ஞாயிறு, 22 நவம்பர், 2020

ஐயப்பனை எளிதாக தரிசனம் செய்ய வேண்டுமா?

ஐயப்பனை எளிதாக தரிசனம் செய்ய வேண்டுமா?

கடவுள் என்பவர் குறிப்பிட்ட சில விசேஷ நாட்களில் மட்டுமே தனது அருளை அதிக அளவில் பக்தர்களுக்கு கொடுப்பார் என்றும் மற்ற நாட்களில் அருள் வழங்கும் அளவை குறைத்துக்கொள்வார் என்றும் யாரிடமாவது கூறியுள்ளாரா? இல்லையே...

உண்மையான பக்தன் நம்மை தேடி வரமாட்டானா... அவனுக்கு நாம் எந்நேரமும் அருள்பாலிக்க வேண்டுமே.. என்று பகவான் நமக்காக  காத்து கொண்டிருக்கிறார்.  அப்படி அருளை அள்ளி வழங்க இறைவன் தயார் நிலையில் இருக்கும் போது, நாம் மட்டும் ஏன் திருவிழா காலத்தில் மட்டும் கோயிலுக்கு சென்று கூட்டத்தில் முண்டியடித்து கொண்டு சாமி தரிசனம் செய்வது, அறைகுறையாக வழிபாடு செய்வது என செயல்பட்டு கொண்டிருக்கிறோம்.

சபரிமலையில் கார்த்திகை முதல் தேதி முதல் தை மாதம் வரை மண்டல கால பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாக்காலங்களில் பக்தர்கள் நாடு முழுவதிலும் இருந்து வந்து குவிந்து விடுவார்கள். மலைப்பகுதியில் உள்ள சபரிமலையில் கோடிக்கணக்கான பக்தர்கள் சீசன் சமயத்தில் ஒரே சமயத்தில் தரிசனத்திற்கு செல்வதால் சபரிமலையே ஸ்தம்பித்து விடுகிறது. சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. யாரும் சரிவர சுவாமியை தரிசனம் செய்ய இயலாமல் போய்விடுகிறது. வயதான பெரியவர்கள், பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் இந்த சீசன் சமயத்தில் சென்று அதிக சிரமத்திற்கு ஆளாகின்றனர். அதுமட்டுமின்றி விபத்தும் ஏற்படுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இந்த சீசன் சமயத்தில் புல்மேட்டுப்பகுதியில் விபத்து ஏற்பட்டு விலை மதிப்பில்லா பல உயிர்கள் பறிபோனது. இதனால் அந்த புனிதமான மலையின் புனிதம் கெட வாய்ப்பு ஏற்படலாம்.

இப்போதெல்லாம் மாதமாதம் தமிழ் மாதப்பிறப்பிற்கு சபரிமலை நடை திறக்கப்படுகிறது.  அதுமட்டுமில்லாமல்,  பிரதிஷ்டை தினவிழா, ஓணம், சித்திரை ஆட்டத்திருநாள் என சில மாதங்களில் இருமுறை கூட சபரிமலை ஐயப்பன் கோயில் திறக்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில் கூட்டம் மிகவும் குறைவாகவே இருக்கும். அப்போது சபரிமலை சென்று ஐயப்பனை சிறப்பாக, நிம்மதியாக, எளிதாக தரிசனம் செய்து வேண்டும் வரங்களை பெறலாமே.

எப்போது சென்றாலும் அள்ள அள்ளக் குறையாமல் அருளை வாரி வழங்கும் நம் ஐயப்பனை பற்றி நாமே புரிந்து கொள்ளாவிட்டால் எப்படி?


பாகப்பிரிவினையால் வந்த விபரீதம்!

பாகப்பிரிவினையால் வந்த விபரீதம்!

சாதாரணமாக குடும்பங்களில், அண்ணன்  தம்பிகளுக்குள் பாகப் பிரிவினையின் போது, பகை ஏற்படுவது சகஜம்.தகப்பனார் இருக்கும் போதே அவர், யார், யாருக்கு என்னென்ன என்பதை பங்கு போட்டுக் கொடுத்து விடுவது நல்லது. ஒன்றும் எழுதி வைக்காமல் மண்டையைப் போட்டு விட்டால், பாகப் பிரிவினையின் போது, அண்ணன் தம்பிகளுக்குள் விரோதம் ஏற்பட வாய்ப்புண்டு. இதில் யாராவது ஒருவருக்கு விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இருந்தால், விஷயம் சுமூகமாகத் தீர்ந்து விடும். அது போன்ற எண்ணம் இல்லாவிட்டால் அண்ணன், மனைவி, மச்சினன், மாமனார் இவர்கள் ஒரு அணியாகவும், தம்பியின் மனைவி, மாமனார், மச்சினன் போன்றவர்கள் ஒரு அணியாகவும் நின்று, சண்டை போட வாய்ப்பு உண்டு.

இந்தப் பகை தற்காலிகமானதாகவும் இருக்கலாம் அல்லது ஜென்மப் பகையாகவும் மாறலாம். பொறுமையும், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையும் இருந்தால், குடும்பம் ஒற்றுமையாக இருக்கும். விபவசு என்று ஒரு ரிஷி இருந்தார். அவருக்கு, சுப்ரதீகர் என்ற தம்பி இருந்தார். தம்பி, அண்ணனிடம் பேசும் போதெல்லாம், பாகப் பிரிவினையைப் பற்றியே வற்புறுத்துவது வழக்கமாகி விட்டது. அதற்கு அண்ணன் விபவசு, பெருந்தவமுள்ள தம்பி... பாகப் பிரிவினை என்பது பல பிழைகள் ஏற்படக் காரணமாகக் கூடும். சொத்துகளை பிரித்துக் கொண்ட பிறகும், திருப்தி ஏற்பட்டு விடும் என்று சொல்ல முடியாது. எனக்கு அதைக் கொடுக்காமல் அண்ணன் ஏமாற்றி விட்டான் என்று தம்பி நினைக்கக் கூடும். விலையுயர்ந்ததை தம்பி எடுத்து விட்டானே என்று அண்ணன் நினைக்கக் கூடும். இப்படி, இவர்களுக்குள் அபிப்ராய பேதம் ஏற்பட்டு, அதுவே பகையாகி விடும்.

இந்த சமயம் பார்த்து சந்தர்ப்பவாதிகள் இதில் தலையிட்டு சமாதானம் செய்து வைப்பதாகச் சொல்லி, நண்பர்கள் போல பேசுவர். இப்படி அண்ணனுக்கு நாலு பேர், தம்பிக்கு நாலு பேர் சேர்ந்து, இரண்டு அணிகள் உருவாகி குடும்ப சண்டை, கட்சிச் சண்டையாகி விடும். அதனால், பாகப் பிரிவினையைப் பற்றி அதிகம் பேசாதே... என்றார். இவ்வளவு தூரம் சொல்லியும் சுப்ரதீகர் மகரிஷி மீண்டும் பாகப் பிரிவினை பற்றியே பேசினார். இதனால், கோபம் கொண்ட விபவசு முனிவர் தம்பியைப் பார்த்து, சுப்ரதீகா... நான் எவ்வளவு நல்ல வார்த்தை சொன்னாலும் நீ கேட்கவில்லை. பாகப் பிரிவினையையே விரும்புகிறாய். மதம் பிடித்தவன் போல் பேசுகிறாய். அதனால், நீ யானை ஜன்மத்தை அடைவாயாக... என்று சபித்தார்.

இதைக் கேட்ட தம்பி சுப்ரதீகர், நீயும் கொழுப்பினால் பாகப்பிரிவினைக்குச் சம்மதிக்காததுடன், என்னையும் சபித்து விட்டாய். அதனால், நீ ஆமை ஜன்மத்தை அடைவாயாக... என்று மறு சாபமிட்டார். என்ன இருந்தாலும் முனிவர்கள் சாபமல்லவா, பலிக்காமல் இருக்குமா! இருவருமே அடுத்த ஜென்மத்தில் தம்பி, யானையாகவும்,  அண்ணன், ஆமையாகவும் பிறந்தனர். இரண்டுமே பெரிய உருவத்துடன், மகாபலம் வாய்ந்தவைகளாக இருந்தன. இப்படி ஆன பிறகும் கூட இவைகளுக்குள் இருந்த விரோதம் தீரவில்லை. ஒன்றை ஒன்று கொன்றுவிட முயன்று, நீண்ட காலம் போராடியது. இந்த சமயம் கருடன் ஒன்று, தன் தகப்பனாரிடம் என் பசியைத் தீர்க்குமளவுக்கு ஆகாரம் எங்கே உள்ளது என்று கேட்க, தகப்பனார் கச்யபரும், இந்த யானை, மற்றும் ஆமையைக் குறிப்பிட்டு சொல்லி, அவற்றைச் சாப்பிட்டு, பசியைத் தீர்த்துக் கொள்ளச் சொன்னார். அதன்படியே, கருடன், ஏரிக்கரைக்குப் போய், இரண்டையும் கபளீகரம் செய்து, ஏப்பம் விட்டது.

பாகப் பிரிவினை என்பது, எங்கே போய் முடிந்தது பாருங்கள்! தகப்பன், பாட்டன் சேர்த்து வைத்த சொத்துக்கு அண்ணன், தம்பிகள் விரோதப்பட்டுக் கொள்வது நியாயமா? யோசிக்க வேண்டும்!


வேதத்திற்கு நிகரான மந்திரம் எது தெரியுமா?

வேதத்திற்கு நிகரான மந்திரம் எது தெரியுமா?

யாவர்க்குமாம் இறைவற்கொரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரைதானே

-திருமூலர் திருமந்திரம்

இந்த மந்திரம் வேதத்திற்கு சமமானதாகும். எளிமையான ஆனால் வலிமையான பதப்பிரயோகம் இதில் உபதேசிக்கப்பட்ட தர்மங்களை யாரும் எவ்வித கஷ்டமும் இல்லாமல் எப்போதும் செய்யலாம். பகவான் பக்தியைத் தான் பார்க்கிறார். பக்தன் என்னை கொண்டு வந்திருக்கிறான் என்று பார்ப்பதில்லை. சில பச்சிலைகளைப் போட்டால் பரமேஸ்வரன் திருப்தி அடைந்து விடுகிறார். இதை யாரும் செய்யலாம்.  ஒரு பிடி புல்லை கோமாதாவான பசுவுக்கு ஊட்டலாம். இதில் முப்பத்து முக்கோடி தேவதைகளும் திருப்தி அடைந்து விடுகிறார்கள். இதையும் யாரும் எளிதில் செய்யலாம்.

தான் சாப்பிடும் ஆகாரத்தில் ஒரு கைப்பிடி ஒரே ஒரு கைப்பிடி அடுத்தவனுக்கு வழங்கலாம். இதுவும் யாரும் செய்யக் கூடிய எளிமையானதே. இவைகளில் எதையும் செய்ய முடியவில்லையா பரவாயில்லை. அடுத்தவனோடு பேசும் போது கடுப்படிக்காதே. இதமாகப் பேசு. பதமாகப் பேசு. இல்லையென்று சொன்னாலும் அதையும் இனிமையாகச் சொல். இதையாவது செய்யலாமே. நாம் மூச்சடக்க வேண்டாம். பேச்சடக்க வேண்டாம். நம்மை கடைத்தேற்றக் கூடிய எளிமையான அறங்கள் இவைகளில் எந்த ஒன்றையாவது செய்து பார்க்கலாமே. ஒரு கை புல், ஒரு கை பொரி அன்போடு படைத்தால் விநாயகர் வசப்பட்டு விடுவார். சில துளசி இலைகளில் மகா விஷ்ணு வசப்பட்டு விடுவார். சில துளி கங்கா தீர்த்தம் பரமேஸ்வரன் உச்சி குளிர்ந்து விடுகிறார். சின்னச் சின்ன அகல் விளக்குகளில் மகாலட்சுமி பிரசன்னமாகி விடுகிறாள். இப்படி அன்போடு செய்யப்படும் பக்தியால் இறைவனை அடையலாம். ஆன்மீகம் என்றால் அன்புதான்.


கண்டிப்பாக தூங்கக்கூடாத நேரம் எது தெரியுமா?

கண்டிப்பாக தூங்கக்கூடாத நேரம் எது தெரியுமா?

சூரியன் உதிப்பதற்கு முன்புள்ள அதிகாலைப் பொழுதை உஷத் காலம் என்பர். அந்த சமயத்தில் தேவர்கள், சிவபார்வதி, மகாலட்சுமி போன்ற தெய்வங்கள் வானமண்டலத்தில் சஞ்சரிப்பதாக ஐதீகம். இந்த நேரத்தில் கண்டிப்பாக தூங்கக்கூடாது. தியானம், வழிபாடு போன்ற பயனுள்ள பணிகளைச் செய்யவேண்டும். இந்த நேரத்தில் செய்யும் வழிபாடு பலமடங்கு புண்ணியத்தை தரும். சூரியோதயே சாஸ்தமயே ச ஸாயினம் விமுஞ்சதி ஸ்ரீரபி ஸக்ரபாணிநம் என்கிறது சாஸ்திரம். சூரியன் உதயமாகும் நேரத்தில் தூங்குபவன், இந்திரனைப் போல செல்வச்செழிப்பு கொண்டவனாக இருந்தாலும், அவனை விட்டு திருமகள் விலகி விடுவாள் என்பது இதன் பொருள்.


யோகினி என்றால் யார் தெரியுமா?

யோகினி என்றால் யார் தெரியுமா?

அண்மையில் இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட 1100 வருடங்களுக்கு முற்பட்ட யோகினி சிலை பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரிலிருந்து இந்தியாவுக்கு மீட்கப்பட்டது. யோகினி என்றால் யார்? இவர்கள், பராம்பிகையான லலிதா பரமேஸ்வரியை வழிபடும் தேவதைகள். முன்னொரு காலத்தில் மகிஷாசுரன், அரக்கர்களுக்கே உரிய கொடூரத்துடன் தேவர்களைத் துன்புறுத்தி வந்தான். தேவர்கள் பராசக்தியை வேண்டி தங்களைக் காத்தருளும்படி வேண்டினர். ஆதிசக்தியும் அவர்களுக்கு அபயம் அளித்து, தன்னுடைய உடலிலிருந்து துர்க்கை என்னும் சக்தியைத் தோற்றுவித்தார். இந்த துர்க்கை தன் உடலிலிருந்து எட்டு சக்தியரைத் தோற்றுவித்தாள். அவர்களே யோகினிகள். இப்படித் தோன்றிய 8 யோகினிகளும் 8*8 யோகினிகளாகப் பிரிந்தனர். இந்த 64 யோகினிகளும் மகிஷாசுரவதத்துக்கு உதவி அவனது சகோதரர்கள், கம்பன், நிசும்பன் மற்றும் அரக்கர் சேனை அழிவுக்குக் காரணமாய் இருந்தார்கள்.

இவர்கள் மிகவும் அதீதமான சக்தி படைத்தவர்கள். இவர்களை வழிபடுவதன் மூலம் மனிதர்களுக்கு அபாரமான சித்திகள் கிடைத்தன என்று புராணங்கள் விவரிக்கின்றன. இந்த யோகினி வழிபாட்டை, தாந்த்ரீக வழிபாடு என்று குறிப்பிடுவார்கள். இதில் அதிகமாக பெண்களே ஈடுபட்டனர். புலன்களை அடக்கி, பிரம்மச்சரிய விரதம் இருந்து (ஆண்களும் பெண்களும்) இந்த யோகினிக்களை வழிபட்டால், அவர்களுடைய அருளால், பில்லி சூன்யம், ஏவல் போன்ற தொல்லையிலிருந்து விடுபடலாம் என்று சொல்கிறார்கள். இந்த யோகினி வழிபாடு வட இந்தியாவிலும், புத்த மதம் அதிகமாக பரவிய திபெத், சீனா, ஜப்பான், பர்மாவிலும் (இன்றைய மியான்மர்) காணப்பட்டது.

இந்த 64 யோகினிகளுக்கும் வட இந்தியாவில் கீழ்க்கண்ட இடங்களில் கோயில்கள் உள்ளன.

1. ஒடிசா மாநிலத்தில், குத்திரா மாவட்டம் ஹிராஸ் பூரில் உள்ளது. (புவனேஸ்வரிலிருந்து 15 கி.மீ.), 2. ஒடிசா மாநிலம் பலாங்கிர் மாவட்டம் ரானிப்பூர் ஜரியலில் உள்ளது. 3. மத்தியப் பிரதேச மாநிலம் கஜுராகோ மலைப்பகுதியில் உள்ளது. 4. ஜபல்பூர் ஜில்லா பெக்காட் என்னும் இடத்தில் உள்ளது. அவற்றில் தனிச்சிறப்பு வாய்ந்தது பெக்காட்-ல் உள்ள கோயில். இதை பேராகாட் என்றும் அழைக்கிறார்கள். வட்டமாக அமைந்த மண்டலம் போன்ற சுவர். அதில் 64 யோகினிகளின் வடிவங்களையும் காண்கிறோம். பத்தாம் நூற்றாண்டில் அமைந்த கோயில். அதாவது தஞ்சை பெரிய கோயில் உருவாவதற்கு முன்பு அமைந்த கோயில்.

64 கலைகளின் வடிவாகத் திகழ்பவள்; 64 வகையான உபசாரங்களால் பூஜிக்கப்படுபவள் மட்டுமல்ல; 64 கோடி யோகினி கணங்களால் பூஜிக்கப்படுபவள் லலிதா பரமேஸ்வரி என்று குறிப்பிடும் லலிதா சஹஸ்ரநாமம். இங்குள்ள யோகினியர் சிற்பத்தின் கீழே அவர்களின் பெயர்களும் பொறிக்கப்பட்டுள்ளன. காமதா, அந்தகாரி, சர்வதோமுகி, அஜிதா, ஆனந்தா.. என்று பெருகின்றன அவர்களின் பெயர்கள்.  இந்த யோகினி வழிபாட்டு முறையில் யோகாவும் இணைந்துள்ளது. மூலாதாரத்திலுள்ள குண்டலினி சக்தியை எழுப்பி உடலிலுள்ள அதன் ஏழு விதமான பீடங்களும் எடுத்துச் செல்வதாகும். இந்த வழிபாடு மிகவும் கடினமான ஒன்று. ஆனாலும் இந்த வழிமுறையில் பெண்கள் அதிகம் ஈடுபட்டு சிறந்து விளங்கினார்கள் என்பது பழைய சுவடிகளிலிருந்து தெரிய வருகிறது. சவுட்யோகினி மந்தீர் என்று குறிப்பிடப்படும். இந்த கோயில், தொன்மையான வழிபாட்டை மட்டும் காட்டவில்லை. சகிப்புத்தன்மை இல்லாத மூர்க்கத்தனத்தின் வெளிப்பாட்டை, பிற்காலத்தில் பின்னமான சிலைகளின் வடிவத்தில், இன்றும் நமக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறது.

கணவன் மனைவிக்குள் பிரச்னையா?

கணவன் மனைவிக்குள் பிரச்னையா?

கணவன் மனைவியும் விட்டுக் கொடுத்து வாழ்ந்தால் அதைப்போல ஆனந்தம் வேறில்லை. அதே நேரம் வெறுப்பு வளர்ந்து விட்டால் நிலைமை தலைகீழாகிவிடும். சில நேரங்களில் விவாகரத்து வரை போய் விடுகிறது. இந்தநேரத்தில், மற்றவர்களின் யோசனையைக் கேட்டு மனதைக் குழப்புவதை தவிர்க்க வேண்டும். கணவன், மனைவி விஷயத்தில் முடிவெடுக்க வேண்டியது சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமே. பக்திக்கு மிஞ்சிய பரிகாரம் இல்லை என்று அமைதியாக இறைவனை சரணடைவது ஒன்று தான் இதற்கு எளிய வழி. ஆணும் பெண்ணும் சரிசமம் என்பதை சிவபெருமானே நமக்கு எடுத்துக்காட்டியிருக்கிறார். ஆண்பாதி பெண்பாதியாக இருக்கும் அர்த்தநாரீஸ்வரர் கோலத்தில் இருக்கும் இறைவனை வழிபடுங்கள். பவுர்ணமி நாளில் விரதமிருந்து மாலையில் அர்த்தநாரீஸ்வரருக்கு பால்நிவேதனம் செய்து பருகி வாருங்கள். அர்த்தநாரீஸ்வரர் சந்நிதி இல்லாத ஊர்களில், சிவாலயத்துக்கு சென்று,

மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலை
கண்ணில் நல்லஃதுறும் கழுமல வளநகர்ப்
பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே - என்ற தேவாரப்பாடலை மூன்று முறை சொல்லுங்கள். உங்கள் வாழ்க்கையில் மீண்டும் வசந்தம் மலரும்.

திருவண்ணாமலை கோவில்

ஒரு தடவை கிரிவலம் சுற்றினால் 1825 தடவை சுற்றிய பலன் திருவண்ணாமலையில் கிடைக்க வேண்டுமா?

கலியுகத்தில் நமது கர்மவினைகளை நீக்கும் சக்தி அன்னதானத்திற்கும், மந்திரஜபத்திற்கும் மட்டுமே உண்டு என்பதை  ஆன்மீக குரு திரு. சகஸ்ரவடுகர் அவர்கள் கண்டறிந்துள்ளார்.அன்னதானம் பற்றி அவர் மேலும் கூறியுள்ளதாவது: நாம் வசிக்கும் ஊரில் ஒரு நாளுக்கு 1,00,000 பேர் வீதம் ஓராண்டு வரை அன்னதானம் செய்தால் எவ்வளவு புண்ணியம் கிடைக்குமோ அதைவிட அதிகமான புண்ணியம் காசிக்குச் சென்று ஒரே ஒரு நாள் மூன்று வேளைகளும் அன்னதானம் செய்தால் கிடைத்துவிடும். காசிக்குச் சென்று ஒரு நாளுக்கு 1,00,000 பேர் வீதம் ஓராண்டு வரை அன்னதானம் செய்தால் எவ்வளவு புண்ணியம் கிடைக்குமோ அதை விட அதிகமான புண்ணியம் அண்ணாமலையில் ஒரு சாதாரண நாளில் அன்னதானம் செய்தால் கிடைத்துவிடும். நாம் பிறந்தது முதல் நமது இறுதிநாள் வரையிலும் ஒவ்வொரு நாளும் காசியில் 1,00,00,000 பேர்களுக்கு அன்னதானம் செய்தால் எவ்வளவு புண்ணியம் கிடைக்குமோ அதைவிட அதிகமான புண்ணியம்,துவாதசி திதி வரும் நாளில் அண்ணாமலையில் மூன்று வேளைகளும் ஒருவருக்கு(காலையில் ஒருவர்,மதியம் ஒருவர்,இரவில் ஒருவர்)அன்னதானம் செய்தால் கிடைத்துவிடும்.மேலும்,மறுபிறவியில்லாத முக்தி துவாதசி அன்னதானம் செய்வதாலேயே கிடைத்துவிடும்.இந்த பேருண்மையை சிவமஹாபுராணத்தில் வித்யாசார சம்ஹிதை தெரிவிக்கிறது. துவாதசி திதியும்,சனிப்பிரதோஷமும் சேர்ந்து வரும் நாளில் நமது ஆன்மீக குருவின் தலையில் அன்னதானம் செய்தால் மேலே கூறிய எண்ணிக்கையை விட ஆயிரம் மடங்கு புண்ணியம் நம்மை வந்து சேரும்.இதனால்,கடந்த ஐந்து பிறவிகளில் நாம் செய்த கர்மவினைகளின் தொகுப்பை அனுபவிக்கவே பிறந்திருக்கிறோம்;நமது அனைத்து கர்மவினைகளும் நம்மைவிட்டு முழுசாக நீங்கிட இந்த சொர்ணாகர்ஷண கிரிவலம் ஒரு காரணமாக அமைந்துவிடும். ஒரே ஒரு சனிப்பிரதோஷம் அன்று அண்ணாமலை கிரிவலம் சென்றால்,ஐந்து வருடங்களுக்கு(365 *5 = 1825 நாட்கள்) தினமும் கிரிவலம் சென்றதற்கான பலன்கள் கிடைக்கும்;மேலும்,சனிப்பிரதோஷ நேரத்தில் பிரதோஷ அபிஷேகத்தில் கலந்து கொண்டு,பிரதோஷ நேரம் நிறைவடைந்த பின்னர் அண்ணாமலையாரை தரிசனம் செய்தால் 1825 நாட்களுக்கு தினமும் அண்ணாமலையாரை தரிசனம் செய்த புண்ணியம் கிடைக்கும் என்பதை சித்தர்களின் தலைவரான கும்பமுனி தனது பாடல்களில் தெரிவிக்கிறார். சுவாதி நட்சத்திரமும்,சனிப்பிரதோஷமும் சேர்ந்து வருவது பல ஆண்டுகளுக்கு ஒருமுறையே வரும் ஓர் அற்புத நிகழ்வாகும்;அத்துடன் துவாதசி திதியும் சேர்ந்து வருவது சில நூற்றாண்டுகளுக்கு ஒருமுறை வரும்;அதையே சொர்ணாகர்ஷண கிரிவலநாள் என்று அண்ணாமலை ஏடு தெரிவிக்கிறது.இந்த நன்னாளில் நமது குருவுடன் கிரிவலம் செல்பவர்கள் பலத்த பூர்வபுண்ணியம் மிக்கவர்கள் என்றும்,அவர்களின் கர்மவினைகள் மழையில் கரையும் உப்பைப் போல கரைந்து காணாமல் போய்விடும் என்றும் விவரிக்கிறது. 30.11.2013 சனிக்கிழமை அன்று துவாதசி திதியும்,சனிப்பிரதோஷமும்,சுவாதி நட்சத்திரமும் சேர்ந்து இப்பேர்ப்பட்ட பெருமைகளுடன் வர இருக்கிறது.இந்த நன்னாளில்,காலை 7 மணிக்கு  ஆன்மீககுரு சகஸ்ரவடுகர் அவர்கள் தலைமையில் இரட்டைப்பிள்ளையார் கோவிலில் சொர்ணாகர்ஷண கிரிவலப் பயணம் புறப்படுகிறது. பிங்க் அல்லது மஞ்சள் நிற ஆடை அணிந்திருப்பது அவசியம்;அவ்வாறு புறப்படும்போது,ஐந்து கிலோ நவதானியங்களையும்,ஒரு கிலோ டயமண்டு கல்கண்டையும்,அன்னதானத்தின் நவீன வடிவமாகிய இட்லிகள் நிரம்பிய பார்சல்களை உடன் கொண்டு செல்லவேண்டும் கிரிவலப் பயணத்தின் போது ஓம் அண்ணாமலையே போற்றி என்றோ அல்லது ஓம் அருணாச்சலாய நமஹ என்றோ ஜபித்துக் கொண்டே செல்வோம்;ஏனெனில்,ஒரே ஒருமுறை ஓம் அண்ணாமலையே போற்றி என்றோ அல்லது ஓம் அருணாச்சலாய நமஹ என்றோ ஜபித்தாலே 3,00,000 தடவை ஓம் நமச்சிவாய என்று ஜபித்தமைக்கான பலன்கள் கிட்டும் என்று அண்ணாமலையாரே உபதேசித்திருக்கிறார்.எனவே,இதைத்தவிர,வேறு எந்த வீண்பேச்சும் பேசாமல் கிரிவலம் செல்வோம்;கிரிவலப்பயணத்தின் போது இட்லி தானம் செய்வோம்;நாம் கொண்டு செல்லும் ஐந்து கிலோ நவதானியங்களையும் நமது கைகளால் கிரிவலப்பாதையின் ஓரங்களில் தூவுவோம்;தற்போது மழைக்காலமாக இருப்பதால் நம்மால் தூவப்பட்ட நவதானியங்கள் விரைவில் செடிகளாக வளரத் துவங்கும்;அவ்வாறு வளரத்துவங்கியதும்,நமது அனைத்து கிரக தோஷங்களும் நம்மை விட்டு நீங்கிவிடும்; நாம் கொண்டு வரும் டயமண்டு கல்கண்டுகளை கிரிவலப் பாதையில் தூவுவோம்;ஒரே ஒரு டயமண்டு கல்கண்டை ஒரே ஒரு எறும்பு எடுத்துச் சென்றாலே நாம் நூறு அந்தணர்களுக்கு தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளுக்கு அன்னதானம் செய்த பலன் நமக்குக் கிட்டும்;இதனால்,சனியின் தாக்கம் நம்மை விட்டு முழுமையாக நீங்கிவிடும் என்பது  ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர் அவர்களின் ஆன்மீக ஆராய்ச்சி முடிவு!  மதியம் 2 மணிக்குள் கிரிவலம் நிறைவடைந்த பின்னர்,மாலையில் நடைபெற இருக்கும் சனிப்பிரதோஷ அபிஷேகத்தில் கலந்து கொள்வோம்;இரவு பள்ளியறை பூஜை வரையிலும் அண்ணாமலையாரின் ஆலயத்தினுள் இருந்தாலே நமது நியாயமான கோரிக்கைகளும்,வேண்டுதல்களும் நிறைவேறத் துவங்கும்;பல ஆண்டுகளாக நமக்கு இருந்துவரும் கர்மவினைகளும்,சிரமங்களும் முழுமையாக விலகிவிடும்.பள்ளியறை பூஜை நிறைவடைந்ததுமே நேராக (வேறு எந்த கோவிலுக்கும் செல்லாமலும்,யார் வீட்டிற்கும் செல்லாமலும்) நமது சொந்த ஊருக்குத் திரும்புவோம்; இதன் மூலமாக சொர்ணாகர்ஷண கிரிவலத்தின் பலன்கள் அடுத்த சில நாட்களில் நம்மை வந்து சேரும்;சிலருக்கு சில வாரங்களுக்குள் வந்து சேரும்.

ஓம் அருணாச்சலாய நமஹ!!!
ஓம் அண்ணாமலையே போற்றி!!!


அருள் மிகு அக்னீஸ்வரர் திருக்கோவில்

அருள் மிகு அக்னீஸ்வரர் திருக்கோவில்



 
மூலவர்    :அக்னீஸ்வரர்
அம்மன்   :சுந்தரநாயகி
தல விருட்சம்    :வன்னி, வில்வம்
ஆகமம் பூஜை     :சிவாகமம்
பழமை    :1000வருடங்களுக்கு முன்
புராண பெயர்    :திருநல்லாடை
ஊர்    :நல்லாடை
மாவட்டம்    :நாகப்பட்டினம்
மாநிலம்    :தமிழ்நாடு

திருவிழா:ஐப்பசி அன்னாபிஷேகம், கார்த்திகை சோமவாரம், மார்கழி தனுர்பூஜை, வைவெள்ளி, தைப்பூசம், மகா சிவராத்திரி, பங்குனி உத்திரம், ஆருத்திரா தரிசனம். கார்த்திகை மாத ஞாயிற்று கிழமைகளில் பஞ்சமூர்த்தி புறப்பாடு.      
             
தல சிறப்பு:இத்தல இறைவன் மேற்கு நோக்கி அருள்பாலிப்பது முக்கிய சிறப்பாகும். மூலஸ்தானத்தில் உள்ள லிங்கத்தை சுற்றி ஒரு தாழ்வான பகுதி உள்ளது. சுவாமி அக்னீஸ்வரர் அக்னி சொரூபமாக உள்ளதால் அதனை தணிக்கும் வகையில் அந்த தாழ்வான பகுதியில் தண்ணீர் ஊற்றப்பட்டு இருப்பது தலத்தின் முக்கிய சிறப்பம்சமாகும்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.      
             
திறக்கும் நேரம்:காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.     
           
முகவரி:அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில், நல்லாடை-609 306 தரங்கம்பாடி தாலுக்கா, நாகப்பட்டினம் மாவட்டம்.போன்:    +91 4364-285 341,97159 60413,94866 31196     
            
பொது தகவல்:பரணி நட்சத்திரக்காரர்களின் பொது குணம்: நன்றி உணர்வு கொண்டவர்களாகவும், எதிரிகளைச் சுலபத்தில் வெற்றி கொள்ளும் திறமை கொண்டவர்களாகவும் இருப்பர். தானதர்மங்களைச் செய்யும் இயல்பால் மற்றவர்கள் இவரைப் பாராட்டுவர். அதிர்ஷ்ட தேவதையின் அருளால் தொட்டவையாவும் துலங்கும். தன்னுடைய தேவைகளைத் தானே சாதித்துக் கொள்ளும் சாமர்த்தியம் பெற்றிருப்பர்.

இரண்டாம் குலோத்துங்க சோழனின் மகனான இரண்டாம் ராஜராஜசோழன் கி.பி. 1146-1163 வரை இப்பகுதியை ஆட்சி செய்தான். அவனது காலத்தில் தான் இத்திருக்கோயில் கருவறை கருங்கல்லால் கட்டப்பட்டது. பின்னர் இவனது பிரதிநிதியான சோமாந்தோழர் என்பவனால் பிற பகுதிகள் கட்டப்பட்டுள்ளது.இதற்கான கல்வெட்டு கருவறையின் கிழக்கு சுவற்றில் இன்றும் காணப்படுகிறது. தற்போது நல்லாடை என வழங்கப்படும் இவ்வூர் முற்காலத்தில், ஜெயங்கொண்ட சோழநாட்டில் குறும்பூர் நாட்டில் நல்லாடை மங்களமான குலோத்துங்க சோழபுரம் என வழங்கப்பட்டதாக கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது அக்னீஸ்வரர் என அழைக்கப்படும் மூலவர் புராண காலத்தில் திருவன்னீஸ்வரம் உடையார் என்ற பெயரில் வணங்கப்பட்டுள்ளார். அக்காலத்தில் இக்கோயிலில் சித்திரை விசாகத்திருவிழாவும், மார்கழி திருவாதிரை திருவிழாவும் சிறப்பாக நடந்துள்ளது. திருவாதிரையின் போது மாணிக்கவாசகப் பெருமானை அலங்கரித்து ஊர்வலம் வந்துள்ளனர்.

இக்கோயிலில் காசிபன் கூத்தனான மும்முடி சோழபட்டன் என்பவன் தலைமையில் ஊர்சபை கூடி கோயிலை நிர்வகித்து வந்ததும், கோயிலில் திருவிளக்கு எறிக்கவும், இறைவனுக்கு நைவேத்தியம் செய்யவும் மன்னன் உபயமாக நிலம் கொடுத்தது பற்றியும் இக்கல்வெட்டுகள் மூலமாக அறிய முடிகிறது. கோயில் சுமார் இரண்டு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. கோயிலின் மூன்று பக்கத்திலும் கோபுரத்துடன் கூடிய வாசல்கள் அமைந்துள்ளது. கோயில் பிரகாரத்தில் துவார விநாயகர், பால முருகன், செல்வ விநாயகர், மகா விஷ்ணு, சோமாஸ்கந்தர், மகாலட்சுமி, சனிபகவான், கைலாசநாதர், கல்யாணி, புவனேஸ்வரி, சண்டிகேஸ்வரர், வீரபத்திரர், தட்சிணாமூர்த்தி, சூரியன், பைரவர், துர்க்கை சன்னதிகள் உள்ளன. இங்கு சிவனே நவகிரக நாயகனாக இருப்பதால், இத்தலத்தில் நவக்கிரக சன்னதி கிடையாது. செம்பனார் கோவில், கீழப்பரசலூர், திருக்கடையூர், திருநள்ளாறு ஆகிய சிவத்தலங்கள் இத்தலத்தின் அருகில் உள்ளன.      
             
பிரார்த்தனை:பரணி நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர். திருமணத்தடை நீங்க, குழந்தை பாக்கியம் கிடைக்க, கல்வியில் சிறந்து விளங்க, வியாபாரம் செழிக்க இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.

நேர்த்திக்கடன்:பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற இத்தலத்தில் ஹோமம் செய்து, சிவனுக்கும் அம்மனுக்கும் அர்ச்சனை செய்கிறார்கள்.     
            
தலபெருமை:    கார்த்திகை மாத பரணி: பரணி நட்சத்திரக்காரர்கள் தம் வாழ்நாளில் அடிக்கடி நல்லாடை அக்னீஸ்வரர் தலம் சென்று விசேஷ வழிபாடு செய்வது சிறப்பு. பரணியில் பிறந்தோர் தரணி ஆள்வர் என்பது பழமொழி. இங்கு சிவன் அக்னி சொரூபமாக திகழ்வதால், பரணி நட்சத்திரக்காரர்கள் இவருக்கு ஹோமம் செய்து வழிபடுவது சிறப்பு. குறிப்பாக, கார்த்திகை மாதம் பரணி நட்சத்திரத்தன்று ஹோமம் செய்தால் பலன் இரட்டிப்பாக இருக்கும் என்பது நம்பிக்கை. இத்தலம் மேற்கு நோக்கி அமைந்ததாகும். மேற்கு நோக்கிய கோயில்களில், முழு நம்பிக்கையுடன் செய்யப்படும் பிரார்த்தனைக்கு அதிக பலனுண்டு. இந்தக் கோயில்களில் இறைவன் மிகுந்த உக்கிரத்துடன் இருப்பார் என்பது ஐதீகம். இங்கு அக்னீஸ்வரர் மேற்கு நோக்கியும், அம்மன் சுந்தரநாயகி தெற்கு நோக்கியும் அருள்பாலிக்கிறார்கள். சுவாமி அக்னி சொரூபமாக உள்ளதால், அதனைத் தணிக்கும் வகையில் மூலஸ்தானத்தில் உள்ள லிங்கத்தைச் சுற்றி தண்ணீர் ஊற்றப்பட்டு இருப்பது சிறப்பம்சம். இறைவனுக்கே ஆடை நெய்து கொடுத்த காரணத்தினால் இத்தலம் நெய்தலாடை என வழங்கப்பட்டு, நாளடைவில் மருவி நல்லாடை ஆனது.      
             
தல வரலாறு:மிருகண்ட மகரிஷி இத்தல இறைவனுக்கு யாகம் நடத்த ஏற்பாடு செய்தார். இந்தயாகத்திற்கான பொருள்களை மக்களே வழங்கலாம் என்று அறிவித்தார். மக்கள், தங்கம் கலந்த பட்டாடை மூன்றை நெய்தனர். அவற்றில் ஒன்றை இறைவனுக்கும், ஒன்றை மிருகண்ட மகரிஷிக்கும், இன்னொன்றை தங்கள் மன்னனுக்கும் வழங்கினார்கள். யாகமுடிவில், இறைவனுக்கு கொடுத்த பட்டாடையையும், தனக்கு கொடுத்ததையும் மிருகண்ட மகரிஷி யாக குண்டத்தில் போட்டு விட்டார். நெருப்பில் போட்டபட்டாடைகள் இறைவனை அடைந்து விடுமா என்று மக்கள் மகரிஷியிடம் சந்தேகம் எழுப்பினர். நீங்கள் மூலஸ்தானத்தில் சென்று பாருங்கள், விபரம் புரியும், என்றார். மக்கள் ஆர்வமாக கோயிலுக்குள் சென்று மூலஸ்தானத்தைப் பார்த்தனர். அங்கிருந்த சிவலிங்கத்தின் மேல், யாக குண்டத்தில் போடப்பட்ட பட்டாடைகள் போர்த்தப்பட்டிருந்ததைக் கண்டு ஆச்சரியப்பட்டனர். இவை எப்படி அங்கு வந்தன? என்று மிருகண்ட மகரிஷியிடம் கேள்வி எழுப்பினர்.மகரிஷி மக்களிடம், அக்னியின் பல வகைகளில் பரணி என்னும் ருத்ராக்னியும் ஒரு வகையாகும். அந்த அக்னியே இறைவனுக்கு நாம்இடும் பொருட்களைஅவரிடம் கொண்டு சேர்க்கிறது, என்றார். இதனால் தான் இத்தலம் பரணி நட்சத்திரத்திற்கு உரிய கோயிலாக திகழ்கிறது. இத்தலத்தின் விருட்சமாக வில்வ மரம் உள்ளது. இந்த தலவிருட்சத்திற்கு என தனி வரலாறு உள்ளது. ஒரு முறை இப்பகுதியை ஆண்ட சோழ மன்னும், சிவனேச நாயன்மாரும் சிவனை தரிசிக்க வந்தனர். அப்போது புலி ஒன்று சிவனேச நாயன்மாரை துரத்தி வந்தது. உடனே அவர் இத்தலவிருட்சத்தில் மீது ஏறிக்கொண்டார். சிறிது நேரம் கழித்து நாயன்மார் அருகில் உள்ள குண்டாங்குளம் சென்ற போது, புலியும் உடன் வந்தது. நாயன்மார் அங்கு வைத்து புலியை சம்ஹாரம் செய்தார். உடனே சிவன் அவருக்கு தரிசனம் கொடுத்ததாகவும் வரலாறு கூறுகிறது.

அருள் மிகு பாண்டவ தூதப்பெருமாள் திருக்கோவில்

அருள் மிகு பாண்டவ தூதப்பெருமாள் திருக்கோவில்
 



மூலவர் :  பாண்டவ தூதர்தாயார் :  சத்யபாமா, ருக்மணி
தீர்த்தம் :  மத்ஸ்ய தீர்த்தம்
பழமை : 2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் :  திருப்பாடகம்
ஊர் :  காஞ்சிபுரம்
மாவட்டம் :  காஞ்சிபுரம்
மாநிலம் :  தமிழ்நாடு
 
பாடியவர்கள்:பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார் மங்களாசாசனம்

நின்ற தெந்தை யூரகத்து இருந்ததெந்தை பாடகத்து அன்று வெஃகணை கிடந்தது எண்ணிலாத முண்ணெலாம் அன்று நான் பிறந்திலேன் பிறந்தபின் மறந்திலேன் நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சுள்ளே.-திருமழிசையாழ்வார்.

திருவிழா:கிருஷ்ண ஜெயந்தி, தீபாவளி, முக்கோட்டி ஏகாதசி, பங்குனி உத்திரம். அருளாளப்பெருமாள் எம்பெருமானாருக்காக கார்த்திகை மாதம் பரணி நட்சத்திரத்தில் சாற்று முறை உற்சவம் நடக்கிறது.   
       
தல சிறப்பு:கிருஷ்ணர் இத்தலத்தில் 25 அடி உயரத்தில் , மூலஸ்தானத்தில் அமர்ந்த திருக்கோலத்தில் காட்சியளிப்பது வேறு எங்கும் காண முடியாத சிறப்பம்சமாகும்.   
       
திறக்கும் நேரம்:காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.  
     
முகவரி:அருள்மிகு பாண்டவதூதப் பெருமாள் திருக்கோயில், திருப்பாடகம், 28, பி, பாண்டவதூதப் பெருமாள் கோயில் தெரு, காஞ்சிபுரம் - 631 502. காஞ்சிபுரம் மாவட்டம்.போன்:+91 44-2723 1899  
      
பொது தகவல்:ரோகிணி நட்சத்திரக்காரர்களின் பொது குணம்: கற்றறிந்தவர்களுடன் நட்பை விரும்புபவராகத் திகழ்வர். பார்ப்பதற்கு கம்பீரமான தோற்றம் கொண்ட இவர்கள் ஊர் சுற்றும் இயல்பைப் பெற்றிருப்பர். ஆசார அனுஷ்டானங்களில் மிகுந்த நம்பிக்கை உண்டு. இசை, நாட்டியம் போன்ற கலைகளில் ஈடுபாடு இருக்கும். மக்கள் செல்வாக்கு சிறப்பாக இருக்கும். மூலவரான கிருஷ்ணர் பத்ர விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார்.

பிரார்த்தனை:ரோகிணி நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இத்தலத்திற்கு வந்து கிருஷ்ணனை தரிசித்து வந்தால் எந்தக் கஷ்டமாக இருந்தாலும் விலகிவிடும் என்பது நம்பிக்கை.

நேர்த்திக்கடன்:கிருஷ்ணன் இத்தலத்தில் தன் பாதங்களை பூமியில் அழுத்தி விஸ்வபாதயோக சக்திகளை கொண்டு அருளும் தலம். எனவே இங்கு அடிப்பிரதட்சணம், அங்கப்பிரதட்சணம் செய்பவர்களின் 72,000 அங்க நாடிகளும் துடிப்புடன் செயல்பட்டு சோதனைகளும், துன்பங்களும் விலகும். புதன், சனி, ரோகிணி, அஷ்டமி திதி, எட்டாம் தேதிகளில் இங்கு வழிபடுவது சிறப்பு.  
      
தலபெருமை: கண்ணன் பஞ்சபாண்டவர்களுக்குத் தூதுவராக சென்றதால் பாண்டவ தூதப்பெருமாள் என அழைக்கப்படுகிறார். திருதராஷ்டிரனுக்கு கண்பார்வை அளித்து தனது பெரிய விஸ்வரூப தரிசனத்தை கிருஷ்ண பகவான் இத்தலத்தில் காட்டியருளினார். பெருமாளின் சிலை 25 அடி உயரம் உள்ளது. அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கும் இவரை, இங்குள்ள கல்வெட்டுக்களில் தூதஹரி என குறிப் பிட்டுள்ளனர். கிருஷ்ணன் இத்தலத்தில் தன் பாதங்களை பூமியில் அழுத்தி விஸ்வபாதயோக சக்திகளை கொண்டு அருளுகிறார். எனவே இங்கு அடிப் பிரதட்சணம், அங்கப்பிரதட்சணம் செய்பவர் களுக்கு துன்பங்கள் விலகும் என்பது ஐதீகம். இத்தலத்தில் அருளாளப்பெருமாள் எம்பெருமானார் என்ற ஆசாரியார் எழுந்தருளியுள்ளார். இவர் யக்ஞமூர்த்தி என்ற பெயருடன் ராமானுஜருடன் 18 நாள் வாதம் செய்து, அவரைச் சரணடைந்து, பின் அநேக மகான்களுக்கு ஆச்சாரியராக விளங்கினார். மணவாள மாமுனிகள் இங்கு எழுந்தருளியுள்ளார்.

எட்டாம் தேதி விசேஷம்: ரோகிணி தேவி, இத்தலத்து பெருமாளை வழிபட்டு சந்திரனை அடையும் பேறு பெற்றாள். சந்திரன் தனது 27 நட்சத்திர தேவியர்களில் முதலில் ஞான சக்திகளை கொண்ட ரோகிணியையும், அக்னி சக்திகளை கொண்ட கார்த்திகையையும் மணந்த பிறகே ஏனைய நட்சத்திர தேவிகளை மணந்தார். ரோகிணி தனக்கு ஞான சக்திகளையும், விஸ்வரூப தரிசனமும் கொடுத்த பெருமாளை, இத்தலத்தில் சூட்சும வடிவில் தினமும் வணங்க வருவதாக ஐதீகம். எனவே ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதன், சனிக்கிழமை, அஷ்டமி திதி, 8ம் தேதிகளில் இங்கு வழிபாடுசெய்வது சிறந்த பலனைத்தரும்.

தல வரலாறு:பாண்டவர்களில் மூத்தவரான தர்மர் கவுரவர்களிடம் தன் நாட்டை இழந்தார். ஆளுக்கொரு வீடு வீதம் ஐந்து வீடுகளையாவது கேட்டுவாங்க, துரியோதனனிடம் தூது சென்றார் பகவான் கிருஷ்ணர். அவரை அவமானப்படுத்த நினைத்தான் துரியோதனன். கிருஷ்ணர் அமர்வதற்காக போடப் பட்ட ஆசனத்தின் கீழே, ஒரு பெரிய நிலவறையை (பாதாளம்) உண்டாக்கி அதன்மீது பசுந்தழைகளை போட்டு மறைத்தான். கிருஷ்ணனும் அமர்ந்தார். திட்டப்படி நிலவறை சரிந்தது, கிருஷ்ணரும் உள்ளே விழுந்தார். அங்கே அவரைத் தாக்கினர் சில மல்யுத்த வீரர்கள். அவர்களை அழித்து விஸ்வரூப தரிசனம் காட்டினார். பாண்டவர்களுக்காக தூது சென்ற இவரை பாண்டவதூத பெருமாள் என்பர்.

பாரத யுத்தம் முடிந்து வெகுகாலத்திற்கு பின், ஜனமேஜயர் என்ற மகாராஜா, வைசம்பாயனர் என்னும் ரிஷியிடம் பாரதக்கதையை கேட்க வந்தார்.கிருஷ்ணர் தூது சென்ற போது நிலவறையில் அமர்ந்த கோலத்தில் எடுத்த விசுவரூப தரிசனத்தை நானும் தரிசிக்க வேண்டும். அதற்கான வழிமுறைகளை கூறுங்கள், என ரிஷியிடம் மன்னர் வேண்டினார். ரிஷி கூறிய அறிவுரையின் படி காஞ்சிபுரம் வந்து தவம் செய்தார். பெருமாள், தன் தூது கோலத்தை இத்தலத்தில் காட்டியருளினார்.  

ராமாயணம் பகுதி ஒன்று

ராமாயணம் பகுதி-1

தெய்வங்களைக் குறித்து வால்மீகி முனிவருக்கு ஏக குழப்பம். பல தெய்வங்களின் பெயர்களை சொல்கிறார்களே. இவர்களில் யார் உயர்ந்தவர்? என்பதே குழப்பத்திற்கு காரணம். திருடனாக இருந்த வால்மீகியை முனிவர் அந்தஸ்திற்கு கொண்டு வந்தவர் நாரதர் தான். அவரிடமே தன் கேள்விக்குரிய பதிலைத் தெரிந்து கொள்வோமே எனக் கருதி அவரை மனதால் துதித்தார்.நாரதர் அவர் முன்பு தோன்றினார். வியாசமுனிவரே! என்னை அழைக்க காரணம் என்னவோ?. முனிவர்பிரானே! என் மனதில் ஒரு கேள்வி பிறந்துள்ளது. கேட்கட்டுமா?.கேள்விகளில் இருந்து பதில்கள் பிறக்கின்றன. பிறப்பு தான் உலகின் ஜீவநாடி. கேளுங்கள், இப்போது இந்த உலகிலேயே நல்ல குணமுள்ளவர் யார்? யார் மிகுந்த தைரியசாலி? தர்மம் செய்வதில் யார் உயர்ந்தவர்? நன்றி மறக்காதவர் யார்? சத்தியம் தவறாத உத்தமர் யார்? மன உறுதியோடு திகழ்பவர் யார்? ஒழுக்கத்தை எக்காலமும் நழுவவிடாத உயர்ந்தவர் யார்? எதிரிகளுக்கும் நன்மை செய்பவர் யார்? எல்லா கலைகளையும் கற்றவர் யார்? அதீத சக்தி பெற்றவர் யார்? பார்த்த உடனேயே மனதிற்கு இனிமை தரும் இனியவர் யார்? உள்ளத்தில் பொறாமையே இல்லாதவர் யார்? யாருடைய கோபத்தைக் கண்டு தேவர்கள்கூட அஞ்சுகிறார்கள்? இப்படி பல கல்யாண குணங்களைக்கொண்ட உத்தமர் யாராவது இவ்வுலகத்தில் வாழ்கிறார்களா? என கேட்டார்.

அவரது கேள்வியை நன்றாக அசை போட்ட நாரதர், நீங்கள் கூறும் கல்யாண குணங்களைக்கொண்ட ஒரே மாமனிதர் ராமபிரான் மட்டுமே. அவர் அயோத்தி மன்னர். இக்ஷ்வாகு வம்சத்தில் அவதரித்தவர். புலனடக்கம் மிக்கவர். அவரைவிட அறிவில் சிறந்தவர்கள் இவ்வுலகில் வேறு யாருமில்லை. எப்பேர்ப்பட்ட எதிரியையும் அவர் அழித்துவிடுவார். பலம் பொருந்திய கைகள் அவரிடம் உண்டு. அகன்ற மார்பைக் கொண்டவர். எப்போதும் வில்லுடன் திரிவார். அவர் நடந்தால் உலகிலுள்ள அத்தனைபேரும் ரசிப்பார்கள். நடுத்தர உயரமுள்ளவர். அவரது மேனி கார்வண்ணம் உடையது. ஆனாலும், அம்மேனி ஒளிவீசும் தன்மை கொண்டது. அமைதியே வடிவாக இருப்பார். இந்த உலகத்தையே தாங்கும் சக்தி அவரிடம் உள்ளது. தர்மத்தை எக்காலத்திலும் கைவிடாதவர். புத்தி சாதுர்யம் அவரைப்போல வேறு யாருக்கும் இல்லை. துன்பக்கடல் சூழ்ந்து வந்தாலும் இமயமலையைப் போல அசையமாட்டார். அதேநேரம், கோபம் வந்துவிட்டால் அவர் அருகே யாரும் நிற்கமுடியாது.

அவரைப் பணிந்துவிட்டால் பூமாதேவியைப்போல பொறுமையின் சின்னமாகி விடுவார். செல்வத்தில் குபேரனையும் மிஞ்சுபவர். சத்தியவான். தர்மம் அவரிடம் மட்டுமே இருக்கிறது என்றார். அது மட்டுமின்றி ராமபிரானின் கதை முழுவதையும் சொன்னார். ராமனின் கதை கேட்ட வால்மீகி முனிவரின் கண்களில் நீர் கோர்த்தது. இப்பேர்ப்பட்ட மகான் ஒருவர் பூமியில் வாழ்கிறாரா? என் கைகள் அவரை எழுத வேண்டும். அந்த உத்தமனின் வரலாறு இப்பூமி உள்ளளவும் நிலைக்க வேண்டும், என உணர்ச்சி பொங்கக் கூறினார்.  அன்று முதல் ராமனின் நினைவைத் தவிர அவர் மனதில் வேறு எதுவுமே இல்லை. அவரை மனதில் எண்ணிக்கொண்டே தன் சீடருடன் தமசா என்ற நதிக்கரைக்கு சென்றார். நதிக்கரையில் இருந்த ஒரு மரத்தில் இரண்டு பறவைகள் விளையாடிக் கொண்டிருந்தன. அங்கு வந்த வேடன் ஒருவன் அம்பெய்தான். ஆண்பறவை அடிபட்டு இறந்தது. பெண் பறவை கதறியது. இதைக்கண்ட வால்மீகி முனிவர் வேடன்மீது கடும் கோபமடைந்தார்.

வேடனே! இந்த ஜோடிப் பறவைகளைப் பிரித்த நீ மனதில் நிம்மதி இல்லாமல் பல ஆண்டுகள் அலைவாய், என சாபமிட்டார். உலகத்தில் நடந்த ஏதோ ஒரு சம்பவத்தைப் பார்த்து, ராம நாமத்தை ஒரு நிமிடம் மறந்த அவர் கோபத்திற்கு ஆட்பட்டார். முனிவராக இருந்தும் அவசரத்தில் கோபப்பட்டுவிட்டோமே என வருந்தினார். அவர் சாபமிடும்போது பிரம்மதேவன் அங்கு வந்து சேர்ந்தார். வால்மீகியின் சாப சொற்கள் கூட இலக்கியத்தரத்துடன் அமைந்திருந்ததை கேட்டு ஆனந்தம் கொண்டார். இப்படிப்பட்ட இலக்கியவாதியால்தான் ராமனின் சரிதத்தை நன்றாக எழுதமுடியும் என கருதினார். வால்மீகியின் முன்பு பிரதட்சண்யமான அவர், முனிவரே! தாங்கள் இப்போது வேடனுக்கு சாபம் கொடுத்தபோதுகூட எதுகை மோனையுடன் நாதமும் சந்தமும் கலந்து சாபம் கொடுத்தீர்கள். இப்படிப்பட்ட திறமைவாய்ந்த நீங்கள்தான் புண்ணியமூர்த்தியான ராமனின் திரு வரலாற்றை மகாகாவியமாக வடிக்க வேண்டும்,என்றார்.

ராமபிரானின் கதையை பாடத்துவங்கினார் வியாசர். கோசலநாடு மிகப்பெரிய நாடு. செல்வச்செழிப்பு மிகுந்த நாடு. இந்நாட்டை சரயு என்ற நதி பாய்ந்து வளப்படுத்திக்கொண்டிருந்தது. இதன் தலைநகரம் அயோத்தி. அயோத்தி என்ற சொல்லுக்கு வெல்ல முடியாத நகரம் என பொருள். இந்நகரை யாராலும் கைப்பற்ற இயலாது. சூரியகுல மன்னர்கள் இந்நாட்டை சிறப்புடன் ஆண்டு வந்தனர். ஆரம்பத்தில் மனு என்பவரும், அடுத்து இக்ஷ்வாகுவும், இதையடுத்து ரகு என்பவரும் ஆண்டனர். இதன்பிறகு பொறுப்பேற்றவரே தசரத சக்கரவர்த்தி. தச ரதம் என்ற சொல்லுக்கு பத்து தேர் என பொருள். ஒரே நேரத்தில் பத்து தேர்களை இயக்கும் வல்லமை உடையவர் தசரத மகாராஜா. இதிலிருந்தே அவரது வீரத்தின் அளவை தெரிந்துகொள்ளலாம். எந்த அளவுக்கு வீரம் இருந்ததோ அதே அளவுக்கு அவர் மனதில் அன்பும் உண்டு. தன் நாட்டு மக்களிடம் கருணையைப் பொழிந்தார் தசரதர். தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்காமல் முனிவர்களிடமும், அறிவு சார்ந்த அமைச்சர்களிடமும், மகா பண்டிதர்களிடமும் ஆலோசனை கேட்டு அதன்படியே நடப்பார்.  அன்று, அரண்மனையில் தசரத மகாராஜா கவலையுடன் உலவிக் கொண்டிருந்தார். எதிர்காலத்தில் இந்நாட்டை காப்பாற்றப்போவது யார் என்ற கலக்கம் அவர் முகத்தில் தெரிந்தது.


அருள் மிகு வீரட்டானேஸ்வரர் திருக்கோவில்

அருள் மிகு வீரட்டானேஸ்வரர் திருக்கோவில்

மூலவர்:வீரட்டானேஸ்வரர்

அம்மன்:பெரியநாயகி

தல விருட்சம்:சரங்கொன்றை

தீர்த்தம்:சூலத்தீர்த்தம்

பழமை:2000 வருடங்களுக்கு முன்

ஊர்:திருவதிகை

மாவட்டம்:கடலூர்

மாநிலம்:தமிழ்நாடு

பாடியவர்கள்:நாவுக்கரசர்,ஞானசம்பந்தர்,சுந்தரர்,மாணிக்கவாசகர்.

பாதம் பலரேத்தப் பரமன் பரமேட்டிபூதம் புடைசூழப் புலித்தோல் உடையாகக்கீதம் உமைபாடக் கெடில வடபக்கம்வேதம் முதல்வன் நின்றாடும் வீரட்டானத்தே.
திருஞானசம்பந்தர்

திருவிழா: பங்குனி சித்திரை மாதங்கள் 10 நாட்கள் திருவிழா வசந்தோற்சவம் ஸ்தல நாயகர் வசந்த மண்டபத்தில் எழுந்தருளல் சித்திரை சதயம் 10 நாட்கள் அப்பர் மோட்சம் திருக்கயிலாய காட்சி, வைகாசி பெருவிழா பிரம்மோற்சவம் 10 நாட்கள் பஞ்ச மூர்த்தி வீதியுலா வெள்ளி வாகன புறப்பாடு ஸ்தல நாயகர் திருத்தேரில் வீதியுலா ஆடிப்பூர உற்சவம் 10நாட்கள் மாணிக்கவாசக உற்சவம் மார்கழி 10நாட்கள் மார்கழி திருவதிகை நடராஜர் தீர்த்தவாரி, ஆருத்ரா தரிசனம் 1 நாள் திருவிழா மாசி மகா சிவராத்திரி 6 கால பூஜை கார்த்திகை 5 சோமவாரம் பங்குனி உத்திரம் திலகவதியார் குருபூஜை திருக்கல்யாண உத்திரம் சுவாமி அம்பாள் 1 நாள் உற்சவம் பிரதோச தினத்தின் போது கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்

தல சிறப்பு:இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். 16 பட்டைகளுடன் கூடிய மிகப்பெரிய லிங்கம். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 218 வது தேவாரத்தலம் ஆகும்.திருவதிகை நகரின் மேற்கே சுமார் 8 கி.மீ. தொலைவில் திருவாமூர் என்ற ஊரில் பிறந்த திருநாவுக்கரசர் சமண மதத்தில் மிகவும் தீவிரமாக இருந்தார். அவரது சகோதரி திலகவதியார் சைவ சமயத்திலேயே இருந்து வீரட்டானேசுவரருக்கு தொண்டு செய்து வந்தார். அப்போது திருநாவுக்கரசருக்கு கடுமையான சூலை நோய் (வயிற்று வலி) தாக்கியது. சமண சமயத்தவர்கள் அவரது வயிற்று வலியை நீக்க எவ்வளவோ முயன்றனர்.ஆனால் முன்னை விட மேன்மேலும் வலி அதிகமானது.ஒருநாள் அதிகாலையில் திருஅதிகை அடைந்து திலகவதியாரின் காலில் விழுந்து தமது நோயைப் போக்கும் படி கூற, திலகவதியாரும் மனமிரங்கி வீரட்டானேசுவரர் சன்னதிக்கு தன் தம்பியை அழைத்து சென்று ஐந்தெழுத்தை ஓதி திருவாளன் திருநீறு அளித்தார். அந்த திருநீறை பூசிக்கொண்டு திருவாயில் போட்டுக் கொண்டவுடன் வயிற்றுவலி பனிபோல் நீங்கிவிட்டது.உடனே வீரட்டானேசுவரரை வணங்கி கூற்றாயினவாறு விலக்ககலீர் என்னும் கோதில் நீடிய திருப்பதிகம் பாடினார். அதனால் மனமகிழ்நத கண்ணுதற் பெருமான் நாவுக்கரசு என்று நின் நன்நாமம் நயப்புற மன்னுக என்று பட்டம் கொடுத்தார். அது முதல் திருநாவுக்கரசர் சைவத்தையே உயிர் மூச்சாகக் கொண்டு உழவாரம் செய்து வந்தார்.இந்த இறைவனை வழிபடுவோர்க்கு ஆணவம், கன்மம்,மாயை ஆகிய மும்மலங்களும் நீங்கும்.திருஅதிகை வீரட்டானேசுவரர் திருக்கோயிலுக்கு வந்து வழிபடுவோர்க்கு கயிலைக்கு சென்ற பலன் கிடைக்கும் என்பது உறுதி என்று பக்தர்கள்  கூறுகிறார்கள்.இத்தலத்து முருகப்பெருமான் (சுப்ரமணியர்) குறித்து அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல்கள் பாடியுள்ளார்

சுவாமியின் பிறபெயர்கள் :ஸ்ரீ சம்கார மூர்த்தி(திருக்கெடிலவாணர் கற்றளி கருவறையில் பின்புறம் அம்மையப்பர் (இறைவன் தன்னையே பூஜிப்பதாக ஐதீகம்)

அம்பாளின் பிறபெயர்கள் : ஸ்ரீ திரிபுர சுந்தரி

தலவிநாயகர் : சித்தி விநாயகர்.

பிற தீர்த்தங்கள் :கிணறு தீர்த்தம், சக்கர தீர்த்தம், குளம், கெடில நதி

திறக்கும் நேரம்: காலை 6மணி முதல் 12 மணி வரை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி: அருள்மிகு வீரட்டானேசுவரர் திருக்கோயில், திருவதிகை-607106, பண்ருட்டி போஸ்ட, கடலூர் மாவட்டம்.போன்: +91-98419 62089

பிரார்த்தனை:இங்குள்ள ஈசனை வழிபடுவோர்க்கு மனநிம்மதி கிடைக்கும்.இது உடல் சம்பந்தப்பட்ட எந்த நோயானாலும் தீருகிறது.வயிற்று வலி (அல்சர்) சத்ரு உபாதைகள் சூலைத் தீர்த்தமும் உட்கொண்டால் உடனடியாக தீர்ந்து விடும்.எதிரிகள் தொல்லை நீங்குதல், வர்க்க சாப தோச நிவர்த்தி, முன்னோர் செய்த பாவங்கள் இங்கு வழிபட்டால் நீங்கும்.குழந்தை இல்லாதவர்கள் இறைவனை வழிபட்டு அபிசேகம் செய்து அந்தப்பாலை உட்கொண்டால் உடனே குழந்தை பேறு உண்டாகும்.மேலும் வேலைவாய்ப்பு, குடும்ப ஐஸ்வர்யம் ஆகியவற்றுக்காகவும் இத்தலத்தில் பக்தர்கள் பிரார்த்தனை செய்து கொள்வது வழக்கமாக உள்ளது.

நேர்த்திக்கடன்: நிலை மாலை சாத்துதல், சுவாமி பொட்டுக் கட்டுதல் அம்பாளுக்கு தாலிகட்டுதல், 300 நாமங்களைக் கொண்ட அர்ச்சனை (திருசதி அர்ச்சனை) செய்தல், சகஸ்ரநாமம் 1008 நாமம் செய்தல் , சூரைத்தேங்காய் உடைத்தல் ,சுவாமிக்கு நல்லெண்ணெய், திரவிய பொடி, பால், தயிர்,பழச்சாறு, இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், திருநீர் , வில்வம் ஆகியவற்றால் அபிசேகம் செய்யலாம்.தவிர உலர்ந்த தூய வஸ்திரம் சாத்தலாம்.இது தவிர சுவாமிக்கு சங்காபிசேகம், கலசாபிசேகம் ஆகியவையும் செய்யப்படுகிறது.தவிர சுவாமிக்கு வேட்டியும்,அம்பாளுக்கு மஞ்சள் பொடி அபிசேகம், புடவை சாத்துதல் ஆகியவற்றையும் செய்யலாம்.பஞ்சக்கனி வைத்து படைத்தல், புட்டு நிவேத்தியம் செய்தல் ஆகியவை பக்தர்களால் செய்யப்படுகிறது. தவிர கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம்.

தலபெருமை: வழிபட்டவர்கள் : இந்திரன், பிரம்மன், திருமால், பாண்டவர்கள், சப்தரிஷிகள், வாயு, வருணன், யமன் முதலானோர். இறைவன் தேரில் வந்ததால் இத்திருக்கோயிலின் அமைப்பும் தேர் வடிவில் உள்ளது.இத்திருக்கோயிலின் கர்ப்ப கிரக விமானத்தை பார்த்து இராஜ இராஜ சோழன் பிற்காலத்தில் தஞ்சையில் பெரிய கோயிலை கட்டினான். திவதிகை கோயிலின் நிழல் தரையில் விழாதபடி கணித சாஸ்திர முறையுடன் பல்லவர்களால் கட்டப்பட்டுள்ளது. எந்த ஆயுதமின்றி ஒரு அழகான சிரிப்பினாலேயே ஒரே நொடியில் நடைபெற்ற சிவபெருமானின் திரிபுரசம்காரம் நடைபெற்ற தலம்.முப்புரம் எரிசெய்த பெம்மான் மூவருக்கு அருள் செய்தார். ஐந்தெழுத்தால் இறைவன் மும்மலங்களையும் சிதைத்தது இத்தலத்திலே. தேவாரம் முதன் முதலில் பாடப்பட்ட தலம் இதுவே ஆகும். முதன்முதலில் தேர் ஏற்பட்ட வரலாறு இதுவே ஆகும்.இன்றைக்கு கோயில்களில் தேர் இருக்க வேண்டிய ஐதீகம் உருவானதே இத்தலத்தில்தான்.அட்ட வீரட்டானத் தலங்களில் சிறப்புடையது. அட்ட வீரட்டானத் தலங்களில் அதிக பாடல் பெற்ற தலம் இதுவே. அட்ட வீரட்டானத் தலங்களில் மூவர் தமிழும் பெற்ற சிறப்பு தலம் இது. சிதறு தேங்காய் (சூறைத் தேங்காய்) என்ற பழக்கம் உருவானதும் இத்தலத்தில்தான்.மூலவருக்கு பின்புறம் சுதையால் ஆன சுவாமி அம்பாள் திருமணக்கோலம் உள்ளது. திருநாவுக்கரசருக்கு திருமணக்கோலத்தில் காட்சி தந்த தலம் என்பதால் திருமணங்கள் நிறைய நடைபெறுகின்றன. கருவறை கோபுரம் நிரம்ப சுதைகளால் ஆனது.கருவறை விமான அமைப்பு, மண்டப அமைப்பு ரதம் போன்ற அமைப்பை கொண்டது.சித்திரையில் அப்பர் பெருமானுக்கு பத்து நாட்கள் சிறப்பாக விழா நடைபெறுகிறது. வைகாசியில் பிரம்ம உற்சவம் பத்து நாட்கள் விசாகத்தில் தேர் திருவிழாவும் திரிபுர சம்காரமும் நடைபெறுகிறது. உழவாரம் முதன்முதலில் திருநாவுக்கரசரால் இங்குதான் செய்யப்பெற்றது.பன்னிரெண்டு திருமுறைகளிலும் திரிபுரசம்கார நிகழ்ச்சியை பற்றியே அதிகமாக பாடப்பட்டுள்ளது இந்த இறைவனை வழிபடுவோர்க்கு ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களும் நீங்கும்.அம்பாள் சன்னதி சுவாமிக்கு வலப்புறம் உள்ளது தனிச்சிறப்பு. இதனால் திருமணம் ஆகாதவர்கள் இங்கு வந்து பிரார்த்தனை செய்தால் திருமணம் உடனடியாக தீர்ந்து விடும். ஆணவமாய் வந்தவர்கள் இங்கு திரும்பவும் வரமாட்டார்கள். அந்த அளவுக்கு சக்தி வாய்ந்த தலம். இத்தலத்தில் குனிந்துதான் விபூதி பூச வேண்டும்.

 தல வரலாறு:தாருகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி என்னும் மூன்று அசுரர்கள் கடுமையான தவங்கள் செய்து பிரம்மாவிடம் வரம் பெற்று தங்களை யாராலம் வெல்லவோ கொல்லவோ முடியாது வரம் பெற்றனர்.அவர்களால் தொல்லையடைந்தவர்கள் ஈசனிடம் முறையிட்டனர். அதன்படி பூமியை தேராகவும், சூரிய சந்திரர்களை தேர் சக்கரங்களாகவும், நான்கு வேதங்களை குதிரைகளாகவும், பிரம்மாவை தேரோட்டியாகவும் மற்ற தேவர்களை எல்லாம் தேருடன் (அதற்கு வைதிகத் தேர்) வரச் செய்தார். சுவாமி மேருமலையை வில்லாகவும் வாசுகி என்னும் பாம்பை நாணாகவும் திருமாலை அம்பாகவும் அம்பின் நுனியில் அக்னியையும் வைத்து அந்த வில்லுடன் தேரில் ஏறினார். அச்சு முறிந்தது. பிள்ளையாரை வணங்காததால் தான் இப்படி என்று உணர்ந்து கணபதி பூஜை செய்து அவரது அருளை பெற்று தொடர்ந்தனர்.தேரில் வந்த அனைத்து தேவர்களும் தங்களால் தான் அந்த அசுரர்கள் மடியப்போகிறார்கள் என்று நினைத்து கொண்டிருக்க சிவபெருமான் அசுரர்கள் மீது வில் அம்பு எதையும் பயன்படுத்தவில்லை. அசுரர்களை பார்த்து சற்றே சிரித்தார்.அவ்வளவுதான்.உலகமே நடுங்கும்படியாக தீப்பிழம்பு ஏற்பட்டு அவர்கள் மூவரும் சாம்பலாயினர். தங்கள் உதவி இல்லாமலே சிவன் சம்காரம் செய்ததை உணர்ந்து தேவர்கள் வெட்கி தலைகுனிந்தனர். ஒரே சமயத்தில் தேவர்கள் அசுரர்கள இருவரது ஆணவத்தையும் அடக்கினார் ஈசன். பின்பு மூன்று அசுரர்களையும் மன்னித்து இருவரை தனது வாயில் காப்பாளர்களாகவும், ஒருவரை குடமுழா முழக்குபவனாகவும் ஆக்கி கொண்டார். மேற்கூறிய புராண வரலாறே திரிபுர சம்காரம் என்று அழைக்கப்படுகிறது.