செவ்வாய், 22 அக்டோபர், 2013

திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் சுற்றினால் என்ன பலன் கிடைக்குமோ...அதே பலன் கிடைக்க...

கிரி என்பது மலை என பொருள்படும். கோடு, குன்று, பாறை, அறை, கல், அலகம், சைலம், அத்திரி, தோதாந்திரி முதலியனவும் கிரியாகிய மலையை குறிக்கும் சொல்லாகும். கிரிவலம் என்பது மலையை வலம் வருதல் (மலைக்கு வலபக்கத்தில் தொடங்கி சுற்றி வழிபட்டு வருதல்) என்பதாகும்.

கிரிவழிபாடு

இறைவழிபாடு காலத்தை கடந்த பழமையானதாம். இறையை வழிபடுவது போல மலையை ஆன்மாக்கள் மகிழும்படி எழுந்து மகாமேருமலையை வலமாக சுற்றிவந்து வழிபடும் பல சமயத்தாரும் வழிபடுவதும் காலத்தை கடந்த பழமையானதாம். இவ்வகையில் கையிலை மலையை வழிபடுவது காலத்தை கடந்த வழிபாடாக உள்ளது. சிவசிந்தனை தோன்றிய போதே கையிலை மலையை பற்றிய சிந்தனையும் தோன்றிவிட்டது. வழிபாடும் தோன்றி விட்டது. சூரியன் கையிலை மலையை வலம் வந்து நாள் தோறும் வழிபடுகிறான் என்கின்றனர். இதனை நக்கீரர்

உலக முவப்ப வலநோபு திருதரு
பலா புகழ் ஞாயிறு   

திருமுருகற்று படைவரிகளில் உணர்த்துவதை காணலாம்.

புனிதமான ஸ்தலத்தையோ, தீர்த்தத்தையோ, மலையையோ, வனத்தையோ, தெய்வீகம் உள்ள இடத்தையோ சுற்றி வருவதே வலம் வருதல் அல்லது பிரதட்சணம் எனப்படும். அதேபோல் ஒரு மூர்த்தியையோ (கடவுளையோ) வில்வமரம் போன்ற தெய்வீக மரத்தையோ துளசி செடியையோ சுற்றி வருவதும் கூட வலம் வருதல் அல்லது பிரதட்சணம் எனப்படுகிறது. இவ்வாறு பக்தர்கள் எதையாவது ஒன்றை சாதாரண முறையில் சுற்றி வந்தால் அதை வலம் வருதல் அல்லது பிரதட்சணம் என்று அழைப்பர். இதையே மிகப்பெரிய அளவில் செய்தால் அது பரிக்கிரம் அல்லது கிரிவலம் எனப்படுகிறது.

கிரிவலம் சுற்றுவதன் பெருமை: நாம் உணராவிட்டாலும் கூட, ஒவ்வொரு நொடியுமே, நாமும், நம் உலகமும், அகண்டாகார பிரபஞ்சமும் சுழன்று கொண்டேயிருக்கிறோம்.

நகர்வின்றி நிகழ்வில்லை. சுழற்சியின்றி சக்தியில்லை.

சிறிய சைக்கிள் டைனமோ முதல், ஆலைகளில் உள்ள பெரிய ஜெனரேட்டர்கள் மற்றும் அணைகளில் உள்ள பிரம்மாண்டமான டர்பைன்கள் வரை, சக்தி உருவாக்கிகள் யாவுமே சுழற்சியின் அடிப்படையிலேயே அமைந்துள்ளன. மின் கடத்தி இழைகளையும், காந்தத்தையும், ஒன்றை அசைவற்ற நிலையிலும், மற்றதை சுழலும் படியும் அமைக்கும் போது தான் மின்சக்தி உருவாகிறது. ஆலயத்தை வலம் வரும் வழிபாடும் இவ்வடிப்படையில் உருவானதே. ஜெனரேட்டரில், காந்தத்தின் சக்தியை அல்லது மின் இழையின் பரிமாணத்தை மட்டும் அதிகரித்தால் போதாது. இரண்டுக்குமிடையே சுழற்சி உறவை உருவாக்கினால்தான் மின்சாரம் கிடைக்கும். அது போலவே தான் இறைத் திருவுருவங்களுக்கு விரிவான பூசைகள் நடத்துவதால் மட்டுமோ, அதிக அளவில் பக்தர்கள் கூடுவதால் மட்டுமோ, முழு நன்மையையும் பெற்றிட இயலாது. அடியவர்கள் ஆலயத்தை வலம் வரும் போதுதான் முழுப்பயனையும் அடையும் நிலை உருவாகிறது. பூசித்த பலனை பிரதக்ஷிணத்தால் அடை என்பது பழமொழி. இதனால் தான் வீட்டில் வழிபடும் போதும், திருவுருவைச் சுற்ற முடியாத இடங்களிலும் ஆத்ம பிரதட்சிணமாவது செய்யுமாறு கூறப்படுகிறோம். திருச்சுற்று கூட தெய்வீகமும் கூடும். டைனமோவை ஓரிரு முறை சுழற்றும் போது மின்னோட்டம் ஏற்பட்டாலும், அது நம் கண்ணுக்குத் தெரியும் அளவுக்கு விளக்கில் ஒளியைக் கொடுப்பதில்லை. பன்முறை சுற்றும் போதே திருப்தியான பலன் கிடைக்கிறது.

மேலும் சைக்கிளில் கால் சுழற்றுமிடத்தில் உள்ள பல் சக்கரத்தின் அளவு பெரிதாக பெரிதாக, பின் சக்கரத்தின் சுழற்சி கூடி, சைக்கிள் செல்லும் வேகம் அதிகரிப்பது போல, ஆலயங்களிலும் வெளிக்கோடியிலுள்ள பெரிய பிரகாரத்தை வலம் வரும்போது நன்மை மிக அதிகமாகக் கிடைக்கிறது. இதனால் தான் முன்னோர்கள், இயன்ற வரையில், பல ஆலயங்களிலும் 5சுற்று, 7 சுற்று என பல சுற்றுக்களை ஏற்படுத்தியிருக்கின்றனர். இத்தகு அமைப்பு உள்ள தலங்களை பஞ்சாவரண/சப்தாவரண/நவாவரண ÷க்ஷத்ரங்கள் என்று போற்றி வந்திருக்கின்றனர். இச்சுற்றுக்களை வலம் வருவதின் மேன்மையை நமக்கெல்லாம் நினைவுபடுத்துவதாக, இன்றும் ஒருசிலர், மதுரை மீனாக்ஷி ஆலயத்தில் முதலில் சித்திரை வீதியையும், அடுத்து ஆடி வீதியையும், பின்னர் 2வது உள் பிரகாரத்தையும், அதற்கும் பிறகு முதல் உள் பிரகாரத்தையும் வலம் வந்த பின்பே அம்மனையோ, சுவாமியையோ தரிசிப்பதைக் காணலாம். பணிப் பளுவினால், கால அவகாசமின்மையால், எல்லோராலும், எல்லா நாட்களிலும், எல்லாச் சுற்றையுமோ, பெரிய பிரகாரத்தையோ வலம் வர இயலாது என்றாலும் இயன்றவரை சிறிய திருச்சுற்றையாவது சில முறையாவது வலம் வருதல் நல்லது. வாரம் ஒருமுறை / மாதம் ஒரு முறையாவது பெரிய திருச்சுற்றை வலம் வருதலை எல்லோரும் வழக்கமாக்கிக் கொள்ளவேண்டும்.

கிரிவலத்தின் நன்மை: தேக ஆரோக்கியத்தை காப்பதற்காக தினமும் பலர்  மைதானத்திலும்  ரோடு ஓரங்களிலும் நடக்கின்றனர். இது மிகவும் நல்லது. ஆனாலும் உடல் நலத்துடன், அமைதியும், ஆன்ம பலமும் அடைய வேண்டும் என்று பலரும் உணரத் துவங்கியிருப்பதால் தான், இன்று ஆலயங்களையும் மலைகளையும் வலம் வருவது கூடியுள்ளது. சிலரது வீட்டருகே சுற்றி வரும் அளவிற்கு மலை இல்லாமல் இருக்கலாம். எனவே அருகில் இருக்க கூடிய கோயில் உள்ள இடங்கள் வரை இறை சிந்தனையுடன் நடந்து சென்று கோயிலையும் வலம் வந்தால், உடல் நலமும் கிடைக்கும். உள்ளமும் பலம் பெறும். மாதம் ஒரு முறை அல்லது இருமுறை அருகிலுள்ள கிரிவலம் செல்லக்கூடிய மலைக்கோயில் வாசல்  வரை வாகனத்தில் சென்று, அங்கு வாகனத்தை நிறுத்தி விட்டு அங்கிருந்து தெய்வபலம் பொருந்திய மலையை கிரிவலம் செய்தால் உடலும் மனமும் வலிமை பெறும்.
விடுமுறையென்றால், வீட்டிலேயே இருந்து, தொலைக்காட்சியை மட்டுமே பார்க்காமல், குடும்பமாக, குழுவாக, இயற்கை வளம் மிகுந்த ஊர்களுக்கும், இறையருட்தலங்களுக்கும் சென்று வருவது மனதுக்கு நிம்மதி கிடைக்கும். இது போலவே, கிரிவலம் செல்வது கூட பவுர்ணமியில் மட்டுமின்றி, வார விடுமுறை நாட்களில் சென்று வருவது நல்லது.

கிரிவலம் செல்வதால் மனஅழுத்தம் குறையும். அக்குபஞ்சர் முறையில் காலில் சிறு கல் குத்துவதில் இரத்த ஓட்டம் சீராக அமையும். கிரிவலம் செல்பவர்களின் தாய் உடல்நலம் நன்றாக இருக்கும். ஜாதகத்தில் சந்திர திசை, சந்திர புத்தி நடப்பவர்கள் பவுர்ணமி கிரிவலம் செல்வது நல்லது. ஆண்கள் கிரிவலம் செல்லும் போது சட்டை அணியாமல் செல்ல வேண்டும். சந்திரனின் ஒளிக்கதிர்கள் உடலில் படுவதால் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.

மலையை வலம் வர மனது விரியும்
நடந்து வழிபட தேக நலனும் கூடும்
நாலு பேரோடு நடக்க நல்லுறவும் பெருகும்
அவனைப் பணிய, அவனடியவரை நினைக்க
அமைதியும் கூடும், அகஒளியும் பெருகும்.

திருவண்ணாமலை கிரிவலம்: ஒரு சில பக்தர்கள் ஒவ்வொரு பவுர்ணமியன்றும் இடைவிடாது திருவண்ணாமலை சென்று கிரிவலம் வருகின்றனர். திருவண்ணாமலை தலம், சிவபெருமானுக்கு உரிய பஞ்சபூத தலங்களில் அக்னி தலம் ஆகும். இங்குள்ள மலையடி வாரத்தின் கீழ் சிவாலயம் அமைந்துள்ளது. கார்த்திகை தீபத்தன்று இந்த மலை மீது ஏற்றப்படும் தீபத்தில் ஈஸ்வரன் அருள் பாலிக்கிறார். இங்கு மலையே சிவலிங்கமாகும். இந்த மலையைச் சுற்றி வருவது பெரும் புண்ணியமாக சொல்லப்பட்டுள்ளது. ஒரு சாதாரண நாளில் திரு அண்ணாமலை கிரிவலம் சென்றாலே நமது முன்வினைகள் கடுமையாக நீங்கிவிடும். பொருள் வேண்டுபவர்கள் பவுர்ணமியிலும், அருள் வேண்டுபவர்கள் அமாவாசையிலும் அண்ணாமலையாரை கிரிவலம் செய்வது மரபு. இதில் சித்தர்கள், முனிவர்கள், மகான்கள் எல்லோரும் அமாவாசையில் தான் அண்ணாமலையாரை கிரிவலம் வந்து சிவனின் அருள் பெற்றுள்ளனர். பவுர்ணமியன்று அண்ணாமலையாரை கிரிவலம் வந்து வழிபடுவது மரபாக இருந்தாலும் கூட, பிறநாட்களிலும் நாம் அந்த மலையை வலம் வந்து வழிபடலாம்.

வார நாட்களில் கிரிவலம் சுற்றினால் ஏற்படும் பலன்கள்:

ஞாயிறு: மரணத்துக்குப் பின் சிவபதம் (கைலாயம்) சேர்தல்
திங்கள்: செல்வவளம் கிடைத்தல்
செவ்வாய்: வறுமை, கடன் நீங்குதல்
புதன்: கல்வியில் வளம் (பள்ளி விடுமுறை காலங்களில் குழந்தைகளுடன் புதன்கிழமையில் வலம் வரலாம்)
வியாழன்: தியானம், யோகா முதலியவற்றில் பற்று ஏற்படுதல்
வெள்ளி: விஷ்ணுலோகமான வைகுண்டம் அடைதல்
சனி: கிரக தோஷங்களால் ஏற்படும் துன்பம் நீங்குதல்
அமாவாசை நாட்கள்: சிவனின் பரிபூரண அருள், மன நிம்மதி கிடைத்தல் தொடர்ந்து 48 நாட்கள் தம்பதி சமேதராக சுற்றுதல்........ குறையிருந்தாலும் மகப்பேறு கிடைத்தல்

பக்தர்கள் எல்லோரும் திருவண்ணாமலை போன்ற சில கோயில்களுக்கு மட்டுமே பவுர்ணமி அன்று கிரிவலம் செல்கிறார்கள். ஆனால் பவுர்ணமி கிரிவலம் என்பது அனைத்து கடவுளுக்குமே முக்கியமானது. கோயில்களில் மதில் சுவர்களை எழுப்பி உருவாக்கப்படும் பிரகாரங்கள் நாமாக ஏற்படுத்திக் கொண்டவை என்றால், மலையைச் சுற்றியுள்ள கிரிவலப்பாதை இயற்கையாகவே கிடைத்ததாகும். திருவண்ணாமலையில் மட்டுமின்றி மலையுள்ள ஊர்களில் எல்லாம், அங்குள்ள ஆலயத்தை தரிசிக்கும் முன்பு மலையை கிரிவலம் வந்து வணங்குவது மிக நன்று. கைலாயத்திலுள்ள கைலாச நாதனையும், தமிழகத்திலுள்ள அண்ணாமலையானையும் மட்டுமின்றி, விநாயகர், முருகன், சிவன், விஷ்ணு, அம்மனின் ஆலயங்கள் மலைமீது உள்ள அமைந்திருந்தாலும்,  அல்லது மலைக்கு கீழே குடைவரைக்கோயிலாக அமைந்திருந்தாலும் அந்த மலையை பவுர்ணமி நாட்களில் சுற்றி வருவது மிகுந்த புண்ணியத்தை தரும். மலைமேல் உள்ள மருந்தே மாமருந்து என்பதற்கு இணங்க சுவாமி அருளால் எல்லா தோஷங்களும் விலகும். தற்போது பக்தர்கள் விநாயகரை பிள்ளையார்பட்டியிலும், முருகனை பழநி, திருப்பரங்குன்றத்திலும், பெருமாளை வேலூர் சோளிங்கரிலும், அம்மனை திண்டுக்கல் அபிராமியம்மை கோயிலிலும் பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபடுகின்றனர். கிரிவலம் செல்லும் மேலும் சில கோயில்கள்:

திருவள்ளூர்: திருத்தணி

வேலூர்: சோளிங்கர், ரத்தினகிரி, வள்ளிமலை

காஞ்சிபுரம்: திருநீர் மலை, சிங்கபெருமாள், திருக்கச்சூர் கச்சபேஸ்வரர்
திருக்கழுக்குன்றம்

திருவண்ணாலை: அருணாசலேஸ்வரர், பர்வதமலை, தேவிகாபுரம் கனககிரீஸ்வரர்

கிருஷ்ணகிரி: ஓசூர் சந்திரசூடேஸ்வரர்

சேலம்:  வடசென்னி மலை, கஞ்ச மலை

கடலூர்:  பாடலீஸ்வரர், விருத்தாச்சலம், சிதம்பரம் நடராஜர், திருவதிகை வீரட்டானேஸ்வரர்

ஈரோடு: கதித்தமலை, சென்னிமலை

திருச்செங்கோடு: அர்த்தநாரிஸ்வரர்

பெரம்பலூர்: செட்டிகுளம் முருகன்

கோவை: வெள்ளியங்கிரி, மதுக்கரை தர்மலிங்ககேஸ்வரர், கிணத்துக்கடவு முருகன், சரவணம்பட்டி, ரத்தினகிரி, செஞ்சேரி மலை

திருப்பூர்: அலகுமலை

திருச்சி:மலைக்கோட்டை, திருவெறும்பூர் எறும்பீஸ்வரர், ஈங்கோய்மலை

கரூர்:  தான்தோன்றி மலை, ஐயர் மலை

தஞ்சாவூர்: சுவாமி மலை, நல்லூர் பஞ்சவர்ணேஸ்வரர்

நாகப்பட்டினம்:  சீர்காழி சட்டநாதர்

புதுக்கோட்டை: விராலி மலை, திருமயம் சத்தியகிரிஸ்வரர், தேனிமலை முருகன்

மதுரை:  திருப்பரங்குன்றம், யானை மலை

திண்டுக்கல்:அபிராமி அம்மன், பழனி

தேனி : பெரியகுளம் கைலாச நாதர்

சிவகங்கை: பிரான்மலை, குன்றக்குடி, பிள்ளையார்பட்டி

தூத்துக்குடி: கழுகுமலை

திருநெல்வேலி:  பண்பொழி முத்துகுமாரசுவாமி

கன்னியாகுமரி: வேலி மலை குமாரசுவாமி.

இது தவிர தமிழகத்தில் புகழ்பெற்ற பல கோயில்களில் கிரிவலம் அமைதியான முறையில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

கிரிவலம் வரும்போது கடைப்பிடிக்க வேண்டியவை என்ன?

மலையை வரும்போது வலதுபுறமாக வருவதும், மேல் சட்டை அணியாமலும் தலைப்பாகை அணியாமலும், காலில் செருப்பு அணியாமலும் வரவேண்டும். ஏனெனில், இந்த நாட்களில் பல ஆயிரக்கணக்கான சித்தர்கள் கிரிவலம் செல்லுவார்கள். அவர்களின் உடலில் பட்ட காற்று நம்மையும் அறியாமல் நமது உடல் மீது பட்டாலே நமது முற்பிறவிபாவங்களை அழித்துவிடும் என்பது  உண்மை. உடையை உடைமைகளை கையில் பிடித்துக்கொண்டு வருவதும் தவிர்க்க வேண்டியதாகும். மேலும் கிரிவலம் வரும்போது மனதில் இறைவன் சிந்தனை மட்டுமே இருக்க வேண்டும். வாகனங்களில் கிரிவலம் செல்வதை தவிர்த்து நடந்துதான் செல்ல வேண்டும். எங்கு கிரிவலத்தை தொடங்குகின்றோமோ அங்குதான் முடிக்கவேண்டும். கிரிவலம் வந்து முடித்தவுடனே குளிக்க கூடாது, தூங்க கூடாது. ஒரு சிலர் கிரிவலம் சுற்றுகிறேன் என்ற பேரில் பேசிக் கொண்டும், நொறுக்குத் தீனி சாப்பிட்டுக் கொண்டும், கொஞ்சம் கூட இறை சிந்தனை இல்லாமல் சுற்றி வருகின்றனர். மேலும்  குறிப்பிட்ட சில கோயில்களில் மட்டும் கிரிவலம் சுற்றுவதற்காக கூட்டத்தை ஏற்படுத்தி அந்த ஊரை குப்பை மேடாக்குவதுடன் அந்த ஊர் மக்களுக்கும் தொந்தரவு ஏற்படுத்துகின்றனர். கிரிவலம் சுற்றி வரும் மக்கள் கோயிலுக்குச் செல்லாமல் கிரிவலத்தை மட்டும் ஜாலியாக சுற்றி விட்டு ஊர் வந்து சேருகின்றனர். இதனால் கோயிலுக்கு எந்தவித வருமானமும் கிடையாது. இதற்கு பதிலாக பக்தர்கள் அவரவர் ஊரில் கிரிவலம் செல்லக்கூடிய கோயில்களில் ஏற்கனவே கிரிவலம் செல்லக்கூடிய பக்தர்களுடன் சேர்ந்து நிம்மதியாக இறை சிந்தனையுடன் கிரிவலம் சென்று கோயிலுக்குள்ளும் சென்று இறைவனை தரிசித்து விட்டு முழு பலனுடன் வீடு வந்து சேரலாம்.

பவுர்ணமியின் தனிச்சிறப்பு: சந்திரன் படிப்படியாக, ஒளி குறைந்து, முற்றுமாக, நம் கண்ணுக்குத் தென்படாத தினத்தை அமாவாசை என்றும், அதன் பிறகு, படிப்படியாக ஒளி கூடி, முழு இரவும் முழுமையாகத் தென்படும் நாளை பவுர்ணமி என்றும் கூறுகிறோம். பகலில் சூரியனும்; இரவில் சந்திரனுமாக, ஒரு நாளில் 24 மணி நேரமும், விண் ஒளிகள், நம்மீது, இயற்கையாகவே படர்வது பவுர்ணமி அன்று மட்டுமே. இதனால் தான் பரம்பொருள் வழிபாட்டில் மற்ற நாட்களில் செய்யப்படும் வழிபாடுகளை விட பவுர்ணமி பூசையை மிகச் சிறந்ததாகப் போற்றி வந்திருக்கின்றனர். பொதுவாக, ஒவ்வொரு திதியையும், குறிப்பிட்ட ஒரு தெய்வ வழிபாட்டுக்கே மிக உகந்ததாக கருதப்படுவதை அறிவோம்.  உதாரணமாக, சதுர்த்தி விநாயகருக்கும், சஷ்டி முருகனுக்கும், அஷ்டமி, நவமி அம்மனுக்கும், ஏகாதசி விஷ்ணுவுக்கும், திரயோதசி, சதுர்த்தசி சிவபெருமானுக்கும் ஏற்றதாகக் கூறப்படுகிறது. இதற்கு மாறாக, பவுர்ணமியை மட்டும், சிவனுக்கும், விஷ்ணுவுக்கும், முருகனுக்கும் அன்னை பராசக்திக்கும், லக்ஷ்மிக்கும் என்று பல தெய்வ வழிபாடுகளுக்கும் மிக மேன்மையாகக் கருதுவது குறிப்பிடத்தக்கது. பவுர்ணமியில் பூசை பண்ணியதும் பலன் என்று கூறுமளவுக்கு முழுநிலவன்று வழிபடுவது மிக்க சிறப்புடையது.

காலத்தைக் கணக்கிடும் பல முறைகளில், சூர்யமானம், சந்திரமானம் என்பவை மிக முக்கியமானவை. பொதுவாக, வடபாரத மாநிலங்களில் தான், சந்திரனின் நகர்வை அடிப்படையாகக் கொண்டாலும், சூரியனின் நகர்வைப் பின்பற்றும் தமிழகத்திலும் பலமுக்கிய செயல்பாடுகளுக்கு நிலவின் நிலையும் கருதப்பட்டிருக்கிறது. குறிப்பாக, இறைவழிபாட்டில், அதுவும், ஆலய வழிபாட்டில் பவுர்ணமியும் அதை ஒட்டிய நட்சத்திரமுமே மிகவும் மேன்மையாகக் கருதப்பட்டிருக்கின்றன. சித்திரைத் தேர் முதல், பங்குனிக் காவடி வரை, லட்சக்கணக்கானோர் கலந்து கொள்ளும் மிகப்பெரிய திருவிழாக்கள் அநேகமாக பவுர்ணமி நாளன்றே நடைபெறுகின்றன.

மாதம் தோறும் வரக்கூடிய ஒவ்வொரு பவுர்ணமியிலும் ஒரு சிறப்பு உள்ளது. உதாரணத்திற்கு ஒரு சில சிறப்புக்கள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது.

சித்ரா பவுர்ணமி : (சித்திரை நட்சத்திரம்) அனைவரின் செயல்களையும் பதிவு செய்யும் சித்ரகுப்தனின் பிறந்த நாள். மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இழங்கும் விழா சிறப்பு.

வைகாசி பவுர்ணமி: (விசாகம் நட்சத்திரம்)  முருகன் அவதரித்த நாள்.

ஆனிப் பவுர்ணமி : (மூலம் நட்சத்திரம்) இறைவனுக்கு மா, பலா, வாழை போன்ற பல கனிகள் படைக்கும் நாள். திருவையாற்றில்  சிறப்பு.

ஆடிப் பவுர்ணமி : (பூராடம்/உத்ராடம் நட்சத்திரம்) விஷ்ணு வழிபாட்டுக்கு உகந்த நாள். காஞ்சியில்  சிறப்பு.

ஆவணிப் பவுர்ணமி : (அவிட்டம் நட்சத்திரம்) வட இந்தியாவில் ரக்ஷõபந்தனம் என்றும், கேரளத்தின் ஓணம் பண்டிகை என்றும் கொண்டாடப்படுகிறது.

புரட்டாசி பவுர்ணமி : (பூரட்டாதி/உத்திரட்டாதி நட்சத்திரம்) சிவசக்தியாக அருளும் உமாமகேஸ்வரனுக்கு வட இந்தியாவில் சிறப்பான பூஜை.

ஐப்பசி பவுர்ணமி : (அசுவதி நட்சத்திரம்) வட இந்தியாவில் மகாலட்சுமி விரதமும், தென் இந்தியாவில் சிவனுக்கு அன்னாபிஷேகமும் விசேஷம்.

கார்த்திகைப் பவுர்ணமி : (கார்த்திகை நட்சத்திரம்) திருவண்ணாமலையில் நடைபெறும் தீருக்கார்த்திகை தீபம் சிறப்பு.

மார்கழிப் பவுர்ணமி : (திருவாதிரை நட்சத்திரம்) சிவன் நடராஜராக காட்சியளித்த நாள்.

தைப் பவுர்ணமி : (பூசம் நட்சத்திரம்) சிவனுக்கும், முருகனுக்கும் பெருவிழா நடத்தும் நாள்.

மாசிப் பவுர்ணமி : (மகம் நட்சத்திரம்) மாசி மகத்தன்று கும்பகோணத்திலும், வடக்கே அலகாபாத்திலும் சிறப்பு.

பங்குனிப் பவுர்ணமி : (உத்திரம் நட்சத்திரம்) சிவன் பார்வதி திருமணம் போன்ற பல முக்கிய திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது.

பவுர்ணமி இவ்வளவு சிறப்பு வாய்ந்தது என்ற காரணத்தினால் தான் பவுர்ணமியில் சுற்றும் கிரிவலமும் சிறப்பானதாக கருதப்படுகிறது.
சுவாமிக்கு சாத்திய வஸ்திரத்தை பக்தர்கள் அணியலாமா?

சுவாமிக்கு சாத்த வேண்டும் என பக்தர்கள் காணிக்கையாக வஸ்திரம் வாங்கிக் கொடுக்கிறார்கள். இதுவே கூடுதலாக சேர்ந்து விடுகிற பொழுது வீணடிக்காமல் இருக்க ஏலத்தில் விடுகிறார்கள். இதன் மூலம் மூன்று வழிகளில் பயன் கிடைக்கிறது.  பக்தர்களின் வஸ்திர காணிக்கை நிறைவேறுகிறது. ஏலத்தின் மூலம் கோயில் நிர்வாகத்திற்கு வருவாய் கிடைக்கிறது. வஸ்திரங்கள் வீணாகாமல் மற்றவர்கள் உபயோகிக்கவும் முடிகிறது. சுவாமிக்குப் படைக்கப்படும் நிவேதன பிரசாதத்தை உண்பது போல, சுவாமிக்கென பக்தியோடு அணிவிக்கும் வஸ்திரங்களையும் உபயோகிக்கலாம்.
பிரம்ம முகூர்த்தத்தின் மகத்துவம் தெரியுமா?

காலை 4.30 மணி முதல்  6 மணிக்குள்ளான வேளைக்கு பிரம்ம முகூர்த்தம் என்று பெயர். இரவில் உறங்கும் உயிர்கள் மீண்டும் எழுந்திருப்பதே சற்றேறக்குறைய மறுபிறவிதானே! எனவே, ஒவ்வொரு நாளும் காலையில் மறு பிறவி பெறுவதை சிருஷ்டி (படைத்தல்)என்று சொல்லலாம். இத்தொழிலைச் செய்பவர் பிரம்மா. எனவே இவரது பெயரால், விடியற்காலைப் பொழுதை பிரம்ம முகூர்த்தம் என்று வைத்துள்ளார்கள். பிரம்ம முகூர்த்த வேளைக்கு திதி, வார, நட்சத்திர, யோக தோஷங்கள் கிடையாது. இது எப்போதுமே சுபவேளை தான். இந்நேரத்தில் எழுந்து குளித்து இறைவழிபாட்டைச் செய்து நமது வேலைகளைச் செய்ய துவங்கினால் அன்று முழுவதும் வெற்றிதான்.
விரத உணவில் பூண்டு, வெங்காயம் சேர்க்கக்கூடாது என்பது ஏன்?

விரதம் என்ற சொல்லுக்கு கஷ்டப்பட்டு  இருத்தல் என்று பொருள். விரதமிருப்பவர், அன்று முழுவதும் சுவாமியின் அருகிலேயே இருப்பதாக எண்ண வேண்டும். சாப்பிட்டால் மலஜலம் கழிக்க நேரிடுமே என்பதால் தண்ணீர் கூட குடிக்காமல் பசித்திருந்து, சிந்தனை மாறாமல் இருப்பதையே உபவாசம் என்ற நிலையில் முதன்மையாகக் கூறியுள்ளனர். உபவாசம் என்றால் இறைவனுக்கு அருகில் இருத்தல் என்று பொருள். முறையாக இருக்க இயலாதவர்கள் கூட அரிசி சாதத்தையும், வெங்காயம், பூண்டு இவற்றையும் தவிர்த்து விட வேண்டும். அரிசி, வெங்காயம், பூண்டு இவற்றைச் சாப்பிட்டால் தூக்கம் வரும். சிந்தனை மாறும். இதனால் தான் இவற்றை வேண்டாம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்?

தாய்க்குப் பின் மனைவி என்றே சொல்லியிருக்கலாமே! ஏன் தாரம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தினர் என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. தாரம் என்றால் மகிழ்ச்சி. தாய்க்குப் பின் மகிழ்ச்சியைத் தருபவள் மனைவி என்பதே இதன் பொருள்.  ஆன்மிகத்திலும் ஒரு தாரம் இருக்கிறது. அது என்ன தெரியுமா? மந்திர சாஸ்திரத்தில் ஓம் என்னும் பிரணவ மந்திரத்தை தாரம் என அழைப்பர். அதாவது, இந்த மந்திரத்தை உச்சரிப்போர், பிறவி என்னும் தளையில் இருந்து மீண்டு பிறப்பற்ற நிலை என்னும் முக்தியை அடைவர். ஆன்மிகத்தில் முக்தியே உயர்ந்த சந்தோஷமாகும்.

பிரணவம் என்பதற்கு புதியது என்று அர்த்தம். ஓம் ஓம் ஓம் என முழங்காத நாட்களே ஒரு பக்தனின் வாழ்க்கையில் இல்லை. அவரவர் இஷ்ட தெய்வத்தின் முன்னால் ஓம் சக்தி விநாயகா, ஓம் நமசிவாய, ஓம் நமோ நாராயணாய, ஓம் நமோ பகவதே வாசுதேவாய, ஓம் முருகா, ஓம் காளி, ஓம் சக்தி என்றெல்லாம் மந்திரம் சொல்லி பிரார்த்திக்கிறார்கள். ஆனாலும், அந்த தெய்வங்களை அவர்களால் பார்க்க முடிகிறதா? அவற்றைப் புரிந்து கொள்ள முடிகிறதா? தெய்வங்களைப் பற்றி பேசப் பேச, படிக்க படிக்க, வணங்க வணங்க புதுப்புது சந்தேகங்களும், கேள்விகளும் தோன்றிக் கொண்டே இருக்கின்றன. என்றும் புதிதாகவே இருக்கிறேன் என்பதே இந்த மந்திரத்தின் மூலம் இறைவன் நமக்களிக்கும் தகவல்.
தெய்வத்திற்கும் தண்ணீருக்கும் உள்ள ஒற்றுமை தெரியுமா?

தாயைக் கழித்தாலும் தண்ணீரைக் கழிக்காதே என்று கூறுவார்கள். தண்ணீரை வீணாக்குபவர்கள் பெரிய சிரமத்திற்கு ஆளாவார்கள் என்பது பெரியோர்கள் கண்ட உண்மை. தண்ணீர் தெய்வத்திற்கு சமமானது என்பததை இப்படி விளக்குகிறார்கள். தண்ணீர் உயரமான இடத்திலிருந்து தாழ்வான இடத்தை நோக்கியே வரும். அதே போல் கடவுளும் உயரமான இடத்திலிருந்து அவதாரம் என்று சொல்லி கீழ் நோக்கி வருகிறார். தண்ணீர் எந்த நிறத்தில்கலக்கிறதோ அதே நிறத்தைப் பெறுகிறது. அதே போல் கடவுளும் எந்த அவதாரத்தை எடுக்கிறாரோ அந்த நிறத்தைக் காட்டுவார்.

தண்ணீருக்கு நிறம், மணம், குணம் கிடையாது. அதேபோல அருவமான கடவுளுக்கும் நிறம்,மணம், குணம் கிடையாது. உணவுப் பொருளை உற்பத்தி செய்ய உதவுவது தண்ணீர்தான். அது தானும் உணவாவது போல இறைவன் பக்தியின் விளை நிலமாகவும், பக்திப் பொருளாகவும் ஆகிறான். தண்ணீர் நாம் எடுக்கும் பாத்திரத்தின் அளவுக்கே நிறைவது போல இறைவனும் பக்தியின் அளவுக்கே பலன் தருகிறான். தண்ணீருக்கு ஏழை,பணக்காரன், ஆண், பெண், உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்றபேதம் கிடையாது. கடவுளுக்கும் இந்தவிதமான பேதங்கள் கிடையாது என்பதை நாம் அறிவோம். தண்ணீரை சர்வதேவதா ஸ்வரூபம் என்கிறது வேதம்.

சுப்ரபாதம் என்பதன் பொருள் என்ன?

பா எனில் வெளிச்சம். ப்ரபாதம் எனில் காலைப்பொழுது. சுப்ரபாதம் எனில் இனிய காலைப் பொழுது என்று அர்த்தம். வடமொழியில் சு எனும் எழுத்து ஒரு சொல்லுக்கு முன்னர் சேர்க்கப்பட்டால் உயர்ந்பொருளை நல்கும். பாக்ஷிதம்-வார்த்தைகள், சுபாக்ஷிதம்-நல்வார்த்தைகள். கன்யா-பெண், சுகன்யா-நல்லப் பெண். இதுபோன்று சுப்ரபாதம் என்பது நல்ல இனிய காலைப் பொழுது. காலையில் கடவுளை இந்துதிகளால் வழிபடுவதன் மூலம் நாம் கடவுளுக்கு காலை வணக்கம் சொல்வதாகவும், இவை கடவுளுக்கு மட்டுமல்லாமல் அனைத்து ஜீவராசிகளையும் எழுப்பும் விதமாகவும் இதனால் நாமும் புத்துணர்ச்சி பெறுவதும் அனுபவ உண்மை.இவை அனைத்து கடவுளுக்கும் பல மகான்கள் அருளியிருக்கிறார்கள். இவற்றைகாலையில் கேட்பதே உயர்ந்தது. எனினும், மற்ற காலங்களில் கடவுளின் நாமாவளிகளின் தொகுப்பு என்ற மட்டில் கேட்கலாம் தவறில்லை. எனினும், விடியற்காலையில் கேட்பதே பொருத்தமானது.
குண்டர்கள் என்பவர்கள் யார்?

உலகில் குண்டர்கள் என்போர் யார் என்பதை அருணகிரி நாதர் தமது தோழமை கொண்டு சலஞ்செய் குண்டர்கள் என்று தொடங்கும் திருப்புகழ் பாடலில் கூறியிருக்கிறார். அவருடைய வாக்கின்படி இடம் பெற்றிருக்கும் குண்டர்கள்.

1. நண்பனாக இருந்து கொண்டு துன்பம் செய்கிறவர்கள்.
2. செய் நன்றியை மறந்தவர்கள்
3. விரதங்களை விலக்கியவர்கள்
4. தானம் செய்வதை தடுப்பவர்கள்
5. சொன்ன வாக்கை காப்பாற்றாதவர்கள்
6. சோம் பேறிகளாக இருந்து கொண்டு சொல்லை வீசுகிறவர்கள்.
7. இறைவனுக்கு உரிமையான சொத்துக்களை சூறையாடுபவர்கள்.
வேலுண்டு வினைதீர்க்க; மயிலுண்டு வழி காட்ட- கந்த சஷ்டி ஸ்பெஷல்

குருவாய் வருவாய் முருகா!கந்தபுராணத்தில் திருத்தணி பற்றி சிறப்பாகச் சொல்லப்பட்டுள்ளது. வெகுதொலைவில் இருந்தபடியே, திருத்தணி என்ற பெயரை உச்சரித்தாலும், கேட்டாலும், நினைத்தாலும், அவ்வூர் இருக்கும் திசை நோக்கி வணங்கினாலும் புண்ணியம் கிடைக்கும் என்கிறது தணிகைப்புராணம். இத்தலத்தின் பெருமையையும், மகிமையையும் வள்ளிக்கு முருகப்பெருமானே எடுத்துச் சொன்னதாக கந்தபுராணம் கூறுகிறது. திருத்தணி முருகனின் அருள் பெற்ற அடியார் முத்துச்சுவாமி தீட்சிதர். 19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்தவர். சங்கீத மும்மூர்த்திகளில் ஓருவரான இவர், திருத்தணி முருகன் சந்நிதியில் தியானித்துக் கொண்டிருந்தார். அப்போது, முருகன் சிறுபாலகனாய் வந்து, அவருக்கு கற்கண்டு கொடுத்தார். உடனே தீட்சிதர் முருகனைப் பற்றி பல கீர்த்தனைகளைப் பாடினார். தம் கீர்த்தனைகளில் முருகனை ""குருகுஹ என்று போற்றுகிறார். அவரையே குருவாக ஏற்றார். கலியுகத்தில், சிறந்த குரு கிடைக்காத பட்சத்தில் திருத்தணி முருகனையே மானசீக குருவாக ஏற்று வழிபடலாம். "குருவாய் வருவாய் அருள்வாய் குகனே என்று அருணகிரிநாதரும் முருகனைப் போற்றுகிறார்.

பிள்ளைகள் கருத்துக்கு முன்னுரிமைகொடுங்க!முருகனுக்கு தனி வழிபாடும், முக்கியத்துவமும் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே தங்களிடம் இருந்து அவரைப் பிரித்து இந்த திருவிளையாடல்களை சிவன் நிகழ்த்தினார். இதற்காக, பெற்றோரை உலகமாகக் கருதி, அவர்களைச்சுற்றி வந்த விநாயகருக்கு, ஞானப்பழத்தைக் கொடுத்தார். எதிர்பார்த்தபடியே முருகனும் கோபம் கொண்டு பெற்றோரை பிரிந்தார். மேலும், தன் மகனின் பெருமையை உலகறியச் செய்ய, மந்திர நாயகனான அவர், ஒரு மந்திரத்திற்கு பொருள் தெரியாதது போல் நடித்து, மகன் மூலம் உபதேசம் பெற்றார். குடும்பத்தில் பிள்ளைகளின் கருத்துக்கும் பெரியவர்கள் முக்கியத்துவம் தர வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக சிவகுடும்பம் அமைந்தது.

கருவறைக்குள் திரைச்சீலை:இலங்கை கதிர்காமம் முருகன் கோயில் கொழும்பிலிருந்து 230 கி.மீ., தூரத்தில் உள்ளது. இவர் "கதிரேசன் என்று போற்றப்படுகிறார். கருவறையில் எந்த வடிவில் முருகன் இருக்கிறார் என்பது ரகசியமாக உள்ளது. சந்நிதியின் கதவில் தொங்கவிடப்பட்டிருக்கும் திரையில் மயில் மீது வள்ளி, தேவசேனாவுடன் அமர்ந்திருக்கும் முருகனின் உருவம் இருக்கும். இதைப்போன்று வேறு திரைச்சீலைகளும் தொங்கவிடப்பட்டிருக்கும். இந்த திரைக்கே பூஜை நடத்தப்படுகிறது. இங்கு ஆடிஅமாவாசையன்று ஆரம்பித்து பவுர்ணமியில் முடியும் விழா பிரபலமானது. விழாவின் போது யானைமீது, முருகனுக்குரிய யந்திரம் அடங்கிய ஒரு பெட்டி எடுத்து வரப்படும். இதை முருகனாகக் கருதி மக்கள் வழிபடுகின்றன். இக்கோயிலின் பின்புறமிருக்கும் அரசமரத்தை சிங்களர்கள் வழிபடுகின்றனர். தமிழ் மக்களும், சிங்களர்களும் இணைந்து வழிபடும் கோயில் இது. கிரகபாதிப்பை போக்கும் பாடல்: ராசிபலனை தெரிந்து கொள்வதில் அனைவருக்கும் விருப்பம் அதிகம். நம் பூர்வஜென்ம பாவபுண்ணியங்களுக்குத் தகுந்தபடி வாழ்க்கை அமைகிறது என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. ராசி மண்டலத்தில் அசுவினி முதலாக ரேவதி வரை 27 நட்சத்திரங்கள் உள்ளன. பிறந்த நட்சத்திரத்தைப் பொறுத்து ராசி அமைகிறது. அருணகிரிநாதர் "கந்தர் அலங்காரம் என்னும் நூலில், நட்சத்திர நாயகனான முருகனை வழிபாடு செய்யும் அன்பர்களை நாளும் கோளும் ஒன்றும் செய்யாது என்று உறுதிபடக் கூறுகிறார்.""நாள் என்செயும் வினைதான் என்செயும்எனை நாடிவந்த கோள்என் செயும்கொடுங்கூற்றென் செயும், குமரேசர்இரு தாளும் (இரண்டு பாதங்கள்), சிலம்பும் (இரண்டு சிலம்பணிகள்),சதங்கையும் (இரண்டு சலங்கையும்),தண்டையும் (இரண்டு தண்டைகள்),சண்முகமும் (ஆறு முகங்கள்)தோளும் (12 தோள்கள்)கடம்பும் (கழுத்திலுள்ள கடம்பு மாலை)எனக்கு முன்னே வந்து தோன்றிடினே. முருகனின் 27 உறுப்புகளும் 27 நட்சத்திரங்களைக் குறிக்கின்றன. இதைப் பாடினால் கிரக பாதிப்பு நீங்கும்.

நோய் தீர்க்கும் சந்தனம்: அழகே உருவான முருகப்பெருமானுக்கு, சூரபத்மனுடன் போரிட்ட போது மார்பில் காயம் ஏற்பட்டது. அந்தக் காயத்துடன் அவர் அமர்ந்துள்ள தலம் திருத்தணி. சூரனுடன் போரிட்ட கோபம் தணித்த இடம் என்பதால் "தணிகை என இத்தலம் பெயர் பெற்றது. அவரது காயத்தின் வலி குறைய சுவாமிக்கு சந்தன அபிஷேகம் செய்யும் வழக்கம் ஏற்பட்டது. அந்த சந்தனமே இங்கு பிரசாதமாக தரப்படுகிறது. அது நோய் தீர்க்கும் எனும் நம்பிக்கையுடன் பக்தர்கள் நீரில் கரைத்து குடிக்கின்றனர். சந்தனம் அரைப்பதற்காக கோயிலில் கல் ஒன்றும் உள்ளது.

திருப்புகழின் பொருள்: முருகனின் சிறப்புகளையும், அவரது அருள் வேண்டியும் அருணகிரிநாதர் பாடிய பாடல்களின் தொகுப்பே திருப்புகழ், இதன் முதல் அடியை முருகனே எடுத்துக் கொடுத்தார். "திரு என்றால் "அழகு, ஐஸ்வர்யம் என்று பொருள். அழகனாகிய, ஐஸ்வர்யம் தருகின்ற முருகனை புகழ்வதால், "திருப்புகழ் என்று பெயர் உண்டானது.

அறுபடை வீடுகள்:திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழநி, சுவாமிமலை, திருத்தணி, சோலைமலை என்னும் ஆறுதலங்களும் முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகள். மனிதனின் உடலில் ஆறு ஆதாரங்களாக மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை ஆகியவை இருப்பது போல, முருகனின் படை வீடுகள் திகழ்கின்றன. முருகப்பெருமானின் வாழ்க்கை வரலாற்றை இந்த ஆறுதலங்களுக்குள்ளும் அடக்கிச் சொல்வர். திருமுருகாற்றுப்படை என்னும் பழந்தமிழ் இலக்கியம் படை வீடுகளின் சிறப்பை விரிவாகக் கூறுகிறது.

தாயில்லாமல் இவர் இல்லை: முருகன் தாயின் மூலமாக பிறக்காமல், தந்தையால் மட்டுமே பிறந்தவர் என்று எண்ணுகிறோம். இது சரியானதல்ல. அசுரன் ஒருவன் சிவனிடம், தான் யார் தலையில் கை வைத்தாலும் அவர்கள் அழிந்துவிட வேண்டும் என வரம் பெற்றிருந்தான். ஒரு கட்டத்தில், சிவனது தலை மேலேயே கை வைக்க வந்தான். அவர் மறைந்து கொண்டார். பின்னர் அவன் பார்வதிதேவியின் தலை மீது கை வைக்க ஓடினான். அவள் சரவணப் பொய்கை தீர்த்தமாக மாறிவிட்டாள். சிவன் தன் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு பொறிகளை உண்டாக்கி சரவணப் பொய்கையில் இட்டார். அதிலிருந்து முருகன் அவதரித்தார். இதன் மூலம் முருகன் தன் தந்தை, தாயிடமிருந்து தோன்றினார் என்பது புலனாகிறது. இதனால் முருகனை "சிவசக்திபாலன் என்றும் அழைப்பர்.

வழித்துணையாய் வா முருகா! கந்த சஷ்டி பிரார்த்தனை:
*முழுநிலவு போல குளிர்ச்சியான முகத்துடன் விளங்கும் முருகப்பெருமானே! வெற்றி தரும் வேலாயுதத்தை தாங்கியவனே! உன் அன்பைப் பெற என்மனம் ஏங்கித் தவிக்கிறது. என்னை உன் அடிமையாக ஆட்கொள்ள வந்தருள வேண்டும்.
* முருகா! என் கண்கள் காண்பதாக இருந்தால் உன் திருவடித் தாமரைகளையே காணட்டும். என் உதடுகள் உந்தன் திருப்புகழையே மட்டுமே பேசட்டும். இரவும் பகலும் என் மனம், உன் பெருமையை மட்டும் சிந்தித்திருக்கட்டும். இந்த அரிய வரத்தை நீ தந்தருளவேண்டும்.
* மாமரமாய் நின்ற சூரனை இருகூறாகப் பிளந்த வெற்றி வீரனே! கற்றவர்கள் புகழ்ந்து போற்றும் ஞானபண்டிதனே! செவ்வானம் போல சிவந்த மேனியனே! கடம்பம், முல்லை மலர்களை விரும்பி அணிபவனே! அறிவுக்கண்களைத் திறந்து ஞானத்தைத் கொடுத்தருள்வாயாக.
* முத்துப் போல பிரகாசிக்கும் புன்னகையுடன் காட்சி தருபவனே! உமையம்மையை மகிழ்விக்க வந்த சிவ பாலனே! அழகெல்லாம் ஒன்று திரண்டு வந்தது போல கோடி சூரிய பிரகாசத்துடன் விளங்குபவனே! அருட்கண்களால் என்னைக் காத்தருள்வாயாக.
*எங்கள் எண்ணம், சொல், செயலுக்கு எட்டாத பரம்பொருளே! ஆறுமுகப்பெருமானே! எனக்கு வேண்டிய
வரங்களை வாரி வழங்க பன்னிரு கரங்களுடன் வந்தருள்வாயாக.
*கருணைக்கடலே! கந்தப்பெருமானே! நமசிவாயத்தின் நெற்றிக்கண்ணில் உதித்த அருட்சுடரே! வண்ண மயில் மீது வலம் வரும் சுப்பிரமணியனே! வள்ளி மணாளனே! இதயமாகிய குகையில் வீற்றிருக்கும் குகப்பெருமானே! உனது திருவடிகளை சிந்திக்கும் பாக்கியத்தைத் தந்தருள்வாயாக.
* ஆனைமுகப் பெருமானின் தம்பியே! ஆதிபராசக்தியின் புதல்வனே! வள்ளிக்கு வாய்த்தவனே! குன்றெல்லாம் குடிகொண்டிருக்கும் குமரப்பெருமானே! சஷ்டி நாதனே! சூரபத்மனுக்கும் பெருவாழ்வளித்த புண்ணியமூர்த்தியே!
எங்கள் தவறையும் மன்னித்து அருள்வாயாக.
* திருமாலின் மருமகனே! தெய்வானையை மணந்த வடிவேலனே! மலர்ந்த தாமரை போல எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பவனே! சேவல் கொடியோனே! மலைமகள் பார்வதி பெற்ற பாலகனே! மயில் வாகனனே! கிரகதோஷம் எதுவும் என்னைத் தாக்காமல் காத்தருள வேண்டும்.
*மலைக்குத் தெய்வமான குறிஞ்சிநாதனே! அன்பர் குறைகளைப் போக்கும் குகப்பெருமானே! மயிலேறும் மாணிக்கமே! தயாபரனே! முன்செய்த பாவத்திலிருந்து விடுவித்து, வாழ்க்கைப் பயணத்திற்கு வழித்துணையாய் வந்தருள்வாயாக.
*கார்த்திகைப் பெண்களால் சீராட்டி வளர்க்கப்பட்ட தவப்புதல்வனே! சரவணப் பொய்கையில் தவழ்ந்தவனே! தந்தைக்கே பாடம் சொன்ன குருநாதனே! எங்களுக்கு செல்வச்செழிப்பைத் தந்தருள்வாயாக.
* தெய்வானை மணாளனே! சரவணபவ மந்திரம் சொல்வோருக்கு உதவிட ஓடிவருபவனே! சரணடைந்தவரைக் காப்பவனே! தேவர்களைக் காத்த தேவசேனாபதியே! வாழ்நாள் முழுவதும், எனக்கு வழித்துணையாக வருவாயாக.
* சொல்லில் அடங்காப் திருப்புகழ் கொண்டவனே! உள்ளம் ஒன்றி வழிபடுவர்களுக்கு அருளைப் பொழியும் ஆறுமுகனே! திக்கற்றவர்க்கு துணை நிற்கும் திருமுருகனே! நம்பினோரைக் கரைசேர்த்திடும் நாயகனே! இந்த உலகமெல்லாம் செழிக்க வந்தருள்வாயாக.
விரதம் இருப்பதால் என்ன நன்மை?

விரதம் இருப்பதன் மூலம் உடல் தூய்மை பெறும், மனம் வலிமைபெறும். இறைவனது அருள் நமக்கு கிடைக்கும். ஓயாமல் சாப்பிடுவதன் மூலம் ஓய்வெடுக்க முடியாமல் இருக்கும் நம் உடலின் ஜீரண உறுப்புகளுக்கும் அப்போது ஓய்வு கிடைக்கும். விரதத்திற்கு மறுநாள் நாம் சாப்பிடும்போது ஜீரண உறுப்புகள் சீராக இயங்கத் தொடங்கும். பணி புரிபவர்கள் அனைவருக்கும் வார விடுமுறை தேவைப்படுவது போல, ஆலயங்களுக்குச் சென்று அருள் பெற விரும்பும் நாம், ஆரோக்கியமாக இருக்க விரதங்கள் தேவை. இதற்காக வாரத்தில் ஒரு நாள் அல்லது ஒரு வேளை உணவையாவது உண்ணாமல் இருந்து, தங்களுக்கு பிடித்தமான கடவுளுக்காக விரதமிருப்பது உடலுக்கும், மனதுக்கும் சிறந்தது.
பெண்களுக்கு சமபங்கு பெற்று தந்த மகா விரதம் எது தெரியுமா?

ஆணுக்குப் பெண் சரிசமம் என்ற உண்மையை முதன்முதலில் இந்த உலகுக்கு சிவபெருமான் உணர்த்தியது தீபாவளித் திருநாள்(ஐப்பசி தேய்பிறை சதுர்த்தசி) ஒன்றில்தான் என்கின்றன புராணங்கள். சிவபெருமான் தனது மேனியில் பாதியை அம்பிகைக்கு கொடுத்து அர்த்தநாரீஸ்வரராக காட்சி தந்த நாள் இதுவே. சிவனின் இடப்பாகம் வேண்டி பார்வதி இருந்த விரதம் கேதாரீஸ்வரர் விரதம் என்றும், இந்த விரதத்தை கேதாரீஸ்வரர் மற்றும் பார்வதியாகிய கவுரியுடன் மனிதர்கள் கடைப்பிடிப்பதால் கேதார கவுரி விரதம் என்றும் பெயர் பெற்றது.

ஒருநாள் கயிலாயத்தில் சிவபெருமானும் பார்வதி தேவியும் இருந்தபோது சூரியன், சந்திரன், பிரம்மா, விஷ்ணு முதலான முப்பத்து முக்கோடி தேவர்கள்; தும்புரு, நாரதர், சனகாதி முதலான முனிவர்கள், அட்டவசுக்கள் முதலான யாவரும் தினமும் கூடிப் பார்வதி பரமேஸ்வரனை வணங்கிச் சென்றனர். ஆனால் பிருங்கி முனிவர், சிவனை மட்டும் பலமுறை விழுந்து வணங்கினார். அம்பிகை நெருங்கி அமர, முனிவரோ வண்டு உருவம் எடுத்து இடையில் புகுந்து சிவனைமட்டும் வலம் வந்தார். இதனால் கோபமடைந்த தேவி இதற்கான காரணத்தை சிவனிடம் வினவினார். பரமேஸ்வரன், பார்வதியே! பிருங்கி முனிவன் பாக்கியத்தை விரும்பினவனல்ல. மோட்சத்தை விரும்பினவன். மவுனநிலை வகித்த பெருந் தவமுடையவன்; காரணப் பொருள் ஒன்றேயெனக் கருதுபவன்; மற்றொன்றிருப்பதாகக் கருதாதவன்; ஆதலின் என்னை மாத்திரம் பிரதட்சணம் செய்தான் எனக் கூறியருளினார். அத்தருணம், சென்றுகொண்டிருந்த முனிவரைப் பார்வதி தேவி அழைத்து, பிருங்கியே! நான்தான் ஈசனும் சக்தியாக இருப்பவள். உலகில் சக்தியும் சிவனும் இணைந்து இருப்பதுதான் நியதி. சக்தி இல்லையேல் சிவன் கூட இல்லை. உம் உடம்பில் ஓடும் ரத்தமும் ஒட்டியிருக்கும் சதையும் கூட சக்தியான எனது அம்சங்களே! தெரியுமா உங்களுக்கு? எனக் கோபமாகச் சொன்னாள் இறைவி. உடனே முனிவர், தாயே! நீங்கள் கூறும் சக்தி ஏதும் எனக்கு வேண்டாம் என்று கூறிவிட்டு தன் உடம்பில் இருந்த ரத்தத்தையும் சதையையும் உதறி எறிந்தார். சக்தியை இழந்த அவரால் நிற்கக்கூட முடியவில்லை. தடுமாறிய அவருக்கு  சிவபெருமான் ஓர் ஊன்றுக் கோலை கொடுத்தார். அதன் உதவியோடு தனது இருப்பிடம் சென்றடைந்தார் முனிவர். இந்த சம்பவம் பார்வதியின் மனதை வெகுவாகப் பாதித்தது.

பார்வதிதேவி இந்த அவமதிப்பையும் சிவபெருமான் கண்டுகொள்ளவில்லையே என்று நினைத்து, கயிலாசத்தை விட்டு பூலோகத்தை அடைந்து, கவுதமர் என்னும் முனிவரது ஆசிரமத்தில் தங்கினார். பன்னிரண்டு வருடம் மழையின்றி மடிந்தும், ஒடிந்தும், வாடியுமிருந்த ஆசிரமத்து நந்தவனமானது துளிர்த்துத் தழைத்துப் பூத்து பரிமளித்து எங்கும் நறுமணம் வீசியது. மரங்கள் முதலாயின பூத்துக் காய்த்துப் பொலிந்து அழகுடன் மிளிர்ந்தன. அப்போது தர்ப்பை  முதலியவற்றிற்காக வெளியே சென்றிருந்த கவுதம முனிவர்; உமாதேவியார் எழுந்தருளியிருப்பதைத் தெரிந்துகொள்ளாதவராய்ப் பூங்காவைக் கண்டு அதிசயித்து,  அதனைச் சுற்றிப் பார்த்துக் கொண்டு வந்தார். வரும்போது ஒரு வில்வ மரத்தடியிலே எழுந்தருளியிருக்கும் உமாதேவியாரைக் கண்டார். தாயே! கயிலாசத்தை நீங்கிப் பூலோகத்திலே அடியேனுக்குக் காட்சியளித்தருளிய தன்மைக்கு, யான் என்ன தவம் செய்தேனோ? என் முன்னோர் புரிந்த பெருந்தவமோ? அல்லது இந்த ஆசிரமந்தான் செய்த புண்ணியமோ? என்று கூறி வணங்கி நின்று, ஈஸ்வரியே! நீர் பூலோகத்திற்கு எழுந்தருளிய காரணம் யாதோ? எனக் கேட்டார். பார்வதிதேவி கயிலாசத்தில் நடந்த சம்பவங்களை எல்லாம் கூறினாள். இதையெல்லாம் கேட்ட முனிவர் பார்வதியை சிம்மாசனம் ஒன்றின் மீது எழுந்தருளச் செய்து, அவளுக்கு வேண்டும் உபசாரங்கள் செய்து வணங்கி நின்றார்.

இவ்வாறாக பார்வதி தேவி கவுதமரை நோக்கி, தபோதனரே! சிவபெருமானுக்கு இடது பாகத்தில் கலந்துகொள்ளும் பொருட்டு, இப்பூவுலகில் யான் ஒரு விரதம் அனுஷ்டிக்க வேண்டும், மிகவும் மகத்துவம் நிறைந்த விரதமொன்றும் அதனை அனுஷ்டிக்கும் முறைமையும் உரைத்தல் வேண்டும் எனக் கேட்டார். முனிவர், தாயே! பூவுலகில் அனுஷ்டிக்கப்படும் சிறந்த விரதம் ஒன்றுண்டு. கேதாரீஸ்வரர் விரதம் என்றும், கேதார விரதம் என்றும் அதற்குப்பெயர் எனக் கூறி, அதனை அனுஷ்டிக்கும் முறையையும் கூறினார். இந்த கேதாரீஸ்வரர் விரதம்  புரட்டாசி மாதப் வளர்பிறை அஷ்டமித் திதியிலிருந்து ஐப்பசி மாதம் தேய்பிறை சதுர்த்தசித் திதி வரையில் அனுஷ்டிக்கப்படுவது.  அல்லது புரட்டாசி தேய்பிறை பிரதமை முதல் ஐப்பசி  தேய்பிறை சதுர்த்தசி வரை உள்ள நாட்களில்  இவ்விரதம் அனுஷ்டிக்கப்படும்.  அதுவும் இல்லாமல் ஐப்பசி தேய்பிறை சதுர்த்தசியாகிய ஒரு நாளாயினும் கேதாரநாதரைக் குறித்து அனுஷ்டிக்கப்படுவதாகும். விரதம் ஆரம்பித்த நாட்கள் முதல்  ஒவ்வொரு பொழுது சூரிய அஸ்தமனத்தின் பின் உணவருந்தி  இரவில் தர்ப்பையில் உறங்க வேண்டும். இறுதி நாளாகிய சதுர்த்தசி அன்று கும்பம் வைத்து , அர்ச்சனை செய்து  முறுக்கு, அதிரசம், வெண்தாமரை, வெற்றிலை, பாக்கு, சந்தனம் உருண்டை, மாஇலை, அரளி மொட்டு, வாழைப்பழம் போன்றவற்றை 21 என்ற எண்ணிக்கையில் படைத்து  பூஜித்து கேதரநாதரை வணங்கி உபவாசமிருத்தல் வேண்டும். மறுநாள் உதயத்தில் உபவாசம் முடிக்க வேண்டும் என்று பார்வதியை நோக்கி கவுதமர் பணிவுடன் கூறினார். பார்வதி தேவியும் இதன்படி விரதமிருந்தார்.

விரதத்தின் 21 வது நாள் சிவபெருமான், சிவகணங்களோடு கவுரி தேவியான பார்வதிக்குக் காட்சி தந்தார். கவுதம முனிவரை ஆசிர்வதித்து, தனது மேனியில் பாதியை அன்னைக்கு தந்து  அர்த்தநாரீஸ்வரராகிக் கயிலாயத்திற்கு எழுந்தருளினார். இதன் மூலம் ஆணும், பெண்ணும் சமம் என இந்த உலகுக்கு உணர்த்தினார். கேதாரீஸ்வரரைக் குறித்து உமாதேவியாராகிய கவுரி அனுஷ்டித்த விரதமே கேதார கவுரி விரதமாகும். கேதார கவுரி விரதமிருக்கும் பெண்களும் மேற்கூறிய முறையில் விரதம் இருக்க வேண்டும். இதில் சதுர்த்தசி நாளில் கும்பம் வைத்து அதை அம்மனாக நினைத்து வழிபட வேண்டும். வெண்மையை கவுவர்ணம் என்பர். ஆதியில் பரசிவத்திலிருந்து மெல்லிய மின்னல் ஒளி போல் வெண்மையாகத் தோன்றி, அண்ட சராசரங்களையும் உயிர்களையும் படைத்து, அவற்றுக்கெல்லாம் அருள, மலைகளின் மேல் வந்து தங்கினாள் தேவி. வெண்மையான நிறத்துடன் இருந்தாலும் மலைகளில் தங்கியதாலும் கவுரி என அழைக்கப்பட்டாள். அருணகிரிநாதர் கவுரிதேவியை, உலகு தரு கவுரி எனப் போற்றுகிறார். கவுரிதேவியை வழிபடுவது, அனைத்து தேவ-தேவியரையும் வழிபடுவதற்குச் சமம்;  கவுரி வழிபாடு இல்லறத்தைச் செழிக்கச் செய்யும் சிறந்த வழிபாடு என்கின்றன ஞானநூல்கள். ஞானிகள் 108 வகை கவுரி தேவி வடிவங்களைத் தேர்ந்தெடுத்து வழிபட வகை செய்துள்ளனர். அதிலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள 16 (சோடஷ)கவுரிகளின் திருவடிகளைப் போற்றி, வழிபாடு செய்தால், சகல ஐஸ்வரியங்களும் பெருகும்.

ஞான கவுரி: ஒரு முறை சக்திதேவி,உலக உயிர்கள் செயல்படுவது தனது சக்தியால். எனவே, எனது செயலை உயர்ந்தது என்று சிவனாரிடம் வாதிட்டாள். சிவனாரோ, ஒருகனம் உலக உயிர்களின் அறிவை நீக்கினார். இதனால் பெரும் குழப்பம் நேர்ந்தது. அதைக் கண்ட தேவி திகைத்தாள். உயிர்களுக்கு சக்தி மட்டுமே போதாது என்று உணர்ந்தவள்., நாயகனைப் பணிந்தாள். சிவம், உலக உயிர்களுக்கு மீண்டும் ஞானம் அளித்தது. கவுரி தேவிக்கு அறிவின் திறத்தை உணர்த்திய சிவமூர்த்தியை, கவுரி லீலா சமன்வித மூர்த்தி என்று சிவபராக்கிரமம் போற்றுகிறது. இதன் பிறகு, வன்னி மரத்தடியில் அமர்ந்து தவம் செய்த அம்பிகைக்கு தன் உடலில் பாதி பாகத்தை தந்த ஈசன், அவனை அறிவின் அரசியாக்கினார். இதனால் ஸ்ரீஞான கவுரி என்ப போற்றப்பட்டாள் அம்பிகை. பிரம்மன் அவளை ஞானஸ்வர கவுரியாக கார்த்திகை மாத வளர்பிறை பஞ்சமியில் வன்னி மரத்தின் அடியில் இருத்தி வழிப்பட்டான். அந்நாள் ஞான பஞ்சமி, கவுரி பஞ்சமி என்று அழைக்கப்படுகிறது. வீரர்கள் இவளைப் புரட்டாசி வளர்பிறை தசமியில் வழிபடுகின்றனர். அந்த நாளே விஜயதசமியாகப் போற்றப்படுகிறது. இவளுடன் ஞான விநாயகர் வீற்றிருப்பார். இந்த தேவி, மக்களுக்கு உயர்ந்த ஞானத்தையும் கல்வியையும் அருள்கின்றாள்.

அமிர்த கௌரி: உயிர்களுக்குக் குறையாத ஆயுளைத் தருவது அமிர்தம். மிருத்யுஞ்ஜயரான சிவனாரின் தேவியானதால் கவுரிக்கு, அமிர்த கவுரி என்று பெயர். இவளுக்குரிய நாள் ஆடி மாத பவுர்ணமி, ஜல ராசியான கடக மாதத்தில் இவளை வழிபடுவதால் ஆயுள் விருத்தியாகும்; வம்சம் செழிக்கும். இவளுடன் அமிர்த விநாயகர் வீற்றிருப்பாள். திருகடவூர் அபிராமி, அமிர்த கவுரியானவள். அங்குள்ள ஸ்ரீகள்ளவாரணப் பிள்ளையார் அமுத விநாயகர் ஆவார்.

சுமித்ரா கவுரி: உயிர்களுக்கு இறைவன் தலைசிறந்த நண்பனாக இருக்கிறான். சுந்தரரின் தோழனாக ஈசன் அருள் பாலித்த கதைகள் நமக்குக் தெரியும். அவரைப் போன்றே உயிர்களின் உற்ற தோழியாகத் திகழும் அம்பிகையை, அன்பாயி சினேகவல்லி என்ப போற்றுகின்றன புராணங்கள். திருஆடானையில் அருளும் அம்பிகைக்கு சினேகவல்லி என்று பெயர். இவளையே வடமொழியில் ஸ்ரீசுமித்ரா கவுரி எனப் போற்றுவர். இவளை வழிபட, நல்ல சுற்றமும் நட்பும் வாய்க்கும்.

சம்பத் கவுரி: வாழ்வுக்கு அவசியமான உணவு, உடை, உறைவிடத்தை சம்பத்துகள் என்பர். அந்தக் காலத்தில் பசுக்களும் (கால்நடைகள்) உயர்ந்த செல்வமாகப் போற்றப்பட்டன. அத்தகைய உயர்ந்த சம்பத்துகள் பெருக அருள்பவள் ஸ்ரீசம்பத் கவுரி. சம்பத்துகளை உணர்த்தும் வகையில் பசுவுடன் காட்சி அளிப்பாள் இந்த தேவி. அவளே பசுவாக உருவெடுத்து வந்து, சிவபூஜை செய்த தலங்களும் உண்டு. இதனால் அவளுக்கு கோமதி, ஆவுடைநாயகி ஆகிய திருப்பெயர்கள் வழங்கப்படுகின்றன. திருச்சிக்கு அருகிலுள்ள துறையூரில் இறைவன், சம்பத் கவுரி உடனாய நந்தீசுவராகக் கோயில் கொண்டுள்ளார். காசி அன்னபூரணியையும் மகாமங்கள கவுரி, சம்பத் கவுரி என்பர். இவளுடன் ஐஸ்வர்ய மகாகணபதி வீற்றிருக்கிறார். பங்குனி-வளர்பிறை திருதியையில் விரதம் இருந்து சம்பத் கவுரியை வழிபட வீட்டில் தான்யம், குழந்தை குட்டிகளுடன் கூடிய வம்சம், செல்வம் எல்லாம் விருத்தியாகின்றன. வயதான பெரியோர்கள் சுகம் அடைகிறார்கள்.

யோக கவுரி: யோக வித்தையின் தலைவியாக ஸ்ரீமகா கவுரி திகழ்கிறாள். இவளையே ஸ்ரீ யோக கவுரி என்கிறோம். மகா சித்தனாக விளங்கும் சிவனாருனுடன் அவள் யோகேஸ்வரியாக வீற்றிருக்கிறாள். காசியில் அவர்கள் இருவரும் வீற்றிருக்கும் பீடம் சித்த யோகேஸ்வரி பீடம் என்று அழைக்கப்படுகிறது. சித்தர்கள் யோகங்களை அருளும் அம்பிகையை யோகாம்பிகை, யோக கவுரி என்று அழைக்கின்றனர். யோக கவுரியுடன் வீற்றிருக்கும் விநாயகரை யோக விநாயகர் என்பர். திருவாரூரில் தியாகராஜர் மண்டபத்தில் வீற்றிருக்கும் (மூலாதார) விநாயகரை யோக கணபதி என்பர். திருவாரூரிலுள்ள கமாலாம்பிகை யோக கவுரி ஆவாள். அங்குள்ள தியாகராஜரின் ராகசியங்கள், யோக வித்தை எனப்படுகின்றன. திருப் பெருந்துறையில் அன்னை யோக கவுரி யோகாம்பிகையாக வீற்றிருக்கிறாள்.

வஜ்ர ச்ருங்கல கவுரி: உறதியான உடலை வஜ்ர தேஹம் என்பர். அத்தகைய உடலை உயிர்களுக்குத் தரும் கவுரிதேவி வஜ்ர ச்ருங்கல எனப் போற்றப்படுகிறாள். கருட வாகனத்தில் பவனி வரும் இவள் அமுத கலசம், சக்கரம், கத்தி ஆகியவற்றுடன் நீண்ட சங்கிலியை ஏந்திக் காட்சியளிக்கிறாள். ச்ருங்கலம் என்பதற்கு, சங்கிலி என்பது பொருள். வைரமயமான சங்கிலியைத் தாங்கி இருப்பதால். வஜ்ர ச்ருங்கல கவுரி என்ப்படுகிறாள். உயிர்களுக்கு வஜ்ர தேகத்தை அளித்து நோய் நொடிகள் அணுகாமல் காத்து, அருள்புரிவதுடன் இறுதியில் மோட்சத்தையும் தருகிறாள். இவளுடன் இருப்பது ஸித்தி விநாயகர்.

ஸ்ரீத்ரைலோக்ய மோஹன கவுரி: ஆசைக் கடலில் சிக்கி அவதிப்படாமல் இருக்க, இவைள வழிபட வேண்டும். மனதுக்கு உற்சாகத்தையும் உடலுக்குத் தெய்வீக சக்திகளையும் அளிக்கிறாள் இவள். இவளுடன் த்ரைலோக்கிய மோஹன கணபதி வீற்றிருக்கின்றார். காசியில் நளகூபரேஸ்வரருக்கு மேற்குப் பக்கத்தில் குப்ஜாம்பரேஸ்வரர் என்னும் சிவாலயம் உள்ளது. அதில் த்ரைலோக்ய (மோஹன) கவுரி வீற்றிருக்கிறாள்.

சுயம் கவுரி: சிவனாரை தன் மண மகனாக மனதில் எண்ணியவாறு, நடந்து செல்லும் கோலத்தில் அருள்பவள். திருமணத் தடையால் வருந்தும் பெண்கள் சுயம்வர கவுரியை வழிபட, நல்ல கணவன் வாய்ப்பான், ருக்மணி, சீதை, சாவித்ரி முதலானோரின் வரலாறுகள் கவுரி பூஜையின் சிறப்பை வெளிப்படுத்துகின்றன. நல்ல இல்லறத்தை நல்கும் இந்த அம்பிகையை சாவித்ரி கவுரி என்றும் அழைக்கின்றனர். இந்த தேவியுடன் கல்யாண கணபதி வீற்றிருக்கிறார்.

கஜ கவுரி: பிள்ளையாரை மடியில் அமர்த்தியபடி அருள்புரியும் தேவி இவள், ஆடி மாத பவுர்ணமி திதியில் இந்த தேவியை வழிபட, சந்தான பாக்கியம் கிடைக்கும்; வம்சம் விருத்தியாகும். காசி அன்னபூரணி ஆலயத்தில் சங்கர கவுரி கணபதியின் பெரிய திருவுருவம் உள்ளது. இலங்கையில், பல இடங்களில் தேர்ச் சிற்பங்களாகவும், தூண் சிற்பங்களாகவும் ஸ்ரீகஜ கவுரி காட்சியளிக்கிறாள்.

கீர்த்தி கவுரி(எ) விஜய கவுரி: நற்பயனால் ஒருவன் பெரிய புகழை அடைந்திருந்தபோதிலும், அதன் பயனை முழுமையாக அனுபவிக்கச் செய்யும் தேவியாக விஜய கவுரி விளங்குகிறாள். அவளுடைய அருள் இருக்கும் வரையில் அவனது நற்குணங்களும் செயல்களும் மேன்மைபெறும்; கெட்ட நண்பர்களும், பகைவர்களும் விலகுவர்.

சத்யவீர கவுரி: நல்ல மனம் படைத்தவர்களே கொடுத்த வாக்கை நிறைவேற்றுவர். அத்தகைய மனப்பாங்கை அருள்பவள் ஸ்ரீசத்யவீர கவுரி. இந்த தேவியுடன் ஸ்ரீவீர கணபதி அருள்பாலிப்பார். இந்த கவுரிக்குரிய நாள்-ஆடி மாத வளர்பிறை திரயோதசி ஆகும். இந்த வழிபாட்டை ஜெயபார்வதி விரதம், ஜெய கவுரி விரதம் என்று அழைக்கின்றனர்.

வரதான கவுரி: கொடை வள்ளல்கள் கரத்தில் ஸ்ரீவரதான கவுரி குடியிருப்பாள். அன்பர்கள் விரும்பும் வரங்களைத் தானமாக அளிப்பதால் இவள் ஸ்ரீவரதான கவுரி என்று போற்றப்படுகிறாள். திருவையாற்றில் விளங்கும் அம்பிகை, ஸ்ரீஅறம்வளர்த்த நாயகி; வடமொழியில் தர்மசம்வர்த்தினி. அவளுடைய கணவன் அறம்வளர்த்தீசுரர் என்று அழைக்கப்படுகிறார். காஞ்சியிலும் ஸ்ரீஅறம்வளர்த்தீசுவரர் ஆலயத்தைத் தரிசிக்கலாம். புரட்டாசி-வளர்பிறை திருதியை நாளில், வரதான கவுரியை வழிபடுவது சிறப்பு.

சுவர்ண கவுரி: ஒரு பிரளய முடிவில் அலைகடலின் நடுவில் ஸ்வர்ண லிங்கம் தோன்றியது, தேவர்கள் யாவரும் பூஜித்தனர். அப்போது, அதிலிருந்து பொன்மயமாக ஈசனும்,பொற்கொடியாக பராசக்தியும் தோன்றினர். எனவே தேவியை, சுவர்ணவல்லி என்று தேவியை, சுவர்ணவல்லி என்று தேவர்கள் போற்றினார்கள். ஸர்ண கவுரியை வழிபடுவதால் தோஷங்கள், வறுமை ஆகியன நீங்கும். குலதெய்வங்களின் திருவருள் கிடைக்கும். சுவர்ணகவுரி விரதத்தை, ஆவணி-வளர்பிறை திருதியை நாளில் கடைபிடிக்க வேண்டும் என்கின்றன. புராணங்கள். எனினும் நடைமுறையில், கடலரசியான அவளை மாசி மாதத்தில் வழிபடுவதால் பூரண பலனை அடையலாம் என்று அனுபவத்தில் கூறுகிறார்கள்.

சாம்ராஜ்ய மஹாகவுரி மீனாட்சி: அன்பும் வீரமும் ஒருங்கே விளங்கும் தலைமைப் பண்பை தரும் தேவி இவள். இந்த அம்பிகையை ராஜராஜேஸ்வரியாக வணங்குவர். இந்த தேவியுடன் ஸ்ரீராஜ கணபதி அருள்புரிவார். இவளை மனதார வழிபட, ராஜ யோகம் கிடைக்கும்.

அசோக கவுரி: துன்பமற்ற இடமே அசோகசாலம் எனும் தேவியின் பட்டணமாகும். இங்கு தேவி, ஸ்ரீஅசோக கவுரி என்னும் பெயரில் வீற்றிருக்கிறாள். சித்திரை-வளர்பிறை அஷ்டமியில் (அசோகஷ்டமி) அசோக கவுரியை வழிபட, பேரின்ப வாழ்வை, இவளுடன் சங்கடஹர விநாயகர் வீற்றிருக்கிறார்.

விஸ்வபுஜா மகாகவுரி: தீவினைப் பயன்களை விலக்கி, நல்வினைப் பயனை மிகுதியாக்கி, உயிர்களுக்கு இன்பங்களை அளிக்கும் தேவி. காசிக்கண்டம் இவளுடைய பெருமைகளை விவரிக்கிறது. தூய எண்ணங்களை மனதில் வளரச் செய்து, ஆசைகளைப் பூர்த்தி செய்பவளும் இவளே! எனவே, மனதார பூர்த்தி கவுரி என்றும் அழைக்கப்படுகிறாள். சித்திரை மாத வளர்பிறை திரதியையில் இவளை வழிபடுவது விசேஷம். இவளுடன் ஆசா விநாயகர் வீற்றிருக்கிறார்.

இவ்விரத நாட்களில் இருபத்தொரு இழையிலாகிய காப்பை ஆண்கள் வலக்கையிலும், பெண்கள் இடக்கையிலும் கட்டிக் கொள்ளுதல் வேண்டும்.இறுதி நாளாகிய சதுர்த்தசி அன்று கும்பம் வைத்து அதை அம்மனாக நினைத்து பூஜை செய்ய வேண்டும்.  விரத நாட்களில்  உபவாசமிருக்க இயலாதவர் கேதாரநாதருக்கு நிவேதிக்கப்பட்ட உப்பிலாப் பணியாரம் சாப்பிட்டுக்கொள்ளலாம்.

விரத பலன் : கேதார கவுரி விரதம் இருப்பவர்கள் சிறந்த புத்திரப் பேற்றையும், சகல செல்வங்களையும் பெறுவர். வறுமை நீங்கி நினைத்த காரியம் எல்லாம் கைகூடும். விரதம் இருக்கும் பெண்கள் எல்லா வளங்களையும் நலன்களையும் பெற்று, இல்வாழ்வில் கணவரோடு இணைபிரியாது வாழ்வது நிச்சயம்.