செவ்வாய், 22 அக்டோபர், 2013

மனிதனுக்கு உண்மை தேவை அறிவியலா? ஆன்மிகமா?

படித்தவர், பாமரர் அனைவரும் அகத்தியரை அறிவார்கள். உலகின் முதல் சோதனைக்குழாய் குழந்தை அகத்தியர்தான் ! குடுவையில் கருத்தரித்து, வளர்ந்து வெளிப்பட்டதால் அவரை, கலயத்தில் பிறந்தோன் (கும்பசம்பவர்) என்றும், குடமுனி என்றும் கூறுவர்.செயற்கை முறையில் உருவாக்கப்படும் உயிரினங்கள், தொடக்க நிலையில் இயல்புக்கு மாறான உருவத்தைப் பெற்றிருக்கும் என்பதும், இயல்பான வளர்ச்சி, மேம்பட்ட ஆய்வுகளுக்குப் பிறகே சாத்தியமாகும் என்பதும் அறிவியல் உண்மை. முதல் சோதனைக் குழாய் குழந்தையாகிய அகத்தியர் இயல்புக்குக் குறைவான உயரமே பெற்றிருந்தார் என்பது இந்த உண்மையை நிரூபிக்கிறது.

வெய்யில் சுட்டெரிக்கும் போது உடல் எங்கும் வியர்த்து கொட்டுகிறது. வேலைகள் செய்ய முடியாத அளவுக்கு சோர்வாகயிருக்கிறது. ஆன்மிகத்தால் வியர்வையை போக்கும் ஒரு விசிறி மட்டை கூட செய்து தர முடியவில்லை. மார்கழி மாத கடுங்குளிரில் நடுங்கும் போது விஞ்ஞான கண்டுபிடுப்பான கம்பளி போர்வை தான் காப்பாற்றுகிறது,காலராவை ஒழித்தது விஞ்ஞானம்.  கால் கடுக்க
நடந்தவனுக்கு கார்களை தந்தது விஞ்ஞானம். கண்டம் விட்டு கண்டம் தாவும் ஆயுதங்களை படைத்தது விஞ்ஞானம். இத்தனையும் தந்த விஞ்ஞானம், இதை போற்றுவதை விட்டுவிட்டு ஆலகால விஷம் உண்ட ஆண்டவா போற்றி என பாடுவது எந்த வகையில் நியாயமாகும்? என்று கேட்கலாம். அறிவு கலப்பையை அகலமாக உழுவதை விட ஆழமாக உழுதால் இந்த கேள்விக்கு எல்லாம் நல்ல பதில் கிடைக்கும். வெப்பத்தில் வியர்க்கிறது.  வியர்வையினால் உடம்பில் உள்ளிருக்கும் கழிவு பொருள் எல்லாம் வெளியேறுகிறது. காற்றாடி கொண்டு வீசினால் சுகமாக இருக்கும்.  ஆனால் நாளடைவில் கழிவுகள் உடம்பில் தங்கி நோய்களாக வெளிவரும்.

குளிரால் நடுங்கும் போது தசைகள் துடித்து முறுக்கேறுகிறது.  நரம்புகள் தாங்கும் திறனை அதிகரித்து கொள்கிறது. கம்பளி குளிரை தடுக்கலாம்.  நோயை தடுக்காது. எப்படி பார்த்தாலும் விஞ்ஞானம் தருகின்ற கருவிகள் எல்லாம் மனிதர்களுக்கு தற்கால சுகத்தை கொடுத்து நெடுங்கால கஷ்டத்தை தருவதேயாகும். ஆன்மிகம் துயரத்திலிருந்து தப்பிக்க வழி சொல்லாது.  அந்த துயரத்தோடு மோதி ஜெயிப்பதற்கு தான் வழிகாட்டும். நிரந்தரமான சந்தோஷமே ஆன்மிகத்தின் இறுதி நோக்கம். நாம் நினைப்பது போல விஞ்ஞானம் சுகமான வாழ்க்கையை நமக்கு தரலாம் ஆனால் மனித சமுதாயம் இன்று அனுபவித்து கொண்டிருக்கும் கஷ்டங்களுக்கும் அதுவே ஒரு வகையில் காரணமாக இருக்கிறது. அதற்காக விஞ்ஞானம் என்பதும் அறிவு தேடல் என்பதும் வேண்டாம் என்பது அர்த்தமல்ல. எல்லாமே விஞ்ஞான பூர்வமாக இருப்பது தான் சரி என்ற மனோபாவம் தவறு என்பதே. சொல்ல போனால் விஞ்ஞானம் என்பதே ஒரு வகை ஆன்மிகம் தான். மக்கள் கஷ்டம் தீர்க்க புறப்பொருளை நாடுவது விஞ்ஞானம்.  அகப்பொருளை தேடுவது மெய் ஞானம் ஆகும். சக்தி தான் சிவம், சிவன் தான் சக்தி.  இரண்டாக தெரிந்தாலும் இரண்டும் ஒன்று தான் என்கிறது ஆன்மிகம். பொருளும் பொருளின் சக்தியும் வேறு வேறானது அல்ல ஒன்று தான் என்கிறது அறிவியல். சொல்லும் முறையில் தான் மாற்றம் இருக்கிறதே தவிர உள் கருத்து என்னவோ ஒன்று தான்.

அறிவியல் மனிதனின் தேவையை பூர்த்தி செய்வதற்காக!
ஆன்மிகம் என்பது என்ன தேவை என்பதை அறிவது அல்ல
தேவையற்றது எது என்பதைப் புரிந்து கொள்வதற்காக!
தமிழ் மாதங்கள் பிறந்தது எப்படி?

தமிழ் மாதம் என்றால் சித்திரை, வைகாசி என ஆரம்பித்து மாசி, பங்குனி என முடிவது நம் அனைவருக்கும் தெரியும். இந்த மாதங்களுக்கு எப்படி பெயர் வந்தது, யார் பெயர் வைத்தார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள உங்களுக்கு ஆர்வமாக உள்ளதா, இதோ கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றை படித்தால் மாதங்களுக்கு பெயர்கள் வந்தது எப்படி என்பது உங்களுக்கு சுலபமாகப் புரிந்து விடும். சம்ஸ்கிருத வார்த்தைகளே நாளடைவில் மருவி தமிழ் மாதப்பெயர்களாக அமைந்துள்ளன. பெரும்பாலும் ஒரு மாதத்தில் அமாவாசையும், பவுர்ணமியும் மாறி மாறி வரும். இதில் பவுர்ணமி அன்று எந்த நட்சத்திரமோ அதுவே அந்த மாதத்தின் பெயராக இருக்கும். அன்றைக்கு ஒரு பண்டிகையாகவும் விழாவாகவும் இருக்கும்.

சித்ரா நட்சத்திரத்தன்று தான் சித்திரை மாசத்தில் பவுர்ணமி வரும் .அதனால் சித்திரை மாதம் என்றானது.

விசாக சம்மந்தமானது வைசாகம். விசாக நட்சத்திரத்தில் பெரும்பாலும் பவுர்ணமி ஏற்படுகிற மாதம் தான் வைசாகி. மதுரை என்பது மருதை என திரிவது போல் சமஸ்கிருத வைசாகி தமிழில் வைகாசி ஆயிற்று.

அனுஷ நட்சத்திர சம்மந்தமானது ஆனுஷீ. அந்த நட்சத்திரத்தில் பவுர்ணமி ஏற்படுகிற மாதம் ஆனுஷீமாசம். தமிழில் ஷ என்ற எழுத்து உதிர்ந்து ஆனி என்றாயிற்று.

ஆஷாட நட்சத்திரத்தில் பூர்வ ஆஷாடம், உத்தர ஆஷாடம் என்று இரண்டு உண்டு. இதில் பூர்வம் என்றால் முன், உத்தரம் என்றால் பின். பூர்வ/ உத்தர ஆஷாடம் என்பதில் உள்ள அந்த ர்வ என்ற கூட்டெழுத்து சிதைந்தும், ஷ உதிர்ந்தும் தமிழில் பூராடம் உத்திராடம் ஆயிற்று. இந்த இரு நட்சத்திரங்களில் ஒன்றில் பவுர்ணமி வரும் மாதம் ஆஷாடி. இதில் ஷா என்ற எழுத்து உதிர்ந்து ஆடி ஆயிற்று.

ச்ராவணம் என்பது ச்ரவண நட்சத்திரத்தை குறிக்கும். முதலில் உள்ள ச்ர அப்படியே தமிழில் மறைந்து, மீதமுள்ள வண த்தை ஓணம் என்கிறோம். அது  மஹாவிஷ்ணுவின் நட்சத்திரமாதலால் திரு என்ற மரியாதை சொல்லை சேர்த்து திருவோணம் என்கிறோம். அனேகமாக பவுர்ணமி ச்ராவண நட்சத்திரத்தில் வருவதால் ச்ராவணி எனப்படும். இதில் சமஸ்கிருதத்திற்கே உரிய ச், ர என்ற கூட்டெழுத்து மறைந்து ஆவணி மாதமாயிற்று.

ப்ரோஷ்டபதம் என்பதற்கும் ஆஷாடம் போலவே பூர்வமும் உத்தரமும் உண்டு. பூர்வ ப்ரோஷ்டபதம் தான் தமிழில் பூரட்டாதி ஆயிற்று. அஷ்ட என்பது அட்ட என திரிந்தது. உத்திர ப்ரோஷ்டபதம் என்பது உத்திரட்டாதி ஆயிற்று. இந்த நட்சத்தில் பவுர்ணமி ஏற்படுவதால் ப்ரோஷ்டபதி என்பது எப்படியோ திரிந்து புரட்டாசி ஆயிற்று.

ஆச்வயுஜம், அச்வினி என்பதை அச்வதி என்கிறோம். அதிலே பவுர்ணமி வருகிற ஆச்வயுஜீ அல்லது ஆச்வினீ தான் திரிந்து ஐப்பசி ஆயிற்று.

க்ருத்திகை நட்சத்திரம் தான் கார்திகை. இந்த நட்சத்திரத்தில் பவுர்ணமி ஏற்படுவதால் அது கார்த்திகை மாதமாயிற்று.

மிருகசீர்ஷம் என்பது மார்கசீர்ஷி என்றாயிற்று. இதில் பெரும்பாலும் பவுர்ணமி வரும் மாதம் மார்கசீர்ஷி என்றாயிற்று. அதில் சீர்ஷி என்பது மறுவி மார்கழி என்றாயிற்று.

புஷ்யம் தான் தமிழில் பூசம். புஷ்ய சம்மந்தமானது பவுஷ்யம். புஷ்யத்திற்கு திஷ்யம் என்றும் பெயர். பவுர்ணமி திஷ்யத்திலே வரும் மாதம் தைஷ்யம். அதிலே கடைசி மூன்று எழுத்துக்களும் போய் தை என்றாயிற்று.

மக நட்சத்திரத்தில் பவுர்ணமி வருவதால் மாகி என்றாயிற்று. இதில் கி என்பது சி யாக மருவி மாசி ஆயிற்று.

பூர்வ பல்குனியை பூரம் என்றும் உத்தர பல்குனியை உத்திரம் என்கிறோம். இந்த இரு நட்சத்திரத்தில் பவுர்ணமி வருவதால் பல்குனி எனப்படும. அதில் ல எழுத்து மருவி பங்குனி ஆயிற்று.

சமஸ்கிருதம்                                            தமிழ்

சைத்ர                                                            சித்திரை
வைஸாயுகயு                                            வைகாசி
ஆநுஷி / ஜ்யேஷ்ட                                  ஆனி
ஆஷாட                                                         ஆடி
ஸ்யுராவண​:                                                ஆவணி
ப்ரோஷ்டபதீ /பாத்யூரபதயூ                   புரட்டாசி
ஆஸ்யுவிந​:                                                  ஐப்பசி
கார்திக:​                                                            கார்த்திகை
மார்கயூஸீயுர்ஷ​:                                        மார்கழி
தைஷ்யம்/ பவுஷ​:                                       தை
மாக                                                                    மாசி
பாயுல்குயூந​:                                                   பங்குனி.
வழிபாட்டுக்கு காலை, மாலை எந்த வேளை சிறந்தது?

காலை வேளையே மிகவும் சிறந்தது. உங்களைப் பார்த்து உங்கள் வாரிசுகளும் காலையிலேயே எழும் பழக்கத்தை மேற்கொள்வார்கள். காலை 5.30 மணிக்கு எழுந்து, 6 மணிக்குள் வீடு சுத்தம் செய்து, ஏழு மணிக்குள் நீராடி, 7.30 மணிக்குள் பிரார்த்தனையை முடித்து விடுங்கள். 5 நிமிடம் வணங்கினாலும், குடும்பத்தினர் அனைவரும் இணைந்து வழிபட்டால் பிரார்த்தனைக்கு சக்தி அதிகம்.
அணில் கதைக்கு ஆதாரம் எது?

நாம் ஒருவர் செய்யும் பணியில், ஏதோ ஒரு உதவி செய்தாலே போதும்! அந்த சிறு பங்களிப்பை ராமருக்கு அணில் உதவி செய்தது போல என்ற உவமையுடன் குறிப்பிடுவர். உண்மையில், இந்த நிகழ்ச்சி ராமாயணத்தில் இடம் பெற்றதா என்றால் அதுதான் இல்லை. புகழ்பெற்ற வால்மீகி ராமாயணத்திலோ, தமிழில் கம்பராமாயணத்திலோ, இந்தியில் துளசிதாசர் எழுதியதிலோ சேதுபாலம் கட்டும் போது அணில் உதவியதாக தகவல் இல்லை. இது ஒரு கர்ணபரம்பரை கதை. ஆனால், எல்லா மொழி மக்களிடமும் இந்தக்கதை பிரசித்தமாகி விட்டது.  இந்தக் கதை எதில் தான் இருக்கிறது என்றால், திருமாலின் அடியவர்களான ஆழ்வார்களில் ஒருவரான தொண்டரடிப்பொடியாழ்வார் பாடிய திருமாலை 27வது பாசுரத்தில் இடம்பெற்றுள்ளது. அணில் பற்றிய குறிப்பு அதில் வருகிறது. அடியவர்களின் பாதத்தூளியை (தூசு) தலையில் ஏற்றுக் கொண்ட அடியவர் இவர் என்பதால், அணிலையும் பெருமையாகப் பாடிவிட்டார் என்றே தோன்றுகிறது.
விஞ்ஞானம் முடிவடையும் இடத்தில் மெய்ஞ்ஞானம் தொடங்குகிறது என்பது சரியா?

விஞ்ஞானம் ஒரு விஷயத்தை வெளிப்படையாக ஆராய்கிறது. மெய்ஞ்ஞானம் அதே விஷயத்திற்கு உள்முகமாக விளக்கம்தருகிறது. ஒவ்வொரு செயலுக்கும் நேர், எதிர்மறை பலன் உண்டு என்கிறது அறிவியல். (நியூட்டனின் மூன்றாம் விதி) அதையே ஆன்மிகமும், முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் எல்லாம் அவரவர் செய்த வினைப்பயன் என்று எச்சரிக்கிறது. விஞ்ஞானமும், மெய்ஞ் ஞானமும் ஒன்றுக்கொன்று மாறுபட்டவை அல்ல. பாதை வெவ்வேறானாலும், உண்மையை அறிவது தான் இவற்றின் நோக்கம்.
வியாழக்கிழமைகளில் மவுனவிரதம் இருப்பது ஏன்?

மவுனமாக இருந்து பழகினால், மனசாட்சியின் மெல்லிய குரலை நம்மால் கேட்க முடியும் என்பர். மோனம் (மவுனம்) என்பது ஞானவரம்பு என்று அவ்வையார் குறிப்பிடுகிறார். சிவாலயங்களில் கல்லால மரத்தின் கீழ் தட்சிணாமூர்த்தி சீடர்களுடன் தெற்கு நோக்கி வீற்றிருப்பார். இவர் பேசும் மொழி என்ன தெரியுமா? மவுன மொழி. ஆம்..இவர் பேசுவதில்லை. சைகை மூலம் உலகத்துக்கு பெரும் தத்துவத்தைச் சொல்கிறார். இதனால் தான் இவருக்கு ஊமைத்துரை, மவுனச்சாமி என்ற பெயர்கள் உண்டு. வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பிக்கு ஊமைத்துரை என்று தான் பெயர். மவுனமாக இருப்பது வழிபாட்டு வகைகளில் ஒன்றாகும். வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தியை தியானித்து மவுனவிரதம் மேற்கொள்வது இதனால் தான். பெரும்பாலான துறவிகள் வியாழக்கிழமைகளில் பேசுவதில்லை. மவுனத்தில் மூன்று வகை உண்டு. அவை உடல் மவுனம், வாக்கு மவுனம், மன மவுனம் என்பன. உடலைச் சிறிதும் அசைக்காமல் கட்டைபோல இருப்பது உடல் மவுனம். இவர்கள் பத்மாசனத்தில் அமர்ந்து சின்முத்திரை காட்டி தியானத்தில் ஆழ்ந்திருப்பர். வாக்குமனம் என்பது பேசாமல் அமைதி காப்பதாகும். மனதாலும் மவுனமாக இருப்பதே மன மவுனம். இந்த மவுனங்களை கடைபிடிப்பவர்கள் ஞானநிலை எய்துவதுடன், கடவுளோடு பேசி உறவாடும் சக்தியையும் பெறுகிறார்கள்.
புது மணப்பெண்ணை தானியத்தை உதைத்து வீட்டிற்குள் வரவழைப்பது ஏன்?

வீட்டிற்கு வரும் புது மணப்பெண்ணை மகாலட்சுமியாகப் பார்க்கிறார்கள். அந்தக் காலத்தில் மருமகள் என்று எதற்கு சொன்னார்கள் என்றால், மகாலட்சுமியே வீட்டிற்கு வந்து வாசம் செய்கிறாள், இன்று முதல் மகாலட்சுமி குடிபுகுகிறாள் என்று சொல்லக்கூடிய வழக்கம் இருந்தது. இன்றைக்கும் சில ஊர்களில் திருமணம் முடிந்து நேராக மணமகன் வீட்டிற்கு அழைத்து வந்து அங்கு விளக்கேற்றச் சொல்வார்கள். புதுப்பெண்ணிற்கு ஒரு காமாட்சி அம்மன் விளக்கு கொடுத்து அதனை ஏற்றச் சொல்வார்கள். அவர்கள் நுழையும் போது லட்சுமியோடு உள்ளே வருகிறார்கள் என்று அர்த்தம். தானியங்கள் தான் குறிப்பாக லட்சுமியினுடைய அம்சம். அதன்பிறகுதான் வெள்ளி, தங்கம் எல்லாம். அந்தத் தானியத்திலும் முனைமழியாத பச்சரிசி, நெல் முதலியவற்றில் லட்சுமி முழுமையாக வாசம் செய்வதாக ஐதீகம். அதனால்தான் அதுபோன்று காலால் உதைக்கச் சொல்கிறார்கள். அதை அவர்கள் உதைக்கவில்லை, லட்சுமியே உதைத்து உள்ளே கொண்டு வருகிறாள். அந்தப் பெண் காலடி வைக்கும் நேரத்தில் இருந்து லட்சுமி கடாட்சம் சூழ்ந்து வருவது போன்று. அதனால்தான் வலது காலை எடுத்து வைத்து வரச் சொல்வது என்பது ஐதீகம். ஏற்கனவே அம்மி மிதித்து அருந்ததி பார்த்து மண மேடையில் அவர்கள் ஒரு புனித நிலையை அடைகிறார்கள். நாம் வைத்திருக்கும் சம்பிரதாயங்கள், சடங்குகளில் ஒரு பெண் புனித நிலையை அடைகிறார்கள். அந்த நேரத்தில் அவளுடைய மனநிலை ஒரு தெய்வ நிலையில் இருக்கிறது. அந்த நேரத்தில் அவளுக்கு கூடுதல் சக்தி கிடைப்பதாக ஐதீகம். அதனால்தான் அந்தப் பெண்ணை மகாலட்சுமியாக கருத்தில் கொண்டு தானியத்தை உதைத்து வீட்டிற்குள் லட்சுமி கடாட்சத்தை வரவழைப்பதாக ஐதீகம்.
எமகண்டம் மற்றும் குளிகை நேரத்தை எளிதாக கண்டுபிடிக்கும் வழிமுறை என்ன?

எமகண்டம்: சூரிய உதயமான காலை 6 மணியிலிருந்து தான் நல்லநேரம், ராகு, குளிகை, எமகண்டம் போன்றவை கணக்கிடப்படும். அதன்படி காலை 6 -7.30 மணிக்கு வியாழக்கிழமையில் எமகண்டம் ஆரம்பிக்கிறது. இதை கணக்கில் வைத்துக்கொண்டு கீழே கொடுத்துள்ள படி இந்த நேரத்துடன் ஒன்றரை மணி நேரத்தை கூட்டிக்கொண்டும், கிழமையை குறைத்துக்கொண்டும் வந்தால் அடுத்தடுத்த கிழமைக்கான  எமகண்ட நேரம் வந்து விடும்.

வியாழக்கிழமை எமகண்ட நேரம் - 6.00 - 7.30
புதன்கிழமை எமகண்ட நேரம் -     7.30 - 9.00
செவ்வாய்க்கிழமை எமகண்ட நேரம் - 9.00-10.30
திங்கள்கிழமை எமகண்ட நேரம் - 10.30-12.00
ஞாயிற்றுக்கிழமை எமகண்ட நேரம் - 12.00-1.30
சனிக்கிழமை எமகண்ட நேரம் - 1.30-3.00
வெள்ளிக்கிழமை எமகண்ட நேரம் - 3.00-4.30.

குளிகை: காலை 6 -7.30 மணிக்கு சனிக்கிழமையில் குளிகை நேரம் ஆரம்பிக்கிறது. இதை கணக்கில் வைத்துக்கொண்டு கீழே கொடுத்துள்ள படி இந்த நேரத்துடன் ஒன்றரை மணி நேரத்தை கூட்டிக்கொண்டும், கிழமையை குறைத்துக்கொண்டும் வந்தால் அடுத்தடுத்த கிழமைக்கான  குளிகை நேரம் வந்து விடும்.

சனிக்கிழமை குளிகை நேரம் - 6.00 - 7.30
வெள்ளிக்கிழமை குளிகை நேரம் - 7.30 - 9.00
வியாழக்கிழமை குளிகை நேரம் - 9.00-10.30
புதன் கிழமை குளிகை நேரம் - 10.30-12.00
செவ்வாய்க்கிழமை குளிகை நேரம் - 12.00-1.30
திங்கள் கிழமை குளிகை நேரம் - 1.30-3.00
ஞாயிற்றுக்கிழமை குளிகை நேரம் - 3.00-4.30.
தங்கம் கனவில் வரலாமா?

தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. ஒரு பவுன் பத்து ரூபாய் இருந்தது ஒரு காலம். இப்போழுது இருபது ஆயிரம் ரூபாயை தாண்டி விட்டது. அந்த தங்கம் கனவில் வந்தால் நோய்கள் உருவாகும், கருத்து வேறுபாடுகள் ஏற்படும். தொழிலுக்கு செய்த முதலீடுகளில் பிரச்சனைகள் உருவாகலாம், ஆனால் தஙகத்தேர் கனவில் வந்தால் காரிய வெற்றி கிட்டும் என்பது நம்பிக்கை.
நெல்லிக்காயின் மகத்துவம் தெரியுமா?

நெல்லியில் மகாவிஷ்ணு நித்யவாசம் செய்கிறார். எனவே நெல்லியமுதம் அவருக்கு மிகவும் பிடித்தமானது. ஏகாதசியில் நெல்லி மேல் பட்ட நீரில் நீராட, துவாதசியில் நெல்லி உண்பவன் கங்கையில் நீராடிய பயனும், காசியை பூஜித்த பலனையும் பெறுகின்றான். சூரியன் தவிர மற்றோரை நெல்லியால் பூஜிக்கலாம் அமாவாசையன்று நெல்லியை பயன்படுத்துதல் கூடாது. கோயில் கோபுரம் கலசங்களில் நெல்லியையும் போடுவர். மேலும் விமான உச்சிக் கலசத்தின் கீழாக நெல்லிக்கனி வடிவத்தில் ஒரு கல்லை செதுக்கி வைப்பார் இதற்கு ஆமலகம் என்று பெயர்.

ஒரு ஆரஞ்சுப் பழத்தில் இருக்கும் வைட்டமின் சி யின் அளவைப்போல் இருபது மடங்கு வைட்டமின் சத்தைக் கொண்டது நெல்லிக்காய். கண்களுக்கு தெளிவை கொடுக்கிறது. தலைமுடி உதிராமல், வளர்ந்து, நரைமுடி தோன்றுவதை தவிர்க்கிறது. சகல வயதினருக்கும் பல வழிகளில் நிவாரணம் தரும் நெல்லிக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் மூளை வளர்ச்சிக்கும் உதவுகிறது. நெல்லிக்காய் நம் உடலில் தோன்றும் நஞ்சுகளை வெளியேற்றி இளமையாக இருக்க வழி செய்கிறது. உடல் திசுக்களுக்கு புத்துணர்ச்சியளித்து உடல் செல்கள் நன்கு செயல்பட உதவி புரிகிறது. கொழுப்புச்சத்து உடலிற்குத் தேவையான ஒன்று. உடலிற்குத் தேவைப்படாத அதிகப்படியான கொழுப்புச்சத்து இரத்தக் குழாய்களில் படிய ஆரம்பிக்கும். இதுதான் மாரடைப்பு ஏற்பட காரணமாகி விடுகிறது. நெல்லிக்காயில் இருக்கும் வைட்டமின் சி இரத்தக் குழாய்களில் படிந்திருக்கும் கொழுப்புச் சத்துக்களை சுலபமாக கரைத்து விடும்,இதனால் மாரடைப்பைத் தவிர்க்கலாம். இரவில் நெல்லிக்காய் சாப்பிட கூடாது. சாப்பிட்டால் புத்தி, வீர்யம், தேஜஸ் குறைந்து விடும்.
கடவுளுக்கு உருவம் உண்டா?

ஒரு சமயம் ராமகிருஷ்ண பரமஹம்சரை சந்தித்த ஒரு பக்தர், கடவுளுக்கு உருவம் உண்டா? என்று கேட்டார். அதற்கு ராமகிருஷ்ணர், இறைவன் உருவம் உடையவர், உருவம் அற்றவர்-இந்த இரண்டும் அவரே! அதாவது பனிக்கட்டியையும், தண்ணீரையும் போல என்று பதில் கூறினார். இறைவன் என்பவன் முடிவில்லாமல் பரந்து கிடக்கும் மகா சமுத்திரத்தைப் போன்றவன். சமுத்திரம் அதீத குளிர்ச்சியின் காரணமாக சில இடங்களில் உறைந்திருக்கும். அவ்விதம் உறைந்த பனிக் கட்டிகள் பலவித வடிவங்களில் இருக்கும். ஆனால் சிறிது வெப்பம் அதிகரித்ததும் பனி உருகி நீரோடு நீராகக் கலந்து விடும். பனிக்கட்டியும் நீரும் ஒரே சமுத்திரத்தைச் சேர்ந்தவைதான். இறைவனும் அப்படித்தான். பக்தியின் குளிர்ச்சியால் அவன் பக்தர்களுக்கு தகுந்தாற்போல பலவேறு வடிவங்களில் தோன்றுகிறான். ஞானம் என்ற வெம்மை செயல்பட ஆரம்பித்ததும், அவனும் வடிவமற்றவானாகி விடுகிறான். இவ்வாறாக, சாதாரண பக்தனுக்கு வடிவம் தேவைப்படுகிறது. ஆனால் அனைத்தும் அறிந்த ஞானிக்கு வடிவம் தேவைப்படுவதில்லை.