்டத்துக்கு மேருமலையானது உல்ப்பம்; மற்ற மலைகள் ஜராயு; சமுத்திரங்கள் கர்ப்போதகமுமாகும். உல்ப்பம் என்றால் கருவை சுற்றியுள்ள ஆடையைப் போன்ற ஒன்றாகும். ஜராயு வென்றால் அதன்மீது சுற்றியிருக்கிற கருப்பை, கர்ப்போதகமாவது அதிலிருக்கும் தண்ணீர் அந்தப் பிரமாண்டத்தில் மலைகள், தீவுகள், சாகரங்கள் ஜோதிச் சக்கரங்கள், மனுஷ்யர், தேவர், அசுரர் ஆகியவை பிறந்தன. இப்படியுண்டான பிரம்மாண்டத்தை கவிந்து, ஒன்றுக்கொன்று தசகுணோத்தரமான சகலமும் அக்கினியும் காற்றும் ஆகாயமும் தாமச அகங்காரமும் மகத்தத்துவமாகிய சத்தாவரணங்களும் இருக்கின்றன. எப்படி தேங்காயானது நார் மட்டை ஆகியவற்றால் கவியப்பட்டிருக்கிறதோ அதுபோலவே, பிரம்மாண்டமும் சத்தாவரணங்களாலே கவியப்பட்டுள்ளது. அந்த அண்டத்தில் விசுவரூபமான நாராயணர், பிரமரூபியாகி, ரஜோகுணத்தைப் பிரதானமாகவுடையவராய் தேவ, அசுர, கந்தர்வ மனுஷ்ய, பசு, பக்ஷி தாவரங்கள் ஆகியவற்றைப் படைத்துக் கொண்டு, அப்பிரமேயப் பராக்கிரமனும் சட்குண ஐசுவரிய சம்பன்னனுமான தானே சாத்வீகக்குணப் பிரதானனாய், லீலார்த்தமாக யுகங்கள் தோறும் நானாவிதமான திவ்விய அவதாரங்களைச் செய்து கல்பாந்தர பரியந்தமும் ஜகத்தைப் பரிபாலனம் செய்து கொண்டும், பிரளய காலத்தில் தாமச குணப் பிறதானனாய் ருத்திர ரூபியாகிறான். அப்பொழுது அதிபயங்கரனாய் சராசரங்களான அகில பூதங்களையும் விழுங்கி, மூவுலகங்களையும் ஏகார்ணவமாகச் செய்து, ஸஹஸ்ர பணு மண்டல மண்டிதனான ஆதிசேடனாகிய படுக்கையில், சயனித்துக் கொண்டு பிறகு பிரளயாந்தத்தில் திரும்பவும் எழுந்திருந்து பிரமரூபியாகி, முன்போலவே, பிரபஞ்சத்தை படைத்தருள்வான்.

ஷட்குண சம்பன்னனான ஜனார்த்தனன் ஒருவன், அந்தந்தச் சொரூபங்களில் நின்று, சிருஷ்டி ஸ்திதி சங்காரங்களைச் செய்வதனால், பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் என்ற திருப்பெயர்களைப் பெறுகின்றான். அந்தப் பகவான் தானே சிருஷ்டி கர்த்தாவாக இருந்து சராசர சரீரகனாக தன்னைத் தானே சிருஷ்டித்துக் கொள்கிறேன் அப்படியே தானே காக்கின்றான். யுகமுடிவில் தானே சங்கரிக்கின்றான். ஆகையால் சிருஷ்டி கர்த்தாவாகவும் சங்கார கர்த்தாவாகவும் தோற்றுகிறவர்களுக்கும் சிருஷ்டிக்கப்படுவதும் சங்கரிக்கப்படுவதுமாகத் தோற்றுபவைகளுக்கும் தாரதம்மியம் ஒன்றும் இல்லை. ஏனெனில் பிருத்வி அப்பு, தேயு, வாயு ஆகாயங்களும் இந்திரியங்களும் மனமும் ÷க்ஷத்ரக்ஞனுமாகிய சக்ல பிரபஞ்சங்களும் அந்த ஸ்ரீமந் நாராயணனேயாம்! எப்படியெனில் சகல பூதங்களுக்கும் ஆன்மாவாய், எல்லாவற்றையும் தனக்கு சரீரமாகவுடையவனாகையால் கை, கால் முதலிய சரீரத்தின் செய்கை, சரீரியான ஆன்மாவுக்கு உபகாரமாவது போல, பிரம்மாதிகள் செய்கின்ற சிருஷ்டி முதலியவை யாவும் அவனுக்கு உதவியாக இருக்கும். இனிமேல், நான் சொன்னவற்றையெல்லாம் சுருக்கமாகச் சொல்கிறேன். அதாவது, சேதனாசேதனங்களான சகல பிரபஞ்சங்களும், சரீரமாயிருப்பதான சொரூபமுடையவனாகையாலே பிரமாதி ரூபங்களில், படைப்பவன் அவன் ! படைக்கப்படுபவனும் அவன்! காப்பவன்-அவன். காக்கப்படுவோனும் அவன்! சங்கரிக்கிறவன் அவன்; சங்கரிக்கப்படுகிறவனும் அவனே! ஆனால் தான் சர்வசக்தனாக இருக்கும்போது, பிரம்மாதிகளை இடையில் வைப்பது ஏனெனில் அவர்களுக்கு அப்படிச் செய்யும்படி அவனே வரங்கொடுத்திருக்கிறேன். ஆகையால் தான், மைத்ரேயரே! அந்த ஸ்ரீமகாவிஷ்ணுவே சகல விதத்திலும் உபாசிக்கத் தக்கவனாக இருக்கிறான்!

3. காலப் பிரமாணம்

பராசர முனிவரே! நிர்க்குணமும் அப்பிரமேயமும் தூய்மையும் நிர்மலமுமான பரப்பிரம்மத்திற்குச் சிருஷ்டி. ஸ்திதி சங்காரம் முதலியவற்றின் கர்த்தாவாகும் தன்மை எப்படிக்கூடும்? என்று மைத்ரேயர் கேட்டார். பராசர மகரிஷி கூறலானார் : மைத்ரேயரே! அக்கினிக்கு உஷ்ணம் இயல்பாக இருப்பது போலவே சர்வ பூதங்களுக்கும் அதனதன் சக்தி சிறப்புகள் அநேகம் உண்டு. அதுபோலவே, எம்பெருமானாருக்கும் படைத்தல் முதலியவைகளுக்குக் காரணமான சக்திகள் உண்டு. அதனாலே பரமாத்மா சிருஷ்டி, ஸ்திதி, லயங்களைச் செய்தருள்கிறான். ஸ்ரீமந் நாராயணன் பிரபஞ்ச, சிருஷ்டி உண்டாக்கிய விதத்தைச் சொல்கிறேன். நாராயணன் என்ற திருநாமமுடைய பகவான் உலகங்களுக்குப் பிதாமகனான பிரம்மாவாக அவதரித்தான் என்று உபசாரத்தினால் சொல்லப்படுவது மகாப்பிரளயத்தில் ஸ்ரீமந்நாராயணனுடைய திருமேனியில் பிரவேசித்திருந்து மீண்டும் தோன்றுவதனால் தான் என்பதை அறிந்துகொள்ளும் அந்தப் பிரம்மாவுக்கு அவருடைய அளவில் நூறாண்டுக்காலம் ஆயுசு உண்டு. அதற்கு பரம என்று பெயர். அதில் பாதி ப்ரார்த்தம் என்று சொல்லப்படும் காலமானது விஷ்ணு சொரூபம் என்று முன்பே சொன்னேன் அல்லவா! அந்தக் காலத்தினாலே சதுர்முகப் பிரும்மனுக்கும் அந்தியம் உண்டாகும். அதனால் மலைகள், சமுத்திரங்கள் முதலிய சகல சராசரங்களுக்கும் வளர்தல், நசித்தல் முதலியவை உண்டாகும்.

இது இப்படியிருக்க இனி காலப் பிரமாணத்தின் இயல்பைக் கூறுகிறேன். மைத்ரேயரே! நிமிஷகள் பதினைந்து கூடியது ஒரு காஷ்டை; அந்தக் காஷ்டை முப்பதானால் அது ஒரு கலை, அந்தக் கலைகள் முப்பதானால் ஒரு முகூர்த்தம், அந்த முகூர்த்தம் முப்பதானால் அது மனுஷ்யர்களுக்கு ஒரு அகோராத்திரம்; அதாவது ஒருநாள். அந்த அகோராத்திரங்கள் முப்பதானால் இரண்டு பக்ஷங்களோடு கூடிய ஒரு மாதம் அந்த மாதம் பன்னிரண்டானால் தட்சணாயனம் உத்திராயணம் என்ற இரண்டு அயனங்கள் சேர்ந்து ஒரு வருஷமாகும். தட்சணாயனம் தேவர்களுக்கு இரவாகவும் உத்தராயணம் பகலுமாகவும் இருக்கும். தேவமானத்தில் பன்னீராயிரம் ஆண்டுகளானால் அது ஒரு சதுர்யுகம். அதில் கிருதயுகம் நாலாயிரமும் சந்தி, சந்தியம்சங்கள் எண்ணூறு திவ்விய சம்வச்சரமுமாக இருக்கும். திரேதாயுகம் சந்தி சந்தியம்சங்கள் உட்பட மூவாயிரத்தறு நூறு ஆண்டுகள், துவாபரயுகம் சந்தி, சந்தியம்சங்கள் உட்பட இரண்டாயிரத்து நானூறு தேவ ஆண்டுகள். கலியுகத்திற்கு ஆயிரமும் சந்தி சந்தியம்சங்களின் ஆண்டுகள் இருநூறுமாக இருக்கும் சந்தியாவது யுகத்துவக்கத்திற்கு முந்தியகாலம் சந்தியம்சமாவது யுகத்திற்குப் பிற்பட்ட காலம் சந்தி சந்தியம்சங்களுக்கு இடைப்பட்ட காலமானது, கிருத, திரேதா, துவாபர, கலி என்ற பெயர்களைப் பெற்று யுகம் என்று வழங்கப்படுகிறது. இந்த விதமான கிருதத்திரேதா துவாபர கலியுகங்கள் என்கின்ற சதுர்யுகங்களும் ஆயிரந்தரம் திரும்பினால் சதுர்முகனாகிய பிரமனுக்கு ஒரு பகல் என்று சொல்லப்படும். அந்த சதுர்முகனுடைய தினத்தில் பதினான்கு மநுக்கள் அதிகாரம் செய்வார்கள். இனி அந்த மநுவந்தரப் பிராமணத்தைக் கூறுகிறேன், கேட்பீராக;

மைத்ரேயரே! சப்தரிஷிகளும், வசு, ருத்திராதியர் ஆகிய தேவதைகளும், இந்திரன் மநுக்கள், மநு புத்திரரான அரசர்கள் ஆகியவர்களும் ஏககாலத்தில் சிருஷ்டிக்கப்படுவார்கள். ஏககாலத்திலே சங்கரிக்கப்படுவார்கள். தேவமானத்தில் எழுபத்தோரு மகாயுகம் ஒரு மநுவந்தரம் என்று சொல்லப்படும். இந்திராதி நூறு தேவதைகளுக்கும் மநுக்களுக்கும் இதுவே ஆயுட் பிரமாணமாகும். ஒரு மநுவந்தரத்துக்கு தேவமானத்தில் எட்டு லட்சத்து ஐம்பத்தீராயிரம் ஆண்டுகள் அளவாகும். அது மனுஷிய மானத்தினாலே, முப்பது கோடியும் அறுபத்தேழு லட்சத்து இருபதினாயிரம் ஆண்டுகள் ஆகும். இப்படிப் பதினாலு மநுவந்தரங்களானால் பிரமனுக்கு ஒரு பகல் இதன் முடிவில் ஒரு நைமித்திகப் பிரளயம் உண்டாகும். அந்தத் தினப் பிரளயத்தில், பூலோக, புவர்லோக சுவர் லோகங்கள் தகிக்கப்பட்டு நாசமடையும் அப்போது மகர் லோகத்தில் வாசஞ் செய்பவர்கள், அந்தப் பிரளயாக்கினி ஜ்வாலையின் கனல் வேகத்தைப் பொறுக்க முடியாமல் தங்கள் லோகத்தைவிட்டு ஜனலோகத்துக்குச் செல்வார்கள். அதன் பிறகு, சப்த சாகரங்களும் பொங்கித் திரிலோகங்களையும் ஏகார்ணவஞ் செய்யும் அந்தச் சமயத்தில் நாராயணாத் மகனான ஹிரண்யகர்ப்பன், திரிலோகங்களையும் விழுங்கிய எம்பெருமானுடைய அநுப்பிரவேசத்தினால் பருத்தவனாகி, அவனுடைய நாபிக்கமலத்தில் இருப்பதால், ஆதிசேடனாகிய சயனத்தில் சயனித்துக் கொண்டு ஜனலோக நிவாசிகளான யோகிகளால் தியானிக்கப்பட்டவனாய், முன்பு சொன்ன பகல் ராத்திரியளவு யோக நித்திரை செய்தருளுவன். இதுபோல் ஆயிரம் சதுர்யுகப் பிரமாணமான ராத்திரியும் கடந்த பிறகு பிதாமகன் மீண்டும் சராசரங்களை படைப்பான். இப்படிப்பட்ட தினங்களைக் கொண்ட ஆண்டுகள் நூறு ஆனால் சதுர்முகப் பிரமனின் ஆயுள் முடியும் அதில் ஐம்பது ஆண்டுகள் பரார்த்தம் என்று சொல்லப்படும். முன்பு ஒரு பரார்த்தமாயிற்று. அது பிரமனின் ஆயுளில் பாதியாகும். இப்போது இரண்டாவது பரார்த்தம் நடக்கிறது. இதுவராக நாமகமான முதலாவது கல்பமாகும். இது ஸ்ரீவராக கல்பம்!

4. ஸ்ரீவராஹ அவதார வைபவம்

குருநாதரே! நாராயணன் என்ற திருநாமத்தைக் கொண்ட அந்தப் பிரம ஸ்வரூபியான பகவான். இந்தக் கல்பத்தின் துவக்கத்தில் சர்வ பூதங்களையும் எந்தவிதம் படைத்தார் என்பதையும் முந்திய பாத்தும கல்பத்தைப் பற்றிய பிரளயத்துக்குப் பிற்பட்டதான இந்த வராக கல்பப் படைப்பைப் பற்றியும் எனக்கு விளக்க வேண்டுகிறேன் என்று மைத்ரேயர் கேட்டார். பராசர மகரிஷி கூறலானார். மைத்ரேயரே! பிரஜாபதிகளுக்கு அதிபதியாய், நாராயணத்துமகனாய், தேவ தேவனுமான அந்தப் பிரமரூபியான பகவான், பிரஜைகளைப் படைத்த விதத்தைக் கூறுகிறேன். முன்பு சொன்னது போல சதுர்யுக சஹஸ்ர சங்கையான இரவெல்லாம் யோக நித்திரை செய்து, விடியற்காலத்தில் நித்திரை தெளிந்து பிரபோதம் அடைந்து, சத்வகுணம் மேலிட்டவனாகிய சதுர்முகப் பிரமன், சூனியமான மூன்று உலகங்களையும் படைக்கத் திருவுள்ளம் கொண்டான் பராத்பரனும் ஷட்குண சம்பன்னனும் அனாதியும் சர்வ ஜகத்காரண பூதனும் சதுர்முக ஸ்வரூபனுமான அந்த ஸ்ரீமந்நாராயண மூர்த்தியே சகல லோகங்களுக்கும் பிரபு ஆவார். படைப்புக் காலத்தில் அவரே பிரமாவினிடத்தில் அனுப்பிரவேசித்துப் படைப்பைப் படைக்கின்றார்.

அவர், மகாஜலத்திலே சயனித்திருந்தார் அல்லவா? அதனால் மநுவாதி ரிஷிகள், நாராயண சப்த நிர்வசனத்தை தெரிவிக்கிற சுலோகத்தை அருளிச் செய்தார்கள். நரசப்த வாச்சியனனான பரமாத்மாவினிடத்தில் ஜனித்த உதகங்கள் நாரங்கள் என்று சொல்லப்படும். ஏனென்றால் அவை நாராயணருக்குப் பிறப்பிடமான படியினாலும் அவரிடமிருந்து அவை தோன்றியதாலும், அவை பிரம்மனின் முதலாவது சயனத்தில் நிகழ்ந்ததாலும் அவர் நாராயணன் என்று வழக்கப்பட்டார். இத்தகைய திவ்வியத் திருநாமமுடைய எம்பெருமான் நீர் மீது தாமரை இலை ஒன்று மிதக்க கண்டு, ஏகார்ணவமான பிரளயயோகத்தில் பூமியானது மூழ்கியுள்ளதாக முடிவு செய்து, அதனை மேலேயெடுக்க முந்தைய கல்பங்களின் மஸ்ய, கூர்மாதி திவ்விய அவதாரங்களைச் செய்தருளியது போல; இந்தக் கல்பத்தில் ஸ்ரீவராகவதாரம் எடுக்க விழைந்தார். அத்தகைய திருவவதாரத்தை, வேதங்களால் சொல்லப்பட்ட யாகாதிகர்மங்களால் நிரூபிக்கத் தக்கதாகவும், சர்வலோக ரக்ஷணர்த்தமாகவும் தாம் மேற்கொண்டு, ஜனக ஸனந்தனாதி யோகிகளால் வேதவசனங்களால் துதிக்கப் பெற்று, தமக்குத் தாமே ஆதாரமாகி, ஏகார்ணவ பிரளயோதகத்தில் பிரவேசித்தருளினார். இவ்விதமாகப் பூமியாகிய தன்னை உத்தரிப்பதற்காகப் பாதாளத்திற்கு எழுந்தருளிய எம்பெருமானை. பூதேவியானவள் வணங்கி பக்திபூர்வமாகத் துதிப்பாளாயினள்.

பூதேவியின் துதி : தாமரை போன்ற திருவிழிகளையுடையவனே! சங்குசக்கரகதாதி திவ்விய ஆயுதமுள்ளவனே! உனக்குத் தெண்டன் சமர்ப்பிக்கிறேன். பூர்வத்தில் மகார்ணவத்தில் மூழ்கிக் கிடந்த என்னை நீயே உத்தரித்தாய்; இப்போதும் அது போன்றே என்னை உத்தரித்தருள வேண்டும். ஜனார்த்தனா! உன் மகத்தகங்கார தன்மாத்திரைகளும் பிரகிருதியும், சீவனும் யாவுமே உனது திருச்சரீரமல்லவோ! ÷க்ஷத்திரக்கிய சொரூபனும் பரமாத்மாவும் சமஸ்த ஜகத் வியாபகனுமான உனக்கு நமஸ்காரம்! அவ்வியக்தமான பிரபஞ்சமும் காலமும் சொரூபமாகவுடைய உனக்கு நமஸ்காரம்! பிரம ரூப, ஸ்வயரூப, ருத்திர ரூபமும் தரித்து சர்வ பூதங்களுக்கும் சிருஷ்டிகர்ததாவாகவும் ரக்ஷகனாகாவும் சங்காரகனாகவும் இருந்து கல்பாந்த காலத்தில் சகல பூதங்களையும் கிரகித்து மூன்று லோகங்களையும் தண்ணீரானது பொங்கி அமிழ்த்தும் படிச்செய்து, பின்னர் அந்த மகா பிரளயத்திலேயே சயனம் செய்து, பரமயோகிகளாலே கோவிந்தா என்று தியானிக்கப்படுபவனும், நீயே அன்றே! பரமாத்பனும் திவ்வியனுமான உனது நிஜஸ்வரூபத்தை எவரே அறிவர்? நீ ஜகத்தை ரக்ஷிப்பதற்காக, லீலார்த்தமாகத் தரித்த உனது அவதாரங்களை யன்றே தேவர்களும் ஆராதிக்கிறார்கள்? மோட்சத்தை விரும்பும் மாமுனிவர்களும் பரப்பிரமமான உன்னையே ஆராதித்து முத்தராய் பரமானந்தத்தை அடைகின்றனர். யாவற்றுக்கும் ஆதாரமும் ஆதேயமும், தாரகனும் பிரகாசகனுமாகையால் ஸ்ரீவாசுதேவன் என்கின்ற திருநாமம் கொண்ட உன்னை ஆராதிக்காமல் எவன் தான் முக்தியடைவான்? மனத்தால் கிரகிக்கப்பகிற சுகம் முதலானதும், கண் முதலிய இந்திரியங்களாலே கிரகிக்கத்தக்க ரூபாதிகளும் புத்தியினாலே பரிசோதிக்கும்படியான பிரமாணந்தரங்களும் உனது சொரூபங்களன்றே?

தேவதேவா! உன்னிடத்திலே பிறந்து, உன்னையே ஆஸ்ரயித்து, உனது சரீர பூதையாய் உன்னிடத்திலேயே நிலைத்திருப்பவளாகையால் உலகங்கள் யாவும் என்னை மாதவி என்று சொல்லும்; சகல ஞான சொரூபனே! நீ ஜெயசாலியாகக் கடவை! ஸ்தூலப் பிரபஞ்ச ஸ்வரூபனே! நீ வாழ்க! அவ்யயனே! அளவில்லாதவனாகையனாலே அனந்தன் என்ற திருநாமமுடையவனே! வியக்த பூதாதி சொரூபனே; அவ்வியக்த ரூபனே! உத்கிருஷ்டங்களுக்கும் நிசருஷ்டங்களுக்கும் ஆன்மாவானவனே! விசுவாத்மகனே! யக்கியங்களுக்கு அதிபதியே! நீ வாழ்க! யக்யங்களும் வஷட்காரமும் நீயே! பிரணவமும் திரேதாக்கினிகளும் நீயே! சதுர்வேதங்களும் நீ! யக்ஞத்திற்கு உரிய புருஷனும் நீ! ஓ! புரு÷ஷாத்தமா; சூரிய சந்திராதி கிரகங்களும், அசுவினியாதி நட்சத்திரங்களும் மூர்த்தமான திரவியங்களும், மூர்த்தமல்லாதவைகளும் காணப்படுபவைகளும், காணப்படாதவைகளும் நான் சொன்னவைகளும், சொல்லாதவைகளும் சமஸ்தமும் நீயே! சகலமான தேவதைகளுக்கும் மேலான ஸ்வாமி! இப்படி யாவற்றுக்கும் ஆத்மபூதனான உனக்குத் தெண்டன் இடுகிறேன். இவ்விதமாகப் பூமிபிராட்டியானவள் வெகுவாய் ஸ்துதி செய்தாள். அந்தப் பூமியைத் தரிப்பவனான ஸ்ரீயப்பதியானவன் வராக ரூபத்திற்கு அநுகுணமான சாம வேதமயமான இர்குர் என்ற சப்தத்தினாலே பூமிப்பிராட்டியார் செய்த தோத்திரத்திற்குத் திருவுள்ளம் உகந்ததைக் காட்டியருளினான். பிறகு மலர்ந்த செந்தாமரை மலரை ஒத்த திருக்கண்களையுடையவனும் கருநெய்தற் பூவையொத்து விளங்கும் திருமேனியுடையவனுமான மகா வராக ரூபமுடைய ஸ்ரீமந் நாராயணன், தனது கொம்பு நுனியினாலே பூமியை உயர எடுத்து மகா நீலமலைபோல பாதாளத்திலிருந்து எழுந்தருளினான். இவ்விதம் தோன்றிய ஸ்ரீயக்கிய வராக மூர்த்தியின் மூச்சுக்காற்று வேகத்தால் எழும்பிய வியர்வை ஜலமானது ஜனலோகம் வரைப் பாய்ந்து, அங்கு பகவத் தியானஞ்செய்து கொண்டு மிகவும் தூயவராயிருக்கும் ஜனக சனந்தருடைய தேகங்களிற்பட்டு, அவர்களை மேலும் தூயவராக்கியது.

அதே சமயத்தில், வராக மூர்த்தியாரின் குளம்புகளால் தாக்கப்பட்ட அந்த ஜலமானமானது அண்ட கடாகத்தினுள்ளே பாதாளத்துக்கு வெகு இரைச்சலுடன் இறங்கிற்று. அந்த மஹா வராஹமூர்த்தியினுடைய சுவாச நிசுவாச வேகத்தால் பூலோகவாசிகளான ஜனங்கள் தள்ளப்பட்டு, ஒதுங்கலாயினார்கள். இவ்வாறு பிரளயார்ணவோதகத்தினால் நனைந்த திருவுதரத்தோடு, தனது கோட்டுமுனையில் பூமியை எடுத்துக் கொண்டு, ரசாதல லோகத்திலிருந்து எழுந்தருளினார். அவர் தமது திவ்வியத் திருமேனியை உதறியருளுமளவில், அந்த வராக மூர்த்தியினுடைய ரோம கூபங்களின் நடுவே நின்று காணப்பட்ட ஜனக ஸனந்தன ஸ்னந்குமாராதியான யோகிகள் ஆனந்தம் மிகுந்து பக்தியுடன் வணங்கித் துதி செய்தருளினார்கள். பிரமன் முதலான லோக ஈஸ்வரருக்கெல்லாம் மேலான ஈசுவரனே! சங்கு சக்கரம், கதை வாள் வில் என்ற பஞ்சாயுதங்களைத் தரித்தவனே! முத்தொழில்களுக்கும் கர்த்தாவும் ஆள்பவனும் நீயே ஸ்வாமி! வேதங்கள் உன்னுடைய சரண கமலங்களில் இருக்கின்றன. யூபஸ்தம்பங்கள் உன்னுடைய கோரைப்பற்கள் யக்கியங்களெல்லாம் உன்னுடைய தந்தங்கள் நானாவிதமான வேதிகைஸ்தான சயனம் எல்லாம் உனது திருமுகத்திலிருக்கின்றன. அக்கினியே உனது நாக்கு! உன்னுடைய ரோமங்கள் தருப்பைப் புற்கள்; ஆகையால் யக்கிய ரூபமாய் யக்கியத்தினால் ஆராதிக்கப்படும் புருஷன் நீயே இரவும் பகலும் உனது திருக்கண்கள் சகல வேதங்களுக்கும் ஆதியான பிரணவமே உனது சிரசு புருஷ சூக்தம் முதலான சூக்தங்கள். எல்லாம் உன்னுடைய பிடரியின் ரோமங்கள் சாமவேதமே உன்னுடைய கம்பீரமான நாதம் பிராக் வம்சமென்கிற அக்கினி சாலையின் முன்புறமானது உன்னுடைய திருமேனி! இப்படியாக மூர்த்தியாய், அனாதியாயுள்ள ஷட்குண ஐசுவரியை சம்பன்னனான எம்பெருமானே! உன் திருவடிவைப்பினாலே பூமியை ஆக்கிரமித்து பதம் கிரமம் என்ற ஏற்பாடுகளுடன்கூடிய அளவற்றதாய், ஆதியில் நின்ற சப்த பிரமமும் நீயே! அக்ஷர சொரூபியாயும் அழியும் தன்மையற்றவனாயும் சகல சொரூபியாயுமிருக்கிற ஸ்வாமி! சராசர மயமான உலகங்களுக்கு எல்லாம் நீயே ஒப்பில்லாத ஈஸ்வரன்! தம்தம் விருப்பங்களைப் பிரார்த்திக்கத் தக்கவனாக நீயே இருக்கின்றாய் என்பதை நாங்கள் அறிந்தோம். ஆகையால் உன்னையே பிரார்த்திக்கின்றோம். கிருபை செய்ய வேண்டும். திவ்வியமான உனது கோரைப் பல்லின் நுனியிலே காணப்படுகின்ற இந்த சமஸ்த பூமண்டலமானது தாமரைத் தடாகத்திலே பிரவேசித்து விளையாடிய மதயானையானது தனது கொம்பிலே, சேறுடன் கூடிய தாமரையைத் தூக்கிவந்தால் எப்படிக் காணப்படுமோ, அப்படித் தோற்றமளிக்கிறது.

ஒப்பற்ற மகிமையுடையவனே, ஓ ஜகந்நாதா! உண்மையான பொருள் நீ ஒருவனேயன்றி வேறொன்றுமில்லை. எப்படியெனில், சராசர மயமான சகலமும் உன்னால் வியாபிக்கப்பட்டு உனது திருமேனியாக இருப்பதனால், இவையாவுமே உனது மகிமையாகும். நீயே பரமார்த்தமாகிறாய். உலகத்துக்குக் காரண பூதனாய், உள்ளும் புறமும் வியாபித்திருக்கிற உன் மகிமை சொல்லாத முடியாததன்றே! சத்து, அசத்து என்னும் விவேகம் இல்லாத அஞ்ஞானிகள், உன்னுடைய சரீரமான பிரபஞ்சத்தைப் பிராந்தி ஞானத்தால் வேறான தேவமனுஷ்யாதி ரூபமாக நினைக்கிறார்கள். புத்தியீனர்களான ஜனங்கள் ஞானமயமான தமது நிஜ சொரூபங்களை அறியாமல், தான் அமரன் என்றும் தான் மனுஷியன் என்றும் இது மிருகம், இது தாவரம் என்றும் பிராந்தி வசத்தினாலே நினைத்து மோகார்வணத்தில் மூழ்கியிருக்கிறார்கள். ஆத்ம சொரூபத்தை எவர் ஞானசாரமாக அறிந்து பகவானை அனுபவிக்கத்தக்க யோக நிலைக்குத்தக்கதான பரிசுத்த மனமுடையவர்களோ, அவர்கள் பிரகிருதிவிகாரமான தேவ மனுஷ்யாகி ரூபமாகக் காணப்படுகிற இந்தப் பிரபஞ்சத்தையே ஞான குணமுள்ள ஆன்ம சொரூபமாகவும் உனது திருமேனியாகவும் காண்கிறீர்கள்; யாவற்றிலும் அந்தர்மியாக இருக்கும் ஸ்வாமி! சகல உலகங்களுக்கு இருப்பிடமாக இருப்பவனே! அறியக்கூடாத மகிமையை உடையவனே! சேவிப்பவர்களின் இதயம் குளிரத் தகுந்ததான செந்தாமரைமலர் போன்ற திருக்கண்களையுடையவனே! இந்தப் பூமியை உத்தரித்து அடியேங்களுக்கு சுகத்தினைக் கொடுத்து அருள் செய்ய வேண்டும். கோவிந்தா! நீ உலக உபகாரத்திற்காகவன்றே சிருஷ்டியில் பிரவேசிக்கிறாய் உனக்குத் தெண்டன் சமர்ப்பிக்கிறோம். அடியேங்களுக்குச் சுகம் அருள்வாயாக! என்று ஜகன சனந்தனர் முதலிய யோகிகள் துதித்தார்கள். இப்போது ஸ்ரீவராக ரூபமுடைய பரமாத்மாவானவன் மகார்ணவத்திலிருந்து பூமியை எடுத்து பழையபடியே ஜலத்தின் மீது நிறுத்தி அருள்புரிந்தான்.

இவ்விதம், அந்தப் பெருவெள்ளத்தின் மேல் நிருமிக்கப்பட்ட பூமியானது, கப்பல்போல உருக்குவிந்து பரந்ததாகையாலே அது அந்த மகார்ணவ ஜலத்தில் மிதந்ததேயல்லாமல் மூழ்கவில்லை. பிறகு, சர்வகாரணனும் அனாதியுமான ஸ்ரீஹரிபகவான், பூதேவி பிரார்த்தித்தவண்ணம் அந்தப் பூமியில் தன்னுடைய சங்கல்பமாத்திரத்தாலே, முன்பு எரிந்து போன பர்வதம் முதலியவற்றையெல்லாம், மீண்டும் முன்போலவே படைத்து அருளினான். இவ்விதமான ஸ்ரீமந் நாராயணன், ரஜோ குணப்பிரமமாய், ஏழு தீவுகளாக இருக்கிற பூமியின் பகுதிகளையும் மற்றும் புவர்லோகம் முதலிய உலகங்களையும் மீண்டும் படைத்தருளினான். எம்பெருமான் சிருஷ்டிக்கு, நிமித்தம் மட்டுமேயாகிறான். அவனால் படைக்கப்படும் வஸ்துக்களுடைய சக்திகளே முக்கிய சக்திகளாகின்றன. மைத்ரேயரே! எம்பெருமான் நடுநிலைமையானவன், நிமித்த காரணன் ஆகையால் இப்படிஅவன் படைப்பதனால், அவனுக்கு வைஷம்மியமும் நிர்த்தயத்துவமும் இல்லை. உயிரினங்கள் அனாதி கர்மவசத்தினாலே பூர்வ கர்மானுரூபமாக நானாவித கர்ம மார்க்கங்களிலே சஞ்சரித்துக் கொண்டிருக்கின்றன. சர்வ சமநிலையாளனும் சாட்சிபூபதனுமான பரம புருஷனைத் தவிர பிரபஞ்சத்துக்கு வேறொரு காரணமுமில்லை. சீவாத்துமாக்களுடைய அனாதி சர்மவாசனா சக்தியினாலே, நல்ல பிறவிகளும் கெட்ட பிறவிகளுமாய் அந்தந்த வஸ்துகள் மாறிவிடும். ஆகையால் தான் ஸ்ரீயப்பதி முக்கிய காரணமாக இருந்தாலும் சேதனர்களுடைய கர்மங்களைக் கொண்டே சிருஷ்டி நானாவிதம் ஆகவேண்டியிருப்பதால், அவை பிரதானமாக உபசார வழக்கை முன்னிட்டு சொல்லப்பட்டன என்று அறிவீராக!

5. தேவ மனிதப் படைப்புகள்

ஓ குருநாதரே! ஆதிகாலத்தில் தேவதைகள், ரிஷிகள், பிதுர்க்கள், அசுரர், மனிதர் முதலானவர்களையும் மிருகங்களையும், பறவைகளையும், மற்றுள்ள தாவரங்களையும் பூசரங்களையும் கேசரங்களையும் நீர்வாழும் உயிரினங்களையும் பிரம்மதேவர் எப்படிப் படைத்தார்? அவைகளுக்குக் குணங்களும் சுபாவங்களும் ரூபங்களும் யாவை? இந்த விஷயங்களையெல்லாம் விஸ்தாரமாக அடியேனுக்கு கூறியருள வேண்டும்! என்று மைத்ரேயர் கேட்டார். பராசரர் கூறலானார். மைத்ரேயரே; அந்தப் பிரமதேவன் பிரபஞ்ச சிருஷ்டி செய்ய நினைத்துக் கொண்டிருக்கும்போது சர்வ நியாமகனான நாராயணனால் ஏவப்பட்ட நினையாத நினைவினாலே தாமச குணப் பிரதானமான சிருஷ்டியொன்று உண்டாயிற்று. அது தமஸ் மோகம், மகாமோகம், தாமிஸ்ரம், அந்ததாமிஸ்ரம் என்று சொல்லப்பட்ட பேதங்களினாலே ஐந்துவிதமாக, விருட்சங்களும், புதர்களும், கொடிகளும், பூண்டுகளும் புல்லுகளுமென ஐவகையான தாவரப்படைப்பாக இருந்தது. அது சுத்த தாமச படைப்பாகையால்; தண்ணீர் முதலானவைகளைக் கிரகிப்பது முளைப்பது, செழிப்பது முதலிய காரியங்களுக்கு ஏற்ற அற்ப அறிவுள்ளவனேயன்றி தன்னை இப்படிப்பட்டதென்று அறிவதும் சப்தாதி விஷயங்களையும், சுகதுக்கங்களையும் அறிவதுமாகிய அறிவற்றதாக இருக்கும். பிரமன்; அவற்றைப் பார்த்து, தமோகுணப் பிரசுரமான இந்தத் தாவரங்கள் முன்னே பிறந்தன என்றனன், ஆகையால் தாவரங்களே முக்கிய படைப்பாயின சதுர்முகப் பிரமனே, இந்தத் தாவரங்கள் லோகவியாபாரத்திற்குரிய ஆற்றல் அற்றவை; ஆகையால், இவற்றில் பயன் இல்லையே என்று சிந்தித்துக் கொண்டிருந்தான். அப்போது பிரமனின் பாரிசபாகங்களிலிருந்து மிருகங்கள் முதலிய திரியக்குசாதிகள் பிறந்தன. அவை பக்கங்களின் குறுக்காகப் பிறந்தனவாகையால் திரியக்குகள் என்று சொல்லப்பட்டன. அவையும் விவேமில்லாதவைகளாய், ஞான சூன்யமாகவும், ஒழுக்கமற்ற நடத்தையுடனும் தாயைச் சேர்தல் முதலிய அக்கிரமச் செயல்களுடனும் தமது ஞானம் என்ற நினைப்புடனும் தேகத்தையே ஆன்மாவாக எண்ணிக்கொண்டும் அகங்கார மயமாய், இருபத்தெட்டு வகையினவாய் சுகதுக்கங்களை மட்டுமே தெரிந்தவைகளாய், தகப்பன், தாய், அண்ணன், தம்பி என்ற சம்பந்தமெதையும் அறியாதனவாய் இருந்தன.

அதைக்கண்ட சிருஷ்டி கர்த்தாவான பிரமன்; ஆகா! ஈனமான இந்தத் திரியக்கு சாதிகளாலும் பயன் எதுவுமில்லை. ஆகையால் சிறப்புடைய சிருஷ்டியைச் செய்யவேண்டும் என்று சிந்தனை செய்யலானான்; அப்பொழுது மூன்றாவது படைப்பு தோன்றலாயிற்று. பிரமனின் சரீரத்தின் ஊர்த்துவ பாகத்திலிருந்து சத்வகுணப் பிரதானராயும் சுகானுபவமும் ஆனந்தமும் மிகுந்தவராயும் ஆன்ம ஞானமும் விவேகமும் உள்ளவராயும்; நித்திய சந்தோஷமுடையவர்களான தேவதைகள் உதித்தார்கள். அவர்கள் ஊர்த்துவஸ்தானத்திலிருந்து பிறந்ததால், ஊர்த்துவ சுரோதசுகள் என்ற பெயரைப் பெற்று; பூமியைத் தீண்டாதவர்களாக இருந்தனர். பிரமன்! இந்த வகையாகத் தமது மூன்றாவது படைப்பில்; சத்துவகுணப் பிரதானராகப் பிறந்த தேவர்களைக் கண்டு மகிழ்ந்தார். ஆயினும் கர்மசாதகம் ஏற்படாததால், தேவர்களின் படைப்பினாலேயும் பயனில்லை என்று பிரமன் நினைத்து லோகசாதகமான வேறொரு சிருஷ்டியை உண்டாக்க வேண்டும் என்று சிந்தித்துக் கொண்டிருந்தார். அப்போது, சத்திய சங்கல்பனான அவருடைய மத்யப் பகுதியிலிருந்து, பூமியை நோக்கிய சிருஷ்டி ஒன்று உண்டாயிற்று. அதில் தான் மனிதர்கள் பிறந்தார்கள். அவர்கள் பிரமனின் மத்திய தேகத்திலிருந்து தோன்றியதால் மத்திய லோகத்தில் வாசஞ்செய்யத் தக்கவர்களானார்கள் அவர்கள் ஒரு காலத்தில் சாக்துவிக குணாதிக்கமும், ஒரு காலத்தில் ராஜசகுணோ திரேகமும் ஒரு காலத்தில் தாமச குணம் கொண்டவர்களாய் துக்கத்துக்கு உட்பட்டவர்களாய் உணவு உட்கொள்ளல் முதலிய காரியங்களையே மீண்டும் மீண்டும் செய்து கொண்டு, ஆத்தும, மன, புத்தி; இந்திரியாதி விவேகங்களும் புறத்துள்ள வஸ்துக்களின் ஞானங்களையும் கொண்டவர்களாய், உலகியல் செயல்களைச் செய்யாதவராய் இருந்தார்கள். இவர்கள் அர்வாக் சுரோதஸுகள் என்று வழங்கப்படுகிறார்கள்.

அதன் பிறகு; அம்புஜாசனனான பிரமன், தாவர ஜாதிகளுக்கும் மிருக ஜாதிகளுக்கும் தேவதைகளுக்கும் மனிதர்களுக்கும் அவித்தை, அசக்தி, சந்துஷ்டி, சித்தி என்ற நான்கு வகை குணச்சிறப்புகளை உண்டாக்கினான். இது தாமசமாயும் சாத்வீகமாயும் இருந்ததால் அனுக்கிரக சிஷ்டியென்று சொல்லப்படும். அப்பால் சனக, சனந்தன, சனத்குமார ருத்திராதிகளையும் பிரமன் படைத்தார். இது கவுமார சிருஷ்டி என்று சொல்லப்படும். மைத்ரேயரே! இவ்விதம் தாவரப்படைப்பு, திரியக்குப் படைப்பு, தேவப் படைப்பு, மனிதப் படைப்பு அனுக்கிரகப் படைப்பு, கவுமாரப் படைப்பு என்ற ஆறுவிதமான படைப்பு சிறப்புகளைக் கூறினேன். இந்தப் படைப்புகள் ஒன்பது வகை என்றும் சொல்லப்படும். அதாவது முன்பே கூறிய மகத்தத்துவப் படைப்பும், ஏகாதச இந்திரியங்களுக்குக் காரணமான சத்துவ, ராஜச தமோ குணத்துமகமான அகங்காரப் படைப்பும், அதற்கப்பால் ஆகாசாதி பஞ்ச மகாபூத காரணங்களான தன்மாத்திரைகளின் படைப்பும் ஆகிய அந்த மூன்றும் சமஷ்டி சிவ ஸ்வரூபனான இரண்யகர்ப்பனுடைய சங்கல்பமில்லாமல் தோன்றியிருந்ததனால் அது பிராகிருதப் படைப்பு என்று சொல்லப்படும். ஆயினும் அதையும் அவனால் உண்டான படைப்பு என்று சொல்லப்படும். ஆயினும் அதையும் அவனால் உண்டான படைப்பு என்றே சொல்லலாம். எப்படியென்றால், நித்திரையிலிருக்கும் என்னுடைய இச்சையில்லாமலேயே சுவாச நிவாசங்களும் நித்திரையும் பிறந்திருக்க, அவற்றுக்கு அவனையே கர்த்தாவாக வழங்குவதைப் போல், மகத்தகங்கார தன்மாத்திரைகள் சதுர்முகனுக்கும் முன்னமே சம்பவித்தவைகளாகையினால், இரண்யகர்ப்பனுடைய கர்ம விசேஷத்தினால் உண்டானதாக, அதுவும் அவனுடைய செயலாகவே சொல்லப்படும். முன்னே சொன்ன பிராகிருத சிருஷ்டி மூன்று ஒழிய; நான்காவதான தாவர சிருஷ்டியும் ஐந்தாவதான திரியக்கு சிருஷ்டியும், ஆறாவதான தேவசிருஷ்டியும் ஏழாவதான மனிதப்படைப்பும்; எட்டாவதான அவித்தை முதலான அனுக்கிரகப்படைப்பும் ஆகிய படைப்புகள் ஐந்தும் பிரம்மாவின் விகிருதியினால் உண்டானதால் வைகிருதங்கள் என்று சொல்லப்படும் ஒன்பதாவது படைப்பாகிய கவுமாரம்; பிராகிருதம் வைகிருதாத்துமகமாக இருக்கும். இப்படி இரணியகர்ப்பனாலே உண்டாக்கப்பட்ட ஜகத்துக்கு மூலங்களான ஒன்பதுவித படைப்பையும் சொன்னேன் இனி இந்தப் படைப்புகளின் விஷயமாக நீங்கள் என்ன கேட்க விரும்புகிறீர்கள்? இவ்வாறு பராசர மகரிஷி கூறியதும் மைத்ரேயர் அவரை நோக்கி, முனிவரே! படைப்பு வகைகளைத் தாங்கள் சுருக்கமாகத்தான் சொன்னீர்கள். இதைத் தெளிவாக விளக்க வேண்டும் என்றார். பராசரர் சொல்லத் துவங்கினார்.

மைத்ரேயரே! அனாதி கர்ம வாசனையினால் கட்டுண்டவர்களும் நானாவித கர்ம பயன்களை அனுபவிப்பவர்களான சேதனர்கள் பூர்வ வாசன வசத்தினால்; சங்காரகாலத்தில்; சங்கரிக்கப்பட்டு படைப்புக் காலங்களில் தேவ மனிஷ்யத் திரியிக்கு தாவர ஜன்மங்களாகப் பிறப்பார்கள். சிருஷ்டித் தொழிலிலுள்ள பிதாமகனுடைய இச்சையினால்; அம்பஸ் என்ற பெயரால் வழங்கப்படும் தேவாசுர பிதுர் மனுஷ்ய ஜாதிகள் நான்கும் உண்டாயின அதன் விவரங்களையும் கூறுகிறேன். கமலாசனன் : படைப்புத்தொழில் விஷயமாக ஒரு தேகத்தோடு சிந்தித்திருக்கும்போது; தமோகுண உத்திரேகத்தினால்; அவருடைய இடையின் கீழ்ப்புறத்திலிருந்து அரசர்கள் தோன்றினார்கள் பிறகு அந்த விரிஞ்சன்; தமோகுணத்துமகமான அந்தத்தேகத்தை ஒழித்துவிட; அது இருள் மிகுந்த இரவாயிற்று. பிறகு; அவர் திரும்புவம் பிரஜா சிருஷ்டி செய்ய நினைத்து வேறொரு தேகந்தரித்து; சந்துஷ்ட சிந்தனாக இருக்க; அந்தத்தேவனின் முகத்திலிருந்து சத்துவகுணாதிக்கமுள்ள தேவர் தேவதைகள் ஜனித்தார்கள். பிறகு, அந்தப்பிதாமகன்; அந்த உடலையும் விட்டுவிட்டார். அது சத்துவ குணமயமான பகலாயிற்று. பிறகு அவன் ரஜோகுணாதிசகமான மனிதர்களை படைத்து அந்தத் தேகத்தையும் விட்டுவிட; அது பிரகாசமான பிராதக்கால சந்ததியாயிற்று. அதனால் மனிதர்கள் பிராதச்சந்தியிலேயும் பிதுர்க்கள் சாயஞ்சந்திலேயும் பலவான்களாக இருப்பார்கள்.

மைத்ரேயரே! பகல், இரவு, சாயங்காலம், விடியற்காலம் ஆகிய இந்த நான்கும் பிரமதேவனுக்கு முக்குணங்களோடு கூடிய சரீரங்கள். பிறகு அந்தப் பிரமதேவன் மேலும் சிருஷ்டி செய்வதற்கு தமோகுணாதிக்கமுள்ள மற்றொரு சரீரத்தைத் தரித்தார். உடனே அவருக்குப் பொறுக்கமுடியாத பசியுண்டாயிற்று. அதனால் தீவிரக்கோபம் உண்டாயிற்று. அந்தக் கோபத்தினால் இருட்டிலிருந்து விகாரரூபம் பயங்கரமுமான தாடி மீசைகளுமுள்ள ஒருவிதமான புருஷர்களை பிருமன் படைத்தார். அவர்களில் பசியுற்ற சிலர் ஜக்ஷõம (உண்ணக் கடவேம்) என்றனர். பசியுறாத சிலர் ரக்ஷõம (காக்கக்கடவேம்) என்றனர். இப்படிக் கூறிய அவர்களைப் பார்த்துப் பிரமன் புன்னகை செய்து, பசியைப் பொறுக்கமுடியாமல் ஜக்ஷõம என்று கூறியவரை, யக்ஷராகக் கடவர் என்றும், ரக்ஷõம என்றவர்கள் ராக்ஷசராகக் கடவர் என்றும் அருளிச்செய்தார். இரணியகர்ப்பன் இவ்வாறாகப் பிறந்த யக்ஷரையும் ராக்ஷஸரையும் பார்த்து, மனதில் பிரியமற்று மீண்டும் சிந்திக்கலானார். அப்போது அவரது சிரத்திலிருந்த கேசங்கள் ஈனமாய்க் கழன்று விழுந்து, மறுபடியும் சிரத்தின் மீது ஏறின. இப்படி நகர்ந்து ஏறியதாலே அவை சர்ப்பங்கள் என்றும் அவை ஈனமானதினாலே அகிகள் என்றும் சொல்லப்பட்டன. மீண்டும் பிரமன் கோபாவேசத்தினாலே சிருஷ்டிக்க நினைக்க, கபில நிறத்தோடு கூடி, ரத்தமாமிச ஆகாரங்களுள்ளவைகளான பூதங்கள் அநேகம் உண்டாயின.

பிறகு, தியான பாராயணனாய், விரிஞ்சன் தனது அங்கங்களினின்றும் அந்தக் கணத்திலேயே கந்தருவர்களை உற்பத்தி செய்தார். அவர்கள் சமத்காரமாய்ப் பாடிக்கொண்டிருந்ததால் கந்தர்வர்கள் என்று வழங்கப்பட்டனர். இவ்விதமாகச் சதுர்முகனால் சிருஷ்டிக்கப்பட்ட வஸ்துக்கள் சக்திகளினால் ஏவப்பட்டு, அதனதன் கர்மானுகுணமாய் வெகுவிதமான பூதங்களைப் படைத்து மீண்டும் சுயேச்சையான வயதைக் கண்டு, பாரிசங்களினால் பறவைகளையும், மார்பினால் ஆடுகளையும், முகத்தினால் வெள்ளாடுகளையும், உதரத்தினால் பசுக்களையும், பாதத்தினால் குதிரைகளையும், யானைகளையும், கழுதைகளையும், ஒட்டகங்களையும், கடம்பு மான்களையும் மற்றுமுள்ள மிருகஜாதிகளையும் படைத்தார். மீண்டும் ரோம தபங்களினாலே பலவித உபயோகமுள்ள ஒளஷதாதிகளையும் தானியங்களையும் உண்டாக்கினார். இவ்விதமாய்ப் பிதாமகன் கல்பாதியான கிருதயுகத்தில் ஓஷதிகளையும், பசுக்களையும், பறவைகளையும், மாடுகளும், ஆடுகளும், குதிரைகளும், ஒட்டகங்களும், வெள்ளாõடுகளும், கோவேறு கழுதைகளும் கிராமியங்களால் பசுஜாதிகள் என்று அறிவீராக. சிங்கம், புலி முதலிய துஷ்ட மிருகங்களும், இரு குளம்புள்ள மிருக வகைகளும், யானைகளும், குரங்குகளும், பறவைகளும், சலசரங்களான மச்ச கூர்மாதிகளும் சர்ப்பங்களும் ஆகிய ஏழு ஜாதிகளும் ஆரணிய பசு விசேஷங்கள் என்று அறிவீராக. அதன் பிறகு பிதாமகன் காயத்திரி சந்தமும் இருக்கு வேதமும் திரிவிருத் என்ற ஸ்தோமமும் ரதந்தர சாமமும் அக்கினிஷ்டோமமும் தனது கிழக்கு முகத்தினால் உண்டாக்கினர். யஜுர்வேதமும் திருஷ்டுபு, சந்தமும், பஞ்சதஸ்தோமமும் பிருதச்சாமமும், உத்தியம் என்கிற யாக விசேஷமும், தக்ஷிண முகத்தினால் உண்டாகச் செய்தார். சாம வேதமும் செகதீச்சந்தமும், வைரூப்பியம் என்கின்ற சாம விசேஷமும் அதிராத்திரியாகமும் பச்சிம முகத்தினால் உண்டாக்கினார். அதர்வண வேதமும், ஏகவிம்சஸ்தோமமும், அனுஷடுப் சந்தமும் வைராசம் என்கின்ற சாம விசேஷமும் அப்தோர்யாமம் என்கின்ற யக்கியமும் உத்தரமுகத்தினாலே உண்டாக்கினார். நானாவிதமான உயிரினங்களைப் பலவித அவயங்களினாலே நான்முகப் பிரமன் உண்டாக்கினார். இவ்விதமாகப் பிதாமகன், தேவ அசுர, பிதுர் மனுஷியாதி பூதசாதிகளைச் சிருஷ்டித்துத் திரும்பியும் பிரஜா சிருஷ்டி செய்ய வேண்டும் என்று உற்சாகத்தோடு சங்கல்பித்து, கின்னரர் கந்தர்வர் அப்சரஸுகள், யக்ஷர்கள், ராக்ஷதர், பைசாசர் முதலியவர்களையும் பசு, பட்சி, சர்ப்ப மிருகங்களையும் தாவர சங்கமங்களையும் உண்டாக்கினார்.

இப்படி ஆதிகர்த்தாவும் லோகேசுவரனுமான சதுர்முகப்பிரமன் பலவித பூதஜாதிகளை உண்டாக்கினார். அவை சில குரூர சுபாவங்களும் சில மென்மையான சுபாவங்களும் சில இம்சை செய்பவைகளும், சில இம்சை செய்யாதவைகளும், சில தர்ம சொரூபங்களும், சில அதர்ம சொரூபங்களும், சில சத்திய மயங்களும் சில அசத்திய மயங்களுமாகப் பூர்வப் படைப்பில் எப்படிப்பட்ட கர்மங்களை அடைந்தனவோ அப்படிப்பட்ட கர்மங்களையே இந்தப் படைப்பிலும் அடைந்தன. பிறகு தேக, இந்திரிய மனபுத்திச் சிறப்புகளுக்கும் சப்த ஸ்பரிசாதி, யோக்கிய வஸ்துக்களுக்கும் வேத வசனங்களைக் கொண்டே தேவ, ரிஷி, பிதுர், மனுஷ்ய பட்சி, மிருகாதிகளுக்கு பெயர்களையும், ரூபங்களையும் அறிந்து பெயர்களையும் உருவங்களையும் பிருமன் உண்டாக்கினார். மைத்ரேயரே! இவ்விதமாகவே முனிவர்களுக்கும் வசிஷ்டாதி நாமங்களை நித்தியமான வேத சப்தங்களைக் கொண்டே உண்டாக்கினார். ஏனெனில், வசந்தம் முதலிய ருதுக்காலங்கள் தோறும் அந்தந்தக் காலத்துக்குரிய வாசனை முதலியவை இயல்பாகவே உண்டாவதைப் போல் கிருத திரேதா யுகங்களிலே, அந்தந்த யுகத்திற்கான சிறப்புக்கள் தாமாகவே உற்பவிக்கும். இந்த விதமாகப் பிரம்மா கல்பாதி காலத்தில் எம்பெருமானுடைய சக்தியினாலே; அனுப்பிரவேசித்து தூண்டப்பட்டு பிரபஞ்சங்களை அதனதன் கர்மங்களின்படியே படைத்தான்; இதில் சகல படைப்புகளும் கல்பாதி கிருதயுகத்திலும் யாகாதிகளும் அவற்றின் உபகரணங்களும் திரேதாயுகாதியிலும் படைத்தான். இப்படியே ஒவ்வொரு கல்பத்திலும் படைப்புகள் படைக்கப்பட்டு; சிருஷ்டிகள் நடைபெற்றுவரும்.

6. வருணாசிரமங்கள்

தேவர்கள், மனிதர்கள், மிருகங்கள், பறவைகள் முதலியவற்றின் படைப்புக் கிரமங்களைப் பற்றிப் பராசர முனிவர் கூறியதும் மைத்ரேய முனிவர் அவரை நோக்கி, மகரிஷியே! மனிதர்கள் படைக்கப்பட்டதைப் பற்றி நீங்கள் சுருக்கமாகச் சொன்னீர்கள். இனி அவர்களுடைய குணங்களைப் பற்றியும், வருணாசிரம விவரங்களை பற்றியும், ஆசார வேறுபாடுகளைப் பற்றியும் தெளிவாகத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்! என்றார். அதற்குப் பராசரர் பின்வருமாறு கூறலானார்: பூர்வத்தில் பிரமன் மனிதர்களைப் படைக்க வேண்டும் என்று சிந்தித்தபோது, அவரது முகத்திலிருந்து சத்வகுணமுடையவர்களான பிராமணர்கள் தோன்றினார்கள். அவரது மார்பிலிருந்து ராஜசகுணமுடைய க்ஷத்திரியர்கள் தோன்றினார்கள். தொடைகளிலிருந்து ராஜசகுணமும் தாமஸகுணமும் கலந்தவைசியர்கள் தோன்றினார்கள். பாதங்களிலிருந்து தமோ குணமுடைய சூத்திரர்கள் தோன்றினார்கள். இவ்விதம் பிரமதேவனின் முகம், மார்பு, தொடைகள், பாதங்கள் என்னும் அவயங்களிலிருந்து பிறந்த பிரம்ம, க்ஷத்திரிய, வைசிய, சூத்திரர்களை யாகங்களுக்குரிய செயல்களை செய்யும்படி அவர் நியமித்தார். மைத்ரேயரே! இந்த நால்வகையான மக்களும் யாகங்களுக்கு முக்கியமானவர்கள். யாகங்களால் தேவதைகள் திருப்தியடைந்து, காலாகாலத்தில் மழைபொழிந்து மனிதரைத் திருப்தியுறச் செய்வார்கள். ஆகவே உயர்வுக்கு ஏதுக்களான யாகங்கள் மக்களால் முக்கியமாகச் செய்யத் தக்கவையாகும். வேத சாஸ்திரத்திற்கு விரோதமான ஒழுங்கீனங்களை விட்டு சன்மார்க்கத்தில் நடக்கிற சத்புருஷர்கள் சொர்க்கசுகத்தையும் மோக்ஷõனந்தத்தையும் தம் மனிதப்பிறவியிலேயே அடைவார்கள். இவ்விதமாக இரண்யகர்ப்பனால் படைக்கப்பட்ட நான்கு வர்ண மக்களும், சாஸ்திர விசுவாசத்தினால் சதா சாரமும் விநயமும் அடைந்து, நிர்மலமான இருதயமுடையவராய் சகலவிதமான சத்கருமங்களையும் செய்துகொண்டு காமக்குரோத லோபம் இல்லாமல், நினைத்த இடத்தில் நினைத்தபடி வசித்து, நிர்மலமான இதயத்தில் இறைவனைத் தியானித்துத் தத்துவ ஞானம் பெற்று தெளிந்தவர்களாய் சற்கதியடைந்தார்கள்.

இதுபோல் கிருதயுகத்திலிருந்து திரேதாயுகத்தின் இடைக்காலம் வரை நடந்தது. பிறகு, நாராயணாம்சம் என்று சொல்லப்பட்ட காலவசத்தினாலே, மனிதருடைய சத்துவ புத்தியும் தைரியமும் ஆயுளும் குறையும்படி நேரிட்டது. அதனால் மோகமும் லோபமும் மேலிட்டன. அதருமம் மிகுதியாயிற்று அதனால் மோட்சமார்க்கத்திற்கு விரோதமான ராகத்துவேஷங்கள் பிரபலமாயின. ஆகையால் இயல்பாகவே உண்டாகத்தக்க ஞானமும், தொந்தங்களை வெல்லத்தக்க சக்தியும் மக்களிடம் குறைந்தன முன்பெல்லாம் பெண்கள் முதலியவை இல்லாமலேயே ஆனந்தம் உண்டாவதுண்டு. யோகப் பயிற்சியினால் சிரசிலுள்ள சந்திர மண்டலத்தினின்றும் ஒழுகும் அமிருதத்தினாலே பசியுங்கூட இல்லாமல் இருந்தது. ஒருமுறை மழை பெய்தாலே பயிர்கள் செழுமையாக வளர்ந்தன. நினைத்தபோதே மரங்கள் பலிதமாயின. நினைத்தவை நினைத்தவாறே கைகூடின பரத்வாச முனிவருக்கு நடந்தது. போலவே, கற்பக விருட்சங்கள் வந்து வேண்டியதைக் கொடுத்தன. வேண்டும்போதெல்லாம் மழை பெய்தது. உழுது வருந்தாமல் பூமி விளைந்தது இவ்விதமான எட்டுச் சித்திகளும் நாளடைவில் க்ஷீணித்து பாதகச் செயல்கள் அதிகமாயின.

அதனால் பூமியில் வாழும் மக்கள், ராகத்துவேஷ. லோப, மோகாதி தொந்த துக்கங்களினால் பீடிக்கப்பட்டு, ஒருவரையொருவர் விசுவாசியாமல் மலைப் பிரதேசங்களிலும், தண்ணீர் சூழ்ந்த நிலப்பகுதியிலும் வசித்தார்கள். அங்கு கோட்டைகள், கொத்தளங்கள், அகழிகள் முதலியவற்றை அமைத்தார்கள். நகரங்களையும் வீதிகளையும் வீடுகளையும் கட்டிக்கொண்டார்கள். மழை, காற்று, வெய்யில் இவற்றின் உபத்திரவங்களை நீக்கிக் கொள்வதற்கான உபாயங்களை உண்டாக்கிக் கொண்டார்கள். பிழைப்பிற்காகப் பயிர்த்தொழில்கள், ஆடு மாடுகள் வளர்த்தல் வாணிபம் முதலியவற்றைச் செய்தார்கள். பயிர்த்தொழிலால் விளைந்த சம்பா முதலிய நெல், யவம், கோதுமை, சோளம், கேழ்வரகு, தினை, உளுந்து, பயிறு சிறு கடலை, துவரை, மொச்சை, கொள்ளு, கடலை, சணல் ஆகிய தற்காலிக பயன்களை அனுபவித்தார்கள். இந்தப் பதினேழு வகையான தானியங்களும் கிராமியங்கள் என்று வழங்கப்படும். நெல், யவம், உளுந்து, கோதுமை, சிறுதானியம் என்ற பிரியங்கு, கொள்ளு, சாமை; செந்நெல், காட்டு எள், கெவீது, மூங்கிலரிசி, மற்கடகம் என்ற பதினான்கு விதமான தானியங்களும் கிராமிய ஆரணியங்கள் என்று பெயர் பெற்று யாகங்களுக்குப் பயன்பட்டன. இவை யக்கியங்களுக்கும் பிரஜா அபிவிருத்திக்கும் காரணமாயின. எனவே, அவற்றைக் கொண்டு, பராபரவிவேகமுள்ள ஞானிகள் நாள்தோறும் பாவங்களைப் போக்கதக்க பஞ்ச மகா யாக்கியங்களைச் செய்வார்கள். முனிவரே! தினமும் யாகாதி கர்மங்களைச் செய்வதால், புருஷர்கள் சகலபாவ விமுக்தராய்ப் பரம சுகத்தை அடைவார்கள். ஆதிகாலத்தில் எவருடைய மனமானது கால வசத்தால் பாபதூஷிதமாயிற்றே, அவர்கள் யக்கியாதி நற்கருமங்களில் விசுவாசமில்லாமல் பாதங்களை அபிவிருத்தி செய்து; வேதங்களையும் நற்கருமங்களையும் நிந்திக்கலானார்கள். யாகங்களுக்கு இடையூறுகளைச் செய்தார்கள். தேகத்தைப் போஷிப்பதற்கான செயல்களை மட்டுமே செய்தார்கள். லோக விருத்திக்கு விரோதிகளாய், துராத்மாக்களுமாய்; துராசாரமுடையவர்களுமாய்; குடில் புத்தியை உடையவர்களானார்கள். இது ஒருபுறம் இருக்கட்டும்.

பிரம; க்ஷத்திரிய: வைசிய; சூத்திராதி (நான்கு) வருணங்களையும் நான்கு ஆசிரமங்களையும் இரண்யகர்ப்பன் நிர்மித்து, வர்ணாசிரமத்திற்கு உரிய மரியாதைகளையும் ஏற்படுத்தி; அவரவரது தாரதம்மானு குணமாகப் புண்ணிய லோகங்களையும் ஏற்படுத்தினார். ஸ்வதர்ம அனுஷ்டான பராயணரான பிராமணர்களுக்குப் பிரஜாபத்திய லோகத்தையும், போரில் புறங்கொடாத க்ஷத்திரியர்களுக்கு; இந்திரலோகத்தையும், ஸ்வதர்ம நிரதரான வைசியருக்கு மருத்துக்களின் லோகத்தையும்; பணிவிடைக்காரரான சூத்திரர்களுக்கு கந்தர்வலோகத்தையும், குரு பணிவிடை செய்வதில் ஊக்கமுடைய பிரம்மச்சாரிகளுக்கு ஊர்த்தரே தஸரான எண்பத் தெண்ணாயிரம் யதீச்சுவர்கள் வாசம் செய்யும் திவ்விய லோகத்தையும்? வானப்பிரஸ்தருக்கு சப்தரிஷி லோகத்தையும், கிரகஸ்தருக்குப் பிரஜாபத்திய லோகத்தையும்; சந்நியாசிகளுக்குப் பிரமலோகத்தையும் தோற்றுவிக்க சங்கல்பம் செய்தார். இவையாவும் கர்ம மார்க்கத்தினால் உண்டான புண்ணிய லோகங்களாகும். இனி ஞானியருக்குக் கிடைக்கும் உலகங்களைச் சொல்கிறேன்; கேளுங்கள். ஆத்மத் தியானிகளான யோகீசுரர்களுக்கு அமிர்தஸ்நானம் உண்டாம். (அமிர்த ஸ்நானம் என்பது துருவலோகத்துக்கு மேலே; கங்கை தோன்றும் இடம்.) தினமும் யோகப்பயிற்சிகளைச் செய்தும்; பிரமத் தியானத்தை செய்து கொண்டும் இருக்கிற மகாத்மாக்களுக்கெல்லாம்; நித்திய சூரிகளாலே காணப்பட்ட பரமபதம் உண்டாகும்.

புதன், 31 ஜூலை, 2019

சப்தரிஷிகள்

கச்யபர், அத்ரி, பரத்வாஜர், விஸ்வாமித்திரர், கவுதமர், ஜமதக்னி, வசிஷ்டர் ஆகியோரே சப்த ரிஷிகள்! (மற்றொரு விதமாகவும் சொல்வதுண்டு).

1*கச்யபர்: தேவர் குலம் மற்றும் அசுரர் குலம் இரண்டுமே கச்யபரிடம் இருந்து தோன்றின. அவரில் இருந்து வந்த மனுவிடம் இருந்து தோன்றியதே  மனித குலம்!

2*அத்ரி: இவரிடமிருந்து தோன்றியவன் சந்திரன். தத்தாத்ரேயரும், அத்ரி தம்பதியிடம் இருந்து உருப்பெற்றார். மருத்துவத்தில் சிறந்த ஆத்ரேயரும்  அத்ரியிடம் இருந்து தோன்றியவரே! அத்ரி-அனசூயை தம்பதிபோல் தாம்பத்தியம் சிறக்க வாழ வேண்டும் என்று புதுமணத் தம்பதியை  வாழ்த்துகிறது ரிக்வேதம்.

3*பரத்வாஜர்: இந்த மகரிஷி தமது மூன்று முழு ஆயுளையும் வேதம் பயிலுவதற்குப் பயன்படுத்தியவர். இவரும் மருத்துவ ஆய்வில் சிறந்தவர்  என்கிறது வேதம். இன்றைக்கும் பரத்வாஜ கோத்திரத்தில் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகம்.

4*விஸ்வாமித்திரர்: இந்தப் பெயருக்கு, உலகத்துக்கு உற்ற நண்பன் என்று அர்த்தம். இந்திரனுடன் மோதி, புது உலகைப் படைக்க முயன்றவர் இவர்.  விஸ்வாமித்திர சிருஷ்டி எனச் சிலவற்றைக் குறிப்பிடுவர். சிங்கமும் புலியும் இறைவனின் படைப்புகள். அந்த இனத்துடன் தொடர்பு கொண்ட  நாயும் பூனையும் விஸ்வாமித்திர சிருஷ்டிகள்! நாம் பயன்படுத்தும் தர்ப்பைப் புல்லிலும் விஸ்வாமித்திரம் எனும் பிரிவு உண்டு.

5*கவுதமர்: அகல்யையின் கணவர். இவர் இயற்றிய தர்ம சூத்திரம் இன்றளவும் பேசப்படுகிறது. அறம் காக்க அனைவருக்கும் அறைகூவல் விடுத்து போதித்தவர்.

6*ஜமதக்னி: துஷ்டர்களை அடக்க அவதாரம் இஏற்ற ஸ்ரீமந் நாராயணனுக்கு (ஸ்ரீபரசுராமருக்கு) தகப்பனாக இருந்து அறம் காத்தவர்.

7*வசிஷ்டர்: இவரின் ஆன்மிகத் தகவல்கள் இன்றும் பயனுள்ளவையாகப் போற்றப்படுகின்றன. அருந்ததியின் கணவர் இவர். இருவரும் ஆதர்ச  தம்பதி. இவரிடம் பாராட்டு பெறுவது கடினம். மிகச் சிறந்ததையே இவர் பாராட்டுவார். எனவேதான், வசிஷ்டர் வாயால் பிரும்மரிஷி என்னும்  சொல்வழக்கு உருவானது. பெண்மைக்கு உயர்வளித்துப் போற்றுபவர்கள் இவர்கள். இவர்களை பெண்ணினம் வழிபடும் நாளே ரிஷி பஞ்சமி!  ஆவணி மாத வளர்பிறை  5-ம் நாளில் இவர்களை வழிபட, மறுபிறவியே இல்லாத பேரின்ப நிலையில் இணைவார்கள் என்கிறது புராணம்.


நமது சனாதன தர்மம் வளர்ந்து வரும் விஞ்ஞானத் துறைகளுள் ஒன்று மொழியியல் துறை!

நாளுக்கு நாள் வளர்ந்து வரும் இந்தத் துறை புதுப் புதுக் கண்டுபிடிப்புகளை உலகினருக்கு அறிவித்து வருகிறது. இந்தக் கண்டுபிடிப்புகளுள் ஒன்று சம்ஸ்கிருத மொழியின் அதிசயம்!

கடவுளரின் மொழி என்றும் தேவ நாகரி என்றும் அழைக்கப்படும் சம்ஸ்கிருதம் என்றால் சம்பூர்ணமான மொழி – perfect language – என்று பொருள்!ஒலி அதிர்வுகளின் மகிமையை உள்ளுணர்வாலும் தவத்தாலும் அறிந்த மகரிஷிகள் ஒலி ஆற்றலைப் பயன்படுத்த சம்ஸ்கிருதமே சிறந்த கருவி என்று கண்டறிந்தனர். “உண்மையைத் தேர்வோம்” என நினைத்த அவர்கள் பயன்படுத்தியது சம்ஸ்கிருத மந்திரங்களேயாகும்.உலகின் மிகப் பழமையான மொழிகளில் ஒன்று சம்ஸ்கிருதம்!எளிமையானது, தூய்மையானது, கடவுளின் படைப்பின் மகிமையை உணர்த்துவது.ஜோஸப் காம்பெல் சொன்னது போல உலகின் ஆன்மிகக் களஞ்சியத்தைத் தன்னகத்தே கொண்டுள்ளது இது.

அல்பெரூனி வியந்த புராணம்:இந்தியா வந்த அல்பெரூனி இந்தியாவில் சம்ஸ்கிருதத்தில் இருக்கும் புராணங்களைக் கண்டு வியந்து “அதில் எல்லாம் இருக்கிறது” என்று அதிசயித்துக் கூறினான். 18 புராணங்களையும் வரிசையாகக் குறிப்பிட்டுள்ள அவன் தன்னால் மத்ஸ்ய, ஆதித்ய, வாயு புராணங்களின் சில பகுதிகளை மட்டும் பார்க்க முடிந்தது என்று ஆதங்கப்படுகிறான்.

ஐந்து லட்சத்து ஐம்பதினாயிரம் சுலோகங்களில் அனைத்தும் அடக்கம்!

இனி18புராணங்களில் உள்ள ஸ்லோக எண்ணிக்கையைப் பார்க்கலாம்:

பிரம்ம புராணம் சுமார் 13000 ஸ்லோகங்கள்

பத்மம் சுமார் 55000 ஸ்லோகங்கள்

விஷ்ணு -சுமார் 23000 ஸ்லோகங்கள்

சிவ -சுமார் 24000 ஸ்லோகங்கள்

பாகவதம்- சுமார் 18000 ஸ்லோகங்கள்

பவிஷ்யம் -சுமார் 14500 ஸ்லோகங்கள்

மார்க்கண்டேயம் சுமார் 9000 ஸ்லோகங்கள்

ஆக்னேயம்- சுமார் 15000 ஸ்லோகங்கள்

நாரதீயம் – சுமார் 25000 ஸ்லோகங்கள்

பிரம்ம வைவர்த்தம் சுமார் 18000 ஸ்லோகங்கள்

லிங்கம் சுமார் 11000 ஸ்லோகங்கள்

வராஹம் சுமார் 24000 ஸ்லோகங்கள்

ஸ்காந்தம் சுமார் 81000 ஸ்லோகங்கள்

வாமனம் சுமார் 2400 ஸ்லோகங்கள்

கூர்ம சுமார் 5246 ஸ்லோகங்கள்

மத்ஸ்யம் சுமார் 1402 ஸ்லோகங்கள்

காருடம் சுமார் 19000 ஸ்லோகங்கள்

பிரம்மாண்டம் சுமார் 12000 ஸ்லோகங்கள்

ஆக சுமார் 370541 ஸ்லோகங்களுடன் தேவி பாகவதத்தில் உள்ள 18000 ஸ்லோகங்களையும் கணக்கிட்டால் 388548 ஸ்லோகங்கள் ஆகின்றன!
இது தவிர மஹாபாரதம் ஒரு லட்சம் சுலோகங்களாலும் வால்மீகி ராமாயணம் சுமார் 24000 ஸ்லோகங்களாலும் ஆகி இருப்பதை சேர்த்துக் கொண்டால் 512548 ஸ்லோகங்கள் ஆகின்றன.

நமக்குக் கிடைக்கக் கூடிய ஒரு சில பதிப்புகளை வைத்தே இந்த கணக்கீடு உள்ளது என்பதால் அனைத்துப் பதிப்புகளையும் நன்கு ஆராய்ந்தால் சில ஆயிரம் ஸ்லோகங்கள் கூடுதலாகவும் இருக்கலாம். ஆக சுமார் ஐந்து லட்சத்து ஐம்பதினாயிரம் ஸ்லோகங்களில் பிரபஞ்சம் பற்றிய மற்றும் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து அறிவையும்  இவ்வுலக வாழ் நெறிகளையும் மோட்ச வாழ் நெறிகளையும் மோட்ச மார்க்கத்தையும் நம் முன்னோர்கள் சுட்டிக் காட்டி உள்ளனர்.இவற்றில் இல்லாதது வேறெங்கும் இருக்கப் போவதில்லை!நாஸா(National Aeronautics and Space Administration) வியக்கும் சம்ஸ்கிருத மொழி! இப்படிப்பட்ட மொழிக்கும் விஞ்ஞான ஆராய்ச்சிக்கும் என்ன சம்பந்தம்?
எல்லா மொழிகளையும் தன் பயன்பாட்டிற்காக ஆராய்ந்த நாஸா சம்ஸ்கிருதம் ஒன்றே பூமியில் உள்ள ஒரே தெளிவான மொழி என்று கூறுகிறது. விஞ்ஞான ரீதியாகவும் சரியான அமைப்புள்ளதாகவும் உள்ள மொழி இது. நாஸாவைச் சேர்ந்த ரிக் ப்ரிக்ஸ் தனது நீண்ட கட்டுரையில் இதன் பெருமைகள் பற்றி விளக்கமாகக் கூறுகிறார்.இதனுடைய இலக்கணம் பரிபூரணமானது. உலகெங்கும் உள்ள அறிஞர்களைத் தன் வசம் இழுத்துள்ளது.சமீபத்தில் கணிணி விஞ்ஞானிகள் கணிணி பயன்பாட்டிற்கான சிறந்த மொழி சம்ஸ்கிருதமே என்று அறிவித்துள்ளனர்.

வியக்க வைக்கும் மொழி அமைப்பு:1984ம் ஆண்டு ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் – AI- என்ற பத்திரிக்கை மெஷின் ட்ரான்ஸ்லேஷனுக்கு – இயந்திர மொழி பெயர்ப்பிற்கு சம்ஸ்கிருதம் சிறந்த இடை மொழியாக இருக்கிறது என்று அறிவித்தது. அதாவது ஜப்பானிய மொழியை ஆங்கிலத்திற்கு மொழி பெயர்க்க வேண்டுமென்றால் முதலில் ஜப்பானிய மொழியை முதலில் சம்ஸ்கிருதத்திற்கு மொழி பெயர்க்க வேண்டும்; பின்னர் அதை ஆங்கிலத்திற்கு மாற்ற வேண்டும்.இதற்கான காரணம் சம்ஸ்கிருத மொழியின் அமைப்பேயாகும். உதாரணத்திற்கு ஒரே ஒரு எளிமையான எடுத்துக்காட்டு.

லிஸா புஸ்தகம் படிக்கிறாள் என்பதை ஆங்கிலத்தில் எழுதினால்

லிஸா ரீட்ஸ் எ புக் (Lisa reads a book) என்று ஆகும்.இதையே சம்ஸ்கிருதத்தில் கீழே கண்டபடி எப்படி வேண்டுமானாலும் எழுதினாலும் அர்த்தம் மாறுவதில்லை.

லிஸா புஸ்தகம் படதி

புஸ்தகம் லிஸா படதி

புஸ்தகம் படதி லிஸா

படதி புஸ்தகம் லிஸா

படதி லிஸா புஸ்தகம்

லிஸா படதி புஸ்தகம்

ஆறு விதமாக மேலே கண்டபடி எழுதினாலும் அர்த்தம் ஒன்று தான்.
ஆனால் ஆங்கிலத்தில் Lisa reads a book என்பதைA book reads Lisa என்பது அர்த்தத்தை விபரீதம் ஆக்கி விடும். ஒரு புஸ்தகம் லிஸாவைப் படிக்கிறது என்றால் எப்படிப்பட்ட விபரீத அர்த்தம்?

ஆகவே சம்ஸ்கிருதத்தின் இந்த ஒரே அமைப்பே கணிணி மொழிகளில் ஏராளமான நன்மைகளைச் செய்யும் போது அதன் இதர அமைப்பு முறைகள் அதை ஒப்பற்ற மொழியாக ஆக்குகிறது.4000 மூலச் சொற்களில் அனைத்தும் அடக்கம்!லட்சக்கணக்கான சம்ஸ்கிருத சொற்கள் சுமார் 4000 மூலச் சொற்களிலிருந்தே பிறக்கின்றன என்றால் ஆச்சரியமாக இல்லை? இவையும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மூலங்களால் ஆனவை.

மூலத்தின் அர்த்தத்தை உணர்ந்து கொண்டு அதன் அடிப்படை மூலங்களைப் பிரித்தால் வார்த்தையின் அர்த்தம் தானாகத் தெரிய வரும். இதனால் சம்ஸ்கிருத அகராதி 4000 மூலச் சொற்களுக்குள் அடங்கி விடும் அற்புதத்தைக் காணலாம்!

இயந்திரத் தகவல் தொடர்புக்கு பொருத்தமான ஒரு மொழியை விஞ்ஞானிகள் தேட ஆரம்பித்தனர்.ஆங்கிலம் இதற்குப் பொருத்தமானதாக இல்லை என்பதை உணர்ந்த அவர்களின் கவனம் சம்ஸ்கிருதத்தின் பால் திரும்பியது. அதன் அமைப்பை உணர்ந்து அதிசயித்த அவர்கள் அதைப் பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர்.

ஒலி நுட்பம் உணர்ந்த பாணிணி:வார்த்தையையும் அதன் ஒலியையும் ஆராய்ந்த பாணிணி அற்புதமாக சம்ஸ்கிருத இலக்கணத்தைச் செப்பனிட்டு உலகிற்கு ஈந்தார்.

யாக்ஞவல்ய ஸ்மிருதி வார்த்தையை உச்சரிக்கும் விதத்தை வர்ணிக்கும் போது எப்படி ஒரு புலி தன் குட்டியை வாயில் தூக்கிக் கொண்டு போகும் போது அதற்கு வலிக்காத படி அதைத் தூக்கிச் செல்கிறதோ அதே போல வார்த்தையை உச்சரிக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறது!.

இந்த உச்சரிப்பை ஆராய்ந்தவர் டாக்டர் ஹான்ஸ் ஜென்னி.

சம்ஸ்கிருதத்தை நன்கு ஆராய்ந்த அவர் அது ஒரு பெர்•பெக்ட் லாங்வேஜ்- செம்மொழி என அறிவித்தார். அதன் ஒலியை ஆராய்ந்த போது எந்த எழுத்தை உச்சரிக்கிறோமோ அதே போல அதன் வடிவம் வருகிறது என்பதை நிரூபித்தார். அது மட்டுமின்றை சில சொல் சேர்க்கைகள் மண்டல அமைப்புகளைக் காட்டுவதையும் சுட்டிக் காட்டினார்.

உயிருள்ள மொழி:சம்ஸ்கிருதம் இறந்த மொழி அல்ல. கர்நாடகத்தில் ஷிமோகாவிலிருந்து 4 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மாத்தூரில் கிரிக்கட் மைதானத்தில் கூட சிறுவர்கள் சீக்ர தாவே (வேகமாக ஒடு) என்று சம்ஸ்கிருத மொழியில் பேசி விளையாடுவதைப் பார்க்கலாம்.

இங்குள்ள 5000 பேர் பேசுவது தாய் மொழியான சம்ஸ்கிருதத்தில் தான்!

இது மட்டுமின்றி மேலை நாடுகளில் ஏராளமான சம்ஸ்கிருத ஆராய்ச்சி மையங்கள் மூலம் சம்ஸ்கிருதம் பேசப்படுகிறது; பரப்பப் படுகிறது.

இந்நிலையில் மெய்ஞான மொழியான சம்ஸ்கிருதம் கணிணி விஞ்ஞானத்தால் ஆராயப்பட்டு தன் பழம் பெருமையை மீட்டு ஜொலிப்பதைப் பார்க்க ஆரம்பித்து விட்டோம்.

இதைப் பேணிக் காப்பது இதன் சொந்தக்காரர்களான நமது கடமை அல்லவா? இதைப் போற்றுவோம்; காப்போம்!
அருள்மிகு சாரபரமேஸ்வரர் திருக்கோயில்

மூலவர் : சாரபரமேஸ்வரர், செந்நெறியப்பர்
அம்மன்:  ஞானாம்பிகை, ஞானவல்லி
தல விருட்சம் :  மாவிலங்கை
தீர்த்தம் :  மார்க்கண்டேய தீர்த்தம், பிந்து சுதா தீர்த்தம், ஞான தீர்த்தம்
பழமை :2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் :உடையார் கோயில்
ஊர் :திருச்சேறை
மாவட்டம் :  தஞ்சாவூர்
மாநிலம் :  தமிழ்நாடு
பாடியவர்கள் : திருஞானசம்பந்தர், அப்பர்

துடிபடு மிடையுடை மடவரல் உடனொரு பாகமா இடிபடு குரலுடை விடையினர் படமுடை யரவினர் பொடிபடு முருவினர் புலியுரி பொலிதரு மரையினர் செடிபடு சடைமுடி அடிகள்தம் வளநகர் சேறையே.திருஞானசம்பந்தர்;தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களில் இது 95வது தலம்.

விழா : மகா சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், மார்கழி திருவாதிரை  
      
சிறப்பு : இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கடன் நிவர்த்தி செய்யும் ரிண விமோசன லிங்கேஸ்வரர் இங்கு சிறப்பு. இத்தலத்தில் மட்டுமே மூன்று துர்க்கைகள் அமைந்துள்ளன. சிவ துர்க்கை, வைஷ்ணவி துர்க்கை, விஷ்ணு துர்க்கை என மூன்று வடிவங்களாக ஒரே சன்னதியில் காட்சியளிப்பது சிறப்பாகும். இங்குள்ள பைரவருக்கு அப்பர் தனியாக தேவார பாடல் பாடியுள்ளார். மற்றும் இடதுமேல் கரத்தில் சூலம் போட்ட மணியுடன் உள்ளது வேறு எங்கும் இல்லாத தனி சிறப்பாகும். ஆண்டுதோறும் மாசி மாதத்து 13, 14, 15 தேதிகளில் காலையில் இங்கே சூரியனது கிரகணங்கள் இத்தலத்து இறைவன் மீதும், அம்பிகையின் பாதங்களிலும் நேரடியாக படுகின்றன.இங்கு தலவிருட்சமான மாவிலங்கை வருடத்தின் நான்கு மாதங்கள் வெறும் இலைகளாகவும், அடுத்த நான்கு மாதங்கள் வெள்ளை வெளேரென்று பூக்களாகவும், அதற்கடுத்த நான்கு மாதங்கள் பூ, இலை எதுவுமின்றி காணப்படும்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 158 வது தேவாரத்தலம் ஆகும்.  
      
திறக்கும் நேரம் : காலை 7.30 மணி முதல் மதியம் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். அருள் மிகு சாரபரமேஸ்வரர் திருக்கோயில், திருச்சேறை அஞ்சல் 612 605 கும்பகோணம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்.போன்:+91 435-246 8001 


     
தகவல் : வெளிப்பிரகாரத்தில் மூலவர் சாரபரமேஸ்வரருக்கு இடப்பால் இறைவி அம்பிகையாக ஞானவல்லி அம்மன் சன்னதி அமைந்துள்ளது. இறைவன் நெறிப்படுத்திய வாழ்க்கையின் ஞானத்தை அருள்பவர் அவனது துணைவியராக ஸ்ரீ ஞானவல்லி அம்பாள் அமைந்துள்ளதாக புராணச்செய்தி மூலம் அறிய முடிகிறது.  உள்பிரகாரத்தில் விநாயகர், நடராஜர், இடபாரூடர், தெட்சிணாமூர்த்தி, காலபைரவர், துர்க்கை, சூரியன், சனிபகவான் முதலிய சன்னதிகள் உள்ளன.மேற்கு பிரகாரத்தில் தல விநாயகரும், அவரையடுத்து மார்க்கண்டேயரும், அவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு, தௌமிய முனிவரால் வழிபாடு செய்யப்பட்டதுமான, மக்களின் வறுமையை போக்கி செல்வத்தை கொடுக்கவல்ல ஸ்ரீ ரிண விமோசன லிங்கேஸ்வரரின் சன்னதி ஆகும்.  இவருக்கு அடுத்து ஸ்ரீ பாலசுப்பிரமணியர் சன்னதியும் பாங்குற அமைந்துள்ளது. இத்திருக்கோயில் சோழர் காலத்தில் குலோத்துங்க சோழன் எனும் சோழ மகாராஜாவால் கட்டப்பட்ட திருக்கோயிலாகும்.
     
ஸ்தல பெருமை : மனிதனுக்கு செம்மை தரும் நெறியை - முக்தி நெறியை அளித்தருளும் இறைவன் வெளிப்படும் தலமிது என்ற பொருளில் திருச்சேறை பெருமானுக்கு ""செந்நெறியப்பர்' என்ற பெயர் வழங்கப்படுவதும் சிறப்பானதாகும். பஞ்ச க்ஷேத்திரம் எனும் பெருமாள் கோயில் அருகில் இருப்பதால் நமது இறைவன் ஸ்ரீ செந்நெறியப்பரையும் ஸ்ரீ சாரபரமேஸ்வர் என அழைக்கலாயினர்.  மற்ற எங்கும் இல்லாத சிறப்பு இத்தலத்தில் மட்டுமே மூன்று துர்க்கைகள் அமைந்துள்ளன. சிவ துர்க்கை, வைஷ்ணவி துர்க்கை, விஷ்ணு துர்க்கை என மூன்று வடிவங்களாக ஒரே சன்னதியில் காட்சியளிப்பது சிறப்பாகும். இத்துர்க்கையை வெள்ளிக்கிழமை தோறும் இராகு காலத்தில் வழிபாடு செய்வது சாலச்சிறந்ததாகும். நவக்கிரஹத்தை தரிசித்து, நடராஜபெருமான் சன்னதிக்கருகில் சென்றால் பைரவர் அருள்காட்சியளிக்கிறார். எந்த சிவாலயத்திலும் இல்லாத தனி சிறப்பு இங்குள்ள பைரவருக்கு அப்பரால் பாடல் பெற்ற தனி தேவார பாடல் இங்கு மட்டும் உள்ளது. மற்றும் இடதுமேல் கரத்தில் சூலம் போட்ட மணியுடன் உள்ளது வேறு  எங்கும் இல்லாத தனி சிறப்பாகும்.விரித்தபல் கதிர்கொள்சூலம் வெடிபடு தமருங்கை
தரித்ததோர் கோலே கால பயிரவனாகி வேழம் உரித்துமை யஞ்சக்கண்டு வொண்டிரு மணிவாய் விள்ளச் சிரித்தருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வனாரே'சிவபெருமானே பைரவர் கோலத்தில் காட்சியளிப்பதாய் கூறும்  தேவாரப் பாடலாகும். ஸ்ரீ பைரவருக்கு அஷ்டமியன்று வடைமாலை சாற்றி, சகஸ்ரநாம அர்ச்சனை செய்தால் காரியானுகூலம், வழக்கு விவகாரங்களில் வெற்றி, நவக்கிரஹ தோஷங்கள் நீங்குதல் ஆகியவற்றின் பிரார்த்தனா மூர்த்தியாய் ஸ்ரீ பைரவர் விளங்குவது மிக சிறப்பான அம்சமாகும்.

சூரிய பூஜை : தக்கன் யாகத்தில் தான் செய்த தவறுக்கு கழுவாய் தேடி, சூரியன் பல இடங்களிலும், இறைவனை வழிபட்டான் அவ்வாறு சூரியன் பூஜித்த ஸ்தலங்களுள் ஸ்ரீ சாரபரமேஸ்வரர் ஸ்தலமும் ஒன்றாகும் என்பது இத்திருக்கோயிலின் மற்றொரு சிறப்பாகும். ஆண்டுதோறும் மாசி மாதத்து 13, 14, 15 தேதிகளில் காலையில் இங்கே சூரியனது கிரகணங்கள் இத்தலத்து இறைவன் மீதும், அம்பிகையின் பாதங்களிலும் நேரடியாக படுகின்றன. அப்போது சூரிய பூஜை மிகச் சிறப்பாக நடைபெறும். இந்த மூன்று நாட்களிலும் மாலை வேளைகளில் கண்டியூரில் சூரிய பூஜை நிகழ்வதும் குறிப்பிடத்தக்கது. மாசி மாதம் முழுவதும் காலையில் இக்கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும் இவ்வூர் ஆற்றூர் ஆறை என மருவி வழங்குதல் போலச் சேற்றூர் என்ற பெயர் சேறை என வழங்கியது எனலாம். தேவாரப் பாடல்களில் வயல்களால் சூழப் பெற்ற வளநகர் என இத்தலத்தை குறிக்கப்படுகிறது.

ஸ்தல வரலாறு : இத்தலத்தில் மார்க்கண்டேய முனிவர் தமது ஆத்மார்த்த மூர்த்தியாக இத்திருக்கோயிலின் உட்பிரகாரத்தில், வினாயகருக்கு அருகில் ஒரு  லிங்கம் ஸ்தாபித்து, வணங்கி வந்தார். அந்த லிங்கமே கடன் நிவர்த்தீஸ்வரராக விளங்கக்கூடிய  ரிணவிமோசன லிங்கேஸ்வரர் ஆகும்.  (ரிண- கடன், விமோசனம் - நிவர்த்தி. கடன் நிவர்த்தி செய்யும் ஈசன் - ரிண விமோசன லிங்கேஸ்வரர்) மனித பிறவி எடுத்த ஒவ்வொருவரும் தன்னுடைய ஜீவிதத்தில் சுகமாக இருக்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறார்கள்.ஒருவர் பிறக்கும் போது நல்ல ஆரோக்கியத்துடனும், அறிவு உள்ளவராகவும், கல்வியுடையவராகவும் இருந்தாலும் வறுமை இருக்குமானால் அவரால் சுகத்தை அனுபவிக்க முடியாது. ஆகையால் அப்பேர்ப்பட்ட வறுமை வராமல் இருக்க, வறுமையை நீக்கி செம்மையான வாழ்வு அளிக்கும் இறைவனே ரிண விமோசன லிங்கேஸ்வரர் ஆகும்.இவ்விறைவர், ரிண  விமோசன லிங்கேஸ்வரரை 11 வாரம் திங்கட்கிழமைகளில் தொடர்ந்து அர்ச்சனை செய்து, 11 வது வாரம் அபிக்ஷேகத்தில் கலந்து கொண்டால் பிரார்த்தனை நிறைவேறும்.
கடன் நீங்கி, வறுமை விலகி, செல்வ வளம் பெருகும். மக்கட்பேறு, கல்வி, பொருள் என அனைத்தும் கிடைக்கும் என்பது திண்ணம்.
274 சிவாலயங்கள்:அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில்

மூலவர் : பசுபதீஸ்வரர்
அம்மன் : வேணுபுஜாம்பிகை, காம்பணையதோளி
ஸ்தல விருட்சம் : சரக்கொன்றை
தீர்த்தம் :சூரிய தீர்த்தம்
பழமை : 2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : பந்தணைநல்லூர்
ஊர் : பந்தநல்லூர்
மாவட்டம் : தஞ்சாவூர்
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள் : சம்பந்தர், திருநாவுக்கரசர்

தொண்டர் தொழுதேத்தும் சோதி ஏற்றார் துளங்கா மணிமுடியார் தூய நீற்றார் இண்டைச் சடைமுடியார் ஈமஞ் சூழ்ந்த இடுபிணக்காட்டு ஆடலார் ஏமந் தோறும் அண்டத்துக் கப்புறுத்தார் ஆதி யானார் அருக்கனாயார் அழலா யடியார் மேலைப் பண்டை வினையறுப்பார் பைங்க ணேற்றார் பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே. திருநாவுக்கரசர்.

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 35வது தலம்.
 
விழா : மாசி மகம், பங்குனி உத்திரம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.  
      
சிறப்பு : இங்கு சிவன் புற்றாக அமைந்த சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார்  
      
திறக்கும் நேரம் : காலை 06:00 மணி முதல் 12:00 மணி வரை, மாலை 04:00 மணி முதல் இரவு 08:00 மணி வரை திறந்திருக்கும். அருள் மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில், பந்தநல்லூர்-609 807 (திருப்பந்தணைநல்லூர்) கும்பகோணம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்.போன்:91- 435-2450 595,+91- 435-2450 595, 98657 78045 



     
பொது தகவல் :ஏழு நிலை ராஜகோபுரத்துடன் இரண்டு பிரகாரங்கள். சுவாமி கிழக்கு நோக்கியும், அம்மன் வடக்கு நோக்கி தவக்கோலத்திலும் உள்ளனர். நுழைவு வாயிலில் கோட்டை முனியாண்டவர் அருள் பாலிக்கிறார். உள்பிரகாரத்தில் நவலிங்கங்கள், முருகன், கஜலட்சுமி, அன்னபூரணி, சரஸ்வதி, சட்டைநாதர், தெட்சிணாமூர்த்தி, நேர்கோட்டில் நவகிரகங்கள் உள்ளன. இத்தல விநாயகர் நிருதி கணபதி என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.

பிரார்த்தனை : கண்பார்வையில் குறைபாடு உள்ளவர்கள் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி வழிபட்டால் பார்வை நிச்சயம். பித்ருக்களால் ஏற்படும் தோஷம், திருமணத்தடை, மனநிலை பாதிப்பு, பயந்த சுபாவம், கடனால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வழிபாடு செய்தால் பலன் நிச்சயம்.
     
ஸதல பெருமை : பசுவின் பதியாக வந்ததால் சிவன் பசுபதீஸ்வரர் ஆனார். சுவாமியின் திருமணத்தை நவகிரகங்கள் நேர் கோட்டில் நின்று தரிசிப்பதால் அனைத்தும் அனுக்கிரக மூர்த்திகளாக விளங்குகின்றன. நவகிரக தோஷம் உள்ளவர்கள் சுவாமி, அம்மன், நவகிரக்தை சுற்றுவது நலம். நடராஜருக்கு இங்கு தனி சபை கிடையாது. விஷ்ணு தனி கோயிலில் ஆதிகேசவ பெருமாளாக அருள் பாலிக்கிறார். காம்பேலி மன்னன் தன் மகனுக்கு பார்வை பெற்ற தலம்.
பெருமாள், கன்வர், வாலி, இந்திரன், பிரம்மா, சூரியன் ஆகியோர் வழிபாடு செய்துள்ளனர். அருணகிரிநாதர் தன் திருப்புகழில் இத்தல முருகனை பாடியுள்ளார். ராமலிங்க அடிகளாரும், பட்டீஸ்வரம் மவுன குருசாமியும் பாடியுள்ளனர்.

ஸ்தல வரலாறு : சிவனும் பார்வதியும் கைலாயத்தில் அமர்ந்திருந்த போது பார்வதிக்கு பந்து விளையாடும் ஆசை ஏற்பட்டது. இதனால் சிவன் நான்கு  வேதத்தையும் நான்கு பந்துகளாக மாற்றி பார்வதியிடம் கொடுக்கிறார். பார்வதியும் தொடர்ந்து விளையாடுகிறாள். இவள் விளையாடுவதால் சூரியன் மறையாமல் வெளிச்சம் தருகிறார். இருட்டே இல்லாமல் போனது. இதனால் மாலை வேளையில் முனிவர்கள் சந்தியாவந்தனம் செய்ய இயலாமல் போனது. அனைவரும் சூரியனிடம் செல்ல பார்வதியின் கோபத்திற்கு நான் ஆளாக மாட்டேன் என கூறிவிடுகிறார். எனவே அனைவரும் சிவனிடம் சென்று முறையிடுகின்றனர். சிவன் பார்வதியிடம் செல்கிறார். இவர் வந்ததை பார்வதி கவனிக்கவில்லை. கோபம் கொண்ட சிவன், பார்வதியை பசுவாக சபிக்கிறார். வருந்திய பார்வதி சாபவிமோசனம் வேண்டுகிறார். சிவன் பந்தை காலால் எத்த அது பூமியில் சரக்கொன்றை மரத்தின் அடியில் விழுகிறது. இந்த மரத்தின் அடியில் உள்ள சிவலிங்கத்திற்கு பால் சொரிந்து அபிஷேகம் செய்தால் சாபவிமோசனம் கிடைக்கும் என்றார். பந்து அணைந்த தலம் ஆதலால் "பந்தணை நல்லூர்' ஆனது. பார்வதியை காப்பாற்ற மகா விஷ்ணு இடையர் வடிவில் அப்பசுவை அழைத்து கொண்டு இத்தலம் வருகிறார். பகல் பொழுதில் பசுவை மேய விட்டு மாலையில் அருகிலுள்ள கன்வ மகரிஷி ஆசிரமத்தில் பால் கொடுத்து வந்தார். ஒரு நாள் பசு புற்றிலிருந்த லிங்கத்தை பார்த்து அதன் மேல் பாலை சொரிந்து விடுகிறது. அன்று மாலை மகரிஷிக்கு பால் இல்லை. இதற்கான காரணம் அறிய பசுவின் பின்னால் விஷ்ணு செல்கிறார். புற்றின் மீது பால் சொரிவதை கண்டவுடன் பசுவை அடிக்கிறார். பசு துள்ளி குதித்து புற்றில் காலை வைக்க பசுவும் இடையனாக வந்த விஷ்ணுவும் சுய உருவம் பெருகின்றனர். சாப நிவர்த்தி பெற்றவுடன் தன்னை திருமணம் செய்ய சிவனிடம் வேண்டுகிறார். அதற்கு சிவன் வடக்கு நோக்கி தவமிருந்து என்னை வந்து சேர் என்கிறார். அதன் படி செய்து அம்மன் சிவனை திருமணம் செய்கிறார். சிவன் மூலஸ்தானத்தில் கல்யாண சுந்தரராக அருள் பாலிக்கிறார்.
------------------------------------------------------------

செவ்வாய், 30 ஜூலை, 2019

பாடல் பெற்ற சிவாலயங்கள் இன்று அருள் மிகு சாயாவனேஸ்வரர் திருக்கோவில்

மூலவர் : சாயாவனேஸ்வரர்
அம்மன் : குயிலினும் இனி மொழியம்மை
ஸ்தல விருட்சம் : கோரை
தீர்த்தம் : ஐராவதம், காவிரி, சங்க முக தீர்த்தங்கள்
பழமை : 2000 வருடங்களுக்கு மேல்
புராண பெயர் : திருச்சாய்க்காடு, மேலையூர்
ஊர் : சாயாவனம்
மாவட்டம் : நாகப்பட்டினம்
பாடியவர்கள் : தோடுலா மலர்கள் தூவித்தொழதெழு மார்க்கண்டேயன் வீடுநாள் அணுகிற்சென்று மெய்கொள்வான் வந்தகாலன் பாடுதான் செல்லும் அஞ்சிப் பாதமே சரணம் என்னச் சாடினார் காலன்மாளச் சாய்க்காடு மேவினாரே.(திருநாவுக்கரசர்)

விழா : சித்திரைப் பௌர்ணமியில் தொடங்கி இந்திர விழா 21 நாள்களுக்கு நடைபெறுகிறது. ஆடி அமாவாசையில் அன்னமளிப்பு, சித்திரை வைகாசி மாதங்களில் இயற்பகை நாயனார் பெயரில் தண்ணீர்ப் பந்தல், வைகாசியில் குமரகுருபரர் பூஜை, மார்கழியில் இயற்பகை நாயனாருக்கு ஐந்துநாள் விழா அதில் நான்காம் நாளிரவு இறைவன் காட்சி கொடுக்கும் விழாக்களும் நடைபெறுகின்றன.  
      
திறக்கும் நேரம் : காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும். அருள் மிகு சாயாவனேஸ்வரர் திருக்கோயில், சாயாவனம்- 609 105, நாகப்பட்டினம் மாவட்டம். போன் : +91- 4364 - 260 151 
     
தகவல் : இக்கோயிலுக்கு அண்மையில்தான் பூம்புகார்க்காவல் தெய்வமான சம்பாகி அம்மன் கோயில் உள்ளது. கோயில் குளத்திற்கு தெற்கில் உள்ளது. முகப்பு வாயிலைக் கடந்ததும் கொடி மரம் இல்லை. கொடிமரத்து விநாயகர் மட்டும் உள்ளார். மாடக் கோயிலாதலின் நந்தி உயரத்தில் உள்ளார். வெளிப்பிரகாரத்தில் சூரியன், இந்திரன், இயற்பகைநாயனார் துணைவியாருடன் உள்ள சன்னதிகள் உள்ளன. அடுத்துள்ள நால்வர் சன்னதியில் மூவர் முதலிகளே உளனர். விநாயகர், சுப்பிரமணியர், கஜலட்சுமி, உயர்ந்த பீடத்தில் பைரவர், நவக்கிரக சன்னதி முதலிய சன்னதிகளைத் தொழுதவாறே வலம் முடித்து படிகளேறி வெளவால் நெத்தி மண்டபத்தை அடைந்தால் வலப்பால் பள்ளியறையும் பக்கத்தில் அம்மன் சன்னதியும் உள்ளன.

ஸ்தல பெருமை : கோச்செங்கண்ணன் என்ற சோழ மன்னன் நிறைய சிவாலயங்கள் கட்டினான். அதில் மாடக்கோயில்கள் தான் அதிகம். மாடக்கோயில் என்றால் யானையால் புக முடியாத கோயில் என்பதாகும். இக் கோயிலும் ஓர் மாடக்கோயிலாகும்.63 நாயன்மார்களில் ஒருவர் இயற்பகை நாயனார். இவர் பிறந்து முக்தியடைந்தது இத்தலத்தில் தான். இவரது மனைவியும் சிறந்த சிவ பக்தை. இவர்களது சிவபக்தியை உலகிற்கு எடுத்துக்காட்ட சிவன் விரும்பினார். ஒரு முறை இவர்களது இல்லத்திற்கு சிவனடியார் வேடமிட்டு வந்தார். இயற்பகையாரிடம் நீ கேட்டதை எல்லாம் இல்லை என்று கூறாமல் அள்ளி கொடுப்பவன் என்பதை அறிவேன். எனவே உனது மனைவியை என்னுடன் அனுப்பி வை என்றார். இயற்பகையாரும் சிறிதும் யோசிக்காமல் தன் மனைவியை சிவனுடன் அனுப்பி வைத்தார். அதற்கு இவரது மனைவியும் சம்மதித்தார். அடுத்து நான் என்ன செய்ய வேண்டும் என இயற்பகையார் சிவனடியாரிடம் கேட்க அதற்கு அவர் நான் உனது மனைவியை அழைத்து செல்வதால் உனது உறவினர்கள் என் மீது வெறுப்பு கொள்ள நேரிடும். எனவே இந்த ஊர் எல்லையை கடக்கும் வரை எங்களுக்கு நீ பாதுகாப்பு தர வேண்டும் என்றார். இயற்பகையார் அதற்கும் சம்மதித்து கையில் பெரிய வாளுடன் சிவனடியாரையும் தன் மனைவியையும் முன்னே செல்ல கூறிவிட்டு அவர்களுக்கு பாதுகாப்பாக பின்னே சென்றார். சுற்றத்தார் அவர்களைத் தடுத்தனர். இயற்பகையார் அவர்களை எல்லாம் வென்றார்.ஊர் எல்லையை அடைந்தவுடன் சிவனடியார் நான் உன் மனைவியுடன் செல்கிறேன் நீ ஊர் திரும்பலாம் என்கிறார். இயற்பகையாரும் அதன்படி செய்தார். திடீரென அங்கிருந்த சிவனடியார் மறைந்து வானத்தில் அன்னை உமையவளுடன் தோன்றி நீ உனது துணைவியாருடன் இந்த பூவுலகில் பல காலம் சிறப்புடன் வாழ்ந்து என் திருவடி வந்து சேர்க எனக்கூறி மறைந்தார்.மனிதன் மனஉறுதி மிக்கவனாகவும் தைரியசாலியாகவும் இருக்க வேண்டும் என்பதை உணர்த்தவே இந்த நாடகம் இறைவனால் நிகழ்த்தப்பட்டது.

வில்லேந்திய வேலவன் : இந்த தலத்தில் முருகப்பெருமான் வில் ஏந்தி போருக்கு புறப்படும் நிலையில் சத்ரு சம்ஹார மூர்த்தியாக காட்சி தருகிறார். கடலில் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படும் இந்த முருகன் தன் வலது காலில் சிவனால் கொடுக்கப்பட்ட வீர கண்டரமணியை அணிந்திருக்கிறார். எதிரிகளை அழிக்க முருகனுக்கு சக்தி கொடுத்த வேல் எப்படியோ அதே போல் சிவன் கொடுத்தது தான் இந்த வீர கண்டரமணி. எதிரி பயம் இருப்பவர்கள் இவரை வழிபட்டு சங்கடங்களைச் சமாளிக்கும் தைரியம் பெறலாம்.

ஸ்தல வரலாறு : இந்திரனின் தாயான அதிதிக்கு பூமியில் உள்ள சாயாவனேஸ்வரரை வழிபட வேண்டும் என்ற ஆசை நீண்ட காலமாக இருந்தது. அந்த ஆசையை நிறைவேற்ற அவள் பூமிக்கு வந்தாள். தாயைக் காணாத இந்திரன் அவள் சாய்க்காட்டில் இருப்பதை அறிந்து இத்தலத்தின் சிறப்பை உணர்ந்து கொண்டான். அவள் தினமும் இத்தலத்தை தரிசிக்கும் வகையில் இந்த கோயிலையே தனது ஐராவத யானையை வைத்து தேர் பூட்டி இந்திரலோகம் இழுத்து செல்ல முயற்சித்தான்.கோவிலை இழுத்ததுமே பார்வதி குயில் போல இனிமையாக கூவினாள். (எனவே தான் அம்மனுக்கு குயிலினும் இனிமொழியம்மை என்ற திருநாமம் ஏற்பட்டது.) உடனே சிவன் தோன்றி இந்திரா! இந்த கோயிலை தேவலோகம் கொண்டு சென்று வழிபடவேண்டும் என்று நினைக்காமல் இங்கு வந்து வழிபட்டு நலமடைவாயாக என அருள்புரிந்தார்.


சுருதி ஸூக்தி மாலா : இன்று சுலோகம் 31 முதல்35முடிய
|| ஓம் நம: சிவாய ||
சுருதி ஸூக்தி மாலா அல்லது சதுர் வேத தாத்பர்ய ஸங்க்ரஹம்
சுருதி ஸூக்தி மாலா
சிவலிங்க பூபதியின் ஸம்ஸ்க்ருத வ்யாக்யானத்தைத் தழுவி
தமிழில் பதவுரையும் தாத்பர்யங்களும்.
எழுதியவர்:
பண்டிதராஜ – ஸாம்ப ஸ்ரீ
கை. பாலஸுப்ரமண்ய சாஸ்திரிகள்
தலைமை உபாத்தியாயர், ஸம்ஸ்க்ருத கல்லூரி
மயிலாப்பூர், சென்னை – 600 004

சுலோகம் 31
அர்த்த : ச்ரியா சிவ ந கோபி விரஜ்யதஸ்தே
ச்ரேஷ்டஸ்தயா த்வமஸி தாசதயீபிருக்த : |
லப்தும் ச்ரியம் ஜனிம சாரு விசித்ரரூபம்
அப்யர்ச்சிதம் தவ மருத்பி ருதாஹரந்தி ||
ஆறுகுணங்களில் ச்ரீ என்ற குணமுள்ளவராக சிவபெருமான் கூறப்படவில்லையே. வாஸுதேவனல்லவா ஸ்ரீபதி எனப்படுகிறார் என்ற சங்கை ஏற்பட, ஆத்மானந்த த்ருப்தனாகிய சிவபெருமானுக்கு விஷயங்களில் வெறுப்பு இருந்த போதிலும், ஸ்ரீமான் என்ற பதம் சுருதிகளில் காணப்படாவிடினும், ச்ரியா ச்ரேஷ்ட : என்ற அடைமொழி சிவபெருமானுக்குக் காணப்படுவதாலும், மற்றெல்லாரும் ச்ரீயை அடைய விரும்பி சிவபெருமானைப் பூஜித்து, அஷ்டைச்வர்யங்களை அடைந்தார்களென்று காணப்படுவதாலும், சிவபெருமான் ஸ்ரீமான் என்பதில் ஸந்தேகமில்லை, என்று இந்த ச்லோகத்தில் விளக்குகிறார்.
பதவுரை
சிவ – சிவபெருமானே ! விரஜ்யத : – உலக விஷயங்களில் முற்றிலும் பற்றுதல் இல்லாத, தே – உமக்கு ச்ரியா – லக்ஷ்மியால், ந கோப்யர்த்த : – ஒரு பயனுமில்லை. தாசதயீபி : – ருக் வேதத்திலிள்ள ருக் மந்த்ரங்களால் தயா ச்ரேஷ்ட : – அந்த லக்ஷ்மியால் நிரம்பியவராக, சிறந்த லக்ஷ்மீவானாக, த்வம் நீர், உக்தோஸி – சொல்லப்பட்டிருக்கிறீர்.
ச்ரேஷ்டோ ஜாதஸ்ய ருத்ர : ச்ரியாஸி
தபஸ்தமஸ் தபஸாம் வஜ்ரபாஹோ
என்பதல்லவா ருக்வேத மந்த்ரம். இந்திர உருவமெடுத்து ஆவிர் பவித்த தாங்கள், தபஸாம் – ஸ்தோத்ரம் செய்யப்படுகிறவர்களுள், தபஸ்தம : – அதிகமாக ஸ்துதிக்கப்படுபவர், ச்ரியா ச்ரேஷ்டோஸி – ஸம்பத்துள்ளவர்களுக்குள்ளும் சிறந்தவராக இருக்கிறீர். அநித்யமான உலக ஸுகத்தைத் துறந்து, ஸஞ்சல லக்ஷ்மியை வேண்டாதிருப்பதல்லவா நித்யமான ஸ்ரீ ஆகும். இது பற்றியே.
ஸா ஹி ச்ரீ ரம்ருதா ஸதாம் என்று, வேதங்கள் தான் அழியா ஸம்பத்தென்பது பொருந்தும். வேதத்ரய ப்ரதிபாத்யனான ஈசானன் தான் அழியாத ஸம்பத்துள்ளவன் என்பது தாத்பர்யம். ச்ரியம் லப்தும் : ஸம்பத்தை யடைவதற்கு, விசித்ர ரூபம் – விசித்ர உருவமுள்ள, சாரு – அழகான, மங்களகரமான, தவ – உம்முடைய, ஜனிம – மகாலிங்கரூபமாக ஆவிர்ப்பவித்த அருணாசலேச்வர, மத்யார்ச்சுனேச்வர உருவத்தை, மருத்பி : – தேவகணங்களால், அப்யர்ச்சிதம் – நன்கு பூஜிக்கப்பட்டதாக, உதரஹரந்தி – சொல்லுகிறார்கள்.
மகாலிங்க மூர்த்தியை ஆராதித்ததால் ஸகல தேவர்களும் தங்கள் பதவிகளையும், ஸம்பத்தையும் அடைந்தார்கள் என்பது பிரஸித்தம். அதிகம் சொல்வானேன். வாஸுதேவன் ருக்மிணி முதலிய மகிஷிகளை மணந்ததும், ஸாம்பன், சம்பு, ப்ரத்யும்னன் முதலிய புத்ரர்களை யடைந்ததும், உபமன்யு மக்ர்ஷியின் பிரஸாதத்தால் கிடைத்த உபதேசத்தின் படி, சிவபெருமானைப் பூஜித்து உபாஸித்ததால் தான் என்ற விஷயம் அனுசாஸன பர்வத்தில் கூறப்பட்டுள்ளது.
ருக்வேதம் : – தவ ச்ரியே மருதோ மர்ஜயந்த : ருத்ர யத்தே ஜனிம சாரு சித்ரம் பதம் யத் விஷ்ணோருப மந்நிதாயிதேன பாஸி குஹ்யந் நாமகோனாம்.
ருத்ர – ஹே பரமேச்வரா ! மருத : – தேவர்கள், யத் – யாதொரு பிரஸித்தமான, தே – உம்முடைய, சாரு சித்ரம் – மங்களகரமான, ஆச்சர்யமுண்டு பண்ணும், ஜனிம – மகாலிங்க ப்ராதுர்பாவத்தை, மர்ஜயந்த : – 12 சுபத்ரவ்யங்களால், சதருத்ரீய மந்த்ர ஜபத்துடன் அபிஷேகம் செய்தார்கள். (எதற்காக) ச்ரியே – லக்ஷ்மியை அடைவதற்காக எந்த ப்ராதுர் பாவத்தைப் பூஜித்தார்கள்?
விஷ்ணோ :- பரமம் பதம் லிங்கம் – என்பது ஸனத்குமரரஸம்ஹிதையில் விஷ்ணுவரல் சொல்லப்பட்ட வசனம். விஷ்ணோ : பரமம பதம் என்ற சொற்றொடர் மகாலிங்க மூர்த்தியைக் குறிப்பதாக, விஷ்ணுமூர்த்தியால் கூறப்பட்டது எனில். தன்னையே குறிக்க வில்லை யென்பது விளங்குமல்லவா? மேலும் ருத்ர என்ற விளி வேற்றுமை, விஷ்ணுவை பூஜித்தார்கள் என்ற அர்த்தத்துடன் பொருந்தாது.
தத் பதம் லிங்கமாக்யாதம் சிவோ யேனைவ த்ருச்யதே
தல்லிங்கஸ்யாபி மாகாத்ம்யம் யுவாம் த்ரஷ்டும் ந ஹி க்ஷமெள,
ஸூரயோ யத் ப்ரபச்யந்தி தத் விஷ்ணோ : பரமம் பதம்.
தத்விஷ்ணோ : பரமம் பதம் ஸதா பச்யந்தி ஸூரய :
திவீவ சக்ஷுராததம்.
தத்விப்தஸோ விபந்யவோ ஜாக்ருவாம்ஸ : ஸமிந்ததே
விஷ்ணோர் யத் பரமம் பதம் ||
முதலிய சுருதிகளும், உப ப்ரும் ஹண, புராண வசனங்களும், விஷ்ணோ : பரமம் பதம் என்ற சொற்றொடர், வ்யாபகமான, சிறந்த, பிரமம் விஷ்ணுக்களும் காண்பதற்கரிய, மகாலிங்க, ஜ்யோதிர்மய மூர்த்தியைக் குறிப்பிடுவதாக நன்கு விளக்குகின்றன.
சுலோகம் 32
ஸத்யம் க்ஷமா த்ருதி ரதிஷ்டிதிராத்மபோத:
ஸ்ருஷ்டிர் விராக தபஸீ மதிரீச்வரத்வம் |
நத்வத் வியந்தி ந கதாசிதபைதி தர்ம:
கிந்தந் நயத் பவதி தே குண ஸம்மதேஷு ||
வாசஸ்பதி மிச்ரர் என்ற வேதாந்த நிபுணர் வேதத்தையும் வேதப் பொருளான சிவபெருமானையும், சிலேடையாக அடைமொழி கொடுத்து வணங்குகிறார்.
ஷட்பி ரங்கை ருபேதாய விவிதை ரவ்யயைரபி |
சாச்வதாய நமஸ்குர்மோ வேதாய ச பவாய ச ||
வேதத்தின் உண்மை விளங்க சிக்ஷா, வ்யாகரணம் சந்த :, நிருக்தம, ஜ்யோதிஷம், கல்ப்ப: என்ற ஆறு அங்கங்கள் தேவை. ஈச்வரனுடைய ஆறு குணங்கள் (அங்கங்கள்) ஆவன.
ஸர்வக்ஞதா த்ருப்தி ரனாதி போத:
ஸ்வதந்த்ரதா நித்ய மலுப்தசக்தி:
அனந்தசக்தி: ச விபோர் விதிஞா:
ஷடாஹுரங்கானி மஹேச்வரஸ்ய ||
அவ்விதமே அழியாத, அவ்யயமான மற்றும் பத்து குணங்கள் கூறப்படுகின்றன.
ஞானம் வைராக்ய் மைச்வர்யம் தபஸ் ஸத்யம் க்ஷமா த்ருதி:
ஸ்ரஷ்ட்ருத்வ மாதம் ஸம்போதோ ஹ்யதிஷ்டா த்ருத்வமேவ ச ||
அவ்யயானி தசைதானி நித்யம் திஷ்டந்தி சங்கரே |
ஆதலால் ஸகல குணங்களுக்கும், (சமுத்ரம்போல சிறந்த பதார்த்தங்களுக்கு) அழியா இருப்பிடமான, ரத்னாகரன் சிவபெருமான் தான்.
பதவுரை
ஸத்யம் – தர்மத்தையும், ஸத் வித்யையையும் தெரிவிக்கும், பிரம்ம ப்ரதிபாதகமான வேதவாக்யம். (சிவ பெருமான் மூச்சு போல் வெளிவந்தமையால், அவருக்குச் சொந்தமாக, அவருடைய அழியா குணமாக சொல்லப்படுகிறது). க்ஷமா – பக்தர்களின் அபராதத்தைப் பொறுத்தல். ஆசுதோஷி என்ற பெயர். சிவபெருமானுக்கே உரித்து; வணங்குவதால் உடன் ஸந்தோஷமடைகிறவ்ர்; உடன்வரம் அளிப்பவர். இவ்விதம் தான் பாணினி வ்யாகரணத்தில் உணாதிஸூத்ரம் ஈச்வரசப்த்த்துக்கு அர்த்தம் கூறுகிறது.
அச்னோதே ராசுகர்மணி வரட் ச
சீக்ரம் ஸந்தோஷத்தால் பயன் கொடுக்கும், எங்கும் நிரம்பிய ஆசுதோசஷர் என்பது ஈச்வர பதத்தின் உண்மைப் பொருளென்று, உணாதி ஸூத்ரத்தின் முதலிய வீரச்செயல்கள்; அதிஷ்டிதி: – எல்லாவற்றிலும் அந்தர்யாமியாக ஸர்வ ஆதாரமாக இருத்தல்; ஆதமபோத: – அகண்ட சைதன்ய ரூபமாக ப்ரகாசித்தல்; ஸ்ருஷ்டி:- உலகங்கனனைத்தையும் படைத்தல்; (பிரம்மாதிபதி; பிரம்மணோதிபதி ; என்பது ச்ருதி; உலகங்களைப் படைத்த பிரம்மதேவனையும் படைத்த சிவபெருமானைச் சேர்ந்தது ஸ்ருஷ்டி என்பது உண்மையே) விராக தபஸீ – வைராக்யம்; உலகத்தைப் படைப்பதில் தடையற்ற ஸத்யஸங்கல்ப்பம்; மதி :- கார்யங்களை ஆலோசித்தல் : ஈச்வரத்வம் – தலைவனாக இருந்து காத்தல், இவைகள் பத்தும், தவத் – உம்மிடமிருந்து, ந வியந்தி – எப்பொழுதும் பிரிந்து போகிறதில்லை. ஆகையால் இவை பத்தும் அவ்ய்யங்கள் எனப்படுகின்றன. வேற்றுமை மாற்றத்தால் மாறாத சப்தத்திற்கு அவ்யயம் என்ற பெயர் பாணினியால் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதுபோல, இந்த பத்து குணங்களும் ஒருபொழுதும் பிரியாமல் மாறாமல் இருப்பதால் அவ்யயங்கள் எனப்படுவது யுக்தமே, தர்ம : – அணிமாதி அஷ்டைச்வர்யங்களும். கதாசிதபி – ஒருபொழுதும், தவத் – உம்மிடத்திருந்து, நாபைதி – விலகுகிறதில்ளை. குணஸம்மதேஷு – குணமென்று கூறப்படுவதுள் தேயத் ந பவதி – உம்மிடம் இல்லாத அந்தக் குணம். கிம் – என்ன இருக்கிறது? ஈச்வரன் அனந்த, ஸகல கல்யாணகுண பரிபூர்ணன் என்பது தாத்பர்யம்.
நாஸ்தி யத்யதகல்யாணம் தத்ததஸ்ய கதாசன |
கல்யாணம் ஸகலஞ்சாஸ்தி பரமாத்மா சிவோ யத ||
என்ற புராணவசனங்கள் சிவ பத அர்த்தத்தை நன்கு விளக்குவது இங்கு காணப்பட வேண்டும்.
ஒளதார்ய, வீர்ய, காம்பீர்ய மாதுர்ய மகராலய:
என்ற சிவபெருமான் அடைமொழியும் இவ்விஷயத்தை விளக்கிக் கூறுகிறது.
சுலோகம் 33
நைவேச்வராந் ந யசஸா மஹதோ ந வீராந்
ந ஸ்ரீமத : க்ஷிதிபதீனபி ஸார்வபெளமாந் |
அந்யாத்ருசானாபி மஹேச்வர ! வீதராகாந்
ப்ரஞாவதோ பகவத : ப்ரவதந்தி வ்ருத்தா : ||
ஆறு குணங்கள் அடைந்தவர் பகவான் எனப்படுவர்; பத்து அழியாக் குணங்கள் நிரம்பியவர் பகவான் எனப்படுவர், என்ற மத த்வயப்படி, சிவபெருமாந்தான் பகவத் சப்த வாச்யர் என்று நிரூபிக்கப்பட்டது. சில பெரியார்கள் ஞானம் வைராக்யம் இந்த இரண்டு குணங்கள் நிரம்பியிருந்தாலும், அவரே பகவான் என்று சொல்வார்கள்.
பதவுரை
வ்ருத்தா :- பெரியோர்கள், ஈச்வராந் நைவ – பணம் இருப்பதற்காக அல்ல, யசஸா மஹத : நைவ – புகழ் மிகுந்தவர் என்பதற்கல்ல, வீராந் ந – வீரர்களையும் அல்ல; ஸ்ரீமத் : க்ஷிதி பதீத் ஸார்வ பெளமானபி ந – பூமியின் தலைவர்களான ஸம்பத்தைப் படைத்தவர்களையுமல்ல, அந்யா த்ருசானபி – இந்த குணங்கள் இல்லாவிடினும் வீதராகாந் ப்ரஞாவத : – ஆசையற்ற, சிறந்த அறிவு வாய்ந்தவர்களையே பகவத : ப்ரவதந்தி – பகவத் சப்த வாச்யர்களாகக் கூறுகிறார்கள். ஆதலால், ஞானமூர்த்தியான, சிறந்த வைராக்யம் படைத்த உம்மை, பகவான் என்பது பெரியோர்களின் உணமையான் கருத்து.
சுலோகம் 34
ஆதர்வணா மதனசாஸன ! நிப்ருவாணா:
நாமா நி நாம பகவானிதி தே நிராஹு 
அத்யாச்ரமோ பநிஷதாஹ பகேசவ்ரம் த்வாம்
நைகண்டுகா : ச பகவந்த முசந்தி பூஜ்யம் ||
பகவான் என்ற பதம் ஈச்வரனைக் குறிப்பது என்று சுருதியும் சொல்லுகிறது.
பதவுரை
மதனசாஸன – (பிறப்புக்காரணமான) மன்மதனை அடக்கியவரே ! ஆதர்வணா :- அதர்வவேதம் பயின்றவர்கள், தே – உம்முடைய, நாமாநி – பெயர்களை நிப்ருவாணா :- வ்யுத்பத்தியால் விளக்குகிறவர்களாய், பகவான் இதி நாம – பகவான் என்ற பெயரை. நிராஹு : – வ்யுத்பத்தியால் உம்மைச் சேர்ந்ததாக வெளிப்படுத்துகிறார்கள். அத கஸ்மாத் உச்யதே மஹாதேவ :- ஸர்வான் பாவான் பரிதயஜ்ய, ஆத்மஞானயோக, ஐச்வர்யே மஹதி மஹீயதே தஸ்மாத் உச்யதே மகாதேவ : என்பது அதர்வ வேதம் மகாதேவ சப்தத்தின் அர்த்தத்தைக் கூறுகிறது. அப்படியே அத கஸ்மாத் உச்யதே பகவான்– ய: ஸர்வான் பாவான் நிரீக்ஷதி, ஆத்மஞானம் நிரீக்ஷயதி, யோகம் கமயதி தஸ்மாத் உச்யதே பகவான் என்று பகவத் சப்தத்தின் அர்த்தத்தையும் தெளிவாகக் கூறுகிறது. ஆதலால், பங்கஜ சப்தம்போல, பகவான் சப்தம் யோக ரூடியாகக் கருதப்பட்டு, சிவபெருமானைத்தான் குறிக்கும். இங்கு சப்தாதேவ ப்ரமித : என்ற வ்யாஸ ஸூத்ரத்தின் கருத்து ஸாதகமாகக் கொள்ளப்பட வேண்டும். சுக்ரா சார்யாரும் சுக்ரபகவான் என்று கெளணமாகச் சொல்லப்படுகிறார். அவ்விதம் வந்த பெயர் தான் பாகவதம் என்பது, கிருஷ்ண சரித்திரம் விளக்கும் வாஸுதேவ புராணத்துக்கு ஏற்பட்ட பேயர். மஹேச்வர! சிவபெருமானே! த்வாம்-உம்மை அத்யாச்ரமோபநிஷத்-பஸ்மோத் தூளனம் செய்து கொள்பவர்களுக்கு, உபதேசிக்கப்படுகிற அத்யாச்ரமோப நிஷத்தும்,
தர்மாவஹம் பாபநுதம் பகேசம் என்று, பகேசம்-பகவான் என்று கூறுகிறது, நைகண்டுகா: ச – நிகண்டு என்ற வ்யுத் பத்தி க்ரந்தத்தை யறிந்தவர்களும்,
பூஜ்யம் பகவந்தம் உசந்தி, பூஜிக்கத் தகுந்தவர்களையே பகவான் என்று சொல்லுகிறார்கள். பூஜிக்கத்தகுந்தவர் தாங்கள் ஆதலால், பகவத் சப்தம் உங்களைத்தான் குறிக்கும்.
தத்ர பவான் பகவானிதி சப்தோ வ்ருத்தை: ப்ரயுஜ்யதே பூஜ்ய : என்பது நிகண்டு வசனம் நமஸ்தே அஸ்து பகவத: அதீஹி பகவோ ப்ரும்ஹேதி என்ற சுருதிகளிலும், பூஜ்யனை பகவத் சப்தம் கூறுகிறது. சுருதி நிகண்டுகளில், பூஜிக்கப்படுகிறவர்கள் அனைவர்களையும் பகவத் சப்தம் குறிப்பிடுவதாக இருந்தாலும், வாக்கு, மனது, உடல், முககரணங்களால் துதித்துப் பூஜிக்கத்தகுந்தவராக சுருதி. தமுஷ்டுஹி என்பது உம்மையே கூறுவதால், நீர்தான் பகவான் முக்கியமானவர். மற்றாவ்ர்களை உம்மைப்போல் பூஜிக்கப் படவேண்டியது பற்றி ஸிம்ஹோ மாணவக: என்பது போல பகவத் சப்தம் குறிக்கிறது என்பது தாத்பர்யம். ஆதலால், ஆறு குணங்களோ, ஞான வைராக்கியமோ, பூஜ்யதையோ, இம்மூன்றில் எது, ப்ரவ்ருத்தி நிமித்தமாகக் கொண்டாலும், பகவான் தாங்கள் தாம். மற்றவர்கள் உம் ஸம்பந்தத்தால் பொருளாவார்கள். ஆதலால் பகவத் சப்த வாச்யத்வம் அதிவ்யாப்தி இல்லாத இரண்டாவது லக்ஷணமாவது திண்ணம்.
அதாபி யத் பாத நகாவஸ்ருஷ்டம்
ஜகத் விரிஞ்ச்சோ பஹ்ருதார்ஹணாம்ப : |
ஸேசம் புனாத்யன்யதமோ முகுந்தாத்
கோநாம லோகே பகவத்பதார்த்த : ||
என்ற வசனம் முகுந்தனைத்தவிர, பகவத்சப்த வாச்யத்வம் வேறு ஒருவனுக்குக் கிடையாது என்று கூறுகிறது. ஆதலால் முகுந்தனிடத்தில் அதிவ்யாப்தம், சிவபெருமானிடம் அவ்யாப்தம் இரண்டாவது லக்ஷணம் என்ற கேள்வி எழும்புகிறது கீழே சொல்லப்பட்ட அதர்வண வேதம் அத்யாசரமோபநிஷத் என்ற மந்த்ரோப நிஷத் ஆகிய சுருதிகள் சிவபெருமானை பகவானாகக் கூறும்போது, அதற்கு விருத்தமான இந்த வசனம் விரோதாதிகரண ந்யாயப்படி தள்ளப்பட வேண்டியதுதான். ஒளதும் பரீ என்னும் கட்டையப் பூராவும் வஸ்த்ரத்தால் மறைக்க வேண்டும் என்ற ஸ்ம்ருதிகூட ஒளதும்பரிக் கட்டையைத் தொட்டுக் கொண்டு ஸாமகானம் செய்யவேண்டும் என்று சொல்லும் சுருதிக்கு விரோதமானதால் தள்ளப்பட வேண்டியதாக ஜைமினி முனிவர் சொல்லிய மீமாம்ஸ ந்யாயம் இருக்கிறது.
மேலும் இந்தவாக்யமே த்வேசஷத்தால் எழுதப்பட்டதென்பது தெளிவு. ஸேசம் ஜகத் புனாதி என்றதால், வாஸுதேவன் பாததீர்த்தம் சிவபெருமானையும் புனிதமாக்கினதாகச் சொல்வது ஸரியான முறையல்ல அபத்தம். மகாலிங்கம், ஜ்யோதிர்லிங்கம், ப்ராதுற்பவித்ததும், ப்ரம்மா, விஷ்ணு இருவர்களும் அன்னம் வராகம் ரூபம் கொண்டு மேலும் கீழும் பலகாலம் தேடிச் சென்றும் காணமுடியாத வரலாறும், ஈச்வரனுக்கு ஆயிரம் நாம அர்ச்சனை செய்த வாஸுதேவன், ஒர் தாமரை குறைந்ததால், தன் கண்ணை பக்தியுடன் அர்ச்சித்து, ஈச்வரனிடம் சக்ராயுதம் பெற்றதும், ப்ரம்மா ஸாரதியாகவும், விஷ்ணு பாணமாகவும் வர, ஸாதனங்களை எதிர்பாராமல் ஸங்கல்ப்ப மாத்திரத்தில் நடந்த த்ரிபுர ஸம்ஹார வரலாறும், தேவர்கள் அமிர்தம் வேண்டி ஸமுத்ரத்தைக் கடைந்தபோது உண்டான கால கூட விஷ தாபத்தால் ஓடிவாடிய பிரம்ம விஷ்ணுக்களையும் மற்றும் ஸகலதேவர்களையும், சிவபெருமான் விஷத்தை தாம் ஏற்றுக் காப்பாற்றிய சரித்திரத்தாலும், பிரம்ம விஷ்ணுக்களையும் தன்வசப்படுத்தின காமனை, எரித்த வரலாற்றாலும், தேவியின் ஸ்வயம் வரத்தில், குழந்தை யுருவமெடுத்து வந்த சிவபெருமான், விஷ்ணு முதலிய தேவர்களை ஸ்தம்பிக்கச் செய்த வரலாற்றாலும் மத்ஸ்ய, கூர்ம வராஹ, த்ரிவிக்ரம, ந்ருஸிம்ஹம் விஷ்வக்ஸேனர் முதலியவர்களை அடக்கிய வரலாறுகளாலும், ப்ரம்மாவின் ஐந்தாவது தலையைப் பொய் சொன்னதற்காகக் கிள்ளி சதுர் முகனாகிய சரிதத்தாலும், சுருதி ஸ்ம்ருதி புராண இதிகாஸங்கள் அனைத்தும் சிவபெருமானை மகாதேவனாக அங்கீகரிக்கும்போது, அவரை சுத்தப்படுத்தியது முகுந்தன் பாத தீர்த்தம் என்று ஒரு வசனம் எழுதி வைத்தது எங்ஙனம் ப்ரமாணமாகும்?
த்யஜேத்ஏகம் குலஸ்யார்த்தே, க்ராமஸ் யார்த்தே குலம் த்யஜேத் | க்ராமம் ஜனபதஸ்யார்த்தே ஹியாத்மார்த்தே ப்ருதி வீம் த்யஜேத் என்றல்லவா உலக ந்யாயமும், பகாஸுரானால் உபத்ரவும் நீங்க, தினந்தோறும் ஒரு சிறு பிள்ளையை ஏகசக்ரபுரத்தில் தியாகம் செய்து வந்த பாரத வரலாற்றுப்படி, பல சுருதி விரோத மானத்தால், கீழே சொன்ன முகுந்தன் பாததீர்த்த சுலோகமும், த்வேஷத்தால் எழுதப்பட்டது தள்ளத் தகுந்தது.
கங்கா தேவி மலையரசன் பெண்ணாக ஹிமய மலையிலிருந்து விழும் ஸமயம், கர்வாப ஹரணத்துக்காக ஈச்வரனால் ஜடையில் தாங்கப்பட்டாள். விஷ்ணுபாத தீர்த்தமாக வாமனாவதார காலத்தில் இருந்தது வேறு ஜன்மாவில் என்றல்லவா ஜன்ம பேதம் சொல்லப்படுகிறது.
த்வம் தேவேஷு ப்ராம்மணோஸி. அஹம் மனுயேஷு.
விஷ்ணோராதி பத்யம் க்ஷத்ரம் ஸ்ம்ருதம்.
என்ற ப்ரமாணப்படி, சிவபெருமான் ப்ராம்மணத்வம், ப்ராம்மணாதிபத்யம் படைத்தவர். முகுந்தன் க்ஷத்திரியன், க்ஷத்ரியாதி பத்யம் படைத்தவன் என்ற சித்தாந்தமும் ஸர்வஸம்மதமாக இருக்க, பிராம்மணர் சிவன், க்ஷத்ரியன் விஷ்ணு பாத தீர்த்தத்தால் புனிதனானான் என்று, விவேகமுள்ள எந்த மனிதனும் சொல்லமாட்டான், ஒப்புக் கொள்ளமாட்டான்.
ப்ரம்ஹாசாஸெள அதிபதி : ச ப்ரம்ஹாதிபதி :
என்ற கர்மதாரய ஸமஸத்தை, நிபாதஸ்தபத் யதிகரண ந்யாயப்படி ஆச்ரயித்து, சிவபெருமான் ப்ராம்மணர், ப்ராம்மணர்களுக்கு அதிபதி என்பதை ஈசான மந்த்ரம் நன்கு வெளியிடுகிறது.
ஈசான ஸர்வவித்யானாம் …… ப்ரம்மணோதிபதி:
சுலோகம் 35
பூஜா தமுஷ்டுஹிவதா விஹிதா மஹேச
மந்த்ரேண வாங்மனஸ காய நிபந்தனாதே |
ஸர்வாபி ரப்யுபநிஷத்பி ருபாஸனோக்தா
நாராயணோப நிஷதம் பரிபாவயாம : ||
பகவத்பத வாச்யம்போல, பூஜாசேஷித்வம் என்பதும் சிவபெருமானுக்கு லக்ஷணம் அதிவ்யாப்தி இல்லாததாகச் சொல்ல முடியும் என்று கூறப்படுகிறது.
பதவுரை
மஹேச – சிவபெருமானே ! தமுஷ்டுஹிவதா மந்த்ரேண – தமுஷ்டுஹி என்ற பதத்துடன் ஆரம்பிக்கும் சதருத்ரீயமந்த்ரத்தினால், தே – உம்முடைய, வாங்மனஸ் காய நிபந்தனா பூஜா – வாயால் துதிப்பதும் மனதால் த்யானிப்பதும் உடம்பால் நமஸ்கரிப்பதுமாகிய பூஜையானது விஹிதா –விதிக்கப்பட்டிருக்கிறது, ஸர்வாபி ருபநிஷத்பி:- எல்லா உஅபநிஷத்துக்களால், உபாஸனேக்தா – உபாஸனை சொல்லப்பட்டிருக்கிறது. அபி – ஆனாலும், நாராயணோப நிஷதம் – நாராயணோப நிஷத் என்ற மஹோப நிஷத்தை, பரிபாவயாம :- யுக்திகளைக் கொண்டு தத்வார்த்தம் என்ன வெளியாகிறது என்பதாக விமர்சனம் செய்வோம். மஹோப் நிஷத்தில் சிவன் உபாஸிக்கப்படுவதாகவும் முகுந்தன் உபாஸகனாகவும் தாத்பர்யம் வெளிப்படுத்தப்பட்டால், மற்ற உபநிஷத்துக்களிலும் சிவபெருமான்தான் உபாஸ்யர் என்ற கருத்து தெளிவாகி விடும். என்ற நோக்கத்துடன், 36 முதல் 55 முடிய, 20 செய்யுள்களால், மஹோப்நிஷத் உபாஸ்யத்வம் என்ற மூன்றாவது லக்ஷணத்தை அதிவ்யாப்தி, அவ்யாப்தி தோஷம் இல்லாமல் ஸமன்வயப் படுத்துகிறார்.
ய: எவர் த்ரிஷு அக்னிமனீகம், ஸோமம், சல்யம் விஷ்ணும் தேஜனம் – என்ற சுருதிப்படி கட்டை, தார், கூறு என்ற மூன்று பாகங்களாக அமைந்த, விஷ்ணு, ஸோமன், அக்னி, தேவர்களாகிய பாணத்தை உடையவரும், அல்லது கர்ணபர்வசரிதப்படி விஷ்ணுவை பாணமாக கொண்டவரும், ஸுதன்வாலிங்க புராணப்படி மேருவை வில்லாகக் கொண்டவரும், கர்ணபர்வப்படி ஸம்வத்ஸர தேவதையை வில்லாகக்கொண்டவரும், அல்லது சாந்திபர்வப்படி பிரணவம் என்ற ஓங்காரத்தை வில்லாகக் கொண்டவரும், (ஓங்காரம் வில்லாகவும், காயத்ரீ நாணாகவும், பஞ்சாக்ஷரங்களை பாணமாகவும் வைத்து த்ரிபுரஸம்ஹாரம் செய்ததாக சாந்தி பர்வா சொல்லிகிறது,) ப்ரணவ வ்யாக்ருதி ஸஹிதி காயத்ரீ ஜபத்தாலும், பஞ்சாக்ஷர ஜபத்தாலும், ஸ்தூல, ஸூக்ஷ்ம, காரண மென்ற முப்புரம் நீங்கி முக்தியடையலாம் என்ற தாத்பர்யத்தை விளக்குகிறது.
ய: விச்வச்யபேஷஜஸ்ய க்ஷயதி ஸம்ஸார நிவ்ருத்தி மருந்தாகிய ஞானத்துக்கு எவர் இருப்பிடமோ, எவர் ஞானப்ரதாதாவோ, தமு – அந்த சிவபெருமானையே, ஏ மனதே ஸதுஹி – துதிப்பாயாக, மஹே – உத்ஸவ காலத்தில், ஸோமனஸாய – நல்ல மனம் பெறவேண்டி, தமுயக்ஷ்வ அவரையே குறித்து மனதால் த்யானம் செய். அஸுரம் – உயிரைக் கொடுக்கும் ஆபத்பாந்தவனாகிய, ருத்ரம் தேவம் – ருத்ரக் கடவுளை, நமோபி :- நமஸ்காரங்களால் துவஸ்வ – பணிவிடை செய்வாயாக. என்று ருக் வேதமந்த்ரம் முக்கரணங்களால் பூஜிக்க வேண்டியது சிவன் ஒருவனையே என்ற விதியை, உபரிதாரண ந்யாயப்படி கற்பிக்க வேண்டுமென்பதத் தெளிவாகக் கூறுகிறது. மேற்படி ந்யாயம் மீமாம் ஸகர்களுக்குப் பிரஸித்தம். வாயவீய ஸம்ஹிதையில் ஸாம்பூஜா த்ரிதா ப்ரோக்தா மனோவாக்காய ஸாதனை : || என்று சொல்லப்படுவதும் காண்க.