புதன், 19 செப்டம்பர், 2018

பழநி முருகனின் கோவண ரகசியம்!

ஆறுபடைவீடுகளில் ஒன்றான பழநியில் அருளும் முருகனுக்கு ஞானப் பழம் என்ற பெயருண்டு. இங்கு முருகப்பெருமான், மாலையில் ராஜ அலங்காரத்தில் காட்சி தருவார். இது போலியான உலக வாழ்வைக் குறிக்கிறது. இவரே காலை வேளையில் கோவணத்துடன் காட்சியளிப்பார். நேற்று இருப்பது இன்றில்லை என்பதை இந்த வடிவம் காட்டுகிறது. இந்த உலக வாழ்வு போலியானது. உன்னோடு நான் உடுத்தியிருக்கும் கோவணம் கூட வரப்போவதில்லை. ஏதுமில்லாமல் வந்தாய், ஏதுமில்லாமல் போவாய், என்று முருகப்பெருமான் இத்தலத்தில் உணர்த்துகிறார். இந்த ஞானத்தை உலக மக்களுக்கு வழங்கும் கனி போன்று திகழ்வதால் இங்கு முருகனுக்கு ஞானப்பழம் என்ற பெயர் ஏற்பட்டது. இதனால்தான், இங்கு வந்த அவ்வையாரும் முருகனை பழம் நீ! என்று அழைத்தாள்.
அரவானின் தியாகம்!

பாண்டவர்களின் தர்ம யுத்த வெற்றிக்காக தன்னுயிரையே பலி கொடுத்த அரவான்! அரவானின் தியாகம் தான் பாரதப் போரில் பாண்டவர்களின் வெற்றிக்குக் காரணம் என்று புராணம் கூறுகிறது. அர்ச்சுனனுக்கும், நாககன்னிக்கும் பிறந்தவன் அரவான். சாமுத்திரிகா லட்சணம் அனைத்தும் கொண்ட அழகன். இவன் பாரதப் போருக்காக களப்பலியான கதை சற்று வித்தியாசமானது. பாண்டவர்களுக்கும் துரியோதனாதியர்களுக்கும் போர் தவிர்க்க முடியாததாகி விட்டது. இதில் பாண்டவர்கள் வெற்றியடைய பகவான் கண்ணன் பல யுக்திகளைக் கையாண்டார். பாண்டவர்களில் ஒருவரான ஜோதிட மேதை சகாதேவனைச் சந்தித்தார் கண்ணன். சகாதேவா! இந்தப் போரில் நாம் வெற்றி பெற வழி என்ன? சாஸ்திரப்படி நாம் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டார். ஓலைச்சுவடிகளை எடுத்து ஆராய்ந்த சகாதேவன், சாமுத்திரிகா லட்சணம் கொண்ட இளைஞன் ஒருவனை களப்பலி கொடுத்தால் வெற்றி நிச்சயம் என்றான். சாமுத்திரிகா லட்சணம் கொண்டவர்கள் யார் இருக்கிறார்கள் என்று கண்ணன் யோசித்தார். அப்படிப்பட்டவர்கள் இரண்டே பேர் தான். ஒருவன் அர்ச்சுனன்; மற்றொருவன் அவன் மகன் அரவான். அர்ச்சுனனை களப்பலி கொடுக்க முடியாது. ஏனெனில் இந்தப் போருக்கு அச்சாணியாக விளங்குபவன் அவன்.
பிள்ளையார் சுழி போட்டு எழுதுவதற்கு காரணம் தெரியுமா?

ஓம் என்ற மந்திரத்திற்கு பிறகே கணேசாய நமஹ, நாராயணாய நமஹ, சிவாயநம என்று மந்திரங்களைச் சொல்கிறோம். இதில் ஓம் என்பதை அ, உ, ம் என்று பிரிக்க வேண்டும். அதாவது அ, உ, ம்  என்ற எழுத்துகளை இணைத்தால் ஓம் என்று வரும். அ என்பது படைப்பதையும், உ என்பது காப்பதையும், ம் என்பது அழிப்பதையும் குறிக்கும்.  அ என்பது முதலெழுத்து. இது வாழ்வின் ஆரம்பத்தை குறிக்கிறது. உ என்பது உயிரெழுத்துக்களின் வரிசையில் ஐந்தாவதாக வருகிறது. மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து உறுப்புகளை மனிதர்கள் அடக்கி வைத்துக் கொண்டால், ஆயுள் அதிகரிக்கும் என்பதும், ஆயுள் கூடக்கூட, மனிதர்கள் துவங்கியது தடையின்றி நடக்கும் என்பதும் தெரிந்த விஷயம். மேலும், உ என்பது காத்தல் எழுத்து என்பதால், இறைவன் நம்மை பாதுகாப்பதைக் குறிக்கிறது. நம் செயல்கள் தடையின்றி நடக்க வேண்டுமானால் நமக்கொரு பாதுகாப்பு வேண்டும். இதற்காகவே உ என எழுதுகிறோம்.
பகவான் பாடிய பகவத் கீதை!

பகவத் கீதா என்பதற்கு பகவான் பாடியது என்று பொருள். கீதம் என்றால் பாட்டு. கீதம் என்று சொல்லாமல் கீதா என்று சொன்னதன் காரணம் என்ன? கீதை உபநிஷத்துகளின் சாரம். உபநிஷத் என்பது பெண்பாலாக உள்ள வட சொல். ஆகவே, கீதா என்பதும் பெண் பாலில் இருப்பது; உபநிஷத்துகளின் மாற்று உருவமே கீதை என்பதைக் காட்டுகிறது. பாண்டவர்களை துரியோதனன் நாடு கடத்திவிட்டான். அவர்கள் வனவாசமும் அஞ்ஞாத வாசமும் செய்து திரும்பினார்கள். பிறகு, தம் ராஜ்ஜியத்தைத் தம்மிடம் ஒப்படைக்கும்படி கிருஷ்ண பகவானைத் துரியோதனனிடம் தூது அனுப்பினார்கள். ஆனால், பேராசை கொண்ட துரியோதனன், பாண்டவர்களுக்கு ஊசிமுனை இடம் கூட தரமாட்டேன் என்றான். இனி, யுத்தம் செய்தே நாட்டைக் கைப்பற்ற வேண்டும் என்று பாண்டவர்கள் முடிவு செய்தார்கள். துரியோதனனும் அர்ஜுனனும் கண்ணபிரானின் உதவியைப் பெறுவதற்காக துவாரகைக்குச் சென்றனர். பகவான், நான் ஆயுதம் எடுப்பதில்லை. நிராயுதபாணியான நான் வேண்டுமா? அல்லது என் சேனை அனைத்தும் வேண்டுமா? என்று கேட்டார். துரியோதனன், அவருடைய சேனையே தனக்கு வேண்டும் என்றான். அர்ஜுனன், கண்ணபிரானின் உதவிதான் தேவை என்றான்.

யுத்தம் தொடங்க, இரு திறத்தாரின் சேனைகளும் அணிவகுத்து நின்றனர். கிருஷ்ணரின் ரதத்தில் அர்ஜுனன் அமர்ந்து, இரு பக்கத்து சேனையில் இருப்பவர்களையும் பார்த்தான். அவர்கள் எல்லோருமே தனது உறவினர்களாகவும் ஆசிரியர்களாகவும் இருப்பதைக் கண்டான். அவனுடைய மனம் கலங்கியது. எனக்குப் போர் வேண்டாம்; அரசு வேண்டாம்; போகங்கள் வேண்டாம்; என்றெல்லாம் பலவாறு வருந்தினான். அர்ஜுனனின் அந்த வருத்தமே, அர்ஜுன விஷாத யோகம் என்ற, பகவத்கீதையின் முதல் அத்தியாயமாக உருவெடுத்தது. இந்த அர்ஜுன விஷாத யோகமே, அடுத்துப் பதினேழு அத்தியாயங்களில் பகவான் சொல்லிய  உபதேசமான பகவத் கீதைக்கு வித்து போன்றது. வித்து என்றால் விதை. வித்தினால் வித் (ஞானோபதேசம்) உண்டாயிற்று. அர்ஜுனனை நிமித்தமாகக் கொண்டு பகவான் உபதேசித்த ஆத்ம ஞானத்தையே பகவத் கீதை என்ற பெயரால் நாம் போற்றுகிறோம். பகவத் கீதை என்பது தனிப் புத்தகமாக எழுதப்பெறவில்லை. மகாபாரதத்தில் பீஷ்ம பர்வம் 25-ஆம் அத்தியாயம் தொடங்கி 42-ஆம் அத்தியாயம் வரையிலான ஒரு பகுதியாகவே பகவத் கீதை அமைந்திருக்கிறது. பாரத: பஞ்சமோ வேத என்றபடி, பாரதம் ஐந்தாவது வேதம். வேதமோ ஞான காண்டம், கர்ம காண்டம் என்று இரு வகையாகப் பிரிந்திருக்கிறது. வேதத்தில் உள்ள ஞான காண்டம் போலவே, பாரதத்திலுள்ள பகவத் கீதை என்பதும் ஞான காண்டமாகும். வேதத்தில்  அந்த பாகத்தை உபநிஷத் என்கிறார்கள்.

ஆகவே, பகவத் கீதையைப் பெரியோர்களிடம் உபதேச ரூபமாக முதலில் கிரகித்து, அதன் பொருளையும் நன்கறிந்து தினந்தோறும் பாராயணம் செய்து வந்தால், சகல உபநிஷத்துகளையும் பாராயணம் செய்வதால் உண்டாகும் நற்பலன்கள் நமக்குக் கிட்டுவது உறுதி. பகவத் கீதைக்கு அன்று முதல் இன்று வரை எத்தனையோ உரைகள் எழுதியிருக்கிறார்கள். அவற்றை ஓரளவு மட்டுமே கணக்கிட்டு, மூவாயிரத்துக்கும் அதிகமான உரைகள் இருக்கின்றன. பகவத்கீதைக்கு சங்கரர், ராமானுஜர், மத்வாசாரியார் என்ற ஆசார்யர்கள் முறையாக எழுதிய பாஷ்யங்களையே உயர்ந்தவையாகவும் குருமூலமாக உபதேச முறையில் கற்றுத் தெரிந்து கொள்ள வேண்டியவையாகவும் கருதிப் போற்றுகிறார்கள். ஸ்ரீ சங்கராசாரியர் அத்வைத சித்தாந்தத்தைப் பின்பற்றியும்; ஸ்ரீராமானுஜர் விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தைப் பின்பற்றியும்; ஸ்ரீமத்வாசாரியர் துவைத சித்தாந்தத்தைப் பின்பற்றியும் கீதைக்கு பாஷ்யங்களை இயற்றியிருக்கிறார்கள். இவர்களுக்குப்பின் இந்த ஆச்சார்ய பரம்பரையில் வந்த சில மகான்கள், இந்த ஆச்சார்யர்களின் கீதா பாஷ்யங்களுக்கு டீகா என்ற விளக்க உரை எழுதியிருக்கிறார்கள். இந்த வைதீக சம்பிரதாய முறையிலான உரைகளைத் தவிர, சமஸ்கிருதத்திலும், கிரீக், ஜெர்மன், லத்தீன், ஆங்கிலம், பிரெஞ்ச், ருஷ்யன் முதலிய பல வெளிநாட்டு மொழிகளிலும், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, மராட்டி, வங்காளி, குஜராத்தி போன்ற நம் நாட்டு மொழிகளிலும் ஆயிரக்கணக்கில் பகவத் கீதைக்கு உரை எழுதியிருக்கிறார்கள். லோகமான்ய பால கங்காதர திலகர் எழுதிய கர்ம யோகம், மகாத்மா காந்தி எழுதிய அநாஸக்தி யோகம், ராஜாஜி எழுதிய கை விளக்கு ஆகிய கீதை உரைகள் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு நம் நாட்டிலும் பிற நாடுகளிலும் பகவத் கீதையின் மகிமையைப் பறைசாற்றுகின்றன.
ராமர் பட்டாபிஷேகம் எப்படி நடந்தது?

ஸ்ரீராமபிரானுக்கு பட்டாபிஷேகம் எப்படி நடந்தது? எத்தனையோ ராமயணங்கள் இருந்தாலும், அதில் வால்மீகி ராமாயணத்துக்கு ஒரு சிறப்பு உண்டு. அந்தக் காவியத்தில் ராமனுக்குப் பட்டாபிஷேகம் நடந்ததை வால்மீகி எப்படி வர்ணிக்கிறார்?

அதிகாலையின் அற்புதம் திவ்யமாக இருக்கிறது. மதுரமான இசையாலும், கருவிகளின் ஒலிகளாலும், தங்க ஆபரணங்கள் அணிந்து உத்தமப் பெண்களின் நாட்டியங்களாலும், தாங்கள் எழுப்பப்டுவதைக் கண்டு நாங்கள் சந்தோஷம் கொள்கிறோம்.  வானவீதியில் முழுமையான ஒளிக்கிரணங்களுடன் அனைத்து உலகுக்கும் தேஜஸையும் ஆயுளையும் வழங்கிக் கொண்டிருக்கும் நடுப்பகல் சூரியன் போன்று, தாங்கள் பட்டாபிஷேகப் பெரும் வைபவத்தோடு, சிம்மாசனத்திலிருந்து எங்கள் அனைவருக்கும் அருள்பாலித்து நலம் புரிவதைப் பார்த்துப் பார்த்து மகிழ்ச்சி கொள்கிறோம். பூமி உள்ள வரையிலும் தாங்கள் பரிபாலனம் நடத்த வேண்டும் என்பதே எங்கள் பிரார்த்தனை! இவ்வாறாக பரதன், தலைமீது கரங்களைக் கூப்பியவண்ணமாக ஸ்ரீராமனிடம் வேண்டினான்.

பூஜிதா மாமிகா மாதா
தத்தம் ராஜ்யம் இதம் மம
தத் ததாமி புனஸ் துப்யம்
யதாத்வம் ததா மம

முன்பு எனக்கு அரசு தந்து என் தாயைப் போற்றினாய். அதை அப்படியே உனக்குத் தருகிறேன். பரதனின் சரணாகதியை அயோத்தி ராமனும் ஏற்றார். ஆசனத்தில் அமர்ந்தார். பட்டாபிஷேகத்துக்குரிய பணிவிடைகள் எல்லாம் சீராகத் தொடங்கின. ராம லக்ஷ்மண பரத சத்ருக்னார்களுடைய அலங்காரம் நடந்தேறியது. சீதாதேவிக்கு, தசரத பத்தினிகளே அலங்காரம் செய்தனர். வந்திருக்கும் வானரப் பெண்களுக்கும் அழகு செய்கிறாள் கௌசல்யை.

ததோ வானர பத்னீனாம்
ஸர்வாஸாமேவ சோபனம்
சகார யத்னாத் கௌஸல்யா
ப்ரஹ்ருஷ்டா புத்ரவத்ஸலா

சத்ருக்னருடைய ஆணையின் பேரில் இஷ்வாகு குலத்தின் தேரோட்டியான சுமந்திரர், கம்பீரமான குதிரைகள் பூட்டிய ரதத்தைக் கொணர்ந்தார். கதிரவன் போன்று ஒளிமயமாகக் காட்சிதரும் அந்த ரதத்தில் ஸ்ரீராமன் ஏறி அமர்ந்தார். சுக்ரீவனும் அனுமனும் உடன் சென்றனர். சுக்ரீவன் மனைவியும் சீதாபிராட்டியும், திவ்யமான அலங்காரத்துடன் அவர்களுடனே சென்றனர். ஸ்ரீராமனுக்கு சகல நலங்களும் சுகமும் தனமும் பெருகுவதற்கும், அயோத்தி நகரமும் அந்த நாடும் என்றும் மங்கலம் பெறுவதற்கும் உரிய சுப காரியங்களைச் செய்யுமாறு அனைவரும் வசிஷ்டரிடம் வேண்டினர். அமைச்சர்கள் பின்தொடர ஜய விஜயபீவ என்ற முழக்கம், ஜயகோஷமுமாகக் காற்றுடன் அலை மோதியது. ரகுராமனான, கல்யாண ராமனான, சீதா ராமனான, தசரத ராமனான, கல்யாண குனோஜ்வலனான, பித்ருவாக்ய பரிபாலனான, ஏக பத்னி விரதனான, சர்வஜன ரக்ஷகனான ஸ்ரீராமன் அயோத்தி நகரை நோக்கி வந்து கொண்டிருந்தார். மஞ்சள் கலந்த அட்சதையுடன் பிராமணர்களும் உடன் சென்றனர். பசுக்களும் கோலாகலத்தில் கலந்து சென்றன. குடிமக்களின் குதூகலம் பொங்க, ஸ்ரீராமன் அரண்மனைக்குள் அடியெடுத்து வைத்து, கௌசல்யாதேவி, சுமித்ரா தேவி, கைகேயி தேவி மூவரையும் நமஸ்கரித்தார். சத்ருக்னர், ராமருடைய அபிஷேகத்துக்காக சுக்ரீவனிடம் வானரர்களை அனுப்பப் பணித்தார். பொழுது புலரும் முன் வானரர்கள், ரத்னமும் தங்கமும் இழைத்த குடங்களில், கடலிலிருந்தும் நதிகளிலிருந்தும் புண்ணிய தீர்த்தத்தைக் கொணர்ந்தார்கள். ஜாம்பவான், அனுமன், வேகதர்சீ, சிஷபன் ஆகியோர் ஐந்நூறு நதிகளிலிருந்து புண்ணிய தீர்த்தத்துடன் வந்தார்கள். ஸுஷேணன், ரிஷபன், கவயன், நளன் நால்வரும் முறையே நாலா திசை சமுத்திரங்களிலிருந்தும் புனித நீரைக் கொணர்ந்தார்கள்.

பேரருள் பெற்றவரும் தசரத குல குருவுமான வசிஷ்ட மகரிஷி, புலன்களையும் புத்தியையும் சமன் செய்து, பிராமணர்களின் சம்மதத்துடன் ஸ்ரீராமனை ரத்தின ஒளிவீசும் சிம்மாசனத்தில் அமரும்படி செய்தார்.

ராமம் ரத்னமயே பீட
ஸஹஸுதம் ந்யவேசயத்

பட்டாபிஷேக வைபவம் பவித்திரமாகத் திகழ்ந்தது. வசிஷ்டர், வாமதேவர், ஜாபாலி, காச்யபர், காத்யாயநர், ஸுயஜ்ஞர், கௌதமர், விஜயர் ஆகிய எட்டு மகா ஞானியர்களும் நிகழ்த்திய பட்டாபிஷேகம். எண்மரும் வேதச் சீர்மையுடன் மந்திரங்களை உச்சாடனம் செய்து ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியை மணமிகுந்த திரவியங்கள் கலந்த புண்ணிய தீர்த்தத்தால் நெறிமுறைகளின்படி பட்டாபிஷேகத்தை நிறைவேற்றினார்கள். வானத்தில் திக்பாலர்களும் தேவகணங்களும் பேருவகை கொண்டார்கள். சத்ருக்னர் வெண்குடை பிடித்தார். சுக்ரீவன் வெண் சாமரம் வீசினார். வாயுபகவான் தங்கத் தாமரைகளாலான ஒளி கூடிய மாலைகளையும், ஒன்பது ரத்தினம் சேர்ந்த முத்து மாலையையும் கொணர்ந்தார். பூமி செழித்தது. மரங்களில் கனிகள் நிறைந்தன. பசுக்களையும், கன்றுகளையும், தங்க நாணயங்களையும், ஆபரணங்களையும் ஸ்ரீராமன் தானமாக வழங்கினார். சுக்ரீவனுக்குத் தங்க மாலையையும், அங்கதனுக்குத் தங்கத்தோள் வளைகளையும் வழங்கினார். சீதாதேவியிடம் சந்திரன் போன்று பிரகாசமான முத்துமாலையை வழங்கினார். பிராட்டியும் மணாளனின் விருப்பத்தை ஜாடையால் அறிந்து, அம்மாலையை அனுமனுக்கு அளித்தாள். விபீஷணர், ஸ்ரீரங்க விமானத்தைப் பெற்று லங்காபுரி சென்றார். தசரத குமாரனான ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி, குடிமக்கள் அனைவரையும் தமது குழந்தைகளாக நினைத்து பரிபாலனம் நடத்தி வந்தார். லக்ஷ்மணனை இளவரசாக இருக்கக் கோரினார். லக்ஷ்மணர் இசையவில்லை. பரதனுக்கு இளவரசுப் பட்டம் நிகழ்ந்தது. சிம்மாசனத்தைத் தாங்கி நிற்கிறான் அனுமன். அங்கதன் வாள் ஏந்த, பரதன் வெண்குடை தாங்க, மற்ற இரு சகோதர்களும் சாமரம் வீச, சீதையின் உவகை ஓங்க, வசிஷ்டர் மகுடம் சூட்டுகிறார். அச்வமேதம், வாஜபேயம் போன்ற யாகங்களைப் புரிந்து, ஸ்ரீராமன் ஆட்சி ராமமயமாகவே இருந்தது.
கோயிலில் கொடுக்கும் மலர்களை என்ன செய்ய வேண்டும்?

ஆலயங்களில் நமக்கு அளிக்கப்படும் மலர்கள் மற்றும் அனைத்து பிரஸாதங்களும் நிர்மால்யம் என போற்றப்படுகிறது. நிர்மால்யம் எனில் அழுக்கற்றது, தூய்மையானது. அவற்றில் இறைவனின் அருட்சக்தி நிறைந்து இருக்கும். அவற்றை வெறும் மலர் என்றோ அன்னம் என்றோ பார்க்கக்கூடாது. ரூபாய் நோட்டுக்கும் வெறும்தாளுக்கும் வேறுபாடு இருக்கிறதல்லவா. ரூபாய் நோட்டுக்களிலும் கூட அதனில் பதிக்கப்பட்ட எண்களைப் பொறுத்து மதிப்பு மாறுகிறது. இதுபோன்று ஒவ்வொரு கடவுளர்களின் பிரஸாதமும் ஒவ்வொரு சக்தி உடையது. அவற்றை நாம் பக்தியுடன் கண்களில் ஒற்றிக் கொண்டு, நமது நெற்றியிலும், இருதயத்திலும் வைத்து அந்த இறை அருள் நம்முள் உட்புகுவதாக எண்ணுதல் வேண்டும். பிறகு வீட்டில் பூஜை அறை இருப்பின் அங்கு வடக்கிலோ, வடகிழக்கு திசையிலோ ஒரு தாம்பாளத்தின் மீது வைத்துவிடல் வேண்டும். வீட்டில் பெண்கள் அவற்றிலிருந்து சிறிது எடுத்து பக்தியுடன் தலையில் வைத்துக் கொள்ளலாம். மறுநாள் காய்ந்த மலர்களை நீர்நிலைகளிலோ, மரங்களின் கீழோ வைத்திட வேண்டும். நமது வீட்டில் உள்ள இறை உருவங்களுக்குவேறு மலர்களை சார்த்துவது சிறந்தது.
முறைப்படி நடைபெறும் திருமணத்தின் சடங்குகளின் விபரம்!

நடைமுறையில் உள்ள மாங்கல்ய தாரணத்திற்குப்பின், மணமகன் தன் கீழ் நோக்கிய வலது உள்ளங்கையால், மணமகளின் மேல் நோக்கிய வலது கை ஐந்து விரல்களையும் சேர்த்துப்பிடிப்பது தான் பாணிக்ரஹனம்.

கைத்தலம் பற்றியவாறு அக்னிக்கு வடபுறத்தில் மணமகன் தன் இடது கையால், மணமகளின் கால் கட்டை விரலை பிடித்துக்கொள்ள வேண்டும். அன்னவளமை, உடல் வலிமை, விரதங்களில் சிரத்தை, சுகவாழ்க்கை, செல்வச்செழுமை, பருவ காலங்களில் தன்மை, யாகயக்யஞங்களால் பெருமை என்ற ஏழு பாக்கியங்களையும் விஷ்ணு எப்போதும் அளித்துக் காப்பாராக, என்று கூறி ஏழு அடி எடுத்து வைக்க வேண்டும். இதுவே ஸப்தபதி எனப்படும். இந்த ஏழுடிகளை கடந்து வந்து நாம் நண்பர்களாகி விட்டோம். இனி வாழ்நாள் முழுவதும் அன்புடனும் ஆதரவுடனும் இணைபிரிய மாட்டோம். இன்ப, துன்பங்களைப் பகிர்ந்து மனம் ஒன்றி வாழ்வோம் என்று மணமகன், மணப்பெண்ணிடம் உறுதி மொழி அளிக்கிறான்.
கல்வியில் சிறந்து விளங்க செல்ல வேண்டிய கோயில்!

தேர்வில் அதிக மதிப்பெண் பெறவும், கல்வியில் சிறந்து விளங்கவும் திருவாரூர் அருகில் உள்ள விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் உள்ள மதுரபாஷினிக்கு வழிபாடு செய்கின்றனர். சிவனுக்கு வெப்பமான நெற்றிக்கண் இருப்பதைப்போல், இத்தல அம்மன் மதுரபாஷினிக்கு சந்திரனைப் போல் குளிர்ச்சியான நெற்றிக்கண் இருக்கிறது. பங்கிம் சந்திர சாட்டர்ஜியால் எழுதப்பட்ட வந்தேமாதரம் தேசபக்திப்பாடலில் வரும் மதுரபாஷிநீம் என்ற வரிக்கு அடிப்படையான இவள், மனிதனுக்கு தேவையான 34 சவுபாக்கியங்களையும் தரும் ÷க்ஷõடாட்சர தேவியாக, ராஜராஜேஸ்வரியாக, கல்விக்கு அரசியாக அருளுகிறாள். இதனால் இத்தலம் வித்யாபீடமாகக் கருதப்படுகிறது. அகத்தியர் இவளை, ஸ்ரீசக்ர தாரிணி, ராஜசிம்மாசனேஸ்வரி, ஸ்ரீலலிதாம்பிகையே என புகழ்ந்து போற்றியுள்ளார். கல்வி மேல்படிக்க செல்லும் மாணவர்கள் இந்த அம்மனுக்கு தேன் அபிஷேகம் செய்து, அதனை சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி பெருகி அறிவாற்றல் வளரும். அதேபோல் குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்கும் பெற்றோர்கள் மதுரபாஷினிக்கு தேன் அபிஷேகம், சிறப்பு அர்ச்சனை செய்து, அந்த தேனை குழந்தையின் நாவில் தடவி வேண்டிக்கொண்டு, பின்பு பள்ளிகளில் சேர்க்கும் நடைமுறையும் இங்கு உள்ளது.இதனால் குழந்தைகளின் கல்வி சிறக்கும் என்பது நம்பிக்கை. வாய் பேச முடியாதவர்கள், திக்கு வாய் உள்ளவர்கள் மதுரபாஷினி அம்மனை வழிபாடு செய்தால் விரைவில் சிறந்த பலன் கிடைக்கும் என்பது நிச்சயம்.

இருப்பிடம்: திருவாரூர் பஸ் ஸ்டாண்டிலிருந்து தஞ்சாவூர் செல்லும் வழியில் 2 கி.மீ. தூரத்தில் கோயில் உள்ளது.

போன்:  98947 81778, 99428 81778.
சித்ரகுப்தனின் அருள் பெற வேண்டுமா?

உலக மக்களின் கர்மபலன்களை நியாயம் தவறாமல் நிர்ணயிப்பவர் சித்ரகுப்தர் ஆவார். என்றும் பதினாறு சிரஞ்சீவியாக மார்க்கண்டேயர் இருப்பது போல், இவரும் பன்னிரண்டு வயது சிரஞ்சீவியாகத் திகழ்பவர். தேவ ஸ்வரூபர். பிரம்ம குரு. அனைத்து லோகங்களின் அமைப்பைப் பரிபாலனம் செய்பவர். உலகத்து உயிரினங்கள் அன்றாடம் செய்யும் பாவ புண்ணிய செயல்களைத் தொகுத்து தனது பதிவேட்டில் பதிய வைக்கும் தலையாய பணியைப் பொறுமையுடன் செயல்படுத்துபவர். மனிதர்கள் தங்களுக்குத் தானே ஆத்ம விசாரம் செய்துகொள்வதற்கு வித்திடுபவரும் இவரே! நொடிக்கு நொடி மாறிக்கொண்டே இருக்கும் கர்மவினைகளை இம்மியும் பிசகாமல் குறிப்பெடுப்பது அவ்வளவு எளிதா என்ன! சித்ரகுப்த மகராஜர் சாதாரணமாகக் கிரீடம் தரித்த தோற்றத்தில் காட்சியளிப்பார். மராட்டிய புண்ணிய புருஷர்களான ஏகநாதர், நாமதேவர் அணிந்திருப்பது போன்று துணியிலான தலைப்பாகையிலும் சிறப்புத் தோற்றத்தில் காட்சியளிக்கும் கோலமும் உண்டு.

உமாமகேஸ்வரரின் அருளால் தோன்றியவர்! பார்வதி தேவியின் ரூபமாகவும் பராசக்தியின் அவதாரமாகவும் அறியப்படும் இவர், தன் எட்டுக் கரங்களிலும் சித்தர்களை அமர்த்திக் கொண்டுள்ளதோடு, எட்டாவது கரத்தில் கார்க்கினி தேவியை அமுதக்கலசமாகவும் கொண்டு அன்ன வாகனத்தில், ஆயுர்தேவியின் சந்நிதானத்தில் தலைப்பாகை, எழுதுகோல் ஏட்டுடன் அமர்ந்திருக்கும் சிறப்புக் கோலத்திலும் சித்ரகுப்தரைத் தரிசிக்கலாம்! சித்ரகுப்தருக்கு பட்டுப் பீதாம்பரத் தலைப்பாகை வந்து சேர்ந்ததற்கு ஒரு சுவாரஸ்யமான பின்னணியும் உண்டு! ஒருமுறை பலகோடி ஜீவன்களின் கர்மவினைகளைக் கணக்கெழுதும் போது, அவருக்கு பெருத்த ஏமாற்றம் ஏற்பட்டது. அந்த வினைப்பயன் கணக்கில் பெரும் பகுதி தீவினையாகவே இருப்பதைக் கண்டு கலங்கினார். தனது எழுதுகோலால் புண்ணிய ஆத்மாக்களின் கணக்கை எழுதவே முடியாதோ? இது என்ன சோதனை? இப்படி ஒரு இக்கட்டில் சிக்கிக்கொண்டு விட்டோமே என வருந்தியவர், தன் தலையில் ஓங்கிக் குட்டிக்கொண்டார். அவ்வளவு தான்! தன் வேலையில் கண்ணும் கருத்துமாய் இருக்காமல் ஏன் விசாரப்பட வேண்டும் என இறைவன் நினைத்தாரோ என்னவோ, அவருக்கு ஒரு சோதனையை ஏற்படுத்தி வேடிக்கை பார்த்துவிட்டார். அழுத்திக் குட்டிக்கொண்டதில் சித்ரகுப்தருக்கு தீராத மண்டையிடி ஏற்பட்டுவிட்டது.

தாங்கிக்கொள்ள முடியாத வலியால் அவதிப்பட, தனது அன்றாட வேலையில் அவரால் கவனம் செலுத்த முடியவில்லை. அதனால் கர்மங்கள் தேக்கமடைய, அனைத்து லோகங்களும் செயலிழக்க ஆரம்பித்தன. பதற்றமடைந்த சித்ரகுப்தர் ஸ்ரீகிருஷ்ணரை மானசீகமாகத் தொழுது வேண்டிக்கொண்டார். பரந்தாமன் மனமிரங்காமல் இருப்பாரா? சித்ரகுப்தர் முன் தோன்றினான் கேசவன்! சித்ரகுப்தா! தலைவலி ரொம்பப் பலமோ? என்று புன்முறுவலுடன் வினவிய மாயவனை அடிபணிந்த கணக்கர், பிரபோ! என்னை இந்த இக்கட்டிலிருந்து காத்தருளுங்கள் சுவாமி! என வேண்டினார். முறுவலித்த மாதவன், தன் இடையில் அணிந்திருந்த பட்டுப் பீதாம்பரக் கச்சையை அவிழ்த்து, சித்ரகுப்தரின் சிரசில் கிரீடமாக அணிவித்தார். அதுவரை வாடிய முகத்துடன் தென்பட்டவர், மனம் லேசாகிப் போனதை உணர்ந்தார். வாட்டியெடுத்த தீராத் தலைவலி, உடனே அகன்றது. தலைக்கு வந்த வலி, தலைப்பாகையை அணிவித்ததும் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது! அகமகிழ்ந்த சித்ரகுப்தன், மாலவனைத் தொழுதுப் போற்றினார். இன்றிலிருந்து உன்னை வழிபடுவோருக்கு, தங்கள் குறைகளைக் களைந்து அவற்றை நிவர்த்தி செய்துகொள்ளும் பக்குவம் உண்டாகட்டும்! என்ற வரத்தை அருளினார் பரந்தாமன். மறுபடியும் கணக்கர் வேலையில் மூழ்கிவிட்டார் சித்ரகுப்தர். ஆகவே வேணுகானம் இசைக்கும் ஸ்ரீகிருஷ்ணரைத் தினமும் வழிபட்டால், சித்ரகுப்தரின் அருட்பார்வை நம்மீது பரவும் என்பது ஐதீகம்.
நவராத்திரி

ஒவ்வொரு காரியம் செய்வதற்கும் ஒரு சக்தி வேண்டும். கண் இருந்தால்தான் பார்க்க முடியும், குருடனால் பார்க்க முடியாது. காதுதான் கேட்கும், செவிடனால் கேட்க முடியாது. இப்படி ஒவ்வொரு பணி செய்வதற்கும் ஒரு சக்தி வேண்டும். இந்த சக்திகளுக்கெல்லாம் சக்தி அளிப்பவள் பராசக்தி. அந்த பராசக்திக்கு உருவம் கிடையாது. அது மின்சாரம் போல. காண முடியாது, உணரத்தான் முடியும். ஆனால் அதை பூரணமாக உணர விரும்பி உருவமாக அமைத்து வழிபடும் போது அதற்கு சில விசேஷ சக்திகள் கிடைக்கின்றன. அதை வைத்துத்தான் துர்கா, லட்சுமி, சரஸ்வதி என்று மூன்று சக்திகளாக வழிபடுகிறோம்.

மனிதன் காலை எழுந்ததும் முதலில் தன் கரத்தை உற்றுப் பார்க்கவேண்டும். கையின் மேல்புறத்தில் லட்சுமியும், நடுவில் சரஸ்வதியும், கீழே துர்க்கையும் கண்டு வணங்க வேண்டும் என்று சொல்வார்கள். மனித வாழ்வின் ஆதாரம் செல்வம். அதற்கு அதிபதியான மகாலட்சுமி முதலில், அந்த செல்வத்தை அறிந்து, உணர்ந்து, நல்வழியில் பயன் படுத்த அறிவு அவசியம். அந்தக் கல்வியின் நாயகியான சரஸ்வதி அடுத்து, இத்தனை இருந்தும் இதனைக் கட்டிக் காக்கும் பராக்ரமம், வீரம் வேண்டுமல்லவா? அடுத்ததாக துர்க்கை இருக்கிறாள் என்றும் இந்த வாக்கியத்தை விளக்கம் சொல்வார்கள். அப்படி, காலை எழுந்தவுடன் இந்த மூன்று சக்திகளையும் பிரார்த்தித்துக் கொண்டோமானால் வாழ்க்கையில் கிடைக்கக்கூடிய அத்தனை பலன்களும் மிகச் சுலபமாக நமக்குக் கிட்டுவிடும்.

இதைத்தான் அக்காலத்துப் பெரியோர்கள் தினம் செய்து வந்தார்கள். பிற்காலத்தில் இப்பழக்கம் மிகவும் குறைந்து பூஜை செய்வதோடு சரியென்று மாறி தற்போது அதுவும் அருகி வருகிறது. இப்போது ஏதூவது விசேஷங்களில் மட்டும் பூஜை செய்தால் போதும் என்று பலரும் கருதுகிறார்கள். அதையாவது ஒழுங்காகச் செய்யவேண்டுமென்பதற்காகத்தான் நவராத்திரி, சிவராத்திரி எல்லாம் இருக்கிறது.

பார்வதி தேவியே இரவின் ஸ்வரூபமாகவும், பரமசிவனே பகலின் ஸ்வரூபமாகவும் இருப்பதாக ஒரு புராணம் கூறுகிறது. பொதுவாக இரவிலே பூஜை செய்வது கூடாது. ஆனால் நவராத்திரியிலே மாத்திரம் இரவில் பூஜை செய்யலாம். சிவராத்திரியில் சிவனுக்கு பூஜை செய்யலாம்.

நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் துர்க்கை வழிபாடும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி வழிபாடும், இறுதி மூன்று நாட்கள் சரஸ்வதி வழிபாடும் செய்வார்கள். சரஸ்வதி வழிபாட்டின் இறுதியில், நல்லறிவும், ஞானமும் வேண்டி, விஜயதசமியன்று பூஜையைப் பூர்த்தி செய்வார்கள்.

வடநாட்டிலும் இந்த நவராத்திரி பூஜை மிகச் சிறப்பாகச் செய்யப்படுகிறது. அங்கு விஜயதசமியன்று இந்த பூஜா விக்ரகங்களை பெரிய ஊர்வலமாக எடுத்துச் சென்று சமுத்திரத்தில் கலக்கும் வழக்கம் இன்றும் இருக்கிறது. துர்கா பூஜை என்று கல்கத்தா பகுதிகளில் இன்னும் அது மிகப் பிரசித்தம்.

இதே போன்று வஸந்த பஞ்சமியன்று அஸ்ஸாம், பெங்கால் பகுதிகளில் சரஸ்வதி பொம்மைகளைப் பெரிதாக ஊர்வலமாகக் கொண்டு சென்று சமுத்திரத்தில் கரைப்பார்கள்.

இப்படி துர்கா, லட்சுமி, சரஸ்வதி இந்த முக்கியமான மூன்று சக்திகளுக்கு நாடு முழுவதும் விழா கொண்டாடப் படுகிறது.

துக்கத்தைப் போக்குபவள் துர்க்கை.

செல்வத்தைப் பொழிபவள் லட்சுமி.

ஞானத்தை நல்குபவள் சரஸ்வதி.

இந்த மூன்று சக்திகளின் வழிபாட்டுக்குரிய காலம் இந்த நவராத்திரி.

சின்னச் சின்ன அற்ப நலன்களை எதிர்பார்த்து வழிபடுவதற்கல்ல இந்த பூஜை. இனி பிறவாத மிக உயர்ந்த நிலையை அருள வேண்டுவதுதான் இந்த பூஜையின் நோக்கம்.

ஞானத்தோடு, ஆத்ம சுத்தியோடு இந்த பூஜை நிறைவுருவதைக் குறிக்கும் படியாக ஞானவாஹினியான சரஸ்வதி பூஜையோடு இவ்விழா நிறைவுறுகிறது.

இந்த வகையிலே, ஒவ்வொருவரும் நவராத்திரி காலத்திலே நல்லெண்ணம், நல்ல சிந்தனையுடன் அம்பாளை பூஜை செய்து, தியானித்து வழிபட்டு வாழ்வில் எல்லா சுகங்களையும் பெற வேண்டுமாய் வாழ்த்தி ஆசிர்வதிக்கின்றோம்!
சாதுர்மாஸ்யம்

ஒவ்வோர் ஆண்டும், ச்ராவண பௌர்ணமி முதல் கார்த்திகை பௌர்ணமி வரையில் உள்ள காலம் நான்கு மாதத்தில் சாதுர்மாஸ்யம் வரும். அதாவது ஸ்ராவண ஏகாதசி துவாதசி முதல், கார்த்திகை ஏகாதசி துவாதசி வரையில் உள்ளவைகள் சாதுர்மாஸ்யங்கள். நாலு மாசம் சாதுர்மாஸ்யம் என்றால் சாதுர்மாஸ்யம் ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை நான்கு மாதம். அந்த ஆவணி மாதத்தில் ஏகாதசியில் விஷ்ணு பகவான் சயனித்துக் கொள்கிறார். இதற்கு சயன ஏகாதசி என்று பெயர். கார்த்திகை மாத ஏகாதசியில் விஷ்ணு பகவான் விழித்துக் கொள்கிறார். இதற்கு உத்ஸான ஏகாதசி என்று பெயர்.

அந்த ஆவணி மாத ஏகாதசி முதல் கார்த்திகை மாத ஏகாதசி வரை உள்ள காலங்களை நான்கு மாதங்களை சாதுர்மாஸ்யம் என்று சொல்லுவார்கள். பொதுவாக அந்தக் காலத்திலே மழை காலம் கூட இருக்கும். ஆகவே அந்தக் காலத்தில் ஒரே இடத்தில், தங்கி, சத்சங்கங்கள், பஜனைகள், வேதாந்த காலட்சேபங்கள் முதலியவைகள் எல்லாம் பெரியோர்கள் எல்லாம் செய்வார்கள். ரிஷிகள் எல்லாம் செய்வார்கள். நாரத மஹரிஷிகூட, அவர் பிறப்பதற்கு முன்பு, இது போன்று, சாதுக்கள், மஹரிஷிகள், சன்யாசிகள், சாதுர்மாஸ்ய காலத்தை நான்கு மாதம் ஓரிடத்தில் அனுஷ்டானம் செய்த பொழுது, அவருடைய தாயார், அவர்களுக்கு சேவை செய்து, அந்த ப்ரஸாதத்தினால் நாரத மஹரிஷி பிறந்ததாக வரலாறு உண்டு.

இந்த சாதுர்மாஸ்யம் மொத்தம் இரண்டு வீதம். ஒன்று, இல்லறத்தார்கள். ப்ரஹ்மச்சாரிகள், க்ரஹஸ்தர்கள், ஆண், பெண், அனைவரும் நான்கு மாதங்கள், வீட்டை விட்டு வெளியே உட்கார்நது கொண்டு, ஒரு பந்தலிலோ, கோயிலிலோ, அல்லது பொது இடத்திலோ, நதி தீரத்திலோ உட்கார்நது கொண்டு இறைவனைப் பற்றி, பாடல்கள், ஜபங்கள், பாராயணங்கள், ஸ்தோத்ரங்கள், த்யானங்கள், இவைகளிலேயே காலத்தை கழிப்பது, பகவத் சிந்தனையைத் தவிர வேறு ஒன்றும் செய்வது இல்லை. அது ஒரு விதமான சாதுர்மாஸ்யம்.

சன்யாசிகள் போன்றவர்கள், நான்கு மாத காலங்களிலும், பன்னிரெண்டு மாதங்களில், எட்டு மாதம் யாத்திரை செய்து விட்டு, இந்த நான்கு மாத காலம், எந்தவித யாத்திரையும் செய்யாமல், ஒரே இடத்தில் தங்க வேண்டும். பொதுவாக சன்யாசிகளுடைய விதி ஒரு நாளைக்கு மேல் ஒரு ஊரில் தங்கக்கூடாது. பெரிய ஊராக இருந்தால் மூன்று நாள் தங்கலாம் என்று சொல்லப்பட்டு இருக்கிறது.

க்ராமைக ராத்ரம் - ஒரு க்ராமத்துக்கு க்ராமம் ஒரு ராத்ரம் தான் தங்கலாம், என்று நியதி. சன்யாசிக்கு மூன்று நாட்கள் பெரிய ஷேத்ரங்களில் தங்கலாம் இப்படி எப்போதுமே, போய்க்கொண்டிருக்கும் ஒரு இடத்தில் விச்ராந்தியாக இருந்து, சில சாதனைகளை செய்வதற்கும், அதே சமயத்தில் அஹிம்சையை, அடிப்படையாக கொண்ட சன்யாசிகளும் ஆனதினால், இந்த சாதுர்மாஸ்ய காலத்தில், அதாவது மழைக்காலத்தில், அந்தக் காலம் அப்பொழுது சில புழுக்கள், பூச்சிகள் எல்லாம் வெளியே வரும். அவைகளை காலில் மிதிபட்டோ, மற்றவை மூலமாகவோ ஹிம்சையாகும். அந்த ஹிம்சைகூட செய்யாமல் ஒரே இடத்தில் இருக்க வேண்டும் என்பதற்காகவும், அஹிம்சையை அடிப்படையாக வைத்துக் கொண்டு, நான்கு

மாதம் சுற்ற வேண்டாம் என்பதற்காகவும், சாதுர்மாஸ்யம் சன்யாசிகள் அனுஷ்டிப்பார்கள். அதே நான்கு மாதங்களில் அவர்களும் த்யானங்களை செய்து கொண்டு, சாதனை செய்து கொண்டு இருப்பார்கள்.

இதைத் தவிர இந்த சாதுர்மாஸ்ய காலத்திலேயே ஆகாவரண சாதுர்மாஸ்யம் என்று ஒன்று உண்டு. முதல் மாதத்திலே பால் சேர்த்துக் கொள்ளக் கூடாது, மற்றவை அனைத்தையும் சாப்பிடலாம். இரண்டாம் மாதத்திலே தயிர் சாப்பிடக் கூடாது. மற்றவை அனைத்தையும் சாப்பிடலாம். மூன்றாவது மாதத்திலே கறிகாய்கள் சாப்பிடக்கூடாது. மற்றவை அனைத்தையும் சாப்பிடலாம். நான்காவது மாதத்திலே இரண்டாகப் பிளக்கக் கூடிய பருப்புகளை சாப்பிடக்கூடாது, மற்றவை அனைத்தையும் சாப்பிடலாம்.

கார்ததிகை மாதம் த்வாதசி அன்று அனைத்தையும் கலந்து வைத்து, பகவானுக்கும் படைத்து விட்டு, அந்த கார்த்திகை ஏகாதசி அன்று கிருஷ்ணருக்கும் ருக்மிணிக்கும் கல்யாணம் செய்து விட்டு, துவாதசி அன்று பாராயணம் செய்வது வழக்கம்.

பாரணை என்று சொல்லுவார்கள், பாரணை என்றால், உபவாசம் இருந்து மறுநாள் செய்வது பாரணை.

அப்படி கார்த்திகை மாதம் ஏகாதசிக்கும் உபவாசம் இருந்து இந்த சாகா வ்ரதம் ப்ரகாரம், ஒவ்வொரு மாசம் ஒன்றை ஒன்றை விட்டு விட்டு கார்த்திகை மாசம் துவாதசி அன்று கிருஷ்ணனுக்கு கல்யாணம் செய்து வைத்து அன்றைய தினம் எல்லா விதப் பொருட்களையும் பகவானுக்கு நிவேதனம் செய்து, பிறகு தாம் சாப்பிடுவது என்று ஒரு பழக்கம் உண்டு.

இது சன்யாசிகள், க்ரஹஸ்தர்கள், ப்ரஹ்மச்சாரிகள், வானப்ரஸ்தர்கள் அனைவரும் செய்யக்கூடியது. பிராமணர்கள் மாத்திரம் அல்ல அனைத்து வகுப்பினரும் கூட செய்வார்கள்.

இது மஹாராஷ்டிரத்திலும், ஆந்திராவிலும் மிகவும் பிரசித்தமாக நடைபெற்று வருகிறது.

கன்னட தேசத்திலும் சில பேர் செய்கிறார்கள். தமிழ்நாட்டிலே மிகவும் குறைந்த பேர்கள் தான் இந்த சாகா விரதத்தை கடைப்பிடிக்கிறார்கள்.

இந்த சாதுர்மாஸ்யத்தை கடைப்பிடிப்பவர்கள் மிகவும் குறைவு.

சன்யாசிகள் மாத்திரம் தான், சாதுர்மாஸ்யம் என்று பெயர் வைத்துக் கொண்டு தமிழ் நாட்டிலே கடைப்பிடிக்கிறார்கள். அதுவும் நாலு மாசத்திற்கு முடியாததினால் இரண்டு மாசத்திலே செய்யலாம் என்று ஒரு வேத வாக்கியம் இருப்பதினால், நான்கு மாசத்திற்கு பதிலாக நான்கு பட்சமாக வைத்துக்கொண்டு நான்கு பட்சங்களிலே இரண்டு மாசங்களிலே இந்த சாதுர்மாஸ்ய வ்ரதத்தை முடித்து விடுகிறார்கள்.

அப்படி நான்கு மாதத்தில் நான்கு பட்சங்களை வைத்துக் கொண்ட இரண்டு மாசத்தில் முடிக்கக் கூடிய சன்யாசிகள் கூட, சிலர் சாகா வ்ரதத்தை கடைப்பிடிப்பார்கள் நான்கு மாசமும். அதாவது, பால் சேர்க்காமல் இருப்பது, தயிர் சேர்க்காமல் இருப்பது காய்கறிகள் சேர்க்காமல் இருப்பது, இரண்டாக பிளக்கக்கூடிய பருப்பு வகைகளை சேர்க்காமல் இருப்பது இந்த விரதத்தை

மாத்திரம் நான்கு மாதம் எங்கு இருந்தாலும் கடைப்பிடிப்பார்கள்.

இப்படி இந்த வகையிலும் உண்டு. இப்படி சாதுர்மாஸ்யம் என்பது, பழங்காலம் தொட்டு வருகிறது. அன்றைய தினம், பூஜையில் முதல் முதல், இந்த சாதுர்மாஸ்ய ஆரம்பம் ஆவணி மாசம் ஏகாதசி அன்று (க்ராவண ஏகாதசி அன்று) முடிவு கார்த்திகை ஏகாதசி த்வாதசி அன்று. ஆனால் சாதர்மாயஸ்த்தைத் தவிர, சன்யாசிகள் செய்யகக கூடிய சாதுர்மாஸ்யம், வ்யாஸ பூஜை என்பது பௌர்ணமியிலிருந்து ஆரம்பிக்கும் ச்ராவண பௌர்ணமியிலிருந்து, கார்த்திகை பௌர்ணமி வரையில் நடைபெறும்.

அன்றைய தினம் அவர்கள் நான்கு மாதம் வெளியேபோக மாட்டேன் என்று சங்கல்பம் செய்து கொண்டு இந்த கார்யங்களை எல்லாம் செய்வார்கள். இது ச்ராவண மாத பௌர்ணமியிலிருந்து கார்த்திகை மாதம் பௌர்ணமி வரையில் இருக்கும். பௌர்ணமிக்கு பௌர்ணமி அவர்களுக்கு விசேஷம்.

அது போன்று சாதுர்மாஸ்ய்தைப் பற்றி விசேஷம் உண்டு. அந்த சாதுர்மாஸ்யத்தை, முதன் முதலாக அந்தக்காலம் முதல் கடைப்பிடித்து வந்தவர் வேதவியாசர். ஆகவே அந்த சாதுர்மாஸ்ய ஆரம்பத்தை வேதவியாச பூஜை என்றும் குறிப்பிடுவார்கள். ஆகவே வியாச பூஜையைத்தான் சன்யாசிகள் சாதுர்மாஸ்ய ஆரம்பத்தில் கைக் கொள்வது.